(ஸாயன) உத்தராயணமும் சிறந்த புண்ய காலம்
மகர ஸங்க்ராந்தியைப் போலவே (ஸாயன) உத்தராயணமும் சிறந்த புண்ய காலம்
5124 ஶுபக்ருத் ௵ மார்கழி ௴ 20, 2023-ஜன-04
ஸாராம்சம்
வருடத்தில் ஒவ்வொரு ராசிக்குள்ளும் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலங்களாகிய 12 ஸூர்ய ஸங்க்ரமணங்கள் ப்ரஸித்தமாக உள்ளன. இவை நிரயண ஸங்க்ரமணங்கள். அது போலவே ஸூர்யனின் வடக்கு/தெற்கு நோக்கிய கதிகளை முன்னிட்டு 12 ஸங்க்ரமணங்கள் ஏற்படுகின்றன. இவை ஸாயன ஸங்க்ரமணங்கள்.
ஒரு காலத்தில் இரண்டு வித ஸங்க்ரமணங்களும் சேர்ந்தே ஏற்பட்டன. ஆனால் நாளடைவில் ஸாயன ஸங்க்ரமணங்கள் முன்னமே ஏற்பட்டு வருகின்றன.
நிரயண ஸங்க்ரமணங்களுக்கு இருப்பது போல் ஸாயன ஸங்க்ரமணங்களுக்கும் புண்ய காலம் உண்டு என்று ப்ராசீன ஜ்யௌதிஷ ஸித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ஆகவே ஸாயன உத்தராயண புண்ய காலத்தை அறிந்து அனுஷ்டிப்போம்.
விஸ்தாரம்
ஸங்க்ரமணம் அல்லது ஸங்க்ராந்தி என்றால் என்ன?
ஆகாயத்தில் க்ரஹங்கள் ஸஞ்சரிக்கும் 360° வட்டப் பாதையை 30° கொண்ட 12 பகுதிகளாகப் பிரிப்பர்.
சித்ரா நக்ஷத்ரம் நிற்கும் புள்ளியை துலா ராசியின் தொடக்கமாக வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மேஷம் முதலிய 12 ராசிகளைக் கொள்வர். இதற்கு நிரயண கணிப்பு என்று பெயர்.
ஸூர்யன் பூமத்திய ரேகையைத் தாண்டி வடக்கே செல்லும் விஷுவப் புள்ளி என்ற இடத்தைத் தொடக்கமாக வைத்தும் 12 பகுதிகளாக பிரிப்பர். இதற்கு ஸாயன கணிப்பு என்று பெயர்.
[கவனிக்க: ஸாயண அல்ல, ஸாயன. இதற்கும் வேத பாஷ்யம் செய்த ஸாயண ஆசார்யருக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. நிரயண-வில் மட்டுமே ண வரும்.]
இரு கணிப்புகளிலும் ஒவ்வொரு பகுதியின் எல்லையையும் க்ரஹங்கள் தாண்டும்போது அதற்கு ஸங்க்ரமணம் அல்லது ஸங்க்ராந்தி என்று பெயர். இவை புண்ய காலங்களாக கருதப்படுகின்றன.
அதிலும் ஸூர்யனே காலத்தின் மற்றும் க்ரஹங்களின் நாயகனாக இருப்பதால் அந்த எல்லைகளை ஸூர்யன் தாண்டும் காலத்திற்கு அதிக சிறப்புண்டு.
ஸங்க்ரமண அனுஷ்டானம்
இந்த புண்ய காலங்களில் ஸ்நானம், ஶ்ராத்தம்/தர்ப்பணம், ஜபம், தானம் முதலியவற்றைச் அவசியம் செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. செய்தால் மற்ற நாட்களில் கிடைப்பதை விட அதிக புண்யத்தைத் தரும்.
மற்றபடி திருமணம் முதலிய சுபகாரியங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.
இதையே மாதப்பிறப்பு தர்ப்பணம் என்ற அளவிலாவது அமாவாஸ்யையைப் போல் நமது முன்னோர்கள் செய்து வந்துள்ளனர். நமது பாரம்பரியமான மாதங்கள் ராசி ஸங்க்ரமணங்களை முன்னிட்டே அமைந்திருப்பதால் இது எளிதில் மனதில் கொள்ளக்கூடியதாக இருந்தது.
அனைத்து ஸங்க்ரமணங்களிலும் அனுஷ்டானம் செய்ய முடியாதவர்கள் மூன்றுக்கு ஒன்று என்பதாக பன்னிரண்டில் 1, 4, 7, 10ஐ மட்டும் செய்வதுண்டு.
இதிலும் மேஷ ராசியில் ஸூர்யன் நுழையும் காலமான சித்திரை மாதப்பிறப்பானது வருடத்தின் ஆரம்பமாக கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
பௌர்ணமி அமாவாஸ்யைகளின்படி மாதங்களைக் கொள்ளும் சாந்த்ர மான வழக்கத்திலும் இந்த மேஷ ஸங்க்ரமணத்திற்கு முந்தைய அமாவாஸ்யை முடிந்து தான் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது.
உத்தராயணத்தின் சிறப்பு
இந்த ஸங்க்ரமணங்களுக்குள் வருடப்பிறப்பைப் போலவே உத்தராயண ஆரம்பத்திற்கு மிக அதிக சிறப்பு தரப்படுகிறது.
ஸூர்யன் வருடம் தோறும் 6 மாதம் வடக்கு நோக்கி நகருவதை உத்தராயணம் என்றும் 6 மாதம் தெற்கு நோக்கி நகருவதை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம்.
ஸூர்யனின் இந்த நகர்வினால் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் வெளிச்சம் கூடவோ குறையவோ செய்கிறது.
இதனால் தான் ருதுக்கள் அதாவது பருவ காலங்கள் அமைகின்றன.
பருவ காலங்களின் அடிப்படையில் தான் விவசாயம் முதலியவை நடந்து மக்களின் வாழ்க்கையின் பல சிறப்பம்சங்கள் அமைகின்றன.
அதிலும் உத்தராயணம் ஆரம்பித்தவுடன் பாரதத்தில் குளிரும் இரவு நேரமும் குறைந்து வெளிச்சத்தின் காலம் கூடுகிறது. இதன் மூலம் செடிகொடிகளும் அவை மூலம் அனைத்து ஜீவராசிகளும் ஊட்டத்தைப் பெறுகின்றன.
ஆகவே உத்தராயணத்தின் தொடக்கத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குவது இயற்கையே.
உத்தராயணம் பிறந்தவுடன் அல்லது இயன்றவரை உத்தராயணம் முடிவதற்குள் சுப காரியங்களைச் செய்வது என்பதும் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்துவருகிறது.
ஆகவே மற்ற ஸங்க்ரமணங்களைக் காட்டிலும் உத்தராயணத்தின் தொடக்கத்தில் ஸூர்யனுக்கு பூஜை செய்து சிறப்பாக நைவேத்யம் படைத்து மகிழ்ந்து கொண்டாடுவது நமது பாரம்பரியமாக உள்ளது.
உத்தராயணமும் மகர ஸங்க்ராந்தியும்
முன்னொரு காலத்தில் உத்தராயண தொடக்கமும் மகர ஸங்க்ராந்தியும் ஒன்றாக ஏற்பட்டது. அதாவது ஸூர்யன் மகர ராசியில் நுழையும் நேரத்தை ஒட்டியே வடக்கே நகர தொடங்கினார்.
ஆனால் நாளடைவில் பூமி தன்னைத் தானே சுற்றிச் சுழலுவதில் ஏற்படும் மாறுதல்களால் ராசி ஸங்க்ரமணங்களை விட்டுப்பிரிந்து உத்தராயணம், தக்ஷிணாயனம் மற்றும் அவற்றைச் சார்ந்த பருவ காலங்கள் நகரத் தொடங்கின, அதாவது முன்கூட்டியே ஏற்படத் தொடங்கின.
இதனால் மேஷ ராசியின் ஆரம்பமும் விஷுவப் புள்ளியும் பிரிந்தன. இவற்றுக்குள் இருக்கும் இடைவெளி அயனாம்சம் எனப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அயனாம்சத்தின் அளவிற்கேற்ப அத்தனை நாட்கள் முன்னதாகவே உத்தராயணம் முதலியவை ஏற்படுகின்றன.
இந்த விஷயத்தை ஸூர்ய ஸித்தாந்தம் முதலிய ஸித்தாந்த நூல்களும் ஆர்யபடர், பாஸ்கரர், ப்ரஹ்மகுப்தர் முதலிய ஸகல ஜ்யௌதிஷ ஆசார்யர்களின் நூல்களும் நிர்ணய ஸிந்து முதலிய தர்ம சாஸ்த்ர நிபந்த நூல்களும் கூறுகின்றன. ஸித்தாந்த ஜ்யௌதிஷம் அறிந்தவர்கள் அனைவருக்கும் இது தெரிந்ததே.
ஆகவே தான் பகல் இரவுகளின் அளவையும் உதய அஸ்தமனங்களையும் அறிவதற்கு அயனாம்சத்தையும் கருதியே கணக்கிட வேண்டும் என்று ஜ்யௌதிஷ கணித நூல்களில் த்ரிப்ரச்நம் எனும் பகுதியில் உள்ளது.
இன்றைய நிலை
ஆனால் பொது மக்களிடையே இந்த விஷயம் ப்ரஸித்தியடையவில்லை.
இதனால் நிரயண கணிப்பின்படியான மேஷம் முதலிய 12 ஸங்க்ரமணங்களே அறியப்பட்டு பரவலான அனுஷ்டானத்தில் உள்ளன. விஷுவம் முதலான ஸாயன ஸங்க்ரமணங்கள் தனியாக ஏற்படுவது அந்தளவு அறியப்படவில்லை.
ஸூர்யன் உதயமாகி அஸ்தமிக்கும் திக்கினை தினமும் கவனித்து வந்தால் தற்சமயம் நிரயண மாதப்பிறப்புகள் ஏற்படுவதற்கு சுமார் 24 நாட்கள் முன்னதாகவே உத்தராயணம் தக்ஷிணாயனம் முதலியவை தொடங்குவதைக் கண்கூடாக அறிய முடிகிறது.
இதன்படி தற்சமயம் அயனாம்சம் சுமார் 24 பாகை (டிகிரி) அளவில் உள்ளது. மெதுவாக வளர்ந்துகொண்டும் இருக்கிறது.
ஸூர்யன் வடக்கே நகரத்தொடங்குவது லௌகிக நாட்காட்டியின்படி சுமார் டிசம்பர் 21/22 அளவில் ஏற்படுகிறது. இதை முன்கூறியபடி நாமே பரீக்ஷித்து அறியலாம்.
மகர ஸங்க்ராந்தியோ ஜனவரி 14/15 அளவில் ஏற்படுகிறது.
ஸாயன ஸங்க்ரமணங்களுக்கும் புண்ய காலம்
ஸங்க்ரமணங்களுக்கு புண்ய காலம் உண்டு என்பதை முன்பே சொன்னோம். இது மாதப்பிறப்பு எனப்படும் நிரயண ஸங்க்ரமணங்களுக்கு கண்டிப்பாக உண்டு. அதைப்பற்றி ஐயம் எதுவும் இல்லை.
ஆனால் ஸாயன ஸங்க்ரமணங்களுக்கும் புண்ய காலம் உண்டு என்பது பண்டைய ஜ்யௌதிஷ ஸித்தாந்த நூல்களிலேயே கூறப்பட்ட ஒன்று.
ரோமச ஸித்தாந்தத்தில் दिन-रात्रि-प्रमाणानां निर्णयो न भ-सङ्क्रमात्। यतः सकल-कर्माणि पुण्योऽतश्चल-सङ्क्रमः॥ என்றுள்ளது. அதாவது அனைத்து கர்மானுஷ்டானங்களையும் நிர்ணயிக்கும் பகல் மற்றும் இரவின் அளவுகளை ராசி ஸங்க்ரமணத்தை வைத்து கணிக்க இயலாது. (ஸாயன ஸங்க்ரமணத்தை வைத்து தான் கணிக்க முடியும்.) ஆகவே முன்பு நகருவதான (ஸாயன) ஸங்க்ரமணமானது புண்யமானது.
வஸிஷ்ட ஸித்தாந்தத்தில் இதையே ஆமோதித்து चल-संस्कृत-तिग्मांशोः सङ्क्रमो यः स सङ्क्रमः என்றுள்ளது, நகரக்கூடியதான ஸாயன ஸூர்ய ஸங்க்ரமணமே (இந்த காரணத்தால்) அதிக சிறப்புடைய ஸங்க்ரமணமாகும் என்று.
புலஸ்த்ய ஸித்தாந்தத்தில் अयनांश-संस्कृतो भानुः नाले चरति सर्वदा। अमुख्या राशिसङ्क्रान्तिः तुल्यः कालविधिस्तयोः। स्नान-दान-जप-श्राद्ध-व्रत-होमादि-कर्मभिः। सुकृतं चल-सङ्क्रान्तौ अक्षयं पुरुषोऽश्नुते॥ என்று நிரயணத்தைப் போலவே இந்த ஸாயன புண்ய காலத்திலும் செய்யத்தக்க அனுஷ்டானங்களை வெளிப்படையாக சொல்கிறார்.
அதாவது அயனாம்சம் கூடி (கணிக்கப்படும்) ஸூர்யன் நாழிகைகளின் வட்டத்தில் சுற்றுகிறார் (பகல் மற்றும் இரவின் அளவை தீர்மானிக்கிறார்). ஆகவே (இவ்விஷயத்தில்) ராசி ஸங்க்ரமணம் முக்கியம் ஆகாது. (ஆனால்) 12 நிரயண ராசி ஸங்க்ரமணங்களைப் போல தான் 12 ஸாயன ஸங்க்ரமணங்களுக்கும் புண்ய காலத்தை அறிய வேண்டும். ஸாயன ஸங்க்ரமணத்தில் ஸ்நானம், தானம், ஜபம், ஶ்ராத்தம் (தர்ப்பணம்), வ்ரதம், ஹோமம் முதலியவற்றைச் செய்தால் அழிவற்ற புண்ணியம் கிட்டும்.
ஆகவே நிரயண மாதப்பிறப்புகளைப் போலவே ஸாயன ஸங்க்ரமணங்களையும் அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது. அபூர்வமான சில சான்றோர் அவ்வாறு அனுஷ்டிக்கவும் செய்கின்றனர்.
உத்தராயணத்திற்கான ஸூர்ய பூஜை
முன்பு கூறியபடி உத்தராயணத்தின் மஹத்த்வத்தை முன்னிட்டு அதன் தொடக்கத்தில் ஸூர்ய பகவானுக்கு பூஜை செய்துவருகிறோம். ஆகவே இதை ஸூர்யன் யதார்த்தமாக கண்ணால் வடக்கு நோக்கி நகருவதாக காணப்படும் உத்தராயண தொடக்கத்தன்று செய்வது மிகவும் சிறப்புடையது ஆகும்.
உலக வழக்கில் மகர ஸங்க்ராந்தியன்று ஸூர்ய பூஜை செய்யப்படுகிறது. அதுவும் புண்ய காலம் ஆகையால் அதில் யாதொரு தவறும் இல்லை.
ஆகவே தான் சில உயரிய பெரியோர்கள் ஸாயன கணிப்பின்படி அறியப்படும் உத்தராயணத்தில் ஸூர்ய பூஜையை அனுஷ்டிக்கவே செய்கின்றனர். லோகாசாரத்தை முன்னிட்டு மகர ஸங்க்ராந்தியன்றும் ஸூர்ய பூஜை நடத்தப்படுகிறது.
ஆகவே ஆஸ்திகர்கள் இந்த விஷயங்களை ஆலோசித்து உசிதமாகப் பட்டால் கண்கூடாகத் தெரியும் உத்தராயண புண்ய காலத்தை அனுஷ்டித்து ஸூர்ய பகவானின் (அந்தர்யாமியான ஸர்வேச்வரனின்) அனுக்ரஹத்திற்கு பாத்ரமாகும்படி வேண்டுகிறேன்.
நிகழும் சுபக்ருத் வருடத்தில்
(ஸாயன) உத்தராயண புண்ய காலம்
2022 டிசம்பர் 22
மகர ஸங்க்ரமண புண்ய காலம்
2023 ஜனவரி 15