11-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே -அதன்

முந்தைய ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே -அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே -இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி ,என்

வாயுற வாழ்த்தேனோ -இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

-----

.இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்

ஈந்ததும் இந்நாடே -எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே -அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே -தங்கள்

பொன்னுடலின்புற நீர்விளையாடி இல்

போந்ததும் இந்நாடே -இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

------------

.மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே -அவர்

தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித்

தழுவியதும் இந்நாடே -மக்கள்

துங்கமுயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே -பின்னர்

அங்கவர் மாய அவருடற் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே -இதை

வந்தே மாதரம்,வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?"