08-

தொன்று நிகழ்ந்த அனைத்தும் உணர்ந்திடு

பைரவி - ராகம்

ஸ்ரீமதி டி.கே பட்டம்மாள்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்-இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம்எங்கள் தாய்.



யாரும் வகுத்தற் கரிய பிராயத்த

ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்

பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்

பயின்றிடு வாள் எங்கள் தாய்.


முப்பது கோடி முகமுடை யாள்உயிர்

மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்

செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.



நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுடை யாள்-தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடை யாள்.


அறுபது கோடி தடக்கைக ளாலும்

அறங்கள் நடத்துவள் தாய்-தனைச்

செறுவது நாடி வருபவ ரைத்துகள்

செய்து கிடத்துவள் தாய்.


பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்

புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில்

தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்

துர்க்கை யனையவள் தாய்.



கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்


கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்


ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்

ஒருவனை யுந்தொழு வாள்


யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்

ஒன்றென நன்றறி வாள்-உயர்

போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்

பொற்குவை தானுடை யாள்.

8




நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரி வாள்எங்கள் தாய்-அவர்

அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடு வாள்.

9



வெண்மை வளர் இமாச்சலம் தந்த

விரான் மகளாம் எங்கள் தாய்.

அவள்

திண்மை மறையினும் தான் மறையாள்

நித்தம் சீர் உருவாள் எங்கள் தாய் !



எங்கள் தாய் !

எங்கள் தாய் !