மத்தேயு மாற்கு லூக்கா யோவான் நற்செய்திகளின் தொகுப்பு
1. இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்
எருசலேம் கிபி 33 வெள்ளி
உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்
இயேசு, சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு சென்றார். வேறு இரண்டு குற்றவாளிகளையும், மரணதண்டனைக்காக, அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையும், சிரேன் ஊரைச் சேர்ந்தவருமான சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். படைவீரர்கள் அவரைப் பிடித்து, அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோக அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
பெருந்திரளான மக்களும், அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும், அவர் பின்னே சென்றார்கள்.
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக, உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில், இதோ, ஒரு காலம் வரும். அப்போது 'மலடிகள் பேறுபெற்றோர்' என்றும், 'பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்' என்றும் சொல்வார்கள்.
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்கள் மேல் விழுங்கள்' எனவும், குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்" என்றார்..
சிலுவையில் அறைந்தார்கள் கொல்கொதா கிபி 33 வெள்ளி
அவர்கள் ’மண்டை ஓட்டு இடம்’ என்னுமிடத்திற்கு இயேசுவைக் கொண்டுசென்றார்கள். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
இயேசுவுக்குக் கசப்பு (வெள்ளைப் போளம்) கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவைபார்த்தபின், குடிக்க விரும்பவில்லை.
அங்கே அவர்கள், இயேசுவையும் அவரோடு இரு கள்வர்களையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் வலப்புறம் ஒருவனும், இடப்புறம் ஒருவனுமாகவும், இயேசுவை நடுவிலுமாகச் சிலுவையில் அறைந்தார்கள்.
அவரது தலைக்குமேல், அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். பிலாத்து, குற்ற அறிக்கை ஒன்று எழுதி, அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ’நாசரேத்து இயேசு, யூதர்களின் அரசன்’ என்று எழுதியிருந்தது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால், யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ’யூதரின் அரசன்’ என்று எழுத வேண்டாம்; மாறாக, ’யூதரின் அரசன் நான்’ என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து, ’நான் எழுதியது எழுதியதே’ என்றான்..
2. சிலுவையில் இயேசுவின் இறுதி வார்த்தைகள்
I. தந்தையே, இவர்களை மன்னியும்
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. (அப்போது இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என்று சொன்னார்.)
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின், படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து, ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர்.
அந்த அங்கி, மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ’அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்’ என்றார்கள். ’என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து. என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்’ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
பின்பு, அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்
இறைமகன் என்றால் இறங்கி வா
அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ’ஆகா திருக்கோவிலை இடித்து, மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா’ என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.
ஆட்சியாளர்கள், ’பிறரை விடுவித்தான், இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும். என்று கேலி செய்தார்கள்.
குருக்களின் எளனம்
அவ்வாறே, தலைமைகுருக்கள், மறைநூல்-அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ’இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம், இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்.
கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும்.
’நான் இறைமகன்’ என்றானே, பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
படைவீரர் அவரிடம் வந்து, புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, ’நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்’ என்று எள்ளி நகையாடினர். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
II. நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ’நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று’ என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, ’கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!’ என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், ’இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்’ என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.
III. அம்மா இவரே உம் மகன், இவரே உம் தாய்
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.
இயேசு, தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச்சீடரையும் கண்டு, தம் தாயிடம், அம்மா, ’இவரே உம் மகன்’ என்றார். பின்னர் தம் சீடரிடம், ’இவரே உம் தாய்’ என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று, ஆதரவு அளித்து வந்தார்.
IV. இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல், பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை.
பிற்பகல் மூன்று மணிக்கு, இயேசு, ’எலோயி, எலோயி, லெமா சபக்தானி?’ என்று உரத்த குரலில் கத்தினார். ’'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?’' என்பது அதற்குப் பொருள். அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ’இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்’ என்றனர்.
V. தாகமாய் இருக்கிறது
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, ’தாகமாய் இருக்கிறது’ என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.
மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்’ என்றார்கள்.
VI. எல்லாம் நிறைவேறிற்று
அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, ’எல்லாம் நிறைவேறிற்று’ என்று கூறினார்.
VII. உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்
தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ என்று இயேசு உரத்த குரலில் கூறி, தலை சாய்த்து, ஆவியை ஒப்படைத்தார்
அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து, எருசலேம் திருநகரத்திற்குச் சென்று, பலருக்குத் தோன்றினார்கள்.
அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவரும், அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும், நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு, மிகவும் அஞ்சி, ’இவர் உண்மையாகவே இறைமகன்’ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்துவந்த பெண்களும், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடையே, மகதலா மரியாவும், சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், செபதேயுவின் மக்களுடைய தாயும், சலோமி என்பவரும் இருந்தார்கள்.
இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும், நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்.
இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தது,
3. இயேசுவின் உடல் அடக்கம்
அடக்கம் செய்த அரிமத்தியா யோசேப்பு வெள்ளி
மாலை வேளையானதும், யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார்.
அவர், மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காதவர் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால், தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர்.
அவர் துணிவுடன் பிலாத்திடம் போய், இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோக அனுமதி கேட்டார்.
ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, "அவன் இதற்குள் இறந்து விட்டானா?" என்று கேட்டார். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும், உடலை அவன் யோசேப்பிடம் அளிக்க அனுமதி கொடுத்தார்
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடுசெய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும், பெருநாளாகவும் இருந்தது. எனவே, அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காக, கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு, யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.
ஆகவே, படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர், மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.
பின்பு, அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு, அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால், படைவீரருள் ஒருவர், இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். ’எந்த எலும்பும் முறிபடாது’ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் ’தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்’ என்றும் மறைநூல் கூறுகிறது.
நறுமணப் பொருள் கொண்டுவந்த நிக்கதேம்
யோசேப்பு வந்து, இயேசுவின் உடலை இறக்கி எடுத்துக்கொண்டு போனார்.
யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்தார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து, ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.
அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து, யூத அடக்க முறைப்படி, நறுமணப் பொருள்களுடன், தூய்மையான மெல்லிய துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.
கல்லறைத் தோட்டம்
அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே, யோசேப்பு தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.
அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகில் இருந்ததாலும், அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள். அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டிவைத்துவிட்டுப் போனார்கள்.
அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும், யோசேப்பின் தாய் மரியாவும், கல்லறைக்கு எதிரே உட்கார்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள், பின்தொடர்ந்து சென்று, கல்லறையைக் கண்டார்கள். அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
சனி
கல்லறைக்குக் காவல்
மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.
அவர்கள், ’ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ’மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால், மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல்செய்யக் கட்டளையிடும்.
இல்லையெனில், அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து, அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ’இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது, முந்தின ஏமாற்றுவேலையை விடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் என்றனர்.
அதற்குப் பிலாத்து அவர்களிடம், ’உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல்செய்யுங்கள்’ என்றார்.
அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல்செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
4. உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?
உயிர்தெழுந்த ஞாயிறு
முதல் நாள் விடியற் காலையில், திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து, கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி, அதன்மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும், அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல்வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்
கல்லறைக்குச் சென்ற பெண்கள்
வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு, அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.
முதல் நாள் விடியற் காலையில், இருள் நீங்கும் முன்பே, மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, யோவன்னா, சலோமி, என்பவர்களும், அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும், தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு கல்லறைக்குச் சென்றார்கள். "கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?" என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.
வெற்றுக் கல்லறை
கல்லறைக்கு வந்த பெண்கள் நிமிர்ந்து உற்றுநோக்கியபொழுது, கல்லறை வாயிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள்.
எனவே, மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும், இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.
பேதுருவும் இயேசுவின் அன்புச் சீடரும்
இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.
அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
பின்பு சீடர்கள் நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
முதன்முறையாக இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றுதல்
மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில், ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லை" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை.
இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன் என்றார்.
இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு 'போதகரே' என்பது பொருள்.
இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், 'என் தந்தையும், உங்கள் தந்தையும், என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல் என்றார்.
மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் "நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார். தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும், மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
மற்ற பெண்கள் இயேசுவைக் கண்டார்கள்
மகதலா மரியாவுடன் வந்த மற்ற பெண்கள் கல்றைக்குள் சென்றபோது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடைஅணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அப்பெண்களை நோக்கி, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே. பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள் என்றார்கள்.
அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு, கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய், இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்பினார்கள்
கல்லறையைவிட்டு அப்பெண்கள் போய்க்கொண்டிருந்தபோது, காவல்வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.
அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ’நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச்செய்து, நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்’ என்று அவர்களிடம் கூறினார்கள்.
அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.
5. எம்மாவுக்குச் சென்ற சீடரும் இயேசுவும்
உயிர்தெழுந்த ஞாயிறு
அதன்பிறகு அதே நாளில், சிடர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள்.
இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும், வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்துசென்றார். ஆனால், அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
அவர் அவர்களை நோக்கி, ’வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?’ என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
அவர்களுள், கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர், அவரிடம் மறுமொழியாக, ‘எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!’ என்றார்.
அதற்கு அவர் அவர்களிடம், ’என்ன நிகழ்ந்தது?’ என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், ’நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும், மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும், செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப்போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.
ஆனால், இன்று, எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர், எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும், இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை’ என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, ’அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!’ என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.
அவர்கள் அவரிடம், ‘எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று’ என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள்.
அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ’வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?’ என்று பேசிக் கொண்டார்கள்.
அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், ’ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்’ என்று சொன்னார்கள்.
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார் என்பதையும், அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
ஆனால், அவர்கள் சொன்னதையும் சீடர்கள் சிலர் நம்பவில்லை.
6. இயேசு சீடர்களுக்கு முதன்முறை தோன்றினார்
எருசலேம் கிபி 33 உயிர்தெழுந்த ஞாயிறு
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தார்கள். யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அது மாலை வேளை. அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது, இயேசு அங்கு வந்து, அவர்கள் நடுவில் நின்று, ’உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று அவர்களை வாழ்த்தினார். எனவே, அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
என்னைத் தொட்டுப் பாருங்கள்
அதற்கு அவர், ’நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப்பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே’ என்று அவர்களிடம் கூறினார்;
இவ்வாறு சொல்லியபின், அவர் தம் கைகளையும், கால்களையும், விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.
உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல், அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால், அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.
அப்போது அவர் அவர்களிடம், ’உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?’ என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து, அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
சீடர்களுக்கு இயேசுவின் கடைசிக் கட்டளை
பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ’மோசேயின் சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும், திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேறவேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே’ என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.
அவர் அவர்களிடம், ’மெசியா துன்புற்று இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், “பாவமன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்” என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ’உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்’ என்றார். இதைச் சொன்ன பின், அவர் அவர்கள்மேல் ஊதி, ’தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா’ என்றார்.
இயேசு அவர்களை அணுகி, ’உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்’ என்று கூறினார்.
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்’ என்றார்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ’ஆண்டவரைக் கண்டோம்’ என்றார்கள்.
தோமா அவர்களிடம், ’அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்’ என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின், அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார்.
பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது, அவர்களுக்கு இயேசு தோன்றினார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும், இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ’உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், ’இதோ! என் கைகள், இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்’ என்றார்.
தோமா அவரைப் பார்த்து, ’நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!’ என்றார்.
இயேசு அவரிடம், ’நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்’ என்றார்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
7. இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றினார்
கலிலேயா கிபி 33
பின்னர், இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:
சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,
அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ’நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்றார். அவர்கள், ’நாங்களும் உம்மோடு வருகிறோம்’ என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், ’பிள்ளைகளே! மீன் ஒன்றும் அகப்படவில்லையா?’ என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ’இல்லை’ என்றார்கள்.
அவர், ’படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்’ என்று அவர்களிடம் கூறினார்.
இரண்டாம்முறை பெருந்திரளான மீன்களைப் பிடித்த பேதுரு
அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
இயேசுவின் அன்புச் சீடர் அதைக்கண்டு பேதுருவிடம், ’அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்’ என்றார்.
அதைக் கேட்டவுடன், தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு, ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.
மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகைவிட்டு இறங்கியவுடன், கரியினால் தீ மூட்டியிருப்பதையும், அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.
இயேசு அவர்களிடம், ’நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்’ என்றார்.
சீமோன் பேதுரு படகில்ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
இயேசு அவர்களிடம், ’உணவருந்த வாருங்கள்’ என்றார். சீடர்களுள் எவரும், ’நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு, தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
உனக்கு என்னிடம் அன்பு உண்டா?
அவர்கள் உணவருந்தியபின், இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?’ என்று கேட்டார்.
அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்’ என்றார்.
இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ’யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?’ என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ’ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!’ என்றார். இயேசு அவரிடம், ’என் ஆடுகளை மேய்’ என்றார்.
மூன்றாம்முறையாக இயேசு அவரிடம், ‘யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று கேட்டார். உனக்கு என்மீது அன்பு உண்டா? என்று இயேசு மூன்றாம்முறை கேட்டதால், பேதுரு துயருற்று அவரிடம், ‘ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே. எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா’ என்றார்.
பேதுருவின் மாட்சியான மரணத்தை இயேசு அறிவித்தார்.
இயேசு அவரிடம், ’என் ஆடுகளைப் பேணி வளர், ’நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது, நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்’ என்றார்.
பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், ’என்னைப் பின்தொடர்’ என்றார்.
நான்காம் நற்செய்தியை எழுதிய அன்புச் சீடர்
பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது, இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ’ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?’ என்று கேட்டவர்.
அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ’ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?’ என்ற கேட்டார்.
இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா’ என்றார்.
ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?’ என்றுதான் கூறினார்.
இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.
இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
8. இயேசுவின் விண்ணேற்றம்
கலிலேயா
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.
’விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று கூறினார்.
பெத்தானியா, ஒலிவமலை கிபி 33
பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.