References from Thirumurai
பாட்டும் பொருளும்
கலியநாயனார்
முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.
இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான கலியநாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.
காரிநாயனார்
தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச்
சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.
பெருஞ் செல்வத்தால் பெறும் சிறந்த கெடாத பயன் இதுவே! எனும் உள்ளத்தராய், நீங்காது ஒளிதரும் விளக்குகளைச் சிவபெருமான் கோயிலுக்குள் ஏற்றி வைத்து, நாவாரப் போற்றுபவ ரான காரி்நாயனார், வறுமை வந்து அடையவே, அந்த வறுமையுடன் இங்கு இருத்தல் தகாது என்று எண்ணித், தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தில்லையைச் சென்று சேர்ந்தார்.
கணம்புலநாயனார்
தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.
இப்பணியைத் தம் இறைவர் திருவுள்ளத்தில் ஏற்றுத் திருவிளக்கை மிக்க அன்புடன் எரித்த ஒப்பில்லாத தொண்டருக்கு, இறைவனார் நன்மை பெருகும் பெருங்கருணையினை வைத்தருளச், சிவலோகத்தில் எங்கள் பெருமானாரான கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி அங்கு அமர்ந்தருளினார்.
மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
வலிமை பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில், தம்முடியையே திருமுன்பு இடும் விளக்காகக், கங்கை எனும் பேராற்றை அணிந்த சிவபெருமானுக்கு எரித்த கணம்புல்ல நாயனாரின் திருவடிகளைப் போற்றித், தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் `திருக்கடவூரில்' தோன்றி யருளிய `காரி நாயனார்' செய்த திருத்தொண்டினைச் சொல்வாம்