வேத மாதா
வேதம் எங்கள் அன்னையாம்
சந்தம் கொண்டு திண்ணமாய்
ஓதும் நெஞ்சில் தோன்றுமாம்
போதம் நல்கும் உண்மையாம்
ஸ்வர்க்கம் செல்லும் பாதையும்
கதியில் நன்மை அடைதலும்
பிறவி நன்கு வாய்த்தலும்
விரைவில் பதவி கிடைத்தலும்
வேண்டிச் சொல்லும் மந்திரம்
தூண்டில் போடும் அழகுடன்
பலவும் அதனில் உள்ளதாம்
மலரின் சொல்லாய்க் கவருதாம்
வேதம் என்று சொல்வது
யக்ஞம் மட்டு மன்றது
ஆசை கொள்ளச் செய்திடும்
பூசை மட்டு மன்றது
கீதை இதைச் சொல்லுது
காதை அல்ல முத்தியின்
சோதி தன்னைச் சட்டென
வேதப் பாதை காட்டுது
*பூத கத்தைக் கடந்ததும்
போத மதைக் கொடுப்பதும்
வேதம் தன்னில் கிடக்குது
முயன்று செல்ல கிடைக்குது
*பூதகம்:பௌதிகம்
_____________
ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திப் ப்ரசோதயாத்
வளைந்த தந்த மொன்றுடன்
விளைந்த தும்பி தன்னுடன்
துளிர்க்கு முந்த னருளுடன்
நிலைத் திருக்கு முன்னிடம்
களைத்த நெஞ்சு சென்றுடன்
இறைஞ்சி வேண்டி நிற்பதும்
விரைந்து நெஞ்சில் தோன்றிடும்
துலங்கு ஞான ஞானமே..!
..........கணேச காயத்ரி
____________________________________________________________________________________________________