நாம் ஏன் இங்கு இருக்கின்றோம்?

நாம் ஏன் இங்கு இருக்கின்றோம்?

அஜான் சா

Why are we here?

A Dhamma Talk by Ajahn Chah

English

(வாட் தாம் சாயெங் ஃபேட் (Wat Tham Saeng Phet) விகாரைக்கு வந்திருந்த இல்லற மக்களுக்கு, 1981 ஆம் ஆண்டு மழைக் காலத்தின் போது, அஜான் சாவின் உடல் நிலை மிகவும் மோசமடைவதற்குச் சற்று முன்னர் தரப்பட்ட போதனை.)

இந்த மழைக்கால ஒதுங்குமிடத்தில் எனக்கு அதிகச் சக்தி இல்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை, எனவே சற்றுக் காற்றோட்டமாக இருக்க இந்த மலைப் பகுதிக்கு வந்திருக்கிறேன். என்னைச் சந்திக்க வரும் மக்களை என்னால் முன்பு போல இயல்பாக வரவேற்க முடியவில்லை. எனக்குப் பேசுவதும் மூச்செடுப்பதும் தொல்லையாக இருக்கிறது. இந்த உடல் உங்கள் முன் இருப்பதே உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவே ஒரு ஆசிர்வாதம் தான். விரைவில் இதையும் நீங்கள் பார்க்க முடியாது. மூச்சு முடிந்துவிடும், பேச்சும் முடிந்துவிடும். காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் போல இவையும் தங்களை ஆதரிக்கும் நிலைமைகளுக்குத் தகுந்தார்ப் போலச் சென்று மறைந்து விடும். அண்ணல் புத்தர் இதனை 'கயா வாயம்' என்றார், அதாவது காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளின் சரிவும், மறைவும்.

எப்படிச் சரிகின்றன? ஒரு பனிக்கட்டியை (ஐஸ்) எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அது நீராக இருந்தது.. அதை உறைய வைத்தவுடன் அது பனிக்கட்டியாகிறது. ஆனால் அது கரைய வெகு நேரம் ஆவதில்லை. ஒரு பெரிய பனிக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவு இயந்திரம் (டேப் ரிகார்டர்) அளவு பெரிய கட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை வெயிலில் வைத்துப் பாருங்கள். அது எப்படிக் கரைகின்றது என்பதைப் பாருங்கள். இந்த உடல் மறைவதைப் போலவே படிப்படியாக உடைந்து சில மணி நேரத்திலோ, நிமிடத்திலோ கரைந்து விடும். மீந்து இருப்பதெல்லாம் தேங்கிய நீர் மட்டுமே. இது தான் 'கயா வாயம்'. அதாவது காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட எல்லா நிலைமைகளின் சரிவும், மறைவும் இப்படித்தான் என்றென்றும் இருந்திருக்கிறது. காலம் தோன்றியதிலிருந்தே இப்படித்தான் இருந்திருக்கின்றது. நாம் பிறக்கும் போது இந்த உள்ளார்ந்த இயல்பை நம்மோடு உலகினுள் கொண்டு வருகிறோம், அதைத் தவிர்க்க முடியாது. பிறந்தபோதே, வயோதிகத்தையும், நோயையும், மரணத்தையும் நம்முடனே கொண்டு வந்து விட்டோம்.

எனவே தான் புத்தர் 'கயா வாயம்' என்றார், காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட எல்லா நிலைமைகளின் சரிவும் மறைவும். இங்கு இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருக்கும் அனைவரும், துறவிகள், புதிய துறவிகள், இல்லற ஆண்கள் மற்றும் குடும்பப் பெண்கள். ஒவ்வொருவரும் "படிப்படியாகச் சீர்குலையும் குவியல்கள்" தான். இப்போதைக்கு இந்தக் குவியல் கட்டியாக இருக்கிறது, ஒரு பனிக்கட்டியைப் போல. நீராகத் துவங்கிப் பனிக்கட்டியாக மாறி மீண்டும் கரைந்து நீராகி விடுகிறது. இந்தச் சரிவை உங்களுள் பார்க்க முடிகிறதா? இந்த உடலைப் பாருங்கள். அது நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டிருக்கிறது .... உரோமத்திற்கும் வயதாகிறது. நகங்களுக்கும் வயதாகிறது ... எல்லாமே வயதாகிக் கொண்டிருக்கின்றன!

நீங்கள் முன்பு இப்படி இல்லையே! இருந்தீர்களா? நீங்கள் இப்போதிருப்பதைவிடச் சிறியதாய் இருந்திருப்பீர்கள். இப்போது வளர்ந்து முதிர்ச்சி அடைந்துவிட்டீர்கள். இன்றிலிருந்து உடல் அதன் இயற்கைக்குத் தகுந்தார் போலச் சரியத் தொடங்கிவிடும். உடலும், ஒரு பனிக்கட்டியைப் போலச் சரிந்து மறைந்து விடும். விரைவில் ஒரு பனிக்கட்டியைப் போல முற்றும் மறைந்து விடும். எல்லா உடல்களும் நான்கு பூதங்களால் ஆனவைதான் - மண், நீர், காற்று மற்றும் தீ. உடல் மண், நீர், காற்று மற்றும் தீ ஆகியவற்றின் சேர்க்கை தான். அதைத் தான் நாம் மனிதன் என்கிறோம். ஆரம்பத்தில் அதை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் இப்போது "மனிதன்" என்கிறோம். அதனோடு மோகம் கொள்கிறோம். அது ஆண் என்றும், பெண் என்றும் கூறுகிறோம். பெயர் சூட்டுகிறோம். திரு, திருமதி என்று ஒருவரை ஒருவர் சுலபமாக அடையாளம் காட்டிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அங்கு யாரும் இல்லை. மண், நீர், காற்று மற்றும் தீ மட்டுமே இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த உருவத் தோற்றம் கொள்ளும் போது அதன் விளைவை "மனிதன்" என்கிறோம். இதனோடு மிகவும் குதூகலமடைய வேண்டாம். சரியாகப் பார்த்தீர்களென்றால் அங்கு யாரும் இல்லை.

உடலில் கெட்டியான பகுதிகளான சதை, தோல், எலும்பு போன்றவற்றை மண் பூதம் என்கிறோம். உடலின் திரவ இயல்பு கொண்ட பகுதிகளை நீர் பூதம் என்கிறோம். உடலின் வெப்பமான இயல்பை தீ பூதம் என்கிறோம், உடலில் ஓடிக் கொண்டிருக்கும் காற்றினை காற்று பூதம் என்கிறோம்.

வாட் பா போங் விகாரையில் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத உடல் ஒன்று உள்ளது. பிரதான மண்டபத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எலும்பு கூடு அது. அதைப் பார்க்கும் போது அது ஆண் என்றோ, பெண் என்றோ தோன்றுவதில்லை. மன்றத்தினுள் வருபவர் ஒருவரை ஒருவர் அது ஆணா பெண்ணா என்று கேட்டுக் கொள்வார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைத் தவிர உறுதியாகப் பதில் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அது எலும்புக்கூடு மட்டுமே. தோலும் சதையும் மறைந்துவிட்டன.

மக்கள் இவற்றை எல்லாம் அறிவதில்லை. சிலர் வாட் பா போங் செல்கின்றனர், பிரதான மண்டபத்தில் நுழைந்து எலும்புக்கூடுகளைப் பார்க்கின்றனர்.... அடுத்து (அலறியடித்துக் கொண்டு) வெளியே ஓடி வருகின்றனர்! அதைப் பார்க்க முடியவில்லை. அவர்களுக்குப் பயம். எலும்புக் கூடுகளைப் பார்க்கப் பயம். இவர்களெல்லாம் தங்களையே பார்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். எலும்புக் கூட்டைப் பார்க்கப் பயப்படுகின்றனர்.. எலும்புக் கூட்டின் பெரும் பயனைப் பற்றிப் பிரதிபலிப்பதில்லை. விகாரைக்கு வருவதற்கு ஒரு வாகனத்தில் அல்லது நடந்து வருகின்றனர்...எலும்பு இல்லாமல் எப்படி வந்திருப்பார்கள்? அப்படி நடக்க முடியுமா? ஆனால் வாகனத்தில் வாட் பா போங் விகாரைக்கு வந்து, பிரதான மண்டபத்திற்குச் சென்று, எலும்புக்கூடுகளைப் பார்த்துவிட்டு உடனே வெளியே ஓடி வருகின்றனர்! இது போன்றதை முன்னால் பார்க்கவில்லை போலும். அதனோடே பிறந்து விட்டு அதைப் பார்த்ததே இல்லை. இப்போதாவது பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் அதிர்ஷ்டப்பட்டவர்கள் அவர்கள். முதியோரும் கூட எலும்புக் கூட்டினைப் பார்த்துப் பயப்படுகின்றனர்.... ஏன் இந்த அமளி? இதிலிருந்து தங்களையே கவனிப்பதில்லை என்பதும், தங்களையே தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. அவர்கள் வீட்டுக்குத் திரும்பியதும் மூன்று நான்கு நாட்களுக்குத் தூங்க முடியாமல் தவிக்கின்றனரோ என்னவோ? இருந்தும் தூங்கும் போது எலும்புக் கூட்டோடு தான் தூங்குகின்றனர்! அதனோடு உடைகளை உடுத்துகின்றனர், அதனோடு உணவை உண்கின்றனர், எல்லாவற்றையும் அதனோடு செய்கின்றனர்.. இருந்தும் அதைக் கண்டு பயப்படுகின்றனர்.

இதிலிருந்து மக்கள் எந்த அளவுக்குத் தங்களையே கவனிப்பதில்லை என்பது தெரிகிறது. பரிதாபம்! எப்போதும் புறத்திலேயே பார்த்துக்கொண்டிருக்கின்றனர், மரங்களை, மற்ற மக்களை, புறப் பொருட்களை. "இது பெரிது," "அது சிறிது, "இது குட்டை," அது நெட்டை," என்று சொல்கின்றனர். புறப்பொருட்களைப் பார்ப்பதிலேயே மூழ்கியிருப்பதால் தங்களைக் கவனிக்க நேரமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் மக்கள் பரிதாபத்துக் குரியவர்கள். அவர்களுக்கு அடைக்கலம் ஏதும் இல்லை.

துறவறம் பூணும் சடங்குகளில் துறவி ஆக விரும்புபவர் ஐந்து தியான நிகழ்வுகளைக் கற்க வேண்டும்: கேசம், தலை முடி; லோமம், உடல் முடி; நக, நகங்கள்; தந்த, பற்கள்; தகொ, தோல். சில மாணவர்களும் படித்தவர்களும் சடங்கின் போது இதைக் கேட்டுத் தங்களுக்குள்ளேயே சற்று ஏளனமாகச் சிரிப்பார்கள்.... "அஜான் என்ன தான் நமக்குக் கற்பிக்கப் பார்க்கிறார்? காலங்காலமாக இருக்கும் நமது முடியைப் பற்றிக் கற்பிக்கிறாரே? இதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டியதில்லை. நமக்கு இது பற்றி ஏற்கனவே தெரியும். நமக்கு ஏற்கனவே தெரிந்ததைப் பற்றி ஏன் கற்பிக்க வேண்டும்?" தெளிவற்ற மக்கள் இப்படித்தான் எண்ணுகின்றனர். அவர்கள் முடியை ஏற்கனவே பார்த்து விட்டதாக நினைக்கின்றனர். நான் அவர்களிடம் சொல்வது என்னவெனில் "முடியைப் பார்ப்பது" என்பது அதன் உண்மையான இயல்பைப் பார்க்க வேண்டும் என்பது தான். உடல் முடியை உள்ளது போலப் பார்க்க வேண்டும், நகங்களை, பற்களை, தோலினை உள்ளது போலப் பார்க்க வேண்டும். அது தான் "பார்ப்பது" என்பது - மேலோட்டமாகப் பார்ப்பது இல்லை, வாய்மைக்கு நிகராகப் பார்ப்பது. நிகழ்வுகளை உள்ளது உள்ளவாறு நம்மால் பார்க்கமுடிந்தால் காது வரை அவற்றோடு மூழ்கி இருக்க மாட்டோம். முடி, நகங்கள், பற்கள், தோல் ...அவை எப்படிப் பட்டவை? அழகானவையா? சுத்தமானவையா? அவற்றிற்கு உண்மையான சாராம்சம் ஏதாவது உண்டா? அவை நிலையானவையா? இல்லை... அவற்றிற்குப் பொருள் ஒன்றும் இல்லை. அவை அழகானவை இல்லை, ஆனால் நாம் அவை அழகானவை என்று நினைக்கின்றோம். அவற்றுள் கணிசமாக உள்ளதென்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் நாம் அப்படி இருப்பதாக நினைக்கின்றோம்.

முடி, நகங்கள், பற்கள், தோல்... மக்கள் இவற்றோடு சிக்கிக் கொள்கின்றனர். புத்தர் இவைகளைத் தியானப் பொருட்களாக நியமித்தார். அவற்றைத் தெரிந்து கொள்ளச் சொன்னார். அவை தற்காலிகமானவை. முழுமையற்றவை, சொந்தக்காரர் அற்றவை; அவை "நான்" அல்லது "அவர்கள்" இல்லை. நாம் இவற்றோடு பிறந்து இவற்றால் ஏமாந்துவிடுகிறோம், ஆனால் உண்மையில் அவை அருவருப்பானவை. நாம் ஒரு வாரம் குளிக்காமல் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருவருவருக்கொருவர் அருகில் நெருங்க முடியுமா? நாம் மிகவும் நாற்றம் கொண்டிருப்போம். மக்கள் வேர்வை சிந்தும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது, கடினமான வேலைசெய்து கொண்டிருக்கும் போது வேர்வை நாற்றம் அதிகமாக இருக்கும். வீடு திரும்பியதும் சோப்பும், தண்ணீரும் போட்டுக் குளித்துவிட்ட பிறகு நாற்றம் சற்றுத் தணியும். சோப்பின் வாசனை அதன் இடத்தை எடுத்துக் கொள்கிறது. சோப்பைத் தோய்ப்பதால் உடலை நறுமணம் கொள்ள வைக்கலாம், ஆனால் உடலின் நாற்றம் தற்காலிகமாக மட்டுமே அடக்கப் படுகிறது. சோப்பு வாசனை மறைந்ததும் உடலின் வாசனை திரும்பி விடுகிறது.

இந்த உடல்களெல்லாம் அழகானவை, மகிழ்ச்சி தருபவை, நீண்ட நாள் இருப்பவை, வலுவானவை என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. நாம் எப்போதும் வயதாக மாட்டோம், நோய்வாய்ப்பட மாட்டோம், இறக்க மாட்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது. உடல் நமக்குக் கவர்ச்சியை உண்டாக்கி ஏமாற்றுகிறது, அதனால் நமக்குள் உள்ள உண்மையான அடைக்கலத்தை நாம் அறிவதில்லை. அடைக்கலத்திற்கான உண்மையான இடம் மனமே. மனமே நமது உண்மையான அடைக்கலம். இந்த மண்டபம் மிகவும் பெரிதாக இருக்கலாம் ஆனால் அது உண்மையான அடைக்கலம் ஆகாது. புறாக்கள் இங்கு குடியிருக்கின்றன, பல்லிகள் இங்கு குடியிருக்கின்றன... இந்த மண்டபம் நமது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. நாம் மற்றவற்றோடு சேர்ந்து இங்கு குடியிருக்கின்றோம். இது ஒரு தற்காலிக இருப்பிடம், விரைவில் இதை விட்டுச் செல்ல வேண்டும். மக்கள் இது போன்ற மண்டபங்களை அடைக்கலமாகக் கருதுகின்றனர்.

எனவே புத்தர் நம்மை நமது அடைக்கலத்தைக் கண்டு கொள்ளச் சொன்னார். அப்படியென்றால் நமது உண்மையான உள்ளத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த உள்ளம் மிகவும் முக்கியமானது. மக்கள் முக்கியமான நிகழ்வுகளைப் பொதுவாகப் பார்ப்பதில்லை, முக்கியத்துவமற்றதிலேயே நேரத்தைச் செலவு செய்கின்றனர். உதாரணமாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது வீட்டைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவியபடி மற்றவேலைகளையும் செய்யலாம், ஆனால் அவர்கள் தங்கள் உள்ளங்களைக் கவனிப்பதில்லை. உள்ளம் கெட்டுப்போய் இருக்கலாம், அவர்கள் கோபமாக இருக்கலாம். முகத்தை சுளித்துக் கொண்டு பாத்திரங்களைக் தேய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளம் சுத்தமாக இல்லாததைக் கவனிப்ப தில்லை. இதைத்தான் நான் "தற்காலிக இடத்தை அடைக்கலம் கொள்வது" என்கிறேன். வீட்டையும் வசிப்பிடத்தையும் சுத்தம் செய்கின்றனர் ,ஆனால் தங்கள் உள்ளத்தைச் சுத்தம் செய்வதில்லை. துக்கத்தை விசாரிப்பதில்லை. உள்ளமே மிக முக்கியமானது. புத்தர் உள்ளத்துள் உண்மையான அடைக்கலத்தைத் தேடச் சொன்னார்: 'அத்தாஹி அத்தானொ நாதோ' - "உங்களை நீங்களே அடைக்கலமாகக் கொள்க." வேறு யார் உங்களுக்கு அடைக்கலமாக முடியும்? உண்மையான அடைக்கலம் உள்ளம் மட்டுமே. வேறு ஏதும் இல்லை. மற்றவற்றை நம்பி இருக்கலாம், ஆனால் அவை உறுதியானவை இல்லை. மற்றவற்றை நம்பி இருப்பதற்கு முன் உங்களையே நீங்கள் அடைக்கலமாகக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உண்மையான அடைக்கலம் கொண்ட பின் தான் மற்றவற்றை நம்பி இருக்கலாம். அது ஆசிரியரானாலும் சரி, குடும்பம், நண்பர்கள் அல்லது உறவினராக இருந்தாலும் சரி இது அனைவருக்கும் பொருந்தும்.

இல்லற மக்கள் மற்றும் நிரந்தர வீடற்றோர் (துறவிகள்) ஆகிய இங்கு வந்துள்ள நீங்கள் அனைவரும் இந்தப் போதனையை மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், "நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கிறேன்?" உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், "நான் ஏன் பிறந்தேன்?" சிலருக்குத் தெரிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றனர் ஆனால் துன்பம் நிற்பதே இல்லை. பணக்காரரோ ஏழையோ, இளையவரோ முதியவரோ அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் துக்கம் அனுபவிக்கின்றனர். எல்லாம் துக்கம் தான். ஏன் துக்கம் அனுபவிக்கின்றனர்? ஏனென்றால் அவர்களிடம் மெய்யறிவு இல்லை. ஏழைகள் போதுமான பொருள் இல்லாததால் துக்கம் அனுபவிக்கின்றனர். பணக்காரர் இருப்பதைப் பாதுகாக்க வேண்டிய கவலையினால் துக்கம் அனுபவிக்கின்றனர்.

முன்னொரு சமயத்தில் நான் இளம் துறவியாக இருந்த போது ஒரு அற போதனை தந்தேன். நான் செல்வத்தினால், உடமைகளினால், வேலையாட்கள் இருப்பதனால் உள்ள மகிழ்ச்சியைப் பற்றிப் பேசினேன்.... ஒரு நூறு ஆண் வேலையாட்கள், ஒரு நூறு பெண் வேலையாட்கள், நூறு யானைகள், நூறு மாடுகள், நூறு எருமைகள்.. எல்லாவற்றிலும் நூறு! இதைக் கேட்டுக் கொண்டிருந்த இல்லற மக்கள் குதூகலம் அடைந்தனர். ஆனால் நூறு எருமைகளைக் கவனித்துக்கொள்வதென்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அல்லது நூறு மாடுகளை, நூறு ஆண் மற்றும் பெண் வேலையாட்களை...இவர்களையெல்லாம் பார்த்துக் கொள்வதென்பதைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடிகிறதா? அது மகிழ்ச்சியைத் தருமா? மக்கள் இதனைப் பற்றி நினைப்பதில்லை. அவர்களுக்குப் பொருட்களைச் சேகரிக்க ஆசை.. மாடு, எருமை, பணியாட்கள்.. நூற்றுக்கனக்கான வற்றை வைத்துக் கொள்ள ஆசை. ஆனால் நான் ஐம்பது எருதுகள் வைத்திருப்பதே அதிகம் என்கிறேன். அந்த முரட்டு எருதுகளுக்கு மூக்கனாங்கயிறு திரிப்பதே பெரிய வேலை ஆகிவிடும்! ஆனால் மக்கள் இதனைக் கருதுவதில்லை. செல்வம் சேர்ப்பதில் உள்ள இன்பத்தைப் பற்றி மட்டுமே நினைக்கின்றனர். அதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி நினைப்பதில்லை.

நமக்கு மெய்யறிவு இல்லையென்றால் நம்மைச் சுற்றி இருப்பவை எல்லாம் நமக்குத் துக்கம் தருபவையாகிவிடும். நாம் மெய்யறிவோடு இருந்தால் இவை எல்லாம் நம்மைத் துக்கத்திலிருந்து வெளிக்கொண்டு செல்லும். கண்கள், காதுகள், நாக்கு, உடல் மற்றும் மனம்... கண்கள் நமக்கு எப்போதும் நன்மை தான் விளைவிக்கும் என்பதில்லை தெரியுமா? உங்களுக்குக் கெட்ட மனோபவம் இருக்கும் போது மற்றவரைப் பார்ப்பதனாலேயே நீங்கள் கோபம் கொண்டு தூக்கம் இல்லாமல் போகலாம். அல்லது இன்னொருவருடன் காதல் கொள்ளலாம். காதலித்தவர் கிடைக்க வில்லையென்றால் காதலும் ஒரு வகைத் துக்கம் தான். பேராசையின் காரணமாக அன்பும், வெறுப்பும் இரண்டுமே துக்கம் தான். வேண்டுவது துக்கம், வேண்டாததும் துக்கம். பொருட்களைச் சேகரிக்க வேண்டுவது ...அவை கிடைத்து விட்டாலும் அது துக்கம், ஏனென்றால் கிடைத்தது தொலைந்துவிடுமோ என்ற அச்சம் இருப்பதால். துக்கம் மட்டுமே உள்ளது. அதனோடு எப்படி வாழ்வது? உங்களிடம் ஒரு பெரிய ஆடம்பர வீடு இருக்கலாம், ஆனால் உங்கள் உள்ளம் சரியாக இல்லையென்றால் நீங்கள் நினைத்தபடி எதுவும் நடப்பதில்லை.

எனவே, நீங்கள் அனைவரும் உங்களையே பார்த்துக் கொள்ளுங்கள். நாம் ஏன் பிறந்தோம்? இந்த வாழ்க்கையில் உண்மையாகவே எதையாவது சாதித்து விடுகிறோமா? இங்கு கிராமப்பகுதிகளில் சிறுவயதிலிருந்தே மக்கள் நெல் விதைப்பதைத் தொடங்கி விடுகின்றனர். பதினேழு, பதினெட்டு வயதானவுடன் அவரசர அவசரமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர், சொத்து சேர்ப்பதற்குக் காலம் போதாது என்று நினைக்கின்றனர். சிறு வயதிலிருந்தே வேலைசெய்யத் தொடங்குகின்றனர். எப்படியாவது பணக்காரராகிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். எழுபது, எண்பது ஏன் தொன்னூறு வயதாகும் வரைகூட நெல்லை விதைக்கின்றனர். நான் அவர்களைக் கேட்பேன், "பிறந்ததிலிருந்து வேலை செய்கின்றீர்கள். இப்போது போகும் நேரம் வந்துவிட்டது, என்னதான் எடுத்துக் கொண்டு போகப் போகின்றீர்கள்?" அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரிவதில்லை. அவர்கள் சொல்வதெல்லாம், "எனக்குத் தெரியவில்ல!" இப்பகுதிகளில் ஒரு பழமொழி உண்டு, "பயணத்தின் வழியில் நெல்லிக்காய் பறித்துக் கொண்டு தாமதம் செய்ய வேண்டாம்.. அறியுமுன் பொழுது இறங்கிவிடும்." இதற்குக் காரணம் "எனக்குத் தெரியவில்ல!" என்பது தான். அவர்கள் இங்கும் இல்லை, அங்கும் இல்லை. "எனக்கு தெரியவில்ல!"என்பதோடு திருப்தி அடைகின்றனர்... நெல்லிமரத்தின் கிளைகளில் உட்கார்ந்து கொண்டு நெல்லிக்காய்களை வயிறு முட்ட உண்டு கொண்டு..."எனக்குத் தெரியவில்ல, எனக்குத் தெரியவில்ல....."

இளம் வயதில் தனியாக இருப்பது நல்லதில்லை என்று நினைக்கின்றோம், சற்றுத் தனிமையாக இருப்பதாகத் தோன்றுகிறது. எனவே ஒரு துணை தேடிச் சேர்ந்து வாழ்கிறோம். இரண்டு பேரை ஒன்றாக இருக்க வைத்தால் அங்கு சிக்கல் தோன்றும்! தனியாக வாழ்ந்தால் மிகவும் அதி அமைதியாக இருக்கிறது, இன்னொருவரோடு வாழ்ந்தால் அங்கு சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகள் சின்னஞ்சிறுசுகளாக இருக்கும் போது பெற்றோர் நினைப்பது, "அவர்கள் பெரிதான பின் நம் நிலைமை எளிதாகிவிடும்," என்று. அவர்கள் குழந்தைகளை வளர்க்கின்றனர், மூன்று, நான்கு, ஐந்து பேரையும் வளர்க்கின்றனர். அந்தக் குழந்தைகள் பெரிதானவுடன் அவர்கள் பாரம் குறைந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகள் வளர வளர அவர்கள் பாரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இரண்டு மரக் கட்டைகளைப்போல, ஒன்று பெரிது, மற்றது சிறிது. அது பாரம் குறைவாக இருக்கும் என்று நினைத்துச் சிறியதைத் தூக்கி எறிந்து விட்ட பின் பெரியதைத் தூக்கிக் கொள்கின்றீர்கள். ஆனால் அது எப்படி பாரம் குறைந்ததாக இருக்கப் போகிறது? குழந்தைகள் சிறிதாக இருக்கும் போது உங்களை அதிகம் தொந்தரவு செய்வதில்லை, அவ்வப்போது கொஞ்சம் சாதத்தையும் ஒரு பழத்தையும் தந்தால் போதும். பெரிதானவுடன் அவர்கள் மோட்டார்சைக்கில் வேண்டும் என்றும், கார் வேண்டும் என்றுமல்லவா கேட்கின்றனர்! என்ன செய்ய? உங்கள் குழந்தைகள் மீது உள்ள அன்பின் காரணமாக முடியாதென்று சொல்லமுடியவில்லை. எனவே அவர்கள் கேட்பதைத் தருவதற்கு முயல்கின்றீர்கள். பிரச்சனைகள்...சில சமயம் பெற்றோர்கள் இதனால் தங்களுக்குள் வாக்குவாதம் நடத்துகின்றனர்... "அவனுக்குக் கார் வாங்கித் தர வேண்டாம், நம்மிடம் போதுமான பணம் இல்லை!" ஆனால் உங்கள் குழந்தைகள் மீது அன்பிருப்பதால் யாரிடமாவது கடன் வாங்கியாவது அவற்றை வாங்கித் தர வேண்டும். ஏன்? பெற்றோர் தங்கள் அத்தியாவசியத் தேவைகளைக்கூட ஒதுக்கி வைத்து விட்டுத் தங்கள் குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர முன் வரலாம். பின் கல்வி சம்பந்தப்பட்ட செலவுகளும் இருக்கிறது. "அவர்கள் படித்துமுடித்த பின், நமக்குப் பிரச்சனை இருக்காது." என எண்ணுகிறோம். ஆனால் படிப்பு முடிவதற்கு முடிவே இல்லை! எதை முடிக்கப் போகின்றனர்? பௌத்தம் என்ற அறிவியலில் தான் முடிவு என்று ஒன்று உள்ளது, மற்ற அறிவியல்களில் வட்ட வடிவில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டும். முடிவில் மிஞ்சுவது ஒரு பெரும் தலைவலி தான். நான்கு ஐந்து குழந்தைகள் உள்ள வீடாயிருந்தால் அங்கு பெற்றோர்கள் தினமும் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பார்கள்.

எதிர் காலத்தில் வரவிருக்கும் துக்கத்தை நாம் பார்க்கத் தவறுகிறோம். அது வரப்போவதில்லை என்று நினைக்கின்றோம். வந்த பின்னர் தான் அது நமக்குத் தெரிகிறது. அது போன்ற துக்கம், நமது உடலில் உள்ளடங்கிய துக்கம். அதனை நாம் பார்ப்பது கடினம். நான் சிறு வயதில் எருமைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது என் பற்களை வெண்மையாக்கக் கரித்தூளால் தேய்ப்பேன். வீட்டுக்குத் திரும்பியதும் கண்ணாடியில் பற்களைப் பார்த்து அவை நன்றாகவும் வெண்மையாகவும் இருப்பதைப் பார்த்து மகிழ்வேன்...எனது எலும்புகளே என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தன, அவ்வளவு தான். எனக்கு ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் ஆனபோது எனது பற்கள் அசைய ஆரம்பித்தன. பற்கள் விழும் போது மிகுந்த வேதனையும் வலியும் உண்டாகும். சாப்பிடும் போது வாயின் மேல் உதைபட்டார்ப் போன்ற வலி தோன்றும். நான் இந்த அனுபவத்தை ஏற்கனவே எனது முதல் பல் விழும்போதே சந்தித்துவிட்டேன். எனவே பல் மருத்துவரை எல்லாப் பற்களையும் எடுத்துவிடச் சொன்னேன். இப்பொது இருப்பது பொய்ப் பற்களே. எனது உண்மையான பற்கள் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் எல்லாவற்றையும், பதினாறையும் ஒரே சமயத்தில் எடுத்துவிடச் சொன்னேன். பல் மருத்துவரோ ஒரே நேரத்தில் பதினாறையும் எடுக்கத் தயங்கினார். ஆனால் நான் அவரிடம், "எடுத்துவிடுங்கள், விளைவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றேன். எனவே அவர் அனைத்தையும் ஒரே சமயத்தில் பிடுங்கி எடுத்து விட்டார். அவற்றுள் சில, குறைந்தது ஐந்து பற்களாவது இன்னமும் நல்ல வலிமையோடு இருந்தன. எல்லா வற்றையும் எடுத்து விட்டோம். ஆனால் நான் மிகவும் வேதனைப் பட்டேன். அவற்றை எடுத்த பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு என்னால் எதையும் சாப்பிடவே முடியவில்லை.

இளம் பிராயத்தில் நான் எருமைகளை மேய்துக் கொண்டிருந்த போது பற்களைத் துலக்குவதைப் பெரிய செயலாகக் கருதினேன். எனது பற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை நல்லவை என்று கருதினேன். ஆனால் இறுதியில் அவை எல்லாம் போக வேண்டியதாயிற்று. அவற்றால் உண்டான வலியைப் பொறுக்க முடியவில்லை. பல் வலியை நான் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சில சமயம் இரண்டு ஈறுகளும் ஒரே சமயத்தில் வீங்கிப் போயிருந்தன.

உங்களில் சிலர் இந்த அனுபவத்தை ஒரு நாள் சந்திக்க வேண்டி வரலாம். இன்றைக்கு உங்கள் பற்கள் தினந்தோறும் துலக்கப்பட்டு பளிச்சென்று வெண்மையாக இருக்குமானால்... எச்சரிக்கை! அவை உங்களைப் பின் ஒரு சமயம் வஞ்சித்து விடும்.

நான் இப்போது நமக்குள்ளிருந்து எழும் துக்கத்தைப்பற்றி, நமது உடலிலிருந்து எழும் துக்கத்தைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.. உடலினுள் நாம் நம்பி இருப்பதற்கு ஒன்றுமே இல்லை. இளம் பருவத்தில் அவ்வளவு துன்பம் இல்லை, ஆனால் வயதாக வயதாக நம் உறுப்புகள் பழுதடைகின்றன. ஒன்றைவிட்டு ஒன்று விலகத் தொடங்குகின்றன. நிலைமைகள் அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்ப்போலச் செல்கின்றன. நாம் சிரித்தாலும் அழுதாலும் அவை தங்கள் வழியிலேயே செல்கின்றன. நாம் எப்படி வாழ்ந்தாலும், இறந்தாலும் அவற்றிற்கு எந்த வேறுபாடும் தெரிவதில்லை. மேலும் இந்த இயற்கை நியதியைத் தடுக்க எந்த அறிவும், அறிவியலும் இல்லை. உங்கள் பற்களை ஒரு பல் மருத்துவரைப் பார்க்கச்சொல்லலாம், ஆனால் அவர் அதை இப்போதைக்குச் சரி செய்தாலும் ஒரு காலக்கட்டத்தில் அவை இயற்கை இயல்புக்குத் தகுந்தார்போல விழுந்து விடுகின்றன. ஏன்? பல் வைத்தியருக்கும் அதே பிரச்சனை தான். இறுதியில் எல்லாம் விழுந்து விடுகின்றன.

நமக்கு வலிமை உள்ள போதே சில வற்றைப் பிரதிபலிக்கவேண்டும், நாம் இளமையாக இருக்கும் போதே பயிற்சி செய்ய வேண்டும். புண்ணியம் சேர்க்க வேண்டுமென்றால் இளமையிலேயே அவசர அவசரமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை வயதாகும் வரை விட்டு விட வேண்டாம். பலரும் வயதான பின்னரே விகாரைக்குச் சென்று அறத்தைப் பயில முயற்சிக்கின்றனர். பெண்களும் ஆண்களும் ஒன்றையே சொல்கின்றனர். "முதலில் எனக்கு வயதாகட்டும்." ஏன் அப்படிச் சொல்கின்றனர் என்று தெரியவில்லை. வயதானவருக்கு அதிக சக்தி இருக்கிறதா? இளம் வயதினரோடு ஓட்டப்பந்தயம் வைத்துப் பார்க்கட்டும், வித்தியாசம் என்ன வென்று தெரியும். ஏன் வயதாகும் வரை தாமதிக்க வேண்டும்? அவர்கள் சாகப் போவதில்லை என்று நினைப்பது போல. அவர்களுக்கு ஐம்பது அறுபது ஆண்டு வயதான பின்.. "ஆ, பாட்டி, நாம் விகாரைக்குச் செல்லலாம்!" என்று கூப்பிட்டால், "நீ போய் வா, எனது காது முன்பு போல் சரியாகக் கேட்பதில்லை." நான் சொல்வது விளங்குகிறதா? அவர் காது நன்றாக இருந்த போது எதைக் கேட்டுக் கொண்டிருந்தார்? "எனக்குத் தெரியவில்லை!"... நெல்லிகாய் பறித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ!. இறுதியில் காது போன பின் விகாரைக்குச் செல்கிறார். அது பயனில்லை. போதனையைக் கேட்கிறார் ஆனால் என்ன சொல்கின்றனர் என்பது விளங்கவே இல்லை. மக்கள் எல்லாம் உடைந்து போனபின்னர்தான் அறத்தைப் பயில்வது பற்றி எண்ணுகின்றனர்.

இன்றைய போதனை, அதைப் புரிந்து கொண்டோருக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இது போன்றவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இவையே நமது பரம்பரைச் சொத்து. அவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்தப் பாரம் நாம் ஒவ்வொருவரும் சுமக்க வேண்டிய பாரம். ஒருகாலத்தில் எனது கால்கள் வலிமையாக இருந்தன. என்னால் ஓட முடிந்தது. ஆனால் இப்போதோ நடந்தாலே பாரமாகத் தெரிகின்றது. ஒருகாலத்தில் எனது கால்கள் என்னைத் தூக்கிச் சென்றன. இப்போது நான் அவற்றைத் தூக்கிச் செல்கிறேன். சிறுவயதில் வயதானோர் அவர்கள் இருக்கையிலிருந்து எழ முயல்வதைப் பார்ப்பேன்... "ஓ!" எழும்போது புலம்புவார்கள், "ஓ!" எப்போதும் இந்த "ஓ!" இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏன் இப்படிப் புலம்புகின்றோம் என்பது தெரிவதில்லை.

இந்த நிலைக்குச் சென்ற பின்னரும் மக்கள் தங்கள் உடலின் கொடுமையைப் பார்ப்பதில்லை. எப்போது அதைவிட்டுப் பிரியவேண்டியிருக்கும் என்பது தெரியாது. நிலைமைகள் அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்போல் செல்வதாலேயே உடலின் வலி எல்லாம் தோன்றுகிறது. மக்கள் அதனை மூட்டு வலி, கீல் வாதம், மூட்டு வீக்கம் என்றெல்லாம் சொல்கின்றனர், மருத்துவரும் மருந்து தருகிறார், ஆனால் அதனாலும் முழுமையாகக் குணமாவதில்லை. இறுதியில் எல்லாம் உடைந்து விழுகிறது, மருத்துவரும் தான்! நிலைமைகள் தங்கள் இயல்புக்குத் தகுந்தார்ப்போலச் செல்கின்றன. இது அவற்றின் வழி, அவற்றின் இயற்கை.

இப்போது இதனைக் கவனிக்கவும். பாதையில் விஷப்பாம்பைப் பார்த்து விடுவதைப் போல. முன்னரே பார்த்துவிட்டால் உங்களுக்கு நல்லது. அதை முதலிலேயே பார்த்துவிட்டால் நாம் விலகிச் சென்று கடிபடாமல் இருந்துவிடலாம். அதைப் பார்க்காவிட்டால் நடந்து செல்லும்போது அதை நாம் மிதித்து விடக்கூடும். பின் அது நம்மைக் கடித்துவிடும்.

துக்கம் எழுந்தால் மக்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. எங்கு சென்று சிகிச்சை செய்வது? துக்கத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். துக்கம் இல்லாமல் இருக்க விருப்பம். ஆனால் துக்கம் எழுந்தால் அதை எப்படி விலக்குவது என்று தெரிவதில்லை. இப்படியே வயதாகும் வரை வாழ்ந்து.. நோய்ப் பட்டு.. இறந்துபட்டு...

முற்காலத்தில் யாராவது மரணப்படுக்கையில் இருக்கும் போது அவர்கள் காதுகளில் உறவினர்கள் "புத்-தோ, புத்-தோ" என்று சொல்வது வழக்கம். அவர்கள் 'புத்தோ'வுடன் என்ன செய்யப் போகின்றனர்? சுடுகாடு செல்லும் நேரத்தில் புத்தோ எப்படி உதவப்போகிறது? இளம் வயதிலும் வலிமை இருக்கும் போதும் ஏன் புத்தோவைக் கற்க வில்லை? இப்போது மூச்சுத் திணறும் போது அவரிடம் சென்று, "அம்மா,,,புத்தோ, புத்தோ!" என்று கூறுகின்றனர். ஏன் நேரத்தை வீணாக்குகின்றீர்கள்? அவரை மேலும் குழப்பத்தான் போகின்றீர்கள். விட்டு விடுங்கள் அவர் நிம்மதியாகப் போகட்டும்.

மக்களுக்குத் தங்கள் உள்ளத்தினுள்ளே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு அடைக்கலம் ஏதும் இல்லை. எளிதாகக் கோபத்தின் வசப்படுகின்றனர். ஏராளமான ஆசைகளைச் சுமந்து கொண்டுள்ளனர். இது ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு அடைக்கலம் ஏதும் இல்லை.

புதிதாகத் திருமணம் ஆனபோது அவர்கள் நன்கு இணைந்து வாழ்கின்றனர். ஆனால் ஐம்பது வயது தாண்டியபின் அவர்களால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிவதில்லை. மனைவி சொல்வதைக் கணவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கணவன் சொல்வதை மனைவி காது கொடுத்துக் கேட்பதே இல்லை. இருவரும் எதிரும் புதிருமாகத் (முகத்தை முகம் பார்க்காமல்) திரும்பி நின்று கொள்கின்றனர்.

எனக்குக் குடும்பம் இல்லாததால் நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏன் குடும்பத்தோடு இருக்கவில்லை? "வீட்டுக்காரர்" [4] என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே அது எதைப் பற்றியது என்பதைத் தெரிந்து கொண்டேன். "வீட்டுக்காரர்" என்றால் என்ன? இது ஒரு "பிடிப்பு" (வீட்டோடு இணைக்கப்பட்டவர்) : இங்கு உட்கார்ந்திருக்கையில் யாராவது நம் அனைவரையும் ஒரு கயிற்றால் கட்டிப் போட்டால் அது எப்படி இருக்கும்? அது தான் "பிடி பட்டு" விட்டதன் பொருள். அது எப்படியோ "பிடிபட்டிருப்பதும்" அப்படியே. இது தான் ஒரு வட்டத்தினுள் கட்டுபடுத்தப் படுவது என்பது. ஆண் அவனது வட்டத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்றான், பெண்ணும் அவளது வட்டத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்றாள்.

நான் இந்த "வீட்டுக்காரர்" என்ற வார்த்தையைப் படித்தவுடனேயே...இது கனமான வார்த்தை என்பதை அறிந்தேன். இது சாதாரண வார்த்தையல்ல, இது ஒரு உயிர் கொல்லி. "பிடிப்பு" என்பது துக்கத்தின் ஒரு சின்னம். நீங்கள் எங்கும் செல்ல முடியாது, நீங்கள் உங்கள் வட்டத்தினுள் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்து "வீடு" என்ற வார்த்தைக்கு வருவோம். இதன் பொருள் "அவதிப் படுத்துவது." எப்போதாவது நீங்கள் மிளகாயை அடுப்பில் வறுத்திருக்கின்றீகளா? வீடு முழுவதுமே இருமித் தும்மிக் கொண்டிருக்கும். இந்த "வீட்டுகாரர்" என்ற வார்த்தை குழப்பத்தைக் குறிக்கிறது. அதில் உள்ள பிரச்சனைகள் அதிகம். இந்த ஒரு வார்த்தையின் காரணமாகவே நான் துறவறம் பூண முடிந்தது. துறவறத்தை விட்டு விலகாமலும் இருக்க முடிந்தது. "வீட்டுக்காரர்" என்றாலே நடுங்க வைக்கிறது. வீட்டினுள் மாட்டிக் கொண்டு எங்கும் போகமுடிவதில்லை. குழந்தைகளோடு பிரச்சனை, பணப்பிரச்சனை எல்லாவற்றோடும் பிரச்சனை. ஆனால் எங்கு செல்வது? கட்டிப் போடப்பட்டிருக்கின்றீர்கள். ஆண், பெண் பிள்ளைகள் இருக்கின்றனர், சாகும் வரை ஏகபட்ட வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வளவு தான் துன்பம் அனுபவித்தாலும் செல்வதற்கு வேறு இடம் இல்லை. கண்களில் நீர் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த "இல்லற" வாழ்க்கையில் கண்ணீர் முடிவதே இல்லை. "இல்லறம்" இல்லாவிட்டால் கண்ணீரை முடித்துக் கொள்ளலாம், இருக்கும் வரை கண்ணீருக்கு முடிவே இல்லை.

இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை எதிர்ப்பட வில்லையென்றால் எதிர்காலத்தில் எதிர்ப்படலாம். சிலர் ஓரளவு ஏற்கனவே அனுபவித்திருக்கின்றனர். சிலர் ஏற்கனவே சமாளிக்க முடியாத நிலைக்கு அருகில் இருக்கின்றனர்.... "நான் இருப்பதா அல்லது செல்வதா?" வாட் பா போங் விகாரையில் எழுபது, எண்பது குடிசைகள் [1] இருக்கின்றன. அவை கிட்டத்தட்ட நிரம்பியிருக்கும் போது அவற்றை நிர்வாகிக்கும் துறவியிடம் ஒரு சில குடிசைகளைக் காலியாக வைத்திருக்குமாறு கூறுவேன். ஒரு வேலை யாராவது தங்கள் கணவன்/மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டால் அவர்களுக்காக...ஏன் சொல்லிமுடிப்பதற்குள் ஒரு பெண் தன் மூட்டை முடிச்சுகளுடன் வருவார்..."இந்த உலகம் போதும் போதும் என்றாகிவிட்டது. லுவாங் போர் (ஐயா[2] )" என்பார். "ஓ! அப்படிச் சொல்லாதீர். அவை மிகவும் கனமான வார்த்தைகள்." பின் அவள் கணவனும் வந்து தனக்கும் போதும் போதும் என்றாகிவிட்டதாகக் கூறுவார். விகாரையில் இரண்டு, மூன்று நாட்கள் கழிந்தபின் அவர்களது உலகின் மீதான மோகக் குறைவு மறைந்து விடும்.

உலக மோகம் குறைந்து விட்டதாகக் கூறுகின்றவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். குடிசைக்குச் சென்று தனியாக அமைதியில் இருக்கும் போது எண்ணங்கள் மீண்டும் வருகின்றன..."மனைவி வந்து எப்போது என்னை வீட்டுக்குப் போகலாம் என்றழைப்பாள்?" என்று காத்திருப்பார். என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த உலகின் மீதான அவர்களது "மோகக் குறைவு" எப்படிப்பட்டது? ஏதோ ஒரு காரணத்தால் மனக்கசப்பு உண்டாகி விகாரைக்கு ஓடிவந்து விடுகின்றனர். வீட்டில் உள்ள போது நடப்பதெல்லாம் தவறாகப் பட்டது..கணவன் தவறு செய்தான், மனைவி தவறு செய்தாள். மூன்று நாள் அமைதியாகச் சிந்தித்த பின்.."ஊம், மனைவி சரியாகத்தான் சொன்னாள், நான் தான் தவறு செய்து விட்டேன்." "கணவன் சரியாகத்தான் சொன்னார். நான் அவ்வளவு கோபப்பட்டிருக்கக் கூடாது." இடம் மாற்றிக் கொள்கின்றனர். இதுதான் நடக்கிறது, அதனால் தான் உலக நடத்தையில் நான் அதிக அக்கறை காட்டுவதில்லை. அதன் அகமும் புறமும் தெரிந்து கொண்டேன். அதனாலேயே நான் துறவியாக வாழத் துறவு பூண்டேன்.

இன்றைய போதனையை இங்குள்ள இல்லறத்தார் அனைவருக்கும் வழங்குகிறேன். நீங்கள் காட்டில் வேலைசெய்தாலும் நகரங்களில் வேலை செய்தாலும் இந்த வார்த்தைகளை எடுத்துக் கொண்டு பிரதிபலியுங்கள்..."நான் ஏன் பிறந்தேன்? நான் என்னோடு எதை எடுத்துக் கொண்டு போகமுடியும்?" இதையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்ளுங்கள். இதை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தீர்களென்றால் நீங்கள் மெய்யறிவு பெறுவீர்கள். இதைப் பிரதிபலிக்கவில்லை யென்றால் நீங்கள் அறியாமையுடன் தான் இருப்பீர்கள். இன்றைய போதனையைக் கேட்ட பிறகு உங்களுக்குச் சற்று விளங்கியிருக்கும், இப்போது விளங்கவில்லையென்றாலும் வீட்டுக்குச் சென்ற பிறகு விளங்களாம். அல்லது இன்று மாலை விளங்களாம். போதனையைக் கேட்கும் போது எல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆனால் வாகனத்தில் இவ்விளக்கங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவோ என்னவோ? வாகனத்துள் ஏறும் போது அவையும் உங்களுடன் எறிக் கொள்ளும். வீட்டுக்குச் சென்றவுடன் எல்லாம் விளங்கிவிடும்..."ஓ, அதுதான் லுவாங் போர் குறிப்பிட்டது. அதை முன்னர் நான் அறிந்து கொள்ளவில்லை. இப்போது புரிகிறது!"

இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். நான் அதிகம் பேசினால் இந்த வயதான உடல் சோர்வடைந்து விடுகிறது.

* * * * * *

[1] பௌத்த நாடுகளில் விகாரைகளில் இல்லற மக்கள் வந்து ஒரு சில நாட்கள் தங்க இடவசதி இருக்கும். இல்லற மக்கள் தங்கள் வேலை மற்றும் மன அழுத்தங்களைச் சமாளிக்க விகாரைக்குச் சென்று ஒரு சில நாட்களைக் கழித்து விட்டு மன அமைதியோடு விடு திரும்புவது வழக்கம்.

[2] லுவாங் போர்: தாய்லாந்து நாட்டில் பல வருடங்களாகத் துறவறம் பூண்ட, மிகவும் மரியாதைக்குரிய துறவிகளை லுவாங் போரென்று அழைப்பது வழக்கம். லுவாங் என்றால் தாய் மொழியில் 'போற்றுதற்குரிய' என்று பொருள். 'போர்' என்பது தாய் மொழியில் தந்தை அல்லது ஐயா என்று பொருள்.

* * * * * * *

© Copyright

Provenance: 1992 The Sangha at Wat Pah Nanachat. First impression, 1992. Transcribed from the print edition in 1994 by David Savage under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.

Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.

"Living Dhamma", by Venerable Ajahn Chah, translated from the Thai by The Sangha at Wat Pah Nanachat. Access to Insight, 1 December 2012,

http://www.accesstoinsight.org/lib/thai/chah/living.html . Retrieved on 23 August 2013.

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

http://bautham.net/