11-
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -அதன்
முந்தைய ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி ,என்
வாயுற வாழ்த்தேனோ -இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
-----
.இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே -எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே -அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே -தங்கள்
பொன்னுடலின்புற நீர்விளையாடி இல்
போந்ததும் இந்நாடே -இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
------------
.மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே -அவர்
தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித்
தழுவியதும் இந்நாடே -மக்கள்
துங்கமுயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே -பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே -இதை
வந்தே மாதரம்,வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?"