மாந்தருக்குள் ஒரு தெய்வம் -part-2

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்

மாந்தருக்குள் ஒரு தெய்வம் - 2

  • Acknowledgements:

  • Our Sincere thanks go to Digital Library of India for scanned image version of the work. This work was prepared via Distributed Proof-reading Implementation and we thank the following volunteers for their assistance in the preparation of this workAshok Paskalraj, S. Karthikeyan, M. Kavinaya, R. Navaneethakrishnan, Santhosh Kumar Chandrasekaran, S Sriram, Thamizhagazhvan, V. Devarajan and Nalini Karthikeyan

  • Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

  • © Project Madurai, 1998-2011.

  • Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation

  • of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.

  • Details of Project Madurai are available at the website

  • http://www.projectmadurai.org/

  • You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்

மாந்தருக்குள் ஒரு தெய்வம்

  • source:

  • மாந்தருக்குள் ஒரு தெய்வம்

  • கல்கி

  • முதற் பதிப்பு - 1956 Printed by Dr. V. R. Murty, At The Homeopathy Press,

  • Homeo House, Kumbakonam.

  • -----------------------------------------------------------

      • 16. பஞ்சாப் படுகொலை

  • ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் என்பதாக இந்தியா தேசமெங்கும் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம் 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் இந்த நாட்டில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் தான்.

  • அந்த வாரத்தில் காந்தி மகாத்மா இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு புதிய வழியைக் காட்டினார். இந்திய மக்கள் நீண்ட கால உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தனர். ஆத்ம சக்தியாகிய ஆயுதத்தின் பெருமையை உணர்ந்தனர்.

  • அதே வாரத்திலேதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அசுரத்தன்மை அதன் உச்ச நிலைமையை அடைந்தது. ஜாலியன்வாலாபாக் படுகொலையும் மற்றும் பஞ்சாபில் ஆரம்பமான இராணுவச் சட்டக் கொடுமைகளும் பிரிட்டிஷ் அதிகார வர்க்க ஆட்சிக்கு என்றும் மாறாத அபகீர்த்தியை உண்டு பண்ணின.

  • அந்தக் கொடுமைகளிலிருந்தே இந்தியாவின் விடுதலை இயக்கம் முன்னெப்போதுமில்லாத பலம்பெற்று வளர்ந்தது. அதற்குப்பிறகு பலவருஷகாலம் தேசபக்தர்கள் பதினாயிரக் கணக்கான பொதுக்கூட்டங்களில் "பஞ்சாப் படுகொலை" யைப்பற்றி ஆவேசமாகப் பேசினார்கள். மக்கள் கொதித்து எழுந்து "பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்தே தீருவோம்" என்று உறுதி கொண்டார்கள்.

  • காந்தி மகாத்மா அடுத்த ஆண்டில் தொடங்கிய ஒத்துழையாமை என்னும் மாபெரும் இயக்கம் பஞ்சாப் கொடுமைக்குப் பரிகாரம் கோருவதை முக்கிய காரணமாகக்கொண்டு எழுந்தது. அந்த இயக்கம் நாடெங்கும் பரவி நாளுக்கு நாள் வலுப்பெற்று வளர்ந்து 1921-ஆம் வருஷக் கடைசியில் வைஸ்ராய் லார்ட் ரெடிங், "நான் செய்வதறியாமல் திகைக்கிறேன்; திணறுகிறேன்" என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும்படி செய்தது. இவ்வளவு முக்கியமான விளைவுகளுக்கெல்லாம் மூல காரணமாயிருந்த பஞ்சாப் நிகழ்ச்சிகளைப்பற்றி இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.

  • பாஞ்சாலதேசம் சீக்கியர்களுடைய தாயகம். பொதுவாக வீரத்துக்குப் பெயர் போனது. 1914 முதல் 1918 வரையில் நடந்த முதலாவது உலக மகா யுத்தத்தில் பஞ்சாப்பியர் அடங்கிய பட்டாளங்கள் பல பிரிட்டனுக்கு உதவியாகச் சென்றிருந்தன. பிரிட்டிஷ் கட்சியின் வெற்றிக்குப் பஞ்சாப் பட்டாளங்கள் செய்த உதவியை ஆங்கில இராஜ தந்திரிகள் பெரிதும் பாராட்டினார்கள். அந்தக் காலத்தில் பிரிட்டிஷார் இந்தியாவில் உள்ள மக்களை இரண்டு விதமாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். போர்க்குணம் படைத்த சாதியார் என்றும் போர்க்குணம் இல்லாத சாதியார் என்றும் பிரித்தார்கள். பஞ்சாப்பிலுள்ளவர்கள் போர்க்குணம் படைத்தவர்கள். ஆகையால் இந்திய சைன்யத்துக்குப் பஞ்சாப்பியிலிருந்து அதிகமாக ஆள் திரட்டுவது வழக்கம். இதே காரணத்தினால் பஞ்சாப் மாகாணத்தைத் தேசீயக் காற்றுப் படாமல் காப்பாற்றுவதில் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் அதிகமான கவலை கொண்டிருந்தது.*

  • _______ * இம்மாதிரி இந்தியர்களைப் போர்க்குணம் உள்ளவர்கள், போர்க்குண மில்லாதவர்கள் என்று பிரிப்பது எவ்வளவு பிசகானது என்பது இரண்டாவது உலக மகா யத்தத்தின் போது நன்கு வெளியாயிற்று. உலகத்துப் போர்முனைகளிலும் சமீபத்தில் காஷ்மீரிலும் சென்னை வீரர்களின் போர்த் திறமை சுடர் விட்டுப் பிரகாசித்தது.

  • அப்போது பஞ்சாப் மாகாணம் ஸர் மைக்கேலே ஓட்வியர் என்னும் லெப்டினெண்ட் கவர்னரின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பொறுக்கி எடுத்த 'இரும்பு மனிதர்'களுக்குள்ளே ஸர் மைக்கேலே ஓட்வியர் ஒருவர்.'இந்திய சுதந்திரம்' என்ற பேச்சுக் காதில் விழுந்தால் அவருடைய கண்கள் சிவக்கும். 'வந்தேமாதரம்' என்ற மந்திரம் காதில் விழுந்தால் அவருடைய இரத்தம் கொதிக்கத் தொடங்கும். அந்தக் காலத்து இந்திய தேசீயத் தலைவர்களுடைய பெயர்களைக் கேட்டால் அவருடைய நரம்புகள் புடைத்துக் கொள்ளும். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று சொல்லும் தேசீயத் தலைவர்களையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பரம விரோதிகள் என்று அவர் கருதினார். பொதுவாக இந்திய அரசியல் வாதிகளையே அவருக்குப் பிடிப்பதில்லை. மிதவாதிகள், அமிதவாதிகள், காங்கிரஸ் வாதிகள், வெடிகுண்டு வாதிகள் -யாராயிருந்தாலும் இவருக்கு ஒன்றுதான்.

  • இத்தகைய அபூர்வ மனிதரின் ஆட்சியில் அப்போது பஞ்சாப் மாகாணம் இருந்தது. இவருக்குக் கீழே இருந்த பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரும் அதே மனோபாவம் கொண்டவர்களாயிருந்தார்கள்.

  • அந்த 1919-ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் அமிருதஸரஸில் காங்கிரஸ் மகாசபையை நடத்துவது என்று தீர்மானமாகி யிருந்தது. இந்தச் செய்தி ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆங்காரம் சுடர் விடுவதற்குக் காரணமாயிற்று.

  • இத்தகைய நிலைமையிலேதான் பஞ்சாப்பில் பல நகரங்களில் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி யன்றும் ஏப்ரல் 6-ஆம் தேதி யன்றும் மகாத்மாவின் கோரிக்கைப்படி ஹர்த்தால்கள் நடந்தன. இந்த ஹர்த்தால்களின்போது பொது ஜனங்களுக்கும் சர்க்கார் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விட்டன. போலீஸார் கலையச் சொன்னதும் ஜனங்கள் கலையவில்லை. சில இடங்களில் கல்லெறிதல்கள் நடந்தன; பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்தன. ஆயினும் ஜனங்களுடைய வேகமும் உற்சாகமும் குன்றவில்லை. அதிகமாகி வருவதாகக் காணப் பட்டது. இதையெல்லாம் ஸர் மைக்கேல் ஓட்வியர் பார்த்தார். நிமிஷத்துக்கு நிமிஷம் அவருடைய ஆத்திரம் பொங்கிற்று. "பஞ்சாப்பில் பிரிட்டிஷ் அதிகாரத்தை மக்கள் அலட்சியம் செய்வதா? அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?" என்று அவருடைய உள்ளம் கொதித்தது. "இந்த ஜனங்களுக்குச் சரியான பாடங் கற்பிக்காவிட்டால் நான் ஸர் மைக்கேல் ஓட்வியர் அல்ல; இந்தப் பொதுஜன உத்வேகத்தை அடக்கா விட்டால் நான் இரும்பு வர்க்கத்தைச் சேர்ந்த லெப்டினெண்ட் கவர்னர் அல்ல" என்று உறுதி கொண்டார்.

  • உடனே தம் கீழிருந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கெல்லாம் "உங்களுடைய கைவரிசையைக் காட்டுங்கள்!" என்று உத்தரவு அனுப்பி வைத்தார்.

  • அதே சமயத்தில்தான் அமிருதஸரஸிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புப் போயிருந்தது. காந்திஜியும் வருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். இதையறிந்த ஸர் மைக்கேல் ஓட்வியர் "காந்திஜி பஞ்சாப்புக்குள் நுழையக்கூடாது" என்று உத்தரவு போட்டார். அந்த உத்தரவை ரயிலிலேயே காந்திஜியிடம் சேர்ப்பித்து அவரை வழிமறித்துத் திருப்பி அழைத்துச் செல்ல போலீஸ் உத்தியோகஸ்தரையும் அனுப்பினார்.

  • ரயில் வண்டியிலேயே காந்திஜிக்குத் தடை உத்தரவைக் கொடுத்து அவரை டில்லி ரயிலிலிருந்து இறங்கிப் பம்பாய் ரயிலில் ஏற்றித் திருப்பி அழைத்துக் கொண்டு போனார்கள் அல்லவா?

  • அதே தினத்தில் அதாவது ஏப்ரல் 10-ஆம் தேதி அமிருதஸரஸில் ஒரு முக்கியமான சம்பவம் நேர்ந்தது. அமிருதஸரஸில் அப்போது ஜனத் தலைவர்களாயிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் சத்தியபால் என்னும் பிரபல வைத்தியர். இன்னொருவர் டாக்டர் ஸைபுடீன் கிச்லூ என்னும் பிரபல பாரிஸ்டர். இந்த இரு தலைவர்களும் அச்சமயத்தில் அமிருதஸரஸின் 'முடிசூடா மன்னர்' களாக விளங்கினார்கள். ஏப்ரல் 10-ஆம் தேதி காலையில் மேற்கூறிய இரு தலைவர்களையும் அமிருதஸரஸ் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் தம்முடைய வீட்டுக்கு வந்து போகும்படி சொல்லி அனுப்பினார். நகரத்தில் அமைதி காப்பதன் சம்பந்தமாகக் கலந்து ஆலோசிக்க அழைப்பதாக அவர்கள் நினைத்து உடனே புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஜில்லா மாஜிஸ்ட்ரேர் "உங்களைக் கைது செய்திருக்கிறேன்!" என்றார். மூடிய போலீஸ் வண்டிக்குள் அவர்களை ஏற்றி யாருக்கும் தெரியாத இடத்துக்கு அனுப்பி விட்டார்.

  • ஜில்லா மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குச் சென்ற தலைவர்கள் திரும்பி வரவில்லை என்ற செய்தி அமிருதஸரஸ் நகரத்தில் அதிவிரைவாகப் பரவிவிட்டது. ஜனங்கள் சிறு சிறு கூட்டமாகச் சேர்ந்து கடைசியில் ஒரு பெருங்கூட்டமானார்கள். "எங்கள் தலைவர்களை என்ன செய்தீர்கள்?" என்று கேட்பதற்காக ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் வீடு நோக்கிச் சென்றார்கள். ஜனங்கள் வசித்த அமிருதஸரஸ் நகரத்துக்கும் உத்தியோகஸ்தர்கள் வசித்த 'ஸிவில் லைன்ஸ்' என்னும் பகுதிக்கும் நடுவில் ரயில்பாதை கேட் ஒன்று இருந்தது. அங்கே இராணுவப்படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனங்களை மேலே போகக்கூடாது என்று அவர்கள் தடுத்தார்கள். உடனே கற்கள் பல வந்து விழத்தொடங்கின. பொது ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இம்மாதிரி 'லடாய்' ஏற்படும் போதெல்லாம் கூட்டத்தில் உள்ளவர்களில் சில உற்சாகிகள் கல்லெறிவதைக் கையாளுவது அந்தநாளில் சாதாரணமாயிருந்தது. ஜனங்களிடம் வேறு ஆயுதம் கிடையாது. காந்தி மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தைப் பற்றியும் இன்னும் ஜனங்கள் சரியாக அறிந்து கொள்ள வில்லை. ஆகவே யாரேனும் சிலர் கல்லெறிய ஆரம்பித்து விடுவது வழக்கம். அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கிடைத்தாற்போல் ஆகிவிடும். போலீஸாரும் இராணுடத்தாரும் கல்லுக்குப் பதில் ஜனங்கள்மீது குண்டு எறிய ஆரம்பித்து விடுவார்கள்.

  • அநேக இடங்களில் நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களுக்குக் 'கல்லெறி' ஒரு வியாஜமாகவே இருக்கும் 'கல்லெறிதல்' சில இடங்களில் பொய்யாகக் கற்பிக்கப்படுவதும் உண்டு. அதிகாரிகளே ஜனக் கூட்டத்தில் சில கையாள்களை நியமித்துக் கல்லெறியச் செய்வதும் உண்டு. துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஏதேனும் காரணம் வேண்டும் அல்லவா?

  • அமிருதஸரஸ் ஜனங்கள்மீது ரயில்வே கேட்டில் நின்ற பட்டாளத்தார் சுட்டதில் இரண்டு பேர் செத்து விழுந்தார்கள். செத்தவர்களின் உடல்களைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெருங்கூட்டம் நகரத்தை நோக்கித் திரும்பியது. திரும்பிப் போகும்போது வெறி கொண்ட மக்கள் பல அட்டூழியங்களைப் புரிந்தார்கள். ஒரு பாங்கியையும் ரயில்வே கூட்ஸ் கொட்டகையையும் இன்னும் சில சர்க்கார் காரியாலயங்களையும் கொளுத்தினார்கள். அந்த கலாட்டாவில் ஐந்து ஐரோப்பியர்கள் கொல்லப் பட்டார்கள்.

  • அன்றைய சாயங்காலமே அமிருதஸரஸ் நகரத்தின் நிர்வாகத்தை ஸிவில் உத்தியோகஸ்தர்கள் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

  • ஒரு பிரதேசத்தில் கலகமும் குழப்பமும் அதிகமானால் அந்தப் பிரதேசத்தில் ஸிவில் சட்டங்களையும் சாதாரண ஆட்சி முறையையும் நிறுத்தி வைத்து இராணுவச் சட்ட ஆட்சியை அமுலுக்குக் கொண்டுவருவது வழக்கம். இராணுவச் சட்டம் அமுலில் இருக்கும்போது சாதாரண கோர்ட்டுகளுக்கு அதிகாரம் ஒன்றும் கிடையாது. இராணுவ அதிகாரிகள் இட்டதுதான் சட்டம். இராணுவ அதிகாரிகளின் உத்தரவை மீறினால் உடனே கடுந் தண்டனை. சாதாரண சட்டம் அமுலில் இருக்கையில் ஒருவன் குற்றம் செய்தால் அவனைக் கைது செய்வது, ரிமாண்டில் வைப்பது, ஜாமீனில் விடுவது, வக்கீல் வைத்து கேஸ் நடத்துவது, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், இப்படியெல்லாம் நியாயம் பெறுவதற்குப் பலமுறைகள் உண்டல்லவா? இராணுவச் சட்ட அமுலின் கீழ் இதெல்லாம் ஒன்றுமில்லை. இராணுவ உத்தரவை மீறுவோர் உடனே தண்டனைக்குள்ளாவார்கள். உத்தரவை மீறும்போதே சுட்டுக் கொல்லப்படலாம். அதில் தவறினால் இராணுவக் கோர்ட்டு களில் உடனுக்குடன் 'விசாரணை' நடக்கும். கசையடி, தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்பீல் கிடையாது.

  • ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அமிருதஸரஸ் ஸிவில் அதிகாரிகள் நிலைமையைத் தங்களால் இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி இராணுவச் சட்ட அமுலைக் கோரினார்கள். இராணுவச் சட்ட அமுலுக்கு இந்திய சர்க்காரின் அநுமதி தேவையா யிருந்தது. இந்த அநுமதி ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதிதான் வந்தது. ஆனால் இந்திய சர்க்காரின் அநுமதி வரும் என்று எதிர்பார்த்து ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியே அமிருத ஸரஸை இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தக் காரியத்துக்கு பஞ்சாப் லெப்டினெண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆதரவு பரிபூரணமாக இருந்தது. அதிகாரிகளுக்கு வேறு என்ன கவலை?

  • ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாட்டில் புது வருஷப் பிறப்பு தினம் வருவது வழக்கம் அல்லவா? வட இந்தியாவில் பல மாகாணங்களில் ஏப்ரல் 13-ஆம் தேதி ஹிந்துக்களுக்கு வருஷப் பிறப்பு தினம். அமிருதஸரஸில் அன்றைக்கு ஒரு பெரிய பொதுக் கூட்டம் கூடும் என்று காலையில் விளம்பரம் செய்யப்பட்டது. கூட்டம் நடக்கும் இடம் ஜாலியன் வாலாபாக் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

  • இந்தியாவின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் ஜாலியன் வாலாபாக் என்றும் அழியாத பெருமை பெற்றதாகும். ஆகையால் அந்தப் பெயரை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • 'பாக்' (Bagh) என்னும் ஹிந்தி வார்த்தைக்குத் 'தோட்டம்' என்று பொருள். ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் அப்போது தோட்டமே இல்லை; மரமே கிடையாது. அது வெறும் வெட்ட வெளியான மைதானமாயிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று பக்கங்களில் உயரமான மச்சு வீடுகள் இருந்தன. அந்த மச்சு வீடுகளின் பின்புறத்து நெடுஞ் சுவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கோட்டைச் சுவர்களைப்போல் நின்றன. ஒரே ஒரு பக்கத்தில் மாத்திரம், ஒரு ஆள் உயரமான மதில் சுவர் இருந்தது.

  • மைதானத்துக்குள் ஜனங்கள் வருவதற்கும் திரும்பிப் போவதற்கும் வழி ஒன்றே ஒன்றுதான். அந்த ஒரு வழியும் மிகக் குறுகலானது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் பேருக்கு மேல் அதன் வழியாக மைதானத்துக்கு உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது.

  • இப்படிப்பட்ட ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அன்று பிற்பகலிலிருந்தே ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். வயதானவர்கள், வாலிபர்கள், ஸ்திரீகள், குழந்தைகள் எல்லோருமாகப் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்சுலுவும் என்ன ஆனார்கள் என்று ஜனங்களுக்கு இன்னமும் தெரியவில்லை. காந்திஜியை டில்லிக்கு அப்பால் பால்வால் ஸ்டே ஷனில் இறக்கிக் கைது செய்துகொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி வந்திருந்தது. டில்லியில் சுவாமி சிரத்தானந்தர் தலைமை வகித்து நடத்திச் சென்ற ஊர்வலத்தின் பேரில் போலீஸார் 'துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம்' என்று சொன்னபோது சுவாமி சிரத்தானந்தர் தமது மார்பை மூடியிருந்த சட்டையை எடுத்து விட்டுச் "சுடுங்கள்!" என்று சொன்ன செய்தியும் வந்திருந்தது. 10-ஆம் தேதியிலிருந்து அமிருதஸரஸில் நடந்துவந்த இராணுவ அதிகார அமுல் மக்களின் உள்ளத்தில் கொதிப்பை உண்டு பண்ணியிருந்தது. ஆகவே ஜாலியன் வாலாபாக்கில் இருபதினாயிரம் ஜனங்களுக்கு மேல் கூடிவிட்டார்கள். அங்கே கூட்டம் போடுவது சட்ட விரோதம் என்றோ, அதிகாரிகள் கூட்டத்தைத் தடுக்கிறார்கள் என்றோ, அந்த ஜனங்கள் அறிந்திருக்கவில்லை.

  • கூட்டம் அமைதியாகவே ஆரம்பமாயிற்று. சிறிது நேரம் நடந்தது. ஹன்ஸ்ராஜ் என்னும் தொண்டர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று படைகள் வரும் சத்தம் கேட்டது. நூறு இந்தியவீரர்களும் ஐம்பது ஐரோப்பிய சோல்ஜர்களும் அடங்கிய படை மைதானத்துக்குள் பிரவேசித்தது. இந்தப் படைக்கு ஜெனரல் டையர் என்பவர் தலைமை வகித்தார். இவர் கவசம் பூண்ட இயந்திர பீரங்கி ஒன்றும் கொண்டு வந்திருந்தார். ஆனால் குறுகிய நுழை வாசல் வழியாக அதை மைதானத்துக்குள்ளே கொண்டுவர முடியவில்லை. ஆகையால் கவச பீரங்கியை வெளியிலே நிறுத்தி விட்டுத் தம்முடன் வந்த வீரர்களுடன் ஜெனரல் டையர் மைதானத்துக்குள் பிரவேசித்தார். அவர் பிரவேசித்த இடத்துக்குப் பக்கத்திலேயே கொஞ்சம் உயரமான மேடை ஒன்று இருந்தது. அந்த மேடையில் வீரர்களை நிறுத்தினார். இந்திய வீரர்களை முன்னாலும் ஐரோப்பிய வீரர்களைப் பின்னாலும் நிறுத்தினார். "உடனே கலைந்து போங்கள்" என்று ஜனங்களைப் பார்த்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு போட்டு இரண்டே இரண்டு நிமிஷம் பொறுத்துவிட்டுச் "சுடுங்கள்" என்று வீரர்களுக்கு உத்தரவிட்டார்!

  • இருபதினாயிரம் பேர் அடங்கிய அந்தப் பெருங்கூட்டத்தில் சோல்ஜர்கள் வந்திருக்கிற விஷயம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. ஜெனரல் டையரின் உத்தரவு யாருக்குமே காதில் விழவில்லை. ஆனால் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் சத்தம் ஏக காலத்தில் இருபதினாயிரம் பேரின் காதிலும் விழுந்தது. உடனே ஜனங்கள் எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கே ஓடுவது? மைதானத்துக்குள் வரும் குறுகிய பாதை வழியாக அவ்வளவு பேரும் ஓடமுடியாது. குறைந்தது அதற்கு இரண்டு மணி நேரம் வேண்டும். சுற்றிலும் மூன்று பக்கம் நெடுஞ்சுவர்கள் நின்றன. ஒரு பக்கத்தில் மட்டும் தாழ்ந்த மதில் சுவர் நின்றது. அதை நோக்கி ஜனங்கள் ஓடி மதில் மேல் ஏறிக் குதிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குட்டையான மதில் சுவரை நோக்கியே துப்பாக்கிக் குண்டுகளும் அதிகமாக வந்தன. ஏறிக் குதிக்க முயன்றவர்களில் பலர் குண்டு பட்டுச் செத்து விழுந்தார்கள்! அந்த மதில் சுவர் ஓரமாகப் பிணங்கள் குவிந்தன!!

  • ஜெனரல் டையரின் வீரர்கள் அரை மணி நேரம் சுட்டார்கள். மொத்தம் 1600 குண்டுகள் சுட்டார்கள். கொண்டு வந்திருந்த தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து போன பிறகுதான் சுடுவதை நிறுத்தினார்கள்!

  • "ஜனங்களைக் கலைப்பதற்காக மட்டும் நான் சுடவில்லை. ஜனங்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகச் சுட்டேன்! எத்தனை பேரைக்கொல்லலாமோ அவ்வளவு பேரையும் கொல்லுவதற்குச் சுட்டேன்! அப்போதுதான் மறுபடியும் ஜனங்கள் என்னுடைய உத்தரவை மீறத் துணிய மாட்டார்கள் என்பதற்காகவே அம்மாதிரி செய்தேன்! இன்னும் அதிக தோட்டாக்கள் கைவசம் இருந்திருந்தால் இன்னும் அதிக நேரம் சுட்டிருப்பேன்!" என்று ஜெனரல் டையர் சொன்னார்.

  • ஜெனரல் டையர் அன்று சுட்டதில் மொத்தம் 400 பேர் உயிரை இழந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் காயம் பட்டு விழுந்தார்கள். தோட்டாக்கள் தீர்ந்தவுடனே ஜெனரல் டையர் தம் வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்.

  • செத்தவர்களின் உடல்கள் இரவெல்லாம் அந்த மைதானத்திலேயே கிடந்தன. காயம்பட்டு விழுந்தவர்கள் இரவெல்லாம் அங்கேயே முனகிக்கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் கிடந்தார்கள். அவர்களில் பலர் "தாகம்!தாகம்!" என்று தவித்தார்கள். ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதற்கும் அங்கே யாரும் இல்லை. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கதிகலங்கிப்போய் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டார்கள். இந்தமாதிரி ராட்சதச் செயல் நடக்கக்கூடும் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

  • காயம்பட்டவர்களுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதற்கோ அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ சிகிச்சை செய்வதற்கோ ஜெனரல் டையர் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

  • மறுநாள் காலையில் ஜெனரல் டையருக்கு ஒரு தந்தி வந்தது. "சரியான காரியம் செய்தீர். லெப்டினெண்ட் கவர்னர் உம்முடைய செயலை அங்கீகரிக்கிறார்!" என்று அந்தத் தந்தி கூறியது.

  • ஜெனரல் டையருடைய பயங்கர லீலைகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் முடியவில்லை. கற்பனைக்கெட்டாத பல கொடுமைகளை அவர் நிகழ்த்தினார். அமிருதஸரஸ் நகரத்துக்குக் குழாயில் ஜலம் வருவதையும் தீபங்களுக்கு மின்சார சக்தி கிடைப்பதையும் நிறுத்திவிட்டார். வீதிகளிலே இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து நடக்கக்கூடாது என்று உத்தரவுபோட்டார். கடைகளைக் கட்டாயமாகத் திறக்கச்செய்து இராணுவ அதிகாரிகள் சொன்ன விலைக்குச் சாமான்களை விற்கும்படி செய்தார். பைசைக்கிள்களையும் வண்டிகளையும் கட்டாயமாகக் கைப்பற்றினார். தெரு முனைகளில் முக்கோணங்களை நாட்டி, இராணுவ உத்தரவுகளை மீறி நடப்பவர்களை யெல்லாம் சவுக்கினால் அடிக்கும்படி செய்தார்.

  • ஜெனரல் டையருடைய உத்தரவுகளுக்குள்ளே யெல்லாம் மிகப் பயங்கரமானது, 'வயிற்றினால் ஊர்ந்துசெல்லும்' உத்தரவு (Crawling order). மிஸ் ஷெர்வுட் என்னும் ஐரோப்பிய ஸ்திரீ ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்த போது இராணுவச் சட்டக் கொடுமைகளினால் வெறி கொண்டிருந்த சில மக்கள் அவளைத் தாக்கினார்கள். ஆனால் அதே சந்தில் வசித்த நல்ல மனிதர்கள் ஓடிவந்து அந்த ஐரோப்பிய ஸ்திரீயைக் காப்பாற்றி விட்டார்கள்.

  • இந்தச் செய்தி ஜெனரல் டையருக்குத் தெரிந்ததும் அவர் உடனே இரணிய கசிபுவாக மாறினார்! அந்தச் சந்தின் முனைக்கு வந்து " இனி இந்தச் சந்துக்குள் போகிறவர்கள் எல்லோரும் வயிறு தரையில் படும்படி ஊர்ந்து போகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்தச் சந்தில் குடியிருந்த ஜனங்கள் அனைவரும் வெளியில் போக வேண்டுமானாலும் மறுபடி திரும்பி வீட்டுக்கு வரவேண்டுமானாலும் வயிற்றினால் ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று!

  • அமிருதஸரஸில் ஜெனரல் டையர் ஏற்படுத்திய இராணுவக் கோர்ட்டார் இராணுவ உத்தரவை மீறியதற்காக 298 பேரை விசாரணை செய்தார்கள். அவர்களில் 51 பேருக்கு மரண தண்டனையும் 49 பேருக்கு ஆயுள்பரியந்தம் தீவாந்தர தண்டனையும் 79 பேருக்கு 7 வருஷ தண்டனையும் கிடைத்தன!

  • அமிருதஸரஸில் ராட்சத ஆட்சி நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் பஞ்சாப்பின் இன்னும் பல இடங்களிலும் ஜெனரல் டையரின் அண்ணன்மார்களும் தம்பிமார்களும் அவரவர்களுடைய சக்திக்கு இசைந்தபடி அசுர லீலைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

  • லாகூர் நகரில் கர்னல் ஜான்ஸன் ஆட்சிபுரிந்தார். இரவு எட்டுமணிக்கு மேலே வெளியே கிளம்புகிறவர்கள் சுடப்படுவார்கள் என்று அவர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவு அடங்கிய விளம்பரங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டன. அந்த விளம்பரங்கள் கிழிக்கப்படாமல் காப்பாற்றுவது வீட்டுக்காரர் பொறுப்பு. இரவெல்லாம் கண் விழித்துக் காக்கவேண்டும். காக்கத் தவறினால் மரணதண்டனை, அல்லது கசையடி, அல்லது சிறைவாசம்.

  • லாகூர் கலாசாலைகளில் படித்த மாணாக்கர்கள் அனைவரும் நகருக்கு நாலு மைல் தூரத்திலிருந்த இராணுவத் தலைமைக் காரியாலயத்துக்குத் தினம் நாலு தடவை வந்து ஆஜர் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அப்போது கடுங் கோடைக்காலம். லாகூரில் உஷ்ணத்தின் டிக்ரி அப்போது 108. இந்த வெயிலில் மாணாக்கர்கள் தினம் பதினைந்து மைல் நடக்க வேண்டியதாயிற்று. பலர் சாலையிலேயே மூர்ச்சையடைந்து விழுந்தார்கள். கேள்விப்பட்ட கர்னல் ஜான்ஸன், "ரொம்ப நல்லது. விழுந்த மாணாக்கர்கள் விஷமம் செய்யாமல் இருப்பார்கள் அல்லவா?" என்றார்.

  • ஒரு காலேஜ் வாசல் சுவரில் ஒட்டியிருந்த இந்த உத்தரவு விளம்பரம் கிழிக்கப்பட்டது. இதற்காக அந்தக் கலாசாலை பிரின்ஸ்பால், ஆசிரியர்கள் எல்லாரையும் கைது செய்து வீதி வழியாக நடத்தி அழைத்துச் சென்று கோட்டையில் ஒரு மூலையில் மூன்றுநாள் அடைத்து வைத்திருக்கும்படி உத்தர விட்டார். இவ்வாறே குஜர்ன்வாலாவில் கர்னல் ஒப்ரியனும் ஷேக்புராவில் மிஸ்டர் பாஸ்வொர்த் ஸ்மித்தும் காஸூரில் காப்டன் டவ்டனும் அசுர ஆட்சி நடத்தினார்கள்.

  • குஜர்ன்வாலாவில் ஆகாய விமானத்திலிருந்து குண்டு போடும் முறையும் கையாளப்பட்டது. லெப்டினண்ட் டாட்கின்ஸ், மேஜர் கார்ப்பி ஆகியவர்கள் ஆகாய விமானத்திலிருந்து கீழே ஜனக் கூட்டத்தைக் கண்டவுடனே வெடி குண்டு எறிந்தார்கள். அல்லது இயந்திர பீரங்கியினால் சுட்டுக் கலைந்தார்கள்.

  • இம்மாதிரி ஒரு கலியாண ஊர்வலத்தின்மீது ஆகாய விமானத்திலிருந்து குண்டுகள் எறியப்பட்டன.

  • கர்னல் ஒப்ரியன் என்பவர் ப்ரிட்டிஷ் அதிகாரிகளை இந்தியர்கள் கண்டவுடனே சலாம் போடவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தியர்கள் வண்டியில் ஏறியிருந்தால் உடனே இறங்கிச் சலாம் போடவேண்டும் என்றும், குடை பிடித்திருந்தால் உடனே குடையை இறக்கி மூடவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இந்த உத்தரவை மீறியவர்களுக் கெல்லாம் கசையடி கொடுக்கப்பட்டது.

  • காப்டன் டவ்டன் என்பவர் காஸூர் பட்டணத்தில் ஒரு முக்கியமான நாற்சந்தியில் ஒரு பெரிய தூக்குமேடை கட்டினார். அத்துடன், நூற்றைம்பது பேர் கொள்ளக்கூடிய ஒரு பெரிய இரும்புக் கூண்டு தயாரித்து ரயில்வே ஸ்டே ஷனுக்குப் பக்கத்தில் நாட்டினார். கலகத்தில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகத்துக்கு உள்ளவர்களைக் கொண்டுவந்து அந்தக் கூண்டில் அடைத்து வைத்தார். ரயிலுக்குப் போகிறவர்கள், ரயிலிலிருந்து வருகிறவர்கள் எல்லாரும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொண்டு போகுமாறு ஏற்பாடு செய்தார்!

  • பஞ்சாப் முழுவதிலும் பொது வாழ்வில் பிரமுகர்களாயிருந்தவர்கள் அனைவரும் இராணுவச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு கடுந்தண்டனைக்கு உள்ளானார்கள். லாகூரில் ஹரிகிருஷ்ணலால் பிரபல காங்கிரஸ் வாதி. பெரிய செல்வந்தர். அவருக்கு 40 லட்ச ரூபாய் சொத்து இருந்தது. அவரைக் கைது செய்து ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனை விதித்ததுடன் இவருடைய சொத்து முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவு போட்டார்கள். லாகூரில் அப்போது பிரபலமாயிருந்த பண்டிதராம் போஜி தத்தர், பண்டித கே. சந்தானம், 'டிரிப்யூன்' பத்திரிகை ஆசிரியர் பாபு காளிநாத் ராய் முதலியவர்களும் அதே கதிக்கு உள்ளாயினர்.

  • பஞ்சாபில் இவ்விதம் ராட்சத ராணுவ ஆட்சி நீடித்துக் கொண்டே போயிற்று. ஆனால் பஞ்சாப்புக்கு வெளியில் உள்ளவர்களுக்கு அங்கே நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றி ஒன்றுமே அப்போது தெரியவில்லை. ஏனெனில் செய்திகள் எல்லாம் தணிக்கை செய்து அனுப்பப்பட்டன. வெளி மாகாணங்களிலிருந்து பஞ்சாப்புக்குள் வரவோ பஞ்சாப்பிலிருந்து வெளியில் போகவோ யாரும் அனுமதிக்கப் படவில்லை.

  • பூஜ்யர் ஆண்ட்ரூஸ் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டு அங்கே போய் விசாரணை செய்ய விரும்பி மே மாதத்தில் பஞ்சாபுக்குப் போனார். அவரை அமிருதஸரஸில் கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்திருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள். லாலா ஹரிகிருஷ்ண லாலின் சார்பாக இராணுவக் கோர்ட்டில் வழக்காடுவதற்காக பிரசித்த பாரிஸ்டரான மிஸ்டர் எர்ட்லி நார்ட்டன் பஞ்சாப் சென்றார். அவரும் திருப்பி அனுப்பப் பட்டார்.

  • ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் ஒரு மாதிரியாகப் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. அந்த மாதத்தில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிய போது பிரபல காங்கிரஸ் தலைவர்களிடம் இரகசியமாகப் பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. சொன்னவர்கள், "இதெல்லாம் இரகசியமாக இருக்கட்டும். எங்களைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம்" என்று வேண்டிக் கொண்டார்கள்.

  • அப்போது வைஸ்ராய் செம்ஸ்போர்டின் நிர்வாக சபையின் அங்கத்தினரா யிருந்தவர்களில் ஸர் சங்கரன் நாயர் ஒருவர். பஞ்சாப்பில் மேலும் இராணுவச் சட்டம் நீடிப்பதைக் கண்டித்து ஜூலை 19-ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார். பஞ்சாப்பை மூடியிருந்த இரும்புத்திரை அகன்று உண்மையான செய்திகள் வர ஆரம்பித்துக் காந்தி மகாத்மாவின் காதிலும் விழுந்தன. பயங்கரக் கொடுமைகளுக்கு உள்ளான பாஞ்சாலத்துக்குப் போகவேண்டும் என்று காந்தி மகானின் உள்ளம் துடி துடித்தது.

  • -----------------------------------------------------------

      • 17. அமிருதஸரஸ் காங்கிரஸ்

  • மகாத்மா காந்தி பஞ்சாப்புக்குப் போக ஆர்வம் கொண்டிருந்த போதிலும் தடைச் சட்டத்தை மீறி அங்கே போக விரும்பவில்லை. அப்படி மீறுவதற்கு முயன்றால் பஞ்சாப்பின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும் என்று கருதினார். ஆகையால் இந்திய சர்க்காருக்குத் தந்திகளும் கடிதங்களும் அனுப்பிப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அனுமதி இலேசில் கிடைப்பதாக இல்லை. வைஸ்ராய் செம்ஸ்போர்டு, "பொறுங்கள்" "பொறுங்கள்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

  • இதற்கிடையில் மகாத்மா ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்போது "பம்பாய் கிராணிகல்" என்னும் பத்திரிகை இந்திய தேசீய இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்து வந்தது. அந்தப் பத்திரிக்கைக்கு ஸ்ரீ பி.ஜி. ஹார்னிமான் என்பவர் ஆசிரியராயிருந்தார். ஸ்ரீ ஹார்னிமான் ஆங்கிலேயரான போதிலும் இந்திய தேசீய வாதிகளின் கட்சியைப் பலமாக ஆதரித்தார். அவருடைய எழுத்து, வன்மை பொருந்தியிருந்தது. ரவுலட் சட்டத்தை எதிர்க்க மகாத்மா காந்தி ஆரம்பித்த சத்தியாக்கிரஹ இயக்கத்தையும் ஸ்ரீ ஹார்னிமான் ஆதரித்து எழுதினார். அதனால் கோபங் கொண்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அவரைத் தேசப் பிரஷ்டம் செய்தனர்.

  • இந்த நிலைமையில் ஸ்ரீ ஹார்னிமானுக்குப் பதிலாக "பம்பாய் கிராணிகல்" பத்திரிகையை நடத்தும்படி அதன் நிர்வாகிகள் மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பொறுப்பை மகாத்மா ஏற்றுக்கொண்டு சில நாள் பத்திரிகையை நடத்தினார். அதற்குள் சர்க்கார் அடக்கு முறையின் கொடுமை காரணமாகப் பத்திரிகையை நிறுத்திவிட வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது.

  • பிறகு அதே ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்டு வந்த "எங் இந்தியா" என்னும் வாரப் பத்திரிகையை மகாத்மா ஒப்புக் கொண்டார். சில காலத்துக்குப் பிறகு "எங் இந்தியா" ஆமதாபாத்துக்கு மாற்றப் பட்டது. அங்கே நடந்து வந்த "நவஜீவன்" என்னும் குஜராத்தி வாரப் பத்திரிகைக்கும் மகாத்மா ஆசிரியர் ஆனார். இந்த இரண்டு பத்திரிகைகளின் மூலமாகக் காந்தியடிகள் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் பிரசாரம் செய்யத் தொடங்கினார். "எங் இந்தியா" "நவ ஜீவன்" இரண்டு பத்திரிகைகளும் மிகவும் பிரபலமடைந்து சக்தி வாய்ந்த பத்திரிகைகள் ஆயின. அவை ஒவ்வொன்றுக்கும் 40,000 சந்தாதார் வரையில் சேர்ந்தனர்.

  • ------ ------ ------

  • மகாத்மாவுக்குப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி அந்த வருஷம் அக்டோபர் மாதத்திலேதான் கிடைத்தது. அனுமதி வந்தவுடனே மகாத்மா பஞ்சாப்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

  • பஞ்சாப் சம்பவங்களுக்கெல்லாம் மகாத்மாவே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் குற்றம் சாட்டினார். அதேமாதிரியாக்ப் பஞ்சாப் இளைஞர்கள் சிலர் இராணுவச் சட்டக் கொடுமைகளுக்கெல்லாம் மகாத்மாவையே பொறுப்பாளியாகக் கொண்டார்கள். சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததற்காக ஸர் மைக்கேல் ஓட்வியர் மகாத்மாவின் பேரில் குற்றம் சாட்டியதுபோல் சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியதற்காக இவர்கள் மகாத்மாபேரில் குற்றம் சுமத்தினார்கள். சத்தியாக் கிரஹத்தை மகாத்மா காந்தி நிறுத்தியதனால்தான் ஜாலியன் வாலா படுகொலை நடந்தது என்று சொன்னார்கள். "நீர் பஞ்சாப்புக்கு வந்தால் உம்மைக் கொலை செய்து விடுவோம்" என்று பயமுறுத்தி காந்தி மகானுக்குக் கடிதமும் எழுதினார்கள்.

  • இப்படிப்பட்ட பயமுறுத்தல்களினால் காந்திஜியைத் தடை செய்யமுடியுமா, என்ன? மகாத்மா காந்தி ரயில் ஏறி லாகூருக்கு வந்து சேர்ந்தார். அவர் எதிர் பார்தததற்கு நேர்மாறான காட்சியை லாகூர் ரயில்வே ஸ்டே ஷனில் பார்த்தார். அந்த ஸ்டே ஷன் பிளாட்பாரத்தில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் ஜனங்கள் எள்ளுப் போட இடமில்லாமல் நெருங்கி நின்றார்கள். காந்திஜியை வரவேற்பதற்காகத்தான். ரயில் நிலையத்துக்கு வெளியிலும் மாபெருங் கூட்டம் கூடியிருந்தது. லாகூர் நகரவாசிகள் அனைவருமே வீடுகளைப் பூட்டிக்கொண்டு மகாத்மாவை வரவேற்பதற்கு வந்து விட்டதுபோல் காணப்பட்டது. காந்திஜியைக் கண்டதும் அத்தனை ஜனங்களும் ஒரே குரலாக "மகாத்மா காந்திக்கு ஜே"! என்று கோஷம் இட்டார்கள். நெடுநாள் பிரிந்திருந்த உற்ற பந்துவை வரவேற்பதுபோல் லாகூர் வாசிகள் மகாத்மாவை வரவேற்றார்கள். அளவு கடந்த உற்சாகத்தினால் ஜனங்களுக்குத் தலைகால் தெரியாமல் போய்விட்டது.

  • இராணுவச் சட்டம் அமுலின்போது தாங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காந்திஜியே காரணம் என்று அவர்கள் கருதியதாகத் தோன்றவில்லை. அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடித் தரக்கூடிய உற்ற துணைவர் காந்திஜி என்று அவர்கள் நம்பியதாகத் தோன்றியது.

  • இராணுவக் கோர்ட்டினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட லாகூர் தலைவர்களின் பண்டித ராம்போஜி தத் சௌத்ரி ஒருவர். அவருடைய மனைவியான ஸ்ரீ சாரளா தேவி சௌதராணியும் பிரபல தேசியவாதி. அவருடைய வீட்டில் மகாத்மா தங்கினார். அதன் காரணமாக அந்த வீடு ஒரு பெரிய சத்திரம் ஆயிற்று. ஸ்ரீ சாரளா தேவி சௌதராணி முகமலர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் உணவு அளித்து உபசரித்தார். ஏற்கனவே பஞ்சாப்புக்கு பண்டித மதன் மோகன் மாளவியா, பண்டித மோதிலால் நேரு, சுவாமி சிரத்தானந்தர் ஆகியவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பஞ்சாப் நிலைமையைப் பற்றி மகாத்மா கலந்து ஆலோசித்தார்.

  • அதே சமயத்தில், பிரிட்டிஷ் சர்கார், பஞ்சாப் இராணுவச் சட்ட அமுலைப் பற்றி விசாரிப்பதற்காக லார்டு ஹண்டரைத் தலைவராகக் கொண்டு ஒரு கமிஷனை நியமித்திருந்தார்கள். "பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி விசாரிக்க வேண்டும்" என்று தேசமெங்கும் ஏற்பட்டிருந்த பெருங் கிளர்ச்சியின் பயனாக சர்க்கார் மேற்படி ஹண்டர் கமிஷனை நியமித்தனர். விசாரணைக் கமிஷன் என்று நியமித்துவிட்டால் பொது மக்களிடையே பொங்கிய உணர்ச்சியும் ஆத்திரமும் ஒருவாறு அடங்கிவிடும் என்று பிரிட்டிஷ் சர்க்கார் கருதினார்கள்.

  • முதலில் ஹண்டர் கமிஷன் முன்பு சாட்சியம் விட்டு ஒத்துழைப்பது என்ற மகாத்மா முதலிய தலைவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத சில தடைகள் ஹண்டர் கமிஷன் அங்கத்தினரால் ஏற்பட்டன. இராணுவச் சட்ட தண்டனைக்கு உள்ளன லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய தலைவர்களைக் கமிஷன் விசாரணையின் போது கோர்ட்டில் போலீஸ் பாராவுடன் இருக்கச் செய்ய வேண்டுமென்று மகாத்மா, மாளவியா முதலியவர்கள் வற்புறுத்தினார்கள். உண்மை துலங்குவதற்கு அது அவசியம் என்று அவர்கள் சொன்னார்கள். இதற்கு ஹண்டர் கமிஷன் ஒத்துக்கொள்ளவில்லை. இதிலிருந்து ஹண்டர் கமிஷனிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தோன்றிவிட்டது. எனவே, ஹண்டர் கமிஷனைப் பகிஷ்கரித்து, சர்க்கார் சம்பந்தமற்ற விசாரணையொன்று நடத்த ஏற்பாடு செய்வதென்று தீர்மானம் ஆயிற்று. பண்டித மாளவியாவின் யோசனைப்படி மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, ஸ்ரீ.சி.ஆர்.தாஸ், ஜனாப் அப்பாஸ் தயாப்ஜி ஆகியவர்கள் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் பண்டித மோதிலால் நேரு பிற்பாடு அமிருதஸரஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபடியால், அவருக்குப் பதிலாக பாரிஸ்டர் எம். ஆர். ஜெயக்கர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்.

  • இந்த நாலு பெரும் தனித் தனியே நாலு பக்ககளிலும் சென்று இராணுவ அமுலைப் பற்றிச் சாட்சியம் சேகரிக்கலானார்கள். ஆயினும் அந்த வேலை பெரும்பாலும் காந்திஜியின் தலையிலேயே விழந்தது. விசாரணை செய்யச் செய்ய, சாட்சியங்களைக் கேட்கக் கேட்க, எவ்வளவு பயங்கரமாக கொடுமைகள் இராணுவ அமுலின்போது ஜனங்களுக்கு இழைக்கப்படிருகின்றன என்று காந்திஜிக்குத் தெரிய வந்தது. பஞ்சாப் ஜனங்களோ மகாத்மாவைத் தங்களை ரக்ஷிக்க வந்த தெய்வம் என்று நினைத்து அவரிடம் தாங்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டர்காள்.

  • பஞ்சாப் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே அமிருதசரஸ் நகரில் காங்கிரஸ் மகா சபை கூடியது. அமிருதஸரஸ் காங்கிரஸ் அதற்குமுன் நடந்த எந்தக் காங்கிரஸையும் விடப் பெருமிதமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. ஆறாயிரம் பிரதிநிதிகளும் முப்பதினாயிரம் பார்வையாளரும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். சுவாமி சிரத்தானந்தர் வரவேற்பு சபையின் தலைவர். பண்டித மோதிலால் நேரு காங்கிரஸ் மகாசபையின் அக்கிராசனர். காங்கிரஸ் கூடுவதற்கு முதல் நாள் இராணுவச் சட்டத்தின்படி சிறைப் பட்டிருந்த லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். சென்ற நாலு வருஷமாகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அலி சகோதரர்களும் விடுதலையானார்கள். விடுதலையான தலைவர்கள் நேரே அமிருதஸரஸுக்கு வந்து சேர்ந்தார்கள். அலி சகோதரர்கள் அமிருதஸரஸ் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது அந்த நகர் மக்களின் ஆரவாரத்தைச் சொல்லி முடியாது.

  • அலி சகோதரர்கள் அத்தனை நாளும் சிந்த்வாரா என்னுமிடத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். மௌலானா முகம்மதலி தமது பிரசங்கத்தில் "சிந்த்வாராவுக்கு ரிடர்ன் டிக்கெட் என் சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்" என்று சொன்னார். அதாவது மறுபடியும் சிறைக்குப் போகத் தாம் தயாரா யிருப்பதை அவ்விதம் தெரிவித்தார். இது மக்களின்ஆவேசத்தை அதிகப்படுத்தியது.

  • இத்தகைய சூழ்நிலையில் அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடியது. இந்தக் காங்கிரஸின்போது மூன்று புதிய தலைவர்கள் நாட்டிலும் காங்கிரஸிலும் சக்தி பெற்று வருகிறார்கள் என்று வெளியாயிற்று. ஒருவர், அக்கிராசனம் வகித்த பண்டித மோதிலால் நேரு. இரண்டாவது தலைவர் பாரிஸ்டர் சித்தரஞ்சன் தாஸ். மூன்றாவது தலைவர் தான் மகாத்மா காந்தி. இந்த மூன்று பேருக்குள்ளேயும் காந்தி மகாத்மாவே சக்தி வாய்ந்தவர் என்பதும் அமிருதஸரஸில் ஒருவாறு தெரிய வந்தது. அமிருதஸரஸ் காங்கிரஸில் நிறைவேறிய மிகவும் முக்கியமான தீர்மானம் சம்பந்தமாக ஏற்பட்ட விவாதங்களிலிருந்து இது வெளியாயிற்று.

  • முதலாவது மகா யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் இந்தியாவிலிருந்து மெஸபடோமியாவுக்கு அனுப்பிய துருப்புகள் விபரீதமான முடிவை அடைந்தன. இங்கிலாந்தில் இது பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. மிஸ்டர் மாண்டகு என்பவர் பார்லிமெண்டில் இந்திய அதிகார வர்க்கத்தைப் பலமாகத் தாக்கிப் பேசினார். இந்தியாவின் ஆட்சி முறையைக் காலத்துக் கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இங்கிலாந்தில் பலருக்கும் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் மிஸ்டர் மாண்டகுவையே இந்தியா மந்திரியாக நியமித்தார்கள். மிஸ்டர் மாண்டகு இந்தியாவுக்கு நேரில் வந்து இங்குள்ள நிலைமையை நன்கு தெரிந்து கொள்ளப் போவதாகவும் பிறகு அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றிச் சிபார்சு செய்யப் போவதாகவும் சொன்னார். அதன்படியே அவர் வந்தார். இந்தியாவில் பல பிரமுகர்களைச் சந்தித்தார். பல ஸ்தாபனங்களின் அபிப்பிராயங்களைக் கேட்டார். இங்கிலாந்துக்குத் திரும்பிப் போன பிறகு 'இரட்டை யாட்சி' என்னும் வேடிக்கையான அரசியல் திட்டத்தைச் சிபார்சு செய்தார். இதன்படி இந்தியாவின் மாகாணங்களில் பாதி இலாக்காக்கள் பழையபடி கவர்னருடைய நிர்வாக சபையினாலும் மற்றப் பாதி இலாக்காக்கள் ஜனங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளாலும் நிர்வகிக்கப்படும். போலீஸ்,சட்டம், வருமானம் முதலிய முக்கிய இலாக்காக்கள் கவர்னரிடமே இருக்கும். கல்வி, சுகாதாரம் முதலிய இலாக்காக்கள் மந்திரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்தியா மந்திரி மாண்டகுவும் வைஸ்ராய் லார்டு செம்ஸ்போர்டும் சேர்ந்து தயாரித்த திட்டமாதலால் இதற்கு மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் என்றும், மாண்ட் போர்ட் திட்டம் என்றும் பெயர்கள் வழங்கலாயின.

  • அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடுவதற்குச் சில நாளைக்கு முன்னாலேதான் மேற்படி திட்டம் வெளியாகி யிருந்தது. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்பதைப் பற்றிக் காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்கெனவே ஆலோசனைகள் நடந்து வந்தன. காங்கிரஸிலிருந்து மிதவாதிகள் எல்லாரும் அதற்குள்ளே தனியாகப் பிரிந்து போய்த்தனி ஸ்தாபனமும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பழம் பெருந்

  • தலைவர்களில் லோகமான்ய திலகர், பண்டித மாளவியா, ஸ்ரீ விபினசந்திரபால் முதலியோர் காங்கிரஸில் இருந்தார்கள். 1917-ஆம் ஆண்டில் டாக்டர் பெஸண்டு அம்மையின் செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு வருஷத்துக்குள் காங்கிரஸில் அவருடைய செல்வாக்கு அடியோடு குன்றிவிட்டது.

  • இரண்டு வருஷமாக ஸ்ரீ சித்தரஞ்சன் தாஸின் நட்சத்திரம் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர் அவர். சுதேசி இயக்க நாட்களில் ஸ்ரீ அரவிந்த கோஷின் சார்பாகக் கோர்ட்டில் ஆஜராகிப் பேசிப் புகழ் பெற்றிருந்தவர். 1917-ல் டாக்டர் பெஸண்டு அம்மையைக் காங்கிரஸ் தலைவராக்குவதற்கு பாடுபட்டவரும் அவர்தான். தேசீய வாதிகள் பெரும்பாலோர் அவருடைய யோசனையை எதிர்பார்க்கத் தொடங்கி யிருந்தார்கள்.

  • மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டத்தைப் பற்றி ஸ்ரீ சித்தரஞ்சன்தாஸ் ஒரு தீர்மானம் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். "மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் போதாது. அதிருப்திகரமானது. ஏமாற்றகரமானது; ஆகையால் அதை இந்தக் காங்கிரஸ் நிராகரிக்கிறது" என்பது தீர்மானத்தின் முக்கிய அம்சம்.

  • "ஏற்கெனவே, லோகமான்ய திலகர் "கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு பாக்கிக்குப் போராட வேண்டும்" என்ற கொள்கையை வெளியிட்டிருந்தார். ஆயினும் அமிருதஸரஸில் ஸ்ரீ சி. ஆர். தாஸைச் சந்தித்துப் பேசிய பிறகு அவருடைய தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக் கொண்டார்.

  • "மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை அங்கீகரித்து நடத்துவது" என்று டாக்டர் பெஸண்டு கொண்டு வர விரும்பிய தீர்மானத்தை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

  • இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் நிலைமை இன்னதென்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்பினார்கள். மகாத்மாவினுடைய மனப்பாங்குதான் நமக்குத் தெரியுமல்லவா? எதிராளிகளின் பேச்சில் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது என்பது அவருடைய திடமான கொள்கை. மாண்டகு நல்ல எண்ணத்துடனே இந்த அரசியல் திட்டத்தை வகுத்திருக்கிறார் என்று மகாத்மா பூரணமாக நம்பினார். ஆகையால் அதை அடியோடு நிராகரிக்கும் யோசனை மகாத்மாவுக்குப் பிடிக்க வில்லை. அதே சமயத்தில் காங்கிரஸில் மிகச் செல்வாக்குள்ள ஸ்ரீ திலகர் முதலிய தலைவர்களுக்கு எதிராகப் பேசவும் அவர் விரும்பவில்லை. ஆகையால் காங்கிரஸுக்கு முதல் நாள் மட்டும் வந்து விட்டு அப்புறம் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலிருந்துவிட மகாத்மா எண்ணியிருந்தார். இதைப் பண்டித மாளவியாவிடம் கூறியபோது அவர் அதை ஒப்பவில்லை. லாலா ஹரி கிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்களூம் அதை விரும்பவில்லை. "நீங்கள் அவ்விதம் செய்வது பஞ்சாபிகளுக்கு மிக்க மன வருத்தத்தை அளிக்கும்" என்று அவர் சொன்னார். "என்னுடைய அபிப்பிராயத்தை நான் வற்புறுத்தினால் வோட் எடுக்க நேரிடலாம். இங்கே வோட் எடுக்க வசதி ஒன்றும் இல்லையே? பிரதிநிதிகளுக்கும் பார்வையாளருக்கும் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கலந்து போயிருக்கிறார்களே?" என்றார் காந்திஜி. "வோட் எடுக்கும் சமயத்தில் பார்வையாளரை வெளியில் அனுப்பிவிட ஏற்பாடு செய்கிறோம்" என்றார் ஸ்ரீ ஹரி கிருஷ்ணலால்.

  • எனவே, மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை ஸ்ரீ சி. ஆர். தாஸ் கொண்டு வந்தபோது மகாத்மா அதற்கு ஒரு திருத்தம் பிரேரேபித்தார். "ஏமாற்றமானது" என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, "முழுப் பொறுப் பாட்சியை அடைவதற்கான முறையில் மேற்படி திட்டத்தை நடத்தி வைக்கத் தீர்மானிக்கிறது" என்பதைக் கடைசியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி மகானுடைய திருத்தம் கூறியது. அத்துடன், மிஸ்டர் மாண்டகு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கியம் ஒன்றையும் சேர்க்க வேண்டுமென்று மகாத்மா பிரேரேபித்தார்.

  • அப்போது தேச மக்களுடைய மனோநிலை கொதிப்படைந்திருந்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் பஞ்சாப் கிலாபத் அநீதிகளைக் குறித்து ஆத்திரம் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் மகாத்மாவின் ஒத்துழைப்புத் திருத்தம் பிரதிநிதிகளுக்கு மிகக் கசப்பாயிருந்தது. ஆனாலும் அவர்கள் காந்தி மகாத்மாவின் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

  • இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதாயிருந்தால் அது மகாத்மாவினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருடைய அந்தரங்கத்தில் அப்போது ஏற்பட்டிருந்தது. காந்திஜி ஒரு பக்கமும் திலகர், தாஸ் முதலிய தலைவர்கள் மற்றொரு பக்கமும் மாறுபட்டு நிற்பதையும் ஜனங்கள் விரும்பவில்லை. ஆகவே தீர்மானமும் திருத்தமும் பிரேரணை செய்யப்பட்டபோது பிரதி நிதிகள் - பார்வையாளர் அனைவரும் சோர்வடைந்து முகம் வாடிப் போனார்கள். இந்த நிலைமையில் ஒரு சிலர் இரு சாராரிடையிலும் சமரசம் உண்டு பண்ண முயன்றார்கள். சமரசம் ஏற்பட வேண்டும் என்பதில் மற்றவர்களைக் காட்டிலும் பண்டித மாளவியாவுக்கு அதிக ஆத்திரம் இருந்தது. அவர் காங்கிரஸ் மேடையில் அமர்ந்தபடி சமரசத்துக்கு வழி காண முயன்று கொண்டிருந்தபோது ஸ்ரீ ஜயராம்தாஸ் தௌலத்ராம் மகாத்மாவின் திருத்தத்தில் ஒரு சிறு திருத்தம் செய்து அதைச் சமரசப் பிரேரணையாகச் சமர்ப்பித்தார். "திட்டத்தை நடத்துவது" என்பதைக் "கூடுமான வரையில் நடத்துவது" என்று அவர் திருத்தினார். இதை மகாத்மா ஒப்புக்கொண்டதும், பண்டித மாளவியா லோகமான்ய திலகரை நோக்கினார். திலகர் "தாஸ் சம்மதித்தால் எனக்குச் சம்மதம்" என்றார். தாஸ், விபின சந்திரபாலரைப் பார்த்தார். விபின சந்திரர் தலையை அசைத்தார். உடனே பண்டித மாளவியா எழுந்து நின்று, "பிரதிநிதிகளே! தலைவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டது!" என்று அறிவித்தார். அப்போது சபையில் எழுந்த சந்தோஷ ஆரவாரம் ஆகாயத்தை அளாவியது. அதிலிருந்து தலைவர்கள் ஒத்துப் போகவேண்டும் என்பதில் பிரதிநிதிகளுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்கு வெளியாயிற்று. அதற்கு பிறகு மேடையில் இருந்த தலைவர்கள் சமரசமாகப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

  • சமரசத் தீர்மானம் மிகுந்த உற்சாகத்துக்கிடையே நிறைவேறியது. சமரசத் தீர்மானம் என்று சொல்லப்பட்டதாயினும் உண்மையில் அது காந்தி மகாத்மா காங்கிரஸ் மகாசபையின் மேடையில் அடைந்த மகத்தான முதல் வெற்றி என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள்.

  • இதே விதமாக இன்னும் இரண்டு தீர்மானங்களைக் கசந்து விழுங்கிக் கொண்டு காந்தி மகாத்மாவுக்காகவே காங்கிரஸ் பிரதிநிதிகள் நிறைவேற்றினார்கள். அவற்றில் ஒன்று பஞ்சாப் பிலும் குஜராத்திலும் பொது ஜனங்கள் அத்து மீறிப் பலாத்காரச் செயல்களில் இறங்கியதைப் பலமாகக் கண்டனம் செய்தது. அதிகாரிகளுடைய செயல்களினால் கொதிப்படைந்திருந்த பிரதிநிதிகளுக்குப் பொது ஜனங்களைக் கண்டிக்கும் காரியம் சிறிதும் பிடிக்கவில்லை. ஆயினும் மகாத்மா காந்தி கொண்டு வந்தபடியால் அந்தத் தீர்மானமும் நிறைவேறியது. அதோடு அடுத்த வருஷம் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வதைக் காங்கிரஸ் வரவேற்கிறது என்ற தீர்மானமும் மகாத்மாவுக்காகவே நிறைவேறியது.

  • அமிருதஸரஸ் காங்கிரஸில் ஒத்துழைப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய அதே மகாத்மா சில மாதங்களுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் துவஜா ரோகணம் செய்தார். மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி நடக்கும் சட்ட சபைத் தேர்தல்களை அடியோடு பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்றார். சட்டசபை பகிஷ்காரத்தை மற்ற தலைவர்கள் எதிர்த்தார்கள் ஆயினும் மகாத்மாவின் திட்டத்தைத் தேசமும் காங்கிரஸும் ஒப்புக்கொண்டன. இந்த அதிசயங்களைப் பற்றிப் பின்னர் விவரமாகத் தெரிந்து கொள்வோம்.

  • -----------------------------------------------------------

      • 18. கிலாபத் கிளர்ச்சி

  • பாரத நாட்டின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி ஆரம்பித்து நடத்திய முதலாவது பேரியக்கத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் என்று பெயர். இந்த இயக்கத்தின் வித்து 1919-ல் மகாத்மாவின் உள்ளத்தில் விதைக்கப்பட்டது. 1920-இல் அது முளைத்து வளர்ந்தது. அடுத்த 1921-ஆம் ஆண்டில் அந்த இயக்கம் மாபெரும் விருட்சமாகிப் பரவிப் படர்ந்து தழைத்தது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு முக்கிய காரணங்களாக உதவியவை 1. பஞ்சாப் படுகொலை முதலிய கோர நிகழ்ச்சி களும், 2. கிலாபத்துக்கு ஏற்பட்ட ஆபத்துமாகும்.

  • 1919-ஆம் ஆண்டு முதல் 1921-ஆம் ஆண்டு வரையில் பாரத நாட்டின் சரித்திரத்தில் ஒரு மகோன்னதமான காலம். அந்த மூன்று வருஷத்திலும் இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம் களும் ஒற்றுமையாகச் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்டதுபோல் அதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேல் நடக்குமா என்றும் சொல்ல முடியாது. இத்தகைய ஹிந்து முஸ்லிம் சகோதர பாவத்துக்குக் காரணமாயிருந்தது கிலாபத்துக்கு வந்த ஆபத்துத்தான். கிலாபத்தைப் பற்றியும் அதற்கு வந்த ஆபத்தைப்பற்றியும் இப்போது தெரிந்து கொள்வோம்.

  • முதலாவது உலக மகாயுத்தத்தில் பிரிட்டனும் ஜெர்மனியும் போராடிக் கொண்டிருந்தபோது துருக்கி தேசம் ஜெர்மன் கட்சியைச் சேர்ந்தது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானார்கள்.

  • துருக்கி சுல்தான் துருக்கி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மட்டுமல்ல; உலக முழுவதிலும் வசித்த முஸ்லிம்களின் மத குரு என்ற பதவியையும் வகித்து வந்தார். இந்தக் குரு பீடத்துக்குக் கிலாபத் என்று பெயர். கிலாபத் பதவியில் இருப்பவர் "கலீபா" என்று அழைக்கப்பட்டார்.

  • உலக முஸ்லீம்களின் குரு என்ற பதவியைத் துருக்கி சுல்தான் திறம்பட வகிப்பதற்கு அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகார மன்னராகவும் இருக்க வேண்டுமென்றும் அப்போதுதான் குரு பீடத்தை நன்கு வகிக்க முடியும் என்றும் முஸ்லீம்கள் கருதினார்கள். அதோடு முஸ்லீம்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவும் அடங்கிய ஜஸ் ரதுல் அரப் என்னும் பிரதேசம் துருக்கி சுல்தான் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். 'ஜஸ் ரதுல் அரப்' பில் மெஸபடோமியா, அரேபியா, ஸிரியா, பாலஸ்தீனம் இவை சேர்ந்தவை.

  • பிரிட்டனுக்கு எதிர்க்கட்சியில் துருக்கி சேர்ந்த போது இந்திய முஸ்லீம்கள் தங்கள் மதகுருவை எதிர்த்து எப்படித் தாங்கள் யுத்தம் செய்ய முடியும் என்று வேதனைப்பட்டார்கள். யுத்த முடிவில் பிரிட்டன் ஜெயித்தால் 'கலீபா' வின் கதி என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்கள். துருக்கி சுல்தானுடைய சாம்ராஜ்யம் பிடுங்கப்பட்டுவிட்டால் அவர் 'கலீபா' பதவியை எப்படி வகிக்க முடியும்? 'ஜஸ் ரதுல் அரப்'பிலுள்ள முஸ்லீம் புண்ணிய க்ஷேத்திரங்களின் நிலைமை என்ன? - இந்த சந்தேகங்களை யெல்லாம் யுத்த ஆரம்பத்தில் வெளிப்படையாக எழுதியதற்காகவே அலி சகோதரர்கள் பல வருஷகாலம் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

  • யுத்தம் ஒரு நெருக்கடியான நிலைமையை அடைந்திருந்த போது அச்சமயம் பிரிட்டிஷ் பிரதம் மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜ் இந்திய முஸ்லீம்களுக்கு சில வாக்குறுதிகளைக் கூறினார். "துருக்கி சுல்தானுடைய அதிகாரத்துக்காவது, கலீபா பீடத்துக்காவது, எந்தவித பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என்று சொன்னார். 'சின்ன ஆசியா, திரேஸ் என்னும் பிரசித்தி பெற்ற செழிப்பான பிரதேசங்களையெல்லாம் துருக்கி சாம்ராஜ்யத்திலிருந்து அபகரிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது" என்று சொன்னார். இந்த வாக்குறுதி களை நம்பியே இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் யுத்த முயற்சிகளில் ஒத்துழைத்தார்கள்.

  • ஆனால் முதலாவது உலக யுத்தம் 1918-ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்ததோ, இல்லையோ லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளைப்பற்றிய பிரஸ்தாபமே இல்லை. அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிட்டு விடப்படும் என்று தோன்றியது. இந்த விஷயம் 1919-ஆம் வருஷம் முழுவதிலும் இந்திய முஸ்லிம் தலைவர்களின் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. சின்ன ஆசியாவில் துருக்கியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஸிரியா, பாலஸ்தீன் தேசங்களைப் பிரான்ஸும் பிரிட்டனும் கைப்பற்றித் தங்கள் மேலதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. திரேஸ் மாகாணம் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்டது. துருக்கி சுல்தான் ஒரு கைதியைப்போல் நடத்தப்படலானார். வெற்றி பெற்ற நேசக் கட்சியார், நியமித்த கமிஷன் துருக்கியை ஆட்சி செய்யத் தொடங்கியது.

  • இந்தச் செய்திகள் எல்லாம் வர வர இந்திய முஸ்லிம்களின் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. 'கிலாபத்' பீடத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய முஸ்லிம்கள் ஒரு பெரும் போராட்டம் நடத்த விரும்பினார்கள். ஆனால் எந்த விதத்தில் அந்தப் போராட்டத்தை நடத்துவதென்று விளங்கவில்லை. இதைப்பற்றித் தீர்மானிப்பதற்காக அடிக்கடி முஸ்லிம் தலைவர்களின் மகாநாடுகள் நடந்தன. 1919-ஆம் வருஷக் கடைசியில் அலகாபாத்தில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு மகாத்மா காந்தி போயிருந்தார். முஸ்லிம் தலைவர்கள் ஆத்திரமாகவும் ஆவேசமாகவும் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டபோது, "பிரிட்டிஷ் சர்க்காருடன் எத்தனையோ விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து வருகிறீர்கள். அப்படி ஒத்துழைத்துக்கொண்டே சர்க்காருடன் போர் நடத்துவதைப்பற்றிப் பேசுவது பொருத்தமில்லை. முதலில் பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும்" என்றார் காந்திஜி. இப்பேச்சின்போது தான் மகாத்மா 'நான்-கோ-ஆபரே ஷன்' என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தார். அங்கே கூடியிருந்த முஸ்லீம்களும் மகாத்மாவின் யோசனையை ஒப்புக்கொண்டு பிரிட்டிஷ் சர்க்காரோடு படிப்படியாக ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒத்துழையாமை இயக்கம் குறிப்பான திட்டங்களுடன் அப்போது உருவாக வில்லை.

  • அமிருதஸரஸ் காங்கிரசுக்குப் பிறகு மௌலானா முகம்மது அலியும் இன்னும் சில முஸ்லிம் தலைவர்களும் இங்கிலாந்துக்குத் தூது சென்றார்கள். கிலாபத் சம்பந்தமாகவும் முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்கள் சம்பந்தமாகவும் லாயிட் ஜார்ஜ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று பிரிட்டிஷ் மந்திரிகளிடம் அவர்கள் மன்றாடினார்கள். அவர்களுயை கோரிக்கை பலிக்கவில்லை. சமாதான ஏற்பாடுகள் இங்கிலாந்தின் கையில் மட்டுமில்லை யென்றும் ஜயித்த கட்சியைச் சேர்ந்த மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்தே முடிவு செய்யவேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் கூறினார்கள். லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கப் போவதில்லை என்பது ஒருவாறு நன்கு தெரிந்துவிட்டது.

  • இதையறிந்த இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் 1920-மார்ச்சு மாதம் 19-ஆம் தேதியைத் துக்க தினமாகப் பாவித்துத் தேசமெங்கும் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அந்தத் துக்க தினக் கூட்டங்களில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய சர்க்கார் எச்சரிக்கை செய்தார்கள். இப்படி முஸ்லிம்களின் மனது கொதித்துக்கொண்டிருந்த நிலையில் மகாத்மா காந்தி முன் வந்து ஓர் அறிக்கை விடுத்தார். இந்திய முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு இணங்கத் துருக்கி சம்பந்தமான சமாதான உடன்படிக்கை ஏற்படாவிடில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தத் தாம் சித்தமாயிருப்பதாக அந்த அறிக்கையில் மகாத்மா காந்தி தெரிவித்தார்.

  • அந்த நிலையில் இந்திய முஸ்லிம்கள் ஒருமுகமாக மகாத்மாவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். முஸ்லிம்களுக்கு மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மகாத்மாவின் சொல்லுக்கிணங்க அஹிம்சையைக் கைக்கொள்ளவும் இசைந்தார்கள். மசூதிகளில் கூடிய மாபெரும் முஸ்லிம் கூட்டங்களில் 'வந்தே மாதரம்!' 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்ற கோஷங்கள் அந்த நாளில் எழுந்தன. மகாத்மாவிடம் நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகப் பல கிலாபத் கூட்டங்களில் பசுவதையை முஸ்லிம்கள் நிறுத்திவிடவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேறின!

  • இதற்கிடையில் பஞ்சாப் கொடுமைகளைப் பற்றி விசார்ப்பதற்குக் காங்கிரஸ் நியமித்திருந்த கமிட்டியின் அறிக்கை மார்ச் 25-ஆம் தேதி வெளியாயிற்று. அதில் ஸர் மைக்கேல் ஓட்வியரின் கொடுங்கோல் ஆட்சியில் பஞ்சாப்பில் நடந்த அக்கிரமங்களைப் பற்றித் திட்டமான சாட்சியங்களுடன் விவரங்கள் வெளியாயின. பஞ்சாப் கொடுமைகளைப் பற்றியெல்லாம் முதன் முதலில் அப்போதுதான் தேச மக்கள் திட்டமான விவரங்களை அறிந்தார்கள். மக்களின் உள்ளம் எப்படிக் கொதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

  • 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் நடந்த சம்பவங்களின் ஞாபகார்த்தமாக இந்த வருஷம் 1920 ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் நாடெங்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஈடுபட்டார்கள். "வந்தே மாதரம்" "அல்லாஹோ அக்பர்" "மகாத்மா காந்திக்கு ஜே!" என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்து வானளாவ ஒலித்தன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த சகோதரர்கள் என்று எண்ணி அந்தக் காலத்தில் நடந்து கொண்டார்கள்.

  • அடுத்த மே மாதத்தில் சமாதான உடன்படிக்கை விவரங்கள் வெளியாயின. அந்தச் செய்தியை வெளியிட்ட வைஸ்ராய் லார்ட் செம்ஸ்போர்டு "சமாதான உடன்படிக்கை நிபந்தனைகள் இந்திய முஸ்லிம்களுக்கு மனத்துன்பத்தை உண்டாக்கக்கூடியது இயற்கைதான். ஆயினும் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்!" என்று ஆறுதல் கூறவும் முன்வந்தார். ஆனால் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை.

  • எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல, அதே மாதத்தில் இன்னொரு சம்பவமும் கூடச் சேர்ந்தது. பஞ்சாப் கொடுமைகளைப்பற்றி விசாரிப்பதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் லார்ட் ஹண்டரின் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்திருந்தார்கள் அல்லவா? அந்தக் கமிட்டியின் அறிக்கையும் வெளியாயிற்று. எதிர் பார்த்தது போலவே ஹண்டர் கமிட்டி அறிக்கை பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிப் பூசி மெழுகிவிட முயற்சி செய்தது.

  • சில அதிகாரிகள் அவசியத்தைக் காட்டிலும் அதிகாரத்தைக் கொஞ்சம் அதிகமாக உபயோகித்து விட்டார்கள் என்று மட்டும் சொல்லி, வருங்காலத்துக்கு இராணுவச் சட்ட அமுல் நடத்தும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹண்டர் கமிட்டி சிபார்சு செய்தது. கொடுமை செய்த அதிகாரிகளில் ஜெனரல் டையர் மட்டும் வேலையிலிருந்து அனுப்பப்பட்டார். ஆனால் அவரைப் பற்றியும் மாண்டேகு "டையர் தாம் கடமை என்று கருதியதையே செய்தார்!" என்று முதுகிலே தட்டிக் கொடுத்தார். பஞ்சாபிலிருந்த ஐரோப்பியர்களோ தங்கத்தினாலே ஒரு பட்டாக் கத்தி செய்து ஜெனரல் டையருக்குப் பரிசு வழங்கினார்கள்.

  • இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் உருவாகிக்கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • (1) பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்த ராவ் பகதூர், ஸர் முதலிய பட்டங்களை விட்டுவிட வேண்டும்.

  • (2) சர்க்கார் சட்டப்படி அமைத்துள்ள சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்.

  • (3) சர்க்கார் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஸ்தாபனங்களை விட்டு வெளியேறவேண்டும்.

  • (4) சர்க்கார் கோர்ட்டுகளைப் பொதுமக்களும் வக்கீல்களும் பகிஷ்கரித்து விடவேண்டும்.

  • (5) அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் உத்தியோகங்களை விட்டு வெளியேறவேண்டும்.

  • (6) பொது ஜனங்கள் சர்க்காருக்கு எந்தவிதமான வரியும் கொடாமல் நிறுத்திவிடவேண்டும்.

  • மேற்கூறிய திட்டங்களில் முதல் நான்கு படிகளை உடனே அனுசரிக்கவேண்டும். ஐந்தாவது ஆறாவது படிகளைக் கடைசியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.

  • மேற்கூறிய எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியவை சத்தியமும் அஹிம்சையும்.

  • மே மாதக் கடைசியில் பம்பாயில் கிலாபத் கமிட்டி கூடி மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டது. மே மாதம் 30-ஆம் தேதி காசியில் கூடிய அகில இந்தியக் கமிட்டி கூட்டத்தில் அவ்வளவு ஒரு முகமான அபிப்பிராயம் வெளியாகவில்லை. ஏனெனில், சில காங்கிரஸ் தலைவர்கள் கிலாபத் இயக்கத்தைச் சுயராஜ்ய இயக்கத்தோடு சேர்க்க விரும்பவில்லை. காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தில் சில அம்சங்களையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. எனவே, நீண்ட விவாதத்திற்குப் பிறகு, ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றி தீர்மானிப்பதற்காக செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் விசே ஷ காங்கிரஸ் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

  • ஆனால் விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திருப்பதற்குத் தேச மக்கள் தயாராயில்லை. முக்கியமாக, முஸ்லிம்கள் உடனே இயக்கத்தை ஆரம்பித்துவிட விரும்பினார்கள். இந்த நிலைமையை அறிந்த மகாத்மா அலகாபாத்தில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி எல்லாக் கட்சித் தலைவர்களும் அடங்கிய மகாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மகாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டது

  • விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திராமல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று மகாத்மா காந்தியும் அவருடைய ஹிந்து முஸ்லிம் சகாக்களும் தீர்மானித்தார்கள். ஆகஸ்டு 1-ஆம் தேதி இயக்கத்தை ஆரம்பிப்பது என்று நாளும் குறிப்பிட்டார்கள்.

  • -----------------------------------------------------------

      • 19. சட்டசபை பகிஷ்காரம்

  • பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு மாபெரும் தலைவர்களைச் சொல்லும்படி கேட்டால், (1) லோகமான்ய திலகர் (2) மகாத்மா காந்தி என்னும் இரு பெயர்களைத்தான் யாரும் சொல்லுவார்கள்.

  • 1920-ஆம் வருஷத்துக்கு முன்னால் லோகமான்ய பால கங்காதர திலகர் இந்தியப் பொது மக்களின் இதய சிம்மாசனத்தில் முடிசூடா மன்னராக வீற்றிருந்தார். இந்திய சுதந்திரப் படையின் பிரதம சேனாதிபதியாகவும் ஸ்ரீ திலகர் விளங்கினார். "சுதந்திரம் நமது பிறப்புரிமை" என்னும் மந்திரத்தை அவர் மக்களுக்கு அளித்தார். பிரிட்டிஷ் சர்க்காரிடம் மக்கள் கொண்டிருந்த அச்சத்தை அவர் போக்கினார். தேச சுதந்திரத்துக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று தம்முடைய சொந்த வாழ்க்கை உதாரணத்தினால் மக்களுக்குப் போதித்தார்.

  • காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தைப் பழைய தேசீயத் தலைவர்கள் பலர் ஒப்புக்கொள்ளவில்லையென்று சொன்னோம் அல்லவா? அப்படி ஒப்புக் கொள்ளாதவர்களில் திலகரும் ஒருவர். மகாத்மாவுடன் திலகர் மாறுபட்டதற்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன. (1) இந்திய முஸ்லிம்களின் கிலாபத் கிளர்ச்சியுடன் சுயராஜ்ய இயக்கத்தைப் பிணைப்பதைத் திலகர் விரும்பவில்லை. (2) அமிருதஸரஸ் காங்கிரஸ் தீர்மானத்தின்படி புதிய சீர்திருத்தச் சட்டசபைகளைக் கைப் பற்றி அவற்றின் மூலம் சுதந்திரத்துக்கு மேலும் போராட வேண்டும் என்று திலகர் கருதினார். சட்டசபைகளைப் பகிஷ்கரிக்கும் யோசனையைத் திலகர் விரும்பவில்லை. (3) சுதந்திரப் போரைத் தனித்த அரசியல் போராகவே நடத்தவேண்டும் என்று திலகர் கருதினார். பிரிட்டிஷ் ஆட்சி தந்திரத்தினாலும் சூழ்ச்சியினாலும் ஸ்தாபிக்கப்பட்டதாகையால் அந்த ஆட்சியை ஒழிப்பதற்கு இராஜ தந்திரத்தையும் அரசியல் சூழ்ச்சியையும் கையாளவேண்டும் என்றும் கருதினார். காந்தி மகாத்மா அரசியல் போரில் அஹிம்சா தர்மத்தையும் சத்தியத்தையும் வற்புறுத்தியதைத் திலகர் விரும்பவில்லை.

  • லோகமான்யரும் அவரைப்போல இன்னும் பல பழந்தலைவர்களும் இவ்வாறெல்லாம் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தது இயற்கைதான். கிலாபத் விஷயமாக அவர்கள் கொண்டிருந்த பயம் பின்னால் உண்மையாயிற்று. துருக்கியில் முஸ்தபா கமால் பாட்சா என்பவர் தோன்றி துருக்கி சுல்தான் பதவியையும் கிலாபத் பீடத்தையும் ஒழித்துவிட்டுத் துருக்கியில் குடியரசை ஸ்தாபித்தார். ஆகவே கிலாபத் கிளர்ச்சியின் அடிப் படையே போய்விட்டது. கிலாபத் கிளர்ச்சியில் முன்னணியில் நின்ற முஸ்லிம் தலைவர்கள் உற்சாகத்தை இழந்து தேசீய இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டார்கள். பலர் காங்கிரஸுக் கும் தேசத்தின் சுதந்திரத்துக்கும் விரோதிகள் ஆனார்கள். "வந்தேமாதரம்" என்று மசூதியில் கோஷம் இட்ட முஸ்லிம் தலைவர்கள் பின்னால் அந்தக் கீதத்தைச் சட்ட சபைகளிலே பாடக்கூடாது என்று ஆட்சேபிக்கவும் தொடங்கினார்கள்.

  • ஆகவே திலகர் பெருமான் காந்திஜி ஆரம்பித்த இயக்கத்தைப்பற்றித் தயக்கம் காட்டியதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது.

  • ஆனாலும் தேசீய இயக்கத்துக்குக் காந்திஜி கொண்டு வந்திருந்த புதிய சக்தியைத் திலகர் சரியாக மதிப்பிட்டார். தேசத்தில் ஏற்பட்டிருந்த உணர்ச்சி வேகத்தையும் அறிந் திருந்தார். ஆகையால் காந்திஜியின் இயக்கத்துக்கு அவர் குறுக்கே நிற்கவோ, எதிர்த்துத் தடை செய்யவோ சிறிதும் விரும்பவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன விதமாய்த் தீர்மானம் ஆகிறதோ, அதைத் தம் முழு மனதுடன் ஒப்புக்கொள்வதாக லோகமான்ய திலகர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார்.

  • ஆனால் அம்மாதிரி காந்தியும் திலகரும் சேர்ந்து போர் நடத்துவதற்குப் பாரத தேசம் கொடுத்துவைக்கவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் வரையில் திலகர் உயிரோடிருக்க வில்லை. 1920-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி காந்திமகான் பம்பாயில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டுத் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திட்டம் போட்டிருந்தார் அல்லவா?

  • அதற்கு முதல் நாள், ஜூலை மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவில் லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தப் பூத உடலை நீத்து அமர வாழ்வு எய்தினார்.

  • பாரத தேசத்துக்கும் பாரத தேச மக்களுக்கும் இந்தச் சம்பவம் ஒரு சூசகம்போல் அமைந்தது.

  • இந்திய சுதந்திரப் போரின் சரித்திரத்திலேயே ஒரு சகாப்தம் முடிந்து மற்றொரு சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு லோகமான்ய திலகருடைய மரணம் அறிகுறியாயிற்று. காந்திமகாத்மா தேசீயப் போருக்குத் தலைமை வகித்து அவருடைய புதிய வழியில் போரை நடத்தும்படி விட்டுவிட்டு லோகமான்ய திலகர் விடை பெற்று வீர சொர்க்கம் சென்றது போலவே யிருந்தது.

  • 1920-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி பம்பாயில் லட்சக்கணக்கான ஜனங்கள் கூடித் திலகருடைய பிரேத ஊர்வலத்துடன் சென்று தகனக்கிரியை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். அன்று மாலையே காந்திமகான் குறிப்பிட்ட தேதி தவறாமல் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார். பட்டதாரிகள் பட்டங்களை விடவேண்டும் என்றும், சட்டசபைகளுக்கு தேசீயவாதிகள் நிற்கக்கூடாதென்றும், வோட்டர்கள் வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றும், வக்கீல்கள் தங்கள் தொழிலை விடவேண்டும் என்றும், மாணவர்கள் சர்க்கார் கலாசாலைகள் - பள்ளிக்கூடங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.

  • இந்தத் திட்டத்துக்கிணங்க ஆங்காங்கு சில பிரபல வக்கீல்கள் தங்கள் வக்கீல் தொழிலை விட்டார்கள். குஜராத்தில் ஸ்ரீயுத வல்லபாய் படேலும், பீஹாரில் பாபு ராஜேந்திர பிரஸாத்தும், சென்னையில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் பெரும் வருமானம் அளித்து வந்த வக்கீல் தொழிலை விட்டொழித்தார்கள். இவர்களைப் பின்பற்றிச் சிற்சில வாலிப வக்கீல்களும் தொழிலை விட்டுத் தேசப்பணியில் இறங்கினார்கள்.

  • ஆனால் தேசத்தின் பெரும்பாலான தேசீய வாதிகள் கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன தீர்மானம் ஆகப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  • ஆகஸ்டு மாதத்தில் காந்தி மகானும் அலி சகோதரர்களும் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்தார்கள். அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்தார்கள். தலைவர்களுடைய மனப்போக்கு எப்படி யிருந்தாலும் தேச மக்கள் காந்திஜியின் தலைமையையும் அவருடைய ஒத்துழையாமைத் திட்டத்தையும் வரவேற்கிறார்கள் என்பது நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வந்தது.

  • இந்த நிலைமையில் கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் செப்டம்பர் 4-ஆம் தேதி கூடி 9-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த விசே ஷ காங்கிரஸுக்கு லாலா லஜபதிராய் தலைமை வகித்தார். இந்தியாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் சர்க்காரால் உத்திரவிடப் பட்டுப் பல வருஷகாலம் அமெரிக்காவில் வசித்தவர் லஜபதிராய். அந்த வருஷத்திலேதான் மேற்படி தடை உத்தரவு நீங்கி லஜபதிராய் இந்தியாவுக்குத் திரும்பி யிருந்தார். திலகருக்கு அடுத்தபடியாக அவர் தேச மக்களின் இதயத்தில் நீண்ட காலமாக இடம் பெற்றிருந்தார். அப்படிப் பட்டவர் விசே ஷ காங்கிரஸில் தலைமை வகித்துச் செய்த பிரசங்கத்தில் காந்திஜியின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிரான காரணங்களை விஸ்தரித்திருந்தார். வரவேற்புக் கமிட்டித் தலைவரான ஸ்ரீ பி. சக்கரவர்த்தியும் அப்படித்தான்.

  • இன்னும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரபல தலைவர்கள் பலர் அத்திட்டத்துக்கு விரோதமாகவே இருந்தார்கள். திலகருடைய சீடர்களான ஸ்ரீ கேல்கர், கபார்தே, அப்யங்கர், ஆனே முதலியோரும், வங்காளத் தலைவர்களான ஸ்ரீ விபின சந்திரபால், ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் ஆகியவர்களும், ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த பண்டித மாளவியா, பண்டித மோதிலால் நேரு ஆகியவர்களும், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார், ஸ்ரீ ஏ. ரங்கசாமி ஐயங்கார், ஸ்ரீ எஸ். சத்தியமூர்த்தி ஆகியவர்களும் மூவகைப் பகிஷ்காரத் திட்டத்தைப் பலமாக எதிர்த்தார்கள்.

  • சென்னையில் ஸ்ரீ எஸ். சீனிவாசய்யங்கார் அந்த வருஷத்திலே தான் அட்வகேட் ஜெனரல் பதவியை உதறி எறிந்து விட்டு அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவருடைய தலைமையில் திருநெல்வேலியில் மாகாண மகாநாடு மிகச் சிறப்பாக அவ்வருஷம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் 'சட்ட வரம்புக்குப் புறம்பானது' (Unconstitutional) என்ற அபிப்பிராயத்தை ஸ்ரீ எஸ். சீனிவாச அய்யங்கார் தெரிவித்திருந்தார். இத்தகைய எதிர்ப்புகளைப் பார்த்தவர்கள் கல்கத்தா விசேஷ காங்கிரஸ் மகாத்மாவின் திட்டத்தை நிராகரித்து விடும் என்றேகருதினார்கள்.

  • எதிர்த்தவர்களில் காந்தி மகாத்மாவின் கட்சிக்குத் திரும்பிய முதல் பிரமுகர் பண்டித மோதிலால் நேரு. அப்போதுதான் அவருடைய அருமைப் புதல்வர் பண்டித ஜவாஹர்லால் நேரு தேசீய வாழ்க்கையில் பிரவேசித்திருந்தார். பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிய விசாரணையில் ஜவாஹர்லால்ஜி உதவி செய்த போது அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தார். அவருடைய உள்ளம் ஆத்திரத்தினால் பொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியின் தலைமையிலே தான் பாரத நாடு விடுதலை யடையக்கூடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஜவாஹர்லால்ஜியின் தீவிரமும் நம்பிக்கையும் பண்டித மோதிலால் நேருவின் மனம் மாறுவதற்குக் காரணமாயிருந்தன.

  • கலாசாலை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம் - ஆகிய இரு திட்டங்களையும் 'கொஞ்சம் கொஞ்சமாக' நடத்தவேண்டும் என்ற திருத்தத்தை மகாத்மா ஒப்புக் கொண்டதின் பேரில் பண்டித மோதிலால் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்க முன்வந்தார்.

  • வோட்டு எடுத்தபோது மகாத்மாவின் திட்டத்துக்குச் சாதகமாக 1856 வோட்டுக்களும் எதிராக 844 வோட்டுக்களும் பதிவாயின. ஆகவே மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டம் நிறை வேறியது.

  • இது பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம் வியப்பையும் திகைப்பையும் அளித்தது. "இவர் யார், இந்த காந்தி? இவ்வளவு சக்தியுடனும் அதிகாரத்துடனும் இவர் பேசுவதின் இரகசியம் என்ன? தீர்க்காலோசனையுடனும் அநுபவ ஞானத்துடனும் நாம் சொல்லும் யோசனையைப் புறக்கணித்து இவருடைய பேச்சை மக்கள் கேட்பதின் காரணம் என்ன? இதே காந்தி அமிருதஸரஸில் 'புதிய சீர்திருத்தங்களை நிராகரிக்கக் கூடாது' என்று சொன்னார். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். இவரே இப்போது 'புதிய சட்ட சபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்' என்கிறார். இவ்விதம் இந்தக் காந்தி முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வதைக் கூடக் கவனியாமல் இவரை மக்கள் ஆதரிக்கும் அதிசயந்தான் என்ன?" - இவ்வாறு பழைய தேசத் தலைவர்கள் சிந்தனை செய்தார்கள்.

  • ஆனால் பொது மக்களுக்கு இத்தகைய சிந்தனை ஒன்றும் இல்லை. "பாரத நாட்டை விடுதலை செய்யவும் பாரத மக்களை மேலே உயர்த்தவும் இதோ ஒரு அவதார புருஷர் தோன்றி விட்டார்" என்று மக்கள் திடமாக நம்பினார்கள். ஆகையால் கல்கத்தா காங்கிரஸ் தீர்மானம் நாடெங்கும் அளவில்லாத உற்சாகத்தை உண்டாக்கியது.

  • கல்கத்தா காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறி விட்டது. ஆனால் அதைக் காரியத்தில் நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு காந்திஜிக்கு ஏற்பட்டது. அது வரையில் தேசீயப் போரின் முன்னணியில் நின்ற காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் உற்சாகக் குறைவு அடைந்திருந்தார்கள். சட்டசபை பகிஷ்காரத் திட்டம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் காங்கிரல் தீர்மானத்துக்கு விரோதமாகப் போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஆகையால் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கப் போவதாக அறிவித்திருந்த தேசீயவாதிகள் பலர் தாங்கள் நிற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டுச் சும்மா இருந்தார்கள்.

  • ஆனால் மிதவாதிகள் என்று சொல்லப் பட்டவர்களும் மற்றும் காங்கிரஸுக்கு எப்போதும் எதிராயிருந்தவர்களும் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும், வகுப்புவாதிகளும் சட்டசபைத் தேரதலுக்கு நின்றார்கள். சென்னை மாகாணத்தில் அப்போதுதான் சர்க்கார் உத்தியோகங்களையும் பதவிகளையும் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தது. இந்தக் கட்சியார் சட்டசபைத் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஆகவே நாட்டில் ஓரிடத்திலாவது எந்த சட்டசபை ஸ்தானத்துக்கும் அபேட்சகர் முன் வராமற் போகவில்லை.

  • இந்த நிலைமை ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டது தான். அதனாலேயே ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் சட்டசபை பகிஷ்காரத்தை எதிர்த்தார்கள். ஆனால் காந்தி மகாத்மா மேற்படி நிலைமை குறித்துச் சிறிதும் கவலைப்படவில்லை. "காங்கிரஸ் திட்டம் நிறைவேறுவது லட்சக் கணக்கான வோட்டர்களைப் பொறுத்ததே தவிர, ஒரு சில பதவி வேட்டைக் காரர்களைப் பொறுத்ததல்ல" என்று மகாத்மா கருதினார். ஆகையால் நாடெங்கும் பிரசாரம் செய்து புதிய சட்டசபைத் தேர்தல்களில் வோட்டர்கள் வோட்டுக்கொடுக்காமல் செய்து விடவேண்டும் என்று சொன்னார். அதற்கு முயற்சியும் ஆரம்பித்தார். காந்திஜியின் ஆத்மசக்தி முறையில் நம்பிக்கை கொண்டு புதிதாக அரசியல் துறையில் இறங்கியிருந்த அவருடைய சீடர்கள் நாடெங்கும் அந்த முயற்சியை நடத்திவைத்தார்கள்.

  • பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் முதலாக அப்போதுதான் (மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி) ஏராளமான இந்திய மக்கள் வோட்டுரிமையைப் பெற்றிருந்தனர். பத்து ரூபாய் நிலவரி செலுத்துவோருக்கெல்லாம் மாகாண சட்ட சபைக்கு வோட்டுரிமையும் ஐம்பது ரூபாய்க்கு மேல் நிலவரி செலுத்துவோருகேல்லாம் இந்திய சட்டசபைக்கு வோட்டுரிமையும் கிடைத்திருந்தது. நகரங்களிலும் பட்டணங்களிலும் வீட்டு வரி செலுத்துவோருக் கெல்லாம் வோட்டுரிமை கிடைத்திருந்தது. இதைத் தவிர எழுதப் படிக்கத் தெரிந்த ( அதாவது கையெழுத்துப் போடத்தெரிந்த ) எல்லாருக்கும் வோட்டுரிமை தரப்பட்டிருந்தது. ஆகவே ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வோட்டர்கள் இருந்தார்கள். நீண்டகால அரசியல் போராட்டத்தின் பயனாக ஜனங்கள் முதன் முதலாக அடைந்திருந்த இந்த வோட்டுரிமையை "உபயோகிக்க வேண்டாம்" என்று இப்போது பிரசாரம் செய்ய வேண்டியதாயிற்று. "போலிங் ஸ்டே ஷனுக்கு போக வேண்டாம்; வோட்டு கொடுக்க வேண்டாம்!" என்று சொல்ல வேண்டியதாயிற்று. இந்த சங்கடமான காரியத்தை இந்திய தேசமெங்கும் காந்தி மகானின் சீடர்கள் மேற்கொண்டு நடத்தினார்கள்.

  • மகாத்மாவின் போர் முறையில் பிரதிக்ஞை செய்துகொள்வது ஒரு முக்கியமான அம்சம். எந்த நல்ல காரியமானாலும் அதைப்பற்றி வெறுமனே பேசுவதைக் காட்டிலும் பிரதிக்ஞை செய்து கொள்வது அதிக பலன் அளிக்கும் என்று காந்திஜி கருதினார். ' கூட்டத்தில் கோவிந்தா ' என்று பிரதிக்ஞை செய்வதைக் காட்டிலும் காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போடுவதில் இன்னும் அதிக பலந் உண்டு என்று நம்பினார். தென்னாப்ரிக்காவில் பல போராட்டங்களில் பூர்வாங்கமாக மகாத்மா இந்தியர்களிடம் கையெழுத்துக்கள் வங்கியதைப் பார்த்திருக்கிறோமல்லவா?

  • அது போலவே இப்பொழுது இந்தியாவிலும் "சட்டசபைத் தேர்தல்களில் வோட்டுப் போடுவதில்லை" என்ற பிரதிக்ஞா பத்திரங்கள் ஏராளமாக அச்சிடப்பட்டன. அவற்றில் வோட்டர்களின் கையெழுத்து வாங்கப்பட்டது. காந்திஜியின் திட்டத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களும் தொண்டர்களும் கிராமம் கிராமமாகப் போய் வோட்டார்கள் யார் என்று கண்டுபிடித்துக் கையெழுத்து வாங்கினார்கள். அந்தச் சமயத்தில் காந்திஜியைப் பற்றியும் அவருடைய வாழ்கை-போர்முறை-ஒத்துழையாமைத் திட்டம் ஆகியவை பற்றியும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதாயிருந்தது. செப்டம்பர், அக்டோபர் இந்த இரண்டு மாதத்தில் மேற்கூறிய முயற்சி நடைபெற்றது. இந்த இரண்டு மாதத்திலும் இந்தியாவின் கிராமங்களில் தேசீயப் பிரசாரம் நடந்தது போல் அதற்கு முன்னால் எப்போதும் நடந்தது கிடையாது.

  • நவம்பர் மாதத்தில் இந்தியா சட்ட சபைகளுக்கும் தேர்தல்கள் நடந்தன. சட்டசபை பகிஷ்காரப் பிரசாரம் வோட்டர்களிடம் மகத்தான பலனை அளித்திருப்பது நன்றாகத் தெரிய வந்தது. ஆயிரமாயிரம் வோட்டுப் பெட்டிகள் காலியாக திரும்பின. இன்னும் பல வோட்டுப் பெட்டிகளில் கால்வாசிகூட நிரம்பவில்லை.

  • தேசமெங்கும் கணக்குப் பார்த்தபோது 1௦௦-க்கு 15 வீதம் தான் வோட்டர்கள் வோட்டுக் கொடுத்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. காந்தி மகாத்மாவின் திட்டம் யாரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான வெற்றி அடைந்ததாகவே கருதப்பட்டது. இதை இந்திய சர்க்கார் வெளியிடும் வருஷாந்தர நிர்வாக அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்கள். "காந்திஜியின் ஒத்துழியாமைத் திட்டம் சட்டசபை பகிஷ்காரத்தில் நல்ல செல்வாக்கைப் பெற்றது. காங்கிரஸ் சட்டசபை பகிஷ்காரம் செய்ததின் காரணமாக மிதவாதிகளுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது" என்றும் சொல்லியிருந்தார்கள்.

  • ஆனால் அப்படிச் சட்டசபைக்கு சென்ற மிதவாதிகள் முதலியோர் பொதுஜன ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.

  • மகாத்மா காந்திஜி இந்தியப் பொதுமக்களின் இதயத்தில் "காந்தி மகாராஜா" ஆகிவிட்டார் என்று தெரிந்தது.

  • -----------------------------------------------------------

      • 20 . தலைமைக் கிரீடம்

  • "அந்த நாட்களில் வாழ்ந்திருப்பதற்கே பாக்கியம் செய்திருக்கவேணும்!" என்று சொல்லும்படியாக ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்திலும் ஒரு காலம் வருவதுண்டு. பாரத நாட்டின் சரித்திரத்திலும் 1921-ஆம் வருஷம் அத்தகைய வருஷம். அந்த வருஷத்தில் காந்தி மகானின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தியாகமாகிய வேள்வித் தீயில் குதித்தார்கள். சுயநலம் என்பதை அடியோடு மறந்து, "தாய்நாட்டிற்கே உழைக்க-ஜன்மம் எடுத்தோம்" என்று பாடிக்கொண்டு சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். இதற்கெல்லாம் காரணமாயிருந்தது நாகபுரி காங்கிரஸ். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாகத் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமைகள் நாகபுரி காங்கிரஸில் மறைந்து விட்டன. வோட்டு எடுக்காமல் ஏக மனதாகத் தீர்மானங்கள் நிறைவேறின. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.

  • * * *

  • சட்ட சபை பகிஷ்காரம் வெற்றியடைந்தது என்பதாக மகாத்மா காந்தியும் அவருடைய சீடர்களும் கருதினார்கள். ஆனால் கல்கத்தா விசேஷ காங்கிரஸில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்த தலைவர்கள் அவ்விதம் கருதவில்லை. "சட்ட சபை ஸ்தானம் ஒன்றுகூடக் காலியாக இல்லையே? தேசியவாதிகள் கைப்பற்றி யிருக்ககூடிய ஸ்தானங்களில் அதிகார வர்க்க தாஸர்கள் வீற்றிருக்கிறார்களே? வோட்டு எத்தனை பேர் கொடுத்தால் என்ன? காரியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது? அதிகார வர்க்கத்துக்கஇன்னும் சௌகிரியமாகத்தானே போயிற்று?" என்று அவர்கள் வாதமிட்டார்கள். வக்கீல்கள் வேலையே விடுவது, மாணாக்கர்கள் கலாசாலைகளை விடுவது,- ஆகிய திட்டங்களையும் காரியாம்சத்தில் நிறைவேற்ற முடியாது என்று நினைத்தார்கள். ஆகையால் 1920-ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசியில் நாகபுரி காங்கிரஸில் மகாத்மாவின் திட்டத்தை மாற்றி விடுவதற்காகப் பலம் திரட்டத் தொடங்கினார்கள். காந்திஜியின் சீடர்களும் சும்மா இருக்கவில்லை. அவர்களும் நாகபுரி காங்கிரஸில் பலப் பரிட்சைக்கு ஆயத்தமானார்கள்.

  • ஆகவே நாகபுரி காங்கிரஸ் மிகவும் முக்கியத்தை அடைந்தது. அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த வேறு எந்த காங்கிரஸுக்கும் அவ்வளவு பிரதிநிதிகள் வந்ததில்லை. மொத்தம் 14,582 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் தம்முடைய சொந்த பணத்தில் முப்பதாயிரம் ருபாய் செலவு செய்து இருநூற்று ஐம்பது பிரதிநிதிகளை அழைத்து வந்தார். (இதில் மூடு மந்திரம் ஒன்றும் இல்லை. சித்தரஞ்சனதாஸ் பகிரங்கமாக கூறிய விஷயந்தான். ) இப்படியே பிரபல தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரதிநிதிகளைத் திரட்டிக் கொண்டு வந்தார்கள்.

  • பழம் பெரும் தேசபக்தரான சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் நாகபுரி காங்கிரஸுக்குத் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்தே பேசினார். "அப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது என்று ஏற்பட்டால், பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்காக மட்டும் அதைத் தொடங்குவனேன்! சுயராஜ்ய சித்திக்காகவே அந்த இயக்கத்தை நடத்தலாமே?" என்றார்.

  • தம்மை எதிர்பவர்களுடைய பேச்சை மகாத்மா எப்போதும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்பது வழக்கம். ஏதேனும் ஒன்று நியாமாகத் தோன்றினால் அதை ஒப்புக்கொள்ளத் தவறுவதுமில்லை.

  • பஞ்சாப் கிலாபத் அக்கிரமங்களுக்குப் பரிகாரம் தேடவே ஒத்துழையாமை ஆரம்பிப்பதாகக் காந்திஜி சொன்னதின் காரணம் என்ன தெரியுமா? அந்த இரண்டு அநீதிகளுக்கும் பரிகாரம் பெறுவதில் வெற்றி பெற்றோமானால், அந்தப் போரில் நமக்கு ஏற்படும் பலமே சுயராஜ்யம் அளித்துவிடும் தான். ஆனால், ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியாரின் யோசனையை ஏற்று கொள்வதில் ஆட்சேபம் ஒன்றும் இருக்கவில்லை. எனவே, சுயராஜ்ய சித்தியையும் ஒத்துழையாமையின் மூன்றாவது நோக்கமாக கொள்வதாக மகாத்மா ஒப்புக்கொண்டார்.

  • ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலிய தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தையே எதிர்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தார்கள் அல்லவா? ஆனால் நாகபுரி காங்கிரஸ் விடுதிக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தயக்கம் உண்டாகி விட்டது. காந்திஜியை எதிர்ப்பது வீண்வேலை என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குள்ளே காந்திஜியின் திட்டத்துக்கு அமோகமான ஆதரவு இருப்பதைக் கண்டார்கள். அதுமட்டுமல்ல; அமிருதசரஸ் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரதிநிதிகளைப் போலவே நாகபுரிக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் தலைவர்கள் வேற்றுமைப்பட்டு விவாதம் செய்வதை விரும்பவில்லையென்று தெரிந்தது.

  • ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலியவர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டார்கள். காந்திஜியின் வேலைத் திட்டங்களைச் சாதாரண அறிவாராய்ச்சிகளுக்கு உட்படுத்துவதில் பிரயோஜனமில்லை. அந்த மகான் மற்றவர்களைப்போல லாப நஷ்டங்களையும் பலா பலன்களையும் யோசித்துக்கொண்டு ஒரு திட்டத்தை செலுத்துவதில்லை. அவருடைய அந்தராத்மா எந்த வழியைச் சொல்கிறதோ, அதை அவர் சொல்லுகிறார். தமது உள்ளுணர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாதமிடுகிறார். அவர் சொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமது ஆத்ம சக்தியையே நம்பியிருக்கிறார்.

  • இத்தகைய மகா புருஷருக்கு முன்னால் வெறும் வாதங்கள் என்ன செய்ய முடியும்? தேச மக்களும் அவருடைய வார்த்தையே வேத வாக்காகக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்களுடைய தீர்க்க யோசனை வாய்ந்த அறிவுக்கு உகந்த, வாதங்களைச் செவி கொடுத்துக் கேட்பதுகூட இல்லை!

  • இந்த நிலைமையை நாகபுரிக்கு வந்து சேர்ந்த தலைவர்கள் நன்கு உணர்ந்தார்கள். மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களையும் ஆட்கொண்டது. கல்கத்தா காங்கிரஸின் போதே காந்திஜியை சேர்ந்து விட்ட பண்டித மோதிலால் நேரு இந்தக் காங்கிரஸில் சமரசம் செய்து வைப்பதில் முன்னணியில் நின்றார். மற்றத் தலைவர்களும் சமரசத்துக்குத் தயாராகவே இருந்தார்கள்.

  • விஷயாலோசனைக் கமிட்டியில் ஓரளவு விவாதம் நடந்தது. மகாத்மாவின் திட்டத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் எதிர்த்துப் பேசினார்கள். அந்த நாளில் இந்தியாவின் நண்பர்கள் சிலர் இங்கிலாந்தில் இருந்தார்கள். இவர்களில் கர்னல் வெட்ஜ்வுட், மிஸ்டர் பென்ஸ்பூர், மிஸ்டர் ஹால்பர்ட் நைட் ஆகியவர்கள் நாகபுரி காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் "ஒத்துழையாமைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தார்கள். மகாத்மா காந்தி எழுந்து ஆட்சேபங்களுக் கெல்லாம் பதில் சொல்லியபோது எதிர்த்தவர்கள் எல்லாரும் மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போல் ஆகிவிட்டார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவே துணிய வில்லை. எதிர்க்க வந்தவர்களும் எதிர்த்துப் பேசியவர்களும் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். மகாத்மாவின் திட்டத்தையும் பூரணமாக ஒப்புக்கொண்டார்கள்.

  • ஆகவே காங்கிரஸ் மகாசபை கூடியபோது, ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் பிரேரேபித்தார்! ஸ்ரீ லாலா லஜபதிராய் ஆமோதித்தார்!! எதிர்ப்பு என்பதே இல்லை.தீர்மானம் நிறைவேறுவதற்குக் கேட்பானேன்? ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் அமோகமான ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

  • அப்போது அந்தப் பிரம்மாண்டமான காங்கிரஸ் பந்தலில் ஏற்பட்ட குதூகலத்தையும் அமளியையும் சொல்லிமுடியாது. தீர்மானம் நிறைவேறியதில் பிரதிநிதிகளுக்குச் சந்தோஷம். அதிலும் தலைவர்களுக்குள்ளே வேற்றுமை இல்லாமல், வோட்டு எடுக்காமல் ஏகமனதாக நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம். மகாத்மாவின் தலைமையில் இந்தியா சுயராஜ்யம் அடைவது நிச்சயம் என்ற உறுதி எல்லாருடைய மனதிலும் ஏற்பட்டுவிட்ட படியால் அடங்காத உற்சாகம்.

  • இவ்வாறு நாகபுரி காங்கிரசில் தலைமைக் கிரீடம் காந்தி மகாத்மாவுக்குச் சூட்டப்பட்டது. அன்று முதல் 1948-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரையில் காந்தி மகாத்மா தான் காங்கிரசின் உண்மையான தலைவராயிருந்தார். அந்தந்த வருஷத்துக் காங்கிரஸ் அக்கிராசனர் யாராயிருந்த போதிலும், மகாத்மாவே காங்கிரஸின் உண்மையான நிரந்தரத் தலைவராயிருந்தார். காங்கிரசிலிருந்து மகாத்மா காந்தி வெளிப்படையாக விலகி நின்ற காலத்திலும், அவரைத் தலைவராக எண்ணிக் கொண்டுதான் மற்றவர்கள் காரியங்களை நடத்தினார்கள்.

  • காந்திஜி காங்கிரசின் பூரண தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பது இன்னொரு முக்கியமான காரியத்தின் மூலமாகவும் நாகபுரியில் வெளியாயிற்று.

  • அது வரையில் காங்கிரசுக்கு ஒழுங்கான சட்டம், விதி, அமைப்புத் திட்டம் ஒன்றும் இல்லாமலிருந்தது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் பிரதிநிதியாக வந்துவிடலாம். வருஷத்துக்கொரு தடவை காங்கிரஸ் கூடிக் கலைந்துவிடும். அடுத்த காங்கிரஸ் வரையில் பொறுப்புடன் வேலை செய்யக்கூடிய ஸ்தாபனம் கிடையாது. காங்கிரஸ் மகாசபையில் நிறைவேறிய தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்பாடு ஒன்றும் கிடையாது.

  • அமிருதஸரஸ் காங்கிரஸிலேயே மகாத்மா இந்தக் குறை பாட்டைக் கண்டு சில தலைவர்களிடம் பிரஸ்தாபித்தார். காங்கிரஸுக்கு அமைப்பும் விதிகளும் தயாரிப்பதற்கு அமிருதஸரஸிலேயே ஒரு கமிட்டி நியமித்தார்கள். அந்தக் கமிட்டியில் காந்திஜியையும் அங்கத்தினராக்கினார்கள். மற்ற இரண்டு அங்கத்தினர்கள் சும்மா இருந்துவிட, அமைப்பு விதிகள் தயாரிக்கும் வேலை முழுதும் மகாத்மா காந்தியின் தலையிலேயே சார்ந்தது.

  • காந்திஜி தயாரித்த அமைப்பு, காங்கிரஸ் மகாசபையில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி காங்கிரசின் லட்சியத்தை ஒப்புக்கொண்டு நாலணா வருஷ சந்தா செலுத்துவோரெல்லாம் காங்கிரஸ் அங்கத்தினராகச் சேரலாம்.

  • இத்தகைய நாலணா காங்கிரஸ் அங்கத்தினர்கள் மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அங்கத்தினரே காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆவார்கள். மொத்தம் 6000 பிரதிநிதிகளுக்கு மேல் போகக் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. (பின்னால் இதுவும் அதிகம் என்று கண்டு காங்கிரஸ் பிரதிநிதிகளின் தொகை மூவாயிரம் ஆகக் குறைக்கப்பட்டது)

  • மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரால் தேர்ந் தெடுக்கப்படுவோர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர் ஆவர். இவர்களின் தொகை 350. ஆனால் இத்தனை பேர் ஒவ்வொரு தடவையும் கூடி எந்தக் காரியத்தையும் செய்ய முடியாதல்லவா? இதற்காக வருஷம் முழுதும் இடைவிடாமல் காங்கிரஸ் வேலைகளைக் கவனித்து நடத்துவதற்காக, காங்கிரஸ் காரியக்கமிட்டி ஒன்று ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப் பட்டது.

  • காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் காட்டிலும் முக்கியமானது காங்கிரஸின் இலட்சியம். 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குட் பட்ட குடியேற்ற நாட்டு அந்தஸ்து' தான் அதுவரையில் காங்கிரஸின் இலட்சியமாயிருந்தது. அதை அடைவதற்கு வழி 'சட்ட வரம்புகுட்பட்ட' கிளர்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தது. காந்திஜிஇதை மாற்றி 'அமைதியான, நேர்மையுள்ள, எல்லா முறைகளினாலும் சுயராஜ்யம் அடைதல்' என்று காங்கிரஸ் இலட்சியத்தை அமைத்தார்.

  • "ஒத்துழையாமை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்டதல்ல" என்று ஆட்சேபம் சொல்லப்பட்டதல்லவா? இப்போது காங்கிரஸ் இலட்சியத்திலேயே 'சட்ட வரம்புக் குட்பட்ட என்ற சொற்றொடர் எடுத்து விடப்பட்டது.

  • 'சட்ட வரம்பு' என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் ஏற்படுத்திய சட்ட வரம்புதானே? பிரிட்டிஷ் சட்டத்தையெல்லாம் நியாயமான சட்டமென்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நியாயமற்ற சட்டங்களின் வரம்புக்கு ஏன் உட்பட்டு நிற்க வேண்டும்? சிற்சில சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்ட வரம்பை மீறுவதே இந்தியர்களின் கடமை ஆகக் கூடும். அப்படி யிருக்கும்போது, பிரிட்டிஷ் சட்ட வரம்புக்கு நம்மை நாம் ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும்?

  • ஆகவே, புதிய காங்கிரஸ் இலட்சியம் 'சட்ட வரம்பை'க் கைவிட்டது. அமைதியையும் நேர்மையையும் கைக்கொண்டது. அதுபோலவே குடியேற்ற நாட்டந்தஸ்தைக் கைவிட்டது. 'சுயராஜ்ய' இலட்சியத்தைக் கைக்கொண்டது.

  • இவ்விதம் காங்கிரஸின் இலட்சியம் மாறியது காங்கிரஸின் தலைமை மகாத்மாவிடம் சென்று விட்டதற்கு அறிகுறியாயிற்று. அதனால் இந்தியப் பொது மக்களின் மனோபாவமும் மாறியது. காங்கிரஸ் என்பது யாரோ இங்கிலிஷ் படித்த ஒரு கூட்டத்தார் தங்களுடைய பட்டம் பதவிக்காக நடத்தும் ஸ்தாபனமல்ல, பாரத தேசத்தின் விடுதலைக்காக வேலை செய்யும் ஸ்தாபனம் என்று மக்களின் மனதில் நிச்சயம் ஏற்பட்டது.

  • -----------------------------------------------------------

      • 21. சுயராஜ்ய ஜுரம்!

  • நாகபுரி காங்கிரஸ் முடிவடைந்தவுடனே 1921-ஆம் வருஷம் பிறந்தது. பாரத மக்களைச் சுயராஜ்ய ஜுரம் பற்றிக் கொண்டது. ஜுரத்தின் வேகம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது.

  • நாகபுரி காங்கிரஸில் ஒற்றுமையான முடிவு ஏற்பட்டதின் பயன் உடனே தெரிந்தது. கல்கத்தாவில் ஸ்ரீ சித்தரஞ்சன தாஸும் அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் வக்கீல் தொழிலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சன தாஸ் மாதம் ஒன்றுக்கு வக்கீல் தொழிலில் ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்த செய்தி நாடெங்கும் பிரசித்தமாயிருந்தது. அவர் அத்தொழிலை விட்டதைப் போன்ற தியாகம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் ஏராளமாகச் சம்பாதித்து வந்தவர். அத்துடன், பண்டித மோதிலால் நேரு அரசர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகபோக வாழ்வு நடத்தி வந்தார் என்றும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, மேற்கண்ட இரு தலைவர்களின் மாபெரும் தியாகம் பாரத மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை யல்லவா?

  • தாஸையும் நேருவையும் போலப் பிரபலமில்லாத பல வக்கீல்கள், - நூற்றுக் கணக்கானவர்கள், - தேசமெங்கும் தங்கள் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர முன்வந்தார்கள். இப்படி முன்வந்த வக்கீல்களில் ஏழைகளாயிருந்தவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக வென்று ஒரு மனிதர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்! அதற்கு முன்னால் இவ்வளவு பெரிய நன்கொடையைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை யாதலால் தாஸ் – நேருவின் தியாகத்தைப் போலவே இந்த நன்கொடையும் மக்களைத் திகைக்கப் பண்ணியது. நன்கொடை அளித்தவரின் பெயர் சேத் ஜம்னாலால் பஜாஜ். இவர் மார்வார் தேசத்தில் பிறந்தவர். வியாபார நிமித்தமாக மத்திய மாகாணத்துக்கு வந்து வர்தாவில் குடியேறியவர். வர்த்தகத் துறையில் பெரும் பொருள் திரட்டிக் கோடீசுவரர் ஆனவர். இத்தகையவர் மகாத்மாவின் அந்தரங்கச் சீடர்களில் ஒருவரானார். அந்த வருஷத்திலிருந்து மரணமடையும் வரையில் காங்கிரஸ் மகா சபையின் பொக்கிஷதாராக விளங்கினார். முதல் லட்சம் கொடுத்த பிற்பாடு தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ லட்சம் கொடுத்தவர். பிற்காலத்தில் மகாத்மா சபர்மதி சத்தியாக் கிரஹ ஆசிரமத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோது வர்தா வுக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஆசிரமம் ஸ்தாபித்தது சேத் ஜம்னாலாலின் காரணமாகத்தான்.

  • புதிய அரசியல் திட்டத்தின்படி சட்டசபைகளை அங்குரார்ப் பணம் செய்து வைப்பதற்கு ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) விஜயம் செய்தார். அவருடைய விஜயத்தையும் விஜயம் சம்பந்தமான வைபவங்களையும் பகிஷ்காரம் செய்யவேண்டு மென்று காங்கிரஸ் தலைவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படியே கன்னாட் கோமகன் கப்பலில் வந்து இறங்கிய அன்று நாடெங்கும் ஹர்த்தால் நடந்தது. கன்னாட் கோமகன் இந்தியப் பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் சமரசம் கோரி விண்ணப்பம் விடுத்தார். "நான் கிழவன்; வேண்டிக் கொள்கிறேன்; சென்று போனதையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்; புதிய அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடத்துங்கள்!" என்று மன்றாடினார். இந்த விண்ணப்பம் செவிடன் காதில் ஊதின சங்காக முடிந்தது. அரசரின் பிரதிநிதி வேண்டிக் கொண்டதை மக்கள் பொருட்படுத்தவில்லை. காந்தி மகாத்மாவின் வாக்கையே சிரத்தையுடன் கேட்டார்கள். மாகாண சட்டசபைகளுக்கும் மாகாண மந்திரிகளுக்கும் மதிப்பே ஏற்படவில்லை.

  • மூவகை பகிஷ்காரங்களில் இன்னொன்று கலாசாலை பகிஷ்காரம் அல்லவா? நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு இந்தப் பகிஷ்காரமும் ஓரளவு பலன் தந்தது. கல்கத்தாவில் தேசபந்து தாஸ் விடுத்த விண்ணப்பத்தின் பலனாக ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் மாணாக்கர்கள் கலாசாலைகளை விட்டு வெளியேறினார்கள். மார்ச்சு மாதம் நடக்கவேண்டிய பரீட்சைகள் பல கலாசாலைகளில் நடைபெறவே இல்லை. கல்கத்தாவைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் மற்ற மாகாணங்களிலும் பல மாணவர்கள் கலா சாலை பகிஷ்காரம் செய்தார்கள்.

  • இவ்விதம் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் விட்டு வந்த மாணாக்கர்களில் ஒரு பகுதியார் தேச சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். முதலில் இவர்கள் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கள்ளுக்கடை மறியல், விதேசித் துணிக்கடை மறியல், சாத்வீகச் சட்ட மறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைக்கூடம் சென்றார்கள். வாலிபப் பிராயத்துக்குரிய ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும் தேசத் தொண்டில் ஈடுபட்ட இந்த ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் பாரத நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள்.

  • சர்க்கார் கல்வி ஸ்தாபனங்களை விட்ட மாணவர்கள் மேலே கல்வி கற்க விரும்பினால் அவர்களுக்கு வசதி இருக்கவேண்டும் என்பதற்காகத் தேசீய கல்வி ஸ்தாபனங்கள் சில ஏற்பட்டன. இவற்றில் குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், அலிகார் ஜமியா மிலியா ஆகியவை முக்கியமானவை.

  • நாகபுரியில் மகாத்மா தயாரித்த புதிய காங்கிரஸ் அமைப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. இதற்கு முன்னாலெல்லாம் ஜனங்கள் வருஷத்துக்கு ஒரு தடவை,-டிசம்பர் கடைசி வாரத்திலே தான்,- காங்கிரஸைப் பற்றிப் பத்திரிகைகளிலே படிப்பார்கள். இப்போது தினந்தோறும் காங்கிரஸைப் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.

  • சென்னையில் வெளியான தினப் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டத்துக்குள்ளே ஒரு விண்ணப்பமோ, அறிக்கையோ வெளியாகி வந்தது. அதன் அடியில் "ச. இராஜகோபாலாச்சாரி, காங்கிரஸ் பொதுக் காரியதரிசி" என்று கையொப்பம் இட்டிருக்கும். நாகபுரியில் பண்டித மோதிலால் நேருவும் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் மகா சபையின் பொதுக் காரியதரிசிகளாகத்தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தென்னிந்தியாவில் ஸ்ரீ ச. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தத் தொடங்கினார். தினந்தோறும் பொதுமக்களின் கவனம் காங்கிரஸ் திட்டங்களின்மீது செல்லும்படி பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு வந்தார்.

  • காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடியது.நடந்த வேலைகளைப்பற்றி ஆராய்ந்து நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றித் தீர்மானித்தது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் உற்சாகத்தைப் பெருக்கி வந்தார்கள்.

  • காந்தி மகாத்மா மௌலானா முகம்மதலி அல்லது ஷவுகத் அலியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணம் செய்தார். மகாத்மாவும் மௌலானாவும் போகுமிடங்களிலெல்லாம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் திரண்டு வந்தார்கள். ஐம்பதினாயிரம், லட்சம் என்று ஜனங்கள் பொதுக் கூட்டங்களில் சேர்வது அவர்களுடைய சுற்றுப் பிரயாணத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. அவர்கள் பிரயாணம் செய்யும்போது ரயில்வே ஸ்டே ஷன்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடினார்கள். இரவு பகல் என்று பாராமல் தலைவர்களின் தரிசனம் கோரினார்கள். "வந்தே மாதரம்" "அல்லாஹு அக்பர்""மகாத்மா காந்திக்கு ஜே!" என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன; ரயிலுக்குள் தூங்க முயன்ற தலைவர்களின் செவிகளையும் பிளந்தன.

  • இந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது மகாத்மா ஒரு தடவை "நான் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஒரு வருஷத்துக் குள்ளே சுயராஜ்யம் தருவேன்!" என்றார்.

  • "நிபந்தனைகளை நிறைவேற்றினால்" என்பதைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. "ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்" என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.

  • "ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்" என்னும் செய்தி மக்களிடையே பரவியது. "அவ்விதம் மகாத்மா வாங்கிக் கொடுக்கப் போகிறார்" என்ற நம்பிக்கையும் பரவியது. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்றது!

  • மார்ச்சு மாதக் கடைசியில் பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. தலைவர்கள் தேசத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார்கள். "பட்ட பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம்" ஆகியவைகள் எல்லாம் ஓரளவிலேதான் வெற்றி பெற்றிருந்தன. பொது மக்களின் உற்சாகம் அளவில்லாமல் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருந்ததே தவிர அந்த உற்சாகம் காரியத்தில் பயன்படுத்தப் படவில்லை.

  • மக்களின் உற்சாகத்தைக் காரியமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி மூன்று திட்டங்களை வகுத்தார்.

  • "(1) ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைச் சேருங்கள்;

  • (2) திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் சேருங்கள்;

  • (3) தேசத்தில் இருபது லட்சம் இராட்டை சுற்றும்படி செய்யுங்கள்" என்று சொன்னார்.

  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தத் திட்டத்தை ஒப்புக் கொண்டது. ஜூன் மாதக் கடைசிக்குள் திட்டம் நிறை வேற வேண்டும் என்று தீர்மானித்தது.

  • இத்திட்டம் தேசமெங்கும் சுருசுருப்பை வளர்த்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புதிய காங்கிரஸ் அமைப்பு மிகவும் உதவி செய்தது.

  • மாகாண காங்கிரஸ் கமிட்டிகளும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும், தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளும், கிராம காங்கிரஸ் சபைகளும் ஏற்பட்டன. மேற்படி கமிட்டிகளுக்கெல்லாம் காரியாலயங்கள் ஏற்பட்டன. அந்தக் காரியாலயங்களின்மீது நடுவில் இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி பறந்தது.

  • ஆங்காங்கு சர்க்கார் கச்சேரிகளுக்குப் போட்டியாகக் காங்கிரஸின் காரியாலயங்கள் ஏற்பட்டு வருவதாகப் பொது ஜனங்கள் எண்ணினார்கள்.

  • முரட்டுக் கதர்ச் சொக்காயும், வெள்ளைக் கதர்க்குல்லாயும் தரித்த தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் சஞ்சரித்தார்கள். பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் மகா சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்த்தார்கள்.

  • காங்கிர இலட்சியம் அச்சிட்ட லட்சக்கணக்கான அங்கத்தினர் நமூனாக்கள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டன.

  • புதிய அமைப்பின்படி, காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துப் போட்டு நாலணா வருஷ சந்தா கொடுப்பவர்கள் எல்லாரும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அல்லவா? நாலணாச் சந்தாவுடன் காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. ஜூன் மாதக் கடைசிக்குள் அறுபது லட்சம் அங்கத்தினர்கள் சேர்ந்து விட்டதாகப் பின்னால் கணக்கு வெளியாயிற்று.

  • நாடெங்கும் உள்ள தச்சர்கள் கைராட்டினம் செய்யும் வேலையில் ஏவப்பட்டார்கள். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் ராட்டினங்கள் செய்யப்பட்டன. பரண்களிலே கிடந்த பழைய இராட்டினங்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. கைராட்டினத்தின் ரீங்காரம் தேசமெங்கும் கேட்கலாயிற்று. பெஜவாடா திட்டத்தின்படி கிட்டத்தட்ட இருபது லட்சம் ராட்டினங்கள் ஜூன் முடிவுக்குள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாகக் கணக்குச் சொன்னார்கள்.

  • இந்த ராட்டினங்களில் நூல் உற்பத்தி எவ்வளவு ஆயிற்று என்பதும், இவை நீடித்து வேலை செய்தனவா என்பதும் வேறு விஷயங்கள். அவற்றைக் குறித்துப் பிற்பாடு கவனிக்கலாம். காங்கிரஸ் அங்கத்தினர் எண்ணிக்கையும் கைராட்டினங்களின் தொகையும் நிச்சயமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கிட முடியாதவை. ஆனால் திலகர் சுயராஜ்ய நிதி விஷயம் அப்படியல்ல.

  • வசூலித்த தொகைகளுக்கு அவ்வப்போது கணக்கு வந்தது. பணம் பாங்கில் சேர்ந்தது. ஆகையால் போட்ட திட்டம் நிறைவேறியதா என்பதை ஜூன் மாதம் 30-ஆம் தேதி நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.

  • ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு கோடியைப் பங்கீடு செய்து வசூல் வேலை ஆரம்ப மாயிற்று. எல்லா மாகாணங்களிலும் துரிதமாகவே வசூல் வேலை நடந்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட பங்கீட்டின்படி ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று தோன்றவில்லை. ஒரு பொது நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிப்பதென்பது அந்த நாளிலே நினைக்கவும் முடியாத காரியம்.

  • அதற்கு முன்னால் பல தடவை காங்கிரஸுக்கு நிதி சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துப் பலன் கிட்டாமல் கைவிட்டு விட்டார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குமேல் காங்கிரஸுக்கு எப்போதும் கையிருப்பு இருந்ததில்லை.

  • அப்படியிருக்க ஒரு கோடி ரூபாய் வசூல் ஆவது எப்படி? நடக்கக் கூறிய காரியமா? பெரும்பாலான ஏழைகளிடம் கொடுக்கப் பணம் கிடையாது. பணக்காரர்களுக்குக் கொடுக்க மனம் கிடையாது. மனம் இருந்தாலும் காங்கிரஸ் நிதிக்குக் கொடுத்தால் சர்க்காரால் உபத்திரவம் நேரிடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வசூலாவது நடக்காத காரியம் என்று பலரும் எண்ணினார்கள்.

  • ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரையில் ஐம்பது லட்சம் ரூபாய்கூட வசூலாகவில்லை. சந்தேகப் பிராணிகளின் வாக்குப் பலித்து விடும் என்றே தோன்றியது. ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு மேல் ஆமதாபாத்தில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலும் பம்பாயில் மகாத்மா காந்தியும் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள்.

  • தினந்தோறும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நிதி வசூல் பெருகிக் கொண்டு வந்தது. ஆமதாபாத்தில் பத்து லட்சம் ரூபாயும், பம்பாயில் இருபத்தைந்து லட்சம் ரூபாயும் வசூலாயிற்று. இந்தச் செய்திகள் மற்ற மாகாணங்களிலும் நிதி வசூலைப் பெருக்கின. ஜூன் மாதம் 30-ஆம் தேதி முடிந்த போது மொத்தம் ஒரு கோடி பதினைந்து லட்சம் ரூபாய் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது.

  • காங்கிரஸுக்கு மகத்தான வெற்றி மகாத்மாவின் சக்திக்கு திட்டமான சாட்சி. இந்தியாவின் தேச பக்திக்கு ஐயமில்லாத அத்தாட்சி. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்கு மேலே வசூலாகி விட்டதென்னும் செய்தி நாடெங்கும் உற்சாகக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

  • பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் இன்னும் அதிகமாகி மேலே ஏறியது.

  • -----------------------------------------------------------

      • 22. "வளருதே தீ"

  • பெஜவாடாவில் போட்ட திட்டம் ஒருவாறு நிறைவேறி விட்டது. அடுத்தாற்போல் என்ன? "ஒரு வருஷத்திற்குள் சுயராஜ்யம்" என்று காந்தி மகாத்மா சொன்னாரே? ஜூனமாதம் 30-ஆம் தேதியோடு அரை வருஷம் ஆகிவிட்டதே! மிச்சமுள்ள ஆறு மாதத்தில் சுயராஜ்யம் கிடைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன வழி? அடுத்த திட்டம் என்ன?

  • அடுத்த திட்டம் என்ன வென்பதைக் காந்தி மகாத்மா சொன்னார்: "(1) அன்னியத் துணி பகிஷ்காரம்; (2) மது விலக்கு;- இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி வையுங்கள். இதற்குப் பிறகும் பிரிட்டிஷார் பணிந்து வரா விட்டால், கடைசி ஆயுதமான சட்டமறுப்பு இருக்கிறது. அதை வருஷக் கடைசியில் உபயோகிக்கலாம்" என்றார்.

  • ஜூ

  • லை மாதம் 28-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடிற்று. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அங்கத்தினர்கள் அவ்வளவு பேரும் வெள்ளைக் கதர் உடையும் வெள்ளைக் கதர்க் குல்லாயும் அணிந்து வந்தார்கள். பெஜவாடா திட்டத்தை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம் என்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர்கள் வந்திருந்தார்கள். இதற்குள்ளே ஆங்காங்கு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேர்தல்கள் நடந்திருந்தன. வந்திருந்த அ.இ.கா. கமிட்டி அங்கத்தினர்களும் புதியவர்கள். மிகப் பெரும்பாலும் காந்தி மகாத்மாவிடம் பரிபூரண பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். ஆகையால் இந்த அ.இ.கா கமிட்டிக் கூட்டம் பம்பாய்ப் பொது மக்களியையே பெருங்கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணியிருந்தது. பம்பாய் வாசிகள் தேசீய நெறி கொண்டிருந்தார்கள். எங்கே நோக்கினாலும் காந்தி குல்லா மயமாகக் காணப்பட்டது. தலைவர்கள் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜே கோஷம் செய்தார்கள். காந்தி மகாத்மாவைக் கடவுளின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குப் பம்பாய்வாசிகள் அவரிடம் பக்தி கொண்டு விட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போல் ஆடை ஆபரணங்கள் அணிவித்த காந்திஜியின் சித்திர படங்களும் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் பதினாயிரக் கணக்கில் செலவாயின.

  • இத்தகைய சூழ்நிலையில் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிக் காந்தி மகாத்மா கூறியபடி அன்னியத் துணி பகிஷ்காரத் தீர்மானத்தை ஒப்புகொண்டது. ஆகஸ்டு மாதம் 1உயிலிருந்து காங்கிரஸ்வாதிகளும் காங்கிரஸ் அநுதாபிகளும் பொதுமக்களும் அந்நியத் துணியை அடியோடு பகிஷ்கரிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது.

  • மேற்படி தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பதற்காக மகாத்மா காந்தி ஆகஸ்டுமீ 1உ பம்பாயில் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். சௌபாத்தி கடற்கரையில் பம்பாய் நகரமே திரண்டு வந்துவிட்டது போன்ற ஜன சமுத்திரம் கூடியிருந்தது. சுமார் ஐந்து லட்சம் ஜனங்களுக்குக் குறையாது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்ற இரண்டு தினங்களாகப் பம்பாயில் வீடுவீடாகச் சென்று அன்னியத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து கடற்கரையில் பிரசங்க மேடைக்குக் கொஞ்ச தூரத்தில் குவித்திருந்தார்கள். காந்தி மகாத்மா அந்தக் கூட்டதில் பேசினார்.

  • "இந்தியாவில் அடிமைத்தனம் அன்னியத் துணி மூலமாகவே வந்தது. பிரிட்டிஷார் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு தான் இந்தியாவுக்கு வந்தார்கள், வந்த இடத்தில அரசியல் ஆதிக்கத்தை ஸ்தாபித்து கொண்டார்கள். நம்முடைய அடிமைத்தனத்துக்கு அறிகுறியா யிருப்பது அன்னியத் துணிதான். நம்முடைய அவமானத்தின் சின்னம்மாயிருப்பதும் அன்னியத் துணியே. இந்தியாவின் தரித்திரத்துக்குக் காரணம் அன்னியத் துணி.ஆகையால், இங்கே தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் அந்நியத் துணிக் குவியலில் நான் இப்போது தீ மூட்டப் போகிறேன். இந்தக் கூட்டத்தில் யாரேனும் உடம்பில் விதேசித் துணி அணிந்திருந்தால் அதை நான் மூட்டும் தீயிலே கொண்டு வந்து போட்டு விடுங்கள். இந்த விதேசித் துணிக் குவியல் எரிந்து சாம்பராவது போல் நம்முடைய அடிமைத்தனமும் எரிந்து சாம்பராகட்டும்!"

  • இவ்விதம் மகாத்மா காந்தி பேசிவிட்டு விதேசித் துணிக் குவியலில் தீக்குச்சியைக் கிழித்து நெருப்பு வைத்தார். பெரிய பிரம்மாண்டமான போர் போலக் கிடந்த அன்னியத் துணிக்குவியல் எரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்தவர்களில் அநேகர் தாங்கள் அணிந்திருந்த அன்னியத் துணிச் சட்டைகளையும் அன்னிய நாட்டுக் குல்லாய்களையும் கொண்டு வந்து எரிகிற தீயில் போட ஆரம்பித்தார்கள். ஆயிரம் பதினாயிரம் குல்லாக்களும் சட்டைகளும் வேறு ஆடைகளும் வந்து விழுந்தன. 'நீ முந்தி, நான் முந்தி' என்று ஜனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை யொருவர் முண்டிக்கொண்டு வந்து, குல்லாய்களையும் துணிகளையும் நெருப்பிலே போட்டார்கள். சிலர் தாங்கள் வைத்திருந்த குடையின் துணி அன்னியத் துணியினால் ஆனது என்ற காரனத்தினால் குடைகளையும் தீயில் வீசி எறிந்தார்கள்.

    • "வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ! தீ! இந்நேரம்!"

  • என்று பாரதியார் வேள்விப் பாட்டில் பாடியிருப்பதை லட்சக் கணக்கான பம்பாய் வாசிகள் பிரத்யட்சமாகக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். நூற்றைம்பது வருஷ காலமாக இந்தியாவைப் பீடித்திருந்த அன்னிய ஆட்சியும் அடிமைத்தனமும் அந்த விதேசித் துணிக் குவியலைப்போல் பொசுங்கிப் போய் விட்டதாகவே எண்ணிக் குதூகலத்துடன் வீடு திரும்பினார்கள்.

  • * * *

  • சென்ற 1920-ஆம் வருஷம் இதே ஆகஸ்டுமீ 1உ தான் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். காந்திஜியின் யுத்த சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு அளித்திருந்த ‘கெயிஸரி ஹிண்ட்’ என்னும் அபூர்வமான கௌரவப் பதக்கத்தைச் சர்க்காருக்கே திருப்பி அனுப்பி விட்டதாக அன்று பம்பாய் பொதுக்கூட்டத்தில் அறிவித்து விட்டுத் தேசமெங்கும் சுற்றுப்பிரயாணம் கிளம்பினார்.

  • அதேமாதிரி இந்த 1921 ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதியன்று பம்பாயில் அன்னியத் துணிக் குவியலைக் கொளுத்திவிட்டுச் சுற்றுப் பிரயாணம் தொடங்கினார். மௌலானா முகம்மதலியையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டர். பிஹார், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாகாணங்களில் சுற்றுப்பிரயாணம் செய்தார். காந்தி மகானும் மௌலானா முகம்மதலியும் சென்ற இடமெல்லாம் திரள் திரளாக மக்கள் கூடினார்கள். பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மலை மலையான அன்னியத் துணிக் குவியல்களும் தீக்கிரையாயின.

  • இவ்விதம் வடநாட்டில் ஆகஸ்டு மாதம் முழுவதும் செப்டம்பர் முற்பகுதியிலும் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு மகாத்மாவும் மௌலானாவும் சென்னை மாகாணத்துக்குப் பிரயாணம் ஆனார்கள். செப்டம்பர் மாதம் 14ம் தேதி கல்கத்தாவிலிருந்து சென்னை மாகாணத்துக்குப் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது வழியில் வால்ட்டேர் ஜங்ஷனில் ரயில் நின்றது. மகாத்மாவும் மௌலானாவும் பிரயாணம்செய்யும் காலங்களில் வழியில் ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் ஸ்டேஷனுக்கு அருகில் ஜனங்கள் திரண்டு நிற்பது வழக்கம். இருவரும் வண்டியிலிருந்து இறங்கிச் சென்று காத்திருந்த ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்து ரயிலில் ஏறிக்கொள்வார்கள். அது மாதிரியே வால்ட்டேரில் ரயில் இருப்பத்தைந்து நிமிஷம் நிற்கும் என்று தெரிந்துகொண்டு தலைவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வெளியில் காத்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்குச் சொன்றார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சில அடி தூரம் சென்றதும் முன்னால் சென்ற மகாத்மா பின்னால் வந்த மௌலானா தம்மை உரத்த சத்தமிட்டு அழைப்பதைக்கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைக்காரப் போலீஸ் அதிகாரிகளும் ஐந்தாறு இந்தியப் போலீஸ்காரர்களும் மௌலானா முகம்மதலியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.

  • மௌலானா தம் கையில் வைத்திருந்த நோட்டீசைப் படித்துக் கொண்டிருப்பதையும் மகாத்மா பார்த்தார். ஆனால் அவர் முழுதும் நோட்டீசைப் படித்து முடிப்பதற்குப் போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அதிகாரிகளில் ஒருவர் மௌலானாவின் கையைப் பிடித்து இழுத்தார். காந்தி மகாத்மாவின் அஹிம்சா நெறியில் பயிற்சி பெற்றிருந்த மௌலானாவும் உடனே படிப்பதை நிறுத்திப் போலீஸாரைப் பின்தொடர்ந்து சென்றார். போகும்போது காந்திஜியைப் பார்த்து புன்னகை புரிந்துவிட்டுக் கையை வீசி ஆட்டிச் சமிக்ஞையினால் 'போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

  • மௌலானா அவ்விதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுச் சென்றபோது காந்திமகானுக்குத் தம்முடைய ஆத்மாவிலேயே ஒரு பகுதி தம்மை விட்டுப் பிரிந்து போவது போலிருந்தது.

  • மகாத்மா காந்திக்கும் அலி சகோதரர்களுக்கும் இந்திய அரசியல் துறையில் ஏற்பட்டிருந்த நட்பு உலக சரித்திரத்தில் ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அலி சகோதரர்கள் வீராவேசமே உருக்கொண்டவர்கள். சாந்தம், அஹிம்சை, - இவற்றின் உயர்வைப் பற்றி என்றும் எண்ணாதவர்கள். இஸ்லாமிய சமய நெறியும் முஸ்லிம்களின் சரித்திரப் பண்பும் அவர்களை முற்றும் வேறு விதத்தில் பக்குவப் படுத்தியிருந்தன. ஆனாலும் அந்த அதிசய சகோதரர்கள் மகாத்மாவிடம் அளவில்லாத அன்பு கொண்டு அவரை மனமொழி மெய்களினால் பின்பற்றினார்கள். "நான் மௌலானா ஷவுகத் அலியின் சட்டைப் பையிலே இருக்கிறவன்!" என்று காந்தி மகாத்மா ஒரு தடவை சொன்னார். அதாவது மௌலானாவின் அன்புக்கு அவ்வளவு தாம் கட்டும் பட்டவர் என்று கூறினார். அம்மாதிரியே அலி சகோதரர்களும் மகாத்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள்.

  • அந்த வருஷம் ஏப்ரல் மாதத்தில் லார்டு ரெடிங் கவர்னர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக வந்தார். மகாத்மாவைச் சந்தித்துப் பேச விரும்புவதகாத் தெரிவித்தார். மகாத்மாவும் ரெடிங்கைப் பார்க்க விரைந்து சென்றார். "நீங்கள் அஹிம்சா தர்மத்தைப் போதிக்கிறீர்களே! உங்கள் சிஷ்யர்கள் எல்லாரும் அதை அனுசரிப்பார்களா?" என்று லார்ட் ரெடிங் கேட்டார்.

  • "என் சிஷ்யர்களுக்கு நான் உத்தரவாதம்!" என்றார் மகாத்மா. "அப்படியானால் இதைப் பாருங்கள்!" என்று சொல்லி லார்ட் ரெடிங் மௌலானா முகம்மதலியின் பிரசங்கம் ஒன்றின் ரிபோர்ட்டை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு பகுதி மௌலானா முகம்மதலி பலாத்கார முறைகளையும் ஆதரிக்கிறார் என்று அர்த்தம் செய்யக்கூடிய முறையில் இருந்தது. "இந்த மாதிரி தப்பர்த்தம் செய்யக்கூடியவாறு கூட என்னைச் சேர்ந்தவர்கள் பேசக்கூடாதுதான். இதற்குப் பரிகாரம் நான் தேடித் தருகிறேன்!" என்றார் மகாத்மா. அந்தப்படியே மகாத்மா காந்தி மௌலானா முகம்மது அலியை உடனே சந்தித்து "பலாத்கார முறைகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுங்கள்!" என்றார். மகாத்மாவின் சொல்லுக் கிணங்கி மௌலானா ஒரு அறிக்கை விட்டார். ரெடிங்-காந்தி சந்திப்பு பற்றிய விவரங்கள் யாருக்கும் அச்சமயம் தெரிந்திருக்க வில்லை. ஆகையால் "மௌலானா முகம்மதலி பயந்து விட்டார்!" என்றும், "மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!" என்றும் தேச விரோதிகள் பலர் எக்காளம் கொட்டினார்கள். மௌலானா இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மகாத்மாவின் விருப்பத்தின்படி நடக்கவேண்டியது தம் கடமை என்று எண்ணிப் பொறுமையுடனிருந்தார்.

  • பிறகு கார்டு ரெடிங்கின் சர்க்காரும் "மௌலானா முகம்மதலி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதின் பேரில் அவர் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டது" என்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். இது காந்திஜிக்கே பொறுக்கவில்லை. உடனே காந்திஜி லார்ட் ரெடிங்குக்கு எழுதி அநுமதி பெற்று அவர்களுடைய சந்திப்பின் விவரங்களையும் தாம் மௌலானாவுக்குக் கூறிய புத்திமதியையும் வெளிப்படுத்தினார். மௌலானா முகம்மதலி 'பயந்துபோய் மன்னிப்புக் கேட்கவில்லை' என்பதை அப்போது அனைவரும் அறிந்து கொண்டனர்.

  • இவ்விதம் தமக்கு நேர்ந்த அபகீர்த்தியைக் கூடப் பொருட்படுத்தாமல் மௌலானா முகம்மதலி மகாத்மாவின் சொல்லை மேற்கொண்டு வந்தார். அப்படிப்பட்டவரைத் தம்மிடமிருந்து பிரித்துக் கைது செய்து போலீஸார் கொண்டுபோனது மகாத்மாவைக் கலங்கச் செய்துவிட்டது. ஆயினும் அந்தக் கலக்கமானது மகாத்மா காரியம் செய்வதைத் தடைசெய்ய வில்லை. ஜனக்கூட்டம் கூடியிருந்த இடத்துக்கு மகாத்மா நேரே சென்று மக்களை அமைதியாயிருக்கும்படி கேட்டுக் கொண்டார். திரும்பவும் மௌலானாவைச் சிறைப்படுத்தி யிருந்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துப் பேச அநுமதி கேட்டார். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மௌலானாவுடன் பிரயாணம் செய்த பீகம் முகம்மதலியும் மௌலானாவின் காரியதரிசியும் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு அப்போதுதான் வெளியில் வந்தார்கள். அவர்கள் மௌலானாவை 107-வது பிரிவின்படியும் 108-வது பிரிவின்படியும் கைது செய்திருப்பதாக விவரம் தெரிவித்தார்கள்.

  • கன்னிங் காம் என்ற பெயர் தமிழ் நாட்டில் பலருக்கு நினைவிருக்கும். சென்னையில் பின்னால் உப்புச் சத்தியாக்கிரஹம் நடந்தபோது தடபுடலான அடக்கு முறையைக் கையாண்டு கொடுமைக்குப் பெயர் பெற்ற மனிதர். இவர் அச்சமயம் சி.ஐ.டி.போலீஸ் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாயிருந்தார். மௌலானா முகம்மதலியைக் கைது செய்யும் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. விசாகப்பட்டினம் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மேற்படி கன்னிங்காமுக்கு அனுப்பிய உத்தரவின் விவரம் பின்வருமாறு:-

  • "முகம்மது அலி அமைதியாகவும் நன்னடத்தையுடனும் இருப்பதற்காக அவரிடம் 107, 108-வது பிரிவுகளின் கீழ் ஜாமீன் கேட்க வேண்டியிருப்பதால். மேற்படி முகம்மது அலியைக் கைதுசெய்து என் முன்னால் கொண்டுவந்து ஒப்புவிக்கவேண்டியது. இதில் தவறவேண் டாம். 14உ செப்டம்பர் 1921.

    • (ஒப்பம்) ஜே.ஆர்.ஹக்கின்ஸ், ஜில்லா மாஜிஸ்ட்ரேட், விசாகப்பட்டினம்"

  • மேற்படி உத்தரவைப் பற்றித்தெரிந்து கொண்டதும் மகாத்மா காந்தி ரயில் ஏறித் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். ரயிலில் பிரயாணம் செய்துகொண்டே மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி உருக்கமான கட்டுரை ஒன்று "எங் இந்தியா"ப் பத்திரிகைக்கு எழுதினார். அந்தக் கட்டுரை யின் கடைசிப் பகுதி பின்வருமாறு:-

  • "அலி சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை என்ன? பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றை உடனே விட்டொழிப்பதுதான். அலி சகோதரர்களுடைய தைரியம், நம்பிக்கை, அச்சமின்மை, சத்தியம், இடைவிடாச் செயல் திறமை ஆகியவற்றையும் அனைவரும் மேற்கொண்டால் சுயராஜ்யம் அடைவது பற்றிச் சந்தேகம் என்ன? ஜில்லா மாஜிஸ்ட்ரேட் போலீஸ் அதிகாரிக்குப் போட்ட உத்தரவின் கடைசியில் "இதில் தவறவேண்டாம்!" என்று கண்டிருந்தது. அந்த உத்தியோகஸ்தர் அதை நிறைவேற்றுவதில் தவறவில்லை! மேலேயிருந்து வரும் உத்தரவை நிறைவேற்றுவதில் அநேக ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயிரையே அர்ப் பணம் செய்திருக்கிறார்கள். இதுதான் இங்கிலீஷ் சாதியின் பெருமை. காங்கிரஸ் இந்தியர்களுக்கு அவ்விதமே 'உத்தரவு' இட்டிருக்கிறது. 'உத்தரவு' 'கட்டளை' 'புத்திமதி' – எப்படி வைத்துக்கொண்டாலும் சரிதான். 'அதில் தவறவேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விதம் நாம் செய்யப் போகிறோமா? மிச்சமுள்ள சில மாதங்களில் நாம் தீவிரமாக வேலை செய்து, 'காங்கிரஸ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் தவறவில்லை' என்று நாம் நிரூபிக்கவேண்டும்."

  • -----------------------------------------------------------

      • 23. கராச்சி விசாரணை

  • மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி மகாத்மா எழுதிய கட்டுரையில், "அலி சகோதரர்கள் இணை பிரியாத இரட்டையர்கள். அவர்களைப் பிரித்து வைக்க முடியாது. ஆகையால் முகம்மதலியைக் கைது செய்தவர்கள் ஷவுகத் அலியையும் கைது செய்தே தீர்வார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை என்பது இரண்டு நாளைக்குள் தெரிய வந்தது.

  • மௌலானா முகம்மதலியை விசாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் கைது செய்தது ஒரு காரணார்த்தமாகத்தான். 17-ம் தேதியன்று மேற்படி 107,108 பிரிவு ஜாமீன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அந்த க்ஷணமே கராச்சியிலிருந்து வந்திருந்த வாரண்டின்படி மௌலானா முகம்மதலியை மீண்டும் கைது செய்து கராச்சிக்குக் கொண்டு போனார்கள்.

  • அதே தேதிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்த மௌலானா ஷவுகத் அலி, டாக்டர் ஸைபுடீன் கிச்லூ, பீர்குலாம் முஜாதீக், மௌலானா நிஸார் ஆமத், மௌலானா ஹுசேன் ஆமத். ஜகத்குரு சாரதாபீட சங்கராச்சாரியார் ஆகியவர்களையும் கைது செய்தார்கள். எல்லாரையும் கராச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

  • இப்படி அவர்களை யெல்லாம் கராச்சிக்குக் கொண்டு போனதின் காரணம் என்னவென்றால், ஜூலை மாதம் 8ம் தேதி கராச்சியில் அகில இந்திய கிலாபத் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். இந்த மகாநாட்டில், அதுவரை காங்கிரஸில் செய்திருந்த தீர்மானங்களையெல்லாம் விடக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேறியது.

  • "கிலாபத் விஷயமாக பிரிட்டிஷ் சர்க்கார் நீதி வழங்காதபடியால் இனிமேல் மதப் பற்றுள்ள எந்த முஸ்லிமும் சைன் யத்தில் சேவை செய்வதும், சைன்யத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு உதவி செய்வதும் மார்க்க விரோதமாகும்" என்பது அந்தத் தீர்மானத்தின் கருத்து.

  • கல்கத்தாவிலும் நாகபுரியிலும் நிறைவேறிய ஒத்துழையாமைத் தீர்மானத்தில் சைன்ய சேவையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சைன்யத்தில் உள்ளவர்களை வேலையை விடும்படி செய்வதற்குக் காலம் வரவில்லை என்று கருதப்பட்டது. அது மட்டுமல்ல. மற்ற ஒத்துழையாமைத் திட்டங்களையெல்லாம் பிரிட்டிஷ் சர்க்கார் ஒருவேளை அலட்சியமாகக் கருதி விட்டு வைக்கலாம். ஆனால் சைன்ய சேவையை விட வேண்டும் என்று சொன்னால் உடனே மிகக் கடுமையான அடக்குமுறை தொடங்குவார்கள். அதனுடைய பலாபலன்கள் இப்படியிருக்கு மென்று ஊகிப்பது கடினம். ஆகையால் அதைக் கடைசித் திட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மாவும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள்.

  • ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அவ்வளவு தூரம் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. "முஸ்லிம்கள் இனிமேல் பிரிட்டிஷ் சைன்யத்தில் சேர்ந்து சேவை செய்வது பாவம்" என்று கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்துடன் நின்றுவிட வில்லை. அச்சமயத்தில் அங்கோராவில் முஸ்தபா கமால் பாட்சாவின் தலைமையில் புதிய துருக்கி அரசாங்கம் ஏற்பட்டிருந்தது. அந்த அங்கோரா அரசாங்கத்துடன் பிரிட்டிஷ் போர் தொடுத்தால், "இந்திய முஸ்லிம்கள் உடனே சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கி இந்தியாவில் பூரண சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்" என்றும் ஒரு தீர்மானம் நிறைவேறியது.

  • இந்தத் தீர்மானங்கள் நிறைவேறிய கராச்சி மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். தமது தலைமை யுரையில் மேலே கூறிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். மௌலானா ஷவுகத் அலி முதலியவர்கள் மேற்படி தீர்மானங்களை ஆதரித்துப் பேசினார்கள்.

  • இவ்விதம் இராஜத் துவேஷப் பிரசாரம் செய்த காரணத்துக்காகவே மேற் கூறிய ஏழு தலைவர்களும் பல இடங்களில் கைது செய்யப்பட்டுக் கராச்சியில் விசாரணைக்காகக் கொண்டு போகப்பட்டனர்.

  • காந்திஜி வால்ட்டேரில் மௌலானா முகம்மதலியைப் பிரிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். மௌலானாவின் மனைவியான பீகம் முகம்மதலியும் மகாத்மாவுடன் சென்னைக்கு வந்தார். அலி சகோதரர்கள் மிக்க மத வைராக்கியம் உள்ளவர்கள். ஆகவே பீகம் முகம்மதலி இஸ்லாமிய வழக்கப்படி கோஷா முறையை அனுஷ்டித்தார். முகமூடி இல்லாமல் வெளியில் புறப்படுவதில்லை. அப்படிப்பட்ட கோஷாப் பெண்மணி தமது கணவர் தொடங்கிய வேலையைத் தாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதிய மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யலானார்.

  • சென்னை வந்து சேர்ந்ததும் காந்திஜிக்கு மௌலானா முகம்மதலி கராச்சித் தீர்மானம் காரணமாகக் கைதியானார் என்னும் செய்தி கிடைத்தது. அன்று மாலையில் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டம். ஜல சமுத்திரத்தின் கரையில் ஜன சமுத்திரம் திரண்டிருந்தது. மகாத்மாவும் பீகம் முகம்மதலியும் கூட்டத்துக்கு வந்தார்கள். மக்களின் ஆவேசத்தையும் பரபரப்பையும் சொல்லி முடியாது. ஆரவாரம் கொஞ்சம் அடங்கிய பிறகு மகாத்மா காந்தி பேசினார். பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறியைப் போல் சுடர் விட்டது.

  • "மௌலானா முகம்மதலியை எந்தக் குற்றத்துக்காகக் கைது செய்தார்களோ அதே குற்றத்தை நான் இப்பொது செய்யப் போகிறேன்!" என்று காந்தி மகாத்மா கூறியதும் அங்கே திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கும் ரோமாஞ்சலி உண்டாயிற்று.

  • கராச்சியில் மௌலானா முகம்மது அலி என்ன பிரசங்கம் செய்தாரோ, அதையே மகாத்மா காந்தி வார்த்தைக்கு வார்த்தை சரியாக அந்த மாபெருங் கூட்டத்தில் சொன்னார். கராச்சி தீர்மானங்களின் வாசகத்தையும் எடுத்துக் கூறினார். "மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நானும் செய்து விட்டேன். என்னையும் சர்க்கார் கைது செய்யட்டும்!" என்றார் காந்தி மகான்.

  • பொது மக்கள், "இதுவல்லவோ சிநேகம்? இதுவல்லவா சகோதர பாவம்!" என்று எண்ணி வியந்தார்கள். தம்முடைய அருமைச் சகோதரரும் சகாவுமான முகம்மது அலியை மகாத்மா காந்தி ஆதரித்து நின்ற மேன்மைக் குணம் மக்களைப் பரவசப் படுத்தியது.

  • பிறகு சென்னைக் கடற்கரையில் தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருந்த மலை போன்ற விதேசித் துணிகளுக்கு மகாத்மா தீ மூட்டினார். கூட்டத்திலிருந்த ஆயிரக் கணக்கான ஜனங்கள் தங்கள் மேலிருந்த விதேசித் துணிகளைக் கொண்டு வந்து தீயிலே போட்டார்கள். அத்தனை பெரிய துணிக்குவியலும் அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பராயிற்று.

  • சென்னைக் கடற்கரையில் மகாத்மா மேற்கண்டவாறு பேசிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்த தேசத் தலைவர்கள் "மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நாங்களும் செய்தே தீருவோம்!" என்று சொன்னார்கள்.

  • ஆகவே காந்திஜியும் மற்றும் ஐம்பது பிரபல காங்கிரஸ் தலைவர்களும் கூட்டுக் கையெழுத்துப் போட்டு அக்டோபர் மாதம் 4 - ஆம் தேதி ஒரு விக்ஞாபனத்தை வெளியிட்டார்கள். அக்டோபர் மாதம் 6 - ஆம் தேதி "யங் இந்தியா" வில் மேற்படி விக்ஞாபனமும் கையெழுத்துக்களும் பிரசுரிக்கப்பட்டன.

  • "அலி சகோதரர்களூம் மற்றவர்களும் எதற்காகக் கைது செய்யப் பட்டார்கள் என்பதைப் பம்பாய் சர்க்கார் 1921 - ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 15 - ஆம் தேதி வெளியிட்டுள்ளா அறிக்கையில் விளக்கியிருக்கிறார்கள்; மேற்படியார்கள் கைது செய்யப்பட்டதை உத்தேசித்து, கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்புவதாவது:-

  • ராணுவத்திலோ, சிவில் நிர்வாகத்திலோ கலந்து ஜனங்கள் சர்க்காருக்குத் தொண்டு செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தாராளமாக அபிப்பிராயம் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

  • அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும், தார்மீகத் துறையிலும் இந்தியா சீர்குலைந்திருப்பதற்குத் தற்போதுள்ள இந்தியா சர்க்காரே காரணமாகும். மக்களுடைய தேசீய அபிலாஷைகளை அடக்கி ஒடுக்குவதற்குப் போலீஸையும் ராணுவத்தையும் சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இதற்கு உதாரணமாக ரௌலட் சட்டக் கிளர்ச்சியைச் சொல்லலாம். இந்தியாவுக்கு ஒரு தீமையும் செய்தறியாத அராபியர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள் முதலியோருடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக இந்திய ராணுவத்தையும் இந்திய சர்க்கார் உபயோகித்திருக்கிறது.

  • இத்தகைய சர்க்காரில் சிவில் உத்தியோகஸ்தராகவும் சேனையில் சிப்பாயாகவும் தொண்டு செய்வது தேசீய கௌரவத்திற்கே பங்கம் விளைவிப்பதாகும். ஆகையால், சர்க்காருடனுள்ள தொடர்பை அறவே ஒழித்து விட்டு, ஜீவனத்திற்கு வேறு ஏதாவது வழியைத் தேடிக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்திய சிப்பாயினுடையவும் சிவில் உத்தியோகஸ்தருடையவும் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.

  • (ஒப்பம்) எம்.கே.காந்தி அபுல்கலாம் ஆஸாத்; அஜ்மல்கான் (டில்லி; லஜபதிராய் (லாகூர்); மோதிலால் நேரு (அலஹாபாத்); சரோஜினி நாயுடு (பம்பாய்): அப்பாஸ் தயாப்ஜி, என்.ஸி. கேல்கர், வி.ஜே.படேல், வல்லபாய் படேல் (அஹமதாபாத்); எம்.ஆர்.ஜயகர் (பம்பாய்); டி.வி.கோகலே(பூனா); எஸ்.ஜீ.பேங்கர், ஜவாஹர்லால் நேரு (அலஹாபாத்); கங்காதர தேஷ்பாண்டே (பெல்காம்); லக்ஷ்மி தாஸ் தேர்ஸி, உமர் சோபானி, ஜம்னாலால் பஜாஜ், எம்.எஸ். ஆனே (அம்ரோதி); எஸ்.இ.ஸ்டோக்ஸ், கோட்கார் (சிம்லா); எம்.ஏ. அன்ஸாரி (டில்லி); கலிக்குஸ்ஸமான் (டில்லி); கே.எம். அப்துல் கபூர் (டில்லி); அப்துல் பாரி (லக்ஷ்மண்புரி); கிருஷ்ணாஜி நீல்கண்ட் (பெல்காம்); கி. இராஜகோபாலாச்சாரி (சென்னை); கொண்டா வெங்கடப்பையா (குண்டூர்); ஜி.ஹந்ஸர்வோத்தமராவ் (குண்டூர்); அகஸுயா ஸாராபாய், ஜீதேந்திரலால் பானர்ஜி, எம். ஹெச். கித்வாய் (டில்லி); சியாம் சுந்தர சக்கரவர்த்தி (கல்கத்தா); ராஜேந்திர பிரசாத் (பாட்னா); ஆஸாத் சோபானி, ஹஸரத் மோஹானி (கான்பூர்); மஹாதேவ் தேஸாய், பி.எப்.பரூச்சா, யாகூப் ஹஸன், பி.எஸ். முஞ்ஜே, ஜெயராம்தாஸ் தௌலத்ராம், எம்.ஆர். சோல்கர் (நாகபுரி); வி.வி. தர்தானே, எ.ஹெச், சித்திக் காத்ரி (பம்பாய்); கூடார் ராமச்சந்திர ராவ் (ஆந்திரா) மியா முகம்மது ஹாஜிஜான் முகம்மது சோட்டானி.

  • மேற்படி விக்ஞாபனத்தில் ச்ரி. சி. ஆர். தாஸின் கையெழுத்து காணப்படாதது பலருக்கும் வியப்பை அளித்தது. தந்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதந்தான் அதற்குக் காரணம் என்று தெரியவந்தது. எனவே, ச்ரி சித்தரஞ்சன தாஸின் கையெழுத்தும் பிற்பாடும் அந்த விக்ஞாபனத்தில் சேர்ந்தது.

  • அந்தப் புகழ்பெற்ற 1921 - ஆம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் முக்கிய துணைவர்களாக விளங்கிய தலைவர்கள் யார் யார் என்பதை மேற்படி விக்ஞாபனத்தின் கீழே வெளியாகியுள்ள கையெழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

  • டில்லியில் ஹக்கீம் அஜ்மல்கான் தலைமையில் கிலாபத் கமிட்டி கூடி சைன்யத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறச் சொல்வது முஸ்லிம்களின் மதக் கடமை என்று தீர்மானம் செய்தது.

  • தேசமெங்கும் ஆயிரக் கணக்கான கூட்டங்களில் பிரசங்கிகள் மௌலானா முகம்மதலியின் கராச்சி பேச்சையொட்டிப் பேசினார்கள். மேடையிலிருந்து ஒரு பிரமுகர் அந்தப் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதும் திரளான மக்கள் திரும்பிச் சொல்வதும் சர்வசாதாரணமாக நடக்கலாயிற்று.

  • இவ்வளவு கிளர்ச்சி தேசத்தில் நடந்து கொண்டிருக்கையில் கராச்சியில் மௌலானா முகம்மதலி மீதும் மற்ற அறுவர்மீதும் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அலி சகோதரர்களும் மற்ற முஸ்லிம் தலைவர்களும்"எங்கள் மதக் கடமையைச் செய்தோம். சர்க்கார் சட்டம் எப்படியிருந்தாலும் எங்களுக்கு அக்கரையில்லை" என்ற முறையில் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

  • "கவலை வேண்டாம், அலி சகோதரர்கள் சின்னச் சிறையிலும் நாம் பெரிய சிறையிலும் இருக்கிறோம். இரண்டு சிறைக் கதவுகளையும் உடைத்து விடுதலை செய்யும் சக்தி நம் கையில் இருக்கிறது!" என்று காந்தி மகான் கூறினார்.

  • -----------------------------------------------------------

      • 24. முழத்துண்டு விரதம்.

  • தமிழ் நாட்டுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கிய தொடர்புகள் சில உண்டு. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை நின்றவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். அந்த சத்தியாக்கிரஹப் போரில் தமிழ்நாட்டு வள்ளியம்மை உயிர்த்தியாகம் செய்து அழியாப் புகழ்பெற்றாள்.

  • ராவ்லட் சட்டத்தை எதிர்த்து எப்படி இயக்கம் நடத்துவதென்று மகாத்மா காந்தி யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் சென்னை வந்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி அகில இந்திய ஹர்த்தால் நடத்தவேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தங்கியிருந்த போது மகாத்மாவின் மனதில் உதயமாயிற்று.

  • இவற்றைக் காட்டிலும் மகாத்மாவின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் உண்டாக்கிய ஒரு சம்பவம் 1921 செப்டம்பரில் மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த போது நிகழ்ந்தது.

  • அந்தநாளில் பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் பிரசாரம் செய்வதற்காகச் செல்வோர் தங்கள் பிரசங்கத்துக்கு முக்கியமாகக் கையாண்ட விஷயம் ஒன்று உண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் இங்கிலீஷ்காரர்கள் துணிமூட்டையைத் தோளிலே சுமந்துகொண்டு இந்தியாவில் துணி விற்க வந்ததிலிருந்து பிரசங்கத்தைத் தொடங்குவார்கள். ஆங்கில நாட்டுத் துணியோடு இந்திய சுதேசித் துணி போட்டி போடாமலிருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் கையாண்ட முறைகளைச் சொல்வார்கள். இந்தியாவில் கைத்தறியில் உற்பத்தியான துணிகளின் மேன்மையைப் பற்றிப் பேசுவார்கள். டாக்கா மஸ்லின் துணியின் நயத்தைப்பற்றியும், ஒரு பீஸ் மஸ்லினை ஒரு மோதிரத்துக்குள் அடைத்த கதையைப் பற்றியும், அவுரங்க ஜீப்பின் குமாரி டாக்கா மஸ்லின் உடுத்திக்கொண்ட வரலாற்றைக் குறித்தும் விஸ்தாரமாகச் சொல்வார்கள். அத்தகைய அதிசயமான துணிகளை நெய்த கைத்தறிக்காரர்களின் கட்டை விரல்களை ஆங்கிலேயர் துண்டித்தெறிந்த அக்கிரமக் கொடுமையைப் பற்றி இரத்தம் கொதிக்கும்படி ஆத்திரமாய்ப் பேசுவார்கள்.

  • "இங்கிலீஷ் ராஜ்யம் இந்தியாவில் லங்காஷயர் துணி வியா பாரத்துக்காகவே ஏற்பட்டது. இப்போதும் லங்காஷயரின் நன்மையை முன்னிட்டே இந்தியா ஆளப்பட்டு வருகிறது. என்றையதினம் இந்தியர்கள் அன்னியத் துணியை வாங்குவதை அடியோடு நிறுத்துகிறார்களோ, அன்றைக்கே இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் மூட்டைகட்டி விடுவார்கள்!" என்று கூறுவார்கள்.

  • இவ்வாறெல்லாம் அந்தநாளில் காங்கிரஸ் வாதிகள் பிரசாரம் செய்ததில் பெரிதும் உண்மை இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

  • அதனாலேயே 1905-1906-ல் வங்காளத்தில் ஒரு தடவை சுதேசி இயக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுதேசி இயக்கத்தின் நோக்கம் பிரிட்டிஷ் துணிகளைப் பகிஷ்கரிப்பதுதான். இந்த இயக்கத்துக்கு அப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமானது பம்பாய்--ஆமதாபாத் ஆலை முதலாளிகளின் பேராசையாகும். சுதேசி இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆலைத் துணிகளின் விலைகளைக் கண்டபடி உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள்.

  • இதன் பலன் என்ன ஆயிற்று என்றால், கொஞ்ச காலத்துக்கெல்லாம் பொது மக்களில் பலருக்குச் சுதேசி இயக்கத்தின் பேரில் பற்று விட்டுப் போய்விட்டது.

  • இந்தப் பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் காந்தி மகான் நன்கு அறிந்திருந்தார். இந்தியாவின் அடிமைத்தனம் போக வேண்டுமானால். இந்தியர்கள் அன்னியத் துணி வாங்குவதையும் அணிவதையும் அடியோடு நிறுத்தியே யாகவே்ண்டும். ஆனால், முன்னொரு தடவை நடந்ததுபோல் ஆலைமுதலாளிகள் பொதுமக்களின் தலையில் கையை வைத்துக் கொள்ளை லாபம் தட்டுவதையும் தடுக்க வேண்டும். இதற்குச் சாதனமாக மகாத்மா காந்தி கைராட்டை இயக்கத்தைக் கைக்கொண்டார். கை ராட்டையில் நூல் நூற்று அந்த நூலைக்கொண்டு கைத்தறியில் நெய்த கதரையே உடுத்தவேண்டும் என்று சொன்னார். இப்படிக் கதர் உடுத்துவதை வற்புறுத்துவதால் ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கலாம். இது மட்டுமல்ல. மகாத்மாவின் வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்றக் கைராட்டையும் கதரும் தகுந்த உபகரணங்களாயிருந்தன. மகாத்மா காந்தி தற்கால நவநாகரிக வாழ்க்கையை வெறுத்தார். ஆடம்பர சுகபோக வாழ்க்கையை வெறுத்தார். கைராட்டையும் கதரும் எளிய வாழ்க்கை முறையின் சின்னங்களா யிருந்தன. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் உடலை உழைத்துப் பாடுபடவேண்டும் என்று மகாத்மா கருதினார். அப்படி எல்லாரும் உடல் உழைப்பைக் கைக்கொள்ளக் கைராட்டை நல்ல சாதனமாயிருந்தது. இயந்திர நாகரிகம் மனித சமூகத்தின் ஆத்மீக அழிவுக்குக் காரணமாகும் என்பது காந்திஜியின் கொள்கை. கைராட்டை இயந்திர நாகரிகத்தை எதிர்த்து நிற்பதற்கு ஆயுதமாயிருந்தது. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களில் வாழும் மக்களை மகாத்மா 'தரித்திர நாராயணர்'களாகக் கண்டார். அவர்களுடைய வறுமையை நினைத்து உருகினார். வருஷத்தில் ஆறு மாதம் கிராமவாசிகள் வேலையில்லாமலிருக்கிறார்கள் என்பதும் மகாத்மாவுக்குத் தெரிந்தது. லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு வேலையில்லாத நாட்களில் வேலை கொடுக்கக் கூடியது கைராட்டினம் ஒன்றுதான் என்பதை மகாத்மா கண்டார். அநாதை ஸ்திரீகளும் வயதான மூதாட்டிகளும் பிறரை அண்டாமலும் பட்டினி கிடக்காமலும் 'இஷ்டமுடன் தம் குடிசை நிழலிலிருந்து நூல் இழைத்துப் பிழைக்கலாம்' என்று கண்டார். இத்தகைய காரணங்களினால் கைராட்டினத்தை மகாத்மா காந்தி 'காமதேனு' என்று போற்றினார். அதைக் குறித்து இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தார்.

  • இந்தியா தேசத்தின் சிறந்த அறிவாளிகளில் சிலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டைப் பிரசாரம் பிடிக்கவில்லை. அவ்விதம் பிடிக்காதவர்களில் ஒருவர் மகாகவி ரவீந்திரநாத தாகூர். மகாத்மாவிடம் மகாகவி எத்தனையோ அபிமானமும் மரியாதையும் கொண்டிருந்தவர். 'மனித சமூகத்தை ரட்சிக்க அவதரித்த மகாபுருஷர்களில் ஒருவர் மகாத்மா காந்தி' என்று டாக்டர் தாகூர் பலமுறையும் தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் காந்திஜியின் கைராட்டைப் பிரசாரத்தை மகாகவி தாகூர் விரும்பவில்லை. இராட்டைப் பிரசாரத்தைப் "பிற்போக்கு இயக்கம்" என்று தாகூர் பகிரங்கமாகக் கூறிக் கண்டித்தார். "இயந்திரங்களினால் மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. காந்திஜி அந்த முன்னேற்றத்தை யெல்லாம் புறக்கணித்து இந்திய மக்களைப் பல நூறு வருஷம் பின்னால் கொண்டு போகப் பார்க்கிறார்" என்று டாக்டர் தாகூர் சொன்னார்.

  • காந்தி மகான் மகாகவி தாகூரைக் 'குருதேவ்' என்று போற்றி வந்தவர். தென்னாப்பிரிக்காவில் தம்முடன் டால்ஸ் டாய் பண்ணையில் வாழ்ந்தவர்களை இந்தியா வந்ததும் முதன் முதலில் தாகூரின் சாந்திநிகேதனுக்கே மகாத்மா அனுப்பினார் அல்லவா? ஆனபோதிலும் கைராட்டை இயக்கத்தைப் பற்றியவரையில் மகாத்மா காந்தி குருதேவரின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. "வானத்தில் ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டு பறக்கும் வானம்பாடிக்குப் பூமியிலுள்ள கஷ்டங்கள் எப்படித் தெரியும்? குருதேவர் தாகூர் மகாகவி; அவருக்கு ஏழைகளின் பட்டினிக் கொடுமை இத்தகையது என்று தெரியாது. தெரிந்திருந்தால் கைராட்டைதான் ஏழைகளின் காமதேனு என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்" என்று காந்தி மகான் அணுவளவும் தமது கொள்கையிலிருந்து வழுவாமல் தாகூருக்குப் பதில் கூறினார்.

  • 1921-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பூரணமாய் நடத்திவிட வேண்டும் என்று காந்திஜி கருதியிருக்கிறார். செப்டம்பரில் அத்திட்டம் நிறைவேறி விட்டால் அடுத்து வரும் மாதங்களில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி வருஷக் கடைசிக்குள் சுய ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று உத்தேசித்திருந்தார்.

  • வால்ட்டேரில் மௌலானா முகம்மதலி சிறைப்பட்டது மகாத்மாவின் சுயராஜ்ய தாகத்தைப் பன்மடங்கு ஆக்கியது. விதேசித் துணி பகிஷ்காரத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆர்வமும் பெருகிற்று. இந்த ஆர்வத்துடனே தான் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடன் மௌலானா ஆஜாத் சோபானி என்னும் முஸ்லிம் பெரியாரும் பிரயாணம் செய்தார்.

  • காந்திஜி கோஷ்டியார் ஏறிய ரயில் விழுப்புரம் சென்றது. விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி அவர்களுக்குக் கைராட்டையும் கதரையும் பற்றி எடுத்துச் சொல்ல விரும்பினார். ஆனால் அது சாத்தியப் படவில்லை. கூட்டத்தில் அவ்வளவு இரைச்சல். "உட்காருங்கோ!" "சத்தம் போடாதேங்கோ!" என்று நூற்றுக் கணக்கான குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன. ஜனங்கள் போட்ட இரைச்சலுடன் இரைச்சலை அடக்க முயன்றவர்களின் கூப்பாடும் சேர்ந்து ஏக இரைச்சலாகிவிட்டது. காந்திஜி ஒரு வார்த்தைகூட அக்கூட்டத்தில் பேச முடியவில்லை. ரயில் வண்டி மேலே சென்றது.

  • பறங்கிப் பேட்டையில் மிஸ் பீடர்ஸன் என்னும் ஐரோப்பிய அம்மையார் ஆரம்பித்திருந்த ஆசிரமத்துக்கு மகாத்மா அஸ்திவாரம் நாட்டினார். பிறகு கூடலூரில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்தார். கும்பகோணத்தில் மகாத்மாவைத் தரிசிக்க நாற்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவ்வளவு பேரும் காந்திஜியைப் பக்கத்தில் சென்று பார்க்க முயன்றார்கள். கூட்டத்தில் எழுந்த கூச்சலையும் கூப்பாட்டையும் சொல்லி முடியாது. கும்பகோணம் கூட்டத்திலும் மகாத்மாவினால் பேச முடியவில்லை. அங்கிருந்து திரிசிராப்பள்ளிக்குச் சென்றார்.

  • திரிசிராப்பள்ளியில் தேச பக்தர் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் அவர்களின் வீட்டில் மகாத்மாவுக்கு நிம்மதி கிடைத்தது. "மகாத்மாவுடன் ஏழு மாதம்" என்னும் நூலில் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பிரயாணத்தின் போது மகாத்மாவின் காரியதரிசியாகத் தொண்டு செய்தவர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ். அவர் மேற்கூறிய புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:-

  • "திரிசிராப்பள்ளி ஸ்டே ஷனை அடைந்ததும் எங்களுக்கெல்லாம் மிக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ரயில்வே நிலையத்தில் ஏராளனமான ஜனங்கள் கூடியிருந்தபோதிலும் இரைச்சல் என்பதே கிடையாது. அன்றைக்கு மகாத்மாவின் மௌன தினம். ரயிலை விட்டு அமைதியாக இறங்கி ஜாகைக்குப் போக முடிந்தது. இங்கே ஜனங்களிடம் காணப்பட்ட அமைதியும் ஒழுங்கும், வழியெல்லாம் ஜனக்கூட்டத்தின் அமளியினால் கஷ்டப்பட்டு வந்த எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ரயில்வே நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள டாக்டர் ராஜனுடைய வீட்டில் எங்களுக்கு ஜாகை. டாக்டர் ராஜன் அப்போது மாகாண காங்கிரசின் காரியதரிசி. அவருடைய வீடு ஏறக்குறைய ஓர் ஆசிரமமாக மாறியிருந்தது. தம்முடைய குடும்பத்தில் யாரும் இனிக் கடையில் துணி வாங்கக்கூடாது என்றும் அவரவர்களுடைய தேவைக்கு வேண்டிய நூல் அவர்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு விட்டதாக டாக்டர் ராஜன் மகாத்மாஜியிடம் தெரியப்படுத்தினார். டாக்டர் ராஜனுடைய வீடு திருச்சி நகரத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் இருந்தது. புயலிலும் சண்டமாருதத்திலும் அடிபட்டுத் திண்டாடிய கப்பல் ஒரு அமைதியான துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தால் பிரயாணிகள் எவ்வளவு ஆனந்தம் அடைவார் களோ அவ்வளவு ஆனந்தம் நாங்களும் அடைந்தோம்.

  • இவ்வாறு திருச்சியில் டாக்டர் ராஜனுடைய கண்டிப்பான பாதுகாப்பின் காரணமாக மகாத்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வும் அமைதியும் கிடைத்தது. ஆனால் அமைதி வெளியில் இருந்ததே தவிர அவருடைய மனதில் நிம்மதி ஏற்படவில்லை. விதேசித் துணியைப் பகிஷ்கரிப்பதிலும் கதரைப் பெருக்குவதிலும் அவருடைய மனதில் குடிகொண்டிருந்த தாபத்தை அவர் மக்களுக்கு வெளியிட விரும்பினார்.

  • ஆனால் ஜனங்களோ மகாத்மாவை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். மாபெருங் கூட்டம் கூடி மக்கள் போட்ட கூச்சலினால் மகாத்மாவின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழுவதே இல்லை.

  • "ஐயோ! நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றனவே. இவ்வளவு ஜனக்களும் வந்து கூட்டம் கூடிக் கூச்சல் போட்டு விட்டு என்னைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்களே? கைராட்டையைப் பற்றியும் கதரைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வாறு சொல்வேன்? என் இதயக் கொதிப்பை இவர்களுக்கு எவ்வாறு வெளியிடுவேன்?" என்று மகாத்மா யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

  • திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் பொதுக் கூட்டங்களில் ஓரளவு அமைதி நிலவியது. திருச்சியிலிருந்து மகாத்மா திண்டுக்கல்லுக்குப் போனார். அங்கே பழைய கதைதான். கூட்டம் பிரமாதம்; கூச்சலும் பிரமாதம். மகாத்மாவினால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குப் போனார். மதுரை மகாத்மாவுக்கு அளித்த வரவேற்பு மற்ற ஊர் வரவேற்புகளையெல்லாம் தூக்கி அடித்து விட்டது. அவ்வளவு லட்சக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். ஆனால் பொதுக் கூட்டத்தைப் பற்றிய வரையில் பழைய கதையேதான்! அமைதியை நிலைநாட்ட மதுரைத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். மகாத்மாவும் முயன்று பார்த்தார். ஒன்றும் பயன்படவில்லை. மகாத்மா பிரசங்கம் செய்யாமலே கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லும்படி நேர்ந்தது.

  • மதுரையில் அன்றிரவு மகாத்மாவின் ஜாகையில் அவரைப் பல பிரமுகர்கள் வந்து சந்தித்தார்கள். அவர்களுடன் மகாத்மா பொதுப்படையாக வார்த்தையாடிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய உள்ளம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. கதர் இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்குத் தகுந்த சாதனம் ஒன்றை அவர் மனம் தேடிக் கொண்டிருந்தது; அத்தகைய சாதனம் வேறு எந்த விதமாயிருக்க முடியும்? பிறருடைய தவறுகளுக்காகத் தாம் உண்ணா விரதம் இருந்து பிராயச்சித்தம் செய்து கொன்கிறவர் அல்லவா 'மகாத்மா? எனவே, மக்களுக்குக் கதரின் முக்கியத்தை உணர்த்தும்படியாகத் தாம் என்னதியாகத்தைச் செய்வது, என்ன விரதத்தை மேற்கொள்வது என்றுதான் அவர் உள்ளம் சிந்தனை செய்தது.

  • மகாத்மாவைச் சந்தித்துப் பேச வந்த பிரமுகர்களிள் ஒருவர் கதர் உடுத்தாமல் அந்நியத்துணி உடுத்திக்கொண்டு வந்தார். அவரைப்பார்த்து மகாத்மா "நீங்கள் என்னைப் பார்க்க வருகிறீர்களே? என்னைப் பார்த்து என்ன பயன்? நான் இவ்வளவு நாள் சொன்னபிறகும் விதேசித் துணி உடுத்தியிருக்கிறீர்களே? ஏன் கதர் அணியவில்லை?" என்று கேட்டார். "கதர் உடுத்த எனக்கு இஷ்டந்தான். ஆனால் கதர் கிடைக்கவில்லை;" என்றார் அந்தப் பிரமுகர்.

  • அதே நிமிஷத்தில் மகாத்மாவின் மனதில் அவர் தேடிக் கொண்டிருந்த சாதனம் உதயமாகி விட்டது. "ஆஹா! இவர் கதர் கிடைக்கவில்லை என்கிறார் நாமோ இடுப்பில் பத்துமுழ வேஷ்டி, மேலே இரண்டு சட்டை, குல்லா இவையெல்லாம் அணிந்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு கதர்த் துணியை நாம் அணிய வேண்டும்?" என்று தோன்றியது.

  • அதே சமயத்தில் தமிழ் நாட்டில் மகாத்மா கண்ட வேறொரு காட்சி நினைவுக்கு வந்தது. வடக்கேயெல்லாம் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள் கூட மேலே சட்டை அணிவது வழக்கம். தமிழ்நாட்டில் வயற்புறங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அரையில் முழத்துணியோடு வேலை செய்வது வழக்கம். "இது ஏன்?" என்று காந்திஜி தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கேட்டார். "ஒருதுணிக்கு மேலே இரண்டாவது துணி வாங்கவும் சட்டை தைக்கவும் அவர்களிடம் பணம் இல்லை" என்று பதில் வந்தது. அந்தப் பதில் மகாத்மாவின் மனதில் பதிந்து போயிருந்தது.

  • இவையெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, மகாத்மா காந்தி அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் காலையில் மகாத்மா எழுந்ததும் தம்முடன் பிரயாணம் செய்த சகாக்களை அழைத்தார்.

  • "இன்று முதல் நான் இடுப்பில் ஒரு முழ அகலமுள்ள துண்டு மட்டும் அணிவேன். குளிர் அதிகமான காலங்களில் போர்த்திக்கொள்ள ஒரு துப்பட்டி உபயோகிப்பேன். மற்றப்படி சட்டை, குல்லா எதுவும் தரிக்க மாட்டேன். இப்போதைக்கு இந்த விரதத்தை ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன். பிறகு உசிதம் போல் யோசித்து முடிவு செய்வேன்" என்றார்.

  • இவ்விதம் சொல்லிவிட்டு, பத்துமுழ வேஷ்டி--சட்டை-- குல்லா எல்லாவற்றையும் களைந்து வீசி எறிந்தார். ஒரு முழ அகலமுள்ள துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். தம்முடைய சகாக்களைப் பார்த்து "புறப்படலாம் காரைக்குடிக்கு!" என்று சொன்னார்.

  • மகாத்மாவின் சீடர்கள் கதி கலங்கிப் போனார்கள். இது ஒரு விபரீதமான விரதமாகவே அவர்களுக்குத் தோன்றியது. ஒரு மாதத்திற்கு இப்போது விரதம் எடுத்துக்கொண்டாலும் அதை மகாத்மா நிரந்தரமாகவே கொண்டு விடுவார் எந்று பயந்தார்கள்! அவர்களில் ஒருவர் ஓடிப்போய் ராஜாஜியையும் டாக்டர் ராஜனையும் அழைத்து வந்தார். ராஜாஜியும் டாக்டர் ராஜனும் எவ்வளவோ காரணங்களைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் மகாத்மா தமது உறுதியைக் கைவிட விரும்பவில்லை. அதன் பேரில், இத்தகைய விரதம் எடுத்துக் கொன்வதைக் கொஞ்சநாள் தள்ளியாவது போடும்படி ராஜாஜியும் டாக்டர் ராஜனும் வேண்டிக்கொண்டார்கள். அதற்கும் மகாத்மா இணங்கவில்லை.

  • விடாமல் வாதம் செய்த ராஜாஜியைப் பார்த்து மகாத்மா, "உங்களுடைய வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. ஆனால் நான் செய்வது தான் சரி என்பதில் எனக்குலவலேசமும் சந்தேகமில்லை" என்று சொன்னார்.

  • அன்று அதிகாலையில் மூன்று மணிக்குத் தாம் விழித்துக் கொண்டதாகவும், தூக்கமும் விழிப்புமாயிருந்த நிலையில் இந்த யோசனை தமக்குத் தோன்றியதாகவும், அது தம்முடைய அந்தராத்மாவின் கட்டளையென்றும், அதை மீற முடியாது என்றும் மகாத்மா தெரிவித்தார்.

  • பிறகு நடந்ததைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் எழுதியிருப்பதாவது:-

  • " மகாத்மாஜி இடுப்பில் மட்டும் ஒரு முழ அகலத் துணி ஒன்றை உடுத்திக் கொண்டு காரைக்குடிக்குப் புறப்படத் தயாரானார். மகாத்மாவையும் அவருடைய சகாக்களையும் ஏற்றிச் செல்வதற்கு வாசலில் நாலு மோட்டார் வண்டிகள் தயாராகக் காத்திருந்தன. மதுரைமா நகரின் ஜனங்களும் அதிகாலையிலேயே எழுந்து மகாத்மாவைத் தரிசிப்பதற்குச் சாலையின் இரு புறமும் வந்து மொய்த்துக்கொண்டு நின்றார்கள். மகாத்மா அரைத் துணி ஒன்றுடனே, சட்டை குல்லா அங்க வஸ்திரம் ஒன்றுமில்லாமல், மோட்டார் வண்டியில் போய் ஏறிய போது, அவருடைய சகாக்களும் சீடர்களும் உணர்ச்சி வசப் பட்டுத் தலை குனிந்து நின்றார்கள். திறந்த மோட்டார் வண்டி அதன் பிரயாணத்தைத் தொடங்கிய போது உதய சூரியனின் செங்கிரணங்கள் மகாத்மாவின் மார்பிலும் தலையிலும் விழுந்தன.மகாத்மாவின் தாமிர வர்ணத் திருமேனி ஒரே ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது.

  • பின்னர் தமிழ்நாடெங்கும் மகாத்மா காந்தி முழத்துண்டு அணிந்தே பிரயாணம் செய்தார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த ஜனங்கள் பரவசமடைந்தார்கள். மகாத்மா வின் பிரசங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இனி இல்லை. சட்டை அணியாத மகாத்மாவின் புனிதத் திருமேனியைத் தரிசித்த உடனேயே ஜனங்கள் மகாத்மாவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கை ராட்டைக்கும் கதருக்கும் மகாத்மாவின் புதிய கோலமே மிகச்சிறந்த பிரசார சாதனமாயிற்று, ஆயிரம் கட்டுரைகளினாலும் பதினாயிரம் பிரசங்கங்களினாலும் சாதிக்க முடியாததை மகாத்மாவின் தவக்கோலம் சாதித்து விட்டது.

  • -----------------------------------------------------------

      • 25. இதய தாபம்

  • முழத்துண்டு விரதம் கொண்ட காந்தி மகான் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குப் போனார். காந்திஜியின் விரதத்தைப் பற்றிய செய்தி அவருக்கு முன்னாலேயே திருநெல்வேலிக்குச் சென்று விட்டது. அதை அறிந்த திருநெல்வேலி மக்கள் பக்தி பரவசமாயிருந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களைக் கட்டுக்குள்ளே வைப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். ஆகையால் பெருந் திரளான மக்கள் கூடியிருந்தும் பொதுக் கூட்டத்தில் அமைதியும் நிசப்தமும் நிலவியது. இதைக் குறித்துக் காந்திஜி திருநெல்வேலி ஜனங்களைப் பெரிதும் பாராட்டினார். “இந்தமாதிரி ஒழுங்கும் கட்டுப்பாடும் இந்தியா தேசமெங்கும் நிலை நாட்டப் பட்டு விட்டல், நம்முடைய இயக்கம் வெற்றி அடைவது பற்றி எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை” என்று மகாத்மா கூறினார். பின்னர் இராட்டையின் தத்துவத்தைப் பற்றித் தம்முடைய கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.

  • காந்திஜி ஒரு ஊருக்குப்போய் ஜாகையில் இறங்கியவுடனே அவரைப் பார்ப்பதற்கு அந்த ஊர்ப் பிரமுகர்கள் பலர் வருவது வழக்கம். அப்படி வருகிறவர்கள் எல்லாரும் காந்திஜியிடம் பக்தி கொண்டவர்கள் என்றோ அவருடைய போதனைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள் என்றோ சொல்ல முடியாது. “கந்திஜியைப் பார்த்துப் பேசினேன்” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்காகவே பலர் வந்து சேர்வார்கள். இப்படிப்பட்ட வீண் பெருமைக்காரர்கள் வந்து மகாத்மாவைப் பார்த்துப் பேசுவதற்குத் திருநெல்வேலியில் ஒரு தடை ஏற்பட்டது.

  • மௌலானா ஆஸாத் ஸோபானி காந்திஜியுடன் பிரயாணம் செய்தார் அல்லவா? காந்திஜி முழத்துண்டு விரதம் கொண்டது பற்றி மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும்போது மௌலானா ஆஸாத் யோசனை செய்தார். இஸ்லாமிய மதக் கொள்கையின்படி இன்றியமையாத உடையை மட்டும் அணிந்து கொண்டு மற்றதை யெல்லாம் அவரும் புறக் கணித்தார். இடுப்பில் லுங்கியும் மேலே 'வெயிஸ்ட் கோட்"டும் அணிந்துகொண்டு அசல் முஸ்லிம் 'பக்கிரி'யைப் போல் தோற்றம் கொண்டார். திருநெல்வேலியில் காந்திஜி தங்கிய ஜாகையில், அவர் தங்கியிருந்த அறைக்கு வெளிப்புறத்து அறையில் இவர் உட்கார்ந்து கொண்டார். மகாத்மாவைப் பார்க்க வருகிறவர்களிடம், "உங்கள் உடம்பின் மேல் உள்ள விதேசித் துணிகளைக் இங்கே களைந்து எறிந்துவிட்டு உள்ளே மகாத்மாவைப் பார்க்கப் போங்கள்!" என்று சொன்னார்.

  • வந்தவர்களில் சிலர் மனப்பூர்வமாக விதேசித் துணிகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். ஒரு சிலர் வேறு வழியில்லாத படியால் மனமின்றிக் கொடுத்தார்கள். இன்னும் சிலர் விதேசித் துணிகளைக் கொடுக்க மனமில்லாமல் "மகாத்மாவைப் பார்க்கவேண்டாம்" என்று திரும்பி ஓடியே போய்விட்டார்கள். இவ்வாறு வீணர்கள் வந்து மகாத்மாவின் ஓய்வைக் கெடுப்பதற்கு ஒரு முட்டுக்கட்டை திருநெல்வேலியில் ஏற்பட்டது.

  • விதேசித் துணிகளைத் தியாகம் செய்யத் துணிந்து காந்திஜியைத் திருநெல்வேலியில் வந்து பார்த்தவர்களில் ஒருவர் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னை மாகாணத்தில் தீண்டா வகுப்பார் அநுபவிக்கும் இன்னல்களைப்பற்றி மகாத்மாவிடம் எடுத்துச் சொன்னார். தீண்டாதார் ஹிந்துக்களா யிருந்த போதிலும் அவர்கள் ஹிந்து ஆலயங்களில் விடப்படுவதில்லை யென்ற அநீதியைப் பற்றி உருக்கமாகக் கூறினார். இந்த அநீதியைப் போக்குவதற்காகத் திருவாங்கூரில் சில சீர்திருத்த வாதிகள் ஆலயப் பிரவேச இயக்கம் ஆரம்பிக்க விரும்புவதாவும் அவர் தெரிவித்தார்.

  • "என்ன மாதிரி இயக்கம் ஆரம்பிக்க உத்தேசம்?" என்று காந்திஜி கேட்டார். "முக்கியமான கோவில் ஒன்றில் உற்சவம் நடக்கப் போகிறது. அச்சமயம் ஒரு பெரிய தீண்டார் கும்பலை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் பிரவேசிப்போம். அதை அரசாங்க அதிகாரிகளும் மற்ற ஹிந்துக்களும் தடுத்தாலும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. பலவந்தமாகப் பிரவேசித்தே தீர்வோம்" என்றார் வந்தவர்.

  • "கலகம் நேர்ந்தால்?" என்று மகாத்மா கேட்டார். "கலகம் நேர்ந்தாலும் நேரட்டும் அதற்காக நாம் என்ன செய்வது?" என்றார் வந்த மனிதர். அது சரியான மனோபாவம் அல்ல என்பதை மகாத்மா காந்தி அவருக்கு எடுத்துக்காட்டினார்.

  • "தீண்டாமை பெரிய அநீதிதான். ஹிந்துக்களில் ஒரு பகுதியாரை ஆலயங்களில் விடுவதில்லை என்பது பெருங்கொடுமைதான். ஆனால் அநீதியையும் கொடுமையையும் பலாத்காரத்தினால் போக்க முடியாது. தீண்டாமை போக வேண்டுமானால் சாதி ஹிந்துக்களின் மனம் மாற வேண்டும். பலாத்காரத்தினால் சாதி ஹிந்துக்களின் மனதை மாற்ற முடியாது. குரோதமும் துவே ஷமும் அதிகமாகும். ஆகையால் ஆலயங்களுக்குள் போவதாயிருந்தால், இரண்டு பேர் அல்லது மூன்று பேராகப் போங்கள். பலாத்காரத்தைக் கையாள வேண்டாம். அதிகாரிகள் சிறைக்கு அனுப்பினால் செல்லுங்கள் இதுதான் சரியான முறை. இப்போது நான் இந்தியாவின் விடுதலையைக் கருதி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் தேச விடுதலை இயக்கம் முடிவடைந்த பிறகு நானே ஆலயப் பிரவேச இயக்கத்தையும் முன்னின்று நடத்துவேன்!" என்றார் காந்திமகான்.

  • தீண்டாமையின் கொடுமையைப் பற்றி ஏற்கனவே மகாத்மாவுக்குத் தெரிந்துதானிருந்தது. தீண்டாமை விலக்கைக் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். ஆயினும் மேற்படி சம்பாஷணையின் பயனாக மகாத்மாவின் மனம் தீண்டாமை விலக்குப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பிற்பாடு மகாத்மா காந்தி பேசிய இடங்களில் எல்லாம் தீண்டாமை விலக்கைப் பற்றியும் அதிகமாக வற்புறுத்திப் பேசலானார்.

  • பின்னால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைக்க நேர்ந்தபோது, காந்திஜி தீண்டாமை விலக்கிலும் ஆலயப் பிரவேச இயக்கத்திலும் பூரணமாகக் கவனம் செலுத்தியதை நாம் அறிவோம் அல்லவா? காந்தி மகாத்மாவின் பெரு முயற்சியினால் ஹிந்து சமூக்துக்கு ஏற்பட்டிருந்த தீண்டாமை என்னும் நோய் நம்முடைய காலத்திலேயே தொலைந்து ஒழிந்து போனதைப் பார்த்தோம்.

  • திருநெல்வேலியிலிருந்து மகாத்மா திரும்பி மதுரை- திருச்சி வழியாக ஈரோட்டுக்கு வந்தார். ஈரோட்டில் அச்சமயம் சிறந்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய ஸ்ரீ ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்களின் இல்லத்தில் தங்கினார். ஈரோட்டில் சிற்றாற்றாங்கறையில் ஒரு விசாலமான ஆலமரத்தின் அடியில் பொதுக்கூட்டம் மிக அமைதியாக நடந்தது. பல சமூகங்களின் சார்பாக வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழைகளில் உபசாரப் பத்திரங்கள் மகாத்மாவுக்கு அளிக்கப்பட்டன. வெள்ளிப் பெட்டிகளையெல்லாம் பொதுக்கூட்டத்தில் ஏலம் போட்டுக் கிடைத்த பணம் திலகர் சுயராஜ்ய நிதியில் சேர்க்கப் பட்டது. மகாத்மாவுக்கு எங்கே எந்த விதமான பரிசுப் பொருள் கிடைத்தாலும் அங்கேயே ஏலம் போட்டு ஏதேனும் ஒரு பொது நிதியில் சேர்த்துவிடுவது வழக்கம்.

  • பொது நிதிகள் சேர்ப்பதில் மகாத்மாவுக்கு இணையான ஆற்றல் வாயந்தவர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் பல பெண்மணிகள் மகாத்மாவை தரிசிக்கப் பக்தியுடன் வருவார்கள். தமிழ்நாட்டுப் பெண்மணிகள் நிறைய நகைகள் அணிந்து கொண்டிருப்பது வழக்கமல்லவா? தம்மைப் பார்க்கவரும் பெண்மணிகளைப் பார்த்து "இந்த நகைகளை எதற்காகச் சுமக்கிறீர்கள்? என்னிடம் கழற்றிக் கொடுத்து விடுங்கள். நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறேன்" என்று காந்திஜி கூசாமல் கேட்டு விடுவார். இந்த வழக்கத்தை அறிந்த பிறகு பெண்மணிகள் மகாத்மாவின் அருகில் போய் அவரைத் தரிசித்துப் பேச வேண்டும் என்ரு ஆசைப்படுவது குறைந்து போயிற்று.

  • ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போய்ப் பிறகு காந்திஜி சேலத்துக்குப் போன போது ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவராயிருந்தார். அவர் தமது குடும்பத்துடன் மகாத்மாவைப் பார்ப்பதற்கு வந்தார். டாக்டர் நாயுடுவின் குமாரி, ஏழு வயதுப் பெண். கையில் பொன் வளையல்கள் அணிந்திருந்தாள். மகாத்மாஜி அதைப் பார்தததும் "இந்த வளையல்கள் உனக்கு என்னத்திற்கு? எனக்குக் கொடுத்துவிடு!" என்றார். மகாத்மா கூறியதை ஸ்ரீ நாயுடு தமிழில் குழந்தைக்குச் சொன்னார். குழந்தை உடனே வளையல்களைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். "நான் விளையாட்டாகக் கேட்டேன். அம்மா! நீயே வைத்துக்கொள்!" என்று மகாத்மா பலதடவை சொல்லியும் அந்தக் குழந்தை கேட்கவில்லை. மகாத்மாவிடமிருந்து வளையல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.

  • நாகபுரி காங்கிரஸின் அக்கிராசனர் சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் அல்லவா நியாயமாக, அந்த வருஷத்தில்காங்கிரஸ் வேலைகள் எல்லாம் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெறவேண்டும். அதற்குப் பதிலாக மகாத்மாவிடமும் அவருடைய சகாக்களிடமும் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு வந்துவிட்டது. எனினும், பெருந் தன்மைமிக்க மகாத்மா சேலத்தில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார்.

  • சேலம் நகர சபையார் காந்தி மகாத்மாவுக்கு மிக வேலைப் பாடமைந்த சந்தன மரப்பெட்டி ஒன்றில் உபசாரப் பத்திரம் வைத்துக்கொடுத்தார்கள். அந்தச் சந்தன மரப்பெட்டி அப்போது சென்னைக் கவர்னராக வந்திருந்த லார்ட் வில்லிங்டனுக்காக செய்யப்பட்டது. ஆனால் அதை வில்லிங்டனுக்கு கொடுப்பதற்குள்ளே ஒத்துழையாமை இயக்கம் தோன்றிவிட்டது! தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தலைமை வகித்த ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் ஜில்லா அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்றது. மற்ற எந்தத் தமிழ் நாட்டு நகரத்தைக்காட்டிலும் சேலத்தில் அதிகமான வக்கீல்கள் தங்கள் தொழிலை நிறுத்தி மகாத்மாவின் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அப்படிப்பட்ட சேலத்தில் நகரசபையும் தேசீய மனப்பான்மையும் கொண்டிருந்தது. கவர்னருக்கு வரவேற்பு அளிக்கும் உத்தேசத்தை அடியோடு கைவிட்டுச் சேலம் நகர சபையார் கவர்னருக்காகத் தயாரித்திருந்த சந்தனப் பெட்டியை மகாத்தமா காந்திக்குக் கொடுத்ததில் வியப்பில்லையல்லவா?

  • லார்டு வில்லிங்டனுக்கு அந்தப் பெட்டியைக் கொடுத் திருந்தால் லேடி வில்லிங்டன் இந்தியாவிலிருந்து கொண்டு போன எத்தனையோ விலையுயர்ந்த பொருள்களுடன் அதுவும் இங்கிலந்துக்குப் போயிருக்கும். ஆனால் மகாத்த்மாவுக்குக் கொடுத்த பெட்டி சேலத்திலேயே ஏலத்துக்கு விடப்பட்டு விட்டது.

  • தமக்காகச் செய்த பெட்டியை மகாத்மா பெற்றுக் கொண்டார் என்ற விவரம் லார்டு வில்லிங்டனுக்குத் தெரியாமலிருக்க முடியுமா? தெரிந்துதானிருக்கும். அதை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

  • ஆனால் ஒன்று தெரியும். லார்டு இர்வின் 1931-ஆம் வருஷக் கடைசியில் வைஸராய் பதவியிலிருந்து விலகி இங்கிலாந்து போனதும் லார்டு வில்லிங்டன் அந்தப் பதவிக்கு வந்து சேர்ந்தார். லார்டு வில்லிங்டன் செய்த முதற்காரியம் லண்டன் வட்டமேஜை மகாநாட்டிலிருந்து திரும்பி வந்த மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதுதான்! மகாத்மா காந்திக்கு பேட்டி கொடுக்கவும் லார்டு வில்லிங்டன் இணங்க வில்லை. “சட்ட மறுப்பைக் கைவிட்டுச் சரணாகதி அடைந்தால் தான் பேட்டி கொடுக்கமுடியும” என்றார். ‘அதற்கு இஷ்டம் இல்லாவிட்டால் போங்கள் சிறைக்கு என்றார். இதைப்பற்றிப் பின்னால் விவரமாகப் பார்ப்போம்.

  • சேலத்தில் காங்கிரஸ் ஊழியர்கள் பலர் மகாத்மாவைப் பேட்டி கண்டார்கள். மேலே நடக்கவேண்டிய காரியங்களைப் பற்றிக் கேட்டார்கள். "இங்கிருந்து நேரே நான் குஜராத்துக்குப் போகிறேன். அடுத்த மூன்று மாதமும் குஜராத்தில் தான் இருப்பேன். சாத்வீகச் சட்ட மறுப்புப் போரை ஆரம்பிப்பதற்குக் குஜராத்தைத் தயார் செய்வேன்!" என்று மகாத்மா காந்தி சேலம் காங்கிரஸ் ஊழியர்களிடம் கூறினார்.

  • "ஒரு வருஷத்தில் சுயராஜ்யம்" என்று மகாத்மா கூறினார் அல்லவா? அந்தத் தவணை நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க மகாத்மாவின் இதய தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வேறு எந்தக் காரியத்திலும் அவருடைய மனது செல்லவில்லை. சுயராஜ்யத்துக்காக நடத்த வேண்டிய இறுதிப் போரைப் பற்றியே மகாத்மா காந்திஜியின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது.

  • -----------------------------------------------------------

      • 26. பர்தோலி – ஆனந்த்

  • இந்தியாவின் சுதந்திர சரித்திரத்திலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் "பர்தோலி" என்னும் பெயர் மிகவும் முக்கியமானது. பாரத நாட்டுக்குப் பர்தோலிதான் விடுதலை தேடித்தரப் போகிறது என்று 1921 - ஆம் ஆண்டின் இறுதியில் அனைவரும் நம்பியிருந்தார்கள். காந்திஜி இந்தியாவின் சுதந்திரத்துக்கான இறுதிப் போரைப் பர்தோலியிலேதான் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானித்திருந்தார். மகாத்மா எண்ணியபடி பர்தோலியில் இறுதிப் போர் நடைபெறவில்லை. ஆயினும் பர்தோலியின் மூலமாகக் காந்தி மகானுடைய சத்திய ஜோதி சுடர்விட்டு ஒளிர்ந்தது. இது எப்படி என்பதை இந்த அத்தியாயத்திலும் வரும் அத்தியாயங்களிலும் பார்க்கப் போகிறோம்.

  • செப்டம்பர் மாதக் கடைசியில் சேலத்துக் காங்கிரஸ் தொண்டர்களிடம் காந்திஜி "வருகிற மூன்று மாதமும் நான் குஜராத்திலேயே இருப்பேன்" என்று சொன்னார் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? - ஒத்துழையாமைத் திட்டம் மகாத்மா காந்தி எதிர்பார்த்தபடி பூரணமாக நிறைவேறவில்லை. வக்கீல்களில் நூற்றுக்கு ஒருவர் தான் தொழிலை நிறுத்தினார்கள். மாணவர்களிலும் நூற்றுக்கு ஒருவர் வீதந்தான் சர்க்கார் கல்வி நிலையங்களைப் பகிஷ்கரித்தார்கள். சட்டசபைகளிலோ, அதிகார வர்க்கத்தார் சொல்லுகிறபடி கையைத் தூக்கும் அங்கத்தினர்கள் நிறைந்திருந்தார்கள். ஸர். திவான்பகதூர், ராவ் பகதூர் பட்டதாரிகளில் மிக மிகச் சிலரே பட்டங்களைத் துறந்தார்கள். நாடெங்கும் மகாத்மா சென்ற இடங்களில் எல்லாம் அன்னியத் துணிக் குவியல்கள் எரிக்கப்பட்டன. ஆயினும் மகாத்மா காந்தி விரும்பிய அளவு இராட்டையும் கதர் இயக்கமும் பரவவில்லை.

  • இவ்விதம் மகாத்மா காந்தி கூறிய திட்டங்களைச் சரிவர நிறைவேற்றாமலிருந்த போதிலும், நாடெங்கும் பொதுமக்கள் போக்குக்கும் மகாராஷ்டிரத் தலைவர்களின் மனப் போக்குக்கும் இருந்த வேற்றுமை நன்கு வெளியாயிற்று. மகாத்மா தயாரித்திருந்த அறிக்கையை வரி வரியாகவும் வார்த்தை வார்த்தையாகவும் ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸ்ரீ கேல்கர், ஸ்ரீ ஜயக்கர், டாக்டர் மூஞ்சே ஆகியவர்கள் ஆட்சேபித்தார்கள். காந்திஜியின் கட்சியைத் தாங்கி நின்று மேற்படி ஆட்சேபங்களுக் கெல்லாம் பளிச்சுப் பளிச்சென்று ராஜாஜி பதில் சொன்னார். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவும் ஒருவாறு சமரசப்படுத்த முயன்றார்கள். கடைசியாக, சிற்சில மாறுதல்களுடன் மகாத்மா காந்தி தயாரித்த அறிக்கை எல்லாத் தலைவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

  • பலம் பொருந்திய பிரிட்டிஷ் சர்க்காருடன் மகாத்மா ஒரு மகத்தான இறுதிப் போராட்டத்தைத் தொடங்க யத்தனித்துக் கொண்டிருந்தார். இரவு பகல் இருபத்துநாலு மணி நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய தலைவர்கள் சிலர் சில்லறை ஆட்சேபங்களையெல்லாம் கிளப்பிக்கொண்டிருந்தது மகாத்மாவின் மனதை ஓரளவு புண்படுத்தியது. ஆயினும் இதைப் பற்றி அதிகமாக நினைப்பதற்குச் சாவகாசம் இருக்கவில்லை. ஏனெனில் அன்றைய தினமே, "காந்திஜியைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி ஒன்று பரவியது. இது காந்திஜியின் காதுக்கும் எட்டியது. "அலி சகோதரர்கள் செய்த அதே குற்றத்தை நானும் செய்கிறேன்" என்று மகாத்மா காந்தி சொல்லிவிட்டுத் தமிழ் நாட்டில் அதே பேச்சைப் பேசியிருந்தார் அல்லவா? ஆகையால் தம்மைக் கைது செய்யலாம் என்ற வதந்தியைக் காந்திஜி நம்பவேண்டியதாக இருந்தது. ஆகவே, "என்னைக் கைது செய்தால்" என்னும் தலைப்புப் போட்டு அன்றிரவே "எங் இந்தியா" வுக்கு ஒரு கட்டுரை எழுதினார்.

  • ஆனால் கைது செய்யப்படுவதற்காகப் பம்பாயிலேயே காத்திருக்க மகாத்மா விரும்பவில்லை. அவர் போட்டிருந்த திட்டத்தின்படி மறுநாள் காலையில் ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். கொலாபா ஸ்டேஷனில் எண்ணற்ற ஜனங்கள் வந்திருந்து மகாத்மாவை வழி அனுப்பினார்கள். வந்திருந்தவர்கள் அவ்வளவு பேர் தலையிலும் வெள்ளைக் கதர்க் குல்லா (காந்தி குல்லா) விளங்கியது கண்டு மகாத்மா திருப்தியடைந்தார். ஆயினும் மக்களுடைய இந்த உற்சாக மெல்லாம் நல்ல முறையில் உபயோகப்பட்டு நல்ல பலனை அளிக்கவேண்டுமே?

  • பம்பாயிலிருந்து ஆமதாபாத் சென்று சில தினங்கள் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் மகாத்மா தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே குஜராத்தின் பற்பல பகுதிகளிலும் நடந்து வரும் வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ளலானார். ஆங்காங்கு வேலை செய்து கொண்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் ஆசிரமத்துக்கு வந்து மகாத்மாவுக்கு நிலைமையை அறிவித்தார்கள். இப்படி வந்தவர்களில் இருவர் சூரத் நகரத்திலிருந்து வந்தவர்கள். ஒருவருடைய பெயர் கல்யாண்ஜி. இன்னொருவரின் பெயர் தயாள்ஜி. இந்த இரண்டு பேரும் மகாத்மாவின் பரம பக்தர்கள். தேசத்துக்காகப் பரிபூரணத் தியாகம் செய்தவர்கள். ஸ்ரீ தயாள்ஜி தம்முடைய சொத்து முழுவதையும் (ஒரு ரூபாய் கூடத் தமக்கென்று வைத்துக் கொள்ளாமல்) திலகர் சுயராஜ்ய நிதிக்குக் கொடுத்து விட்டவர். இவர் சூரத் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். ஸ்ரீ கல்யாண்ஜி மேற்படி கமிட்டியின் காரியதரிசி. இருவரும் சூரத்தில் இரண்டு "சுயராஜ்ய ஆசிரமங்கள்" நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பல இளைஞர்கள் தேசத் தொண்டுக்குப் பயிற்சி செய்விக்கப் பட்டார்கள். பயிற்சி முடிந்ததும் அத்தொண்டர்கள் ஜில்லாவின் பலபகுதிகளிலும் வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டு வந்தார்கள்.

  • இவ்வளவு அருமையான வேலை செய்து வந்த தயாள்ஜியும் கல்யாண்ஜியும் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா திரும்பி வந்த செய்தி அறிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். சூரத் ஜில்லாவில் நடந்திருக்கும் நிர்மாண வேலைகளைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். முக்கியமாக, சூரத் ஜில்லாவைச் சேர்ந்த பர்தோலி தாலுகாவில் மகாத்மாவின் நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி யிருக்கின்றன வென்றும், அங்கே பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

  • ஆனால் கல்யாண்ஜி, தயாள்ஜி இவர்களுடன் தீவிரமாகப் போட்டியிட இன்னொரு மனிதர் முன்வந்தார். அவர் பெயர் அப்பாஸ் தயாப்ஜி. அவர் தொண்டு கிழவர். பரோடா சமஸ்தான ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து விலகியவர். எல்லையற்ற தேசபக்தி வாய்ந்தவர்; காந்திஜியிடம் இணையில்லா அன்பு கொண்டவர்; இவர் கெயிரா ஜில்லாவில் ஆனந்த் என்னும் தாலுகாவில் பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை முதன் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். மகாத்மாவிடம் அன்பு நிறைந்த கோபத்துடன் அப்பாஸ் தயாப்ஜி பேசினார். அவர் கூறியதாவது:-

  • "நீங்கள் கூறிய நிபந்தனையெல்லாம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் ஏதாவது நிபந்தனை உண்டானால், சொல்லி விடுங்கள். எல்லாவற்றையும் இப்போதே ஒரேயடியாகச் சொல்லி விடுங்கள். புதிய புதிய நிபந்தனைகளை நினைத்து நினைத்துக் கொண்டு சொல்லாதீர்கள். நீங்கள் இதுவரையில் சொன்ன காரியம் எதை நாங்கள் நிறேவேற்ற வில்லை? திலகர் சுயராஜ்ய நிதிக்கு என்ன பணம் கேட்டீர்களோ, அதைக் கொடுத்து விட்டேன். என்னைப் பாருங்கள்! வயது எனக்கு எழுபத்தைந்துக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் நீங்கள் சொன்னதற்காக நானே இராட்டையில் நூல் நூற்கிறேன். முரட்டுக் கதர்த்துணி உடுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனந்த் தாலுகாவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் போனேன். அப்படிப் போனதினால் என் கிழ உடம்பிற்குள்ளேயிருக்கும் எலும்புகள் எல்லாம் இன்னும் வலிக்கின்றன. ஆயினும் நான் பொருட்படுத்தவில்லை. கிராமங்களில் ஜனங்கள் அவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். இன்னும் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறார்கள். நீங்களே நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள். சால்ஜாப்பு மட்டும் சொல்ல வேண்டாம். தள்ளிப் போட வேண்டாம். மூன்று வருஷத்துக்கு முன்னால் கெயிரா ஜில்லாவில் நீங்கள் வரிகொடா இயக்கம் ஒரு தடவை நடத்தினீர்கள். ஆகையால் கெயிரா ஜனங்கள் ஏற்கெனவே உங்கள் கொள்கைகளை அறிந்திருக்கிறார்கள். உங்கள் முறைகளில் பயிற்சி பெற்றிருக் கிறார்கள். ஆகையால் கெயிரா ஜில்லாவுக்குத்தான் இப்போது நீங்கள்ல் முதல் பெருமையைக் கொடுக்க வேண்டும். ஆனந்த் தாலுகாவில்தான் பொது ஜனச் சட்ட மறுப்பை முதலில் ஆரம்பிக்க வேண்டும்.

  • அப்பாஸ் தயாப்ஜி இவ்விதம் பேசியபோது குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் தொண்டர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களுடைய மனமெல்லாம் உருகி விட்டன. வாழ்க்கையில் எவ்வளவோ உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்ந்த இம்மனிதர், இவ்வளவு தள்ளாத வயதிலும், சிறைபுகவும் கஷ்டப்படவும் தயாராக முன் வந்திருப்பதை நினைத்து வியந்தார்கள்.

  • ஆனால் காரியத்திலேயே கண்ணாயிருந்த சூரத்காரர்கள் விட்டுக்கொடுத்து விடவில்லை. அவர்கள் பர்தோலியிலேதான் சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஸ்ரீ கல்யாண்ஜி கூறியதாவது:-"ஆங்கிலேயர் முதன் முதலில் சூரத் வழியாகத்தான் இந்தியாவுக்குள் புகுந்தார்கள். சூரத்திலேதான் முதன் முதலில் அவர்கள் வியாபாரக் கிடங்குகள் ஏற்படுத்திக் கொண்டு கோட்டையும் கட்டிக் கொண்டார்கள். இங்கிருந்துதான் அவர்களுடைய வியாபாரம் பெருகிற்று; அரசியல் ஆதிக்கமும் பரவிற்று. ஆகையால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முடிவு செய்யும் கடைசி இயக்கத்தைச் சூரத் ஜில்லாவில் தொடங்குவதுதான் நியாயம். விஷம் எந்த வழியாக ஏறியதோ, அந்த வழியாகத்தான் இறங்க வேண்டும் இங்கிலீஷ்காரர்கள் எந்த வாசல் வழியாக முதலில் நுழைந்தார்களோ, அந்த வாசல் வழியாகவே அவர்களை வெளியேற்ற வேண்டும். சூரத் அப்போது செய்த பாவத்துக்கு இப்போது பிராயச் சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் கூறிய எல்லாவித நிபந்தனைகளையும் பர்தோலியில் நிறைவேற்றியிருக்கிறோம். நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்."

  • ஸ்ரீ கல்யாண்ஜியின் வாதமும் அவருடைய பிடிவாதமும் எல்லாருடைய மனதையும் கவர்ந்தன. கடைசியில் மகாத்மா காந்தி சொன்னதாவது:- "ஆகட்டும், நான் நேரில் வந்து பர்தோலி, ஆனந்த் இரண்டு தாலுகாக்களையும் பார்க்கிறேன். பார்த்த பிறகு, எந்தத் தாலுகா அதிகத் தகுதி பெற்றிருக்கிறதோ அங்கே இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இரண்டு தாலுகாக்களும் தயாராயிருந்தால் இரண்டிலும் ஆரம்பித்து விடுவோம்."

  • இவ்விதம் இரு தரப்பாரும் திருப்தி யடையும்படி மகாத்மா பதில் கூறியதுடன், தாம் வந்து பார்ப்பதற்குள்ளே இன்னும் தீவிரமாக வேலை செய்து வைக்கும்படியும் சொல்லி அனுப்பினார்.

  • -----------------------------------------------------------

      • 27. தாழி உடைந்தது!

  • 1921 - ஆம் வருஷத்தின் முடிவுக்குள் இந்தியாவின் விடுதலைக்காக ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க மகாத்மா விரும்பினார். அந்தப் போராட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு என்னும் ஆயுதத்தை உபயோகிக்க எண்ணியிருந்தார். ஆனால் இந்த ஆயுதத்தை உபயோகிப்பது நெருப்புடன் விளையாடுவதைப்போல் கடினமானது என்பதைக் காந்தி மகான் அறிந்திருந்தார். ஆகையால் எல்லாவிதமான முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள அவர் விரும்பினார்.

  • அந்த நாளில் தேசமெங்கும் தேசீய உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது. எனவே பர்தோலி - ஆனந்த் தாலுகாக்களில் மகாத்மா பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்தவுடனே நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உற்சாகிகள் அந்த இயக்கத்தை ஆரம்பித்து விடலாம். ஆனால் பர்தோலி - ஆனந்தில் பொது ஜனங்கள் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். அப்படி தயார் செய்யப் படாத இடங்களில் சட்ட மறுப்பு ஆரம்பித்து விட்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.

  • ஆகையால், சட்டமறுப்பு சம்பந்தமான நிபந்தனைகளை ஐயமறத் தேசத்துக்கு அறிவித்து விட வேண்டியது அவசியம் என்று காந்திஜி கூறினார். இதற்கு ஒரு சந்தர்ப்பம் நவம்பர் 4 - ஆம் தேதி டில்லியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கிடைத்தது.

  • சட்டமறுப்பு சம்பந்தமாக முடிவான தீர்மானம் செய்வதற்காகவே இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டது. முதல் நாள் காரியக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மகாத்மா தயாரித்திருந்த நகல் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இந்த நகல் தீர்மானத்தில் காந்திஜி சட்ட மறுப்புத் தொடங்குவதற்கு மிகக் கடுமையான சில நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒரு பகுதியில் பொதுஜனச் சட்டமறுப்பு தொடங்குவதாயிருந்தால் அந்தப் பகுதியில் 100 - க்கு 90 பேர் கதர் அணிகிறவர்களாயிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தனிப்பட்ட முறையில் யாரேனும் சட்டமறுப்புச் செய்ய விரும்பினால் அவருக்கு இராட்டையில் நூற்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைகள் சில தலைவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. ஸ்ரீ என்.சி.கேல்கர், ஸ்ரீ வித்தல் பாய் படேல் ஆகியவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். பண்டித மோதிலால் நேருவும், ஸ்ரீ லஜபதிராயும் நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திவிட முயன்றார்கள். தேசபந்துதாஸ் இக்கூட்டத்தில் மகாத்மாவைப் பூரணமாக ஆதரித்தார்.

  • சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தி இந்தியாவுக்கு விடுதலை தேடித்தரக்கூடியவர் மகாத்மா காந்தி ஒருவர்தான் என்று எல்லாத் தலைவர்களுக்கும் தெரிந்தது. ஆனாலும் மகாத்மா காந்தி நடத்தவேண்டிய இயக்கத்துக்கு அவர் கூறிய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளச் சில தலைவர்கள் விரும்பவில்லை! கடைசியில் பண்டித மோதிலால் நேருவின் யோசனையின் பேரில் "100 - க்கு 90 பேர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்"என்னும் நிபந்தனை "மிகப் பெரும்பாலோர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்" என்று மாற்றப்பட்டது

  • .

  • 4-ஆம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்படி சமரசத் தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானம் வரி கொடாமை உள்பட பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கும் உரிமையை மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அளித்தது. ஆனால் அதற்கு இன்னின்ன நிபந்தனைகள் நிறைவேறியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது.

  • இப்படி நிபந்தனைகளுடன் தீர்மானம் நிறைவேறிய போதிலும் மகாத்மாவின் மனதில் நிம்மதி ஏற்படவில்லை. சட்ட மறுப்புக்குத் தாம் விதிக்கும் நிபந்தனைகளில் மற்றத் தலைவர்களுக்குப் பூரண நம்பிக்கையில்லை என்று மகாத்மாவின் மனதில்சந்தேகம் உதித்திருந்தது. எனவே அவசரப்பட்டு எங்கேயாவது சட்டமறுப்பு ஆரம்பித்து விட்டால் காரியம் கெட்டுப்போய் விடுமே? தாம் நடத்த எண்ணியுள்ள இயக்கமும் தடைப்பட்டு விடுமே?-- இந்தக் கவலையினால் மகாத்மா காந்தி டில்லியில் கூடியிருந்த தலைவர்களைப் பார்த்து விநயமாக வேண்டிக் கொண்டதாவது-

  • "பொது ஜனச் சட்டமறுப்பு என்பது பூகம்பத்தைப் போன்றது. எந்தப் பிரதேசத்தில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கிறோமோ, அங்கே அரசாங்கம் ஸ்தம்பித்துவிடும். அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு போலீஸ் காரனும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் வேலையைவிட்டு விலகிவிடுவார்கள். போலீஸ் ஸ்டே ஷன்கள், கோர்ட்டுகள், அரசாங்கக் காரியாலயங்கள் எல்லாம் பொதுஜனங்களின் உடைமையாகிவிடும். இப்படிப்பட்ட பேரியக்கத்தை நடத்துவது எளிய காரியமல்ல. இயக்கம் நடத்தும் இடத்தில் பரிபூரணமான அமைதி நிலவ வேண்டும். பலாத்காரத்தை ஜனங்கள் அடியோடு மறந்துவிட வேண்டும். என்னவிதமான கஷ்டம் நேர்ந்தாலும் சகித்துக்கொண்டு அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டும். அந்தப்பிரதேசத்தில் அஹிம்சை நிலவினால் மட்டும் போதாது. ஏதேனும் ஒரு இடத்தில் பொதுஜனச் சட்டமறுப்பு நடந்தபோதிலும் நாட்டில் மற்ற எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண அமைதி நிலவ வேண்டும். எங்கேயாவது ஒரு மூலையில் அஹிம்சைக்குப் பங்கம் நேரிட்டாலும் பொதுஜன சட்டமறுப்பு வெற்றியடையாது; இயக்கத்தை நடத்தவே முடியாது. ஆகையால் உங்களையெல்லாம் நான் ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். நான் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்து நடத்தும்போது நீங்களும் உடனே சட்டமறுப்பை ஆரம்பித்து விடவேண்டாம். பர்தோலியில் நடக்கும் இயக்கத்தைக் கவனித்து வாருங்கள். கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மாகாணங்களையும் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யுங்கள். ஆனால் இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டாம். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் வேண்டும் உதவி இதுதான். பர்தோலியின் அநுபவத்தைப் பார்த்துக்கொண்டு அடுத்த தாலூகாவில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இவ்விதமே ஒவ்வொரு பிரதேசமாக இயக்கத்தை விஸ்தரித்துக் கொண்டு போகலாம். ஜனங்களைச் சரிவரத் தயார்ப் படுத்தாமல் சட்ட மறுப்பை அவசரப்பட்டு ஆரம்பித்து எங்கேயாவது பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்து விட்டால் இயக்கம் படுதோல்வியடையும். இயக்கத்தை நிறுத்தவேண்டிய தாகிவிடும். பொதுஜனச் சட்ட மறுப்புக்கு இன்றியமையாத நிபந்தனை பொது ஜன அமைதி, ஆகையால் அவசரப்பட்டுச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க வேண்டாம். மாகாணங்களுக்குக் காங்கிரஸ் அந்த உரிமை கொடுத்திருந்த போதிலும் அதை உபயோகப்படுத்த வேண்டாம். பர்தோலியைக் கவனித்து வாருங்கள்!"

  • இப்படியெல்லாம் மகாத்மா காந்தி படித்துப் படித்துச் சொன்னார்; திருப்பித் திருப்பி எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தலைவர்களிலே சிலர் "மகாத்மா எதற்காக இவ்வளவு பயப்படவேண்டும்?" என்று எண்ணினார்கள். அவ்விதமே சொன்னார்கள். சட்ட மறுப்புக்கு மகாத்மா விதித்த கடுமையான நிபந்தனைகளை ஆட்சேபித்தார்கள். ஆயினும் கடைசியில் ஒருவாறு ஒப்புக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.

  • ஆனால் காந்திமகானுடைய எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்று வெகு சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. மகாத்மா காந்தி தமது சொந்த இடமாகக் கருதிப் பெருமை கொண்டிருந்த பம்பாய் நகரத்தின் மூலமாகவே அந்தப் படிப்பினை வெளியாயிற்று. பயங்கரமான ரூபத்தில் வெளியாயிற்று.

  • முந்தைய 1920-ஆம் வருஷத்தின் மத்தியில் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது பிர்ரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர் அதை அலட்சியம் செய்தனர். "முட்டாள்தனமான திட்டங்களுக்குள்ளே மிக முட்டாள்தனமான திட்டம்" என்று லார்டு செம்ஸ்போர்டு அதைக் குறிப் பிட்டார். ஆயினும் இங்கிலாந்தின் இராஜ தந்திரிகளுக்கு 'எது எப்படியாகுமோ' என்ற கவலை கொஞ்சம் இருந்தது. மாண்டகு-செம்ஸ்போர்டு திட்டத்தின்படி ஏற்பட்ட புதிய சட்டசபைகளை ஆரம்பித்து வைப்பதற்கு வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைப்பதென்று முதலில் உத்தேசித்திருந்ததை முன் ஜாக்கிரதையாக மாற்றிக் கொண்டார்கள். வேல்ஸ் இளவரசரைச் சங்கடமான நிலைமைக்கு உள்ளாக்க விரும்பாமல் அவருக்குப் பதிலாகக் கன்னாட் கோமகனை (டியூக் ஆப் கன்னாட்) அனுப்பினார்கள். கன்னாட் கோமகன் விஜயம் செய்து புதிய சட்ட சபைகளைத் திறந்து வைத்து "மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள்; ஒத்துழையுங்கள்' என்ற பல்லவியையும் பாடிவிட்டுப் போனார்.

  • பிறகு ஒத்துழையாமை இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து பலம் பெற்று வந்தது. அந்த இயக்கம் பெரும் பொது ஜனக் கிளர்ச்சியாக மாறியது. கடைசியாக இப்போது பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து விடுவதென்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டு விட்டார்கள்.

  • இத்தகைய நிலைமையில் புதிய வைஸ்ராய் லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசர் விஜயத்தை நடத்தி வைக்க உறுதிகொண்டார். வேல்ஸ் இளவரசர் வந்தால், அவருக்காக நடைபெறும் உபசாரக் களியாட்டங்களிலும் ஆடம்பர வைபவங்களிலும் பொது மக்கள் பிரமித்துப் போய்விடுவார்கள் என்றும், அதன் மூலம் காங்கிரஸில் வளர்ந்து வரும் செல்வாக்கைக் குலைத்து விடலாம் என்றும் லார்ட் ரெடிங் கருதினார். இந்திய மக்களின் பரம்பரைக் குணமான இராஜ விசுவாசம் மேலோங்கி மகாத்மாவின் சட்ட மறுப்பு இயக்கத்தை அமுக்கிவிடும் என்று லார்ட் ரெடிங்கும் அவருடைய சகாக்களும் பகற்கனவு கண்டார்கள். ஆகவே, வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைக்கும்படி ஆங்கில இராஜ தந்திரிகளை இந்திய அதிகார வர்க்கத்தினர் பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

  • எனவே, 1921-ஆம் வருஷக் கடைசியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்னும் நிச்சயமான செய்தி வெளியிடப்பட்டது. இதைக் காந்தி மகானும் மற்றக் காங்கிரஸ் தலைவர்களும் விரும்பவில்லை. வேல்ஸ் இளவரசரைக் கூட்டி வருவதற்கும் படாடோப வரவேற்புகளை நடத்துவதற்கும் இது சமயமல்ல என்று தலைவர்கள் கருதினார்கள். அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆட்சியைப் பலப் படுத்துவதற்கும் விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்கும் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தை உபயோகப் படுத்துவார்கள் என்று நினைத்தார்கள். எனவே இந்திய மக்கள் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்து வெளியிட்டார்கள். நவம்பர் மாதம் 17-ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்குவதாக இருந்தது. அன்றையதினம் இந்தியா தேசமெங்கும் ஹர்த்தால் நடைபெறவேண்டும் என்றும் பிறகு இளவரசர் விஜயம் செய்யும் முக்கிய நகரங்களில் அன்றன்றைக்கு ஹர்த்தால் செய்யவேண்டும் என்றும் மக்களுக்குக் காங்கிரஸ் கட்டளையிட்டிருந்தது. இந்தக் கடமையை வற்புறுத்தி மகாத்மா காந்தி "எங் இந்தியா"வில் எழுதியிருந்ததோடு பல கூட்டங்களில் பேசியிருந்தார். "வேல்ஸ் இளவரசர் மீது தனிப்பட்ட முறையில் நமக்குக் கோபம் ஒன்றுமில்லை. அவரை அவமரியாதை செய்யும் எண்ணம் லவலேசமும் இல்லை. ஆனால் அன்னிய ஆட்சியின் சின்னமாக வேல்ஸ் இளவரசர் வருவதாலும், அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்துவதற்காக வருகிறபடி யாலும் அவருடைய வரவேற்புக் கொண்டாட்டங்களில் இந்திய மக்கள் கலந்துகொள்ள முடியாது. நம்முடைய அதிருப்தியை வெளியிடுவதற்காக ஹர்த்தால் அனுஷ்டிப்பதும் அவசியமாகிறது" என்று காந்தி மகான் வற்புறுத்தியிருந்தார்.

  • பம்பாய் நகரத்தில் காந்தி மகானுக்கு எல்லையற்ற செல்வாக்கு இருந்தது என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். பம்பாய் வாசிகளில் பெரும்பாலோர் மகாத்மாவைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அவருடைய வாக்கை வேதவாக்காக மதிக்கத் தயாராயிருந்தார்கள். ஆகையால் நவம்பர் 17-ஆம்தேதியன்று வேல்ஸ் இளவரசர் பம்பாயில் வந்து இறங்கும் தினத்தில் பரிபூரண ஹர்த்தால் நடத்துவதற்குப் பம்பாய் வாசிகள் ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தி மகாத்மாவின் கொள்கைகளைப் பம்பாய் வாசிகள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்பது பின்னால் நடந்தவிபரீதங்களினால் வெளியாயிற்று

  • டில்லியிலிருந்து திரும்பி ஆமதாபத்துக்கு வந்த மகாத்மா நேரே பர்தோலி-ஆனந்த் தாலுகாக்களுக்குப் போய்ப்பரிசீலனை செய்ய உத்தேசித்திருந்தார். ஆனால் பம்பாய்த் தலைவர்கள் காந்திமகானுக்குச் செய்திமேல் செய்தி அனுப்பினார்கள்; தந்தி மேல் தந்தி அடித்தார்கள். நவம்பர் 17-ஆம் தேதி பம்பாய்க்கு வந்து விட்டுப் பிறகு பர்தோலிக்கு போகும்படி அவர்கள் மகாத்மாவை கேட்டுக் கொண்டார்கள். அந்த முக்கியமான தினத்தில் பம்பாய் நகரம் தீவிர கொந்தளிப்பை அடையுமாதலால் அன்றைக்கு மக்களுக்கு வழிகாட்டி நடத்த மகாத்மா பம்பாயில் இருக்க வேண்டும் என்று பம்பாய்த் தலைவர்கள் கோரினார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக் கிணங்கி மகாத்மாவும் பம்பாய்க்கு 17-ஆம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தார்.

  • 17-ஆம் தேதி காலையில்தான் வேல்ஸ் இளவரசரும் பம்பாய்க் கடலோரத்தில் உள்ள ‘இந்தியாவின் வாசல்’ என்று அழைக்கப்படும் கோபுர மண்டபத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். இளவரசரை வரவேற்பதற்காகப் பிரமாதமான ஆடம்பர ஏற்பாடுகளை அதிகார வர்க்கத்தார் செய்திருந்தார்கள். இது காரணமாக ஏற்படக்கூடிய ஒரு விளைவைப் பம்பாய்க்காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது வேல்ஸ் இளவரசர் இறங்கும் தினத்தில் ஹர்த்தாலும் நடப்பதால் வேலையில்லாத ஜனங்கள் வேடிக்கை பார்க்கும். ஆகையால் இளவரசர் இறங்குமிடத்துக்கு வந்து கூட்டம் போடக்கூடும். அப்படியானால், ஹர்த்தாலின் நோக்கம் நிறைவேறாமற் போவதோடு கோபங்கொண்ட ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விடக்கூடும். இம்மாதிரி யெல்லம் நடந்து விடக்கூடாது என்பதற்காக, பம்மாய்த் தலைவர்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். இளவரசர் இறங்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் பம்பாய் நகரின் இன்னொரு எல்லையில் அதேசமயம் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்படு செய்திருந்தார்கள். எல்பின்ஸ்டன் ஆலையை யொட்டியிருந்த விஸ்தாரமான மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு மகாத்மா காந்தி தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆகையால் லட்சக் கணக்கான ஜனங்கள் அங்கே கூடி விட்டார்கள். கண்ணுக் கெட்டிய தூரம் அரே தலை மயமாகக் காணப்பட்ட அந்த ஜன சமுத்திரத்தின் மத்தியில் மேடைமீது நின்று மகாத்மா பேசினார். அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றித்தான் முக்கியமாகப் பேசினார். "சீக்கிரத்தில் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கப் போகிறேன். அதன் பயனாகச் சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும். ராணுவத்தை ஏவி ஜனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்படியும் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி, ஜனங்கள் பொறுமையாயிருக்கவேண்டும். எவ்வளவு கோபமூட்டும் காரியம் நடந்தாலும் ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கக் கூடாது. பம்பாய்வாசிகளை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்வது இதுதான்!" என்று காந்திஜி வேண்டிக் கொண்டார். அந்தோ! மகாத்மா இவ்வளவு உருக்கமாக வேண்டிக்கொண்ட அரைமணி நேரத்துக்குள்ளே பொது மக்களின் உற்சாகம் எல்லை கடந்துவிட்டது. வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைவதுபோன்ற துயரமான சம்பவங்கள் பம்பாயில் ஆரம்பமாகி விட்டன!

  • -----------------------------------------------------------

  • This file was last updated on 26 July 2011.

  • Feel free to send corrections to the webmaster