உ
ஸ்ரீ சங்கர அக்ஷரமாலை
- ம. சத்ய ப்ரஸாத் (நவம்பர், 1997. கனடா)
---
காப்பு (வெண்பா)
தந்தமுடைத்து வ்யாஸருக் குதவவந்த கரிமுகனைச்
சிந்தைபிசகாது நினைத்துருகி, விந்தையெனக் கணத்தில்
துதிப்போர்தம் முன்வினைப்பிணி யகற்றவல்ல கணபதியென்னும்
துதிக்கை யுடையானைப் பணிவோமே!
---
காப்பு (குறள் வெண்பா)
சீறுடன்வாழச் சிறுமையகற்றிச் சிந்தைசீர் திருத்தவல்ல
அருணகிரி வாழ்சத் குருவேதுணை
---
நூல் (அகவல்)
அன்பினாலாட் கொண்டுவருண் மழைவெள்ளம் பொழிகின்ற,
உன்திருவி ழியினாலே கவர்ந்திட்ட பெருமானே!
ஞானமேது மில்லாம லலையுமென துள்ளத்தை
ஞாயிரொளி போலநீயுங் கதிர்வீசச் செய்வாயே.
---
ஆசையுட னோடிவந்துன் மலரடிதொ ழூதவென்,
பூசையின்சி றப்புணர்ந்து கடைக்கண்பார் வைகாட்டி,
ஓசையற்ற தக்ஷிணா மூர்த்தியான யிறையோனே!
ஓங்காரப் பொருளுணர்த்த விக்கணமே வருவாயே.
---
இன்சொலினு றைவிடமாய் தவக்கோல மாயமர்ந்து,
இருமாப்பே யில்லாஅத் வைதமுழுப் பொருளோனே!
வருவாய்க்கடி பணிந்தென்போ லறியாம லுழல்வோரை,
வருவாய்யென் றழைத்துஞான வமுதூட்ட வேண்டுகிறேன்.
---
ஈனமாய்வாழ் வார்க்கும்பல தருமமெடுத் துரைத்து,
ஈன்றதாய்போ லன்புடன்நல் வழியினையே காட்டும்,
உண்மையினுரு வானதிருக் கைலயின் நாதராம்,
உமையொருபா கம்கொண்ட வன்பதம்ப ணிந்தேனே!
---
உறுதியுட னோடிவந்துன் தாளடைந்த வெளியோனைச்,
சிறிதும்சோதி யாமலுன்னு ளைக்கியமாக் கிக்கோண்டு,
ஈராறாண் டுகளாய்யான் கட்டும்மனக் கோவிலுள்ளே,
ஓராறுமுக னேபுகுபின் கட்டுவேலை பூரணமே!
---
ஊக்கமளித் தொன்றுமறி யாப்பேதை பக்திக்கு,
ஊன்றுகோலா யுன்னுபதே சம்துணையி ருந்துமென்,
ஊர்சுற்றும் குருவிபோல்நி லையறியா மனந்தன்னில்,
ஊற்றுநீர்போல் பொங்குபக்தி வந்தடைவ தெந்நாளோ?
---
எட்டும்தூர மிருந்தால்சூரி யனேசுடுவா னென்பதாலே,
எட்டுகோடி ஞாயிறென்ற இருமாப்பி னால்பிரிந்து,
கிட்டாத்தொ லைவில்நீயும் எட்டியேயி ருந்தாலும்,
ஒட்டுமெந்தன் பக்தியுன்னை இறுகக்கட்டி யிழுத்திடுமே!
---
ஏங்கிப்பரித வித்திரையருளிற் குக்காத்திருக்கும் குற்
ஏவலனைக்கை விடாமல்நற்கா வலனாய்விரைந் தோடி,
ஏமாற்றாமல் யெப்பொழுதுமரு கிருந்துகீழோ னெனை,
ஏணிபோலமே லேற்றநின்தாள் சரணமடைந் தேனே!
---
ஐம்புலத்தை யுன்னிடத்தி லொப்படைக்கிறேன்; மாற்றாய்,
அறுசுவையு ணவினுமருஞ் சுவைநினதருள் தந்து,
எழுபிறப்பிலு முனைமறவா நிலைக்கிட்டுச் சென்று,
எட்டுத்திக்கிலு முனதழகிய வடிவொன்றே காட்டு.
---
ஒப்பற்ற பரம்பொருளே, பற்றற்ற தவச்சுடரே!
துப்பற்ற வெனைக்கழுகெ னக்கவர்ந்த முதலோனே!
ஊழ்வினைதீர்க் கத்தறிகெட் டோடுமெந்தன் மனந்தன்னை,
உள்திருப்பி யெனையறிய வழிசெய்வாய் ஐயனே!
---
ஓடியா டிப்பாடித் துள்ளிமகிழ்ந் துலவினாலும்,
ஓலமிட் டொடுங்கிவெம்மி யழுதுபு ரண்டாலும்,
பிறவிக்க டல்கடக்கு மோடமான குருநாதா,
பிரியாம லருகிருக்க ஓடோடி நீவாவா!
---
ஔடதம்நின் கருணையா மறியாமை போக்குமது,
ஔவைக்குக் கொடுத்துமெய் யழகுமெய் கெடுத்துப்பின்
கூனுடன்தேன் போன்றினிய கவியைத்தந் தோனே,நீ,
கூறுவதெது வோவஃதே தொண்டர்தமக் காணை!
---
நீர்நிறை கங்கை வாழி!
நீருடல் சங்கரர் வாழி!
நீரக்ஷரமாலை ஓதி வாழி!
---
திருச்சிற்றம்பலம்!
-x-
Back to table of contents