வேரென நீ இருந்தாய்..!

Post date: Jul 27, 2011 3:49:48 AM

உன்னைப் பிரிந்திருந்து சிலதை

உற்றிட நேருகையில்

என்னமோ தெரியவில்லை

இதயம் இறங்கித் துடிக்குதடி!

மூர்ச்சையாய்ப் போம் பயத்தில்

இமையை மூட நினைத்திடிலோ

ஆச்சர்யப்படும் வகையில் விழி நீர்

ஆவியில் உயிர்க்குதடி!

என்னை மறைக்க எண்ணி அடக்கி

எச்சில் விழுங்கையிலே

உந்தன் உமிழ் நீரே சுவையாய்

உதட்டினுள் ஊறுதடி!

தூக்கெனச் சொல்லிப் பிள்ளை தனது

தாயினைக் கெஞ்சுகையில் வரும்

ஏக்கமும் முகக் குழைவும் எனை நீ

இரப்பதாய்த் தோன்றுதடி!

ஏதோ நினைக்குதடி மனசு

எதற்கும் கலங்குதடி

பாதி இறந்து விட்டேன் முடிவினைப்

பார்க்க நீ வருவாயோ..?

தி.திருக்குமரன்