thyagarajakrithis-meaning
001-அபி4மானமென்னடு3 கல்கு3ரா ..kunjari
களிப்பூட்டும் பட்டாபிராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!அன்பு என்றுண்டாகுமய்யா, அனாதையான என்மீது உனக்கு?குற்றங்கள் யாவற்றையும் மன்னியுமய்யா;
ற்ற தாயும், பெற்ற தந்தையும், யாவும் நீயேயென நம்பவில்லையா?
உன்னையன்றி கதியெனக்கெவருமிலரே;
என்னைக் காப்பாய்
======================================================
002-
அபி4மானமு லேதே3மி - ராகம் ஆந்தா3ளி
வனமாலி!
(என்னிடம்) அன்பு இல்லையா என்ன? நீ சைகை வசனங்கள் பகர்வதென்ன?
கனிவு கொஞ்சமும் இல்லையோ?
தன்னை விலக்கிய அறம் உளதோ?
என்மீது தயை வாராதோ?
காலம் தாழ்த்தும் பண்பு (உன்னை விட்டு) இனியாகிலும் அகலாதோ?
செல்வமுண்டாகில் (நீயே) வைத்துக்கொள்ளய்யா;
கிருபை தோன்றுமென வேண்டினேனய்யா;
எனது கலவரத்தினைக் கேட்டு வாராயய்யா;
பொல்லாமை உனக்குண்டென நானறியேனய்யா;
அரசன் நீயென நம்பினேன்;
கரியரசன் இருந்த நிலையைப் பற்றி செவி மடுத்தேன்;
இரதிபதியின் அடிமைகளை வேண்டேன்;
தியாகராசன் உன்னவனெனப் பெயர் கொண்டேன்;
=====================================================
003-Adigi Sukhamu - Raga Madhyamavati
ஆதிமூலமே இராமா! அறாத, பாவமெனும் இருள் நீக்கும் கோடி பரிதியே! சார்வபூமனே! கமலக்கண்ணா! நற்குணத்தோனே! அரக்கரையழித்தோனே! சாகேத நகருறையே! தியாகராசனால் போற்றப் பெற்ற இறைவா!
உன்னை விழைந்து, சுகத்தினை யெவர் அனுபவித்தனரய்யா?
அண்டி, வரம் வேண்டிய சீதை, அடவிக்குப் போகலாயிற்று;
அரக்கி விருப்பத்தினை வேண்ட, அப்போழ்தே மூக்கு போனது;
புகழ்மிகு நாரத முனி வரம் வேண்ட, வனிதை வடிவினனாகினன்;
ஆசைப்பட்டு, துருவாசர் உண்டி வேண்ட, அப்போழ்தே மந்தமாயிற்று;
மைந்தனை வேடிக்கை பார்க்க தேவகி விழைய, யசோதை காணலாயிற்று;
பெண்டிர் யாவரும் இரதிப்பிச்சை கேட்க, தத்தம் கணவரை வீடலாயிற்று;
உனக்கே தயை பிறந்து காப்பாயோ, மாட்டாயோ?
உனது இரகசியம் வெளிப்பட்டது;
என்ன மாயையிது?
==========================================================
004-Adugu Varamula - Raga Arabhi - Prahlada Bhakti Vijayam
(இச்சொற்கள் பிரகலாதனுக்கு அரி பகர்வதென)
தானவச் சிறுவா! உயர் தியாகராசனின் நண்பா!
கேட்கும் வரங்களை நானளித்தேன்;
அடிக்கடி உன்னையே நினைந்துள்ளேன்; அற்புதமான (உனது) பத்திக்குச் சொக்கினேன்;
செல்வம், பொன், மனைவி, மக்கள், சொகுசான வீடுகள் எவ்வளவாயினும் உனக்குப் பரிவுடன் அளிப்பேன், ஐயமேன்? உடல் இளைப்பதெதற்கு?
முறைகெட்ட தானவரை யழித்து, உனது இடுக்கண்களைக் களைந்து, வெற்றியுடனும், மிக்குப் புகழுடனும், பிரமன், இந்திராதியரின் பட்டங்களையளித்தேன்;
குதிரைகள், யானைகள், பல்லக்குகள், சிறந்த மணிகளாலான அணிகலன்கள், உனக்கு சம்மதத்துடன் அளிக்காது, சிறிதும் தாளேன்.
=======================================================
005-Adi Kaadu Bhajana - Raga Yadukula Kambhoji
மனமே!
அஃதன்று பஜனை;
உள்ளத்தினில் நினைப்பதொன்று, வெளியில் நடப்பதோ மற்றொன்று; அஃதன்று பஜனை;
பெரியதனத்திற்கு ஆசை; இழிந்த விடயங்களின் வேட்கை; பெயருக்கென பல வேடங்களிட்டு பெருமிதமுறுவர்; அஃதன்று பஜனை.
==============================================
006-Alakalallalaadaga - Raga Madhyamavati
மாரீசனின் செருக்கினை யடக்கும் வேளையிலும்,
முனிவரின் கண் சாடையறிந்து, சிவ வில்லினை முறிக்கும் சமயத்திலும்,
தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் முகத்தினில் துலங்கும் சுருளல்கள், எழில் மேலிட, அசைந்தாடக் கண்டு, அவ்வரச முனிவர், விசுவாமித்திரர் எப்படிப் பொங்கினாரோ!
===================================================
007-Allakallolamu - Raga Saurashtra - Nauka Charitram
இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. ஆய்ச்சியர், யமுனையில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சி, யமுனா தேவியினை வேண்டி இப்பாடல் பாடுகின்றனர்.)
தியாகராசனின் நண்பன் - கண்ணன்
---------------
யமுனா தேவி!
பெருங்குழப்பமானதம்மா;
எமது துயரங்களையெல்லாம் தீர்ப்பாயம்மா.
முல்லை மலர்களால் பூசித்து வணங்கினோம்;
காப்பாயம்மா.
மாரனின் தொல்லை தாள இயலாது, இந்த அரச குமாரனைக் கொணர்ந்தோம், இதுவரை;
தாறுமாறானது பிழைப்பு;
தத்தளிப்பது எதுவரை?
காற்று, மழை வலுக்கலாயின;
எமது செயல்கள் யாவும் கேலி செய்வதற்கிடமானது;
அன்புடன் எம்மையாளும் கணவரை இடை பிரியலாயிற்று.
நகைகள் யாவும் உனக்களித்தோமம்மா;
இந்த இன்முகத்தோனைக் கரை சேர்ப்பாயம்மா;
எவளாகிலும் (இவனை) வலிய யேன் கொணர்ந்தோமம்மா?
மலரோன் எழுதிய எழுத்து எப்படியிருந்தாலும், நாதன் பிழைத்திருந்தால் போதும்;
ஊழியானது, பெண்கள் எப்பணி செய்யினும்.
உடல்களையெல்லாம் அளித்தோமம்மா;
கண்ண தேவனைக் கரை சேர்ப்பாயம்மா;
எழிலுருவத்தோனை யாம் மோசம் செய்தோமம்மா.
யாமொன்று எண்ணப் போனோமம்மா;
எம் காவல் தெய்வம் என்னென்னவோ எண்ணிக்கொண்டானம்மா;
குழலியரோ தியாகராசனின் நண்பனைப் பிரியோமம்மா.
எமது துயரங்களையெல்லாம் தீர்ப்பாயம்மா.
=======================================================
007-Amba Ninu - Raga Arabhi
அம்மா!
சம்பரனின் பகைவனை யீன்றோனின் சோதரியே! ஓ உலகத்தாயே!
வானோர்களுக்கு ஆதாரமான, அம்மையே! சருவாணியே! நீக்கமற்ற உருவினளே! மலையரசனின் இனிய மகளே!
வானோர் பகைவரையழிக்கும் சூரியே! கடல் நிகர் மாட்சிமையுடையவளே! குயிலின் கூவலை வெல்லும் குரலினிமையுடைவளே! நன்னடத்தையினளே!
மகிழ்ச்சி அருளும் கௌரியே! தீயச் செயல்களெனும் இழிந்த அடவியை அழிக்கும் கோடரியே! களங்கமற்ற, தியாகராசனின் இதயத்துறையே! அறம் வளர்த்த நாயகியே! ஓங்காரியே!
உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?
புகலடைந்து, மனதார உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?
சமாளிக்க இயலாது, மனதினில் விழைந்து, உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?
பரிதாபம் தாளாது உன்னை நம்பினேனென்றால் உனக்கு ஐயமென்னவம்மா?
========================================================
008-Amma Dharmasamvardhani - Raga Athana
எமது தாயே! அறம் வளர்த்த நாயகியே! சிவனின் இல்லாளே!
தாயே! மலையரசனின் செல்ல மகளே! மதனர் கோடி எழில் உடலினளே! இளஞ்சிவப்புத் தாமரையிதழ்க் கண்ணினளே! உவமையற்ற, மங்கள உருவினளே! (புனித) பீடங்களிலுறைபவளே! புனித கரங்களில் வளையல் அணிபவளே! முற்றிலும் புனிதமானவளே! தொண்டரைக் காக்கும் சுமையேற்றவளே! வீர சக்தியே!
அம்பையே! சங்குக் கழுத்தினளே! அழகிய கதம்ப வனத்தினில் உறைபவளே! கோவை யிதழ்களுடைய, மின்னல்கள் கோடி நிகர் ஒளியினளே! கருணைக் கடலே! காமன் பகைவனின் இதயத்திலுறை சங்கரியே! கௌமாரியே! தும்புரு மற்றும் நாரதரின் இசை இனிமையினை வெல்லும் குரல் உடையவளே! பாவங்களைக் களைபவளே!
மங்களமானவளே! முக்கண்ணினளே! தலைசிறந்தவளே! சிறந்த யோகியர் இதயத்தில் மதிக்கப்பெற்றவளே! தியாகராசனின் குலப் புகலே! வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே! கருணைக் கடலே! பொதிகைக் கன்னியின் கரையிலுறைபவளே! பராபரியே! காத்தியாயினியே! இராமனின் சோதரியே!
இப்புவியில் உனக்கீடெவரம்மா?
நான் (உன்னை) நம்பியுள்ளேனம்மா.
ஆதரிப்பாயம்மா.
எவ்வமயமும் (எனக்கு) புலப்படலாகாதா?
========================================================
009-
அம்மா, துளசம்மா! கமலக்கண்ணாளே!
அம்மா, துளசம்மா! கமலக்கண்ணாளே!வாராயம்மா;
என்னைக் காப்பாயம்மா;
எவ்வமயமும் (உனது) திருவடிகளையே நம்பினேனம்மா
நிம்மதியினை, நீ இம்மையிலும், மறுமையிலும் அருள்வாயென, மலர் வில்லோனின் தந்தை, கனவிலும் (உன்னைப்) பிரியானாம்;
உனது மெல்லுடலினைக் கண்டு, உனது நறுமணத்தினைக் கண்டு, உனது மேன்மையினைக் கண்டு, தாமரை யிதழ்க்கண்ணன், தியாகராசனுக்கினியோன், பேரன்புடன், தலையில் (உன்னை) அணிந்துள்ளானாம்.
===========================================================