தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
28/02/2026
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
28/02/2026
Click on the 🎼 button to listen to the hymn.
வருகை பாடல்
இறை பலியினில் இணைந்திடுவோம்🎼
இறைவனில் கலந்திடுவோம்
இதயத்தில் இருப்பவரே இறைகுலமாய் வருவோம்
இறை மகிமைக்காக உழைப்போம் நம்மில்
மனிதம் மலர இணைவோம் (2)
1. இறைவன் வார்த்தையில் இல்லம் அமைத்திட
இயேசு வழியில் செல்வோம்
உறவு வளம் பெற உண்மை உருபெற உலகில் சாட்சியாவோம்(2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
இறை மகிமைக்காக
2. ஏழை எளியவர் இறைவன் செய்தியை ஏற்று மகிழச்செய்வோம்
மாறும் உலகில் மாறா உன் அன்பில்
மாற்றம் கண்டு கொள்வோம் (2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
முதல் வாசகம்
இறைமக்களுக்குத் தந்தையாகிய ஆபிராம் அழைக்கப்பெறுதல்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ‘‘உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. – பல்லவி
18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி
20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! – பல்லவி
இரண்டாம் வாசகம்
இறைவன் நம்மை அழைத்து, நம்மீது ஒளி வீசுகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10
அன்பிற்குரியவரே,
கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 9: 7
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”
நற்செய்தி வாசகம்
இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு🎼
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு (2)
1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
எந்த நிலை தான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் -2
2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்🎼
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்ட பின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள்புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச்சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்🎼
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)
1. வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் (2)
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்
2. .குரதி சிந்தும் நெஞ்சம் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்
வருகை பாடல்
தவக்காலம் மூன்றாவது ஞாயிறு
07/03/2026
Click on the 🎼 button to listen to the hymn.
வருகை பாடல்
ஆவலாய்த் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கின்றார்
1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே
இதய அமைதி இனிதே அடைய
இயேசு அழைக்கின்றார் (2)
2. கவலைப் படுவோரே கலங்கித் தவிப்போரே
கவலை நீக்கிக் கலக்கம் போக்க
கடவுள் அழைக்கின்றார் (2)
முதல் வாசகம்
குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 3-7
அந்நாள்களில்
இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைநிலத்திலிருந்து இரபிதிம் வந்து அங்கு பாளையம் இறங்கினர்.
அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, ‘‘நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், ‘‘இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார்.
ஆண்டவர் மோசேயிடம், ‘‘இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக் கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் ‘மாசா’ என்றும் ‘மெரிபா’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு
பதிலுரைப் பாடல்
திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
1
வாருங்கள்;ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். – பல்லவி
6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7a
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். – பல்லவி
7b
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். – பல்லவி
இரண்டாம் வாசகம்
தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-2, 5-8
சகோதரர் சகோதரிகளே,
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.
அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 4: 42, 15
ஆண்டவரே, நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.
நற்செய்தி வாசகம்
நிலைவாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 5-15, 19b-26, 39b, 40-42
அக்காலத்தில்
இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.
அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.
அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது. நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டு கொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார்.
இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்” என்றார். அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.
அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்” என்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏழை என்னை காணிக்கையாகத்🎼
தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே - 2
என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் - என்
உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் (2)
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்
என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான்
எதிர் கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் (2)
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்
என்னை நேசிக்கின்றாயா? - 2🎼
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)
பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும் சுமப்பேன்
என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே🎼
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை (2)
கரங்களை விரித்தே கள்வனைப் போல் -2
கழுமரத்தினில் கண்டதினால்
கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே (2)
மண்ணவர்க்காகத் தன்னுயிரை -2
இன்று மாய்த்திடக் கண்டதினால்
வருகை பாடல்
தவக்காலம் நான்காம் ஞாயிறு
14/03/2026
Click on the 🎼 button to listen to the hymn.
வருகை பாடல்
உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர🎼
மணங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே (2)
1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்
2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர்குலமாய் ஒன்று கூடிவந்தோம்
முதல் வாசகம்
இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a
அந்நாள்களில்
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். ‘‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘‘இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘‘ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; – பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
‘இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 8-14
சகோதரர் சகோதரிகளே,
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல்லாம் ஒளி மயமாகிறது.
ஆதலால், ‘தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 8: 12b
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,” என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1, 6-9, 13-17, 34-38
அக்காலத்தில்
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர், “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார்.
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர், “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” எனக் கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர். அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி🎼
உனக்காக நான் தந்தேன் இறைவா
இதை ஏற்று உனதாக மாற்றி அருட் பலியில்
எனை நீ இணைப்பாய் இறைவா
1. அணையாத தீபம் உன் திரு இதயம்
ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை (2)
உலகின் ஒளியாய் இருப்பவனே
உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் (2)
2. ஏங்கும் விழியில் தேங்கிய நீரும்
அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் (2)
எதையும் தாங்கும் இறையவனே
உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் ....
கிருபை உணர்ந்தேன் சிலுவை நிழலில்🎼
எனையே இழந்தேன் உலகின் வழியில்
துயர் போக்கிடவே உயிர் காத்திடவே
பெரும் ஒளியாக வந்தவரே (2)
மறந்தேன் நான் உமையே இவ்வுலகினிலே
இடறி அலைந்தேன் பல வழியே
உம்மால் இவ்வுலகை எந்நாளும்
தடை மீறி ஜெய்தீட வைத்தீர்
உம் சித்தம் என்றைக்கும் என்னில்
செயலாற்றும் அனுபவம் தந்தீர்
உளமார போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தேன்...)
சுயமாய் நான் எடுத்த பல வழிகள்
உதறி வெறுத்த பல நிலைகள்
சிதறுண்ட வாழ்வினை மாற்றி
புதிதாக்கி மீட்டவர் நீரே
வழிமாறி திரிந்தவன் என்னை
கரம் ஏந்தி காத்தவர் நீரே
இவ்வன்பை போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தேன்...)
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை🎼
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி
வருகை பாடல்