ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
இன்னாரின் மைந்தன் என்று அபிவாதயே சொல்வது போல் என் தந்தை பெயரை முதலில் கூறிவிட்டாய்.” என்றான் கண்ணன்.
“ ஆம். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் ஆயிற்றே. கலங்கள் நிரம்பி வழிய மாற்றாதே பால் சொரியும் பசுவைப் போல நாங்கள் கேட்டதை விட மேலான பலனை அளிக்கும் வள்ளலாகிய உன்னைத்தந்தவன் அல்லவா?”
“நீ ஊற்றம் உடையாய் சர்வ சக்திமான், பெரியாய் , எங்கும் நிறைந்தவன், உலகெலாம் தோற்றமாய் நின்ற சுடர், உலகில் தோன்றுவது எல்லாம் நீயே. உன்னிடம் என்ன கேட்பது? நாங்கள் என்ன கேட்டாலும் அது ஒரு சக்ரவர்த்தியிடம் சில பொற்காசுகள் கேட்பது மாதிரி. “ என்ற ஆண்டாளிடம், நான்தான் எல்லாம் தரத் தயாராக உள்ளேனே .நீங்கள் கேட்பதை யார் தடுத்தார்கள்? “என்றான் கண்ணன்.
‘யாவானர்த்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே’ என்று நீ கீதையில் சொன்னபடி, எங்கும் ஜலம் நிறைந்தாலும் ஒரு கிணறு எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் அதில் நிற்கும். அதுபோல எங்கள் கர்மா அறிவை மறைக்கிறது. அதனால் நீ உன்னையே தரத் தயாராக இருந்தாலும் எங்கள் அறிவுக்கெட்டினவரை தான் உன்னைக் கேட்கத் தோன்றுகிறது. “
“அதனால் மாற்றார் , உன்னை எதிர்த்தோர் , வலி தொலைந்து, உன்னால் ஜெயிக்கப்பட்டு, உன் வாசற்கண் வந்து அடி பணிவது போல, நாங்களும் எங்கள் அறிவற்ற நிலை உணர்ந்து உன்னைப் போற்றுகின்றோம், உன் புகழ் பாடி, “ என்றாள் கோதை.
“உன் வார்த்தைகளில் ஆழமான பொருளை உணர்கிறேன்.ஆற்றப்படைத்தான் என்பது ராமானுஜரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.ஏனெனில் வற்றாது பால் சொரியும் பசுக்களைப்போல அவருடைய சிஷ்ய பரம்பரை அவர் உபதேசங்களை எங்கும் பரப்புகின்றனர்.அவர் ஆற்றபடைத்தான் என்றால் அவர் மகன் யார்? நானே . ஏனென்றால் என்னை அவர் ‘செல்வப்பிள்ளாய் வருக’ என்று அழைத்தாரல்லவா?” என்றான் கண்ணன் .
“ஊற்றம் உடையாய், பெரியாய், உலகெலாம் தோற்றமாய் , நின்ற, சுடரே , இந்த ஐந்து சொற்களும் சில வைணவப்பெரியார்களால் உன் ஐந்து ரூபங்களைக் குறிப்பிடுவதாக சொல்லப் படுகிறது.”
‘ஊற்றம் உடையாய்’ என்பது உன் பரத்வம், பரவாசுதேவன். ‘பெரியாய்’ என்பது வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யுமான, அநிருத்தன் என்ற உன் வ்யூஹ ரூபம், .’ உலகெலாம் தோற்றமாய்’ என்பது உன் விபவம், அதாவது அவதாரங்கள் , ‘நின்ற ‘ உன் அர்ச்சாவதாரம் ‘சுடரே’ என்பது அந்தர்யாமி ஸ்வரூபம்.
“ இன்னும் சொல்லப்போனால், பரதவம் என்பது ஆவரண ஜலம் போல வைகுண்டத்தில் இருக்கும் தோற்றம்.நித்ய சூரிகள் மட்டுமே காண்பது. வியூஹம் என்பது பாற்கடல், தேவர்களும் முனிவர்களும் காண்பது அல்லது ஞானிகள் யோகத்தால் காண்பது. விபவம் என்பது பெரும் மழையினால் எப்போதாவது ஏற்படும் வெள்ளம் போல. அந்த சமயம் ஞானிகள் மட்டுமே உன் உண்மை ஸ்வரூபத்தை உணர்வர். மற்றவர் மாயையினால் மயக்குறுவர். அர்சாவதாரம் என்பது ஏரி, குளம் இவற்றில் தங்கியுல்ல நீர் போல எல்லோரும் நன்மையடையக் கூடியது. அந்தர்யாமி ஸ்வரூபம் நிலத்தில் மறைந்துள்ள ஜலம். பக்தியின் மூலம் தோண்டினால் மட்டுமே தெரிவது.” என்றாள்ஆண்டாள்.
‘ அடேயப்பா உன்சொற்களுக்கு இவ்வளவு அர்த்தங்களா என்றான் கண்ணன்.
ஆண்டாள் கூறினாள். என் வாக்கில் வருவதெல்லாம் உன் சொற்கள் அல்லவா? என் கையில் உள்ள கிளியைப்போல நீ சொல்லச்சொல்வதை அல்லவா சொல்கிறேன். என்றாள்.
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
“உன்னை எழுப்பும் பாசுரங்களில் இதுதான கடைசி. அடுத்த பாசுரத்தில் இருந்து நீ நேரில் வர உன்னைக் கண்டு எங்கள் கோரிக்கைகளை முனவைக்கிறோம்.” என்றால் ஆண்டாள்.
“ இந்தப் பாசுரத்தில் உன் பள்ளிக்கட்டிற்கீழே நீ கண்விழிப்பதைக் காண வந்துள்ளோம், அங்கண்மாஞாலம் , இந்த அழகிய உலகத்தில் அரசர் அபிமான பங்கமாய் அதாவது தங்கள் அகம்பாவம் அழிந்து வந்து உன்னை சூழ்ந்தாற்போல ,” என்ற ஆண்டாளை நோக்கி ,
“அரசர்கள் என்று யாரைச் சொல்லுகிறாய் ,” என்றான்.
எனக்கு ஜராசந்தனால் சிறைப் பிடிக்கப் பட்டு உன்னால் விடுவிக்கப்பட்ட அரசர்கள் ஞாபகம் வந்தது. அவர்கள் தங்கள் ராஜ்யத்திற்குப் போவதை விட உன் கைங்கர்யத்துக்கே ஆசைப்பட்டார்கள் அல்லவா? “
“ பள்ளிக்கட்டிற்கீழே என்றால் உன் காலடியில் என்று பொருள். அதாவது அர்ஜுனன் உன்னை காண வந்து உன் காலடியில் அமர்ந்தது போல வந்து தலைப்பெய்தோம், எவ்வளவோ பிறவிகளுக்குப் பின்னர் புண்ய வசமாக உன்னை அடைந்தோம். நீ கண்விழித்ததும் முதலில் எங்களைக் காணவேண்டும் என்பதற்காக.” என்ற ஆண்டாளை நோக்கி கண்ணன் கூறினான்.
“ கண் விழிப்பது எப்படி என்றும் கூறிவிட்டாயே , செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ என்று.”
“ ஆம்.உன் கண்களை தாமரை மலர்வது போல சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். ஏன் தெரியுமா? பாதி மூடிய கண் எங்கள் குறைகளைக் காணாதிருப்பதற்கு. பாதித் திறந்த கண் எங்களைக் காப்பதற்கு. உன் அழகிய கண் , அங்கண் கொண்டு எங்களை நோக்கினாயானால் எங்கள் மேல் உள்ள சாபங்கள் எல்லாம் அழிந்து விடும்.
உன் கண்கள் விழிக்கும்போது, சூர்ய சந்த்ரௌ ச நேத்ரே என்று வேதம் கூறியபடி, திங்களும் ஆதித்தியனும் சேர்ந்து உதித்தது போல. சூரியனைப் போல எங்கள் பாவத்தை எரித்துவிடும்.சந்திரனைப் போல குளிர்ச்சியைத் தந்து எங்களைக் காக்கும். தாமரை சூரியன் உதித்தால் மலரும் சந்திரன் உதிக்கும்போது மூடி விடும். இரண்டும் சேர்ந்து உதித்தால் பாதி மலர்ந்த தாமரை போல் இருக்கும்.” என்ற ஆண்டாளின் சொற்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணன் எழுந்து வர ஆண்டாள் பரவசமாகிக் கூறுவது அடுத்த பாசுரம்.
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
“நான் நேரில் வந்தபோது என்னை கண்ணனாக அல்லாமல் நரசிங்கமாக கண்டது ஏன்? என்றான் கண்ணன்.
“அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. பிறகு சொல்கிறேன்.” என்ற ஆண்டாளைப்பார்த்து ,
“ என்னை மலைக்குகையில் உள்ள சிங்கத்துக்கு ஒப்பிட்டது எதனால் “ என்றான் கண்ணன்,.
“உறங்கும் சிங்கம் என்றும் சொன்னேன் அல்லவா? மாரி என்பது பாற்கடலைக் குறிக்கும். மலை என்றது ஆதிசேஷன்.குகை போன்ற அவனுடைய விரித்த படத்தினுள் உறங்கும் நாராயணனான நீ நரசிங்கமாக வந்தாய் அல்லவா?” என்றாள் ஆண்டாள். அதன் பின் வேரி மயிர் பொங்க , உன் சிலிர்த்த பிடரியை எப்பாடும் பேர்த்து உதறி , எடுத்து வீசிவிட்டு, பூவைப்பூ வண்ணனான கண்ணனாக மாறினாய்.”
“மாரிமலை என்பது மலை போன்ற இரணியனின் மாளிகையையும் குறிக்கும்.அதில் குகை போன்ற தூணில், மன்னிக் கிடந்து உறங்கும் சிங்கமாய் இருந்த நீ மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு வந்தாயே அது போல இங்கு வந்து சீரிய சிம்மாசனத்தமர்ந்து எங்கள் கோரிக்கைத்யைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்தப் பாசுரம் “ என்றாள் கோதை.
“ அறிவுற்று தீ விழித்து சீரிய சிங்கம் என்றாயே நான் இரணியனைக் கொல்ல அல்லவா அப்படி வந்தேன். உங்களிடையே அப்படி வரலாமா? “ என்றான் கண்ணன்.
“பயங்கரமான உருவமா இல்லை பூவைப்பூவண்ணன் என்றாயே அதுபோல அழகிய உருவத்திலா எதில் வரவேண்டும் “ என்றான் கண்ணன்.
“அந்த உன் உருவத்தைக் அகண்டு பிரஹ்லாதன் பயப்படவில்லையே. நீ பக்தர்களைக் காக்க அல்லவா எந்த உருவத்திலும் திருவுள்ளம் கொண்டுள்ளாய்? “
“ நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான் என்றல்லவா பீஷ்மர் உன் சஹஸ்ரநாமத்தில் கூறுகிறார். அதாவது நரசிம்ஹ உருவத்திலும் நீ ஸ்ரீமான் அழகியவன் என்று? அதனால்தானே உன்னை அழகிய சிங்கர் அன்று பக்தர்கள் கூறுகிறார்கள்?’என்றாள் ஆண்டாள்.
” ஏதோ முக்கிய காரணம் என்றாயே அது என்ன? “ என்றான் கண்ணன்.
“சொல்கிறேன் அதற்கு முன் இன்னொரு விளக்கம்.”என்ற ஆண்டாளைப் பார்த்து, ‘” காத்திருக்கிறேன் “ என்றான் அந்தக் குறும்புக்காரன்.
ஆண்டாள் கூறினாள், “ விளையாட்டு வேண்டாம் கண்ணா. என் வாயிலிருந்து வரும் சொற்கள் உன் அருளால் அல்லவா? ஆனாலும் குழந்தைகள் மழலையில் இன்புறும் தந்தையைப்போல் எங்கள் வார்த்தைகளை ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு இன்புறுகிறாய்.”
“மாரிமலை என்பது வேதங்கள். உபநிஷதங்கள் அதில் உள்ள குகைகள். அதில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்பது பரப்ரம்மமாகிய வேத வேத்யனாகிய நீ.”
உபநிஷதங்களின் பொருள் அறிந்தோர் அறிவுற்று தீ விழித்து, அறிவுத்தீ சுடரிட, வேரிமயிர் பொங்க, எப்பாடும் பேர்த்துதறி, உடல் மனம் வாக்கு இவை உன் சேவைக்கே அர்ப்பணித்தவராக போதருமாப்போலே , உலகில் உன் புகழ பரப்ப வருவது போல,” என்று பொருள்.
“ நன்று நன்று, இப்போதாவது உன் முக்கிய காரணத்தை சொல்கிறாயா?’ என்ற கண்ணனிடம்,
“அதற்கு முன் நீ இந்த சிங்காசனத்தில் வந்து உட்காரவேண்டும்.இது சீரிய சிங்காசனம். இதில் உட்கார்ந்து கொடுத்த வாக்கை மீற முடியாது உன்னால்” , என்ற கோதையிடம்.
“ ஏதேது கைகேயி தசரதனிடம் வாக்குறுதி கேட்ட மாதிரி இருக்கிறதே?” என்று சிரித்தான் கண்ணன்.
“ நீ பிரம்மாவின் வரத்தை மீறாமலும் பிரஹ்லாதனின் வார்த்தையை மெய்ப்பிக்கவும் நரசிம்ஹனாகத் தோன்றினாய் அல்லவா? அதனால் தான் உன்னை நரசிம்ஹனாகவே பாவித்தேன்..” என்ற ஆண்டாளிடம்“இவ்வளவுதானா,” என்றான் கண்ணன்.
“இல்லை, இன்னும் இருக்கிறது , “ என்ற ஆண்டாள்,
“நான் என் கனவைப்பற்றிய பாசுரத்தில் உன்னை அரிமுகன் அச்யுதன் என்றேன் அல்லவா, அது ஏனென்றால் அரிமுகன், அதாவது சிங்கப்பிரானாகிய நீ அச்யுதன், கொடுத்த வாக்கிலிருந்து வழுவாதவன்,. அதனால் தான் ருக்மிணி அவள் கடிதத்தில் உன்னை அச்யுதா என்றும் நரசிம்ஹா என்றும் அழைத்தாள். ஏனென்றால் நீதான் ஏலாப்பொய்கள் உரைப்பவன் ஆயிற்றே? அதனால் கிருஷ்ணா என்று சொல்லவில்லை. “என்றாள்.
“ நல்ல சான்றிதழ் அளித்தாய் ,” என்ற கண்ணன், இது என் லீலாவதாரம் ஆயிற்றே. என் செயல்களைப புரிந்து கொள்ளாவிட்டால் அப்படித்தான் தோன்றும். “.
“ பரம் பாவம் அஜானந்த: மம பூத மஹேச்வரம்,” என்று நான் அர்ஜுனனுக்கு சொன்னபடி, என் உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ளாதவர் என்செயல்களில் குற்றம் காண்பது இயல்பு. “ என்றான்.
“ உன் மாயையை யார் அறிவார்? ஆனால் இப்போது எங்கள் கோரிக்கையைக் கேட்டு அருளவேண்டும்.” என்றாள்ஆண்டாள்.
அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்
கண்ணன் ஆண்டாளைப பார்த்து, நான் வந்து இந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டேன். உங்கள் கோரிக்கைகளைக் கூறு என்றான்.
நீ வந்தமர்ந்த சிம்ஹாசனம் எங்கள் மனம் அல்லவா? உன்னைப் பார்த்ததும் ஆனந்தத்தில் என்ன கேட்கவேண்டும் என்பதே மறந்துவிட்டது.” என்றாள்.
கண்ணன் கூறினான். “நல்லது, என் திரிவிக்ர்மாவதாரத்தை மூன்று முறை கூறிவிட்டாய் அல்லவா? ‘ஓங்கி உலகளந்த உத்தம பேர்பாடி,’ அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகலந்த,’ என்றும், இங்கு ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,” என்றும்.
அதற்கு ஆண்டாள் “நீ உலகளந்தபொது உனக்குக் கிடைத்தது ஓர் அடி மண்தான் . ஏனென்றால் நீதான் ஒரு அடியில் மண்ணுலகம் முழுவதையும் அளந்து விட்டாயே. இரண்டாவது அடியில் விண்ணை அளந்தாய். மூன்றாவது அடி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் மகாபலியின் தலை நீ ஏற்கெனவே எடுத்துக்கொண்ட முதலடியில் அடங்கினது அல்லவா? அதனால் தான் நான் இங்கு உனக்கு மூன்று அடி தந்தேன்.” என்றாள்.
“ நன்றி. ஆனால் ஏன் சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் என்று சொன்னாய் நான் இலங்கையை விபீஷணனுக்குக் கொடுத்ததால் அதை அழிக்கவில்லையே? என்றான் கண்ணன்.
இந்தப் பாசுரம் உன்னைப் போற்றுவது போலத் தோன்றினாலும் இது உன் பாதங்களின் சிறப்பைக் கூறுவது. அன்று உலகளந்த பாதங்கள். அயோத்தியிள் இருந்தவாறே ராவணனை அழிக்கும் திறமை இருந்தாலும் முனிவர்களுக்கு அருள தண்டாகாரண்யம் முழுவதும் நடந்த பாதங்கள். அதனால்தான் சென்றங்கு என்று சொன்னேன்.
.தென்னிலங்கை செற்றாய் என்றால் இலங்கையை அழித்தாய் என்று அர்த்தம் இல்லை.இதை நான் ஏற்கெனவே தென்னிலங்கைக் கோமானைச் செற்ற என்ற இடத்தில் சொல்லியிருக்கிறேனே. தென்னிலங்கை என்றால் தென்- அழகிய, நிலம் – தேசம், கை – கைக்கொண்ட , அதாவது ராவணன். அவனை செற்றாய் அழித்தாய் என்று பொருள்.” என்றாள் ஆண்டாள்.
“அடேயப்பா “ நீ உண்மையில் சொல்லின் செல்விதான், “ என்ற கண்ணன் , பின்வரும் அடிகளும் என் அடியைப் போற்றுவதுதானோ?” என்றான்.
ஆம். ‘பொன்றச் சகடம் அதாவது சகடாசுரனை உதைத்தது இந்த அடிதானே இதன் புகழ் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம்,
“ ஆனால் என் தாய் நான் உதைத்து அந்தச்சக்டம் பொடிப்பொடியாயிற்று என்று மற்ற சிறுவர்கள் சொன்னதை நம்பவில்லை. என் பாதங்கள் வலிக்குமே என்று தொட்டுப் பார்த்தாள்.” என்றார் கண்ணனிடம்,
“ நீதான் மாயவன் ஆயிற்றே, வேதாந்த தேசிகர் கூறியுள்ளபடி அந்த சகடத்தின் உடைந்த துகள் கூட காணவில்லையோ என்னமோ/” என்றாள் ஆண்டாள்.
கண்ணன் கூறினான். “ அதிருக்கட்டும், கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி என்று கூறியிருக்கிறாயே , என் கைகள் அல்லவா அந்தச் செயல் செய்தன? “ என்றான்.
“ ஆம். ஆனால் நீ அந்த செயலை செய்வதை மனக்கண்ணில் காணும்போது உன் பாதங்கள் ஒன்று முன் ஒன்று பின்னாக வைத்து இருந்த அழகுதான் தெரிந்தது. அதனால்தான் கழல் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம் ,
“ ஆனால் அடுத்த வரியில் ‘குன்று குடையாய் எடுத்தாய் , என்றது என் கரத்தைப் போற்றுவது தானே ,” என்ற கண்ணனிடம்,
“இல்லை, அங்கும் உன் பாதங்களையே போற்றினேன். பெரும் மழையைக் கண்டு பயந்து உன் பாதங்களில்தானே கோபர்கள் சரணமடைந்தனர். அதனால் உன் பாதங்களுக்கே அந்த மகத்துவம் உரித்தாகும், “ என்றாள் கோதை.
“ அதுவுமல்லாமல் ஏழு நாட்கள் அயராமல் நின்றது உன் பாதங்கள் அல்லவா? அதனால் உன் கரத்துக்கொப்பான பெருமை உன் பாதங்களுக்கும் உண்டு, ஆயர்களைக் காக்க ஏழு நாட்கள் தூக்கிய கரத்துடன் நின்ற உன்ன பக்தவாத்சல்யத்தையே குணம் போற்றி என்று குறிப்பிட்டேன்.” என்றாள் ஆண்டாள்.
“வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்று சொல்லி எதிரிகளை அழிக்கும் உன் ஆயுதத்தையும் அதைத் தாங்கும் கரத்தையும் போற்றி விட்டேன், “ என்ற ஆண்டாள், தந்தை கையில் வேல் என்றால் தனயன் கையிலும் அதுதானே இருக்கவேண்டும்?” என்றாள்.
இந்தப் பாசுரத்திற்கு வேறு ஏதாவது பொருள் சொல்லப் போகிறாயா? என்ற கண்ணன்., “இரு நானே சொல்கிறேன் “என்றான்.
“இந்தப்பாசுரம் சரணாகதியைக் குறிக்கிறது. ஆறு போற்றிகளும், பாஞ்சராத்ர ஆகமத்திள் என்னால் சொல்லப்பட்ட சரணாகதியின் ஆறு அங்கங்கள். தென்னிலங்கை என்றால் அழகான இருப்பிடம் கொண்ட , அதாவது தேகத்தைக் கொண்ட மனம்.. செற்றாய் என்றால் அந்த மனத்தை சரியான வழியில் நடத்துவதைக் குறிக்கிறது. சகடம் என்பது ஜீவனை ஜனனமரணம் என்னும் சுழற்சியில் கொண்டு செல்லும் கர்மா. என்னைச் சரணடையும்போது நான் இந்த சக்கரத்தை உதைத்துத் தள்ளுகிறேன். இதைத்தானே சொல்லப் போகிறாய் ? என்றான் கண்ணன்.
“ இன்னும் இருக்கிறது, “ என்ற ஆண்டாள் கூறினாள்.
போற்றி என்று ஆறுமுறை கூறியது, நாராயணனான உன் ஞானம், பலம், ஐஸ்வர்யம், சக்தி,தேஜஸ், வீர்யம் ஆகிய ஆறு பகவத் குணங்களைக் கூறுவது. “
“பொன்றச்ச்கடம் உதைத்தது , கர்ணனுடைய நாகாஸ்திறத்தில் இருந்து அர்ஜுனனைக் காப்பாற்ற நீ தேர்ச்சக்கரத்தை அழுத்தியது. சகடம் உதைத்தாய் என்றால் நீ காளியன் தலைமேல் சுழன்று சுழன்று ஆடியதையும் குறிக்கும்.”
“குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்பது, உன் சௌலப்யம், சௌசீல்யம்,வாத்சல்யம், ஸ்வாமித்வம் என்ற குணங்களை குடையாகக் கொண்டு எங்களைக் காப்பது. உன் பாதத்தை சரண் அடையத் தடையை உள்ள எங்கள் பாபங்களை அழிப்பது உன் கை வேல்.”
“அபாரம். சரி. உங்கள் கோரிக்கை என்ன?” என்றான் கண்ணன்.
“என்றென்றும் உன் சேவகமே வேண்டியே இன்று வந்தோம் “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்
“அன்று பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் பெண் என்பதை நிரூபித்து விட்டாய், போற்றி போற்றி என்ற இந்தப்பாசுரத்தின் மூலம்” என்றான்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
“என்றென்றும் உன் சேவகமே வேண்டும் என்பதையே இதிலும் வலியுறுத்துகிறாய். ஆனாலும் அடுத்த பாசுரத்தில் ஒரு நீண்ட பட்டியல் காணப்படுகிறதே? “ என்றான் கண்ணன் .
“அதைப்பிறகு விளக்குகிறேன். “ என்ற ஆண்டாள் “இது உன் அவதார ரஹஸ்யத்தை விளக்கும் பாசுரம்.” என்று மேலும் கூறலுற்றாள்.
“ஒருத்தி மகனாய் பிறந்து என்பதே உன் மாயை. சாதாரண மானிடப் பிறவி என்பது உனக்கு எப்படி வாய்க்கும்? கிழக்கு திக்கில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்கிறோம். ஆனால் அது உண்மை அல்லவே? சூரியன் எப்போதும் இருக்கிறான் ஆனால் நமக்கு கிழக்கு திக்கில் தோன்றுகிறான். அதே போல நீ தேவகியின் மதலையாய் பிறக்கவில்லை, தோன்றினாய். எங்கேயாவது நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் குழந்தை பிறக்குமா? அதனால் தான் பாகவதம் ‘தம் அத்புத பாலகம் ,’ என்று கூறிற்று.”
“பிறகு, ஒருத்தி மகனாய் ஒளித்து வளரந்தாய். அது தரிக்கிலானாகி, தான் தீங்கு நினைந்த கம்சனைப் பற்றிய பயத்தால் அல்ல.உண்மையில் பயம் அவனுக்குத்தான் அவன் வயிற்றில் கனன்ற நெருப்பென உன்னை நினைத்து பயந்து கொண்டே இருந்தான்.’ஒளித்து வளர்ந்த’ என்றால் உன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு ஆயர்சிறுவனாக வளர்ந்தாயே அதைச் சொல்வது.” என்றாள் கோதை.
கண்ணன் கூறினான் . “ ஆம் என் அவதார ரஹஸ்யம் இதுதான். அதனால்தான் அர்ஜுனனிடம், ‘ஜன்ம கர்ம ச மே திவ்யம் யம் ஏவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர்ஜனம் ந ஏதி, மாம் ஏதி’ என் ஜன்மம் கர்மம் இவைகளை யார் தெரிந்துகொண்டார்களோ அவர்கள் மறுபடி பிறப்பதில்லை, என்னை அடைகிறார்கள்’ என்றேன். “
ஆண்டாள் கேட்டாள், “என் ஜன்மம் என்று எதைக் கூறுகிறாய் ? உனக்கு ஏது ஜன்மம்?”
“ அஜாயமானோ பஹுதா விஜாயதே என்ற உபநிஷத் வாக்கியப்படி நான் பிறப்பற்றவன் ஆனால் பலவாகத் தோன்றுகிறேன். தேவகி, கௌசல்யை, அதிதி இவர்கள் என்னைப் பெற்றதாக நினைத்தது என் மாயை. என் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு இதர உருவத்தில் தோன்றினேன், என்ற கண்ணனைப் பார்த்து, ஆண்டாள் ,
“ உன்னை மறைத்துக் கொள்வது என்பது உன் கைவந்த கலை ஆயிற்றே. இரணியனின் தூணில் மறைந்து இருந்தவன் அல்லவா?, மகாபலியை ஆட்கொள்ள வாமனனாகவும் தண்டகாரண்ய ரிஷிகளைக் காப்பாற்ற ராமனாகவும் வந்த நீ இப்போது யாதவகுலத்தைக் காக்க கோபாலனாய் தோன்றி உள்ளாய்.” என்றாள்.
“ வராஹமாகத் தோன்றி பூதேவியாகிய உன்னை எடுத்து வந்ததை மறந்துவிட்டாயே” என்றான் கண்ணன்.
“ ராமாவதாரத்தை நினைக்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. தசரதர் செய்த தவப்பயன் நான்கு புதல்வர்கள். கிருஷ்ணாவதாரத்தில் நான்கு பேரின் தவப்பயனாக ஒரு புதல்வன். மேலும் ராமனாக பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தது வயது வந்த பின். ஆனால் கிருஷ்ணனாக பித்ருவாக்ய பரிபாலனம் பிறந்ததுமே “ என்றாள் ஆண்டாள்.
“எப்படி?என்ற கண்ணனிடம், “கம்சனுக்கஞ்சி உன் திவ்ய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்ளும்படி உன் பெற்றோர் கேட்டதால் சாமானிய மானுடக்குழந்தை போல் ஆனாயே அதைச் சொல்கிறேன். “ என்றாள்.
“கிருஷ்ணாவதாரத்திலும் உன் ஸ்வரூபம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்தது. வசுதேவர் தேவகியிடம் உன் நிஜ ரூபத்தைக் காட்டினாய். யசோதையிடம் வாய் திறந்து புவனம் காட்டினாய். நீ அசுரர்களை வதைத்தது, காளியனை வென்றது கோவர்தனம் தாங்கியது ஒவ்வொன்றுமே உன் திவ்ய ஸ்வரூபத்தை வெளிப்படுத்தினாலும், உன் மாயையால் எல்லாவற்றையும் மறைத்து விட்டாய்.” என்றாள்.
“ ஆயினும் என் பக்தர்களும் முனிவர்களும் என்னை உணர்ந்திருந்தார்கள், என்ற கண்ணன் , ஒருத்தி மகனைப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த என்ற உன் சொற்கள் எனக்கு நம்மாழ்வாரையும் ராமானுஜரையும் நினைவு படுத்துகின்றன. திருவாய்மொழி என்பது வேதம் அதில் உள்ளவன் வேதஸ்வரூபனான நானே. ஆகவே நம்மாழ்வார் தேவகியைப்போல, திருவாய்மொழியை உலகுக்கு அளித்த ராமானுஜர் யசோதையைப் போல.’என்றான் .”