1. பரமன்
உலகெலாம் படைத்துக் காத்தே
உருவிலா தழித்து நாளும்
உண்மையாய் எண்ண மாளா
ஒருவனாய் அருவ னாகிச்
சலமிலா தெண்ணு வோர்க்குச்
சத்திய மயமே யாகித்
தனித்தனி பிரிந்த போதும்
தானதிற் பிரியா னாகி
மலரின்மேல் தேவ னாகி
மாதொரு பாக னாகி
மாலொடு புத்த னாகி
மகம்மதாய் ஏசு வாகிப்
பலபல தெய்வ மாகிப்
பற்பல மதங்க ளாகிப்
பக்குவப் படியே தோன்றும்
பரமனார் பெருமை போற்றி.
2. கடவுள்
இல்லாத கால மில்லை
இருக்கின்ற பொருள்ஒன் றில்லை
எண்ணாத எண்ண மெல்லாம்
எண்ணியும் எட்ட வில்லை
சொல்லாத வேத மெல்லாம்
சொல்லியும் சொன்ன தில்லை
சூட்டாத நாமம் இல்லை
தோன்றாத உருவ மில்லை
அல்லா வாய்ப் புத்த னாகி
அரனரி பிரம்ம னாகி
அருளுடைச் சமணர் தேவும்
அன்புள்ள கிறிஸ்து வாகிப்
கல்லாத மனத்திற் கூடக்
காணாமல் இருப்பா ரந்தக்
கடவுளென் றுலகம் போற்றும்
கருணையைக் கருத்தில் வைப்பாம்.
3. இறைவன்
அன்பினுக் கன்பாய் வந்தும்
அறிவினுக் கறிவாய் நின்றும்
அறிந்தவர்க் கெளிய னாகி
அல்லவர்க் கரிய னாகி
முன்பினும் நடுவொன் றின்றி
முதுமறை தனக்கு மெட்டான்
மூடர்கள் மனத்திற் கூட
மூலையில் ஒதுங்கி நின்று
செம்பினும் கல்லி னாலும்
செய்தவை எல்லா மாகிச்
சிலந்திபோற் கூடு கட்டிச்
சிலுவையில் மறைந்தான் போல
என்பினுக் கென்பா யென்றும்
எம்முளே விளங்கு கின்ற
எழுசுடர் சோதி யான
இறைவனை இறைஞ்சி நிற்பாம்.
4. சொல்வதற்கு முடியாத சக்தி
இல்லையென்று சொல்வதற்கும்
இருக்கின்ற ஒருபொருளாய்
இருப்பதென்பார் ருசுப்படுத்த
இல்லாத தும்அதுவாய்
அல்லவென்று மறுப்பதிலும்
அங்கிருந்து பேசுவதாய்
ஆம்என்ற மாத்திரத்தில்
அறிந்துவிட முடியாதாய்
வல்லமென்று அகங்கரித்தால்
பலங்குறைக்கும் வல்லமையாய்
வணங்கிஅதைத் தொழுவார்க்கு
வலுவில்வரும் பெருந்துணையாய்ச்
சொல்லையத்துச் செயல்மனமும்
தூயவர்க்கே தோற்றுவதாய்ச்
சொல்வதற்கு முடியாத
சக்திதனைத் தொழுதிடுவோம்.
5. சூரியன் வருவது யாராலே ?
சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?
தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று
மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?
எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.
அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !
அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.
6. பராசக்தி
நூறென்று மனிதர்க்கு நீதந்த வயசினில்
கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ!
ஆரெம்மைக் காப்பவர் அன்னையே உன்னையன்றி.?
பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தீ!
நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன்
நோய்வந்து புகுந்தெம்மை நொடிக்குள் மடிப்பதென்றால்
தாய்தந்தை நீயன்றித் தஞ்சம் பிறிதுமுண்டோ
வாய்தந்து வாவென்று வரமருள்வாய் தேவீ!
தாயை மறந்திருக்கும் குழந்தைகள் ஸகஜந்தான்;
சேயை மறந்தவளைச் செகமின்னுங் கண்டதில்லை.
நீயே எம்மைமறந்தால் நிலையெமக் கேதுவேறே?
நோயே மிகநலிய நொந்தனம், வந்தருள்!
நித்தம் உனைநினைந்து நியம முடன்வசிக்கச்
சுத்த மனநிலையும் சொல்லும் செயலும் தந்து
சுற்றும் பலபிணிகள் தொடரா தருள்புரியாய்
சத்திய மாய்விளங்கும் தேவீ பராசக்தி!
7. கண்ணன் பக்தி
கண்ணன் பக்தி சேர்ந்திடில்
கவலை யாவும் தீர்ந்திடும்.
மண்ணை வாரித் தின்றவன் ;
மலையைத் தூக்கி நின்றவன். .(கண்)
வீட்டில் திருடும் வெண்ணெயை
வெளியில் தானம் பண்ணுவான் ;
நாட்டில் சிறுவர் யாவரும்
நன்மை கொள்ளக் கூவுவான். (கண்)
பெண்ணைக் காணில் ஓடுவான் ;
பிறரைக் காணில் வாடுவான் ;
எண்ணம் என்ன தீயதோ !
இல்லை ; முற்றும் தூயதே. (கண்)
எண்ணி றந்த கோபிகள்
இவனு டன்சல் லாபிகள் !
பெண்ணில் காமம் அல்லவே
பிள்ளை பெற்ற தில்லையே. (கண்)
தூய அன்புக் காதலைத்
துலங்க வைக்கும் ஜோதியான்
நேய மாகும் கண்ணணை
நிந்தை நீக்கி எண்ணுவோம். (கண்)
என்றும் என்றும் பாலனாய்
இன்பக் கேலி லோலனாய்க்
கன்று காலி மேய்ப்பதில்
களித்து லோகம் காப்பவன். .(கண்)
புலனை வெல்லும் கீதையைப்
புகலும் கண்ணன் மேதையை
நலனி லாத காமியாய்
நாம்நி னைத்தல் தீமையாம். (கண்)
ஆண்மை என்ற வன்மையும்
அன்புப் பெண்மை மென்மையும்
மாண்பிற் சேர்ந்த வேலையே
மாயக் கண்ணன் லீலையே. (கண்)
8. கண்ணன் லீலை
கண்ணன் என்றஒரு சிறுவன்-என்
கருத்தைக் கொள்ளைகொண்ட ஒருவன்
எண்ண எண்ண அவன்பபெருமை-தனை
என்ன சொல்லுவேன் அருமை !
சிறுவன் என்று நினை யாமல்-அவன்
செயலைக் கூந்துநினைப் போமேல்
திறமை யோடுசெயல் புரியும்-நல்ல
தீரம் நம்மனதில் விரியும்.
அன்பு என்றஒரு எண்ணம்-தரும்
அழகு வடிவமே கண்ணன்.
துன்பம் நேருகிற போது-எண்ணித்
துயரம் தீரஒரு தோது.
சூது போலப்பல புரிவான்--உலகச்
சூதை வெல்லவழி தருவான்.
தீது போலஒன்று செய்வான்--அதில்
திகழும் நன்மைபல பெய்வான்.
ஆணின் அழகுமிக வருவான்--பெண்கள்
ஆவிசோர மயல் தருவான்.
நாணிப் பெண்அருகிற் செல்வாள்--அவன்
நகைத்துப் பெண்வடிவு கொள்வான்.
பெண்ணின் வடிவழகில் வந்தே--ஆண்கள்
பித்து கொள்ள மயல்தந்து
கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே--ஓரு
காளை ஆண்வடிவு கொள்வான்.
தாயைப் போல்எடுத்தே அணைப்பான்-உடனே
தந்தை போற்கடிந்து பணிப்பான்.
மாயக் காரமணி வண்ணன்-வெகு
மகிமைக் காரன்எங்கள் கண்ணன்.
கலகப் பேச்சும்அவன்வேலை--மாற்றும்
கருணை வீச்சும்அவன் லீலை
உலகம் முழுதும்அவன் ஜாலம்--அதை
உணர்ந்து கொள்வதே சீலம்.
9. கண்ணன் உறவு
கண்ணன் உறவைப் பிரியாதே
காரியம் இன்றித் திரியாதே
எண்ணம் தூயது என்றானால்
எதுசெய் தாலும் நன்றாகும்.
ஊக்கமும் உறுதியும் உண்டாகும்
உழைப்பிலும் களைப்பெதும் அண்டாதே.
ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும்
ஆயன் கண்ணன் உறவாலே.
துன்பம் எதையும் தாங்கிடலாம்
துயரம் உடனே நீங்கிடலாம்
அன்பும் அறிவும் பெரிதாகும்
அச்சம் என்பதும் அரிதாகும்.
சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும்
சிடுசிடுப் பெல்லாம் மறைந்துவிடும்
விருப்பம் எதும் சித்திபெறும்
வித்தகக் கண்ணன் பக்தியினால்.
மாடுகள் மேய்க்கும் வேலையிலும்
மகிழ்ந்திடும் கண்ணன் லீலைகளால்
பாடுபட் டுழைத்திட அஞ்சோமே
பாரில் யாரையும் கெஞ்சோமே.
தூதுவன் ஆகித் துணைவருவான்
தொழும்பனைப் போலும் பணிபுரிவான்
ஏதொரு தொழிலும் இழிவல்ல
என்பது கண்ணன் வழிசொல்லும்.
எல்லா உயிரும் இன்பமுறும்
இன்னிசை பரப்பித் தென்புதரும்
புல்லாங் குழலை ஊதிடுவான்
பூமியின் கடமையை ஓதிடுவான்.
பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப்
பாதகர் தங்களை ஒடுக்கிடுவான்
சக்திகள் பலவும் தந்திடுவான்
சங்கடம் தீர்த்திட வந்திடுவான்.
ஆடலும் பாடலும் மிகுந்துவிடும்
அழகன் கண்ணன் புகுந்தஇடம்
ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம்
ஒவ்வொரு செயலும் களியாட்டே.
10. கண்ணன் பாட்டு
கண்ணன் வருகிற இந்நாளே
களிப்புகள் தருகிற நன்னாளாம்
திண்ணம் அவனருள் உண்டானால்
தீங்கெதும் நம்மை அண்டாது.
அசுரத் தனங்களை இகழ்ந்திடவும்
அன்புக் குணங்களைப் புகழ்ந்திடவும்
விசனம் என்பதை ஒழித்திடவும்
வித்தகக் கண்ணன் வழித்துணையாம்.
அரசரின் குலத்தில் பிறந்தாலும்
ஆயர்தம் குடிசையில் வளர்ந்தவனாம்.
ஒருசிறு பேதமும் எண்ணாமல்
ஒற்றுமை காட்டும் கண்ணாளன்.
எங்கும் எதிலும் வேடிக்கை
இழைப்பது கண்ணன் வாடிக்கை
இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால்
இன்பம் வாழ்க்கையில் தடைப்படுமா?
அடுக்குப் பானையை உருட்டிடுவான்:
அதட்டப் போனால் சிரித்திடுவான்.
துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன்
தோன்றிய கோபம் சுண்டிவிடும்.
ஒன்றும் தெரியாப் பாலன்போல்
உலகை நடத்தும் லோலன்காண்.
என்றும் இளமை குறையாமல்
எல்லாப் பொருளிலும் உறைவான்காண்.
நம்பின மெய்யரைத் தாங்கிடுவான் ;
நடிக்கும் பொய்யரை நீங்கிடுவான்.
வம்புகள் செய்தால் செல்லாவாம் ;
வாதுகள் அவனிடம் வெல்லாவாம்.
கல்வியில் தேறிச் சிறந்திடலாம் ;
கலைகளின் ரசனை நிறைந்திடலாம் ;
பல்வித நன்மைகள் பெறலாகும் ;
பாலன் கண்ணன் உறவாலே.
பண்ணும் காரியம் முற்றிலுமே
பழுதில் லாமல் வெற்றி பெறும்.
கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம் ;
கவலையில் லாமல் வாழ்ந்திடுவோம்.
11. வருவாய் முருகா
வாவா முருகா! வடிவேல் முருகா!
காவாய் முருகா! கடிதே முருகா!
தேவா உனையே தினமும் தொழுவேன்
தீவாய் பிணியைத் தீரித் தினமே.
அழியா அழகா! அறிவாம் முருகா!
கழியா இளமைக் கடலே முருகா!
மொழியா இன்பம் அடையும் முறையை
ஓளியா தருள்வாய் ஒருவா முருகா!
குறையா அழகே! குமரா முருகா!
மறையா வையம் அறியா ஒருவா!
சிறைவா யுலகில் சிறுகும் எளியேன்
சிறுகா விதமுன் திறமே தருவாய்!
தளரா உடலும் சலியா உயிரும்
குளறா உரையும் குறையா அறிவும்
வளரா வாடா வடிவம் உடையாய்!
எளியாய்! அடியார்க் களியே! ஒளியே!
நரையும் திரையும் நணுகா முருகா!
கரையும் பிணியும் களையன் றறியாய்
விரியும் உலகின் விரையே முருகா!
வருவாய் முருகா! வரமே தருவாய்!
12. முருகனென்ற சிறுவன்
முருகனென்ற சிறுவன்வந்து
முணுமுணுத்த சொல்லினால்
முன்னிருந்த எண்ணம்யாவும்
பின்னமுற்றுப் போனதே!
அருகுவந்து மனமுவந்தே
அவனுரைத்த ஒன்றினால்
அடிமையென் மனத்திருந்த
அச்சமற்றுப் போனதே!
இளமையந்த முருகன்வந்து
என்னோடொன்று சொல்லவே
என்னுளத்தி ருந்தபந்தம்
ஏதுமற்றுப் போனதே!
வளமையுற்ற இளமைபெற்று
வலிமிகுந்த தென்னவே
வந்ததே சுதந்திரத்தில்
வாஞ்சையென்ற ஞானமே!
அழகனந்த முருகன்வந்தென்
அருகிருந்த போதிலே
ஐம்புலன்க ளுக்கொடுங்கி
அஞ்சியஞ்சி அஞ்சிநான்
பழமையென் உடற்கண்வைத்த
பற்றுயாவும் அற்றதால்
பாரிலென்னை யாருங்கண்டு
பணியுமாறு செய்ததே!
அன்பனந்த முருகன்வந்
தழைத்திருத்தி என்னையே
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென்
றகங்குழைந்து சொன்னதால்
துன்பமிக்க அடிமைவாழ்வில்
தோய்ந்திருந்த என்மனம்
சோகம்விட்டு விடுதலைக்கு
மோகமுற்று விட்டதே!
13. முருகன்மேற் காதல்
முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)
கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)
வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)
குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)
குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)
ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)
பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)
கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)
முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)
வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)
14. பிரார்த்தனை
உலகெலாம் காக்கும் ஒருதனிப் பொருளே!
உன்னருள் நோக்கி இன்னுமிங் குள்ளோம்.
இந்திய நாட்டை இந்தியர்க் கென்று
தந்தனை யிலையோ? தவறதில் உண்டோ?
காடும் மலைகளும் கனிதரும் சோலைகள்
ஓடும் நதிகளும் உள்ளன எவையும்
இங்கே பிறந்தவர் எங்களுக் கிலையோ?
எங்கோ யாரோ வந்தவர் துய்க்கச்
சொந்த நாட்டினில் தோன்றிடும் செல்வம்
எந்த நாட்டிலோ எங்கோ போய்விடக்
கஞ்சியு மின்றிக் கந்தையும் இன்றி
அஞ்சிய வாழ்வின் அடிமையிற் கிடந்து
நொந்தனம் கொள்ளை நோய்களாற் செத்து
காட்டிடை வாழும் விலங்கினுங் கேடாய்க்
நாட்டிடை யிருந்தும் நலிந்தனம் ஐயோ!
யாருடை நாடு? யாருடை வீடு?
யாருடைப் பாடு? யார்அனு பவிப்போர்!
பிறந்த நாட்டினிற் பிறவா தவரிடம்
இரந்து நின்(று)அவர் ஏவலே செய்தும்
உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும்
ஊனமிவ் வாழ்வினை ஒழித்திடத் துணிந்தோம்!
ஞான நாயகா! நல்லருள் சுரந்தே
ஆண்மையும் அறிவும் அன்பும் ஆற்றலும்
கேண்மையும் பிறர்பால் கேடிலா எண்ணமும்
அடிமை ஒருவருக் கொருவர்என் றில்லாக்
குடிமை நீதியின் கோன்முறை கொடுத்துச்
சோறும் துணியும் தேடுவ தொன்றே
கூறும் பிறவியின் கொள்கையென் றின்றி
அளவிலா உன்றன் அருள்விளை யாட்டின்
களவியல் போன்ற கருணையின் பெருக்கின்
உளவினைத் தேடி உணர்ந்திட வென்றே
வளமும் எங்கள் வாழ்நாட் போக்கி
மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய்
எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதி!
15. அனைத்தும் நீயே
ஆற்றல்கள் அனைத்தும் நீயே
அருளுவாய் எனக்கும் ஆற்றல்;
போற்றிடும் வீரி யம்நீ
எனக்கதைப் புகட்ட வேண்டும்;
மாற்றரும் பலங்கள் நீயே
மற்றெனைப் பலவா னாக்கு;
சாற்றரும் ஜீவ சத்தே
சத்தினை எனக்குத் தாராய்.
தீமையை வெறுத்து நீக்கும்
தீரமாய்த் திகழ்வாய் நீயே
வாய்மையில் எனக்கும் அந்த
வலிமையை வழங்க வேண்டும்;
தாய்மையின் சகிப்பு நீயே
தந்தருள் சகிப்புத் தன்மை;
தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில்
துலங்கிடும் ஆன்ம ஜோதி.
உடலினும் உயிருக் கப்பால்
உயிர்ந்தொளிர் ஆன்ம சக்தி!
கடலினும் பெரிதாம் உன்றன்
கருணையில் மூழ்கச் செய்வாய்;
அடைவரும் அமைதி தந்தே
அன்பெனும் அமுத மூட்டி
மடமைகள் யாவும் மாற்றி
மங்களம் அருள்வாய் போற்றி.
16. நெஞ்சோடு பிணங்கல்
எண்ணரிய நெடுங்காலம் இடைய றாமல்
எண்ணியெண்ணித் தவவலிமை உடைய ராகித்
திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே!
எத்திசையும் பிறநாட்டார் ஏற்றி பேசும்
பக்திமிகும் இலக்கியத்தின் மணமே வீசும்
முத்தமிழின் வழிவந்தும் முன்னோர் தம்மைப்
பித்தரென்றே எண்ணுகின்றாய் பேதை நெஞ்சே!
நாத்திகந்தான் நாகரிகச் சின்னம் போல்
மூத்தறிந்த முன்னோரைப் பின்னம் பேசிச்
சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை யேபோல்
சொந்தபுத்தி இழந்துவிடல் நன்றோ? சொல்வாய்.
ஆத்திசூடி நல்லறிவை அழித்து விட்டாய்
ஆசாரக் கோவைதன்னை இழித்து விட்டாய்
பார்த்திதனை அன்னியவரும் பரிகசித்தார்
பாவமிதைப் புண்ணியம்போல் மிகர சித்தாய்.
தள்ளரிய தெய்வத்தின் நினைவு கூட்டும்
பிள்ளையார் சுழிபோட்டுக் கடிதம் தீட்டும்
தெள்ளறிஞர் நமதுமுன்னோர் செயலைக் கூட
எள்ளிநகை யாடுகின்றாய் ஏழை நெஞ்சே!