பட்டுப் புடவையும் வைரமும் அணிந்த உடல்
இன்று மார்ச்சுவரியில் தன்னந்தனியே கிடந்த அவலம்
முகம் போர்த்திய வெள்ளைத் துணியை
என் கைகள் விடுவித்து அதனைப் பார்த்த போதுதான்
நன்கு உறைத்தது ‘அவள்’ ‘அது’ வான உண்மையை
அறுபது வயது பெரியக் குழந்தை ஒன்று
சாயத் தோளின்றி பரிதவித்த கோலம்
உருவமற்ற உயிர் எங்கு பறந்து சென்றதோ
என்று புரியாமல் அரற்றிய அந்த வேதனை
என்னை நிலைகுலைய வைத்ததென்னவோ உண்மை
இறைவா இது என்ன விளையாட்டு -
பிறப்பையும் இறப்பையும் கொடுத்த நீ
பாசத்தையும் அன்பையும் ஏன் தந்தாய்
இளமையும் முதுமையும் அளித்த நீ
காதலையும் நேசத்தையும் ஏன் திணித்தாய்
உறவையும் பந்தத்தையும் தந்த நீ
ஆசைகளையும் எதிப்பார்ப்பையும் ஏன் அளித்தாய்
அழகையும் அறிவையும் படைத்த நீ
ஏக்கத்தையும் பொறாமையும் ஏன் தந்தாய்
ஒன்று மட்டும் கேட்க விரும்புகிறேன் -
வெற்றியின் பின் ஓடும் மனிதனே
இறப்பை வெற்றிக் கொள்ள முடியுமோ
பிறர் வாழ்வை விலைக்கு வாங்கும் மனிதனே
உன் வாழ்வுதான் நிலைத்திருக்க முடியுமோ
-பத்மஜா