part-21

இன்னம்பூரான்

அக்டோபர் 30, 2016

[சிவகாமியின் செல்வன் 20: இறுதி வரி

பிடிஎஃப் கோப்பில் முழு அத்தியாயம்]

[காந்திஜி, ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்ற சொல்லை வழக்கம் போல் நன்கு சிந்தித்த பின் தான் பயன்படுத்தினார்....] [பற்றிக் கொண்டது என்னமோ தீப்பொறி !.]

“...இந்த காரணம், இந்திய அரசியல் உலகத்தின் சாபக்கேடான தீப்பொறி.”

காமராஜரை பலி வாங்கிய அந்தத் தீப்பொறி தனியார் வணிகத்தின், என்றென்றும் பரவலாக காணப்படும் அரசியலில், மறைமுகமான நுழைவு. விடுதலைக்கு முன்பு ஜி.டி.பிர்லா காந்திஜியை தன் முதலீட்டாக பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்பவர்கள் உண்டு. 1990 களில் ஒரு பெரிய கருத்தரங்கத்தில், ஒரு மும்பை செல்வந்தர் டில்லி போலீஸ் கமிஷனரை ‘நாங்கள் அமர்த்தினோம்’ என்று என்னிடம் கூறினார். இத்தகைய ‘முதலையீடுகள்’ இந்தியாவில் மிகவும் அதிகரித்து விட்டன. அவற்றின் தந்திர, மந்திர, விசித்திர முதலையீட்டு தலையீடுகள் மக்களாட்சியை கேலி செய்கின்றன. பொது மக்களின் நலனை திருடுகின்றன. அரசியல் நிர்வாகத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் கைப்பற்றி, பகல் கொள்ளை அடிக்கின்றன. தொட்டது எல்லாம் மஞ்சம், அதிலும் லஞ்சம், வலிமை படைத்தவர்களிடம் தஞ்சம், மக்களுக்குப் பஞ்சம் என்று ஐம்பது வருடங்களாக சராசரி குடிமகனை ஏமாற்றி, பின்னர் அவனையும் அவளையும் தன் கைக்குள் போட்டு கொண்டு, அமுக்கி விடுகின்றன. சில தமிழ் ஏடுகள், பல வருடங்களாகவே, மக்கள் பிரதிநிதிகள், மந்திரிமார்கள், அவர்களின் மெய்காப்பாளர்கள், சுற்றம், பினாமி எல்லாம் அத்து மீறீ சம்பாதிப்பது, கூத்தடிப்பதைப் பற்றி ஆணித்தரமாக எழுதி விடுகின்றன. இதற்கு எந்த கட்சியும் விலக்கு அல்ல.

இந்த அமங்கலமான நிலை ஏற்பட்டது எப்படி என்பதை வரலாற்று நோக்கில் புரிந்து கொள்வது நலம் பயக்கும்.

‘வரலாற்றில் மறைக்கப்பட்ட / புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒருநாள் தமக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள்’ என்ற பாபா அம்பேத்காரின் வாக்கு யாவரையும் பொருட்டுத் தான் அமைகிறது. அவருக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த மஹாத்மா பூலே அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், பார்ப்பனர்கள் தான்.

சுருங்கச்சொல்லின் 1852லியே தொடங்கப்பட்டு, விரைவில் முடங்கிய சென்னை மக்கள் சங்கம், 1884ல் துவக்கப்பட்ட சென்னை மகாஜனசங்கம் ஆகியவை பிராமணரல்லாதோர் முன்னேற்றத்தை விரும்பின. பார்ப்பன விரோதம் துவங்கியது 1884ல், 133 வருடங்களுக்கு முன்னால். அரசு பதவிகளில் பார்ப்பனர்கள் அதிக இடம் பிடிப்பது தான், இந்த வெறுப்புக்குக் காரணம். நான் தணிக்கை இலாக்காவை சார்ந்தவன். எங்கள் IAAS நிர்வாக அமைப்பை Indian Iyer & Iyengar Service என்று 1940 களில் கேலி செய்வது உண்டு. தற்காலம் அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய அல்லி ராஜ்யம் ஆகி விட்டது. 150 வருடங்களுக்கு மேல் எங்கள் துறையில் ஆளெடுப்பது தகுதி அடிப்படையில் மட்டுமே தான். 1960 களில் எங்கள் இலாக்காவின் உபதலைவர், ஒரு தலித். அதற்கு முன்னும் பின் தங்கிய வகுப்பினரும் உண்டு, பெருபான்மை எனவோ, ஐயர் & ஐயங்கார். மற்று துறைகளில் இது தென்பட்டது. நீங்கள் எந்த ஒரு பாமரகீர்த்தி படித்தாலும், பட்டினி கிடந்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கந்தல் உடுத்தி, மாண்டோர் சவுண்டி கிரியைகள் செய்து, பெரும்பாலான பார்ப்பனர்கள் மைந்தர்களை படிக்க வைப்பார்கள். மகளிரை படிக்க வைப்பதில்லை. அது ஒரு சாபக்கேடு. அந்த பாவத்தின் கர்மவினை தான், தகுதிக்கு தீ வைக்கப்பட்டது, குறிப்பாக 1967க்குப் பின்; அதனால், படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் விலக்கப்பட்ட பார்ப்பனர்கள் அமெரிக்கா செல்ல தொடங்கினர் என்று நினைக்கிறேன். தனியார் நிறுவனங்கள் அவர்களை அமர்த்திக்கொண்டன. சட்டநாத கரையாளர், நல்லக்கண்ணு பிள்ளை, சிவஷண்முகம் பிள்ளை போன்ற நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்த சான்றோர்கள் தகுதி அடிப்படையில் தான் முன்னுக்கு வந்தனர். இந்த பிராமண அல்லாதார் பிரிவினை வாதமும், அதை கைப்பற்றி, தந்தை பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் அமைத்த திராவிட இயக்கமும், அவரது முற்போக்குக் கருத்துக்களையும், சீரிய சிந்தனைகளையும், போற்றத்தக்க நாத்திக கோட்பாடுகளையும் தூர எறிந்து விட்டு, அவரது முரட்டு அணுகுமுறையை மட்டும் சுவீகரித்துக்கொண்டு, ‘ஹரே ராம! ஹரே கிருஷ்ண! ஹர! ஹர!’ என்று பஜனை செய்வதை அவருடைய காலத்திலேயே தொடங்கிய கிளை கட்சிகள், தங்களது தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக பிரசாரம் செய்வது கோயில், குளம், ஆத்திகம், பஜனை, பூஜை, நேர்த்திக்கடன்கள், சோதிடம், வஞ்சகமான ‘இந்த கல்லை வாங்கினால், லாட்டரி வாகை’ போன்ற மூட நம்பிக்கைகள் . நடை முறையும் அதே! அதே! 1960ல், காசிக்கயிறு, ஒளிந்து. இன்று பெரியவருக்கு உடல் நிலை சரியாக , கோயில்களில் பூஜை! பிரார்த்தனை, தொழுகை, சாமக்கிரியைகள், இத்யாதி.

இத்தகைய முரண்கள் தோன்றாமல், மக்கள் நலனை மட்டுமே நாடி, தன் வாழ்க்கையையே உருப்படியான அரசாட்சி செய்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசாட்சி காலகட்டத்தை எல்லாருமே ‘பொற்காலம்’ என்று வருணித்தார்கள். ‘காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர்... “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர் என்பதற்கு விடையும், அதிலிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதை பற்றிய கட்டுரை பகுதிகள், அடுத்த இரண்டு சுற்றுகளில் முடியும்.