1. யாரைத் தேடுகிறீர்கள்? நான்தான் என்றார்
எருசலேம் கிபி 33 வியாழன்
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, இதோ, மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு, விளக்குகளோடும், பந்தங்களோடும், படைக்கலங்களோடும் அங்கே வந்தான். அவனோடு, படைப் பிரிவினரும், தலைமைக் குருக்கள், மறைநூல்-அறிஞர், மூப்பர், பரிசேயர் ஆகியோர் அனுப்பிய காவலர்களும், பெருங்கூட்டமான மக்களும் வாள்களோடும், தடிகளோடும் வந்தார்கள்.
இயேசு அவர்கள்முன் சென்றார், நான்தான் என்றார்
தமக்கு நிகழப்போகிற அனைத்தையும் இயேசு அறிந்து, அவர்கள்முன் சென்று, ’யாரைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அவர்கள் மறுமொழியாக, ’நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்’ என்றார்கள். இயேசு, ’நான்தான்’ என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். ’நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும், அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
’யாரைத் தேடுகிறீர்கள்?’ என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், ’நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்’ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ’நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போகவிடுங்கள்’ என்றார். ’நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை’ என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
பன்னருவரில் ஒருவனான யூதாசு, ’நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டுபோங்கள்’ என்று காவலர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
அவன் அவர்களுக்குமுன் வந்து, நேராக இயேசுவிடம் சென்று, ’ரபி வாழ்க’ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
இயேசு அவனிடம், ’தோழா, எதற்காக வந்தாய்? யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?’ என்று கேட்டார்.
அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.
வாளை எடுப்போர் வாளால் அழிந்து போவர்
அவரைச் சூழ நின்றவர்கள், நிகழப்போவதை உணர்ந்து, ’ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?’ என்று கேட்டார்கள்.
சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி, அவரது வலக்காதைத் துண்டித்தார். அப்பணியாளரின் பெயர் மால்கு.
இயேசு அவர்களைப் பார்த்து, ’விடுங்கள், போதும்’ என்று கூறி, அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.
துன்பக்கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?
அப்பொழுது இயேசு பேதுருவிடம், ’உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்டமுடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால், அவர் பன்னிரு பெரும்படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பிவைப்பாரே. அப்படியானால், இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல்-வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? தந்தை எனக்கு அளித்த துன்பக்கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?’ என்றார்.
அவ்வேளையில், இயேசு. தம்மிடம் வந்த கோவில் காவல்-தலைவர்களையும், மூப்பர்களையும், மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ’ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல, நீங்கள் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக்கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது. இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன’ என்றார்.
அப்பொழுது, சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். இளைஞர் ஒருவர், தம் வெறும் உடம்பின்மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக்கொண்டு, அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டுவிட்டு, ஆடையின்றித் தப்பி ஓடினார்.
2. தலைமைக் குருவின் மாமனார் அன்னா விசாரணை
எருசலேம் கிபி 33 வியாழன்
பின்னர், அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து, இழுத்துச்சென்று, தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.
படைப்பிரிவினரும், ஆயிரத்தவர் தலைவரும், யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக்குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். இந்தக் கயபாதான், ’மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது’ என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.
சீமோன் பேதுருவும், மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக்குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக்குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.
பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, தலைமைக்குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச்சென்றார்.
பேதுரு இயேசுவை முதன்முறை மறுதலித்தார்
வாயில்காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், ’நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன்தானே?’ என்று கேட்டார்.
பேதுரு, ’இல்லை’ என்றார்.
அப்போது குளிராய் இருந்ததால், பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீமூட்டி, அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் தலைமைக்குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து, காவலரோடு உட்கார்ந்து, நெருப்பின் அருகே குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
தலைமைக் குருவின் விசாரணை
தலைமைக் குரு, இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் இயேசுவிடம் கேட்டார்.
இயேசு அவரைப் பார்த்து, ’நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக்கூடங்களிலும், கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்துவந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே’ என்றார்.
அவர் இப்படிச் சொன்னதால், அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ’தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?’ என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.
இயேசு அவரிடம், ’நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?’ என்று கேட்டார்.
அதன்பின், அன்னா, அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக்குரு கயபாவிடம் அனுப்பினார்.
3. இவன் சாகவேண்டியவன்
எருசலேம் கிபி 33 வியாழன்
இயேசுவைக் கொண்டுவந்த காவலர்கள், தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள் சீமோன் பேதுரு, வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து, காவலரோடு உட்கார்ந்து, நெருப்பின் அருகே குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே என்று கேட்டனர். தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், "நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?" என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். பேதுரு, "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,புரியவுமில்லை என்று மீண்டும் மறுதலித்து, வெளிமுற்றத்திற்குச் சென்றார்.. உடனே சேவல் கூவிற்று.
பொய்ச்சான்று
தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க, அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி தேடினார்கள். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால், அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ’இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து, அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும்’ என்றும், ’மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை, மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன்’ என்றும் இவன் சொல்லக் கேட்டோம்’ என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினார்கள். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.
அப்பொழுது தலைமைக் குரு எழுந்து, அவர்களின் நடுவே நின்று, ’இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?’ என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை.
நானே மெசியா
மீண்டும் தலைமைக் குரு, ’போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்’ என்று அவரைக் கேட்டார்.
நீரே சொல்லுகிறீர்; "நானே அவர்; மேலும், மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும், வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இவன் சாகவேண்டியவன்
உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ’இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ’இவன் சாக வேண்டியவன்’ எனப் பதிலளித்தார்கள்.
காவலர் இயேசுவை அடித்து ஏளனம் செய்தார்கள்
இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் கையால் குத்தினார்கள். அவரது முகத்தை மூடி, ’இறைவாக்கினர் மெசியாவே உன்னை அடித்தவர் யார்? சொல்’ என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்
பேதுரு மூன்றாம்முறை மறுதலித்தார்
பேதுருவைச் சூழ இருந்தவர்களும், "உண்மையாகவே நீயும் அவர்களைக் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்; உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது" என்று மீண்டும் வலியுறுத்திக் கூற, பேதுருவோ, "நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்..
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, இரண்டாம் முறை சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்
அப்பொழுது, "சேவல் இருமுறை கூவுமுன், நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவுகூர்ந்து, மனம் நொந்து அழுதார்.
4. தலைமைச் சங்கத்தின் தீர்ப்பு
கிபி 33 வெள்ளி
பொழுது விடிந்ததும், எல்லாத் தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.
மானிடமகன் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்
அவர்கள், "நீ மெசியா தானா? எங்களிடம் சொல்" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" என்றார்.
அதற்கு அவர்கள் அனைவரும்,"அப்படியானால் நீ இறைமகனா?" என்று கேட்டனர். அவரோ, "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
அதற்கு அவர்கள், "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே" என்றார்கள்.
யூதாசின் தற்கொலை
இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம்வருந்தி, தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ’பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்’ என்றான்.
அதற்கு அவர்கள், ’அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்’ என்றார்கள்.
அதன் பின்பு, அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்.
தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ’இது இரத்தத்திற்கான விலையாதலால், இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல’ என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம்செய்ய அவற்றைக்கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ’இரத்த நிலம்’ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.
’இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து, ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே, அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்’ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.
5. ஆளுநர் பிலாத்துவின் விசாரணை
பிலாத்தின் மாளிகை வெள்ளி
இயேசுவைக் கொல்ல, முப்பரோடும், மறைநூல்-அறிஞரோடும், தலைமைச் சங்கத்தார் அனைவரோடும், தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்தனர். அதன்பின் அவர்கள், கயபாவிடமிருந்து, ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கட்டி இழுத்துச்சென்று, பிலாத்திடம் ஒப்புவித்தனர். திரண்டிருந்த மக்கள் அனைவரும் அவர்களோடு சென்றனர்.
அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப்படாமலிருக்க, ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. எனவே, பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, ’நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?’ என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ’இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம். இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்’ என்று, அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
இயேசு, ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். தலைமைக் குருக்களும், மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது, அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.
பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க, அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார்.
பின்பு பிலாத்து அவரிடம், "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்றார். அவரோ, ஒருசொல் கூட அவருக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே, ஆளுநர் பிலாத்து மிகவும் வியப்புற்றார்.
பிலாத்து யூதர்களிடம், "நீங்கள் இவனைக் கொண்டுபோய், உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்" என்றார்.
யூதர்கள் அவரிடம், "சட்டப்படி நாங்கள் யாருக்கும் மரணதண்டனை விதிக்க முடியாது" என்றார்கள். இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு, இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள்
என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று, இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், ’நீ யூதரின் அரசனா?’ என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக, ’நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது, மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?’ என்று கேட்டார்.
அதற்கு பிலாத்து, ’நான் ஒரு யூதனா என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?’ என்று கேட்டார்.
உண்மையை எடுத்துரைக்கவே நான் உலகிற்கு வந்தேன்
இயேசு மறுமொழியாக, ’எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால், நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல’ என்றார்.
பிலாத்து அவரிடம், ’அப்படியானால் நீ அரசன்தானோ?’ என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ’அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர்’ என்றார்.
பிலாத்து அவரிடம், ’உண்மையா? அது என்ன?’ என்று கேட்டார். இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ’இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே’ என்றார்.
ஆனால் அவர்கள், ’இவன், கலிலேயா தொடங்கி, யூதேயாவரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து, அவர்களைத் தூண்டிவிடுகிறான்’ என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து, ’இவன் கலிலேயனா?’ என்று கேட்டார்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினார்
ஏரோதுவுக்கு இயேசு பதில் கூறவில்லை
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.
அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு நின்ற தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.
ஏரோது, தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து, ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி, அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும், அன்று நண்பர்களாயினர்.
6. பரபாவா? இயேசுவா?
பிலாத்து இயேசுவை விடுவிக்க விரும்பினார்
பிலாத்து, தலைமைக் குருக்களையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் ஒன்றாக வரவழைத்தார்.
அவர்களை நோக்கி, ’மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும், நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார்.
மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்’ என்றார்.
விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.
பரபாவை விடுதலை செய்யும்
மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது, பிலாத்து, அவர்களை நோக்கி ’பாஸ்கா விழாவின்போது, உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?’ என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், ’இவன் வேண்டாம், பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்’ என்று கத்தினர். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். அவன் ஒரு கள்வன். நகரில் நடந்த ஒரு கலகத்தில் கொலைசெய்த கலகக்காரரோடு பிடிபட்டுச் சிறையிலிடப்பட்டவன்.
பிலாத்து, இயேசுவை விடுதலை செய்ய விரும்பி, மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினார். பிலாத்து அவர்களிடம், 'நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?’ என்று கேட்டார். ஏனெனில், தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவர் உணர்ந்திருந்தார்.
ஆனால், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும், இயேசுவைத் தீர்த்துக்கட்டவும், கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். திரண்டிருந்த மக்கள் அனைவரும் ’இவன் ஒழிக, பரபாவையே விடுதலை செய்யும்’ என்று மீண்டும் கத்தினார்கள்.
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி, மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான். ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்.
7. இயேசுவைச் சாட்டையால் அடித்தார்கள்
வெள்ளி
பின்னர், பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர்முன் முழந்தாள்படியிட்டு, ’யூதரின் அரசே வாழ்க!’ என்று சொல்லி, அவருடைய கன்னத்தில் அறைந்து ஏளனம் செய்தார்கள்.. அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்.
இதோ! மனிதன்
பிலாத்து மீண்டும் வெளியே வந்து, அவர்களிடம், ’அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்’ என்றான்.
இயேசு, முள் முடியும், செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்’ என்றான்.
அவரைக் கண்டதும், தலைமைக் குருக்களும் காவலர்களும், ’சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்’ என்று கத்தினார்கள்.
பிலாத்து அவர்களிடம், ’நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்றான்.
யூதர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்’ என்றனர்.
மீண்டும் பிலாத்து விசாரணை
பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, இயேசுவிடம், ’நீ எங்கிருந்து வந்தவன்?’ என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.
அப்போது பிலாத்து, ‘என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?’ என்றான்.
இயேசு மறுமொழியாக, ’மேலிருந்து அருளப்படாவிடில், உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்' என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான்.
8. சீசரைத் தவிர எங்களுக்கு வேறு அரசர் இல்லை
வெள்ளி
மூன்றாம் முறையாக அவன் யூதர்களை நோக்கி, ’இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்’ என்றான்.
ஆனால் யூதர்கள், ’நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி’ என்றார்கள்.
இவ்வார்த்தைகளைக் கேட்டதும், பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். ’கல்தளம்’ என்னும் இடத்தில் இருந்த நடுவர்-இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் ’கபதா’ என்பது பெயர்.
பிலாத்து, நடுவர்-இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது, அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ’அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்’ என்று கூறினார்.
இதோ உங்கள் அரசன்
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடுசெய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ’இதோ, உங்கள் அரசன்!’ என்றான். அவர்கள், ’ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்’ என்று கத்தினார்கள்.
பிலாத்து அவர்களிடம், ’உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், ‘எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை’ என்றார்கள்.
பிலாத்து, தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, ’இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.
அதற்கு மக்கள் அனைவரும், ’இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்’ என்று பதில் கூறினர்.
ஆகவே பிலாத்து, கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும்வண்ணம் அவர்கள் கேட்டபடியே தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்த பரபாவை, அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான். இயேசுவை, அவர்கள் விருப்பப்படி, சிலுவையில் அறையுமாறு படைவீரர்களிடம் ஒப்புவித்தான்.
ஆளுநரின் படைவீரர் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்;
அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த செந்நிற ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.