Article written in news papers [in TAMIL] are appearing for the benefit of
the students and farming community .
[ In each article, click on the right downward arrow to read the full article]
[Special Article ] குறளில் பெருமைசேர்த்த உழவுத்தொழில் - [article appeared in a book]
நமது வாழ்க்கையின்; வழித்தடத்தை பலநூறு ஆண்டுகளுக்குமுன் திருக்குறளில் எழுதிவைத்த திருவள்ளுவப் பெருந்தகை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எப்படி, எவ்வாறு, எங்ஙனம் வாழவேண்டும் என்றும் வாழ்வின் நெறிமுறைகள் தவறாது எவ்வாறு வாழ்ந்து பார்க்க வேண்டும் என்றும் இருவரி அறிவுத்திரட்டுக்களால் முத்தான திருக்குறளில் தந்திருக்கின்றார்;. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் விஞ்ஞானத்தையும் விஞ்சியதாக இருப்பது தான் புதுமையிலும் புதுமை.
திருக்குறள் தந்த அறிவுக்கடலை நாம் அதில் நீந்தியறிந்து அனுபவித்து வாழ்ந்து பார்க்கலாம். அவ்வளவும் முத்தான வாழ்க்கையின் படிப்பினைகளும் மீதி வாழ்க்கையை எங்ஙனம் வாழவேண்டும் என வழிநடத்துதலுமாகும். எமக்கு இப்படியெல்லாம் அறிவினை அனுபவமாக்கி குறுகிய வரிகளில் முத்து முத்தாக தந்திருக்கும் அழகைப் பார்க்கும் போது அவை எமக்கான சொததுக்களாக நாம் என்றும் போற்றிக்கொள்வதுடன் எமக்கான அறிவுக் களஞ்சியமாக என்றென்றும் எம்மனைவரினதும் பரம்பரைகளையுந் தாண்டி இன்னும் பலநூற்றாண்டுக்கான படிப்பினைகளாக அவை அமைந்திருக்கும்.
ஒவ்வொரு திருக்குறளும்; அவசியமான முதன்மைக்கருத்தாக ஒவ்வொன்றினை பின்னிப் பிணைந்திருக்கும் பாங்கு என்னவென்பது. அதில் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் என்னும் மூன்று வகைகளுக்குள்ளே 133 பிரிவுகளை வைத்து அவை ஒவ்வொன்றுக்குள்ளும் பத்து குறள்களை ஒருங்கமைத்திருக்கும் பாங்கு வியக்கத்தக்கது. அவற்றில் உழவு என்னும் தலைப்பிட்டு வள்ளுவப் பெருந்தகை பத்து குறள்களை பாடியிருக்கின்றார். உணவு உற்பத்திக்கு முதன்மை கொடுத்த குறள் உணவு உற்பத்தி செய்பவரையும் போற்றி நிற்கும் குறள். இவ்வாறாக அனைத்தையும் முதன்மைப் பொருளாக்கி பேசுபொருளாக மாற்றியிருக்கின்றார். இதில் குறிப்பிட்டுக் கூறுவதென்றால் திருக்குறளானது எக்காலத்திற்கும் பொருத்தப்பாடானதாக இருப்பது தான் அதன் மகிமை. சமகால மாற்றங்கள் நிகழ்கின்றன என்றால் அவற்றையும் திருக்குறள் உள்வாங்கியிருப்பது தான் விந்தையிலும் விந்தை.
திருக்குறளில் விவசாயத்தை உழவுத்தொழிலாக மேன்மை மிக்க தொழிலாக காணும் பாடல்கள் 104ம் அத்தியாயத்தில் காணலாம். உணவுற்பத்திக்கு குறளில் தந்திருக்கும் முக்கியத்துவம் சமகாலத்தில் அதன் தேவையை இன்னும் மெருகூட்டியிருக்கின்றது என கூறலாம்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
ஊழந்தும் உழவே தலை (1031)
உழவுத்தொழிலுக்கு நிகரான தொழில் எதுவுமேயில்லை. நாம் உழவுத்தொழில் என்றவுடன் முகஞ்சுழிக்கும் காலம் மாறி அதனை மற்றைய தொழில்களுக்கு இணையானதாக நிலைத்திருக்க அதனை உயர்த்துதல் மிக அவசியமாகும். வளர்ந்து வரும் விஞ்ஞான தொழினுட்ப கருவிகளும் தொழில்நுட்பமும் கிராமப்புற மக்களை குறிப்பாக இளவயதினரை விவசாயசெய்கையிலிருந்து விடுபட்டு நகர்ப்புறம் நோக்கி இழுத்து வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது. உணவுற்பத்தியினை அதிகரிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலகட்டத்தினுள் நாம் உள்ளார்ந்திருக்கின்றோம் என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியாமனது உணவு. அதுவும் சமனான ஊட்டச்சத்து மிக்க சுகாதாரமான உணவு கிடைக்கப்பெறல் வேண்டும். எமக்கு தேவையாக உணவு கிடைக்கப் பெறாதபோது எமது உடல் பல்வேறுபட்ட உபாதைகளுக்கள் ஆளாக நேரிடுகின்றது. அது தவிர ஊட்டச்சத்தான உணவு கிடைக்கப்பெறாத போது எமது உடலின் தேகாரோக்கியம் நலிவடைய ஆரம்பித்து தொற்று நோய்கள் எமது உடலில் தொற்றுதலுக்குள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. எனவே சமனான ஊட்டச்சத்தான உணவை உற்பத்தி செய்யும் உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் மிகவும் அவசியமானதாகும். கோவிட் 19 இனால் இவ்வருடம் மக்கள் பசிபட்டினிக்கு ஆளாக நேரிடும் என உலக உணவு மற்றும் விவசாய தாபனம் முன்னெச்சரிக்கை சமிக்ஞை காட்டியிருக்கின்றது. அவதிப்பட்ட மக்களை கொரோனா வைரசுவின் தாக்கம் ஒரு புறமும் இன்னொரு புறத்தில் உணவின்றி மக்கள் இறக்கப்போகும் நிலையையும் நாம் விரைந்து எதிர்கொள்ள நேரிடும்;. இந்நிலையில் மக்களை பட்டினியிலிருந்து பாதுகாக்கத் தவறினால் உலகம் பாரதூரமான மக்கள் இழப்பினை சந்திக்க நேரிடும். உழவுத்தொழிலுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து திசைமாறியிருக்கும் இளையவர் சமூகத்திற்கு விஞ்ஞான தொழினுட்பங்களை வழங்கி அவர்களை தொடர்ந்தும் உழவுத்தொழிலிலேயே உள்ளீர்த்து வைத்திருத்தல் மிகவும் அவசியமானதாகும். நாம் உண்ணுகின்ற உணவு உற்பத்தி செய்யப்படவில்லையெனில் அதன் விளைவு மனித அழிவாகத்தான் இருக்கும். அந்த வகையில் உழவுத்தொழிலுக்கான முக்கியத்துவத்தை காலநேரமறிந்து அவசியம் கொடுக்க வேண்டும்.
உழவுச்செய்கை தற்போது நவினத்துவம் பெற்று பலவகையான தொழினுட்பங்களும் உள்வாங்கப்பட்டு உணவுற்பத்தி பலமடங்கு அதிகரித்திருக்கின்ற போதும் அவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் உணவு அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதும் இங்கே மிக முக்கியமானதாகும். இதனையே எட்டயபுரத்து பாரதி ' தனிமனிதனுக்கு உணவில்லையென்றால் nஐகத்தினையே அழித்திடுவோம்; ' என்பதிலிருந்து உணவின் அவசியத்தையும் அதனை உற்பத்தி செய்யும் உழவுத்தொழிலுக்கான முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்பதனை குறள்; அழகாக எடுத்துக்கூறியிருக்கின்றது.
அனைத்து மக்களுக்கும் உணவு செய்பவன் உழவன். இத்தகைய பெருமையுடைய இத்தொழிலை விரும்பி செய்கின்ற இளையவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருகின்றது. விவசாயத்தை முழுமையாக நம்பி தொழில் செய்பவர்களுக்கான ஆதாயம் அதிலிருந்து கிடைப்பதில்லை என்னும் பொதுவான கருத்தை நாம் வெறுமனே அலட்சியம் செய்யக்கூடாது. விவசாயிகளை கிடைக்கின்ற விஞ்ஞான தொழிநுட்ப அறிவினை உள்வாங்கி விவசாயத்தை செய்வதற்கான இடுபொருட்களை தரமானதாக கொடுப்பதுடன் அவர்களுக்கான இலகுவழி இயந்திரமயமான உற்பத்தியினையும் ஏற்படுத்திக் கொடுத்தால் இவற்றுடன் சேர்த்து அவர்களின் விளைபொருட்களுக்கான சந்தைவாய்ப்பினையும் முழுமையாக ஏற்படுத்தினால் இளையவர்களை கிராமத்திலேயே உழவுத்தொழிலில் ஈடுபட வைக்க முடிவதுடன் விஞ்ஞான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிடைக்கின்ற விளைச்சலை மேலும் அதிகரிக்க முடிவதுடன் தரமானதாக இன்னும் மதிப்பேற்றஞ் செய்து விற்பனைக்கு விடமுடியும்.
விவசாயிக்கு பயிர் உற்பத்தி செய்வது மட்டும் தான் தொழிலல்ல. உற்பத்தியான பொருட்களை சந்தைப்படுத்துவதில் அதிகரித்த கேள்வியை பெறுவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் அவர்களை தொழிலதிபராகவும் உயர்வடைய வைக்கலாம். தமது விளைச்சலிலிருந்து தொழிலாக்க முயற்சியை செய்யும் அனைவரும் உணவுற்பத்தியின் தொடர் பங்காளிகளாவர். விவசாயஞ்சார்ந்த தொழில் முயற்சிகளுக்கு வசதிவாய்ப்புக்கள் அதிகமாகும். எமது விவசாய இளைஞர்களுக்கு விவசாய தொழில்நுட்பங்களை அறிவூட்டுவதுடன் அவர்களுக்கான தொழிலுருவாக்கல் வழிகளையும் உருவாக்கிக் கொடுத்தால் பல தொழில்முயற்சியாளர்களை எமது தேசத்தில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
தொழில் தொடங்குவதற்கான வழிவகைகள் என பலவுண்டு. 18 தொடக்கம் 40 வயதுக்கிடையிலான விவசாயத்திலீடுபடும் இளைஞர்களை தொழில்முயற்சியில் ஈடுபடவைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் இளையவர்களுக்கான தொழில்முயற்சியை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சார்ந்து இம்மாதம் 23 – 28ம் திகதிகளுக்கிடையிலான காலத்தில் பல செயற்றிட்டங்கள் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் விவசாய குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு சேதன முறை பயிர்ச்செய்கையில் உற்பத்தி தொழினுட்ப அறிவை வழங்குவதோடு அவர்களை விவசாய விளைச்சல் பொருட்களை வைத்துக்கொண்டு தொழில்முயற்சியை தொடங்குவதற்கான அறிவிப்பையும் செய்ய இருக்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் சிறிய தொழிலதிபர்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். மேலும் மேற்படி தொழில் முயற்சியில் இறங்க இருப்பவர்களுக்காக ஆகக் குறைந்தளவான 6.5 சதவீதத்தில் வங்கியில் கடன்பெற்று இதனை முழுமை பெறச்செய்தால் அதன்மூலம் பல தொழில்முயற்சியாளர்களை உருவாக்க முடியும்.
மேற்படி தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் போது சேதன விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் அதற்கான அணுகுமுறைகளை கையாள்வதற்கான தேவையான சட்டகத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சேதன விளைபொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கான அறிவினை வழங்கவும் அதற்கான சந்தை வாய்ப்பினை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. விவசாய இளைஞர்களை உள்வாங்கிய செயற்றிட்டமாக இது உருவெடுத்தாலும் அனைத்து இளைஞர்களும் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இதிலுண்டு. இளையோர் இணைந்து சிறந்த தொழில்முயற்சிக்கான திட்டத்தை முன்வைக்கலாம். சிறந்த திட்டத்திற்கு குறைந்த சதவீதத்தில் கடனைப்பெறக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றும் கற்று வெளியேறிய பட்டதாரி இளைஞர் யுவதிகள் இணைந்து இந்த தொழில்முயற்சியாளர் செயற்றிட்டத்திற்குள் உள்வாங்கப்படலாம். இது சம்பந்தமான விபரங்களைப் பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அந்தந்த பீடங்களுக்கான பல்கலைக்கழக தொழிலுருவாக்கல் இணைய அலகின்; (ருniஎநசளவைல டீரளiநௌள டுiமெயபந உநடட) இணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக தொழிலுருவாக்கல் அலகின்; பணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம். விவசாயத்தின் பால் இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்த அமைப்பு ஒன்றினை உருவாக்கி இளையவர்களை இந்த செயற்திட்டத்தினுள் உள்ளார்ந்து அவர்களுக்கான தொழில்வாய்ப்பினை உருவாக்கும் பொறிமுறையாகவே இதனைக் கருதலாம்.
இதனுடன் சேர்த்து விவசாயிகளுக்கான உழவர் சந்தையை உருவாக்குவதற்கான பொறிமுறையும் இதனுள் உள்ளடங்கியிருக்கின்றது. பலவழிகளில் பலமுறை உழவர் சந்தையை உருவாக்குவதில் முனைப்பு காட்டியும் இது சாத்தியப்படாமலேயே இருக்கின்ற நிலையில் தற்போது மீண்டும் உழவர் சந்தையை உருவாக்க வழிபிறந்திருக்கின்றது. இதில் மாகாண விவசாய திணைக்களமும் முழுமையாக ஈடுபடுகின்றதனால் விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் சேதன விவசாய உற்பத்தித் திட்டத்தை முன்னெடுக்கின்ற அதே நேரத்தில் அதற்கான சிறந்த சந்தைவாய்ப்பினையும் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. இளையோரை அவர்கட்குத் தேவையான விஞ்ஞான தொழில்நுட்ப அறிவையும் பயன்பாட்டையும் கொடுத்து அவர்களின் முழுமையான பங்களிப்புடன் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமாக இதனைப் பார்க்க முடியும். அவ்வாறு நடைபெறின் வடமாகாணத்தில் புதியதொரு தொழில்வாய்ப்புக்கான வழி பிறக்கின்றது என கருதலாம். இதனையும் சுற்றுலாத்துறையுடன் இணைத்தால் இன்னும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வழியுண்டு. மேலும் இத்திட்டத்தில் க.பொ.த சாதாரண தரம் வரையும் இன்னும் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றவர்களும் இணைந்து கொள்ள வழியிருக்கின்றது. விபரங்களை முழுமையாகப் பெற்று தங்களை தொழிலதிபர்களாக மாற்றிக்கொள்ள விவசாயஞ் சார்ந்த இளையவர்கள் அனைவரும் இணைந்து கொள்ளலாம்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅக்தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (1032)
நிலத்தை உழுபவரே இந்த உலகிற்கு அச்சாணி போன்றவர் ஏனெனில் பிற தொழிலைச் செய்கின்ற அனைவரையும் உழவுத்தொழில் செய்கின்றவரே தாங்குகின்றார். உணவுற்பத்திக்கான அடித்தளம் வலுவாக ஆழமானதாக இடப்படவில்லையென்றால் உலகமக்களுக்கான உணவு முழுமையாக அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உற்பத்தி செய்யப்படாது என்பதாகும். உலகின் இயக்கத்திற்கு அச்சாணி போன்ற உழவுத்தொழிலையும் உழவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்குமானது. உழவுத்தொழிலில் பின்னடைவு ஏற்பட்டால் அது நாட்டின் செல்வத்தை அழிப்பதற்கு ஒப்பானதாகும். உணவின்றி உலக இயக்கமே நடைபெறாது. அந்த இயக்கத்திற்கான சக்தி உணவின் வழி கிடைக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் பலநாடுகள் இணைந்து முன்மொழியப்பட்ட பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் 17 இல் முதலாவது இலக்காக வறுமையில்லை (No poverty) என்பதையும் இரண்டாவது இலக்காக பூச்சிய பட்டினி (Zero Hunger) என்பன இனங்காணப்பட்டுள்ளன. இவற்றை உன்னித்துப் பார்த்தால் வறுமையும் பட்டினியும் இல்லாதொழித்த தேசமாக நாம் பரிணமிக்க முனைந்தால் உணவுற்பத்தியில் நாம் தன்னிறைவு காணுதல் அவசியம். முழுமையான தன்னிறைவு என்தனை நீண்ட காலப்போக்கில் அடைவதனை முன்னிறுத்தினாலும் அவற்றுக்கான வழித்தடங்களை இப்போதே சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தினாலன்றி இது சாத்தியப்படாது. அந்த வகையில் அனைத்து மக்களுக்குமான உணவு என்னும் படிநிலையில் நின்று நாம் கணக்கிட்டுப்பார்த்தால் உழவுத்தொழிலின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்து அதற்கான முக்கியத்துவத்தை அவரவர் வாழ்வியலுக்கூடாக முன்னெடுத்துச் செல்லல் அவசியமாகின்றது. அதிலும் நாம் உண்ணும் உணவு எமக்கே நஞ்சாக எமனாக மாறாது அதன் மூலம் எமது எதிர்கால சந்ததியை வளமுள்ளவர்களாக தேகாரோக்கியம் மிக்கவர்களாக உருவாக்குதல் மிக மிக அவசியமானதாகும். இதனையே கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ளும் முக்கிய ஆயுதமாக எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினை வருமுன் காத்தல் என்னும் தொனிப்பொருளில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நாம் உண்ணும் உணவினூடாக உட்சென்றால் தான் எமது உடல் வலுப்பெற்று இனிவரும் அனைத்து நோய்களுக்கம் எதிர்ப்புசக்தியுடையதாக மாற்றம் பெறும்.
உழவுத்தொழில் என விவசாயத்தை முன்னிலைப்படுத்தினாலும் வளர்ந்து வரும் மொத்த தொழினுட்பங்களனைத்தும் இதற்குள் உள்வாங்கப்பட்டு அவை பல்வேறுபட்ட பரிமாணங்களில் மக்களுக்கு கிடைக்க வழிசெய்யப்பட்டிருக்கின்றது. உழவுத்தொழிலை விருப்;பு தொழிலாக செய்யும் மனப்பாங்கு மாறிவருகின்றதனை பலரும் அவதானித்திருக்கின்றனர். காலநிலை மாற்றத்தின் தாக்கம் முழுமையாக உழவுத்தொழிலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. மேலும் சமகால அபரிவிதமான விஞ்ஞான தொழினுட்ப வளர்ச்சி குறிப்பாக தகவல் தொடர்பாடலில் செய்துள்ள அதீத மாற்றங்கள் அனைத்தும் உழவுத்தொழிலுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். உழவுத்தொழிலுக்குள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி பிரதிபலிக்க வைப்பது மிக அவசியமானதாகும். கிராமத்து இளையோரை கல்வியில் தொழிற்றுறையில் மிளிரவைக்கும் அதே நேரத்தில் உழவுத்தொழிலின் மேன்மைக்கும் பங்கமேற்படாமல் உழவுத்தொழில் சார் தொழிற்றுறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை விரைந்து முன்னெடுக்கவேண்டும்;.
உமது உடலில் இயக்கத்திற்கு அடிப்படையே சுத்தமான சமனான நஞ்சற்ற உணவு என்பதனை நாம் என்றென்றும் மறந்துவிடலாகாது. உணவே மருந்து மருந்தே உணவு என்பதன் சாராம்சம் இதனைத்தானே சுட்டிநிற்கின்றது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (1033)
உழவுத்தொழில் செய்து அதன் விளைச்சலை உண்டு வாழ்பவரே உலகில் வாழ்பவர்கள் ஆவர். மற்றவர்கள் அனைவரும் அவர்களைத் தொழுது தானியம் பெற்று உண்டு பின் செல்பவர்களாவர். உணவு உ ற்பத்தி செய்தால் மட்டுமே நாம் அனைவருக்குமான உணவு என்பதனை நாம் உணர்ந்திருக்கின்றோம். உழவுத்தொழில் என்னும் பதம் வள்ளுவம் பயன்படுத்திய அர்த்தமுள்ள சொற்பதமாகினும் உழவுத்தொழில் என்பதனை எம்மவர்கள் ஒரு பொருட்டாக அதனை ஒரு சமூக அந்தஸ்து உள்ள தொழிலாக கருதுவதில்லை. கழுத்துப் பட்டியும் கம்பீரமான உடையுமணிந்து கால்களில் சப்பாத்துடன் கைகளில் அலைபேசியுடன் வலம்வருவதனையே சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து என எம்மவர்கள் வரவிலக்கணம் எழுதி வைத்திருக்கின்றனர்.
வரப்பே தலகாணி, வெற்றுடம்பே பட்டாடை. வெற்றுக்கால்களே சீருடை என வாழும் அந்த வெள்ளையுள்ளங்களுக்க நிகர் அவர்களே. வெற்றுடம்பிலே சிறுதுண்டு இடுப்பை மறைக்க இன்னொரு கோவணத்துண்டு இவைதானே எம்மவர்கள் விவசாயத்தொழிலில் அணியும் அணிகலன்களாக இனங்கண்டு வைத்திருக்கின்றனர். இது தானே எமது வாழ்வியல் தடயங்களாகவும் இருக்கின்றன. ஆனால் அந்நிய நாகரீகம் இன்று தலைக்கேறி திசைதெரியாது பல்வேறு வகையான உடுபுடவைகள் உள்ளீர்க்கப்பட்டு நாகரீக போதையில் உழவுத்தொழிலின் சிறப்பை அதற்குரிய மரியாதையை சமூகமாகவே கொடுக்க வெட்கித்து நிற்கின்றது. இயற்கையுடன் வாழப்பழகியதாலேயே எம்மவர்களுக்க உடல் தேகாரோக்கியமும் நோயெதிர்ப்பு சக்தியும் மேலோங்கி நின்றதனையும் அதனால் அவர்கள் பல்லாண்டு சுகதேகிகளாக வாழ்ந்த வரலாற்றினையும் நாம் இன்னும் எமக்கான படிப்பினையாக கொள்கிறோமே தவிர அதன்படி வாழ நாம் என்றும் முனையவில்லை. அதனை நாம் இன்று இளக்காரமாக எண்ணிக் கொள்கின்றோம்.
உழவுத்தொழிலின் சிறப்பை பறைசாற்றும் காலம் மீண்டும் வருகின்றது. இயற்கைவழி விவசாயம், இயற்கை உணவுகள், நஞ்சற்ற உணவு, சிறந்த குடிநீர் என பலவற்றை மீண்டும் சிந்திக்க வைத்திருக்கின்றது. எமது உடலின் தேகாரோக்கியத்திற்கு தேவையான உடலியக்கம் நாம் பயிர்ச்செய்கையில் செய்யும் அனைத்து செயன்முறைகளுக்குள்ளும் அடங்கியிருக்கின்றது. விவசாய செய்கையில் நாம் ஈடுபடும் போது எமதுஅனைத்து பாகங்களும் இயங்குவதற்கான உடற்பயிற்சி அதனுள்ளேயே உள்ளார்ந்திருக்கின்றதனை நாம் உணரும் காலம் எப்போது? மண்வெட்டியை கையிலெடுத்தால் அது இழிநிலை எனக் கருதுபவர்கள் தமது உடலை கட்டுடல் ஆக வைத்திருப்பதற்காக தினமும் இருவேளைகளில் இரும்பினைத் தூக்கி உடற்பயிற்சி செய்கின்றனர். இந்த இரண்டுக்கும் வித்தியாசமாக இரண்டாவது நின்ற இடத்தில் செய்து முடிப்பதாக அமைகின்றதே தவிர விவசாய தொழிலில் உள்ள சிறப்ப இரும்பைத் தூக்கி வராது என்பதனை எமது இளையவர்கள் உணர்வது எப்போது?
ஆக மொத்தத்தில் உழவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான சமூக அந்தஸ்து முறைப்படி வழங்கப்பட்டால் நிச்சயமாக உழவுத்தொழிலையும் சிறப்புக்குரிய தொழிலாக மேன்மையான முதற்றறமான தொழிலாக எம்மவர்கள் கொண்டாடுவர். எந்த நிகழ்வுகளிலும் உழவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான சமூக அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும். அதன் மூலம் தான் மக்களையும் குறிப்பாக இளையவர்களையும் மீண்டும் உழவுத்தொழில் பக்கம் கவர்ந்திழுக்க முடியும்.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)
சாய்ந்த நெற்கதிர்களின் நிழலைத் தன்வசம் கொண்ட உழவர் பல அரசர்களின் குடைநிழல்களையெல்லாம் தம் குடைக்கீழ் காண்பவராவர். உழவுத்தொழில் செய்பவனின் விளைச்சலிலேயே நாம் அனைவரும் ஒருவேளை உணவுக்காக ஏங்கிநிற்கின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாமாக உணவை உற்பத்தி செய்யும் முனைப்பு வரும்போது அனைவருக்கும் அதிலுள்ள உழைப்பும் பெறுமதியும் நிச்சயம் உணர்ந்து கொள்ள கூடியதாயிருக்கும். உழவுத்தொழிலை கமத்தொழில், விவசாயம் , வேளாண்மை என பல்வேறு பட்ட பெயர்களில் அழைப்பதுண்டு. அனைத்து பெயர்களும் விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஓர் அந்தஸ்தை வழங்குதலுக்கு ஒப்பானதாகும். சிறப்புக்குரியவர்களாக விவசாயப் பெருமக்களை அதற்குரிய கொரவத்தை வழங்கி சிறப்புச்சேர்த்தல் மிக அவசியமாகும். உழவன் சோர்வடைந்தால் உழவு நின்றுவிடும், உழவு நின்றுவிட்டால் உண்வுற்பத்தி கேள்விக்குறியாகி விடும். அந்த நிலைவந்தால் பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். என்ன விலைகொடுத்தாலும் மக்கள் பட்டினியாலும் பஞ்சத்தினாலும் இழக்கும் நிலை வரலாம்.
அரசர்கட்கு அரசர்களாக உணவினை உற்பத்தி செய்பவன் போற்றப்படும் நிலை வரும் என எதிர்பார்த்தால் உணவுற்பத்திக்கான வளமான நிலத்தையும் அதனை நெறிப்படுத்தும் உழவர்களையும் எம்மிலிருந்தே உருமாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. மாறாக உற்பத்தியில் சோர்வு வரும் போது உணவுற்பத்தியில் பாரிய விழுக்காடு ஏற்பட்டு விடும். இதன்காரணமாகவேனும் உணவுற்பத்தியை அடிப்படை தொழில்வாய்ப்பாக சிறப்புக்குரியதாக நாம் எமது வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் உழவுத்தொழில் மிக உயர்வுக்குரிய சிறப்பை தன்னகத்தே ஒருமித்து உள்ளீர்த்துக் கொண்டுள்ளது என்பதாகவும் அனைவருக்குமான உணவு என்னும் போது அனைவரும் உணவுற்பத்தியில் பங்காளர்களாக இருந்துவிடல் அவசியம் என்றாகிவிடும். அதுவே எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தூண்களாக மாற்றமடைந்து விடும்.
முறைப்படி இயற்கை விவசாயத்தினுள் உள்வாங்கப்பட்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதாரம் முன்னிறுத்தப்படல் வேண்டும். நாமாக இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளும் நிலைவந்தால் கௌரவத்திற்குரிய தொழி;லாக கருதி அதனை அனைவரும் கடைப்பிடிக்க முனைவர். அவ்வாறு உணவினை உற்பத்தி செய்பவர் போற்றப்படும் போது இதனை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து எண்ணுவதனை தவிர்த்து அனைவரும் அந்த உணவுற்பத்தி செய்யும் சமூகத்தின் உறவுகள் என நினைந்து கொண்டால் மாற்றம் அனைவருக்குள்ளும் துளிர்ப்படையும். அனைத்திற்கும் எம்மவர்களின் மனமாற்றம் ஒன்றே இதற்கு தேவையான அடிப்படை செயற்பாடாகும்.
இரவார் இரப்பார்க்கென்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035)
தம்கைகளால் உழைத்து தாமே உற்பத்தி செய்து அந்த உணவினை உண்பவர் பிறரிடம் சென்று கேட்கமாட்டார். தம்மிடம் வந்து கேட்பவர்களுக்கு மறைக்காமல் கொடுப்பார்கள். இந்த கருப்பொருளை அடியொற்றியே அனைத்து குடும்பங்களும் தத்தமது உணவின் பெரும்பாகத்தை தமது மனைகளிலேயே உருவாக்கிக் கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். அனைத்து குடும்பங்களிலும் உணவுற்பத்தி செய்வதற்கான வாய்ப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அறிமுகஞ்செய்யப்பட்டதே வீட்டுத் தோட்டங்களாகும். ஓவ்வொரு குடும்பமும் தம்மாலான தமக்கான உணவினை தமது மனைகளில் இருக்கின்ற இடவசதியைப் பொறுத்து வடிவமைத்துக் கொள்ளலாம்.
இந்த அடிப்படையை அடியொற்றியே ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கொள்கைப்பிரகடனமாக 2014ம் ஆண்டினை உலக குடும்பவேளாண்மைக்கான ஆண்டாகவும் ஜஐவெநசயெவழையெட லுநயச ழக குயஅடைல குயசஅiபெஸ அதன்பின் அதில் கிடைத்த வெற்றியை தக்கவைப்பதற்காக உலகெங்கும் உள்ள மக்களைக் காப்பாற்றும் வகையில் சுத்தமான சுகாதாரமான உணவுற்பத்திக்கும் தனிமனித, குடும்ப மற்றும் சமூக சுகாதாரத்தை அடிப்படையாக வைத்தும் 2019 தொடக்கம் 2028ம் ஆண்டுவரையான பத்தாண்டு காலப்பகுதியை குடும்ப விவசாயத்தை (Decade of Family Farming) மையப்படுத்தி ஒரு தசாப்தத்திற்கான பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது உடனடியாக எடுத்த முடிவல்ல. 2014ம் ஆண்டிலிருந்து குடும்ப விவசாயம் என்னும் கருத்து வெளியிடப்பட்டு அதனது நடைமுறைப்படுத்தல்களை கண்காணித்து அதன் விளைவினை அடிப்படையாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படியொரு மாற்றம் அவசியம் தேவையானது என்பதுடன் உலகளாவிய ரீதியில் உணவுற்பத்தியை நிர்ணயஞ் செய்யும் அவசியம் எழுந்துள்ள நிலையில் பஞ்சம் பட்டினி என்பனவற்றிற்குள் மக்கள் சிக்கிக் கொள்ளாதிருக்க இந்த முன்னேற்பாடு என எடுத்துக்கொள்ளலாம்.
இருக்கின்ற வளங்களை வினைத்திறனான வகையில் பயன்படுத்துதல் மற்றும் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் வேளாண்மையினை முனைப்புடன் செய்வதே குடும்ப விவசாயத்தின் நோக்கமாகும். குறிப்பாக பயிர்ச்செய்கைக்கான வேலையாள் தேவையினை விஞ்ஞான தொழில்நுட்பத்தினூடாக புதிய எளிய கண்டுபிடிப்புக்களை வேளாண்செய்கையில் பயன்படுத்துவதும் இதனது இன்னொரு எதிர்பார்ப்பாகும். அத்துடன் நொந்துபோயிருக்கின்ற மக்களுக்கான தீர்வாகவும் குடும்ப வேளாண்மை அமையும் என்ற நம்பிக்கையுமுண்டு.
2008 ஆம் ஆண்டு ஆபிரிக்க ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க கண்டங்களிலுள்ள 60 நாடுகளில் உள்ள 350 நிறுவனங்களிணைந்த உலக கிராமிய மன்றத்தினால் உலக குடும்ப வேளாண்மைக்கான ஆண்டினை 2014 இல் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு பிலிப்பைன்சு நாட்டினது கோரிக்கைக்கு இணைவாக 37வது உலக உணவு ஸ்தாபனத்தினது மாநாட்டு அமர்வில் பிரேரிக்கப்பட்டதற்கு இணைவாக ஐக்கிய நாடுகளின் 66வது பொதுக்கூட்டத்தில் 2014ம் ஆண்டினை உலக குடும்ப வேளாண்மைக்கான ஆண்;டாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உலகளாவிய நாடுகளின் அரசாங்கங்களுடன் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான திட்டம் மற்றும் உலக உணவு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம், ஊபுஐயுசு ஆகியனவற்றுடன் உலக உணவு ஸ்தாபனத்தின் அனுசரணையும் பெறப்பட்டு வெற்றிகரமான திட்டமாக இதனை உருவாக்கி காட்டியிருக்கின்றார்கள்.
பத்தாண்டுக்கான உலக குடு;ம்ப வேளாண்மையின் முக்கிய நோக்கமாக குடும்ப வேளாண்மையின் தரத்தை மேலுயர்த்துதலும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இலாபத்தை உயர்த்துதலுடன் பசி பட்டினியிலிருந்து மக்களை பாதுகாத்தல்;, உணவு பாதுகாப்பினை வழங்கல் இவற்றுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தலுமாகும். இதனை அடியொற்றி உலக உணவு ஸ்தாபனத்தின் நடவடிக்கைகள் உலக மையங்களிலுள்ள நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறுபட்ட உணவுற்பத்தி, வாழ்வாதார உயர்ச்சி மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றுடன் இணைந்து கொண்டது.
குடும்ப வேளாண்மையின் முக்கியத்துவம் எமது பிரதேசத்தைப் பொறுத்த வரையில் நஞ்சற்ற தேசத்தை உருவாக்குவதற்கான உணவுற்பத்தியிலும் பலவகையான உணவுற்பத்தி மற்றும் போரில் உறவுகளை, உடமைகளை இன்னும் குடும்ப தலைமையை இழந்திருக்கும் மக்களுக்கு நன்மை பயத்தலாகும். சிறிய விவசாயிகளின் கருத்துக்களை உலகம் உன்னிப்பாக றியோ20 எனத்தலைப்பிட்டு உலகளாவிய மாநாட்டில் கலந்தாலோசித்திருக்கிள்றது. அதற்கும் மேலாக ஐக்கிய நாடுகளின் கவனத்தை குடும்ப வேளாண்மை ஈர்த்திருப்பதற்கும் காரணமுண்டு. உலகலாவிய ரீதியில் பார்த்தால் உணவுற்பத்தி அனைவருமிணைந்த செயன்முறையாக பரிணமித்திருப்பதனால் குடும்ப வேளாண்மையில் குடும்ப அங்கத்தவர்கள் பங்கு கொண்டு அவரவர் திறனுக்கேற்ப வசதிக்கேற்ப சிறு சிறு வேலைகளை செய்து கொடுப்பது முக்கியத்துவமாகிறது. குடும்பத்தினது உழைப்பு முழுமையாக உள்வாங்கப்படுவது இதில் அவசியமானதொன்று.
குடும்ப வேளாண்மையின் ஓரங்கமாக வீட்டுத்தோட்டம் (Home Garden) அமைப்பது வடபகுதியைப் பொறுத்தவரையில் நஞ்சற்ற உணவை (Poinsonless Food) மக்கள் உட்கொள்ள வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டதாகக் கொள்ளலாம். வீட்டுத்தோட்டத்தில் பலவகையான சிறிய எளிய பாரம்பரிய முறைசார்ந்த தொழில்நுட்பங்களை உள்வாங்கலாம். மேலும் நஞ்சற்ற உணவின் அவசியத்தை அனைவரும் தற்போது உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய நாடுகளின் பிரேரணை முன்மொழியப்பட்டிருப்பதும் இதனை மேலும் வலுவூட்டுவதாக இருக்கின்றது. அதிலும் சேதன வேளாண்மையின் ஊடாக உற்பத்திசெய்யும் உணவினை உட்கொள்வது இங்கே சாலப்பொருந்தும். அசேதன இரசாயனங்களின் அளவற்ற பாவனையினால் மக்களுக்கேற்படும் அசௌகரியங்களை குறிப்பாக மக்களது சுகாதாரம் பற்றிய விடயத்தை முன்னிறுத்தலாம். சேதன வேளாண்மையை ஊக்குவிக்கும் விடயங்களை மக்கள் மன்றங்களில் அவசியம் கலந்துரையாடி அதன் மூலம் நஞ்சற்ற உணவினை மக்கள் பெறுவதற்கு ஆவன செய்வது அவசியமாகும். வடபகுதியில் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தப்படும் பீடைநாசினிகள் மற்றும் அசேத இரசாயனப்பசளைகள் என்பவற்றின் பாவனையை மட்டுப்படுத்துவதற்கும் பீடைகளைக் கட்டுப்படுத்துவற்கு பீடைநாசினிகள் தவிர்ந்த ஏனைய வழிமுறைகளை பயன்படுத்துவதற்கும் மாகாண மட்டத்தில் பல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இவற்றுடன் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களினை குடும்ப வேளாண்மைக்குள் குறிப்பாக வீட்டுத்தோட்டத்தின் முழுமையான பங்குதாரர்களாக மாற்றிவிடலாம். வடபகுதியில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுள் தொடர்ந்தும் இப்பீடைநாசினிகளின் தாக்கம் பலமானதாக மக்களின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டிருக்கின்றது. இதனை நாம் அவசியமான விடயமாக கருத்திற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரத்தில் அவர்கள் நஞ்சற்ற உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
சேதன விவசாயத்தை முன்னெடுக்க கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இறுதியில் கைகூடாமல் போனதை கசப்பான அனுபவமாக கொள்ளாது இன்னும் பல்வேறுபட்ட முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வது அவசியமாகும். எமது சூழலை நாம் பாதுகாக்க தவறினால் நாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு மேலும் முகங்கொடுக்க முடியாது போய்விடும். குடும்ப வேளாண்மை என்பதனை மையப்படுத்தி இவ்வாண்டு செயற்பாடுகளுக்குள் சேதன விவசாயத்தை முன்னிலைப்படுத்தி செயற்திட்டங்களை தீட்டுதல் முக்கியம் பெறுகின்றது.
எமது சூழலை நாமே பாதுகாக்க தவறினால் எமது எதிர்கால சந்ததி வாழ்வதற்கு வழியில்லாமல் போய்விடும். இதனை நாம் அனுபவமூடாக தெரிந்தும் உணர்ந்தும் இன்னும் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நாம் இத்தேசத்திற்கு செய்யும் துரோகமாகவே கொள்ளவேண்டும். தற்போது பல தனியார் நிறுவனங்கள் இந்த கைங்கரியத்தில் ஈடுபாடு காட்டத்தொடங்கியிருப்பது நல்ல சகுனமாக கொண்டு அனைவரும் குடும்ப விவசாயத்தை மேன்மைப்படுத்துவதற்கு எம்மாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வோமாக.
உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை (1036)
உழவர்கள் தம் கைகளை மடக்கி உழைக்காமல் இருந்தால் அனைத்து பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை. உழைப்பு என்பது மிக முக்கியம் என்பதையும் அதிலும் அனைத்திலும் உணவு உற்பத்திக்கான உழைப்பு மிக மிக அவசியம் என்பதனையும் சுட்டிக்காட்டும் இக்குறளின் அர்த்தம் அனைவருக்கும் உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது என்பதனை அறிவோமே. உணவு உற்பத்தியில் தற்போதுள்ள பாரிய பிரச்சனையாக காலநிலை மாற்றம் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. சூழல் மாற்றமடைந்து அதன் மூலம் எமது சுற்றுச்கூ10ழல் வனப்பு பெற வாய்ப்பளிக்க வேண்டும். இயற்கையை அனுசரித்த உணவுப்பழக்க வழக்கங்கள், தினமும் குறிப்பிட்ட நேரம் நாம் முன்னின்று உழைக்க வேண்டும். எம்மால் முடிவானதென்று எதுவமில்லை.
இளையவர்கள் தான் வருங்காலத்தின் சிற்பிகள்!. இவ்வாறான சிற்பிகளை வடித்தெடுக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இன்னும் இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் மற்றும் நாடளாவிய இன்னும்; உலகளாவிய நிறுவனங்களையும் சாரும். நாம் வாழும் சமூகத்திலுள்ளவர்கள் ஏனோ தானோ என்றில்லாமல் இளைய சமூகத்தை நல்வழியில் திசையிட்டு வளப்படுத்தி உழைப்பில் ஈடுபடச்செய்வது அவர்கள் வாழும் ஊருக்கும், பிரதேசத்திற்கும் இன்னும் நாட்டுக்கும் நற்பெயரையும் சிறந்த அபிவிருத்தியையும் இட்டுச் செல்லும்.
இவ்வாறான இளைய சமூகத்தை நம்பியே ஐக்கிய நாடுகள் தாபனமும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் 17 இனை உருவாக்கி அவற்றிற்கான செயற்றிட்டங்களையும் செதுக்கி அதனுடன் நின்றுவிடாது அவற்றை கண்காணிப்பதற்கான பொறிமுறையையும் உருவாக்கியிருக்கின்றார்கள். 2030ஆம் ஆண்டினை இலக்காக வைத்து பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கிடையில் மேற்படி தீட்டப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை அவ்வப்போது கண்காணித்து அவற்றிற்கான தீர்வுகளும்; உடனடியாக பரிந்துரைக்கப்படுகின்றன. எதிர்பார்த்ததை விட செதுக்கப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல இடர்ப்பாடுகளை சந்தித்த போதிலும் முன்னேற்றம் மெதுவாகத்தான் நடந்தாலும் இலக்கினை நோக்கிய நகர்வு திடமானதாக காத்திரமானதாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டதன் படி உலகளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் இளையவர்களை காலநிலை மாற்றம் மற்றும் பல்வகைமைத்திறன்கள் பற்றி பயிற்றுவிக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இளையோரின் குறிக்கோள்களை ஒன்றிணைத்த யுனெஸ்கோவின் பலமான ஒன்றிணைவு (ளுவசழபெ நபெயபநஅநவெ) அவர்களின் குரலை வெளிக்கொணரவும் அவர்களூடான சமூக புத்தாக்கம் (Social innovation) மற்றும் அதனாலான மாற்றத்தை உள்வாங்குவதுடன் அவர்களை தங்களுடைய எதிர்காலத்தைத் திட்டமிடக்கூடியவர்களாக மாற்றுவதற்காகவாகும். இதற்காக யுனெஸ்கோவினால் ஒழுங்கு செய்யப்படும் யு.என். காலநிலைக்கான உலகளாவிய கருத்தரங்கில் (UN Climate International conference) வருடாவருடம் இரண்டு இலட்சம் இளையோரை பயிற்றுவிப்பதற்காகவும் அவர்களது திறன்விருத்தியை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான பயிற்சியை இரண்டு மில்லியன் இளையோரை பயிற்றுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் தாபனம் திட்டமிட்டு அதனை 2030 ம் ஆண்டளவில் முற்றுப்பெறும்.
மேற்படி திட்டமிட்டதன்படி உலகளாவிய ரிதியில் யுனெஸ்கோவினால் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வினை செய்வதற்காக இந்த காலநிலைக்கான மாற்றம் பற்றிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 50 இளையோரை மேலும் பயிற்றுவிக்க நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது. இதில் இளையவருக்கான தலைமைத்துவப் பயிற்சிககு 1200 உலகத்தின் சிறந்த பாரம்பரிய மையங்கள். 701 உயிர்த்தொகுதி மையங்கள், இவற்றுடன் 140 யுனெஸ்கோ உலகளாவிய கலாச்சார மையங்கள் என்பன தெரிவு செய்யப்பட்டு அவற்றை பயிற்சிக்கூடங்களாக 70 மில்லியன் இளையோருக்கு மாற்றியமைத்திருக்கின்றார்கள். இதன் மூலம் இளையவர்களின் அறிவுக்கேற்றவாறு கருவிகளை உருவாக்கி காலநிலை மாற்றத்தை மேலும் கற்பதற்கான தளமாக பயன்படுத்துகி;றார்கள்.
காலநிலை மாற்றம் என்பது பற்றி இளையோருக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கப்பால் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை இளையவர்கள் உணரத் தலைப்படவும் வேண்டும். இதன் தாக்கம் விவசாயத்தில், கால்நடைவளர்ப்பில், இன்னும் மீன்பிடியில் இவற்றுக்கும் மேலாக தனியார் தொழிற்றுறையில் இன்னும் விவசாயஞ்சார் தொழிற்றுறையில் பலமாக உணரலாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் துருவப் பிரதேசங்களில் உருக தொடங்கியிருப்பது மட்டுமல்லாது உருகும் நீரின் தாக்கம் கடல்நீரின் மட்ட அதிகரிப்புக்கும் காரணமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்கம் நாடுகளின் பல இடங்களுக்குள் கடல் நீ;ர் உட்புக காரணமாக அமையப்போகின்றது. இந்த எச்சரிக்கை முன்பிருந்தே கூறப்பட்டு வந்தாலும் தற்போது எதிர்பார்;த்ததை விட விரைவாக நடைபெறுவதாக அறியக்கிடைக்கின்றது.
காலநிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பிற்கும் (Food Security) பஞ்சத்தை இல்லாதொழிப்பதற்கும் (No hunger) அதன் மூலம் பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் தடையாக இருப்பதாகவும் இவற்றினை நாம் எதிர்த்து வேலைத்திட்டங்களை செய்வதற்கு தடையாகவும் இருப்பதாக உலக உணவு தாபனமும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. மனிதனுடைய தலையீட்டினாலான பச்சைவீட்டு வாயுக்களின் தாக்கம் மற்றும் கால்நடை வளர்ப்பிலிருந்து வெளியிடப்படும் இவ்வாறான வாயுக்களால் காலநிலை மாற்றம் அதிகரிப்பது இதற்கொரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. இதனால் புவிமேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதுடன் பூகோள வெப்பமாதல் ஏற்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. இவற்றின் விளைவுகளைப் பற்றி இளையவர்களின் அறிவினை விருத்தி செய்து அவர்களிடமிருந்து புதிய மாற்று வழிகளைப் பெற்று தீர்வு காண்பதும் இதற்குள்ளாக அடங்கியிருக்கும் விடயமாக கருதலாம்.
காலநிலை மாற்றத்தினால் விவசாய உற்பத்தியில் விழுக்காடு ஏற்படுவதுடன் மழைவீழ்ச்சியில் மாற்றங்கள், வரட்சி, வெள்ளப்பெருக்கு இன்னும் பீடை மற்றும் நோய்த்தாக்கத்தின் பரம்பல் என்பன ஏற்படுகின்றன. கடற்பரப்பினால் அகத்துறிஞ்சப்படும் அதிகளவிலான காபனீரொட்சைட்டு காரணமாக அமிலமாதல் என்பன நேரடியாகவே மற்றும் மறைமுகமாக மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இந்நிலையில் உலக உணவு தாபனத்தினால் உருவாக்கப்பட்ட திட்டங்களினூடாக காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை குறைப்பதற்கும் இன்னும் இல்லாதொழிப்பதற்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இதற்கு அவரவருக்கு இது பற்றிய அடிப்படை அறிவும் இருத்தல் வேண்டும். இதனை மையப்படுத்தியே இளையவர்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும அதனால் ஏற்படும் பல்வகைத்தன்மையின் பாதிப்பு என்பன அறியப்படல் வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சி என்பனை அனைவரும் உணர்ந்து கொண்டால் தான் இந்த இடரிலிருந்து விடுபட வாய்ப்புக்கள் உண்டு.
தொடிப்பொழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப்படும் (1037)
வயலில் புழுதிமண்ணை நன்றாக உழுது காயவிட்டால் ஒருபிடி உரம் கூடத் தேவையின்றி அந்த நிலம் சிறந்த விளைச்சலைத் தரும.; இப்போது இயற்கைவழி விவசாயத்தினுள் தற்போது பலரும் உள்ளீர்க்கப்பட்டுவருவதனை அதனது சிறப்பாக காணமுடிந்தாலும் இயற்கை வழிவிவசாயம் என்பதன் தார்ப்பரியத்தை எமது முன்னையவர்களால் முத்தாய்ப்பாக சொல்லி வாழ்ந்து பார்த்து அதன் அதிசயத்தை ஆற்றலை ஆழமாக சொல்லியிருக்கின்றார்கள் இருப்பினும் எம்மால் அந்த வாழ்க்கையை முழுமையாக ஊகிக்கவோ அல்லது வாழ்ந்து பார்க்கவோ முடியவில்லை என்பது யதார்த்தமே. ஆனால் இயற்கையுடனான வாழ்க்கை என்பது பலதையும் அனுசரித்து அனைத்து உயிரினங்களையும் இணைத்து அவரவருக்கும் தேவையானவற்றை கொடுத்து வாழும் வாழ்க்கையாகும். வர்த்தக ரீதியில் இதனை அணுகினால் இயற்கை வழி என்பது ஒரு கேள்விக்குறியே.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இப்பூமித்தாயில் இருப்பு என்பது உறுதிசெய்யப்படல் வேண்டும் என்னும் சூழலியலாளர்களின் தர்க்கிப்புக்கு அப்பால் அனைத்து உயிரினங்களின் சங்கமமே இந்த சூழல் தொகுதி என்பதனை நாம் மிகவும் ஆழமாக கவனிக்க வேண்டியதாகும். மண்ணை நன்றாக உழுது காயவிட்டால் என்பதில் பலவிதமான அர்த்தங்களை உள்ளார்ந்து பார்க்கலாம். வயல் மண்ணை நன்றாக உழுதல் மூலம் அதில் அதீத நுண்ணங்கிகளை உட்கலப்பதற்கான வாய்ப்புக்களை பெருக்குவதாக காணலாம். மண்ணினுள் நன்மை தருகின்ற நுண்ணங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது மண் வளமானதாக மாற்றம் பெறுகின்றது. இன்னொருவகையில் உயிர்ப்புடைய மண் (Living Soil) என்பதன் அர்த்தமும் இதுதானே. இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கும் போது மண்ணுக்கு உயிர் இருக்கின்றதா எனக் கேட்பது புரிகின்றது. பலகோடி நுண்ணங்களையும் சிறு விலங்குகளையும் உள்ளடக்கிய மண் உயிர்புடையது என்பதனைக் காணீர். ஆதனால் தான் இந்த உயிர்ப்புடைய மண்ணில் எந்த விதை விழுந்தாலும் அது முளைத்தெழும்புவதனைக் காணமுடிகின்றது.
குடும்ப விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வைத்த ஐக்கிய நாடுகள் தாபனம் அதற்காக பத்தாண்டு கால வரையையும் உருவாக்கி 2019 இலிருந்து 2028 வரையான காலப்பகுதியில் இதனை முழுமையாக உணரவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்கின்றது. நாம் எமது பங்குக்கு என்ன செய்தோம் என்பதே இங்குள்ள முக்கிய வினாவாகும். எமது பங்களிப்பு எவ்வாறு எங்கே எப்படி செய்யப்பட்டிருக்கின்றது அல்லது செய்யப்படுகின்றது என ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்த்துக்கொள்வது நல்லது. எமக்கு தேவையான பயிர்களை மரக்கறிகளை இலைக்கறிவகைகளை பழங்களை எமது வீட்டிலுள்ள இடத்தில் வளர்த்து எமது தேவையை முதலில் பூர்த்தி செய்து கொள்வதாகும். இதனையும் தாண்டி மீதியை மற்றையவர்களுக்கு கொடுப்பது அல்லது விற்பது ஆகும். கொடுப்பது என்பது பண்டமாற்று எனப் பொருள் படும். அதுவும் ஒருவகைப் (பணப்) பரிமாற்றம் தான்.
இயற்கைவழி விவசாயத்தில் பலவிதமான நன்மைகள் கிடைப்பதை அனைவரும் அறிந்துகொள்வர். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது சிரமமான காரியமல்ல என்றாலும் அனைவரும் நினைத்தால் ஒன்றிணைந்தால் செய்து காட்டலாம். முயற்சி திருவினையாக்கும் என்பதன் அர்த்தம் அதுதானே. கிடைக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி உளளுர் இனங்களைப் பாதுகாப்பதும் சேமிப்பதும் பயன்படுத்துவதும் அவசியமாகும். அந்த வகையில் பீடைநாசினிகள் அசேதன இரசாயனங்கள் தவிர்ந்த பயிர்ச்செய்கை எமது வீட்டில் கிடைக்கின்ற நிலப்பரப்பில் நிறைவாகவே செய்யலாம். வீட்டினை பசுமை நிறைந்த இடமாக மாற்றுங்கள். உளவியல் ரீதியில் பாரிய மாற்றங்களை உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு அது ஏற்படுத்தும். பசுமை என்றும் குளிர்மையானது. இதமானது இன்னும் இனிiயானது. முதலில் வீட்டிலுள்ளவர்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு அதிக நோய் நெருங்காது என்பார்கள்.
குடும்ப விவசாயத்தில் பல்வகைப்பயிர்களை நடுகை செய்யுங்கள் குறிப்பாக பல்பயன்தரும் மரங்களைத் தெரிந்து நடுகை செய்யலாம். உயிர்வேலிகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பணம் இருக்கின்றது என்பதற்காக கல்லிலாலான மதிலைக் கட்டி இயற்கையை அழித்து விடாதீர்கள். கல்லால் கட்டினாலும் பாதுகாப்பு என்பது இல்லை என்பதனையும் கவனத்திற்கொள்க. பல்வகைப் பயிர்கள் குறிப்பாக மரக்கறி, இலைக்கறி, பழமரங்களை நடுகை செய்யலாம். நிழல் மரங்களையும் தெரிவுசெய்யலாம். சிறிய பழங்களை தரும் மரங்களையும் தெரிவு செய்யுங்கள் அதில் சிறிய குருவிகள், புலுனி, அணில், காகம், மைனா போன்றவை வந்தமர்ந்து அவை போடும் சங்கீத ஒலி அனைத்தையும் மறக்கச் செய்துவிடும். பறவைகளையும் விலங்குகளையும் உங்கள் வீடுதேடி வர வழிசெய்யுங்கள். இனிய ஒலி, சத்தம், சங்கீதம் மனதிற்கு என்றும் இன்ப உணர்வையும் புத்துணர்வையும் தரும்.
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு (1038)
ஏர்கொண்டு உழுவதை விட எரு இடுதல் அவசியம். களை பறித்தபின் நீர் பாச்சுதலை விட பயிரை நன்றாய்க் காப்பது அவசியமாகும். ஏர் கொண்டு உழுதல் மண்ணை பயிருக்கு ஏற்றதுபோல வைத்திருப்பதற்காக என்றாலும் அதற்கு சேதனப் பசளை குறிப்பாக கூட்டெரு இடவில்லையாயின் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கமாட்டாது. பயிர்ச்செய்கை ஆரம்பிப்பதற்கு முன் நிலத்தை பண்படுத்தல் இன்னும் வழக்கத்திலிருக்கின்றது. நில பண்படுத்தல் இன்றி பயிர்ச்செய்கை செய்வது தற்போதய உயர்தொழினுட்பத்தில் பூச்சிய உழவு (Zero Tillage) மூலம் சாத்தியமானாலும் பயிருக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பசளை மூலமாக கிடைக்க வழிசெய்தல் அவசியமாகும். குறிப்பாக மண்ணினை வளமான மண்ணாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்தி நிற்கின்றது. மேலும் நீர் பாய்ச்சுதலென்பது முழுமையாக தாவரத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமையாது. மாறாக பயிர்களுக்கு தேவையான நீர்த்தேவையுடன் பயிரை முழுமையாக ஏனைய விடயங்களிலிருந்து பாதுகாக்கவும் வேண்டும் என்பதனை வள்ளுவம் பக்குவமாக எடுத்துக் காட்டியிருக்கின்றது. தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே நிகழ்வுகளை முன்னிறுத்தி அதற்காக வழிகளையும் சுருக்கிக்கூறிய தன்மையை வியந்து பார்க்கவேண்டியிருக்கின்றது.
மண்ணின் வளத்தை மேம்படுத்துவதை அதனை சேதன பசளை மூலமாக வளமான மண்ணாக முக்கியப்படுத்தியிருக்கின்ற இக்குறள் தற்போதுள்ள அரசாங்கத்தினால் அதனை முதன்மைப்பொருளாக கொள்கைப் பிரகடனமாக ஆக்கியிருக்கின்றதனை காணலாம். மண்ணை உழுவது மேற்கொண்டு எந்தப் பயனையும் தராது என்பதனை வள்ளுவம் பலஆண்டுகளுக்கு முன்னரேயே கட்டியங்கூறிநின்கின்றனை வியப்புடன் நோக்கற்பாலது. மேற்கூறியது போல மண்ணின்றிய பயிர்ச்செய்கையாக (Soil-less Agriculture) ஊட்டச்சத்தான நீருடகத்தில் பயிர்களை வளர்க்கின்ற தன்மையை விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பை பலவகை அர்த்தங்களுடன் குறளில் சொல்லியிருப்பது விஞ்ஞானத்திற்கே எடுத்துக் காட்டாக அமைந்திருக்கின்றது அல்லவா.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். (1039)
உழவன் தனது நிலத்திற்கு தினந்தோறும் சென்று அதனை சரிவர கவனிக்காது விட்டால் அவனுடைய இல்லாள் போல உள்ளுக்குள் வெறுப்புக் கொண்டு அவனிடம் கோபம் கொள்ளும். தினமும் வயற்காட்டுக்கு செல்வது உழவனுக்கு வழக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்பதனை மிகவும் அழகாக அர்த்தத்துடன் கூறியிருப்பதனை என்னவென்பது. இது உழவுக்கு மட்டும் போல தெரிந்தாலும் அனைத்து வேலைகளுக்கும் இது பொருந்தும். எதனையும் நாம் கவனியாது அலட்சியப்படுத்திவிட்டு பின்பு எதனையும் செய்ய முனைந்தால் அது எமக்கு முழுமையாக பயனைத்தராது எனப் பொருள் பட சொல்லியிருக்கும் பாங்கு அதிசயிக்கத் தக்கது.
பயிர்விளையும் நிலத்தின் நிலைமையினை தினமும் அவதானிப்பதன் மூலம் பயிர்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் பீடைகளின் தன்மைகளை விவசாயியொருவன் அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்பவே அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை அவரால் எடுக்க முடியும். அன்றாடம் கவனிப்பு என்பது விவசாய செய்கையில் மிகமுக்கியமானது. தினந்தினம் மாறுபடும் காலநிலையுடன் விவசாய செய்கை முரண்பட்டு அதனை தக்கவைக்க அரும்பாடு படுகின்றது. வெள்ளம், வரட்சி, புயல் எழுகை, இடிமின்னல், சூறாவளி, என தோற்றமுறும் இயற்கை சீற்றங்களுக்கு தாக்குப்பிடிக்க அவசியம் பயிர்விளையும் நிலத்திற்கு தினமும் வருகை தருதல் மிகவும் முக்கியமானதாகும்.
வயற்காட்டுக்கு தினமும் வருகைதராத ஒருவரால் அதிலுள்ள மாற்றங்களை தெரிந்து கொள்ள முடியாதிருக்கும். பயிர்களுக்கான தேவையை அவற்றில் ஏற்படும் சேதங்களை முறையாக கவனித்து அதற்கு பரிகாரமளித்தாலன்றி பயிர்ச்செய்கையை முறையாக செய்துகொள்ள முடியாது. தற்போது இவ்வாறு கவனிப்பை மேற்கொள்வதற்காக மனிதனால் ரோபோக்கள் அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கின்றன. மனிதன் தனது விவசாயப் பண்ணையை தினமும் கவனிப்பதற்கும் அதன் மூலம் அதிலேற்படுகின்ற மாற்றங்களை தானியங்கி இயந்திரங்களின் மூலம் கண்காணிக்க தொடங்கிவிட்டான். பெரிய பண்ணைகள் வைத்திருப்பவர்கள் இவ்வாறான அணுகுமுறைகளை ஏற்படுத்தவதன் மூலம் அவற்றை முறையாக ஒவ்வொரு மணித்துளியும் கவனித்து பயிர்களின் இன்னும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக அவதானித்து அவற்றுக்கான முகாமைத்துவத்தை முன்னெடுக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கின்ற போது இதனை முன்கூட்டியே அனுமானித்து இந்நடைமுறையை சொல்லிவைத்த குறளை என்னவென்பது. வள்ளுவத்தின் உள்ளார்ந்த ஆய்வு அணுகுமுறைகள் விஞ்ஞானத்தையும் விஞ்சியதாக இருக்கின்றமை கண்கூடாகும்.
நிலமெனும் நங்கையுடனான உறவு விவசாய பெருமக்களுக்கான அடியொற்றிய உறவாகும். நிலத்தை கவனியாது விட்டால் பயிருற்பத்தி சாத்தியமேயில்லை. உழவுத்தொழிலாயினும் ஏனைய தொழிற்றுறையாயினும் அவசியம் தினமும் தொழிலகத்திற்கு வருகை தந்து அதிலுள்ள பிரச்சனைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமானதாகவே இருக்கின்றன. ஆனாலும் நாம் அதற்கு முக்கியத்துவத்தை அனுதினமும் கொடுப்பதில்லை. எமக்கான தொழிலாக உயிர்வாழும் தொழிலாக நாம் கொண்டதை அவசியம் கண்காணிப்பது மிகவும் நன்றாகும். இது உழவுக்கு மாத்திரம் மட்டுமல்ல ஏனைய தொழில்களுக்கும் முறையான தொடரான கண்காணிப்பு பொருத்தப்பாடானதே. எமது பழக்க வழக்கங்களே இவையனைத்துக்கும் வலுச்சேர்க்கின்ற விடயங்களாகும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)
தன்னிடம் பொருள் ஏதும் இல்லையென்று கூறிக்கொண்டு சோம்பலுடன் இருப்பவரைக் கண்டு நிலம் என்னும் நங்கை தன்னுள் சிரிப்பாள். எம்மிடம் எதுவுமில்லை என குறைபட்டுக் கொள்பவரை நாம் சோம்பேறிகளாக மற்றையவர்களையும் சோம்பலுடையவராக மாற்றிவிடுவர். இறைவன் எமக்கு தந்த வரமனைத்தையும் பட்டியலிட்டால் நாமனைவரும் ஆச்சரியப்படுவீர்கள். 'என்ன வளம் இல்ல இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்' என்னும் வீரியம் நிறைந்த கூற்றுக்கு இக்குறளிலே பதில் நயந்திருக்கின்றார்கள். சோம்பேறிகளாக இருந்துவிட்டால் பின்னர் அதற்காக வருந்த வேண்டியிருக்கும் என சொல்லாமல் சொல்லிய சேதியை காண்லாம்.
திருக்குறள் எமக்குக் கிடைத்த அருமையான பொக்கிஷம். அது அட்சயபாத்திரம் போல அள்ள அள்ள நாம் தேடுகின்ற அனைத்திற்கும் வலிமை சேர்த்து எமககு வழங்குகின்றது.
வடமாகாணத்து அபிவிருத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமானளவுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. எமது மொத்த உள்நாட்டு (வடமாகாண) உற்பத்தி (Northern Province Gross Production) என்பது 3-4 சதவீதமாக இருக்கும் அதேநேரத்தில் தென்பகுதியிலுள்ள மற்றைய மாகாணங்களின் புனுP மிகவும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை நாம் கண்டறிந்து கொண்டால் எமது பகுதியிலிருந்து உற்பத்தியாகிப் பொருட்கள் உலகசந்தைக்கு செல்லாததே காரணமாகும். எமது மாகாணத்தின் உற்பத்தி ஒருபுறமிருக்க அதனை தரமாக அதுவும் உலகத்தரம்வாய்ந்த அந்நிய செலாவாணியை பெறக்கூடியதாக உருவாக்கி உலகச்சந்தைக்கு எடுத்துச்சென்றாலன்றி இதனை நாம் உயர்த்திக்கொள்ள முடியாது. சுருக்கிச்கூறினால் ஒரு தேசத்தின் சிறப்புத்தன்மையை அல்லது ஆரோக்கியத்தை கட்டியங்கூறும் சுட்டியாகவே மொத்த உள்ளுர்உற்பத்தி அமைந்திருக்கின்றது. ஆதலினால் வடமாகாணத்தின் ஆரோக்கியத்தை கட்டியெழுப்பவேண்டுமாயின் இந்தச் சுட்டியின் அதிகரிப்பை நோக்கிய அபிவிருத்தி அமையவேண்டும். தரமான உற்பத்தி மற்றும் மதிப்பேற்றஞ்செய்த பொருட்கள் உலகச்சந்தையை எட்டிப்பார்ப்பதற்கான உலகத்தரத்தை கொண்டிருக்கவேண்டும். தொடர்ந்தும் உள்ளூர்ச்சந்தையை நம்பி எமது அபிவிருத்தியை குறிப்பாக உற்பத்தியை நாம் நகர்த்தக்கூடாது. மாறாக வடபகுதிப்பொருட்களுக்கு நல்லதொரு சந்தைவாய்ப்பை தென்பகுதியும் தரமுடியாது. ஆதலினால் உலகச்சந்தைக்கான தரத்துடன் கூடிய சிறந்த உற்பத்திப்பொருட்களை உற்பத்திசெய்யும், பொதிசெய்யும் வழிவகைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இத்தேசம் விடிவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வாய்ப்புக்களை பலவகைகளிலும் உருவாக்கிக்கொடுத்தாலன்றி இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களும் அரிதாகவே காணப்படுகின்றன. சுயதொழில் முயற்சித்திட்டங்கள் இன்னும் பலமாக உருவாக்கப்படவேண்டும். அதிலொன்றாகவே சுற்றுலாத்துறையை இனங்காண்கின்றனர். ஆனாலும் இவையனைத்தும் இருந்தாலும் இளையவர்கள் விவசாயத்தொழிலில் காட்டும் அக்கறை மகிழ்ச்சி தருவதாக இல்லை. இது விவசாய நாடான எமக்கும் விவசாயத்தில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த எமது மாகாணத்திற்கும் ஒரு நல்லசெய்தியாக இல்லை. வசதிகள் அதிகமாக இல்லாத காலங்களில் சிறப்பாக செய்யப்பட்ட விவசாயம் தற்போது மந்தநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமாக காலநிலை மாற்றத்தை நாம் முன்வைத்தாலும் இவையனைத்தையும் இருக்கின்ற விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றியமைக்க முடியும் என பிறதேசங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் கட்டியங்கூறிநிற்கின்றன. வரண்ட பாலைவனங்களை பசுமையாக்க முடியுமானால் எமது பிரதேசத்தை ஏன் நாம் மாற்றிக்காட்ட முடியாது. இதற்கான ஊக்குவிப்பு எதிர்பார்த்தளவில் இல்லையென நாம் எடுத்தமாத்திரத்தில் எவரையும் குறைகூறமுடியாது. அனைவரதும் பங்களிப்பு அவசியமாகின்றது என்றதனை நாம் இன்னும் கவனத்திற்கொள்ளவில்லை.
எமது அண்டைநாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பலவகையான இலகு தொழில்நுட்பங்கள் தினமும் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கான ஒன்றிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டு அங்கே விவசாய உற்பத்திகள், மதிப்பேற்றஞ் செய்த பொருட்கள், சிறந்த பண்ணை முறைகள், தனியார் தொழில்மையங்கள் என்பன சிறப்பாகவும் இத்தொழில்களை செய்வதற்கான ஆலோசனை மையங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிமையங்கள் என பலவும் அமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனை நாம் கண்கூடாக காணமுடிகின்றது. குறிப்பாக பலதரப்பட்ட வீட்டு உபகரணங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனை நாம் இன்னுமேன் கவனிக்கவில்லை. பலவகையான ஆய்வுகூட உபகரணங்கள் மலிவான முறையில் இலகுதொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வளரும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இந்தவகையில் அங்கே உற்பத்திக்கான சந்தைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உற்பத்திப்பொருட்கள் அதன் தேவைக்காக உற்பத்தியாவதாலும் ஏற்றுமதி செய்யப்படுவதனாலும் தொழிற்றுறையின் விருத்தியென்பது இமாலய சாதனையாக பதியப்பட்டிருக்கின்றது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தொழிற்றுறைகளில் எமது இளையசமூகத்தை பயிற்றுவித்தால் குறிப்பாக அங்கு நடைபெறுகின்ற தொழில்விருத்திபற்றி நேரில்கண்டும் கேட்டும் அனுபவப்படவும் வாய்ப்புக்கிட்டினால் சுயமாக பலவகைத்தொழிற்றுறைகளை இங்கே செய்வதற்கு தேவையான உந்துதல் கிடைக்கும்.
இருவரி இலக்கியத்தில் முப்பாலை இடுபொருளாக்கி
தரணிதுயர் தாம்களைந்த குறள்
கண்ணுக்குத் தெரியாத வைரசு என்னும் நுண்ணங்கி அனைவரையும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கும் நிலையை உருவாக்கி விட்டுள்ளது. குடும்பமாக இப்போது தான் அனைவரும் ஒன்றாக அவரவர் வீடுகளில் இருந்து தங்களைப் பற்றி யோசிப்பதற்கும் அலுவலக விடயங்கள் உட்பட அனைத்து வேலைகளை செய்வதற்கான வாய்ப்பினையும் விரும்பியோ விரும்பாமலோ கொடுத்திருக்கின்றது. குடும்ப விவசாயத்தினை முழுமூச்சாக முன்னெடுப்பதற்கான காலத்தை கொரோனா வைரசு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது அதனது நன்மைதருகின்ற பக்கமாக காணலாம். இதனையே திருக்குறளில் அனைவரும் தமக்கான உணவினை உற்பத்தி செய்வதில் உழவுத்தொழிலில் பங்காளர்களாக ஆகவேண்டும் என்பதனையும் அதற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனையும் கட்டியங்கூறி நிற்கின்றதனை காணலாம்.
உலகளாவிய ரீதியில் உணவுற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறினால் உலகம் பஞ்சம் பட்டினியால் அவதிப்பட நேரிடும் என அடித்துக்கூறப்பட்டதை நாம் வேதவாக்காக கருதவேண்டிய தருணம் இதுவாகும். உழவுத்தொழிலுக்கு உணவுற்பத்திக்கு முக்கியத்துவம் அவசியமென திருக்;குறளில் சிறப்புறக் கூறப்பட்டிருப்பதனை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பது மட்டுமன்றி அதனை செயற்படுத்தவும் பின்னிற்கக்கூடாது. 2014ம் ஆண்டினை உலக குடும்ப விவசாய ஆண்டாக ஜஐவெநசயெவழையெட லுநயச ழக குயஅடைல குயசஅiபெஸ பிரகடனப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபை 2019ம் ஆண்டிலிருந்து 2028ஆம் ஆண்டுவரையான பத்தாண்டுகளை குடும்ப விவசாயத்திற்கான நூற்றாண்டாக (Decade of Family Farming) பிரகடனப்படுத்தி அது சார்ந்து பலதரப்பட்ட செயற்திட்டங்களை உலகநாடுகளின் அனுசரணையோடு நிறைவேற்றி வருகின்றது.
கொரேனா வைரசுவின் தாக்கத்தை உணர்ந்தவர்கள் அனைவரும் அதனை எக்காலத்திலும் எளிதில் மறந்து விட முடியாது. அவ்வளவு ஆற்றல் கொண்ட இந்த வைரசுவிற்கு சுயமாக பெருக்கலடையத் தெரியாது இன்னும் கூறினால் முடியாது. எதற்கும் தனக்கு ஒப்பான மனிதனின் உடலைத் தெரிந்தெடுத்து அதில் தொற்றுலாகி இறுதியில் அவரது உயிருக்கே காலனாகிவிடுகின்றது. ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு இந்த வைரசுவினால் தொற்றுவதற்கு இயலாதிருப்பினும் மனிதர்களின் நடத்தையினால் அது இலகுவில் மற்றையவருக்கு தொற்றுகின்றதென்பதனை நாம் இன்னமும் ஏன் புரிந்து கொள்ள இயலாதிருக்கின்றது.
அனைவரும் உணவுற்பத்தியை செய்தல் வேண்டும் அல்லது ஈடுபடுதல் வேண்டும் என்பதனை குறள் பலநூறு ஆண்டுகளுக்கும் முன்னரேயே கட்டியங்கூறியிருக்கின்றது என்பதனை அறியும் போது மெய்சிலிர்க்கின்றது. எமக்கான உணவினை அதுவும் நஞ்சற்ற உணவினை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் கருப்பொருளை பல்வேறு வடிவங்களில் செயற்படுத்தினாலும் அனைத்திற்கும் மிக முக்கியமான செயல் வடிவமாக நாம் எமது வீடு அதிலொரு வீட்டுத் தோட்டம். அதிலிருந்து எமக்கான சத்தான ஊட்டச்சத்து மிக்க சமனான உணவை நாம் பெற்றுக்கொள்ள முடியும். எமது வீடு அமைந்திருக்கின்ற நிலத்தின் இடவசதியைப்பொறுத்து உணவுற்பத்தியை நாம் மேற்கொள்ள முடியும். சரியான திட்டமிட்ட வகையில் பயிர்களை தெரிந்தெடுத்து வளர்த்து எமக்கு தேவையான உணவினை உற்பத்தி செய்தல் மிக அவசியமானதாகும்.
உழவுத்தொழிலின் மகிமையை முன்கூட்டியே உணரவைத்த திருவள்ளுவம் அதன் முக்கியத்துவத்தை இப்பத்து பாடல்களிலும் இரத்தினச்சுருக்கமாக எடுத்தியம்ப வைத்திருக்கின்றது. எக்காலத்திற்கும் பொருத்தமான அனைவருக்கும் தேவையான விடயங்களை இரு வரிகளில் எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் பாராட்டத்தகது. திருவள்ளுவரினால் அருளப்பட்ட திருக்குறள் வழிநடந்து அனைவரும் இன்புற்றிருப்போம்.
[Special Article ] கரவையுழவரும் உழவும் கோவிற்சந்தையும்'- [article appeared in a book]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எங்களூர் என்னும் இறுமாப்பு கரவெட்டிக்கு என்றுமே உண்டு. காரை பற்றைகளாக இருந்த இடத்தை சுத்தமாக்கி மக்கள் வாழத்தொடங்கியதால் காரைவெட்டியதை – கரைவெட்டி என்றாக்கி பின்னர் கரவெட்டியென மருவியதாக இங்குள்ளவர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர். கவிசொல்பவர்கள் கரவெட்டியை 'கரவையம்பதி' எனவும் விளிப்பர். பலவளங்களை தன்னகத்தே கொண்ட கரவெட்டி மண்ணுக்கு வரலாறுண்டு. இதன் மகிமையை வாழ்வியலை 'கரவைவேலன் கோவை' என்னும் நூலிலும் அறியலாம். வாழ்ந்து வரலாறானவர்களை எப்போதும் தன்னக்தே கொண்ட கரவை மண் பல்வகைத் தன்மைக்க உகந்த மண். வயலாயினும் சரி தோட்;டமாயினுஞ் சரி விளைச்சல் ஒருபோதும் ஏமாற்றியதில்லை.
கல்விக்கு களமமைத்த பல புலமையாளர்களை உருவாக்கிய உருவாக்கும் கரவெட்டிப் பிரதேசம் என்றென்றும் தனக்குரிய கௌரவத்தை கொண்டிருந்து பலமக்கள் ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசமாகவும் இருக்கின்றமை இதற்கு இன்னொரு காரணம். இந்த இறுமாப்பு நீண்ட காலமாக இருப்பதற்கு காரணமாக இங்குள்ளவர்கள் பல்வேறு துறைகளில்; பணிபுரிந்து அதனை மிளிரவைத்து அதனுடன் பகுதிநேரமாக விவசாயத்தை செய்ததுடன் கணிசமான அளவு மக்களே தனியான விவசாயத்தை செய்து கொண்டு வருகின்றனர். கரவெட்டியின் விவசாயத்திற்கு தனித்துவம் உண்டு. பாரம்பரியமான முறையில் விவசாய செய்கைகள் நடைபெற்ற இடமிது. காலங்காலமாக செய்துவந்த விவசாயத்தின் எழுச்சி எம்மக்களை உணவில் ஊட்டச்சத்தில் என்றுமே குறைபட்டுக் கொள்ளாத வகையில் உற்பத்தி தந்திருக்கின்றது.
கோவிற்சந்தையை சோனப்புடன் இணைத்த பாதை அத்துளு வயல்வெளியினூடாக குறுக்கறுத்து செல்வதே ஒரு அழகு. மழைகாலத்தில் அத்துளு நீரினால் நிரம்பி நெற்கதிர்களை தாங்கியிருக்கும் அழகே தனி. அத்துளுவில் பெரிய அத்துளு குளம் நடுப்பகுதியில் காணப்படுகின்றது. சுற்றவர விவசாயக் கிணறுகளின்; ஓரங்கள் சீமெந்தால் கட்டப்பட்டும் சில கிணறுகள் திறந்த கிணறுகளாக கட்டுக்கள் எதுவுமின்றி வயல்களில் காணப்படும். இளையவர்கள் இக்கிணறுகளில் நீந்தி பழகியதும் பின்னர் அத்துளு குளத்தில் நீந்தியும் குளித்தும் வந்தமை இங்குள்ளோர் பழக்கமாக இருந்தது.
அத்துளுபகுதியில் அத்துளு அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. வனப்பகுதிபோல பல ஓங்கிவளர்ந்த மரங்களை கொண்டிருந்து அதனது நடுப்பகுதியில் இ;ந்த அம்மன் ஆலயம் அமைந்திருக்கின்றது. தீர்க்கப்படாத நோய்களுடன் பல பக்தர்கள் வந்து அம்மனின் அருள் பெற்று செல்லும் ஆலயமாக இது அமைந்திருக்கின்றது. ஆலயத்தின் மறுபக்கத்தில் பாதைக்கப்பால் வெந்நீர் கிணறு ஒன்றும் உள்ளது. வழமையாக குளிர்மையான காலங்களில் நீர்மட்டம்; மேலே காணப்படும். இக்கிணற்றில் நீராடிச்செல்லும் வழக்கம் இங்குள்ள மக்களுக்குண்டு. கரவெட்டிப்பகுதியிலுள்ள நீர் கடினமான நீர். சவர்க்காரம் நுரைக்காதளவுக்கு கடினமான நீ;ர். அதனால் இக்குளத்துடன் அண்டிய இரு நல்லதண்ணி கிணறுகளில் மக்கள் நீர் அள்ளிச் சென்று குடிநீராக பயன்படுத்துவர். வரட்சியான காலப்பகுதியில் இக்கிணறுகளில் நீர் ஊறுவது மெதுவாக நடப்பதனால் நல்ல தண்ணீர் பெறுவதற்கு இரவோடிரவாக மக்கள் குடங்களுடன் வரிசையில் காத்திருக்கும் காலங்களும் உண்டு. இரவுவேளைகளில் மக்களின் நடமாட்டம் நல்ல தண்ணீருக்காக இருப்பதனை காணலாம்.
இங்குள்ள இளையோருக்கான நீர்த்தடாகம் அத்துளு குளம் தான். தாமரைகளை அதிகமாக கொண்டிருக்கும் இக்குளத்தில் அநேகமானவர்கள் நீச்சலடித்து நீரையும் குடித்து மகிழ்வுற்ற காலங்கள் கண்முன்னே வருகின்றது. ஆண்கள் பெண்கள் என வித்தியாசமின்றி அத்துளு கிணறுகளிலும் குளத்திலும் நீராடி செல்லும் காட்சிகள் தற்போதும் கண்முன் நிற்கின்றது. பின்னர் பெண்களுக்கான நீராடலுக்காக மறைப்புடன் கூடிய பிரதேசமொன்று அத்துளுவின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டது. அத்துளு குளத்துத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு கரவெட்டிப் பிரதேசத்திற்கு குளாய்கள் மூலமாக வழங்கப்படுகின்றது.
இளையவர்கள் துடிப்பானவர்களின் அறிவுப்பசியை தீர்த்த தீர்க்கும் பாடசாலைகள் கொண்ட பிரசேதம் கரவெட்டியி என எண்ணினாலும் ஆண்களுக்காக பருத்தித்துறை காட்லிக் கல்லூரியும், பெண்களுக்காக வடஇந்து மகளிர்; கல்லூhரியும் இருபாலாரும் கல்விகற்கும் சேக்கிராட் கல்லூரி, நெல்லியடி மத்தியமகா வித்தியாலயம், மற்றும் விக்கினேஸ்வரா கல்லூரியும் முதல் ஐந்தாண்டுகளுக்க கல்வி தந்த மாணிக்கவாசகர் வித்தியாலயமும் பல கல்விமான்களை உருவாக்கிய பெருமையுடன் தாமும் உயர்வுற்று புதுப்பொலிவுகளில் காணப்படுகின்றன. அடிப்படை கல்வியை வழங்கிய இக்கல்விக் கூடங்கள் இன்னும் சிறப்புப்பெற்று உயர்ந்தெழுந்திருக்கின்றதனை அனைவரும் பெருமையுடன் நினைவுபடுத்துகின்றனர். கல்வியை தந்த பாடசாலைகளுடன் இந்து சமயத்தை உள்வாங்கிய சிறப்பான கோயில்களையும் கொண்டது கரவெட்டி. கிறிஸ்தவ சமயத்தினரும் கணிசமான அளவில் இங்கு வாழ்கின்றனர் என்பதுடன் அவர்கள் வழிபாட்டுக்கான கிறிஸ்தவ கோயில்களும் ஆங்காங்கே கொண்டிருக்கின்றன. சமயம் கல்வி மொழி என்பனவற்றுக்கு என்றுமே முன்னுரிமையுண்டு. பலசமய தமிழ்மொழி பேசும் பல்வகை தொழில் செய்யும் மக்களின் கூட்டு தான் கரவெட்டியின் ஆளுமையின் ரகசியம்.
தச்சந்தோப்பு விநாயகர் ஆலயம் இந்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இதனுடன் அத்துளு எங்களூர் நெல்லியடியை சிறிய நகரமாகக் கொண்டு பருத்தித்துறை கொடிகாமம் போக்குவரத்து தொடர்பு படுத்திய பெருமையும் இதற்குண்டு. நீண்ட நாட்களாக குண்டு குளியாகவிருந்த பருத்தித்துறை கொடிகாம பாதைகள் காப்பெற்ற பின் போக்குவரத்துக்கு இலகுவானதாக மாற்றம் பெற்றிருக்கின்றன. காலங்காலமாக எங்களூர் தட்டிவான் தான் பொதுப்போக்குவரத்தான பஸ்வண்டியை தவிர போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப்பாதை விவசாய உள்ளீடுளை பெறுவதற்கும் விளைந்தவற்றை விற்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. கரவையில் ஆதிகாலத்தில் மக்கள் தாமாகவே வரித்துக்கொண்ட உழவர்களாக ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பியிருந்தவர்கள். அவர்களுள் கணிசமான அளவினர் கற்று ஆசிரியர்களாக அரச பணியாளர்களாக தொழிற்றுறையில் பணிபுரிபவர்கள். பொதுவாக நெல் பயிர்ச்செய்கை செய்வதென்றால் எமது பாரம்பரிய இனங்களான மொட்டைக் கறுப்பன் மற்றும் மொறுங்கள் ஆகிய நெல்லினங்களை தொடர்ச்சியாக பயிர்செய்வதும் அதற்காக மிகக்குறைந்தளவு பசளைகளையும் பயன்படுத்தி வந்தனர். பாரம்பரிய உழவு முறைகளின் பரம்பல் பிரதேசமெங்கும் செறிந்த பிரதேசமிது. வயல்களில் நெற்செய்கை காலபோகத்துடன் மழைகிடைப்பதைப் பொறுத்து விளைவிக்கப்பட்டிருந்த போதும் ஏனைய காலங்களில் சிறுதானியம் தொடங்கி மரக்கறிப் பயிர்கள் என்பன பயிரிடப்பட்டும் வந்திருக்கின்றது.
போர்நடைபெற்ற காலங்களில் அத்துளுவில் மண்வெட்டி கொண்டு கொத்தி பிரட்டி நெற்செய்கை செய்த காலங்களை தந்தையுடன் நினைவுகூர முடிகின்றது. வான்பரப்பில் குண்டுமழை பொழிந்த விமானங்களின் சாகசங்களை கண்டு பயந்து ஒதுங்கி வயலில் வேலை செய்து நெல் அறுவடைசெய்து பசிதீர்த்த காலங்களும் நினைவில் வந்து போகின்றன. எந்த இடர்வந்த போதும் உணவுக்கு பஞ்சமில்லாமல் நாமே உற்பத்தி செய்து அறுவடையும் செய்து பசிபோக்க கரைவை மண் அள்ளித் தந்திருக்கின்றது. மேலும் பெண்களின் முழுமையான பங்களிப்பு உணவுற்பத்தியில் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பெண்களும் ஆண்களுக்கீடாக அனைத்து துறையிலும் தம்மை உயர்த்திக் கொண்ட வரலாறுள்ள கரவெட்டி பிரதேசம் ஆண் பெண் சமத்துவத்தை எடுத்துக்கூறிய பெருமையுடையது. தந்தை தாய்; இருவருடன் அடிவாய்க்காலிலும் ;(வறணிக்கு அருகிலுள்ள வயலில); அத்துளுவிலும் நெல்விதைத்து கூடியிருந்து அறுவடைசெய்து வந்த பசுமையான நாட்கள் மீண்டுவரா.
பனையிலிருந்து அனைத்து பொருட்களும் பயன்படுத்தி வந்த பிரதேசமாகவும் கரவெட்டியைக் காணலாம். பனம்பழம் உணவாக பயன்படுத்தப்பட்டதிலிருந்து பனையிலிருந்து பெறப்படும் பதநீர், கள்ளு, ஓலைகள், அரிமரம் என பலவும் பயன்பாட்டில் இருந்தன, இப்போதும் இருக்கின்றது. பனம்பழத்தை அடுப்பு நெருப்பில் சுட்டு உணவாக்கிய காலங்கள் அருமையானது. சுவாத்திய உணவாகவும் அவை அமைந்திருந்தன. குடும்பங்களில் நல்லுறவு குறிப்பாக கொண்டாட்ட தினங்களில் இன்னும் வலிமை பெற்றிருக்கும். பனைமரங்களுக்கிடையில் வளைவைத்து கட்டி அதில் தனியனான மற்றும் பலர்இருந்தாடும் ஊஞ்சல் கட்டி கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே தங்கிவிட்டன. இங்குள்ள மக்களின் உழைப்பு பெறுமதி வாய்ந்தது.
கரவெட்டியிலுள்ள வீடுகள் அனைத்திலும் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கும். கிடைக்கின்ற நிலப்பரப்பில் பல்வகைப் பயிர்கள் விளைவித்திருக்கின்றமையினை இன்றும் அவதானிக்கலாம். தென்னை, மா, பலா, கொய்யா, நெல்லி, ஐம்பு ஆகிய பல்லாண்டு தாவரங்களுடன் வாழை மற்றும் மரக்கறிப் பயிர்கள் இதனுடன் மருத்துவக் குணங்கொண்ட மூலிகைப் பயிர்களும் வளர்க்கப்படும். இவற்றிலிருந்து அதிக பயன்பாடும் பெறப்பட்டது. உயிர்ப்பல்வகைத்தன்மையை அதிகமாக கொண்ட வீடுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் வீட்டுத்தோட்டங்கள் மக்களின் உணவுத்தேவையின் கணிசமானளவை பூர்த்தி செய்யும் வல்லமையுடையதாக இருந்தன. போர்மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் பிறஇடத்து மக்கள் இடம்பெயர்ந்து வந்து கரவெட்டியில் தங்கி பசிதீர்த்த காலங்களும் உண்டு.
பசுந்தாள் பசளைகள் மற்றும் பசுந்தாள் இலைப்பசளைகளை பொதுவாக பயன்படுத்திவந்த பயிர்ச்செய்கை முறை இங்கு செழிப்பாக இருந்தது இன்னும் இருக்கின்றது. குறிப்பாக பசுந்தாள் இலைப்பசளைகளான எருக்கலை, பன்i, பூவரசு மற்றும் கிளிறிசிடியா போன்ற தாவரங்களிலிருந்து கிளைகளை ஒடித்து அவற்றை நிலத்தை கொத்தும் போது சேர்த்து கலந்துவிடுவர். இந்த இயற்கை முறை விவசாய செய்கையின் தார்ப்பரியம் பின்னர் அதிலுள்ள மண்ணை ஆய்வுக்குட்படுத்திய போது வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறான புசுந்தாள் பசளைகள் மண்ணில் ஊட்டச்சத்தை வழங்குவதுடன் மேலும் தாவரவேர்;த்தொகுதியினை மண்ணிலுள்ள நோயாக்கிகளிலிருந்து பாதுகாக்கும் பெறமதிவாய்ந்த செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றன. மண்ணிலுள்ள நன்மைதரும் நுண்ணங்கிகளின் பெருக்கத்திற்கும் பசுந்தாள் இலைப்பசளைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் நன்மைகளை அறிந்த முன்னோர் பாரம்பரியமாக 'குழை தாழ்த்தல்' என்னும் செயல்வடிவத்திற்கூடாக இத்தாவர பாகங்களை சோனப்பு, ஆயம் எனப் பலஇடங்களிலிருந்து பெற்று அவற்றை வாடவிட்டு மண்ணிலிட்டு அவை பிரந்தழிந்து பயிர்களுக்கு பசளைகளாக பயன்படுத்;தப்பட்டன.
அத்துளு வயற்பிரதேசங்களில் காலபோகத்திற்கு நெல்லும் சிறுபோகத்திற்கு தானியப் பயிர்கள் மற்றும் கீரை, வெங்காயம், மிளகாய் பயிர்கள் விளைவிக்கப்படும். ஏனைய பயிர்களும் இடத்தைப் பொறுத்து விளைவிக்கப்படும். சின்னவெங்காயம,; மிளகாய,; நெல,; கீரை என்பன பொதுவாக பயிரடப்படும் பயிர்கள். வெங்காயத்திற்கு துலாபொறிமுறை மூலம் நீர் கிணறுகளிலிருந்து பெறப்பட்டு பாய்ச்சப்படும். இந்த நடைமுறையில் இருவர் பங்குபெறுவர். துலா தனிப்பனையிலும் அதனை நெடுக்காக பிளந்தும் தயாரிக்கப்படும். ஒருவர் துலாமிதிக்க மற்றையவர் நீரை வாய்க்காலுக்குள் நேர்மைப்படுத்திவிடுவர். ஆண் பெண் என இருவரும் இணைந்து செய்யும் விவசாய செயன்முறை இங்கிருந்தது. துலா பொறிமுறை நீரை இயந்திரம் மூலம் பாய்ச்ச ஆரம்பித்ததிலிந்து சிறிது சிறிதாக அருகிவிட்டது. நீரிறைக்கும் இயந்திரங்கள் வயல்வெளிகளை நிரப்ப ஆரம்பித்ததுமே துலாக்களின் பாவனை அருகத் தொடங்கிவிட்டது. துலாமிதித்து நீர்பாய்ச்சி பயிர்விளைவித்த நம்மவர்கள் பிற்காலத்தில் நீரிறைக்கும் இயந்திரம் வந்தபின் அந்த பொறிமுறையை அருக விட்டுவிட்டனர். துலா இன்னமும் சில வீடுகளில் பயன்பாட்டிலிருந்தாலும் விதம்விதமான நீரிறைக்கும் இயந்திரங்கள் நீரள்ளும் பொறிமுறையை இலகுவாக்கிவிட்டன.
இங்குள்ள மக்களின் பாரம்பரிய உணவுப்பண்டமாக குத்தரிசி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது சம்பா அரிசியும் பயன்பாட்டிலுள்ளது. குத்தரிசியில் சோறு சமைத்து அதனுள் நீரூற்றி இரவு முழுக்க நொதிக்க வைத்து மறுநாள் காலையில் அதனை பிசைந்து அந்த பழஞ்சோற்று நீரினை (பழந்தண்ணீர்) அருந்துவதும் பழஞ்சோற்றினை காலையுணவாக உண்பதும் வழக்கம். பழந்தண்ணீர் நன்மைதரும் பக்ரீறியாக்களைக் (Pசழடிழைவiஉள) கொண்ட உணவாகும். இது எமது சமிபாட்டுத் தொகுதிக்கு வரப்பிரசாதமாக அமையும். நன்மை தரும் பக்ரீறியாக்களைக் கொண்ட இவ்வாறான உணவின் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதும் ஊட்டச்சத்து கிடைப்பதனையும் அறியலாம். பழஞ்சோறு பழந்தண்ணீர் என்பன பாரம்பரிய இனங்களான மொட்டைக்கறுப்பன் மற்றும் மொறுங்கன் அரசியில் இலகுவாக கிடைக்கும். ஆனால் தற்போது வடபகுதியெங்கும் பயிரிடப்படும் 'ஆட்டக்காரி' நெல்லினம் இவ்வாறு பழந்தண்ணீர் மற்றும் பழஞ்சோறு தயாரிப்பதற்கு ஏற்புடையதல்ல. விஞ்ஞான தொழினுட்டம் வளர்ந்தோங்கியிருக்கும் இந்நாட்களில் மீண்டும் பழமையுகத்திற்கு பழந்தண்ணி பழஞ்சோறு உணவுப்பழக்கத்திற்கு அனைவரும் மாற இருப்பது 'உணவே மருந்து மருந்தே உணவு ' என்னும் எமது சித்தவைத்திய பாரம்பரிய முறைமையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றது.
கரவெட்டி விளைநிலங்களி;ல் அது வயல்களாயினும் சரி தோட்டமாயினும் சரி பயிர்கள் விளைவித்தவண்ணமே இருக்கும். கத்தரி, வெண்டி, முருங்கை, தக்காளி, கோவா, மிளகாய், வெங்காயம், இன்னும் பல எமது தேவைக்கானவை போக மீதி சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிடும். கூடுதலாக மிஞ்சும் மரக்கறிகள் நெல்லியடி சந்தைக்கு வரும். கரவெட்டியிலிருந்து மக்கள் நெற்செய்கைக்காக அதன் பின்புறமுள்ள வயல்களிலும் பயிர்செய்து வந்திருக்கின்றனர். தற்போதும் இந்நிலை தொடர்கின்றது. நெற்பயிர்ச்செய்கையில் பாரம்பரிய இனங்களான மொட்டைக் கறுப்பன் மற்றும் மொறுங்கன் என்பன முற்தெரிவாக இருக்கும். ஒவ்வொருவர் வீட்டிலும் அந்த வருட நெற்செய்கை அறுவடையை அடுத்த வருட விதைநெல்லுக்கும் பின்னர் அந்த வருட உணவுத்தேவைக்கும் தனித்தனியாக பிரித்து வைத்து விதைநெல்லுக்காக வைக்கப்பட்ட நெல்லிற்கு நொச்சி, வேம்பு போன்ற தாவரங்களின் இலைகளை இட்டு பூச்சிகளின் தாக்கம் இல்லாது பாதுகாத்திடுவர். நெல்லை சேமிப்பதற்காக 'பத்தாயம்' என்னும் மரத்தினாலான கொள்கலன் பயன்படுத்தப்பட்டு வந்தது. யூறியா பையின் பொலித்தீன் பையின் பயன்பாடு அதிகரித்த போது 'பத்தாயத்தின்' பயன்பாடும் அருகிவிட்டது.
கரவெட்டியின் உழவர்கள் தனித்துவமானவர்கள் அவர்கள் உழவுமுறையும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனவை. இவற்றுடன் இங்குள்ளவர்களின் அறிவுத்திறனும் பெரியது. ஏதற்கும் சளைக்காத தன்மை கொண்டவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். புதுமைகளை தேடியோடும் மக்களைக்கொண்ட கரவை மண் இன்னும் பல புதுமைகளை எதிர்காலத்தில் செய்யும் என நம்புகின்ற அதேவேளையில் இங்குள்ள மக்கள் தம்மை வலுப்படுத்தியவர்களாக வழிகாட்டுபவர்களாக இன்னமும் தமிழர் வாழ்வியலை வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள் என்னும் பெருமைக்குரியவர்கள்.
கோவிற்சந்தை மாலைநேர சிறுவர்த்தகத்திற்குரியதாகவே ஆரம்பத்திலிருந்து இருந்ததை பலஆண்டுகளாக அறிவோம். மாலை 3 மணியிலிருந்து சந்தை களைகட்டத்தொடங்கிவிடும். மரக்கறிகள், உணவுப்பண்டங்கள், என்பன இந்த சந்தையில் மாலைவேளைகளில் விற்பனைக்கு வந்துவிடும். மீன் கோழிஇறைச்சி என்பன விற்பனைக்கிருக்கும் இடமாகவும் கோவிற்சந்தை திகழந்;தது இன்னமும் திகழும். இச்சந்தை கரவை வாழ் மக்களின் அடையாளமாகவும் இருக்கின்றது. தற்போது அது விசாலமடைந்து பல கட்டுமானங்களை கொண்டு முழுநேர சந்தையாக திகழ முனைப்புக் கொண்டுள்ளமை இவ்வூர் மக்களுக்கான வரப்பிரசாதமாக அiகின்றது. இதில் முன்னின்று உழைக்கும் அனைவருக்கும் கரவையம்பதி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உற்பத்தியும் சந்தைப்படுத்தலும் இணைந்துள்ள விவசாய செய்கையில் கரவை மக்களுக்கான ஆதரவுக்கரமாக கோவிற்சந்தை அமைந்துள்ளமையும் அதன் புத்தெழுச்சி இன்னமும் இம்மக்களின் வாழ்வியலை வளர்த்தெடுக்கவும் வர்த்தகத்தில் சிறக்கவும் அனைவருக்கும் பயனுள்ள இடமாக மிளிரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
This article describes about the importance of mosquito for its human killing efficieny. There are many disases caused by this vector—mosquito—and many of them are very dangerous.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இழப்புக்களை சாதாரணமாக நாம் எதிர்கொண்ட நாட்களையும் தாண்டி எதிர்பாராத விதமாகவும் அலட்சியமாகவும் நாம் இருந்து கொள்வதனால் எமது உயிரை நாம் அநாவசியமாக இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை விசர்நாய்க்கடி ஏற்படுத்தி விடுகின்றது. எமது நாட்டில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைத் தவிர்த்து தெருநாய்களும் உலாவருவது மக்களுக்கு பலவிதமான அசௌகரியங்களை ஏற்படுத்தியும் விடுகின்றது. கட்டாக்காலி நாய்கள் நோய்த்தொற்று உள்ள நாய்களுடன் தொடுகையிலிருப்பதனால் அந்நோய்க்கிருமிகள் இந்த நாய்களிலும் தொற்றாகி இறுதியில் மனித உயிரை காவுகொள்கின்றன. என்ன ஏது என அறியமுன்பே நோய் முற்றி உயிரிழப்பு சடுதியாகி விடுகின்றது.
நாய்களின் பெருக்கம்
தற்போதெல்லாம் வீட்டுக்கு 2 மற்றும் 3 என நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. பொழுதுபோக்குக்காக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு தீனி போடுவதே பெரிய வேலையாகிவிடும். அதனையும் தாண்டி நாய்களை வீட்டு பாதுகாப்புக்காக வளர்ப்பதும் அதிகம். களவு அதிகமாகியிருக்கும் இந்நாட்களில் தமது பாதுகாப்பிற்காக நாய்களை வீட்டில் வளர்ப்பதால் முன்னெச்சரிக்கையாகவும் ஓரளவு பாதுகாப்பையும் உணரத் தலைப்பட்டாலும் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது நியதியாகும். உயிருள்ள ஐPவன்களை நாம் துன்புறுத்தலாகாது. உணவும் வேளாவேளைக்கு கொடுக்கவும் வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் வளர்ப்பு மிருகங்களினால் மனிதருக்கு காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் விசர் நோய் பரவும் ஆபத்து இருந்தால் அதற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். கட்டாக்காலி நாய்கள் குறிப்பாக வீதிகளில் தற்போது அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அவற்றுக்கு எந்த வித கட்டுப்பாட்டு முறைகளும் பிரயோகிக்கப்படாத நிலையில் பலர் அவற்றுக்கு முறையாக உணவளித்து அவற்றின் இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றனர்.
குறிப்பாக வீட்டிலுள்ள உணவுமீதிகளை அல்லது உணவுக் கழிவுகளை சொப்பிங் பைகளில் கொண்டு சென்று வீதியோரம் வீசிவிட்டு செல்லும் கலாச்சாரத்திலிருந்து மக்களை மாற்றுதல் அவசியம்;. இந்த உணவுக்கழிவுகள் கொண்ட பைகளை நாய்கள் பிய்த்தெடுத்து வீதியெங்கும் அதனை பரவவிடுகின்றதனை தினமும் நாம் அவதானிக்க முடிகின்றது. முறையாக அந்த கழிவுகளை அகற்றுவதற்கான பொறிமுறை நகரப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் இல்லாதிருப்பதே இதற்கு காரணம். அலட்சியப்போக்கு இவற்றை மேலும் விபரீதத்துக்குள்ளாக்கி விடுகின்றது.
விசர்நாய்க்கடியும் நீர்வெறுப்பு நோயும்
நாய்கள் பூனைகள் என வளர்ப்பு பிராணிகளை முறையாக நோய்த்தடுப்பூசிகள் ஏற்றாமல் வளர்ப்பது ஆபத்து நிறைந்தது. இவை வீட்டை விட்டு வெளியே செல்பவையானால் இன்னும் கவனமாக இருத்தல் அவசியம். விசர்நாய்க் கடித்தால் அன்றிலிருந்து விஷக்கிருமிகள் எமதுடலில் சென்று பல்கிப்பெருக ஆரம்பித்து விடும். ரேபிஸ் (சுயடிளை) எனப்படும் நீர்வெறுப்ப நோயின் தாக்கம் மனிதர்களில் தாங்கமுடியாதளவிற்கு இருக்கும். சாலையோரம் பராமரிப்பின்றி நின்ற நாயொன்றை பாதுகாக்கும் மனிதாபிமானத்துடன் அதனை தூக்கியபோது அவரது கையில் கடித்துவிட்டது. நிறந்த விளையாட்டு வீரரான அவர் அதனை அலட்சியம் செய்துவிட்டதனால் சிறிது காலம் செல்ல ரேபிஸ் நோய் குணங்குறிகளை காட்டத் தொடங்கியிருக்கின்றது. இந்நோய் வந்தால் காய்ச்சலும், தலையிடியும், உடற்சோர்வும் கடித்த இடத்தில் அரிப்பும், தாங்கமுடியாத ஒவ்வாமை தன்மையும் (Allergy) நீர்குடிப்பதை வெறுக்கும் நிலைமையும் ஏற்படும். நாள்முழுக்க பாதிக்கப்பட்டவர் ஓய்வற்று காணப்படுவார். நோய்முற்றிய நிலையில் உடற்பாகங்கள் செயலிழக்கத் தொடங்கி கோமா நிலைக்கு சென்றுவிடுவர் சிலநேரங்களில் நாய்கள் குலைப்பது போன்று அவர்களது வாய் செயற்படத்தொடங்கும். இனிய உறவுகளை இவ்வாறு காண்பது இழப்பதும் என்றுமே மிகுந்த வலியைத் தரும்.
விசர்நாய்க்கடிநோய் வந்தால் மீட்சியில்லை. விசர்நாயின் கடிக்குள்ளானால் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியம். கிருமி உடலுக்குள் பரவினால் பின்பு என்ன செய்தாலும் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற முடியாது. மருத்துவ உலகமே கைவிரித்துவிடுமளவுக்கு இந்நோயின் வக்கிரம் இருக்கும். மேலும் தெருவோரத்தில் காணப்படும் நாய்களின் எச்சங்கள் பாதையிலும் பாதையோரங்களிலும் இருந்து காய்ந்து அவற்றில் தொற்று ஏற்படும் தூசி சிற்றுண்ணிகள் (னுரளவ அவைநள) பாதையில் பயணிப்பவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் அஸ்துமா நோயை ஏற்படுத்திவிடுகின்றன. பாதையில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிந்தால் இவ்வாறான நிலைமையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நாம் செய்ய வேண்டியது
விசர்நாய்களைக் கண்டால் அவை பற்றி அந்தப் பகுதி கால்நடை மருத்துவருக்கோ அல்லது கிராமசேவை அலுவலருக்கோ தெரிவித்து அதனை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். விசர்நோய் கண்ட நாய்கள் நீரை விரும்பமாட்டாதவை. அதனால் அவையும் நீரை அருந்தாமல் அவற்றின் மேல் நீரூற்றினால் வெறிகொண்டோடும். இவற்றை அவதானித்து எம்மாலான பாதுகாப்பு முயற்சிகளை எடுத்தல் அவசியம். குறிப்பாக சிறுபிள்ளைகளைகளை இவ்வாறான நாய்கள் பாதையில் செல்லும் போது கடித்துவிடுகின்றன. நோய்தொற்று கொண்ட நாய் ஏனைய நாய்களைக் கடித்தால் இந்த நோய்க்கிருமி அவற்றின் உடலினுள்ளும் சென்றுவிடும்.
பாதைகளில் பெருகிவரும் நாய்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றுக்கு மனிதாபிமானம் எனும் போர்வையி;ல் உணவூட்டி அவற்றின் பெருக்கத்திற்கு வழிசமைக்க கூடாது. வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் ஏற்றுதல் அவசியம். வீட்டிற்குவருபவர்களை நாய்களோ பூனைகளோ நாவினால் நக்கினாலோ அல்லது கடித்தாலோ விசர்கடிநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அவசியம். இதனை நாம் நிச்சயமாக தவிர்க்க முடியும்.
நாய்கள் அதிகமாக வளர்க்கும் வீடுகளுக்கு அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் மிகுந்த இடர்களை சந்திப்பதனை காணலாம். இரவு பூராவும் நாய்கள் ஊளையிடுவதும் குரைப்பதும் அருகிலுள்ள வீடுகளிலுள்ள வயதானவர்கள், பாடம் படிப்பவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரினதும் நித்திரையை குழப்பிவிடுகின்றன. இந்த விடயத்தில் நாய்களை கட்டிவைப்பதுடன் அவற்றின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தி முறையாக தடுப்பூசிகளையும் போடுதல் அவசியம்.
மேலும் தெருவோரத்தில் காணப்படும் நாய்களின் எச்சங்கள் பாதையிலும் பாதையோரங்களிலும் இருந்து காய்ந்து அவற்றில் தொற்று ஏற்படும் தூசி சிற்றுண்ணிகள் (Dust mite) பயணிப்பவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் அஸ்துமா நோயை ஏற்படுத்திவிடுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை நடைபாதையில் மலங்கழிக்க கொண்டுவந்து விடும் மேதாவிகளையும் நாம் காணலாம். தமது வீடு சுத்தமாகவும் பாதை எப்படியிருந்தாலும் பரவாயில்லை என இருப்பவர்களுக்களை சட்டம் தண்டிக்க வழிசெய்தல் வேண்டும். பாதையில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிந்தால் இவ்வாறான நிலைமையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். எம்மால் தவிர்க்கக்கூடிய இவ்வாறான நோய்களை நாம் கட்டுப்படுத்தி தேவையற்ற உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ளலாம்.
This article describes about the importance of mosquito for its human killing efficieny. There are many disases caused by this vector—mosquito—and many of them are very dangerous.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
விரைந்து வாழும் உலகில் எம்மையும் ஏதோவொருவகையில் நாம் திணித்து வைத்திருக்கின்றோம் என்பதும் எம்மை கவனிக்க நேரமேயில்லாமல் நொடிக்குநொடி எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம் என்பதனையும் நாம் மறந்துவிடலாகாது. நாம் சாதித்தது என்ன? எதனைத்தேடி இவ்வளவு அவசரம் என்னும் மூத்தோர் வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. பணமும் புகழும் பதவியும் தேடியோடியபடி எம்மையும் மறந்து சுற்றமும் உற்றமும் தேவையற்று அவசர உலகில் எமது நடவடிக்கைகள் இருப்பது போல உணவையும் அந்த அவசரத்துடனேயே எமக்குள்ளே திணித்துக் கொள்கின்றோமே. அதனால் ஏற்படும் அசௌகரியங்களும் சுகாதார சீர்கேடும் இறுதியில் எம்மை விரைந்து காலனின் பிடியில் தள்ளிவைத்து விடுகின்றன. என்னதான் விரைவு உணவுகளும் பலவகை பானங்களும் பெட்டி பெட்டியாக வந்து இறங்கினாலும் எமது உணவு சேதன உணவாக நஞ்சற்றதாக இருக்க வேண்டும் என்னும் தேவை தற்போது பரந்துபட்ட அளவில் உருவாகியிருக்கின்றது.
பஞ்சகௌவியம் என்பது பசுவிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவது அதனது சிறப்பு. இதில் உடற்சுகாதாரத்தினை மேம்படுத்தும் பதார்த்தங்கள் இருப்பதுடன் மருத்துவ குணங்களும் நிறைவாக காணப்படுவதாகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் பஞ்சகௌவியம் எனப்படுவது பால், நெய், தயிர், சாணம், சிறுநீர் என்பனவற்றை கலந்து பெறப்பட்ட பொருளாகும். இந்த பொருளில் ஐந்த வகை பெறுமதிகளுக்கிணைவான சக்தி இருப்பதாக ஊகிக்கபட்ட போதிலும் மருத்துவ ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பஞ்சகௌவியம் முழுக்க முழுக்க சேதனப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டிருப்பதுடன் இதனை பயன்படுத்துவதனால் எந்த பக்கவிளைவுகளோ பாதிப்புகளோ ஏற்படாது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான தனியான குணங்களைக் கொண்டிருப்பதனாலும் இவை தாவரத்திற்கோ அல்லது மனிதனுக்கோ எந்த விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதனை ஆய்வு மூலம் உறுதிசெய்துள்ளனர்.
பஞ்சகொளவியத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவ செயன்முறையை பஞ்சகௌயபதி அல்லது கௌயபதி என [Naturopathy] என்பனவறற்றைப் போல இதனை பஞ்சகௌயபதி அல்லது கௌயபதி என அழைக்கப்படுகின்றது. பஞ்சகௌயபதி பரிகரணம் பலவிதமான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆஸ்துமா, புளு, ஒவ்வாமை, புண் மாறுதல், இதய நோய்கள், வாதநோய்கள், வயிற்றுப்பொருமல் மற்றும் சமிபாட்டுத்தொகுதி நோய்கள் என்பனவற்றிற்கு பரிகரணமாக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் புற்றுநோய், எயிட்ஸ் மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் பரிகரிக்கப்படும் கோமாதாவின் பொருட்களில் இவ்வளவும் இருக்கின்றது.
சேதன விவசாயத்தில் பஞ்சகௌவியம் முக்கிய இடுபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. சேதன விவசாயம் சாத்தியமா என்னும் கேள்வி எழும்பொதெல்லாம் பஞ்சகௌவியத்தின் பயன்பாடு உள்ளவரை அது சாத்தியமே என ஆணித்தரமாக கூறலாம். இதனது பயன்பாட்டின் மூலம் பயிர்ச்செய்கைக்கு எந்தவிதமான அசேதன இரசாயனங்களை குறிப்பாக அசேதன இரசாயன பசளைகள் மற்றும் பீடைநாசினிகளை பயன்படுத்த வேண்டிய தேவை எழாது. சேதன விவசாய செய்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு பஞ்சகௌவியம் உதவியாயிருக்கும். பஞ்சகௌவியத்தைப் போல எந்த இரசாயனமும் விலைகுறைவாகவும் சூழலுக்கிணைவானதுமாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், சேதன உரமாக தொழிற்படுவதனால் பயிரின் விளைச்சலை அதிகரிக்கவும் செய்யும். இவற்றுடன் மாட்டுசலம் மற்றும் சாணம் என்பன உயிர்வாயுவை உற்பத்தி செய்யவும் உதவிசெய்யும்.
பாலைப் புளிக்கவைப்பதனால் தயிர் மற்றும் யோகட் என்பன பெறப்படுகின்றன. ஆயினும் இவ்வாறு புளிக்கவைக்கும் போது ஸ்ரெப்ரோகொக்கசு, அசிடோபைலசு, லக்ரோபசிலசு ஆகிய பக்ரீறியாக்கள் எமக்கு கிடைக்கின்றன. இவை உணவை நன்றாக ஐPரணமாக்க உதவுகின்ற நன்மைதரும் பக்ரீறியாக்களாகும். தயிர் மற்றும் யோகட் ஆகியனவற்றை உணவாக்கும் போது இவை இலகுவாக எமக்கு கிடைக்க ஏதுவாகின்றன. இலக்ரிக்கமிலம் உற்பத்தியாக்கும் பக்ரீறியாவும் இதன் மூலம் கிடைக்கும். தயிரில் புரதங்கள், விற்றமின்களான ஏ, பி, டி, மற்றும் ஈ என்பனவற்றுடன் கல்சியம் பொசுபரசு மக்னீசியம் துத்தம் என்பன எமது உடலுக்கு கிடைக்கின்றன. எதுவாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் விளக்கமாக தயிரையோ யோகட்டையோ அளவுக்கதிகமாக உணவாக எடுக்கக்கூடாது.
மாட்டுச்சாணத்தில் பல நன்மைதரும் பக்ரீறியாக்கள் இருக்கின்றன. சக்காரோமைசிசு, லக்ரோபசிலசு, பசில்லசு, ஸ்ரோகொக்கசு, கன்டிடா என பலவகை பக்ரிறியாக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதிலும் பல விற்றமின்கள் தாதுப்பொருட்கள் பொட்டாசியம் நைதரசன் ஒட்சிசன் காபன் செலுலோசு கெமிசெலுலோசு என பலவகையான சத்துக்கள் இருக்கின்றன. சாணம் பக்ரீறியா எதிரியாகவும் பங்கசு எதிரியாகவும் காணப்படுகின்றது. சோரியாசிசு மற்றும் எக்ஸ்சிமா போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது. சாணத்தை அதிகளவில் பயன்படுத்துவதனால் மண்ணில் நுண்ணங்கிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன் மண்ணின் வளம் மேலும் அதிகரிக்கும் . மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மண்வளமுள்ள மண்ணாக வாழும் மண்ணாக பரிணமிக்கும்.
மாட்டுசலத்தில் பல விற்றமின்கள் நொதியங்கள் ஓமோன்கள் உப்புக்கள் இவற்றுடன் தாதுப்பொருட்களும் காணப்படுகின்றன. இதனை கொள்கலனுள் அடைத்து மண்ணினுள் புதைத்து நொதிக்க வைத்துவிட்டு அதனுடன் வேண்டியளவு நீர்கலந்து பயிர்களுக்க தெளிக்கும் போது பயிர்கள் தழைச்சத்தை உள்ளீர்த்து ;சிறப்பாக வளர்கின்றன. விளைச்சலும் அதிகரிக்கின்றது. பலவித நன்மைகளுள்ள பசுவின் பொருட்கள் அனைத்தும் சிறந்த பயன்களைத் தரக்கூடியனவாக காணப்படுவதனால் அவற்றின் பயன்பாட்டை நாம் அதிகரிக்கும் போது எமக்கான சேதன சத்து இலகுவாக கிடைத்துவிடும். பசுபால் தயிர் நெய் மோர் மற்றும் சாணம் என்னும் ஐந்துவகை பயனுள்ள பொருட்களை முறையாக பயன்படுத்தி சேதன முறையில் பயிர்களை வளர்க்கவும் அவற்றிலிருந்து நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யவும் முடியும். பஞ்சகௌவியம் என்னும் பொக்கிஷம் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாக எமது பண்ணைமுறைமையை மாற்றிக் கொண்டால் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தேவை எழாது.
பஞ்சகௌவியத்தினை அடிப்படையாக வைத்து செப்பு நனோ துணிக்கைகள் மற்றும் சில்வர் நனோ துணிக்கைகள் ஆய்வு மூலம் பெறப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானத்தின உச்சத்தை தொடும் தொழிநுட்பத்தினை பஞ்சகௌவியத்தை அடிப்படையாக வைத்து உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த நனோ துணிக்கைகள் விவசாய விஞ்ஞான துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறியிருக்கின்றனர்.
தெரிந்தும ;நோயை உண்டாக்கும் என அறிந்தும் நாம் வீணாக அசேதன உள்ளீடுகளை நம்பியிருக்கும் காலத்திலிருந்து எம்மை விடுவித்து எமது உடல்நலம் கருதி எமது குடும்பத்தாரினது நலன்கருதி நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்து உண்ணும் நிலைமைக்குள் அவசியம் வந்தாகவேண்டும். தவறின் அரைகுறையில் நாம் எம்மையிழந்து விண்ணேகவேண்டியிருக்கும். எமது உறவுகளுக்காக ஒரு கணமாவது நாம் சிந்தித்து செயலாற்றுவது அவசியம்.
This article describes about the "Panchagovya"- a product obtained from the cow's output by mixing Milk, curd, ghee, urine and dung. The ingredients of these five products are immeasurable. The details of its usage in agriculture and the components in these ingredients are explained.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
விரைந்து வாழும் உலகில் எம்மையும் ஏதோவொருவகையில் நாம் திணித்து வைத்திருக்கின்றோம் என்பதும் எம்மை கவனிக்க நேரமேயில்லாமல் நொடிக்குநொடி எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம் என்பதனையும் நாம் மறந்துவிடலாகாது. நாம் சாதித்தது என்ன? எதனைத்தேடி இவ்வளவு அவசரம் என்னும் மூத்தோர் வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. பணமும் புகழும் பதவியும் தேடியோடியபடி எம்மையும் மறந்து சுற்றமும் உற்றமும் தேவையற்று அவசர உலகில் எமது நடவடிக்கைகள் இருப்பது போல உணவையும் அந்த அவசரத்துடனேயே எமக்குள்ளே திணித்துக் கொள்கின்றோமே. அதனால் ஏற்படும் அசௌகரியங்களும் சுகாதார சீர்கேடும் இறுதியில் எம்மை விரைந்து காலனின் பிடியில் தள்ளிவைத்து விடுகின்றன. என்னதான் விரைவு உணவுகளும் பலவகை பானங்களும் பெட்டி பெட்டியாக வந்து இறங்கினாலும் எமது உணவு சேதன உணவாக நஞ்சற்றதாக இருக்க வேண்டும் என்னும் தேவை தற்போது பரந்துபட்ட அளவில் உருவாகியிருக்கின்றது.
பஞ்சகௌவியம் என்பது பசுவிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவது அதனது சிறப்பு. இதில் உடற்சுகாதாரத்தினை மேம்படுத்தும் பதார்த்தங்கள் இருப்பதுடன் மருத்துவ குணங்களும் நிறைவாக காணப்படுவதாகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் பஞ்சகௌவியம் எனப்படுவது பால், நெய், தயிர், சாணம், சிறுநீர் என்பனவற்றை கலந்து பெறப்பட்ட பொருளாகும். இந்த பொருளில் ஐந்த வகை பெறுமதிகளுக்கிணைவான சக்தி இருப்பதாக ஊகிக்கபட்ட போதிலும் மருத்துவ ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பஞ்சகௌவியம் முழுக்க முழுக்க சேதனப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டிருப்பதுடன் இதனை பயன்படுத்துவதனால் எந்த பக்கவிளைவுகளோ பாதிப்புகளோ ஏற்படாது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான தனியான குணங்களைக் கொண்டிருப்பதனாலும் இவை தாவரத்திற்கோ அல்லது மனிதனுக்கோ எந்த விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதனை ஆய்வு மூலம் உறுதிசெய்துள்ளனர்.
பஞ்சகொளவியத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவ செயன்முறையை பஞ்சகௌயபதி அல்லது கௌயபதி என [Naturopathy] என்பனவறற்றைப் போல இதனை பஞ்சகௌயபதி அல்லது கௌயபதி என அழைக்கப்படுகின்றது. பஞ்சகௌயபதி பரிகரணம் பலவிதமான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆஸ்துமா, புளு, ஒவ்வாமை, புண் மாறுதல், இதய நோய்கள், வாதநோய்கள், வயிற்றுப்பொருமல் மற்றும் சமிபாட்டுத்தொகுதி நோய்கள் என்பனவற்றிற்கு பரிகரணமாக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் புற்றுநோய், எயிட்ஸ் மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் பரிகரிக்கப்படும் கோமாதாவின் பொருட்களில் இவ்வளவும் இருக்கின்றது.
சேதன விவசாயத்தில் பஞ்சகௌவியம் முக்கிய இடுபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. சேதன விவசாயம் சாத்தியமா என்னும் கேள்வி எழும்பொதெல்லாம் பஞ்சகௌவியத்தின் பயன்பாடு உள்ளவரை அது சாத்தியமே என ஆணித்தரமாக கூறலாம். இதனது பயன்பாட்டின் மூலம் பயிர்ச்செய்கைக்கு எந்தவிதமான அசேதன இரசாயனங்களை குறிப்பாக அசேதன இரசாயன பசளைகள் மற்றும் பீடைநாசினிகளை பயன்படுத்த வேண்டிய தேவை எழாது. சேதன விவசாய செய்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு பஞ்சகௌவியம் உதவியாயிருக்கும். பஞ்சகௌவியத்தைப் போல எந்த இரசாயனமும் விலைகுறைவாகவும் சூழலுக்கிணைவானதுமாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், சேதன உரமாக தொழிற்படுவதனால் பயிரின் விளைச்சலை அதிகரிக்கவும் செய்யும். இவற்றுடன் மாட்டுசலம் மற்றும் சாணம் என்பன உயிர்வாயுவை உற்பத்தி செய்யவும் உதவிசெய்யும்.
பாலைப் புளிக்கவைப்பதனால் தயிர் மற்றும் யோகட் என்பன பெறப்படுகின்றன. ஆயினும் இவ்வாறு புளிக்கவைக்கும் போது ஸ்ரெப்ரோகொக்கசு, அசிடோபைலசு, லக்ரோபசிலசு ஆகிய பக்ரீறியாக்கள் எமக்கு கிடைக்கின்றன. இவை உணவை நன்றாக ஐPரணமாக்க உதவுகின்ற நன்மைதரும் பக்ரீறியாக்களாகும். தயிர் மற்றும் யோகட் ஆகியனவற்றை உணவாக்கும் போது இவை இலகுவாக எமக்கு கிடைக்க ஏதுவாகின்றன. இலக்ரிக்கமிலம் உற்பத்தியாக்கும் பக்ரீறியாவும் இதன் மூலம் கிடைக்கும். தயிரில் புரதங்கள், விற்றமின்களான ஏ, பி, டி, மற்றும் ஈ என்பனவற்றுடன் கல்சியம் பொசுபரசு மக்னீசியம் துத்தம் என்பன எமது உடலுக்கு கிடைக்கின்றன. எதுவாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் விளக்கமாக தயிரையோ யோகட்டையோ அளவுக்கதிகமாக உணவாக எடுக்கக்கூடாது.
மாட்டுச்சாணத்தில் பல நன்மைதரும் பக்ரீறியாக்கள் இருக்கின்றன. சக்காரோமைசிசு, லக்ரோபசிலசு, பசில்லசு, ஸ்ரோகொக்கசு, கன்டிடா என பலவகை பக்ரிறியாக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதிலும் பல விற்றமின்கள் தாதுப்பொருட்கள் பொட்டாசியம் நைதரசன் ஒட்சிசன் காபன் செலுலோசு கெமிசெலுலோசு என பலவகையான சத்துக்கள் இருக்கின்றன. சாணம் பக்ரீறியா எதிரியாகவும் பங்கசு எதிரியாகவும் காணப்படுகின்றது. சோரியாசிசு மற்றும் எக்ஸ்சிமா போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது. சாணத்தை அதிகளவில் பயன்படுத்துவதனால் மண்ணில் நுண்ணங்கிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன் மண்ணின் வளம் மேலும் அதிகரிக்கும் . மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மண்வளமுள்ள மண்ணாக வாழும் மண்ணாக பரிணமிக்கும்.
மாட்டுசலத்தில் பல விற்றமின்கள் நொதியங்கள் ஓமோன்கள் உப்புக்கள் இவற்றுடன் தாதுப்பொருட்களும் காணப்படுகின்றன. இதனை கொள்கலனுள் அடைத்து மண்ணினுள் புதைத்து நொதிக்க வைத்துவிட்டு அதனுடன் வேண்டியளவு நீர்கலந்து பயிர்களுக்க தெளிக்கும் போது பயிர்கள் தழைச்சத்தை உள்ளீர்த்து ;சிறப்பாக வளர்கின்றன. விளைச்சலும் அதிகரிக்கின்றது. பலவித நன்மைகளுள்ள பசுவின் பொருட்கள் அனைத்தும் சிறந்த பயன்களைத் தரக்கூடியனவாக காணப்படுவதனால் அவற்றின் பயன்பாட்டை நாம் அதிகரிக்கும் போது எமக்கான சேதன சத்து இலகுவாக கிடைத்துவிடும். பசுபால் தயிர் நெய் மோர் மற்றும் சாணம் என்னும் ஐந்துவகை பயனுள்ள பொருட்களை முறையாக பயன்படுத்தி சேதன முறையில் பயிர்களை வளர்க்கவும் அவற்றிலிருந்து நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யவும் முடியும். பஞ்சகௌவியம் என்னும் பொக்கிஷம் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாக எமது பண்ணைமுறைமையை மாற்றிக் கொண்டால் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தேவை எழாது.
பஞ்சகௌவியத்தினை அடிப்படையாக வைத்து செப்பு நனோ துணிக்கைகள் மற்றும் சில்வர் நனோ துணிக்கைகள் ஆய்வு மூலம் பெறப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானத்தின உச்சத்தை தொடும் தொழிநுட்பத்தினை பஞ்சகௌவியத்தை அடிப்படையாக வைத்து உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த நனோ துணிக்கைகள் விவசாய விஞ்ஞான துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறியிருக்கின்றனர்.
தெரிந்தும ;நோயை உண்டாக்கும் என அறிந்தும் நாம் வீணாக அசேதன உள்ளீடுகளை நம்பியிருக்கும் காலத்திலிருந்து எம்மை விடுவித்து எமது உடல்நலம் கருதி எமது குடும்பத்தாரினது நலன்கருதி நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்து உண்ணும் நிலைமைக்குள் அவசியம் வந்தாகவேண்டும். தவறின் அரைகுறையில் நாம் எம்மையிழந்து விண்ணேகவேண்டியிருக்கும். எமது உறவுகளுக்காக ஒரு கணமாவது நாம் சிந்தித்து செயலாற்றுவது அவசியம்.
This article describes the
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உணவுற்பத்தியில் நாம் எந்தளவிற்கு சிரத்தையெடுக்கின்றோமோ அதே நேரத்தில் உற்பத்தி செய்த உணவை மேலும் அதனை மதிப்பேற்றஞ் செய்து பெறப்படும் உற்பத்திப் பொருட்களை சேகரித்து வைக்கும் இடங்கள் சுத்தமானதாக இல்லாதிருப்பதும் இன்னும் அவற்றை பொதிசெய்வதில் பயன்படுத்தப்படும் தரமற்ற பொருட்களும் பொதிசெய்யும் முறைகள் பொருத்தமற்றதாக இருப்பதும் இவ்வாறான உணவுப்பொருட்கள் பழுதடைய வாய்ப்புக்களை உருவாக்கிவிடும். எந்த வகையிலும் உணவுப்பொருட்கள் தரமற்ற செயன்முறைகளின் கீழ் விற்பனைக்கு வரும்போது அது நுகர்வோரை வெகுவாக பாதித்துவிடும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பற்ற நோயாளிகள் இவ்வகையான உணவுப்பொருட்களை குறிப்பாக பிஸ்கட்களை உணவாக கொள்ளும் போது அது அவர்களுக்கு வேறுபல நோய்களை உருவாக்கிவிடும் ஆபத்தை உருவாக்கிவிடுகின்றன.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் தரமான நிலையில் (டழற ஙரயடவைல pயஉமயபiபெ) பொதிசெய்யப்பட்டிருக்கின்றனவா அல்லது தரமான பொருட்களைப் (டழற ஙரயடவைல அயவநசயைட pயஉமயபiபெ) பயன்படுத்தி பொதிசெய்யப்பட்டிருக்கின்றனவா என நாம் கவனிப்பதில்லை. இதன் காரணமாக பல உணவுப்பொருட்கள் பொதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில் பழுதடைந்திருப்பதும் குறிப்பாக மிகவும் சிறிய சிவப்பு எறும்புகள் (சநன யவெள) அதனுள் புகுந்து அந்த உணவுப்பொருட்களை உண்ணத்தொடங்கியதும் அந்த உணவுப் பொருட்கள் பழுதடையத் தொடங்கிவிடுகின்றன. பொதி செய்யும் பொருட்கள் தரமானதாக இல்லாதிருப்பின் அவற்றை சிவப்பெறும்புகள் இலகுவில் துளையிட்டு உணவை பதம்பார்த்து விடுகின்றன.
குறிப்பாக பிஸ்கட்கள், நூடில்ஸ்கள் மற்றும் இனிப்புவகை உணவுப்பொருட்கள் சரியான பொதியிடல் பொருட்களை பயன்படுத்தி பொதி செய்யப்படாதிருப்பின் இங்கே எறும்புகள் உட்புகுந்து உணவை அவை சிதைவடைவதும் மேற்குறிப்பிட்ட எறும்புகள் அந்த உணவுப்பொதியை சேதமாக்கி உணவு கெட்டுப்போவதற்கு காரணமாகிவிடும். சிவப்பெறும்புகளிலுள்ள கடிக்கும் உறுப்பு (அயனெiடிடநள) இலகுவாக பொதியிடப்பட்டுள்ள பதார்த்தத்தை துளைத்து உட்புகுவதனால் அதனுள் ஈரப்பதன் அதிகரிக்க பூஞ்சைகளின் தொற்றும் அதனுடன் களஞ்சிய அறைகளில் காணப்படும் ஒருவகை சிற்றுண்ணியும் (அவைநள) உட்சென்றுவிடும். இவற்றினால் உணவுப்பொருட்கள் சேதமடைந்து நாம் உண்பதற்கேற்றதல்லாததாக மாறிவிடுகின்றன. இவ்வகையான தொற்று ஏற்பட்ட உணவுப்பொருட்களை உணவாகக் கொண்டால் உணவுசெரிமான பிரச்சனைகளுடன் ஒவ்வாமை தன்மைகளும் உண்டாக வாய்ப்பிருக்கின்றன. மேலும் இவ்வகை பழுதடைந்த உணவுகள் நஞ்சாவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
பொதியிடப்பட்ட உணவினை குறிப்பாக பிஸ்கட்கள், இனிப்பு பொருட்கள், இன்னும் பலவகை உணவுப்பொருட்கள் சிவப்பு எறும்புகளினால் சேதமாக்கப்படுவது குறிப்பாக கடைகள் மற்றும் அவற்றை களஞ்சியப்படுத்தப்பட்ட இடங்கள் சுத்தமானதாக இல்லாதிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறாக எறும்புகள் அதிகமான இருக்கும்இடங்கள் சுத்தப்படுத்தப்படாது களஞ்சியப் படுத்தும் போது மேற்குறிப்பிட்ட சேதம் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது. இவ்வாறான இடங்கள் உணவு சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படல் வேண்டும். தரமற்ற இடத்தில் பொதியிடப்பட்ட உணவுப்பொருட்களை களஞ்சியப் படுத்தும் போது பூச்சிபீடைகளின் தாக்கம் ஏற்படவும் எலி மற்றும் கரப்பான பூச்சிகளின் தாக்கமும் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறாக தரமற்ற வகையில் சுகாதாரமற்ற இடங்களில் பெரும் அளவில் சேமிக்கும் போது சேதமுறும் உணவுப்பொருட்களை இனங்கண்டு அவற்றை விற்பனைக்கு உதவாததாக இலேபலிடப்பட்டு அழிக்கப்படல் வேண்டும். மாறாக இவற்றை மக்கள் வாங்கி உணவாக கொண்டால் அதிலிருந்து உணவுசார் நஞ்சாதல், மற்றும் பூஞ்சைகள் தொற்று இன்னும் சிற்றுண்ணி மற்றும் பூச்சிப்பீடைகளின் மலக்கழிவுகள் உமிழ்நீர்சுரப்புக்கள் என அனைத்தையும் உண்ணும் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும்.
நாம் உள்ளூரில் தயாரிக்கும் உணவுப்பொருட்களையும் தரமான பொதியிடல் பதார்த்தங்களை பயன்படுத்தி பொதிசெய்தல் மிகவும் நல்லது. உணவுப்பொருட்கள் பொதியிடலில் உள்ள தவறுகளால் பழுதடையும் போது அது நமது உள்ளூர் தயாரிப்புக்கள் பற்றிய நம்பகத்தன்மையை நலிவடைய வைத்துவிடும். வாழ்வாதாரத்தை மையமாக வைத்து பலவகை உள்ளூர் தயாரிப்புக்கள் தற்போது சந்தையில் பலவகைகளில் காணப்படுகின்றன. இவ்வாறான உணவுப்பொருட்களுக்கான உற்பத்தித்திகதி மற்றும் காலாவதி திகதிகள் தரப்பட்டிருந்தும் தரமற்ற பொதிசெய்தலால் அவை விரைந்து கெட்டுவிடும் நிலைக்கு வந்துவிடுகின்றன. அத்துடன் இவ்வாறான உணவுப்பொருட்களின் தரம் பற்றிய நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடு;ம். எமது உள்ளூர் பொருட்களை பயன்படுத்தி அல்லது கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி பொதிசெய்யும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி உணவினது தரம்குறைவடையும் தன்மைகளையும் திகதிகளையும் கணக்கிட்டு உணவு தரக்கட்டுப்பாட்டு நியதிகளின் அறிவுரைக்கமைய அவற்றுக்கான காலாவதி திகதி நிர்ணயஞ்செய்தல் வேண்டும். உணவின் தன்மை அதனது நிலை மற்றும் அதிலுள்ள பொருட்களின் கூட்டு என்பனவற்றுடன் அதில் கலந்திருக்கும் இனிப்பும் இதில் காரணங்களாக அமைகின்றன.
மேலும் உணவுப்பொருள் பொதியிட்டபின் வைக்கப்படும் களஞ்சியம் அல்லது அறைகள் குறிப்பாக கவனிக்கப்படல் வேண்டும். தரமான பொதியிடல் மூலம் முக்கியமான பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம் ஆயினும் பயன்படுத்தப்படும் உணவின் தன்மையும் இதற்கொருகாரணமாகும். வெளியிலுள்ள பல்வேறு நிற வகைகளைக்கொண்ட பொதியிடலை நம்பி உணவினை கவனிப்பதை தவிர்த்துவிடாதீர்கள். தரமற்ற எந்த பொதியிடலும் உள்ளுள்ள உணவினை சேதமடைவதிலிருந்து தவிர்க்க முடியாது. அதனால் பொதியிடலில் பயன்படுத்தப்படும் பதார்த்தத்தின் வகை, ஈரலிப்பை தவிர்க்கும் நிலை, மற்றும் உணவுப்பொருளிலிலுள்ள ஈரப்பதன் மற்றும் அதலிலுள்ள கூட்டுப்பொருட்கள் இன்னும் இனிப்புவகைகள் என்பன இதில் கவனிக்கப்படல் வேண்டும். மேலும் தரமற்ற பொதியிடல் பதார்த்தத்தை எறும்புகள் விரைந்து சேதமாக்காதவாறு பயன்படுத்தல் வேண்டும். இன்னும் சிவப்பு எறும்புகள் ஓரளவு தடிப்பான தரமானதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி உணவை பொதிசெய்தலும் தவிர்க்கப்படல் வேண்டும். கடைகளில் இன்னும் பலவகை பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளில் பெரிய சாக்கினுள் வரும் உணவுப்பொருட்கள் குறிப்பாக சீனி சக்கரை என்பன அந்த அங்காடிகளில் சிறியளவிலான பைக்கற்றுக்காளாக மெலிதான பொலித்தீன் பைகளால் பொதிசெய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவற்றில் மெலிதான பொலித்தீன் பைகளை சிவப்பு எறும்புகள் இலகுவில் சேதமாக்கி உட்புகுந்து உணவினை உட்கொள்ள ஆரம்பித்துவிடும். இவ்வகையாக பூச்சிபீடைகள் சேதத்தினால் உணவுப்பொருட்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உணவுப்பொருள் விற்பனைக்குகந்ததல்லாததாக மாறிவிடும்.
இவற்றை விட பொதியிடப்பட்ட உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் விற்கப்படாவிட்டால் அவற்றின் காலாவதியாகும் திகதியை (நஒpசைல னயவந) மாற்றி அல்லது அந்த லேபலை உரித்து, அழித்து, மாற்றி விற்பனைக்கு விடப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. காலாவதியாகும் திகதியை மாற்றியமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு எதனையும் அவதானித்தால் உணவு பரிசோதகர்களுக்கு அறியத்தருவது எமது மக்களை காப்பாற்றும் நல்ல செயலாகும். ஏனெனில் இவ்வாறான தொற்றுக்கள் அந்த உணவுப்பொருட்களில் ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது.
விற்பனைக்கு வைக்கப்படும் உணவுப்பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து அவற்றை வாங்கி நாம் உணவாக்க வேண்டும். எமது மக்களுக்கு பொதியிடப்பட்ட உணவு பற்றிய விழிப்புணர்வினை தருவதற்காக மேற்குறிப்பிட்டப்பட்ட தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதுபற்றிய ஆய்வு விவசாய உயிரியல் துறையில் சிறப்பு ஆண்டு மாணவியினால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வு முடிவுகளும் இவ்வாறான கட்டுரையூடாக விளக்கப்படும்.
This article describes the World Health Day, and this year it focused on Mother-Child wellbeing.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
ஐக்கிய நாடுகள் தாபனத்தால் ஏப்ரல் 7ம் திகதியை உலக ஆரோக்கிய தினமாக (World Health Day ) பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இம்முறை இத்தினத்தின் கருப்பொருளாக 'ஆரோக்கியமான ஆரம்பமும் நம்பிக்கையூட்டும் எதிர்காலமும்' (Healthy beginning and Trusted Future) என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆரம்பம் என்றுமே ஆரோக்கியமாகவே ஆரம்பிக்கின்றது. பலத்த எதிர்பார்ப்புக்களைக் கொண்டதாகவே ஆரம்பம் உருக்கொள்கின்றது. வளர்ச்சி என்பது இல்லையென்றால் ஆரம்பம் சௌபாக்கியமாக இருக்காது. எல்லாவற்றுக்கும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகி அவை நம்பிக்கையூட்டுவனவாக இருத்தல் அவசியம். வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ அல்லது புரிந்தோ புரியாமலோ வளர்ச்சியானது கலங்களிலிருந்து அங்கிவரை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இந்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நம்பிக்கை தரக்கூடிய சிறந்த வாழ்க்கையை எதிர்பார்க்கலாம்.
தாய் சேய் ஆரோக்கியம் எந்தவொரு குடும்பத்தின் அத்திபாரமாவதுடன்; குடும்ப மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பேணவும் இன்றியமையாததாகின்றது. இருவரின் ஆரோக்கியத்தை பேணுவதில் நிறைவான ஊட்டச்சத்தான உணவு என்றும் கிடைத்தற்கரிய மருத்துவ வசதிகள் என்பன மிகமுக்கியமானவையாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதிலிருந்து செல்வத்துள் சிறந்த செல்வம் தேகாரோக்கியமான வாழ்வு என்பதும் இதனையே சுட்டிநிற்கின்றன. மேற்கூறிய கருப்பொருள் உலகநாடுகளனைத்திலும் தாய் சேய் நல்வாழ்வுக்கான முக்கியத்துவத்தையும் தாய்சேய் இறப்புக்களை தவிர்ப்பதற்கான தடுப்பதற்கான வழிவகைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றது. அதிலும் இயற்கையின் சீற்றத்தை தவிர்த்து மனித அழிவுகளிலிருந்து தாய் சேய் இருவரையும் பாதுகாக்க வேண்டும் என்னும் நிலைப்பாடு மேலோங்குகின்றது.
அண்மித்த தரவுகளினடிப்படையில் வருடமொன்றுக்கு 3,00,000 பெண்கள் தாய்மையடைந்திருக்கும் போதோ மகப்பேற்றின்போதோ இறக்கின்றனர் என்பது துன்பமானது. அதிலும் 2 மில்லியன் மகவுகள் தங்களது முதலாவது மாதத்திலேயே இறக்கின்றனர் என்பதுடன் 2 மில்லியனுக்கும் மேலான மகவுகள் செத்துப்பிறக்கின்றன என்பதும் கவனிக்கத் தக்கது. இதனை சுருக்கிப் பார்த்தால் ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு தவிர்க்ககூடிய இறப்பு நிகழ்கின்றது. இதிலிருந்து தாய் சேய் சுகாதாரத்தை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பது சொல்லாமல் சொல்லிய செய்தியாகின்றது.
எமது நாட்டின் பொருளாதார சரிவினால் ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றதென்பதனை மறுக்க முடியாது. குடும்ப வருமானம் ஊட்டச்சத்தான ஆரோக்கியமான குடும்பத்தை பேணுவதில் போதியதாக இல்லை என்பதுடன் பொருளாதார சரிவு உற்பத்தியிலும் சரிவினை கொடுத்திருக்கின்றது. இதனால் அன்றாட பொருட்களின் விலையதிகரிப்பு எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாகியிருப்பதுடன் அதனை ஈடுசெய்ய குடும்ப வருமானத்தை பெருக்கினாலன்றி குடும்ப தேவையை பூர்த்;தி செய்ய முடியாது. தனிமனித மற்றும் குடும்ப சுகாதாரத்தை பேணுவதற்கு அவர்களுக்கான உணவினை பெறுவதில் குடும்ப வேளாண்மை முக்கியத்துவம் பெறுகின்றது. 2018 தொடங்கி 2028 வரையான பத்தாண்டுகளில் குடும்ப வேளாண்மையை மேம்படுத்துவதன் மூலம் 2030 இல் எதிர்பார்க்கப்பட்ட பேண்தகு அபிவிருத்தி இலக்கு 3 (சிறந்த சுகாதாரம் மற்றும் நன்னிலை) இனை எட்டக்கூடியதாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த அளவில் பலநாடுகளில் இந்த அணுகுமுறை நடைமுறையிலில்லை. போர்ச்சூழலும் இயற்கையழிவும் நடைமுறைக்கு சாத்தியமற்ற முரணான அரச கொள்கைகளும் பலநாடுகளின் பொருளாதாரத்தை மேனிலைப்படுத்துவதற்கு பதிலாக சரிவடைய வைத்திருக்கின்றன. இந்த நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் இறுதியில் அவை தாய்சேய் நலனை பாதிப்பனவாகவும் வளமான சந்ததியை உருவாக்குவதில் பின்னடைவை சந்திப்பனவாகவே அமைந்துவிடுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அதியுச்ச அரவணைப்பு சரீர உதவியாக உளநல உதவியாக மகப்பேற்றிற்கு முன்பும் பின்பும் அவசியமாக கொடுக்கப்படல் வேண்டும். உயிர் ஒன்றின் பிறப்பில் இன்னொரு உயிர் பிரிந்துவிடக் கூடாது. பெண்களுக்கு மகப்பேறு என்பது மறுவாழ்வு என கூறுவர். ஒருவருக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அத்தனை தரம் அவர்கள் மறுnஐன்மம் பெறுகின்றனர் என்பதை உணர்வுரீதியாக நாமுணர்ந்தால் அவர்களுக்கான முக்கியத்துவத்தை அவர்தம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். உடல்ரீதியான உபாதைகளை விட உளரீதியான பாதிப்பு அவர்களை மிகவும் பாதித்துவிடும். அவர்களுக்கான ஊட்டச்சத்தான உணவு அவர்தம் உடலை உளநலன்களை பேணிப்பாதுகாக்க உதவும். நஞ்சற்ற உணவை நாமே உற்பத்தி செய்யும் வழிமுறைகளுக்குள் குடும்ப வேளாண்மை முன்னிலை பெறுகின்றது. நாமாக வளர்க்கக்கூடிய பயிர்களை எமது வீடுகளில் இருக்கின்ற இடைவெளிகளில் நடவு செய்வதன் மூலம் எமது உற்பத்தியை நாம் பெருக்கிக் கொள்ளலாம். எமது விருப்ப பயிர்களை வளர்த்து காய், கனி, இலை, என தேவையானவற்றை அறுவடை செய்து உணவாக்கி கொள்வதன் மூலம் உணவில் பல்வகைத்தன்மையை ஏற்படுத்தி தேவையான ஊட்டச்சத்தை பெற்றுக்கொள்ளலாம்;;.
எமது உணவுத்தேவையில் கணிசமான பங்கினை நாம் குடும்பவேளாண்மையூடாக (கயஅடைல கயசஅiபெ) பெற்றுக்கொள்ளலாம். சராசரி குடும்பமொன்றின் நுகர்வுக்கு தேவையான உணவினை 4 தென்னை, 6 கமுகு, 4 வாழை, இரண்டு மா, பப்பாசி, ஐம்பு, முருங்கை, ஒரு கொய்யா, பெருநெல்லி, பலா, அன்னமுன்னா, வெற்றிலை இவைதவிர மரக்கறிப்; பயிர்கள் விரும்பிய அளவில் குறிப்பாக தினமொன்றுக்கான பசும்;இலைக்கறிவகைள் என்பனவற்றுடன்; மூலிகைத்தாவரங்களான பிள்ளைக் கற்றாளை, இஞ்சி, மஞ்சள், வசம்பு, இடவசதியிருந்தால் புளி, தேக்கு என்பனவற்றையும் வளர்க்கலாம்;. குடும்ப சமையலறை மற்றும் விலங்கு கழிவுகளை மண்புழு மற்றும் கறுப்பு இலையானைப் பயன்படுத்தி உக்கவைத்து சேதன பசளையாக்குதல் என்பனவும் இதிலடங்கும்.
சமூகச் சந்தையின் உருவாக்கம் கோவிட் 19இன்போது அதிகரித்திருந்த நிலையில் குடும்ப வேளாண்மையில் கிடைக்கும் அதீத உற்பத்திகளை சந்தைப்படுத்தி அதிலிருந்து குடும்ப வருமானத்தை பெருக்கவும் வாய்ப்புக்கள் பலவுண்டு. குடும்ப வேளாண்மையில் உற்பத்தியாகும் பொருட்களை சுத்தமானதாக நஞ்சற்றதாக தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை பெண்களுக்கு அறிவூட்டுவதன் வாயிலாக குடும்ப வருமானம் சிறக்கவும் வழிவகையுண்டு. டிஐpற்றல் தொழினுட்பத்தை குறிப்பாக மொபைல் தொழினுட்பத்தை பயன்படுத்தி சமூகக் கட்டமைப்பை உறுதி செய்வதுடன் சிறந்த சுகாதார வசதி வாய்ப்புக்களையும் பெருக்கிக் கொள்ளலாம்.
வடபுலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு 40சதவீதத்திற்கு மேலிருந்த கரையோர கிராமத்தில் மணல்மண்ணில் தொழினுட்ப அறிவை உட்புகுத்தி மணல் விவசாயஞ் (ளுயனெல யபசiஉரடவரசந) செய்த பெண் தலைமைத்துவத்துவத்தின் முயற்சியினால் கிராமமே மின்சார இணைப்பைப் பெற்றதுடன் ஒவ்வொரு வீட்டிலும் பலவகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு முழு கிராமமுமே பசுமையான மனைகளை கொண்டு தமது உணவுத்தேவையின் ஒருபங்கினை மனைத்தோட்டங்கள் மூலம் பூர்த்தி செய்வதும் தேவையான ஊட்டச்சத்தை பெற வழிவகுத்திருப்பதனையும் தற்போதும் காணலாம். வாழவழிசெய்யும் திட்டங்கள் தொடர்ந்தும் அவர்களுக்க அனுசரணையாக இருக்குமாயின் பெண்களின் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாயிருக்கலாம். பெண்களின் ஆரோக்கியம் முழுமையான குடும்பதினதும் சமூகத்தினதும் ஆரோக்கியமாகும். நஞ்சற்ற தன்னிறைவான உணவுற்பத்தியை சமூக ஆரோக்கியத்தின் அடிப்படையும் அதனது மேம்பாடும் என உணர்ந்து கொண்டால் அவரவர் உணவுற்பத்தியில் கணிசமான அளவை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்.
This article describes the World Health Day, and this year it focused on Mother-Child wellbeing.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
ஐக்கிய நாடுகள் தாபனத்தால் ஏப்ரல் 7ம் திகதியை உலக ஆரோக்கிய தினமாக (World Health Day ) பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இம்முறை இத்தினத்தின் கருப்பொருளாக 'ஆரோக்கியமான ஆரம்பமும் நம்பிக்கையூட்டும் எதிர்காலமும்' (Healthy beginning and Trusted Future) என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆரம்பம் என்றுமே ஆரோக்கியமாகவே ஆரம்பிக்கின்றது. பலத்த எதிர்பார்ப்புக்களைக் கொண்டதாகவே ஆரம்பம் உருக்கொள்கின்றது. வளர்ச்சி என்பது இல்லையென்றால் ஆரம்பம் சௌபாக்கியமாக இருக்காது. எல்லாவற்றுக்கும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகி அவை நம்பிக்கையூட்டுவனவாக இருத்தல் அவசியம். வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ அல்லது புரிந்தோ புரியாமலோ வளர்ச்சியானது கலங்களிலிருந்து அங்கிவரை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இந்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நம்பிக்கை தரக்கூடிய சிறந்த வாழ்க்கையை எதிர்பார்க்கலாம்.
தாய் சேய் ஆரோக்கியம் எந்தவொரு குடும்பத்தின் அத்திபாரமாவதுடன்; குடும்ப மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பேணவும் இன்றியமையாததாகின்றது. இருவரின் ஆரோக்கியத்தை பேணுவதில் நிறைவான ஊட்டச்சத்தான உணவு என்றும் கிடைத்தற்கரிய மருத்துவ வசதிகள் என்பன மிகமுக்கியமானவையாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதிலிருந்து செல்வத்துள் சிறந்த செல்வம் தேகாரோக்கியமான வாழ்வு என்பதும் இதனையே சுட்டிநிற்கின்றன. மேற்கூறிய கருப்பொருள் உலகநாடுகளனைத்திலும் தாய் சேய் நல்வாழ்வுக்கான முக்கியத்துவத்தையும் தாய்சேய் இறப்புக்களை தவிர்ப்பதற்கான தடுப்பதற்கான வழிவகைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றது. அதிலும் இயற்கையின் சீற்றத்தை தவிர்த்து மனித அழிவுகளிலிருந்து தாய் சேய் இருவரையும் பாதுகாக்க வேண்டும் என்னும் நிலைப்பாடு மேலோங்குகின்றது.
அண்மித்த தரவுகளினடிப்படையில் வருடமொன்றுக்கு 3,00,000 பெண்கள் தாய்மையடைந்திருக்கும் போதோ மகப்பேற்றின்போதோ இறக்கின்றனர் என்பது துன்பமானது. அதிலும் 2 மில்லியன் மகவுகள் தங்களது முதலாவது மாதத்திலேயே இறக்கின்றனர் என்பதுடன் 2 மில்லியனுக்கும் மேலான மகவுகள் செத்துப்பிறக்கின்றன என்பதும் கவனிக்கத் தக்கது. இதனை சுருக்கிப் பார்த்தால் ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு தவிர்க்ககூடிய இறப்பு நிகழ்கின்றது. இதிலிருந்து தாய் சேய் சுகாதாரத்தை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பது சொல்லாமல் சொல்லிய செய்தியாகின்றது.
எமது நாட்டின் பொருளாதார சரிவினால் ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றதென்பதனை மறுக்க முடியாது. குடும்ப வருமானம் ஊட்டச்சத்தான ஆரோக்கியமான குடும்பத்தை பேணுவதில் போதியதாக இல்லை என்பதுடன் பொருளாதார சரிவு உற்பத்தியிலும் சரிவினை கொடுத்திருக்கின்றது. இதனால் அன்றாட பொருட்களின் விலையதிகரிப்பு எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாகியிருப்பதுடன் அதனை ஈடுசெய்ய குடும்ப வருமானத்தை பெருக்கினாலன்றி குடும்ப தேவையை பூர்த்;தி செய்ய முடியாது. தனிமனித மற்றும் குடும்ப சுகாதாரத்தை பேணுவதற்கு அவர்களுக்கான உணவினை பெறுவதில் குடும்ப வேளாண்மை முக்கியத்துவம் பெறுகின்றது. 2018 தொடங்கி 2028 வரையான பத்தாண்டுகளில் குடும்ப வேளாண்மையை மேம்படுத்துவதன் மூலம் 2030 இல் எதிர்பார்க்கப்பட்ட பேண்தகு அபிவிருத்தி இலக்கு 3 (சிறந்த சுகாதாரம் மற்றும் நன்னிலை) இனை எட்டக்கூடியதாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த அளவில் பலநாடுகளில் இந்த அணுகுமுறை நடைமுறையிலில்லை. போர்ச்சூழலும் இயற்கையழிவும் நடைமுறைக்கு சாத்தியமற்ற முரணான அரச கொள்கைகளும் பலநாடுகளின் பொருளாதாரத்தை மேனிலைப்படுத்துவதற்கு பதிலாக சரிவடைய வைத்திருக்கின்றன. இந்த நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் இறுதியில் அவை தாய்சேய் நலனை பாதிப்பனவாகவும் வளமான சந்ததியை உருவாக்குவதில் பின்னடைவை சந்திப்பனவாகவே அமைந்துவிடுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அதியுச்ச அரவணைப்பு சரீர உதவியாக உளநல உதவியாக மகப்பேற்றிற்கு முன்பும் பின்பும் அவசியமாக கொடுக்கப்படல் வேண்டும். உயிர் ஒன்றின் பிறப்பில் இன்னொரு உயிர் பிரிந்துவிடக் கூடாது. பெண்களுக்கு மகப்பேறு என்பது மறுவாழ்வு என கூறுவர். ஒருவருக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அத்தனை தரம் அவர்கள் மறுnஐன்மம் பெறுகின்றனர் என்பதை உணர்வுரீதியாக நாமுணர்ந்தால் அவர்களுக்கான முக்கியத்துவத்தை அவர்தம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். உடல்ரீதியான உபாதைகளை விட உளரீதியான பாதிப்பு அவர்களை மிகவும் பாதித்துவிடும். அவர்களுக்கான ஊட்டச்சத்தான உணவு அவர்தம் உடலை உளநலன்களை பேணிப்பாதுகாக்க உதவும். நஞ்சற்ற உணவை நாமே உற்பத்தி செய்யும் வழிமுறைகளுக்குள் குடும்ப வேளாண்மை முன்னிலை பெறுகின்றது. நாமாக வளர்க்கக்கூடிய பயிர்களை எமது வீடுகளில் இருக்கின்ற இடைவெளிகளில் நடவு செய்வதன் மூலம் எமது உற்பத்தியை நாம் பெருக்கிக் கொள்ளலாம். எமது விருப்ப பயிர்களை வளர்த்து காய், கனி, இலை, என தேவையானவற்றை அறுவடை செய்து உணவாக்கி கொள்வதன் மூலம் உணவில் பல்வகைத்தன்மையை ஏற்படுத்தி தேவையான ஊட்டச்சத்தை பெற்றுக்கொள்ளலாம்;;.
எமது உணவுத்தேவையில் கணிசமான பங்கினை நாம் குடும்பவேளாண்மையூடாக (கயஅடைல கயசஅiபெ) பெற்றுக்கொள்ளலாம். சராசரி குடும்பமொன்றின் நுகர்வுக்கு தேவையான உணவினை 4 தென்னை, 6 கமுகு, 4 வாழை, இரண்டு மா, பப்பாசி, ஐம்பு, முருங்கை, ஒரு கொய்யா, பெருநெல்லி, பலா, அன்னமுன்னா, வெற்றிலை இவைதவிர மரக்கறிப்; பயிர்கள் விரும்பிய அளவில் குறிப்பாக தினமொன்றுக்கான பசும்;இலைக்கறிவகைள் என்பனவற்றுடன்; மூலிகைத்தாவரங்களான பிள்ளைக் கற்றாளை, இஞ்சி, மஞ்சள், வசம்பு, இடவசதியிருந்தால் புளி, தேக்கு என்பனவற்றையும் வளர்க்கலாம்;. குடும்ப சமையலறை மற்றும் விலங்கு கழிவுகளை மண்புழு மற்றும் கறுப்பு இலையானைப் பயன்படுத்தி உக்கவைத்து சேதன பசளையாக்குதல் என்பனவும் இதிலடங்கும்.
சமூகச் சந்தையின் உருவாக்கம் கோவிட் 19இன்போது அதிகரித்திருந்த நிலையில் குடும்ப வேளாண்மையில் கிடைக்கும் அதீத உற்பத்திகளை சந்தைப்படுத்தி அதிலிருந்து குடும்ப வருமானத்தை பெருக்கவும் வாய்ப்புக்கள் பலவுண்டு. குடும்ப வேளாண்மையில் உற்பத்தியாகும் பொருட்களை சுத்தமானதாக நஞ்சற்றதாக தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை பெண்களுக்கு அறிவூட்டுவதன் வாயிலாக குடும்ப வருமானம் சிறக்கவும் வழிவகையுண்டு. டிஐpற்றல் தொழினுட்பத்தை குறிப்பாக மொபைல் தொழினுட்பத்தை பயன்படுத்தி சமூகக் கட்டமைப்பை உறுதி செய்வதுடன் சிறந்த சுகாதார வசதி வாய்ப்புக்களையும் பெருக்கிக் கொள்ளலாம்.
வடபுலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு 40சதவீதத்திற்கு மேலிருந்த கரையோர கிராமத்தில் மணல்மண்ணில் தொழினுட்ப அறிவை உட்புகுத்தி மணல் விவசாயஞ் (ளுயனெல யபசiஉரடவரசந) செய்த பெண் தலைமைத்துவத்துவத்தின் முயற்சியினால் கிராமமே மின்சார இணைப்பைப் பெற்றதுடன் ஒவ்வொரு வீட்டிலும் பலவகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு முழு கிராமமுமே பசுமையான மனைகளை கொண்டு தமது உணவுத்தேவையின் ஒருபங்கினை மனைத்தோட்டங்கள் மூலம் பூர்த்தி செய்வதும் தேவையான ஊட்டச்சத்தை பெற வழிவகுத்திருப்பதனையும் தற்போதும் காணலாம். வாழவழிசெய்யும் திட்டங்கள் தொடர்ந்தும் அவர்களுக்க அனுசரணையாக இருக்குமாயின் பெண்களின் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாயிருக்கலாம். பெண்களின் ஆரோக்கியம் முழுமையான குடும்பதினதும் சமூகத்தினதும் ஆரோக்கியமாகும். நஞ்சற்ற தன்னிறைவான உணவுற்பத்தியை சமூக ஆரோக்கியத்தின் அடிப்படையும் அதனது மேம்பாடும் என உணர்ந்து கொண்டால் அவரவர் உணவுற்பத்தியில் கணிசமான அளவை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்.
"30 March: World Day of Zero waste"
This article describes the celebration of World Day of Zero Waste on 30th of March, declared by the United Nations. It further explains the types of waste and their recycling using various methods.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
மார்ச்சு மாதம் 30ம் திகதியை உலக பூச்சியக்கழிவு தினமாக ( World Day of Zero Waste) ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் கழிவுகளேதுமற்ற தினமாக கொண்டாடப்படுகின்றது. நாம் பயன்படுத்தியது போக அனைத்துமே கழிவாக மாற்றப்படுகின்றது. தேவைக்கதிகமென்பதால் நல்லவைகளும் கழிவுகளாக மாற்றப்படுகின்றன. ஆனால் அதற்கு தேவை இன்னொரு இடத்தில் இருக்கும். உணவாக உற்பத்தி செய்யப்பட்டவை சமனாக பகிரப்படாததனால் இந்த நிலை. கழிவுகளை மீள்சுழற்சி செய்தால் எமக்கு தேவையான அநேகமான உள்ளீடுகளை பெறுவதற்கு வாய்ப்புக்களுண்டு.
கழிவுகளில் பலவகைகள் உண்டு. திண்ம, திரவ, சேதன, பாதகமான மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் என்பன இதிலடங்கும். இக்கழிவுகளுள் குறிப்பிட்ட சதவீதத்தைத் தவிர எனைய அனைத்தும் மீள்சுழற்சி செய்யக்கூடியன. கழிவுகளை வெறுமனே அவற்றிற்கு பெறுமதி இல்லையென்று தவிர்த்து விடுவதனை விட அவற்றை இன்னொரு பொருளாக்கக்கூடிய பெறுமதி மிக்கதாக மாற்றிவிடும் புத்தாக்கங்கள் அவசியம் தேவை. மீள்சுழற்சி செய்வது மீளுருவாக்கஞ் செய்வது வேறொரு பொருளாக உருவாக்குவது என்பன இதிலடங்கும்.
விவசாயத்தில் கழிவென்று வரும் பொருட்களை இன்னொன்றின் உற்பத்திக்கு உள்ளீடாக பயன்படுத்தினால் அனைத்தும் பெறுமதி மிக்கதாக மாறிவிடும். விவசாயசெய்கை என்பது மீள்சுழற்சி (சுநஉலஉடiபெ) வட்டமாகவே கணிக்கப்படல் வேண்டும். இயற்கையாக கிடைக்கின்ற வளங்களை வைத்தே விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உற்பத்தியதிகரிப்பு என்னும் போர்வையில் அசேதன உள்ளீடுகள் உள்வாங்கப்பட்ட காலத்திலிருந்த விவசாய செய்கையில் மாற்றங்களும் பாதிப்புக்களும் ஏற்படத் தொடங்கிவிட்டன. மீள்சுழற்சி என்பதுவும் கேள்விக்குறியாகி விட்டது.
விவசாய செய்கையில் பயன்படுத்தப்படும் விதைகள், நடுகைப்பொருட்களுடன் உள்ளீடுகளாக சேதனப்பசனைகளே பயன்பாட்டிலிருந்தன. இப்போதும் பலவிவசாயிகள் சேதனப்பசளைகளையே பயிர்களுக்கு உள்ளீடாக பயன்படுத்துவதுடன் விளைச்சலாக பெறப்பட்ட இலைகள், தானியங்கள், காய்கள், கனிகள் என்பனவற்றை விட பயிர்மீதிகள் விலங்குணவாக பயன்படுத்தப்படுகின்றன. விலங்குணவாக பயன்பட்டவை போக மீதியானவை சேதனப் பசளையாக மாற்றப்படுகின்றன.
சேதனப் பசளையாக மாற்றுவதில் மண்புழு தொழினுட்பம் கைகொடுக்கும். தேவைக்கேற்றளவில் சமையலறைக் கழிவு வயற்கழிவுகளை மண்புழுக்களின் உதவியுடன் மண்புழுஉரமாக மாற்றப்படும். மண்புழு உரத்திலிருந்து மண்புழு திரவம் மற்றும் மண்புழுஉரதேநீரும் பெறப்படும். இவ்வாறான வழிகளில் சேதன உரங்கள் தயாரிக்க முடியும். இவற்றுடன் கால்நடைகளின் சிறுநீர் (குறிப்பாக மாட்டுசிறுநீ;ர்) குறிப்பிட்ட நாட்களில் நொதிக்க வைத்து அவற்றை தழைச்சத்துக்கு ஈடாக பயன்படுத்த முடியும்;. மிளகாய் செய்கையாளர்கள் இவ்வாறு நொதித்த மாட்டு சிறுநீரை நேரடியாக இலைகளுக்கு விசுறுதல் ஆகாது என்பதனால் அதனை நீரில் ஐதாக்கி (ஒரு லிற்றரை பத்து லிற்றர் நீரில் கலந்து) மிளகாய் பயிர்களுக்கு விசிறுவர். இதனால் மிளகாயில் சேதத்தை உண்டுபண்ணும் பனிப்பூச்சிகளை இலகுவாக கட்டுப்படுத்திவிடலாம். தற்போது உஷ்ணகாலமாகையால் மிளகாய் செய்கையில் உள்ளவர்களுக்கு பனிப்பூச்சியின் தாக்கம் மிளகாய் பெருத்து வளர்வதனை பாதிக்கும். பனிப்பூச்சியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்;டால் மிளகாய்செய்கை பாதிப்படையவும் வாய்ப்புண்டு.
மனைகளில் தொழில் செய்யும் இடங்களில் உருவாகும் சேதன கழிவுளை மண்புழுக்களைப் பயன்படுத்தியும் கறுப்பு சிப்பாய் இலையானை ( டீடயஉம ளழடனநைச கடல) பயன்படுத்தியும் சேதன பசளையாக மாற்றிக் கொள்ளலாம். இவற்றை விட பலவகை நன்மைதரும் நுண்ணங்கிகளையும் பயன்படுத்தி அதாவது வினைத்திறனான நுண்ணங்கிகளை (நுககநஉவiஎந அiஉசழழசபயnளைஅள) பயன்படுத்தியும் சேதன பசளையக்கிக் கொள்ளலாம். இவற்றை விட சேதன பொருட்களை உக்கி மக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ரைக்கோடேர்மா பூஞ்சணத்தையும் வளர்த்து சேதன பசளையுடன் கலந்து பயிர்களுக்கு இடலாம். இவற்றைவிட கிடைக்கின்ற கழிவுகளிலிருந்து வளர்க்கப்படும் நன்மைதரும் பூஞ்சணங்கள் அல்காக்கள் என்பனவற்றையும் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த முடியும்.
கால்நடைகளிலிருந்து பெறப்படும் சாணம் மற்றும் அவற்றின் மீதிகள் கழிவுகள் என்பன மண்புழு மற்றும் கறுப்பு சிப்பாய் இலையான் என்பனவற்றை வளர்ப்பதற்கான சிறந்த ஊடகமாக பயன்படுத்துகின்றனர் . ஆக திண்ம கழிவுகளை மீள்சுழற்சி செய்வது இலகுவானதாகவும் அவற்றை சிறந்த பசளையாகவும் பயன்படுத்த முடியும். திரவ கழிவுகள் வைத்தியசாலை கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிகளுள் மீள்சுழற்சி செய்யப்பட முடியாதனவற்றை முறையாக பாதுகாப்பாக அகற்ற வேண்டும் அல்லது அவற்றை இடுபொருளாக பயன்படுத்தி வேறுபொருட்டளை உருவாக்க முயற்சிசெய்தல் வேண்டும். மாணவர்களை இளையவர்களை இத்தகைய புத்தாக்க கண்டுபிடிப்புக்களுக்கு ஊக்குவிக்கலாம்.
நகர்ப்புறக் கழிவுகளை முறையாக மீள்சுழற்சி செய்வதற்கான அணுகுமுறைகள் பல இருந்தும் பலநகரங்களில் இவ்வாறான கழிவுகளை இயற்கை பிரிந்தழிதல் மூலம் சேதனஉரமாக மாற்றும் செயன்முறைகள் நடைபெற்று வருகின்றன. நகர்ப்புற கழிவுகளில் 85 சதவீதம் சேதனகழிவாகவே இருக்கின்றது. வினைத்திறனான வகையில் தரம்பிரித்து அவற்றை முறையான நடைமுறைகளுக்கூடாக சேதன பசளைகளாக மாற்றும் செயற்றிட்டங்களை உள்ளீர்க்க வேண்டும். நுண்ணுய்pர்களை பயன்படுத்தி சேதன கழிவுகளாக மாற்றுதல் பயனுள்ளதாக அமையும். நகர்ப்புற கழிவுகளி;ல் மனைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை மனைகளிலேயே மீ;ள்சுழற்சி செய்தல் சிறந்ததாகும். நகர்ப்புற தோட்டங்கள் அமைக்கும் போது இவ்வாறான சேதனகழிவுகளை உருவாக்குதல் சிறந்த தோட்டங்களை உருவாக்க வாய்ப்பளிக்கும்.
பாதகமான கழிவுகளை அவற்றின் நஞ்சுத்தன்மையை முறையாக அகற்றி அவற்றை எந்த உயிரினத்திற்கும் பாதிப்பில்லாதவாறு அகற்றிவிடல் வேண்டும். இந்த நடைமுறை ஒவ்வொரு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கமைய நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் அணுக்கழிவுகளை யூரோனிய கழிவுகளை கடலில் கொட்டும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால் கடலில் காணப்படும் உயிரினங்களுக்கு பாதிப்பு நிச்சயமாக உண்டாகும். இவற்றுக்கும் மேலாக வளர்ந்த நாடுகளில் உலகசந்தையில் பொருட்களின் விலை குறைந்து விடாதிருக்க உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களையும் கடலில் கொட்டும் நிகழ்வுகளுமுண்டு.
இவையெல்லாவற்றையும் தாண்டி தற்போது அதிகரிக்கும் இலத்திரனியல் கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதில் பயன்படுத்தப்படும் உலோகங்களை வேறுபிரித்தெடுத்து மீள்சுழற்சிசெய்கின்றனர். இருப்பினும் மீள்சுழற்சிக்குட்படாத கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்படுகின்றன.
"Initiatives to cultivate Soya bean in Northern Province"
This article describes the initiatives taken by the Faculties of Agriculture of the University of Peradeniya and the University of Jaffna with the Department of Agriculture in Northern Province and the discussion held in the Faculty of Agriculture at Ariviyal Nagar is described below
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இன்று இச்செய்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்திலிருந்து வருகின்றது. சாவகச்சேரியின் மைந்தனும் அமெரிக்காவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் சிவா சிவானந்தன் அவர்களின் தலைமையில் பேராதனை பல்கலைக்கழக முன்னைநாள் துணைவேந்தரும் மகப்பேற்றியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பேராசிரியர் லமாவன்ச இவர்களுடன் விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் nஐயவர்த்தன, முன்னைநாள் பீடாதிபதி பேராசிரியர் சரத் கொடித்துவக்கு மற்றும் பேராசிரியர் பெனரகம ஆகியோருடன் விவசாய பீடத்தின் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தருடனான கலந்துரையாடலில் இக்குழு ஈடுபட்ட பின்னர் விவசாய பீடத்தில் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
வடபகுதியில் சோயா அவரை உற்பத்தியை விவசாய திணைக்களத்துடனிணைந்து மீண்டும் ஆரம்பிப்பது பற்றியும் வறுமைக்கோட்டிலிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமூக தோட்டங்களை உருவாக்குவது பற்றியுமான கலந்துரையாடலாக இது அமைந்தது. பலநாடுகளில் சோயா உற்பத்தி முன்னிலைப்படுத்தப்பட்டு அதிலிருந்து பலவகை மதிப்பேற்றஞ் செய்த பொருட்கள் உருவாக்கப்படுவதும் அது சோயா வர்த்தகத்தில் முதன்மைபெற்றதும் அதுபோல வடபகுதியிலும் இப்பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கும் வழிவகைகள் ஆய்வுசெய்யப்படுகின்றன.
சோயா அவரை ஒரு காலத்தில் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு பின்னர் அதன் வேர்களில் அதிகளவில் தழைச்சத்தை பதிக்கும் வேர்முடிச்சுக்கள் உருவாவது குறைவடைந்ததால் இன்னும் பலவீனமானதால் இச்செய்கை பாதிக்கப்பட்டு விவசாய பெருமக்கள் மாற்று பயிர்களை பயிரிடவேண்டியதாயிற்று. வேர்முடிச்சுக்களை சோயா அவரை பயிர்களில் உருவாக்குவதற்கு தேவையான குறிப்பிட்ட றைசோபியம் எனும் பக்ரீறியாவின் விருத்தி மண்ணில் போதுமானதாக இல்லாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தற்போது மீண்டும் சோயா அவரையை பயிர்செய்வதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் அதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான ஆராய்ச்சிகளைச் செய்து இப்பயிர்ச்செய்கையை விரிவாக்க விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சோயா அவரை அதிகளவில் புரதச்சத்துடைய தானியப்பயிர். வளியிலுள்ள தழைச்சத்தை வேரில் இணையும் றைசோபியம் பக்ரீறியாவுடன் சேர்ந்து வேர்முடிச்சுக்களாக உருவாக்குவதனால் இப்பயிருக்கு தழைச்சத்து இடுவது மீதமாகும். அத்துடன் இது ஒரு அவரைப்பயிராக இருப்பதனால் மண்ணை வளமாக்கும் தன்மையுடையதுடன் நன்றாக வளரும் பட்சத்தில் அதிகமான விளைச்சலையும் தரக்கூடியது. சோயா அவரைப் பயிரை வளர்க்கக்கூடிய மண்வகைகள் ஆராயப்பட்டு அதற்குத் தேவையான நீர் என்பனவும் கணிப்பிடப்படல் வேண்டும். உலர்வலைய பிரதேசமான வடபகுதியில் சோயாஅவரைப் பயிர் சிறப்பாக வளரக்கூடியதாக காணப்பட்டால் அது நிச்சயம் எமது விவசாயிகளுக்கான வரப்பிரசாதமாகவும் மக்களுக்கு அதிக வருமானத்தையும் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.
புகையிலை செய்கையாளர்களுக்கு மாற்றுப் பயிரை பரிந்துரைக்கும் நிலையில் வடபகுதி விவசாயம் தள்ளாடிய நேரத்தில் அவரைப் பயிராக மீண்டும் பலவகை பயிர்ச்செய்கை உத்திகளுடன் களமிறங்கும் இக்குழு நிச்சயமாக சோயா அவரைப் பயிர்ச்செய்கைக்கான அனுகூலங்கை ஆய்வுமூலம் ஆய்வு செய்து விவசாய திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
சோயா அவரை பயிர்செய்யப்பட்டால் அதிலிருந்து மக்களின் உணவுக்கான அதிகரித்த புரதமும், அதனை விட சிறந்த மதிப்பேற்றஞ்செய்த பொருட்களை விலைமலிவாக கிடைக்க செய்யவும் அதனை கால்நடை தீவனமாக குறிப்பாக கோழித்தீவன உற்பத்தியிலும் இன்னும் ஏனைய கால்நடைகளின் உணவுத்தேவையிலும் கணிசமான பங்களிக்கும். இதனுடன் சமபோஷ உற்பத்தியில் சோயா அவரையின் பங்கு மிகமிக அதிகமானதாகும். இதன் மூலம் சமபோஷ உற்பத்தியை அதிகரிக்கவும் அதன் மூலம் ஊட்டச்சத்து நலிவுற்ற மக்களுக்கு அடிப்படை ஆதார உணவாக இது பயன்படும் என்பதனையும் நாம் கவனிக்க தவறலாகாது.
சோயா பயிர்ச்செய்கையில் பீடைத்தாக்கங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. சோயா அவரைக்காய்களில் குத்தியுறுஞ்சும் வாயுறுப்புடைய பச்சைநிற சாறுஉறுஞ்சிகள (Green Stink bug);, மண்ணிற சாறுஉறுஞ்சிகள் (Sucking insects) அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் காய்துளைப்பானும் இன்னும் காயில் துளைபோடும் ஈயும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதிகரித்த வெய்யில் பயிர்வளர்ச்சிக்கு தடையாக காணப்பட்டாலும் வெப்பநிலையை முகாமைத்துவப்படுத்தும் பயிர்ச்செய்கை முறைகளை கடைப்பிடித்தால் இந்த தடையையும் தாண்டிவிடலாம். இவற்றை விட வடபகுதியில் முயலினாலான சேதம் மிகவும் அதிகம் என்பதனால் முயலை பொறிவைத்து பிடித்தும் அழிக்கலாம். சோயா பயிர்ச்செய்கை அதிகரித்தால் அறுவடைசெய்யப்படும் தானியங்களை அறுவடைக்கு பிந்திய தொழினுட்பங்களை பயன்படுத்தி பல்வகைப் பொருட்களை உருவாக்கிக் கொள்ளலாம். பலவகை மதிப்பேற்றஞ் செய்த பொருட்களின் உருவாக்கத்திற்கும் இதற்கான தொழிற்சாலைகள் உருவாகும் போது பலருக்கு அது வேலைவாய்ப்பினை வழங்கும்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பேராதனை பல்கலைக்கழகங்களிணைந்து அமெரிக்காவின் இலினொயிஸ் பல்கலைக்கழகத்துடனான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் ஆராயப்பட்;டன.
சமூக தோட்டங்களை (Community Gardens) உருவாக்குவதற்கான எண்ணக்கரு வறுமைக்கோட்டுக்கு கீழாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டது. தற்போதய பொருளாதார சரிவின் காரணமாக இவ்வாறான நிலையிலுள்ள மக்கள் வருமானமின்றி தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சிரமப்படுகின்றார்கள். இவர்களுக்கான வருமானத்தை வழங்கக்கூடிய சமூகத் தோட்டங்களை அவர்களது நிலத்தில் உருவாக்குவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வழிமுறைகளை வழங்குவதும் இக்கலந்துரையாடலின் இன்னொரு நோக்கமாகும். சூரிய சக்தியிலியங்கும் சாதனங்களை பயன்படுத்தும் தொழினுட்ப வழிமுறைக்கு இம்மக்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வழிகளை பொருளாதாரத்தால் நலிவுற்றிருக்கும் இந்நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பபடும் செயற்றிட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணித்து அவர்களின் வாழ்வியலை மேன்மையுற வைக்க வேண்டும். இதில் யாழ்ப்பாண மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் விவசாயபீட சமூகம் முழுமுயற்சியெடுக்கும்.
"Maggots multiply in kitchen wastes and become the poultry feed"
This article describes about the use of black soldier fly maggots to decompose the household wastes, and then the maggots become the feed for the chicks - an ideal household technique for backyard poultry
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
கோழிவளர்ப்பில் அதனது தீவனமாக எமது பிரதேசத்தில் பல்கிப்பெருகும் கறுப்பிலையான் புழுக்களை (Black soldier fly maggots) இலகுவில் வளர்த்து புழுக்களின் வௌ;வேறு அளவிலான பருவங்களை கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம். கோழிகள் விரும்பியுண்ணும் பூச்சிகளின் வகைகளுள் அடங்குவதனாலும் முட்டைக்கோழிகளுக்கும் இறைச்சிக் கோழிகளுக்கும் அவற்றின் தீவனத்தில் கலந்தோ அல்லது தனியாகவோ கொடுக்கலாம். இப்புழுக்களை உண்ணுவதனால் கோழிகளின் உடல் பருமன் அதிகரிப்பதோடு முட்டையிடுவதனை தூண்டுவதாகவும் இவ்வுணவு அமையும். கொல்லைப்புற கோழிவளர்ப்பில் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக இவ்வகை கறுப்பிலையான் புழுக்கள் பயன்படுகின்றன. இதற்காக தனித்துவமான கூடுகளையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் நகரப்புறங்களில் இருக்கின்ற குறுகிய இடவசதியில் இப்புழுக்களை வளர்த்து கோழிக்குஞ்சுகளுக்கும் வளர்ந்த கோழிகளுக்கும் உணவாகக் கொடுக்கலாம்.
கறுப்பிலையான் புழுக்கள் விரைந்து பெருகும் தன்மையுடையவை. அத்துடன் இவ்விலையான் எம்மூரில் காணப்படும் பூச்சி வகைகளுள் ஒன்றாகும். இதனைத்தேடி நாம் அலைய வேண்டியதில்லை. சேதனக்கழிவொன்று அழுகும் போது இவ்விலையான் தேடிவந்து அதன் மேல் முட்டையிட்டு செல்லும். பருமனில் சற்று பெரியதான இவ்விலையானைப் பற்றி இன்னும் சற்று அறிந்து கொண்டால் அதனது வருகையையும்அது முட்டையிட்டு, முட்டைகள் பொரிந்து வரும் புழுக்களையும் இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம்.
பழவகைகளின் கழிவுகளை அதிகம் விரும்பி பெருகும் இப்புழுக்கள் பலாப்பழ சக்கையை (பலாச்சுளை அகற்றியபின்புள்ள கழிவு) விரும்பி உண்ணுவதனையும் அதில் பல்கிப் பெருகுவதனையும் அவதானிக்கலாம். எந்தவிதமான கொள்கலனிலும் இப்புழுக்களை இலகுவாக வளர்க்கலாம். அழுகும் நிலையிலுள்ள சேதனக் கழிவுகளை விரும்பி வந்து இவ்விலையான்கள் முட்டையிடுவதனால் இவற்றினை தேடித்திரிய தேவையில்லை. சேதனக் கழிவு அழுகும்போது வெளிவரும் மணத்திற்கு இவ்விலையான்கள் கவரப்பட்டு அவற்றில் முட்டையிடுவதனை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. இக்கறுப்பிலையானின் கால்களின் நுனிப்பகுதியில் வெண்மைநிறம் காணப்படுவதனால் இதனை இலகுவில் அடையாளம் கண்டுவிடமுடியும். எந்த விதமான பாதிப்பினையும் மனிதருக்கு ஏற்படுத்தாத இக்கறுப்பிலையான் நல்லதொரு கழிவு உக்கவைக்கும் உயிரினமாகும்.
சாதாரணமாக வீட்டில் உருவாகும் சேதனக் கழிவுகளான சமையலைக் கழிவுகள் குறிப்பாக மரக்கறிக் கழிவுகள் பழங்களின் தோல் மற்றும் உணவுக்கு பயன்படுத்தாத பாகங்கள் சற்று அழுகலடையும் போது இவ்வகை புழுக்கள் அதில் பெருகுவதனை காணலாம். இப்புழுக்கள் பெருகலடையும் போது எந்தவித துர்மணமும் உருவாகாது அதனுடன் வேறு துர்மணத்தை உருவாகக்கூடிய புழுக்களும் இதில் பெருகாது. இதனால் நாம் புழுக்களை வளர்க்கும் போது துர்நாற்றம் எங்குமே வீசாது.
இலையானின் தனித்துவத்தை அறிந்து கொண்டால் இவற்றை வளர்ப்பது சுலபமாகிவிடும். சிறிய இடைவெளிகளில் இவ்விலையான் முட்டையிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றது. கொத்தாக இடப்படும் முட்டைகள் பாதுகாப்பாக உள்ள இடைவெளிகளில் பொரித்து புழுக்கள் வெளிவந்து அழுகும் உணவினுள் விழும். புழுக்களின் வளர்ச்சி அபிரிமிதமானதாக இருக்கும். அதற்கு காரணம் அவை உணவாக்கும் சத்துமிக்க பொருட்களாகும். புழுக்கள் வளர்ந்து கூட்டுப்புழுவானதும் கருமைநிறமாக மாறிவிடும். இதனை பொதுவாக கோழிகள் உணவாக கொள்வதில்லை. இறுக்கமான வன்கோதினை கொண்டிருப்பதனால் கோழிகள் விரும்பியுண்ணாது. இப்புழுக்களை சிறிய அளவிலிருந்து வளர்த்து கோழிகளுக்கு வழங்கலாம். புழுக்களை வழங்கும் போது அதற்கான தீவனத்தின் அளவைக் குறைத்து பின்னர் படிப்படியாக அவற்றின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.
இதுவொரு கழிவுமுகாமைத்துவம் மட்டுமல்ல கழிவிலிருந்து கோழிகளுக்கான நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்புக்கான தீவனத்தை உற்பத்தி செய்வதான கழிவினை மீள்சுழற்சி செய்து மதிப்பேற்றும் தொழினுட்பமாக அமைகின்றது. தீவனத்திற்கான தட்டுப்பாட்டை விரைந்து நிவர்த்தி செய்வதற்கு பொருத்தமான அதிகம் செலவில்லாமல் உற்பத்தி செய்வதற்கான வழிமுறையாகக் கொள்ளலாம். சேதனக் கழிவுகளை உரிய முறையில் மீள்சுழற்சி செய்தால் அவற்றிலிருந்து இவ்வாறான விலங்குகளுக்கான தீவனங்களை பெறுவதோடு கழிவுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதும் இலகுவாகிவிடும்.
எமது பிரதேசத்தில் இயற்கையாகவே பல்கிப்பெருகும் வாய்ப்புடைய இவ்வாறான கறுப்பிலையான்கள் உணவாக எதனையும் உண்பதில்லை என்பதனால் இவ்விலையான்களிலிருந்து எமக்கு எந்தவித தொற்றுக்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எமது சூழல் தொகுதியில் காணப்படும் நன்மைதரும் இவ்வாறான பூச்சியினங்கள் எமக்கு கழிவுமுகாமைத்துவத்தில் உதவுவதுடன் எமது வீடுகளில் உருவாகும் கழிவுகளை உக்கவைத்து அவற்றில் இப்புழுக்களை வளர்த்து கோழிகளுக்கு உணவாக இடமுடியும்.
சேதனக் கழிவுகளில் தாவரக்கழிவுகளை மட்டுமல்லாது விலங்குக்கழிவுகளையும் இவை உணவாகக் கொள்ளும் திறனுடையவை. மீன்களின் கழிவுகள் மற்றும் இறைச்சிகழிவுகள் என்பனவும் இப்புழுக்களால் உணவாகக் கொள்ள முடியும். அதன் மூலம் சாதாரணமாக வீடுகளிலேயே இக்கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் வண்ணம் இவ்வகைப் புழுக்களை வளரவிட்டு அவற்றை வளரும் கோழிகளுக்கு உணவாக்கிக் கொள்ளலாம். இதில் குறிப்பிடத்தக்க விடயமெனில் இப்புழுக்கள் வளர ஆரம்பித்த அழுகலடையும் சேதனக் கழிவில் வேறெந்தவகை இலையான்களும் முட்டையிடாது. இதனால் தனித்துவமாகவே இவ்வகை கறுப்பிலையான் புழுக்கள் வளர்வதனை அவதானிக்கலாம். இவ்வகை புழுக்களை வளர்க்கும் தொழினுட்பத்தை பெண்களுக்கு கற்பிப்பதன் மூலம் வருமானந்தரும் தொழிற்றுறையாக மாற்றும் வழிவகைகள் பலவுண்டு. வீட்டிலிருந்தவாறே கறுப்பிலையானை வளர்த்து அதனை தானியங்களுடன் கலந்து உள்ளூர் கோழித்தீவனத்தை உருவாக்கி அதனை தொழிற்றுறையாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறான வருமானந்தரும் தொழிற்றுறையை விரிவாக்குவது எம்மவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செயது குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்;.
கழிவு முகாமைத்துவம் பலவழிகளில் செய்ய வாய்ப்பிருந்தாலும் நகர்ப்புறங்களில் இச்சேதனக் கழிவுகளை தெருவில் வீசிச்செல்லும் பழக்கம் இன்னமும் அருகவேயில்லை. எமது வீடுகளில் பெருகும் சேதனக் கழிவுகளை உள்ளீடாக்கி இவ்வகை புழுக்களை பெருக்கி தீவனத்தை உருவாக்குவதோடு வருமானத்தையும் பெறமுடியும்.
"Pests and Diseases of Aloe vera and their management"
This article describes the problems encountered by the growers of Aloe vera especially the pests and diseases and their management"
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எம்மவர் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகளுள் மூலிகைப் பயிர்ச்செய்கை முக்கியமானதாக கருதப்படுகின்றது. வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட தாவரங்களை பரந்த நிலப்பரப்பில் பயிர்செய் நிலங்களில் இன்னும் சாடிகளில் பொலித்தீன் பைகளில் வளர்த்து அவற்றிலிருந்து வருவாயை பெறும் வாய்ப்புக்களை மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற அதே வேளையில் பலருக்கு இதன் மூலம் வருமானமும் கிடைத்திருக்;கின்றது. அத்துடன் எமது பிரதேசத்திலுள்ள மூலிகைகளை வர்த்தகரீதியில் வளர்த்து அதனை பயன்படுத்தும் நோக்கில் தற்போது பல மூலிகைப் பயிர்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் மூலிகைத்தாவரங்களுள் பிள்ளைக் கற்றாளையும் (யுடழந எநசய) ஒன்றாகும்.
வாழ்வாதாரத்தை வளர்த்தெடுக்கும் நிறுவனமொன்றின் தகவலுக்கமைய பிள்ளைக் கற்றாளை வளர்க்கப்படும் நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள வயலும் வயல்சார்ந்த வனப்பகுதியை செப்பனிட்டு; ஏறக்குறைய 500 பிள்ளைக் கற்றாளை தாவரங்கள் பிளாஸ்ரிக் பைகளில் வளர்க்கப்படுகின்ற இடத்தில் பலவற்றில் இலைப்பகுதியில் அழுகல் ஏற்பட்டு தாவரங்களில் வாடல்நோயேற்பட்டதை கடந்த வாரம் அவதானிக்க முடிந்தது. அறுவடைக்கு தயாரான நிலையில் இலைகளில் இவ்வாறு அழுகல் ஏற்பட்டதனால் பிள்ளைக் கற்றாளையிலிருந்து எந்தவித பயனையும் பெறமுடியாமல் போயிருக்கின்றது.
வருவாய் கைக்கெட்டிய நேரத்தில் இவ்வாறான அழுகல் நோயேற்பட்டுள்ளதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு விவசாய உயிரியல் துறையை அணுகியுள்ளனர். இவ்வாறு பலர் தற்போது பிள்ளைக் கற்றாளையில் முதலிட்டு பெரியளவில் நடுகை செய்திருக்கின்றனர் எனவும் அறியமுடிந்தது. ஆனால் பலரது பிள்ளைக் கற்றாளையில் இலையழுகல் ஏற்பட்டுள்ளதோடு தாவரத்தினடியில் இந்த அழுகல் காணப்படுவதனாலும் தாவரம் முற்றிலுமாக சோபையிழந்து வாடுவதனை அவதானிக்க முடிந்தது. இலையழுகளல் அடிப்பகுதியிலும் இடைப்பகுதியிலும் காணப்படுகின்றது. இதனால் இலைகள் சேதமடைந்து அழுகி துர்நாற்றமும் வீசத்தொடங்கியிருக்கின்றது.
பிள்ளைக் கற்றாளையில் இலைதான் முக்கியமான சந்தைப்படுத்தப்படும் பாகமாகும். இவ்விலையை தாழ் எனவும் கூறுவர். இவ்வாறான இலை விரிந்து பருத்து அதிகளவில் 'ஜெல்' (புநட) எனப்படும் சதைப்பொருள் அடங்கியிருந்தால் இலையும் சீரானதாக காயமின்றி கீறலின்றி வேறுஏதும் சேதமின்றி சிறந்ததாக பச்சையாக இருந்தால் அதற்கான விலை அதிகம். மேற்கூறிய தாக்கங்கள் இவ்விலையில் காணப்படும் போது அதற்கான கேள்வி குறைவடைந்து வாங்குபவர்களும் அதனை தவிர்க்கும் நிலை காணப்படுகின்றது. ஆக இங்கே தரம் என்பது சிறந்த சேதமேதுமற்ற இலையிலேயே தங்கியிருக்கின்றது. ஆனால் மூலிகைப்பயிரென்றாலும் அதனை நாம் வர்த்தக ரீதியில் வளர்க்க முனையும் போது நோய் மற்றும் பீடைகள் வந்தேறிவிடுகின்றன. வீட்டில் சாடிகளில் ஓரிரு தாவரங்கள் வளர்ந்திருக்கும் போது அதிலும் கவனிப்பின்றி வளர்ந்திருப்பவை நன்றாக சிறப்பானதாக தரமானதாக இருப்பதனை அனைவரும் அவதானித்திருக்கின்றனர் ஆனால் வர்த்தக ரீதியில் வளர்க்க முனையும் போது பிரச்சனைகளும் வந்துவிடுகின்றன. அவ்வாறான பிரச்சனையை பிள்ளைக்கற்றாளை வளர்ப்பிலும் ஏற்பட்டிருக்கின்றது. பிள்ளைக் கற்றாளை வளர்ப்பவர்களின் நலன்கருதி அவை பற்றிய விளக்கங்களும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது அல்லது முகாமைத்துதவப்படுத்துவது என்பன பற்றி மேற்கொண்டு இக்கட்டுரை விளக்குகின்றது.
பிள்ளைக் கற்றாளை ஒரு சதைப்பிடிப்பான மூலிகைத் தாவரம். கரையோர பிரதேசங்களில் மணற்பாங்கான நிலத்திலும் கல்லுப் பூமியிலும் இவை வளர்வதனை அவதானிக்கலாம். கடற்கரைப் பிரதேசத்தில் சிறப்பாக வளரக்கூடிய இத்தாவரத்தின் வேர்த்தொகுதி விரைந்து நீரை அகத்துறுஞ்சும் தன்மையுடையது. ஆனாலும் தேவையானளவு நீரை மட்டும் அகத்துறுஞ்சும் ஆதலால் நீர் அதிகமாக இருந்தால் வேர்த்தொகுதியை வெகுவாக பாதிக்கும். நீர் அதிகமாக தேங்கினால் அது பிள்ளைக் கற்றாளை தாவரத்திற்கு ஏதுவானதாக இருக்காது. அதனால் அதிகம் மழைகாலங்களி;ல் இன்னும் நீர்தேங்குமிடங்களில் பிள்ளைக்கற்றாளை வளர்க்கக்கூடாது.
பிள்ளைக்கற்றாளையில் பின்வரும் நோய்பீடைத்தாக்கங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
1. பக்ரீறிய இலையழுகல் நோய்; : இந்நோயை ஒருவகை டிக்கேயா கிறைசாந்தெமி எனப்படும்; ( னுiஉமநலய உhசலளயவொநஅi ) பக்ரீறியா ஏற்படுத்துகின்றது. இந்நோயை ஏற்படுத்தும் பக்ரீறியா வெறுமனே தாவரத்தின் உள்ளே தானாக சென்றுவிடும் திறனற்றது. அதனால் இவற்றின் உட்புகுதலுக்கு தாவரப்பாகத்தில் காயமோ கீறலோ அல்லது உரசலோ ஏற்பட்டால் அதனூடாக இவ்வாறான பக்ரீறியாக்கள் உட்புகுந்து விரைந்து பெருகத்தொடங்கிவிடும். பக்ரீறியா உட்புகலோடு அந்த இடத்தில் விரைந்து பெருகி தாவரம் முழுவதும் பெருகிவிடும். இவ்வாறு பரவத்தொடங்கிவிட்டால் பின்னர் நோய் பரவலைக் தடுக்க முடியாது. அழுகிவரும் பாகங்களிலிருந்து பக்ரீறியா கலங்கள் வெளிவந்து நீருடன் பரவ ஆரம்பித்துவிடும். வயலும் வயல்சார்ந்த இடமாதலால் இவ்வாறான இடங்களில் நீரதிகம் காணப்படுவதனால் பொலித்தீனிலுள்ள துளைகளூடாக மேல்நோக்கி நீர்வர வாய்ப்புக்களும் உண்டு. இதனால் வேர்த்தொகுதி பாதிக்கப்பட்டு தாவரம் வாடல் நிலைக்கு சென்றுவிடும். இவ்வாறான பிரச்சனையுள்ள இடங்களில் 'வரம்பும் வாய்க்காலும்' (சுனைபந யனெ கரசசழற) என்னும் உத்தியை பயன்படுத்தலாம். மாறாக அதிக நீர்த்தன்மை உள்ள இடங்களில் இவ்வாறான பயிர்ச்செய்கையை செய்வதனை தவிர்ப்பது என்றும் நல்லது. காலநிலை மாறி மழைவீழ்ச்சி பெப்ருவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் பெய்வது உகந்ததும் இல்லை. நிலம்பார்த்து பயிர்செய் என்பது இதனை மையப்படுத்திதான். பக்ரீறியா அழுகலுடன் வாடல் பரவத்தொடங்கினால் கட்டுப்படுத்துவது கடினம்;. அழுகலுக்குள்ளான பாகங்களை வெட்டியகற்றி அவற்றை ஆழகிடங்கினுள் போட்டு மூடிவிடுதல் நல்லது. நீரோட்டத்தில் பக்ரீறியா பரவுகின்ற காரணத்தினால் தொடர்ந்து நீர்ப்பகுதியான இடங்களை தவிர்த்து பிள்ளைக்கற்றாளை தாவரகொள்கலன்களை மாற்றி வைத்தல் நன்று.
2. இலைப்புள்ளி மற்றும் நுனிவெளிறல்
பிள்ளைக் கற்றாளையில் இலைப்புள்ளி மற்றும் நுனிவெளிறல் ஏற்படுவதற்கு லசியோடேர்மா எனப்படும் பூஞ்சணம் காரணமாகும். குறிப்பாக இலையில் புள்ளிகள் ஏற்படுவதும் இலைநுனியில் வெளிறல் ஏற்படுவதனாலும்; இலையின் தரம் குறைந்து விடுகின்றதுடன் நுகர்வோர் அதனை வாங்குவதில் பின்னிற்கின்றனர். நோய்கண்ட இலைகளை வெட்டியகற்றுவது நல்லது. மூலிகைத் தாவரமாதலால் கிருமிநாசினி பிரயோகிப்பதில் அவசியம் கவனம் தேவை. இயன்றளவு பீடைநாசினிகளை தவிர்ப்பது நல்லது.
3. இலைகள் மஞ்சளாதல்
சத்துக்குறைபாடு காணப்பட்டால் இலைகள் மஞ்சளடையத் தொடங்கிவிடும். நைதரசனின் குறைபாடு இலைகள் மஞ்சளடைவதற்கு காரணமாகும். தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை அதுவும் நன்றாக உக்கிய ஏருவாக போடுதல் வேண்டும். எருவுடன் மண்புழுஉரம் மற்றும் மற்றும் கூட்டெருவை பயன்படுத்தலாம்.
தேவையான கூட்டெருவிட்டு மணல் மண்கலந்து நீர் இலகுவில் வடிந்தோடும் தன்மையில் மண்ணை தயார்ப்படுத்தி கொள்கலனினுள் பிள்ளைக்கற்றாளையை வளர்ககலாம்..
"AGRITECH 2025 and Japanees Grant"
This article describes the the continuation of the AGRITECH 2025 and the Grant Received from Japan
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
விவசாய பெருமக்களின் விவசாயஞ்சார் தொழிற்றுறை எதிர்நோக்கும் சவால்களையும் தெரியப்படுத்தி அவற்றுக்கான தீர்வுகள் பற்றி பிரஸ்தாபித்த விவசாய தொழினுட்பம் 2025 இனது முதலாம் பாகம் கடந்த புதன்கிழமை வெளியானதன் தொடர்ச்சியை இங்கு தருகின்றோம். பிரச்சனைகள் அனைத்தும் அநேகமான மக்கள் எதிர்நோக்குபவையாகவும் இருப்பதனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ள சுருக்கி தருக்கின்றோம்.
நெல் அறுவடை இயந்திரமான கொம்பைன்ட் அருவிவெட்டியைப் பயன்படுத்தும் போது அதிக இழப்புக்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை பரிசோதிப்பதற்கான தொழினுட்ப நிபுணத்துவம் தேவை என கூறப்பட்டது. ஜபதில்ஸ இதனை கவனத்திலெடுப்பதென்றும் பரிசோதித்து அதன் வினைத்திறனை அதிகரிப்பதற்கான வழிவகைகளை செய்வதாக பதிலிறுத்தப்பட்டது.
வளங்குறைந்த மண்ணுள்ள பிரதேசத்தில் பயன்படுத்தக்கூடிய பேமாகல்ச்சர் என்னும் (Pநசஅயஉரடவரசந) இயற்கைவழியாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மண்ணினை வளப்படுத்துவதற்காக வழிவகைகள் பற்றிய தகவல்கள் அதிகமாக தேவை எனவும் வளங்குறைந்த மண்ணில் எவ்வாறு சிறந்த பயிர்ச்செய்கையை செய்யலாமெனவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஜபதில்ஸ இதனை ஆய்வுக்குட்படுத்தி மண்ணினை எவ்வாறு வளமான மண் ஆக மாற்றுவதென வினவப்பட்டது. இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வளமான மண்ணினை பெறுவதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டன.
பயிரின் நீர்த்தேவை பற்றியும் அதற்கான நீர்த்தேவை பற்றிய கணிப்பு நிலத்தின் பரப்பளவிலும் பயன்படுத்தும் பயிரிலும் தங்கியிருப்பதாகவும் பிரஸ்;தாபிக்கப்பட்டுள்ளது. இதில் பயிருக்கு பாய்ச்சப்படும் நீரின் தரம், நிலத்தடி நீர் மாசுறல் என்பன பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. ஜபதில்ஸ மெதுவாக வெளிவிடும் பசளைகளை (ளடழற சநடநயளந கநசவடைணைநச) பயன்படுத்தல் பற்றி கூறப்பட்டது. இதற்கும் மேலாக நுண்ணிய நீர்ப்பாச்சுதல் என்பது இதற்கு சாதாகமான முறையாகும். அதில் தூவல் நீர்ப்பாசனம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் போன்றனவற்றை பயன்படுத்தி நீரிழப்பை தடுக்கும் வழிவகைகள் பற்றி அறியப்பட்டுள்ளது. இவற்றுள் ஆய்வு செய்யவேண்டியவற்றிற்கு ஆய்வு செய்து அவற்றின் பயன்பாட்டை விளக்கப்படும்.
விலங்குகளினாலான சேதத்திற்காக குறிப்பாக யானைமூலமான சேதத்திற்கு வழிசெய்தல் வேண்டுமெனவும் ஏனைய விலங்குகளினாலான அழிவுகளை குறைப்பதற்கான வழிவகைகளை தரும்படி வினவப்பட்டது. இதற்கு விடையளித்த விவசாய விரிவாக்க பணிப்பாளர் ஜபதில்ஸ விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு வேலிகளை போடுவதற்காக திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றை நிர்மாணிப்பதற்காக ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்போது வவுனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கலாநிதி விஐயமோகன் அவர்களின் பரிந்துரையுடன் யானைகளுக்கான வேலியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் முன்னேற்றங் காணப்பட்டுள்ளது. குரங்குகளைக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமில்லை. மாதிரி புலியுருவம் பொறித்த டம்மி பொம்கைகளை பயன்படுத்துதல், இன்னும் விலங்குகளினாலான சேத்தை அவதானித்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் தகவல்கள் தருவதான கூறப்பட்டது.
காப்பெற் வீதிகளில் காயவிடப்படும் நெல்மணிகளில் சுகாதாரத்திற்கு கேடான தாதுப்பொருட்கள் செறிவடைவதாக குறிப்பிடப்பட்டது. ஜபதில்ஸ இதனை ஆய்வுக்குட்படுத்தி பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் இதுபற்றி கலந்துரையாடுவது நல்லது என கூறப்பட்டது.
இலங்கைல் தொழினுட்பத்தை உள்வாங்கியதில் பலவருட சாதனைகளுண்டு. அண்மையில் விவசாய நவீனமயப்படுத்தல் தொழினுட்பத்தை (யுபசiஉரடவரசந ஆழனநசnணையவழைn Pசழதநஉவ ) பற்றி வினாக்கள் எழுப்பப்பட்டன. இதில் சில தொழினுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபதில்ஸ குறிப்பாக மிளகாய்செய்கைக்காக பூச்சிபுகாத வலை பயன்படுத்தல் ஏற்புடையதல்ல என கூறப்பட்டது. இவ்வாறான தொழினுட்பங்களினை பயிர்ச்செய்கையில் தொடர்ந்தும் பயன்படுத்த கட்டுப்பாடுகள் தேவையென வலியுறுத்தப்பட்டு;ளளது.
கத்திரியில் இந்திய இனமான பெங்கோல் 704இனத்தின் உற்பத்தி செய்வதற்கான வழிவகைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. இவ்வினம் காய்துளைப்பானுக்கு எதிர்ப்புடைய இனமாகியதால் சிறந்ததாக கூறப்பட்டாலும் பக்ரீறியா வாடல் நோய்க்கு உட்படுவதனால்; இந்நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி வினவப்பட்டது;. ஜபதில்ஸ இவ்வினம் அதிக விளைச்சலை கொடுப்பதாலும் விவசாயிகள் காய்துளைப்பானுக்கான பூச்சிநாசினி தெளிக்காததாலும் சிறந்த இனமாக இனங்காணப்பட்டது. இதில் பக்ரீறியா வாடல்நோய்க்கு எதிர்ப்புடைய இனத்தை உருவாக்குவது பற்றியும் அதனை ஆய்வுக்கெடுத்து புதியஇனத்தை உருவாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டது. இது போல உழுந்தில் (ஆஐடீபு4) வைரசு மொசைக் நோயின் தாக்கம் குறைவாக இருப்பதனால் இதனை விவசாயிகள் அதிகமாக பரந்து பட்ட அளவில் பயிரிடுகின்றார்கள் ஆனால் இதனது விதையின் உருவம் மிகச்சிறியதாக இருப்பதனால் இதனை நுகர்வோர் அதிகமாக விரும்பி வாங்குவதில்லை என தெரிவித்தார்கள். வைரசு நோயற்ற அதிக பருமனுடைய உழுந்தை உருவாக்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் இந்திரா குழுமத்தின் நாற்று நடும் இயந்திரத்தின் மூலம் நெல்நாற்று நடுகைசெய்தலும் ட்ரோன்கள் மூலம் பீடைநாசினி விசிறலும் படமாக காண்பிக்கப்பட்டது. அனைத்து வினாக்களுக்கும் அவற்றிற்கான பதிகளுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றதுடன் இதில் அதிகளவில் மாணவர்கள் இணைந்து கொண்டதும் திட்டமிடலில் ஒழுங்மைப்பில் மாணவர்களின் பங்களிப்பு அதிகரித்தே காணப்பட்டது. இறுதியில் சமுதாய மேம்பாட்டு குழுவின் முதலாவது சஞ்சிகையான 'பசுமை ஒளி' யும் நிகழ்விற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஜப்பானிய நிறுவனமாக துஐஊயு வினால் விவசாய ஆராய்ச்சி க்காக ஆய்வு கூடம் மற்றும் பண்ணை ஸ்தாபித்ததிலிருந்து Pசுநுஊஐனுயு-ருழது என்னும் திட்டத்தினூடாக ஜப்பானிய பேராசிரியர்கள் இருவர் பேராசிரியர் கசுவா ஒகட்டோ (Pசழக ழுபயவய முயணரழ) மற்றும் பேராசிரியர் உசாமி கொய்ச்சி (Pசழக ருளயஅi முழiஉhi) அவர்கள் பீடத்தின் கல்விசார், ஆய்வுகள் பற்றி மற்றும் விரிவாக்கம் பற்றி பல தகவல்களையும் பல ஆலோசனைகளையும் எம்முடனேயே தங்கியிருந்து வழங்கி வருகின்றனர். அவ்வப்போது குறிப்பிட்ட சிலதொழினுட்ப பயிற்சிக்காக இம்முறை பேராசிரியர் கோகட்டா (Pசழக முழாயவய) அவர்கள் வருகைதந்து இழைய வளர்ப்பு பற்றி பயிற்சிகளை எமது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கி வருகின்றார். ஜப்பானிய பல்கலைக்கழகங்களிலிருந்தும் வளவாளர்கள் இங்கு வந்து எமக்கு தேவையான அறிவை, பயிற்சியை இன்னும் நிதியுதவியை வழங்கி பீடத்தின் நிலையை பலபடிகள் மேலுயர்த்தியுள்ளனர். இதற்காக நாமென்றும் ஜப்பானிய மக்களுக்கு கடமைப்பட்டவர்களாவோம். அவர்கள் நினைவில் இந்த பீடம் என்றும் தன்னால் முடிந்ததை இம்மக்களுக்காக செய்யும் என உறுதிபூணுகின்றோம்.
"AGRITECH 2025: The problems of the Farmers/Industries and Research Themes"
This article describes the highlight of the event AGRITECH 2025 and it describes the problems raised by the farming and industrial sectors and the selection of the theme for the undergraduate research
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
விவசாய பீடத்தின் சமுதாய மேம்பாட்டுக் குழு வருடாவருடம் ஒருங்கிணைக்கும்; 2025 (Outreach Committee 2025) இவ்வருடம் கடந்த வெள்ளிக்கிழமை (21.02.2025) எதிர்பார்த்தபடி பலவித எதிர்பார்ப்புகளுடன் தேடுதல்களுடனும் ஆய்வுக்கருக்களுடனும் நிறைவெய்தியிருக்கின்றது. விவசாயபெருமக்களையும் தொழிலதிபர்களையும் பலஅரச அரச சார்பற்ற மற்றும் சங்கங்களினதும் பங்குபற்றுதலுடனும் விவசாயபீட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும்; விவசாய இயந்திரங்கள், உற்பத்திப்பொருட்கள், நாற்றுக்கள, கன்றுகள்;, நாற்றுநடும் இயந்திரம், நுண்நீர்ப்பாசனம், நிறைந்த கண்காட்சியுடன் விவசாய பெருமக்களது திணைக்களங்களினது குரலை செவிமடுக்கும் களமாக அமைந்திருந்தது. தென்னிலங்கையின் தனித்துவ நிறுவனமான இலங்கை தொழில்முயற்சியாளர் சபை (Sri Lanka Entrepreneurs Board) யுடனிணைந்து தனக்குரித்தான சின்னத்துடன் பலவகை செயற்பாடுகளை முன்னெடுக்கும் சமுதாய மேம்பாட்டு குழு இம்முறையும் அனைத்து பங்குதாரர்களையும் இணைத்துவைத்து அவர்களை நேரடியாக களமிறக்கி இம்மேன்மையுறும் கைங்கரியத்தை வெகு சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றது. இதற்கான தனித்துவமான சின்னத்தை மாணவர்களின் முழுமையான எண்ணத்தினூடாக உருவமைத்தமை பாராட்டுக்குமுரியது.
காலை 8.30க்கு ஆரம்பித்த நிகழ்வு பீடாதிபதி பேராசிரியர் பகீரதனின் அறிமுக உரையுடனும் அதனைத்தொடர்ந்து (PRECIDA-UoJ) திட்டத்தின் உலகளாவிய ஜப்பானிய கூட்டமைப்பு முகவரமைப்பின் (JICA) விஷேட ஆலோசகர்கள் பேராசிரியர் கோய்ச்சி உசாமி (Prof Koichi Usami) அவர்களின் விசேட உரையுடனும் பேராசிரியர் ஒகட்டா (Prof Ogatta) அவர்களின் பிரசன்னத்துடனும் ஆரம்பித்தது. தொடர்ந்து விவசாயஞ் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்கான நிகழ்வு நடைபெற்றது. விவசாய பீடத்தின் 7 பிரிவுகளான பயிரியல் விஞ்ஞானம்;, விலங்கியல் விஞ்ஞானம், விவசாய உயிரியல், விவசாய பொறியியல், மண்ணியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம், மற்றும் விவசாய பொருளியல் பிரிவுகளை பிரதிபலிக்கும் வகையில் முன்வைக்கப்படும் பிரச்சனைகளை பதிவுசெய்வதற்காக மாணவர்களை ஒழுங்கு செய்து நிகழ்வை விவசாய உயிரியல் துறை தலைவர் கலாநிதி அரசகேசரி நெறிப்படுத்தினார்.
விவசாயஞ்சார் பிரச்சனைகளை விவசாயிகள், விவசாயபீட பழைய மாணவர்கள், விவசாயஞ்சார் தொழிற்றுறையினர், அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் பிரதிநிதிகள் விவசாய ஆராய்ச்சியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், பழைய மாணவர்களும் ர்.N.P வங்கி அலுவலர்களும் இன்னும் பல்வேறு திணைக்களங்களில் நிறுவனங்களில் பணிபுரிந்து இளைப்பாறி விவசாயிகளாகிய பலரும் இதில் இணைந்திருந்தமை நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தது.
மண்டபத்திற்கு வெளியே விவசாய இயந்திரங்கள், மரக்கன்றுகள், சிறுதொழில் முயற்சியாளர் உற்பத்தி பொருட்கள், விவசாயஞ்சார் தொழிற்றுறையின் உற்பத்தி பொருட்கள், இந்திரா குழுமத்தின் காட்சிப்பொருட்கள், விவசாய ஆராய்ச்சி முடிவுகளை பிரதிபலிக்கும் பதாகைகள் என பலவகை காட்சிப்பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை நிகழ்வை சிறப்பித்தது. இந்திரா குழுமத்தின் அனுசரணையுடன் நெல்நாற்று நடும் இயந்திரத்தை பயன்படுத்தி நெல்நாற்று நடவிலிருந்து அறுவடை நிகழ்வுவரை காணொளியாக காட்சியாக்கி அதிலுள்ள நன்மைகளையும் சிறப்புகளையும் எடுத்தியம்பியது பயனுள்ளதானதுடன் கலந்து கொண்ட விவசாயிகளை இத்தொழினுட்பத்தினை பயன்படுத்த ஊக்கப்படுத்தியது.
நிகழ்வில் முன்வைக்கப்பட்ட விவசாயஞ்சார் பிரச்சனைகளையும் கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகளையும் வாசகர்களின் தகவலுக்காக தரப்பட்டுள்ளது.
1. வாழையில் வாடல் போன்ற அறிகுறிகள், பியூசேரியம் வாடலாக இருக்குமோ என்ற சந்தேகம். ஜபதில்ஸ 83களில் கிளிநொச்சி வாழை சாம்பிராயத்தை நிலைகுலைய செய்த பனாமா வாடல் நோய். ஆனால் வந்தது என்ன நோய் என சரியாகத் தெரியாமல் தீர்வு கூறுவது கடினம். நோயின் அறிகுறியுடனான வாழையின் பகுதிகளை விவசாய உயிரியல் துறைக்கு தந்தால் அதன் தோற்றுவாய் எதுவெனவும் தீர்வும் கூறிவிடலாம். ஒரு சில அறிகுறிகளை வைத்து ஊகிப்பது நல்லதல்ல. பாதிக்கப்பட்ட வாழையின் பாகங்களை தந்தால் தீர்வு காண ஏதுவாயிருக்கும்.
2. விவசாயிகளுக்கும் விலங்கு வளர்ப்பவர்களுக்குமான முரண்பாடு, வினா – பொதுவாகவே எழுப்பப்பட்டது. அதனுடன் சுண்டிக்குளம் பகுதியில் 6000ஏக்கர் தரிசு நிலத்தில் விலங்கு மேய்ச்சல் தரை உருவாக்கப்பட்டால் விலங்குகளை உணவுக்காக அழைத்துவந்து மேயவிடுதல் இலகுவானதாக இருக்கும். ஜபதில்ஸ அந்த வினாவுக்கான விடை பற்றி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கேட்கப்படும் எனவும் வடபகுதியில் இனங்காணப்பட்ட இடங்களில் மேச்சல்தரைகள் உருவாக்க இதில் நேரடியாக இணைக்கப்பட்ட திணைக்களங்களுக்கு விண்ணப்பிக்கப்படும். விலங்கு வளர்ப்பவர்களின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமானதும் இருக்கின்ற தரிசுநிலங்களை இனங்கண்டு அதில் வளரக்கூடிய புல்பூண்டு வகைகள் பற்றி ஆய்வு செய்வது எனவும் தீ;ர்மானிக்கப்பட்டது.
3. தீவனத்திற்காக வளர்க்கப்படும் கோ 3, கோ 4, கம்புநேப்பியர், சிவப்பு நேப்பியர்களில் நுளம்பு வகை ஹொப்பேர்ஸ் காணப்படுவதாக கூறப்பட்டது. ஜபதில்ஸ காணப்படும் பூச்சிவகையை சரியாக இனங்காணாது இதற்கான பரிந்துரையை தருவது சாத்தியமில்லை என்பதனால் அதனை இனங்காண்பதற்கு வளர்ந்திருக்கும் பூச்சிபீடை மற்றும் புற்களின் மாதிரிகளை விவசாய உயிரியல் துறைக்கு தந்துதவும் படி கேட்கப்பட்டது.
4. உவர்நீர்த்தரைகளாகும் இடங்களை தெரிவுசெய்து அதில் உவர்நீரில் வளரக்கூடிய அல்லது உவர்நீரினை மேம்மடுத்தி மேச்சல்தரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றி வினவப்பட்டது. ஜபதில்ஸ இது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டது. இதனுடன் தொடர்புடைய பல்வகை நிறுவனங்களை இணைத்து இதனை ஆய்வுக்குட்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
5. பன்புல், பன்றிநெல் மற்றும் களைநெல் என்பனவற்றின் அதீத வளர்ச்சி மற்றும் விரைந்து பரவல் என்பனபற்றி வினவப்பட்டது. ஜபதில்ஸ பன்றிநெல், களைநெல் என்பனவற்றினை இனங்காணல் அவசியமாகின்றது. பன்றி நெல்லின் பரவல் வேறாகவும ;களைநெல்லின் பரவல் இப்போதுள்ள நெல்லினத்துடன் கலப்பினப்பாக்கம் செய்யப்பட்டு உருவானதால் இவற்றை பூக்கும் வரை இனங்காணுதல் கடினமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. களை பிடுங்குவோருக்கு இந்த பன்றிநெல் மற்றும் களை நெல்லினை பிரித்துப்பார்ப்பதில் பரிச்சயமிருந்த போதிலும் அனைத்து நெல்வயல்களிலும் கைகளால் களைகளை கட்டுப்படுத்துவது இயலாத காரியமானதால் இவற்றை வேறுபடுத்தி கட்டுப்படுத்துவது பற்றி ஆய்வுசெய்ய உத்தேசிக்கப்பட்டது. நெல்வயலை பயிர்செய்யாது விடுதல், பயிர்சுழற்சி செய்தல், விவசாயிகளின் விதைநெல்லை விதைநெல்சுத்திகரிக்கும் நிலையங்களில் களைநெல்லை வேறுபடுத்தி பயன்படுத்தல் இன்னும் ஊதாநிற நெல்லினங்களை பயிரிட்டால் களைநெல்லிலிருந்து பிரித்து பார்த்தல் இலகு என்பனவும் கலந்துரையாடப்பட்டது.
இது பற்றிய விரிவான ஆய்வு நடாத்தப்படுவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
6. வன்னிப்பகுதியிலுள்ள பல சிறிய நீர்த்தேக்கங்கள் குறிப்பாக குளங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சிறுதானியங்களை பயிரிடுவது உகந்ததென ஆலோசனை முன்வைக்கப்பட்டது. ஜபதில்ஸ இதனை விவசாய பெருமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக பரிந்துரை செய்யப்பட்டது. கிடைக்கின்ற நீரை முழுமையாக பயன்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறுதானியங்களை பயிரிடுவது சாத்தியமென பரிந்துரைக்கப்பட்டதனால் இவற்றைப்பற்றிய அறிவுறுத்தல்களை விவசாய திணைக்களத்துடனிணைந்து தயாரித்து அவர்களுக்கு தெரியப்படுத்துவதென ஆலோசிக்கப்பட்டது.
7. முட்டை விலை மாறிக்கொண்டிருப்பதனாலும் கோழி தீவனத்தின் கிடைக்கும் தன்மை விலை குறைவாக இருப்பதற்கான வழிவகைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. ஜபதில்ஸ கோழித்தீவன உற்பத்தி பற்றி மாற்று வழிகள் தொடர்பிலும் ஆரயப்பட்டது. கொல்லைப்புற கோழிவளர்ப்பில் பயன்படுத்தப்படும் தீவனம் பற்றியும் கோழித்தீவனத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான உள்ளீடுகளை உற்பத்தி செய்வது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. வடபகுதியில் கோழித்தீவனத்தை உற்பத்தி செய்வதில் இருக்கின்ற தொழிநுட்பங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதற்கும் ஆய்வு தேவையாதலால் அதனை ஆய்வுப்பரப்பிற்கு எடுத்துச் செல்வது நல்லதென ஆராயப்பட்டது.
இன்னும் பல வினாக்களை விவசாய பெருமக்கள், திணைக்கள அலுவலர்கள் என பலரும் பிரஸ்தாபித்திருந்தனர்.
மீகுதி பகுதி அடுத்த வாரம் தொடரும்.
"February 4: The world Cancer Day"
This article describes about the World cancer Day and discusses on the cancer incidence in Sri Lanka and treatment s for such cancers"
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்;. வாழ்நாள் வரை ஒருவருக்கு இந்த செல்வம் கிடைத்துவிட்டால் அதைப்போல எந்த செல்வமும் ஈடாகாது. நோயற்ற வாழ்க்கை கிடைத்துவிட்டால் அத்துணை தவம் கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும். பணமிருந்தும் நோய்வாய்ப்பட்டால் அதனது பயனை அடைவது இயலாத காரியமாகும். நோய்கண்டவர்களின் தனிமனித சுகாதாரமும் குடும்ப சுகாதாரமும் கேள்விக்குள்ளாகி விடும். அதிலும் இவ்வாறான தொற்றா நோய்கள் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இறுதியில் அவர்களை நாம் இழப்பதாகிவிடும். புற்றுநோய், நீரிழிவு, அஸ்துமா போன்றன ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு தொற்றாத நோய்களாகும். அதிலும் புற்றுநோய்; பீடித்தவர்கள் கவனிக்காது விட்டு பல்கிப்பெருகியபின் பல்வேறுபட்ட நோய்சிகிச்சை முறைகளுக்குள் உடலை உருக்கி இறுதியில் உடலில் சக்தியிழந்து நொய்ந்து உயிரிழக்கும் சந்தர்ப்பங்களே அதிகமாகும். புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலினபடி ஒருவர் தம்மைப்பற்றி முழுமையாக அறிந்து தம்மை இந்நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை மேற்கொண்டு வளர்ந்துவிடாது அதனை கட்டுப்படுத்துவதாகும்;.
2025-2027 ஆண்டுவரை உலக புற்று நோய் தினம் கொண்டாடப்படுகின்றது. இக்காலப்பகுதியின் கருப்பொருளாக 'தனித்துவமாய் இணைவோம் - ருnஙைரந டில ரnஙைரந' ஆகும். புற்றுநோயை அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் விரைந்து இல்லாதொழிக்க பலமுறைகள் பாதுகாப்பானதாக பயன்படுத்தப்படுகின்றன. தவறின் காலந்தாழ்த்தினால் அது பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதும் புற்றுகலங்களை மட்டுப்படுத்துவதும் சிரமமாகிவிடும். வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் புற்றுநோய் தெரியத்தொடங்கி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி உயிரையும் காவுகொள்கின்றது. இந்நோய் தற்போது பரந்து பட்ட அளவில் பெண்களை பாதிக்கின்றது. ஆண்களும் விதிவிலக்கல்ல என்றாலும் தரவுகளின் படி பெண்களுக்கு அதிகளவில் புற்றுநோய் பரவல்; கணிப்பிடப்பட்டிருக்கின்றது. பால் வேறுபாடின்றி வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் முதியோர் வரை பலருக்கும் புற்றுநோய் ஏற்படுகின்றது என்பதுடன் பலரது உயிர்களை காவுகொண்டுள்ளது என்பது தான் துன்பியலான செய்தியாகும். இதில் பரம்பரையாக இந்த நோய் வருகின்றது என்பதை தவிர்த்துப் பார்த்தால் வேறு பல காரணிகளும் புற்றுநோய் உருவாவதற்கு காரணமாகின்றன.
சுகாதாரத் திணைக்கள தகவலின்படி 25 – 35 வரையான வயதுடைய பெண்களுக்கு கருப்பைப்; புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற இனப்பெருக்கதொகுதியில் அதிகளவில் ஏற்படுவதாகவும் அதனால் அண்மையிலுள்ள புற்றுநோய் கண்காணிப்பு நிலையத்திற்கு தவறாமல் சென்று தங்களை பரீட்சித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவித்தலை அதிகம் பேர் அலட்சியம் செய்வது தெரிகின்றது. புற்றுநோயின் தன்மையை கண்டறிய ஊயு 125 என்னும் இரத்தப் பரிசோதனையும் செய்யப்படுகின்றது. முழுவதுமாக புற்றுநோய்தான் என்பதனை உறுதிசெய்யாவிட்டாலும் இதன் கணிப்புகளை புற்றுநோயை உறுதிசெய்ய பயன்படுத்துகின்றார்கள்.
25 நாள் கீரைக்கு பீடைநாசினி தெளித்தால் தெளித்து 14 நாட்களுக்கு பின்னரேயே சந்தைப்படுத்தல் வேண்டும். அவ்வாறாயின் எப்போது விசிறி எப்போது அறுவடைசெய்வது?. இந்த சூட்சுமம் பீடைநாசினி விசிறும் விவசாயிக்கே சமர்ப்பணம். சிறுகீரை என்றுதானே அதற்கு பெயர் ஆனால் கீரை செடியாக அல்லவா விற்பனைக்கு வருகின்றது. அதற்காக அனைத்து விவசாயிகளையும் குறை கூறமுடியாது. மக்களுக்கு நல்லனவற்றை விற்க வேண்டும் என்னும் எண்ணம் பலரிடம் இருப்பதனை அசேதன இரசாயன பசளைகளையும் பீடைநாசினிகளையும் அறவே தவிர்த்து மாடுகட்டி அதில் பயிர்செய்வதிலிருந்து கண்டு கொள்ளலாம். நஞ்சற்ற மரக்கறிகளை நாடுபவர்கள் இந்த விடயத்தில் அவதானம் தேவை. வீட்டில் ஒரு தோட்டமிருந்தால் இவ ;வகை இலைக்கறிகளை நாமே நட்டு அறுவடையும் செய்து தேவைப்படும்போது உணவாக்கலாம். தன்கையே தனக்குதவி என்பது போல தன்னையே நம்பலாமே.
எதுவுமே அறுதியாக இதுதான் புற்றுநோய்க்கான தோற்றுவாய் என பலவேளைகளில் தெளிவில்லை. முன்மொழிவுகளாகவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பாரஉலோகங்களுக்கும் சிறுநீரக செயற்பாட்டுக்கும் தொடர்பு இருந்தாலும் புற்றுநோய்க்கான காரணியாக இதுவும் முன்வைக்கப்படுவது சிந்திக்க வைத்துள்ளது. புலால் தவிர்த்து மதுவின்றி வெற்றிலை பாக்கு புகையிலையை நாள் முழுக்க சொதப்பாத மாதர்க்கும் புற்றுநோய் கண்டிருக்கின்றது. இனப்பெருக்க தொகுதியில் வரும் புற்றுநோய்கள் இவை எவற்றிலுமடங்காதவை. அதிலும் பெண்களின் இனப்பெருக்க தொகுதியில்; கருவறையிலும் மார்பகத்திலும் புற்றுநோய் உருவாவதற்காக தளம் இருக்கின்றதென்பது விதியின் நியதியே. புற்றுநோயை ஆரம்பத்தில்; கண்டறியப்பட்டால் (Early detection) அவற்றிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்றே புற்றுநோய் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.
வாயிலிருந்து குதம் வரை சமிபாட்டுத் தொகுதியில் எந்த இடத்திலும் புற்றுநோய் ஏற்படுவது போல நுரையீரல், இன்னும் உமிழ்நீர் சுரப்பியிலும் இது ஏற்படுகின்றது. நோயை கறையான் புற்றுபோல வளரவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும். கருவறையை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிடுவது மட்டும் சிறந்த பரிகாரமல்ல. மாறாக புற்றுநோய்க்கலங்கள் உற்பத்தியாகின்றதா என பரீட்சித்து பார்க்க வேண்டும். ஆண்களின் இனப்பெருக்க தொகுதியில் விந்துகளுக்கான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும் விந்தின் அசைவுக்கு ஏதுவான சுரப்பை சுரக்கின்ற புரொஸ்ரேற் (Prostrate) என்னும் சுரப்பியில் உருவாகும் புற்றுநோயாகும். இது தவிர பல்வேறு புற்றுநோய்களை சுகாதார திணைக்களம் வரிசைப்படுத்தியிருக்கின்றது. எம்மண்ணிலேயே ஆரம்ப நிலையில் தகுந்த சிகிச்சை பெற்று பலர் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். இதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் வைத்தியர்கள் தாதிமார் வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.
அநேகமான புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை (Radiotherapy) மூலமாகவும் தனித்துவமான வேதியியல் மருந்துகளை குருதியோட்டத்தில் ஊசியால் உட்செலுத்தியும்; (Chemotherapy) சிகிச்சையளிக்கின்றனர். அறுவைச் சிகிச்சை (ளுரசபநசல) மூலம் புற்றுநோய்க் கட்டிகள் (கலங்கள்) அகற்றப்பட்டால் அதனது பெருக்கம் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாதிருப்பின் மேற்கூறிய கதிரியக்க மற்றும் வேதியியல் சிகிச்சைகளுக்கு கட்டுப்படத்தவறின் விளைவு விபரீதமானது தான். இவற்றைவிட PEST Scan மற்றும் CT Scan படங்களின் உதவியுடன் நேரடியாக புற்றுநோய்க்கலங்களை கதிரியக்க சிகிச்சை (Image guided Radiotherapy) மூலம் சக்தியற்றதாக்கும் வழிமுறையும் உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்டி புற்றுநோய்கலங்களை கட்டுப்படுத்தும் (Antioxidents) சிகிச்சை முறைகளும் புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதில் புற்றுநோய் கலங்களை முழுமையாக அகற்றுவதென்பது இயலாததென்பதால் அவற்றின் பெருக்கத்தை தடுத்து அல்லது குறைத்து அல்லது செயலிழக்க செய்து நோயேற்பட்டவரின் வாழ்நாளை அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இவற்றுக்கான செலவு அதிகமானது.
இங்கிலாந்தில் nஐனென்டெக் டோச் நிறுவனம் அடிஸோலிசூமாப் (Adizolizoomap) என்னும் நோயெதிர்;ப்பு ஊசிமருந்தை புற்றுநோயை குணப்படுத்த கண்டுபிடித்திருப்பதாக செய்தி வெளிவந்திருக்கின்றது. 2024இல் புற்றுநோய்க்கான மருந்து உலகில் கண்டறியப்படும் என தீர்க்கதரிசி பாபாவங்கா எதிர்வு கூறியிருப்பதும் நினைவில் நிற்கின்றது. பாரம்பரிய வைத்தியத்தில் சொர்க்க மரம் என அழைக்கப்படும் மரத்தின் இலைகள் புவுடராக்கப்பட்டு புற்றுநோய் சிகிக்சைக்காக பயன்படுத்தப்படுகின்றது. வேதியியல் சிகிச்சைக்காக பயன்படும் அநேகமான மருந்துகள் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்ப்பட்டவை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. இதில் இன்னொரு அம்சமாக பாரம்பரிய மருத்துவத்தையும் சித்த வைத்தியத்தையும் மேலைத்தேய மருத்துவத்தையும் இணைத்;த அறிவியல் மூலமான சிகிச்சை முறை இவ்வாறான நோய்களுக்கு தேவைப்படுகின்றது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படும் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தும் மேலைத்தேய மருத்துவம் புற்றுநோயை குணமாக்க அனைத்தும் இணைந்ததொரு முறையை பரிந்துரைக்க வேண்டும்.
"The harvested paddy lying in carpet roads awaiting sun to dry"
This article describes the harvested rice lying in the carpet roads awaiting the sun during rainy days. These rains are abnormal during paddy harvesting time in January and February. This year is abnormal due to the change in the climate, which is experienced this time.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நெற்செய்கை எமது வாழ்வாதாரத்திற்கான பயிர்ச்செய்கை. எமது அன்றாட உணவின் முக்கிய பாகமாக நெல் இருக்கின்ற காரணத்தினால் எமது வாழ்வியலுடன் இரண்டறக் கலந்துமிருக்கின்றது. காலங்காலமாக நெற்செய்கை செய்யப்படுகின்ற இடங்களில் நெற்செய்கையாளர்களுக்கு நெல்லை அறுவடைசெய்து காயவைத்து பொதியாக்கி அதனை விற்பனை செய்வதென்பது மிகவும் இடர்ப்பாடானதாக மாறிவிட்டது. காலநிலை மாறிவிட்டது என்பதற்கு இங்கே மாசியில் பெய்யும் மழை முன்னுதாரணமாகும். அறுவடைசெய்வதற்காக இணைந்த அறுவடைக்கருவியும் காத்திருக்கின்றது. மழை எதிர்பாராதமாதிரி எந்தவித முன்னறிவித்தலுமின்றி கொட்டித் தீர்த்திருக்கின்றது.
நாவற்குழி பூநகரி பரந்தன் காப்பெற் வீதியி;ன் ஒருபக்கம் முழுவதுமாக நனைந்த நெல் காயவிடப்பட்டிருக்கின்றது. பாதையில் போகும் வாகனங்கள் நின்று நிதானித்து ஒருபக்கமாக ஒருக்களித்து செல்லும் காட்சியை தினமும் பார்க்கலாம். காலநிலை எதிர்வு கூறல்கள் அனைத்து விவசாயப் பெருமக்களையும் இன்னமும் சென்றடையவில்லை. டிஐpற்றர் தொழினுட்பம் மூலமாகவோ அலைபேசி தொழினுட்ப மூலமாகவோ அனைத்து விவசாயப் பெருமக்களையும் இணைத்ததான தகவல் பரிமாறல்கள் பேச்சளவிலேயே இன்னமும் இருக்கின்றது. அனைவருக்கும் ஒருமித்த செய்தியாக எதிர்வுகூறல்கள் துல்லியமான கணிப்பீடுகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் சென்றடையவேண்டும். இங்கிருந்து பிறதேசத்த கணனிகளை நெறிப்படுத்தும் எம்மவர்களுக்கு அனைத்து விவசாய பெருமக்களையும் தொலைபேசி தொழினுட்பத்துடன் இணைக்கும் வழிமுறை நடந்துகொண்டேயிருக்கின்றது. நடைபெற்று முடியும் நாளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
என்ன இப்படியான பிரச்சனைகளுக்கு இன்னுமா தீர்வு கிட்டவில்லை என விசனப்படுபவர்களும் இருக்கின்றனர். உற்பத்தியாளர்களுக்கு விவசாய நாட்டில் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்காமல் விவசாய வளர்ச்சியில் எவ்வாறு தன்னிறைவு காணப்போகின்றோம். முன்னைய காலங்கள் போல தற்போது இல்லை காலநிலை மாற்றம் பாரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது. வடபகுதியில்; குளங்களிலிருந்து நீர்ப்பாசனம் பெறும் நிலங்களைத் தவிர பெரும்போகத்தில் மழைவீழ்ச்சியை நம்பியே நெற்சாகுபடி தங்கியிருக்கின்றது.
பொருளாதார சீர்குலைவு குடும்பங்களுக்குள் இன்னும் சமூகத்தினுள்ளான புரிந்துணர்வில் விரிசல்கள் ஏற்படுத்தி நாளாந்தம் அந்த இடைவெளி விரிவடைந்தே செல்கின்றது. உற்பத்தியாளனுக்கு உள்ளக பிரச்சனைகளுடன் காலநிலை மாற்றம் போன்ற புறகாரணிகள் அதனுடனிணைந்த பீடை நோய் என்பனவற்றின் தாக்கம் அனைத்தும் சேர்ந்து பெரிதளவிலான உற்பத்தி பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன. இவற்றையும் தாண்டி விளைவித்ததை தகுந்த நேரத்தில் அறுவடை செய்து அதிலிருந்து பெறப்படும் விளைச்சலை விற்று காசாக்குவதற்குள் பெரும்பாடாகி விடுகின்றது. ஆதாயம் முழுவதும் அறுவடைகாலத்தில் அழிவுக்குட்படும் நிலைமையிருப்பதனால் விவசாய பெருமக்களுக்கு விவசாய உற்பத்தியில் நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
உற்பத்தி செய்த பொருட்களை களஞ்சியப்படுத்தும் வசதிகள் பெரிதாக இங்கு இல்லை. நனைந்த நெல்லை காயவும் வைக்க முடியாமல் காயவைப்பதற்கான நெற்களங்கள் இல்லாத காரணத்தால் பூநகரி பரந்தன் வீதியில் காப்பெற் தரையில் நனைந்த நெல்லை பரவிவிட்டு வருணபகவானின் கருணையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மழைமேகம் எங்கும் பரவி வருணபகவானின் கதிர்களைக் கூட தடுத்து நிற்கும் அவலத்தை என்னவென்பது. சந்தைப்படுத்தல் மிகவும் சவாலான விடயமாக மாறியிருக்கின்றது. விளைவித்தது தரமானதாக இருந்தால் மட்டுமே அதற்கான அதிகரித்த விலை. நெல்லுக்கான விலைநிர்ணயம் குறிக்கப்படவில்லை என்னும் அங்கலாய்ப்பு நெற்செய்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கின்றது. இல்லையெனில் அறவிலையில் கேட்டதை கொடுத்து மிச்சம் மீதி எதுவுமில்லாததாக கையும் கணக்கும் சரிவரும் நிலையில் இருக்கின்றனர். மாற்றம் ஏதும் ஏற்படாதா என்ற ஏக்கத்தைத் தவிர விவசாய செய்கையிலீடுபடுபவர்களுக்கு மாற்றுவழி ஏதுமில்லை.
விவசாய செய்கையிலீடுபடுபவர்களுக்கான மானியம் அதிகரிக்கப்படல் வேண்டும். விவசாய செய்கையிலீடுபடுபவர்களை ஒருங்கிணைத்த தகவல் தொழினுட்பம் விருத்தியடைய வேண்டும். பயிர்ச்செய்கைக்கான காலநிலை முன்கூட்டியே எதிர்வு கூறப்படல் வேண்டும். தரமான விதை நெல்லை பெறுவதற்கு தொழினுட்பம் இன்னமும் விருத்தியடைய வேண்டும். இதற்கிடையில் தற்போது களைநெல் (றுநநனல சiஉந) பரவலாக பலஇடங்களில் பெருகத் தொடங்கிவிட்டது. இதனால் இக்களையை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் மல்லுக்கட்ட வேண்டியிருக்கின்றது.
நீரில் அறுவடைசெய்வதை பக்குவமாக கரைக்கு சேர்த்து அதனை முறையாக காயவைக்க காயவைக்கும் களங்கள் பரவலாக அமைக்கப்படல் வேண்டும். பாதைகளை மேலும் அகலித்து நெல்காயவைக்கும் களங்களாக கூட மாற்றிடலாம். நெல்லுக்கான உத்தரவாத விலை விரைந்து நிர்ணயஞ்செய்யப்பட்டு விவசாய பெருமக்கள் அறுவடை செய்த நெல்லை ஓரளவு ஆதாயம் வரக்கூடியதாக விற்பதற்கான வழிவகைகள் செய்தாக வேண்டும். உலகுக்கு உணவு செய்யும் விவசாயி பசி பட்டினியுடன் வாழ்க்கையை முன்னகர்த்த முடியாமல் திண்டாடினால் அடுத்த போகத்தில் உணவுற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இதற்கான முன்னுரிமை கொடுக்கப்பட்டு உணவுற்பத்தியில் ஏற்படும் தளம்பலை போக்கி அனைவருக்கும் உணவு கிடைப்பதற்கு வழிசெய்தாக வேண்டும். உற்பத்தி செய்த நெல்லை விற்பதற்கான அனைத்து வழிமுறைகளும் செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இத்துணை எதிர்பார்ப்பும் தற்போதய அரசாங்கத்திடம் விரும்பி கேட்கும் விடயங்களாகும். மெல்ல மெல்ல அனைத்து வசதிகளும் கிடைக்க ஆவன செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
காலநிலையை நாமாக மாற்ற முடியாது. இது இயற்கையின் சீற்றமாகவும் சிலவேளைகளில் முடிந்து விடுகின்றது. என்றாலும் அதனையும் நாம் தவிர்க்கக்கூடிய தகவல் தொழினுட்பம் உண்டு. அதனை முறைப்படி பயன்படுத்தி விவசாய செய்கையினை மேம்படுத்த வழிவகைகள் உருவாக்கம் பெறல் வேண்டும். இடர்காலத்திற்கேற்ற நெல்லினங்களை பயன்படுத்துதல் முறையாக பசளை பீடைநாசினி பிரயோகம், குறித்த காலத்தில் அறுவடை அதனை தரமானதாக சந்தைபபடுத்தல் மற்றும் மீதமானவற்றை முறையாக களஞ்சியப்படுத்தல் என்பன இவற்றுள் அடக்கம். இளையவர்களை முன்னிறுத்தி அவர்களுக்கான பொறுப்பாக இவற்றை ஏற்படுத்திக் கொள்ளல் நல்லது.
"The country in importation: unavoidable and Need to think issues
This article describes the the importation of goods, those essentials as well as need to think such importation in future.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது நாட்டின் வளர்ச்சிப் பாதை பலவித நெருக்கடிகளாலும் பொருளாதார சீர்குலைவுக்கான தவறான முடிவுகளாலும் முன்னைய காலங்களில் கட்டமைக்கப்பட்டிக்கின்றது. இந்த சரிவு எமது நாட்டில் அவ்வப்போது ஏற்பட்டிருப்பதனை நாம் சுட்டிக்காட்டினாலும் இறுதியில் பண்டங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். மக்களுக்கான உணவினை கிடைக்கச்செய்யும் வழிவகைகளை ஆராய்ந்த நாடு வேறுவழியின்றி உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இறக்குமதி செய்யும் நிலையெய்தியிருக்கின்றது. இந்த நிலைமையை எதிர்வருங்காலங்களில் தவிர்க்கக்கூடியவகையில் விவசாய உற்பத்தி; மாற்றியமைக்கப்படல் வேண்டும். காலபோக நெல்லுற்பத்தியின் விழுக்காடு தற்செயலானதென கணிப்பிடமுடியாதிருப்பதற்கு காரணமாக 2024 ம் வருடத்தில் 5.6 மில்லியன் தொன் நெல்லை உற்பத்தி செய்திருக்கின்றது.
இம்முறை நெல்லுற்பத்தியில் வீழ்ச்சிக்கு காரணங்களாக காலந்தப்பி பெய்த மழையும் அளவுக்கதிகமாக வெள்ளம்போட்ட மழையும் காரணமாக அமைந்திருக்கின்றன. மழைவீழ்ச்சி வழக்கமாக ஆனால் அதிகமாக இருந்ததாலும் பலவிதமான எதிர்வுகூறல்களுக்கு மத்தியிலும் பயிர்ச்செய்கை தளம்பல் போக்கிலேயே விவசாய பெருமக்களை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காலநிலை மாற்றம் முன்னைய காலங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை ஓரளவிற்கு புரிந்து கொண்டவர்களாக எமது விவசாய பெருமக்கள் இருந்த காரணத்தினால் பயிர்விளைச்சலில் பாரிய தாக்கங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் மழைவீழ்ச்சியின் தாக்கம் காலபோக செய்கையினை பாதிக்கும் நிலைக்குள் வந்திருப்பது வருங்காலங்களில் பயி;ர்ச்செய்கை திட்டமிடலுடனேயே இருக்க வேண்டும் என்பதனை மீளவும் நினைவுபடுத்துகின்றது. காலநிலை எதிர்வுகூறும் செய்திகளுக்கு முன்னுரிமையளித்தல் இதில் முக்கியத்துவமாகின்றது.
காலநிலை மாற்றம் எமது நாட்டில் தீவிர நிலைமைகளை உருவாக்க தொடங்கியிருப்பதனை காலந்தப்பிய அதிகரித்த மழைவீழ்ச்சி கட்டியங்கூறியிருக்கின்றது. வழமையான காலபோக சிறுபோக பயிர்ச்செய்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய நிலைமை எழுந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. மாசிமாதங்களில் பெய்யாத மழை அவ்வப்போது பெய்யத்தொடங்கியிருப்பது மாற்றத்தை காட்டிநிற்கின்றதல்லவா. இந்த மாற்றங்கள் இன்னும் பலவிதங்களில் வேறுபடப்போகின்றன என்பதனையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் பயிர்விளைச்சலில் மட்டுமல்ல பீடை மற்றும் நோய்களையும் பெருக்கிவிடுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. பயிரழிவு என்பது இவற்றினாலும் ஏற்படும் சேதம் என்பதனால் அவற்றிலிருந்து பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகளும் அவசியம் பயன்படுத்தப்படல் வேண்டும். வருமுன் காக்கும் செயன்முறைகளுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கலாம்.
எமது நாட்டில் வளங்களிருந்தும் நாம் பிற நாட்டிலிருந்து அதே பண்டங்களை இறக்குமதி செய்வது எமது பொருளாதார நிலைமையே மேலும் கேள்விக்குறியாக்கிவிடும். ஆனாலும் வேறுவழியின்றி மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியநிலையில் அரசு அளந்தறிந்து இவ்வாறான இறக்குமதிகளை அனுமதித்திருக்கின்றது. இம்முறை 30இ000 மெற்றிக் தொன் உப்பினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை முக்கிய செய்தியாகும். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் உப்பின் உற்பத்தியில் வீழ்ச்சியேற்பட்டதைத் தொடர்ந்து நுகர்வோருக்கான உப்பினை விலையேற்றமின்றி வழங்குவதற்காக அதிலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாதென்பதனை நோக்கமாக வைத்து உப்பு இறக்குமதிப்பொருளாகிவிட்டது.
இவ்வாறாக 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது கூட ஆளும் அரசின் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததாகவே அமைந்துள்ளதனை பார்க்கலாம். ஆனாலும் காலத்திற்கேற்ப எடுக்கப்பட்ட முடிவாகினும் எமது நாட்டில் இந்த உப்பு உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளையும் காலநிலையால் பாதிக்கப்படாதவாறு விளைச்சல் அறுவடை செய்யப்படல் வேண்டும் என்பதும் உப்பு உற்பத்தி வருங்காலங்களில் எந்த விதமான பாதிப்பின்றி மக்களுக்கு தேவையான அளவு அறுவடை செய்வதற்கான வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட்டு விளைச்சல் பெறப்படவேண்டும்.
உணவுப்பொருட்களை குறிப்பாக உருளைக்கிழங்கு, சின்னவெங்காயம், மற்றும் நெல் என்பனவற்றை நுகர்வோரின் தேவைக்கேற்ப இறக்குமதி செய்வது எப்போதுமே அவற்றின் சந்தை விலையை தளம்பலில்லாது குறைவாக நுகர்வோர் பயனுறும் வகையில் வைத்திருப்பர். ஆனால் உள்ளூர் உற்பத்தியாக இத்தகைய உணவுப்பொருட்கள் வரும்போது வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வது எந்தவகையிலும் சாலப்பொருந்தாது. இத்தகைய செயற்பாடுகள் கடந்த அரசாங்கங்களின் காலங்களில் நடந்ததனால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விவசாய செய்கையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முனைந்தனர் என்பது உண்மையே.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (புசழளள யெவழையெட Pசழனரஉவ) என்பது நாட்டின் பொருளாதார செயற்றிறனை மதிப்பிடப்பயன்படுகின்றது. இதனை நுகர்வோருக்கான செலவு, முதலீட்டு செலவு, அரச செலவு, மற்றும் மொத்த ஏற்றுமதி என்பனவற்றை கூட்டுவதிலிருந்து மொத்த இறக்குமதியை கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. இதில் நிகர ஏற்றுமதி எனப்படுவது மொத்த ஏற்றுமதியிலிருந்து மொத்த இறக்குமதியை கழிப்பதன் மூலம் கிடைக்கின்றது. இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களில் இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
இந்த சுட்டியின் மதிப்பீட்டின்படி வடமாகாணத்தின் பங்களிப்பு கணிசமான காணியில் உற்பத்தி செய்ய முடியும். அந்தவகையில் வடமாகாணத்தினது புனுP மிகவும் குறைவானதாக இருக்கின்றமைக்கு வடமாகாணத்தின் உற்பத்திப் பொருட்கள் உலகசந்தைக்கு செல்லாமை முதற்காரணமாகவும் அவற்றின் தரம் மேம்படுத்தப்பட்டால் அவற்றுக்கான கேள்வி அதிகரித்தால் உற்பத்திப்பொருளுக்கம் சிறந்த கேள்வி எழும். இறக்குமதியில் நாம் தொடர்ந்து ஈடுபடாமல் இங்குள்ள பொருட்களை தரமானதாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது எமக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களின் சந்தைவிலை பலமடங்காகும். இவ்வாறான வரியின் மூலம் இறக்குமதியாகும் அத்தியாவசிய பொருட்களின் செலவு சமனிடப்படும். இரண்டாவதாக உள்ளூர் பொருட்களின் உற்பத்திக்கும் சந்தைப்படுத்தலுக்கும் மானிய முறையை உருவாக்கலாம். இதன் மூலம் மக்கள் உள்ளுர் பொருட்களின் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபாடுடையவராவர். உள்ளூர் உற்பத்தி கணிசமானளவு உயர்வடைந்தால் உள்ளூர் சந்தைப்படுத்தலும் வர்த்தகமும் மேன்மையுறும். இதனால் உள்ளூர் பொருட்களின் கிடைக்கும் தன்மையும் அதிகரித்து அவற்றினது விலையும் குறைவடையும். இது நேரடியாகவே பொதுமக்கள் பயன்பெற வாய்ப்புக்களை உருவாக்கும். பசிபட்டினி என்பனவற்றை அறவே இல்லாதொழிக்க மற்றும் உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்ய இந்த கைங்கரியம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதில் முக்கியமாக தரமான பொருட்களின் உற்பத்தி முன்னிலையாக்கப்படும். அத்துடன் தரமான சேமிப்பு மற்றும் பொதிசெய்தலும் இவற்றினுள் உள்ளடங்கலாகும். எமது உள்ளூர் உற்பத்திகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நிலைமைக்கு மக்களை விரும்பியழைக்கும் செயலாக இவ்வாறான கொள்கைமாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவை ஒரு ஆரோக்கியமான சமூகநிலையை ஏற்படுத்த பெரிதும் துணைநிற்கும்.
சமகால கொள்கை மாற்றங்கள் விவசாயிகளையும் நுகர்வோரையும் கணக்கிலெடுத்து இருவரையும் பாதிக்கவிடாத ஏற்றுமதி இறக்குமதி விடயங்கள் கையாளப்படுவதனால் நாட்டின் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான ஒளிக்கீற்று தென்படுகின்றதெனலாம். எமது பொருளாதார சரிவு சீர்செய்யப்பட்டால் மக்களின் வாழ்வியலில் மாற்றம் ஏற்படுவதோடு நிம்மதியான வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும்.
"Late Joshua - A soil scientist from Earlalai"
This article describes the brief biography of Late Dr Willie Dhanapalan Joshua, a well known soil scientist in Sri Lanka who identified all the soil types in Northern Province of Sri Lanka.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
மண்ணின் முக்கியத்துவம் பயிர்ச்செய்கையில் மட்டுமல்ல சூழல்தொகுதியின் முழுமையான இயக்கத்திலும் பெரிதும் உணரப்பட்டுள்ளது. தேவையான ஊட்டச்சத்து, அவசியமான நீர் மற்றும் வளர்வதற்குகந்த சூழல் என்பன மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கின்றது. மண்ணிலும் உயிர்ப்புடைய மண் தனித்துவமானது. உயிர்ப்பு என்பது இங்கே நன்மைதரும் பலவகை நுண்ணங்கிகள் சூழமைவுடன் காணப்படுவது எனப் பொருள்படும். அதிலும் எங்கள் மண் எனும் போது எமக்கும்; மண்ணுக்குமான உறவுநிலை இறுக்கமடைகின்றது. அப்படியொரு இடைவிடாத பிணைப்பு எமக்கும் நாம் பிறந்த மண்ணுக்குமானது.
இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் வடமாகாணத்தின் மண்ணை அகழ்ந்தெடுத்து ஆய்வு செய்து அதன் தன்மைகளை, வகைகளை கண்டுபிடித்து அவற்றுக்கெல்லாம் பாகுபாடு கொடுத்த பெருமைக்குரிய மண்ணியல் நிபுணர் ( Soil Scientist ) யாழ்ப்பாணத்தின்; ஏழாலையில் பிறந்து அந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த அமரர் கலாநிதி வில்லி தனபாலன் Joshua (Dr. Willie Dhanapalan Joshua) அவர்களாவர். தாய்தந்தையருக்கு பிறந்த ஐவரில் இரண்டாமவராக அவதரித்த அமரர் Nஐhசுவா அவர்கள் தாம் பிறந்த பிறப்புக்கான அர்த்தத்தை பெற்றமனங்கள் நிதம்மகிழ பாரினில் புலமையில் உயர்ந்து பிறந்த மண்ணின் பெருமைமிகு மைந்தனுமானார். மேற்கூறிய சிறப்புக்குரிய பெருமகனார் தனது 87வது வயதில் இயற்கையெய்தி தாம் பிறந்த மண்ணினுள் அமரருமானார்.
எமது பிறப்பும் வளர்ப்பும் வாழ்வும் இறப்பும் மண்ணுடனேயே அதன் பாசப்பிணைப்புடனேயே ஒன்றிவிடுகின்ற போதும் அந்த மண்ணின் அமைப்பை அதன் சிறப்பை அளவறிந்து, அருமையறிந்து, இன்னமும் துல்லியமாக அதனை பாகுபடுத்தி பெயரிட்டும் அழகுபார்த்ததோடு அதன் முக்கியத்துவத்தை அதிலேற்படும் மாற்றங்களை வேறுபடுத்தி இனம்பிரித்து தகவல்திரட்டாக தகவல்களஞ்சியமாக விரிவான படங்களின் மூலம் விளக்கிய பெருமை அமரர் Joshua அவர்களையே சாரும். வடமாகாண மண்ணைப் பற்றி முணுமுணுத்தாலே அமரர் Joshua வின் பெயரும் அவசியம் சேர்த்து உச்சரிக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகும்.
என்றுமே புன்சிரிப்புடன் இருக்கும் இவரின் மகிழ்ச்;சியான முகமும் அளவறிந்த பேச்சும், தன்னடக்கமான அமைதியான தோற்றமும் அவருள்ளிருந்த ஆளுமையும் போற்றத்தக்கது. விவசாய திணைக்களத்தில் மண்ணியல் நிபுணராகவும் (Soil scientist) இன்னும் நிலப்பயன்பாட்டு துறையில்; (டுயனெ ரளந னiஎளைழைn) பணிப்பாளராகவும் கடைமையாற்றினார். அதிலும் மண்ணில் புலமையாளனாக பரிணமிப்பது என்பது இன்னுமொரு பாக்கியம். கல்வியிலும் ஆய்விலும் அனுபவத்திலும் மக்களுக்கான பணியை செய்வதில் சிறந்து விளங்கிய இப்பெரியவரால் வலிகாமத்தில் அமைந்த ஏழாலை மண் கௌரவம் பெற்றதுடன் இலங்கை விவசாய திணைக்களமும் மேலும் பெருமைபெற்றது எனலாம்.
அமரர் Joshua அவர்கள் ஆரம்பக்கல்வியை உடுவில் மகளிர் கல்லுரியிலும் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் இளமாணி பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தில் வேதியியலிலும் கற்று 1967ம் ஆண்டு கனடாவில் தனது கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டவா.; இலங்கையின் விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயத்திணைக்களத்தில் ஆய்வாளராக பலஆண்டுகள் பணிபுரிந்து அரச பணியிலிருந்து ஓய்வுபெற்றார். விவசாய திணைக்களத்தின் பணிப்பாளராகவும் நிலப்பயன்பாடு பற்றிய திட்டமிடல்களில் இவரது புலமைத்துவத்தின் பலனை அவரிடமிருந்து பலர் பெற்றிருக்கின்றனர். விவசாய திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றிய அமரர் Nஐhசுவா அவர்கள் ஓய்வின்றி உழைத்த பெருமகனார். இவரது மண்ணியல் நிபுணத்துவத்தை இலங்கையின் மண்ணைப்பற்றி ஆய்விலீடுபட்ட கல்விமான்கள் பயன்படுத்தியதும் அவரின் ஆலோசனைகளை உள்வாங்கி ஆய்வுகளை விரிவாக்கியதும் உண்டு. மேலும் நிலபயன்பாட்டின் முழுவடிவத்தையும் வரைபடங்கள் மூலம் விளக்கி மண்ணின் மகத்துவத்தையும் அதன் இயல்புகளையும் வெளியிட்டு அரும்பணியாற்றியவர். எமது பிரதேசத்து மண்ணின் நிலபயன்பாட்டை ஜடுயனெ ரளநஸ ஆய்வு செய்து அதனது சிறப்பை, பயன்படும் தன்மையை துல்லியமான ஆய்வுத்தகவல்களை திரட்டி பரிந்துரை செய்ததுடன் பலரது ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் இன்னமும் திகழ்கின்றார்.
வடபகுதி மண்ணை ஆய்ந்தெடுத்து அவற்றுக்கான விஞ்ஞான விளக்கத்துடனான படங்களை உருவாக்கி அதனை சஞ்சிகைகளில் வெளியிட்டு நூல்களில் பதிப்பித்து தனது ஆய்வுப் புலமையை நிரூபித்தவர் என்றால் மிகையாகாது. இலங்கையின் மண்ணியல் ஆய்வியல் நிபுணரான மறைந்த கலாநிதி பாணபொக்கே (டுயவந னுச. Pயயெடிழமந) அவர்களுடன் இணைந்து விவசாய திணைக்களத்தில் பணிபுரிந்த காலத்தில் மண்ணியல் தன்மைகளை கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்திய எமது தேசத்தின் பெருமைக்குரியவர். வடபகுதி மண்ணின் வகைகள், அவற்றின் தனித்துவத்தன்மைகள், மற்றும் அவற்றிலுள்ள கூறுகள் என அனைத்தையும் வடமாகாணத்தின் பல இடங்களில் அகழ்ந்து ஆய்வுமூலம் கண்டறிந்து வெளிட்ட பெருமகனாரி;ன் ஆக்கங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் இன்றும் மண்ணினை புரிந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் மேற்படிப்பு மாணவர்களுக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அபிவிருத்தி நிறுவனத்தில் நிபுணராக ஆலோசகராகவும் கடமையாற்றியவர். இவற்றுக்கும் மேலாக இலங்கையில் அமைந்துள்ள அனைத்துலக நீர் முகாமைத்துவ நிறுவனத்தில் ஜஐவெநசயெவழையெட றுயவநச ஆயயெபநஅநவெ iளெவவைரவநஸ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். வடபுலத்து நீர்பற்றிய ஆய்வுகளில் தன்னை இணைத்துக் கொண்ட அமரர் Nஐhசுவா அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான நீரை வன்னிப்பரப்பிலிருந்து பெறுவதற்கு வழிவகைகளை எடுத்துக்கூறியவர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வகைதொகையின்றி ஆழமாக தோண்;டப்படும் குழாய்க்;கிணறுகள் பற்றியும் தொடர்ந்து தோண்டுவதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் மக்களுக்கு விளக்கமாக தெரிவித்தவர். மேலும் வடபகுதி நீர் உவர்நீராவது பற்றிய விடயங்களை ஆய்வுப்பரப்பில் வெளியிட்டு நன்னீர் வில்லையின் தன்மைபற்றியும் அதனை பேணவேண்டிய வழிமுறைகளையும் பரிந்துரைத்தவர். தனது தொழிலில் நேர்த்தியாக அறிவுக் களஞ்சியமாக அனுபவசீலராக தாமாகவே முன்னின்று ஆய்வு செய்வதில் சிறப்புக்குரியவராக பணிபுரிந்த காலத்தில் துடிப்புமிகு இளைஞனாகவே வலம்வந்த மகாசீலராவார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் கிளிநொச்சியிலிருந்து 1998களில் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் இயங்கியபின் மீண்டும் விவசாய பீடத்தை கிளிநொச்சி நோக்கி நகர்த்துவதற்கான முன்னெடுப்புகள் 2012ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டபோது அறிவியல் நகரில் தற்போதமைந்துள்ள நிலத்தின் தன்மை பற்றியறிய உருவாக்கப்பட்ட குழுவில் மண்ணியல் நிபுணராக இணைந்து பணியாற்றியவர். ஓய்வுநிலையிலும் அவரது குடும்பத்தவர்கள் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தபோதும் எமது பிரதேசத்திற்கு வந்து தனது அறிவினை பெற்ற அனுபவங்களை அனைவருக்கும் பகிர்ந்த மேன்மைக்குரியவர்.
விவசாய பீடத்தின் வருகை விரிவுரையாளராக பணியாற்றிய அமரர் Nஐhசுவா அவர்கள் ஆய்வு மாணவர்களுக்கு நிலப்பயன்பாடு பற்றியும் மண்ணின் இயல்புகள் பற்றியும் விரிவுரையாற்றியதுடன் நீர் முகாமைத்துவம் தொடர்பான விரிவுரைகளையும் ஆற்றியுள்ளார். மேலும் ஆய்வுமாணவர்கள் இருவருக்கான மேற்பார்வையாளராகவும் ஆலோசகராகவும் பணிபுரிந்து வடமாகாணத்து மண்ணின் தன்மைகள் பற்றிய ஆய்வுக்கு ஆலோசனை வழங்கிய பெருமகனார். வறுமையில் தவித்த மாணவர்கள் சிலருக்கு பொருளாதார உதவியையும் வழங்கி அவர்களின் கல்விக்கு உறுதுணையாகவுமிருந்தவர்
இவையனைத்துடன் இவருடைய அன்பான அழகான குடும்பமும் பிள்ளைகள் மூவரும் பேரப்பிள்ளைகள் இருவரும் குடும்ப உறவுகளுடன் அன்னாரின் அமரத்துவத்தை சிறப்பித்த நாளில் ஏழாலை தெற்கில் விலூசிற்றியில் அமைந்துள்ள இலங்கை அமெரிக்க மிஷன் சர்ச்சில் அன்னவரின் பெருமையை எடுத்தியம்பிய வேண்டுதலில் அமைதியான அந்த உன்னத ஆத்மா சாந்தியடைந்ததை உறுதிசெய்தமை அவர் பிறந்த ஏழாலை மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்ததுடன் அந்நிகழ்வின் போது இயற்கையும் மழைபொழிந்து அம்மண்ணை குளிர்வித்து தனது நல்லாசியையும் வழங்கியமை வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோருக்கு கிடைக்கும் கௌரவமாகும்.
அமரர் Nஐhசுவா அவர்களின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த வரலாறு, அவரின் திறன்மிகு செயற்பாடுகள், அவர் சாதித்த புலமைச் சான்றுகள், ஆய்வுகளில் ஆளுமையில் சந்தித்த நெருக்கடிகள,; அதில் துணிந்து நின்று தனது புலமையை வெளிக்காட்டிய திறமை என பலதும் எமது எதிர்கால சந்ததிக்கு நல்ல பாடமாகவும் வாழ்க்கைக்கான நல்வழிகாட்டிகளுமாகும். பிறந்தால் வளர்ந்தால் வாழ்ந்தால் தமது தனித்துவத்தை சஞ்சலமின்றி வெளி;ப்படுத்தும் வாண்மையும் அமரர் Nஐhசுவா போல அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.
"With the new arrivals let the New Year freshly harvest, feed all and bless the families "
This article describes about the arrival of the new year 2025, with the special celebration of "Pongal" worshipping Sun will brings new arrivals, harvest first, feed all, and bless the families, the ultimate unit of Food security.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
தமிழர்தம் வாழ்வில் பொங்கல் [Thai Pongal] திருநாள் சிறப்பாகவே கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் (பதிக்கும்) இத்திருநாள் வாழ்வில் ஒளியேற்றும் நன்னாளாகவே போற்றப்படுகின்றது. பஞ்சம் பட்டினியகன்று அனைவருக்கும் உணவு கிடைக்கும் வருடமாக நலிவுற்றிருக்கும் மக்களுக்கான ஊட்டச்சத்தையும் உற்பத்தி செய்து அனைவரும் சுகதேகிகளாக குடும்பநலம் பேணி வாழ்வாங்கு வாழ வழிசெய்யும் என அனைவரும் எதிர்பார்த்திருக்;கின்றனர். விவசாய செய்கையிலீடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டமென்றாலும் தினந்தினம் வாழ்வாதாரத்திற்குள் சிக்கிச் சிதையும் குடும்பங்களுக்கும் இத்திருநாள் நன்மைகள் பல தந்து இவ்வருடத்தில் உயர்வுபெற வழிசெய்யும் என நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை. தன்னம்பிக்கையே அதற்கான உந்துதல். அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாசக உறவுகளுடன் நாமும் மனதார வாழ்த்துகின்றோம்;.
இவ்வருடம் வழக்கம் போல புதுமைகளை அள்ளித்தரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. பொருளாதார சரிவினால் மக்களின் வாழ்வாதாரம் தடுமாறிப்போயிருக்கின்றது. விலைகள் பலமடங்கு உயர்ந்து விட்டன. இருபது ரூபாவிலிருந்த சோளம்பொத்தி நூறாகிவிட்டது. இதுவொன்றே உதாரணமாகி விலைகளை உயர்ந்திருப்பதை பொருளாதார சரிவு காரணமாகி விட்டது. இவ்வருடம் பொருளாதார மீட்சியென்பதனை ஒரளவிற்கு உறுதிசெய்வதற்கு எமது உற்பத்தியும் கணிசமான அளவு பங்களிக்க வேண்டும். பொருளாதார சரிவு சரிப்பட்டாலும் எகிறன விலைகள் இறங்க மறுக்கும். அள்ளியெடுத்த பணத்தை ஏந்தியபடியே வர்த்தக கைகள் ஏங்கிநிற்கும். எந்த நிலைமையையும் அனுசரித்து செல்லும் வாழ்க்கை முறையில் வாழப்பழகிய எம்மவர்களுக்கு இவ்வருடத்தில் நிகழப்போகும் மாற்றங்கள் உறுதுணையாக இருக்கும் என நம்புவோம். மாற்றம் நிகழவேண்டும் மாறுதல்கள் அனைவருக்கும் அனுகூலமானதாக அனைவரும் நன்மைபெறும் விதத்தில் எமக்கான வாழ்க்கையை வாழ வழிசெய்தல் வேண்டும்.
ஆட்சி மாற்றங்கள் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை [People centered Economy] வலுவடையச் செய்தல் வேண்டும். தேசத்தின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் உற்பத்தி பொருட்களின் தரத்திலும் அளவிலும் இன்னும் மதிப்பேறி உலக சந்தைக்குள் உள்வாங்கப்படும் நிலைமையை உருவாக்கும் நிலை எழவேண்டும். அந்நிய செலாவாணி விடயத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிகவும் குறைவு. எமது உற்பத்தி உலகசந்தையில் போட்டிபோடும் நிலைக்குயர்ந்தாலன்றி அந்நியசெலாவாணியில் அதிகரிப்பு இருக்காது. பிறநாடுகளிலிருந்து உலகசந்தையில் உலாவரும் பனம் பொருட்கள் எமது தேசத்திலிருந்து இல்லை. இந்த இடைவெளி நிரப்பப்படல் வேண்டும். உலகமயமாக்கலில் பிறதேசம்; புகுந்தோர் நல்லெண்ணமாக நம்மூர்வந்து இங்குள்ள வளங்களை இயற்கைவளத்தை இன்னும் சேதனகழிவுகளை மீள்சுழற்சி செய்யக்கூடிய எளிமையான தொழினுட்பங்களை உள்வாங்கி தனிமனித குடும்ப பொருளாதார சரிவிற்கு ஆறுதல் தரவேண்டும். எமது வளங்களை சுரண்டுதல் என்னும் போர்வைக்குள் இல்லாது இருக்கின்ற வளங்களை வினைத்திறனாக மாற்றும் காரியங்களுக்கு முன்னுரிமை தரப்படல் வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரம் சிறக்கும் நிலைமை ஏற்படவேண்டும். தொழிலென்றும் வாழ வழிசெய்கிறோமென்றும் வந்து தமது வளர்ச்சியை மட்டும் குறித்தியங்கும் நிறுவனங்கள்;; வாழ்வாதாரத்தை நம்பி எமது மக்கள் மீண்டும் செயற்கை சிறையிலிருக்க வழிசெய்யாதீர். அவரும் அவரவர் குடும்பங்களும் தமது கால்களில் ஊன்றி நிற்க அதற்கான பொறிமுறையை அமைத்து நடைமுறைப்படுத்தல் நன்று அது இறைசெயலுமாகும். எமது தேசத்தில் போரோய்ந்த பின்னர் வந்து செயலாற்றிய பிறதேசத்து நிறுவனங்கள் பல திட்டமிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியபின் அதன் பயன்பாடுகள் எவ்வாறு மேற்கொண்டு செயலாக்கம் பெறும் என்னும் எந்த அடிப்படை வரையறையே இல்லாது அவற்றை கண்காணிக்கும் பொறிமுறையும் இல்லாது காரியம் முடிந்தபின்னர் கழன்றுவிடுகின்றனர். செலவு செய்தவரை அனைவருக்கும் நன்மையே ஆனால் அதுவே முதலாக தொழிற்றுறையை விருத்திசெய்யும் நம்பகத்தன்மையை இழந்துவிடும் நிகழ்வுகளால் அதிகமாகி விட்டது. இதனால் நிவாரணத்திலேயே குடும்பத்தை நகர்த்த நினைக்கும் எந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மறுநாள் வாழ்வுக்கு உணவு சமைக்கும் செயற்றிறன் இவ்வாறான அனைத்து திட்டங்களுக்குள்ளும் இல்லாதிருந்ததுவும் மிகமுக்கிய காரணங்களாகும்.
எம்மவர் வாழ்வியலில் நாமே நம்பிக்கையற்றிருந்தால் எமக்கான விடிவு என்பது வெறுங்கனவாகவே காணப்படும். நம்பிக்கை கொண்ட சமூகமாக நாம் அனைவரையும் ஒன்றிணைக்கும் செயலூக்கத்திற்கு முன்னிற்போம். எமது உற்பத்தியை நெறிப்படுத்தி விளைச்சலை அதிகரிப்பதற்கான முன்னேற்பாடுகள் அவசியம் எடுத்தாக வேண்டும். வளர்ந்து வரும் விஞ்ஞான தொழினுட்பங்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்தல் அவசியமானதாகும்;. இதனோரம்சமமாக மக்களை வளப்படுத்தும் தொழினுட்ப அறிவை வழங்குவதன் மூலம் அவர்களையும் எமது அபிவிருத்தியின் நீரோட்டத்திற்குள் இலகுவாக இணைத்துக் கொள்ள முடியும். தகவல் தொழினுட்பம் விஸ்வரூபமெடுக்கும் காலங்களாக எதிர்காலம் இருக்கப்போகின்றது என்பது மட்டும் நிதர்சனம். இளைய சமூகத்தை இதன்பால் நகர்த்துவது அவசியமாகும். இதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி என்பன அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.
இவையனைத்தும் ஒருபக்கமிருக்க எமது சுகாதாரத்தி;ல் நெகிழ்ச்சித் தன்மை உருவாகிக் கொண்டிருக்கின்றது. எங்கும் எவரையும் கேட்டாலுமே புற்றுநோயால் அவதிப்படும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதும் வயது பால் வேறுபாடின்றி மக்களில் புற்றுநோய் அதிகரிக்கும் தன்மை காணப்படுகின்றது. எமது மருத்துவத்துறை முழுமையான பங்களிப்பை நல்கியும் பல நோய்களின் உருவாக்கம், பரவல் என தினந்தினம் பலமக்கள் அல்லலுறுகின்றனர். நாம் உண்ணும் உணவு நிறையுணவு என்பதற்கப்பால் நஞ்சற்ற உணவென்பதனை நிர்ணயஞ்செய்யும் வரையறைகள், அவற்றை உற்பத்தியாக்கும் கட்டுப்பாடுகள் இன்னமும் இறுக்கமாக இருந்தால் மட்டுமே எமது வருங்கால சுகதேகிகளான சந்ததியை நாம் கொண்டிருக்க முடியும். வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பலவகையான உணவுப்பொருட்களில் அதிகம் பீடைநாசினிகள் செறிந்திருக்கும் உண்மைகள் பல வரஆரம்பித்து விட்டன. முறையான சிகிச்சையின்றி பராமரிப்பு இன்றி எம்மை தேடிவரும் நோய்களிலிருந்தும் எம்மவர்களை காப்பாற்றவேண்டும். தொற்றாநோய்களுக்குள் மட்டும் குடும்ப சுகாதாரம் வரையறை செய்து கொள்ளவில்லை மாறாக தொற்றுநோய்களையும் கவனத்திலெடுத்து அவற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்து வகைகள் கிடைத்திட ஆவனசெய்திடல் அவசியம்;. எமது தேசத்து சுகாதாரத்துறையின் பங்களிப்பு மிகவும் போற்றுதற்கரியது. சிறந்த செயற்றிறனுடன் இயங்கும் இத்துறையும் மக்களாகிய நாமும் ஒன்றிணைந்து அனைத்து சவால்களையும் வெல்ல வேண்டும்.
கோவிட் 19 போல இன்னொரு தொற்றுநோயை எமது தேசம் காணக்கூடாது. முறையாக கவனிக்கமுடியாமலும் பரிகரிக்க முடியாமலும் பலர் தவித்த தவிப்பு அந்நேரத்தில் காணமுடிந்தது. மருத்துவத்துiயிலேயே இழப்புக்களை ஏற்படுத்திய நோயது. தனிமைப்படுத்தல், பரிகரித்தல் என்பன மேற்கொண்டும் இந்நோயினால் பலர் இறப்புக்களை சந்தித்தனர். குறிப்பாக உடலில் எதிர்ப்புத் தன்மை நலிவடைந்திருந்தவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புக்களைப் பெற்றதால் இந்த நிலை உருவானது. தற்போது சீனாவில் கோவிட் 19 போன்ற இன்னொரு வைரசு பரவ ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. எமக்கு இது இன்னும் அதிகளவில் உணரப்படாததால் நாம் எந்த வித கரிசனையும் கொள்ளவில்லை. நிலைமை மாறும் போது மீண்டும் அந்த தனிமைப்படுத்தல் யுகத்திற்குள் செல்லவேண்டியும் ஏற்படலாம். எனவே இவ்வாறான தொற்று நோய்கள் வராது தடுக்கும் பொறிமுறைக்கு நாம் ஒத்திசைவாக இருத்தல் அவசியம்.
சந்தைப்படுத்தல் காலங்காலமாக முழுமையாக சீர்செய்யப்படாமலேயே தவித்திருக்கின்றது. இதனை முறையான பொறிமுறைக்குள் உள்ளீர்த்தால் விவசாய விளைபொருட்களுக்கான சிறந்த விலையை விவசாயபெருமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதோடு அவர்களை பயிர்அழிதல் அல்லது பயிர் நோய்ப்படுதல் செயலுக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியும். விவசாயத்தையும் விவசாயியையும் காப்பாற்றும் பொறிமுறைகள், அதற்கான சட்ட திட்டங்கள் அனைத்தும் இன்னும் செம்மைப்படுத்தப்பட்டு விவசாய அபிவிருத்தியின் முன்னகர்தலை இவ்வருடம் மேற்கொள்ளும் என முழுமையாக நம்பலாம். எமது முறையான பங்களிப்பு இந்த அனைத்து செயலூக்கத்திற்கும் தேவைப்படும். நாமும் அதற்கு தயாராகி எமது பங்களிப்பை முழுமையாக வழங்கினால் நாடு மீண்டும் புதுயுகம் நோக்கி நடைபோடும்.
"Exotic Pests and African Snails: Sudden increase will create problem"
This article describes about the exotic pests in the field as well as the african snails which are recently establishd in large numbers and started damaging the crops, these sudden increase will create problem.
அந்நிய பீடைகளும் ஆபிரிக்க நத்தைகளும் - திடீர்ப்பெருக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் !
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது தேசம் அந்நிய ஆதிக்கத்துக்குள் உள்வாங்கப்படுவது என்றுமே புதிதல்ல. இது ஆட்சிபற்றிய கதையல்ல மாறாக அந்நிய தேசத்து களைகள் பூச்சி பீடைகள் இன்னும் நோய்கள் என வேற்று தேசத்திலிருந்து எமது தேசத்தினுள் ஏதேனும் ஒரு வழிமுறையூடாக வந்து சேர்ந்த பின்னர் எமது பயிர்ச்செய்கையில் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன. அந்நிய தேசத்திலிருந்து வருகை தரும் இம்மாதிரியான உயிரினங்கள் உயிரிகள் மற்றும் நுண்ணங்கிகள் இங்குள்ள சாதகமானசூழலை தமக்கு மிகவும் சாதகமானதாக ஆக்கிக் கொள்வதுடன் பல்கிப்பெருகவும் செய்கின்றன. வந்தேறும் இவ்வாறான பீகைளுக்கான எதிர்ப்பு நிலைமை இங்கில்லாதபோது அவற்றினை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் பொறிமுறையும் வலுவிழந்து போய்விடுகின்றது. இந்த நிiமை அவ்வப்போது எமது தேசத்தில் நடைபெறுவது வழமையாகிவிட்டதற்கு மிகமுக்கிய காரணமாக எமது பாதுகாப்பு பொறிமுறையிலுள்ள பின்னடைவு என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. இது வளர்ந்த நாடுகளில் நடந்தால் அங்குள்ள பாதுகாப்பு பொறிமுளை முளையிலேயே கிள்ளியெறியும் கட்டமைப்பினூடாக தடுக்கப்பட்டு விடுவது தான் இதற்கு காரணமாகும்.
இந்த வகையில் 2019ம் ஆண்டில் வந்து சேர்ந்த கோவிட் வைரசுவும் இங்குள்ள மனிதர்களில் பலரின் உயிரை காவுகொண்டதும் இன்னமும் அதன் தாக்கம் இருப்பதனை உணரத்தலைப்பட்டவர்களும் இருக்கின்றனர். கோவிட் 19 இனது தொற்றினைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளினால் பலருக்கு பின்னாளில் புற்றுநோய் தொடங்கி பல பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளமையும் அறிய முடிகின்றது. இந்த கதை முடியமுன்பு சீனாவில் இப்போது புதுவகை வைரசுவின் தொற்று ஆரம்பித்து பல மாகாணங்களில் மக்களிடையே பரவிவருவதாக அறியக்கிடக்கின்றது. மீண்டும் முகமூடியுகத்திற்கு இட்டுச்செல்லும் இம்மாதிரியான தொற்றுக்களால் மக்களின் வாழ்வியலில் பாரிய தாக்கங்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் மருத்துவ உலகம் திகைத்து நிற்கின்றமையையும் காணலாம். விலங்குகளில் காணப்படும் அரியவகை வைரசுக்கள் மனிதர்களில் தொற்று ஏற்படும் போது இன்னும் வீரியமாக பரவுவதனை அவதானிக்க முடிகின்றது. பரவுவது மட்டுமல்லாமல் பலரின் உயிர்களை காவுகொள்ளும் வீரிமான காரணியாhக காணப்படுவதுடன் அநேகமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்த அல்லது அதில் பாதிக்கப்பட்டவர்களை இலகுவில் தாக்கி அவர்களின் இறப்புக்கும் காரணமாகிவிடுகின்றது.
உள்வரும் அந்நிய பீடைகளுக்கு இங்குள்ள சுவாத்திய நிலைமை அனுகூலமாகிவிடும் போது அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திணறவேண்டியிருக்கின்றது. அந்த வகையில் தாவர களைகளான பாதீனியம், நாயுண்ணி, ஆகாயத் தாமரை தொடங்கி பூச்சிபீடைகளான முருங்கை முடிச்சு குளவி, மாவுப்பூச்சி, சோளத்து இராணுவ புழு (Fall army worm), சிற்றுண்ணிகளில் தென்னை சிற்றுண்ணி (Coconut mite) மற்றும் தாவரநோய்களான வாழையில் குருத்தடைப்பு, மற்றும் பலவகையான நோய்கள் எமது தேசத்திற்கு அந்நியதேசத்திலிருந்து வந்து பல்கிப்பெருகி பலவகையில் சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்றும் அவற்றிலான சேதம் இன்னமும் இருந்துகொண்டேயிருக்கின்றது. இவ்வாறாக வந்து சேரும் அந்நிய உயிரினங்கள் இங்குள்ள காலநிலைக்கு மண்வளத்திற்கு சுவாத்தியத்திற்கு அனுசரித்துப்போகும் நிலையிலிருப்பதனால் அவற்றை கட்டுப்படுத்துவது மிக மிக கடினமானதாக இருக்கின்றது.
இவ்வாறாக எமது தேசத்திற்குள் வந்து சேரும் இவ்வாறான அந்நிய உயிரினங்களினாலான சேதங்கள் மிகவும் அதிகமாக காணப்படுவதனாலும் அவற்றுக்கான இயற்கையான எதிரிகளான ஒட்டுண்ணிகள், இரைகௌவிகள் மற்றும் நோயாக்கிகள் என்பன எமது சூழல் தொகுதியில் இல்லாதிருப்பதும் இருந்தாலும் வீரியம் குறைந்தனவாகவும் காணப்படுவதனால் இவ்வகையான வந்தேறு பீடைகள் பல்கிப்பெருகிவிடுகின்றன. இன்னும் இவ்வாறான நத்தைகள் பற்றியஅறிவு மக்களிடம் குறிப்பாக விவசாயப் பெருமக்களிடம் செல்ல வேண்டும்.
எமது பயிர்ச்செய்கையில் கால்நடைகளில் சேதத்தை ஏற்படுத்தும் வந்தேறிகளிலிருந்து அவற்றைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் அவை பற்றிய அனைத்து தகவல்களும் இல்லாதுவிட்டால் விரைந்து ஆய்வுக்குட்படுத்தி அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அவசியம் முனைப்புப் பெற வேண்டும். பிறதேசங்களில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு முறைகளை ஆய்வுக்குட்படுத்தி அதிலிருந்து எமது பிரதேசத்தில் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு முறைமைகளையும் மக்கள் துணிந்து பயன்படுத்தும் முறைகளையும் அவசியம் கண்டாக வேண்டும்.
கடந்த மாதம் பெய்த அடைமழைக்குப்பின்னர் இவ்வாறான உருவத்தில் பெரிய ஆபிரிக்க நத்தைகள் பெருகி வலம்வரத்தொடங்கிவிட்டன. இந்த பெரிய நத்தைகள் 1900 ஆண்டுகளில் கிழக்கு ஆபிரிக்க கரையோரங்களில் இருந்து எமது நாட்டுக்கு வந்தேறு குடியாகிவிட்டன. இவற்றினது பெருக்கம் பெரிதாக இதுவரையில் உணரப்படாதிருந்தும் தற்போது திடீரென பல்கிப் பெருகுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த நத்தைகளின் நகரும் வேகம் மிகவும் குறைவானது என்றாலும் தினமும் நகர்ந்து சென்து தமது இலக்கினை அடைந்துவிடுகின்றன. இவ்வாறான நத்தைகள் முன்பே இனங்காணப்பட்ட போதிலும் இவை ஆபிரிக்க தேசத்திலிருந்து எமது நாட்டுக்குள் வந்தேறிய குடிகளாகும். தாவரங்களை உணவாகக்கொள்ளும் இவ்வாறான நத்தைகள் பெரியளவில் இருப்பதனால் இவற்றினது உணவுண்ணும் அளவு அதிகமாகவே காணப்படுகின்றது. இதைவிட இவ்வாறான நத்தைகள் மனிதருக்கு மூளைமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிக் புழுக்களான நோய்க்கிருமியை காவிச் செல்கின்றன என்பதனை அறியமுடிகின்றது.
அளவில் பெரிதாக காணப்படும் இவ்வாறான நத்தைகளின் அளவு 20செ.மீ நீளமும் 10செமீ அகலமுமாக காணப்படுகின்றன. இந்த அளவில் வேறுபாடுகள் காணப்படுகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. செம்மண்ணிற அல்லது மண்ணிற நிறமான நத்தையின் ஓட்டில் கறுப்புநிறமான ஓரளவுக்கு அகன்ற நீள்பக்க வரிகள் ஓட்டின் அரைப்பகுதிவரை நீண்டு காணப்படுகின்றன. ஏழு தொடக்கம் ஒன்பது வரையான சுழிகள் உள்ள நத்தையின் ஓடு பாதுகாப்பான கவசமாக இருப்பதனால் இவை தம்மை எதிரிகளிலிருந்து இலகுவில் பாதுகாத்துக் கொள்கின்றன. ஒரு நத்தையின் நிறை சராசரி 32 கிராமாக காணப்படுகின்றது.
ஆபிரிக்க நத்தைகளில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இரண்டுமே காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமையை மண்புழுக்களிலும் அவதானிக்கலாம். அதனை ஈரிலிங்க உயிரினங்களாக (ர்நசஅயிhசழனவைந) காணப்படுகின்றன. இரண்டு நத்தைகள் இனக்கலப்பில் ஈடுபட்டால் இரண்டுமே தமது பெண்இனப்பெருக்க அமைப்புக்கள் மூலமாக முட்டைகளை உருவாக்கி இனம் பெருக்கும் வல்லமையுள்ளவை. ஏறக்குறைய 5 தொடக்கம் 6 ஆண்டுகள் வரை வாழும் வல்லமையுள்ள நத்தை தனது ஆயட்காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றது. பகலில் இவற்றினது அசைவு பெரிதாக உணரப்படுவதில்லை ஆயினும் இரவில் இவை அசைந்து தாவரங்களை உணவாக்கிக் ;கொள்கின்றன. எமது வீடுகளில் வளர்க்கப்படும் அழகுத் தாவரங்களில் வீட்டுத் தோட்டத்திலுன்ன பயிர்களில் இன்னும் ஏனைய தாவரங்களையும் உணவாக்கும் இந் நத்தைகள் எமது தேசத்து உயிர்ப்பல்வகைமைக்க அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றன. இதனை சுற்றுச்சூழல் அமைச்சின் உயிர்ப்பல்வகைமை திணைக்களத்தின் தகவல்கள் உறுதிசெய்கின்றன.
இவற்றை கட்டுப்படுத்தவதற்கான தகவல்கள் மிகக்கணிசமானதாகவே காணப்படுகின்றன இருப்பினும் மெற்றல்டிகைட், மெரையோகாப் மற்றும் இரண்டையும் கலந்த நத்தைநாசினிகளை எண்ணிக்கை அளவுகதிகமாக காணப்பட்டால் விசிறலாம். நத்தையின் கோது நத்தை நாசினிகளை உட்செறிய விடாது என்பதனையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். கைகளால் இவற்றை பிடித்தழிப்பதானால் கையுறைகளை அவசியம் அணிதல் நல்லது. தொற்றுநோய்க்கிருமிகளை காவுவதால் வெற்றுககைகளால் இவற்றை பிடிப்பதனை தவிர்ப்பது அவசியம்.
"The Conference reflecting the importance of Microorganisms "
This article describes about the Conference on "Microbial marvels and hazards: Exploring the unseen world" organized by the Sri Lankan Society of Microbiologists" at J Hotels, Jaffna on 7.12.2024. A preconference workshop was organized on 1) Awareness creation among school students of Jaffna, 2) Theme seminar on Microbiome in life. There are Gut microbiome, Animal Microbiome and Soil Microbiome.
நுண்ணங்கிகளின் முக்கியத்துவத்தை உணர்த்திய கருத்தரங்கு!
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது வாழ்வியலுடன் நுண்ணங்கிகளின் இயக்கமும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நுண்ணங்கிகளின்றி எதுவும் நடைபெறாது என்னும் நிலையில் உலக இயக்கம் மாறிக்கொண்டிருக்கின்றது. நன்மை தரும் தீமை விளைவிக்கும் நுண்ணங்கிகள் அவற்றின் செயற்பாடுகள் அனைத்தும் எமது வாழ்க்கை முறையில் மிகவும் அத்தியாவசியமான உயிரிகளாக ஆகிவிட்டன. இவைபற்றிய விழிப்புணர்வினை மேலும் ஏற்படுத்தவதற்காக இம்மாதம் 6ஆம் 7ம் திகதிகளில் இலங்கை நுண்ணங்கியியலாளர் சங்கத்தின் [Sri Lankan Society for Microbiologists] ஏற்பாட்டில் பதின்மூன்றாவது வருட நிகழ்வுகள் 6ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்ட படிப்புகள் பீட மண்டபத்திலும் 7ம் திகதி யாழ்ப்பாணத்திலமைந்துள்ள Nஐ ஹோட்டலிலும் இச்சங்கத்தின் தலைவரும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட நுண்ணியியல் துறை வாழ்நாள் பேராசிரியர் வசந்தி தேவநேசம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
இலங்கை நுண்ணங்கியியலாளர் சங்கத்தின் யாழ்ப்பாணகிளையின் ஏற்பாட்டில் ஆறாம் திகதி நடைபெற்ற நிகழ்வுகளில் காலையில் மாணவர்களுக்கான நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பு [Antimicrobial Resistance] பற்றிய விளக்கம் பலநிகழ்வுகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டன. நாம் அவசியமின்றி பயன்படுத்தும் நுண்ணுயிர்க்கொல்லிகள் பற்றியும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்றி இவ்வாறான நுண்ணுயிர்க்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் யாழ்ப்பாணத்திலுள்ள ஐம்பதுக்கும் அதிகமான பாடசாலைகளிலிருந்து நுற்றியம்பது மாணவர்களும் ஐம்பது ஆசிரியர்களும் பலநிகழ்வுகளில் பங்குபற்றியுமிருந்தனர். மாணவர் குழுக்களுக்கிடையிலான போட்டிகளும் நடாத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பு பற்றிய செய்திமடலும்; வெளியிட்டு வைக்கப்பட்டது. நுண்ணுயிரெதிர்ப்பு மருந்து வகைகளின் மாதிரிகள் அனைவரதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஆறாம் திகதி காலையில் இலங்கை நுண்ணங்கியியலாளர் சங்க தலைவரின் அறிமுக உரையுடன் நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பு பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியை கலாமதி முருகானந்தன் அவர்களது விளக்கவுரை சிறப்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நுண்ணுயிர்க்கொல்லி பயன்பாடு பற்றிய தனித்தனியான நிகழ்வுகளை மையப்படுத்தி வினாக்களுடன் அவர்களது குழுநாடகம் மூலம் விளக்கப்பட்டது. மாணவ மாணவிகள் மிகவும் விருப்புடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை காண முடிந்தது. அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வைதேகி பிரான்சிஸ் ரஐPவன் அவர்களினது 'நுண்ணங்கிகளும் மருந்துகளும் ' பற்றிய சிறப்புரையைத் தொடர்ந்து காலை நிகழ்வு முடிவுக்குவந்தது. மாணவ மாணவிகள் தமக்கிடையிலான நுண்ணங்கிகள் பற்றிய ஐயங்களை கேட்டு தெரிந்து கொண்டமை அனைவரினதும் கவனத்தையீர்த்தது.
மாலையில் நுண்ணுயிர்சூழகம் [Microbiome] பற்றிய கருத்தமர்வு மூவர்களின் விளக்கவுரையுடன் நடைபெற்றது. மனித சமிபாட்டுத்தொகுதி நுண்ணுயிர்சூழகம் பற்றி பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியை வஐpரா லியனபத்திரன அவர்களது விளக்கவுரையைத் தொடர்ந்து விலங்குகளில்; நுண்ணுயிர்சூழகம் பற்றி பேராதனை பல்கலைக்கழக பேராசிரியை கலுப்பகான அவர்களும் அதனைத் தொடர்ந்து மண்ணில் நுண்ணுயிர்சூழகம் பற்றி பேராசிரியர் கு. மிகுந்தனும் விளக்கவுரையாற்றினர். இதனை வாழ்நாள் பேராசிரியை வசந்தி தேவநேசம் அவர்கள் நெறிப்படுத்தி இறுதியுரையையும் நடாத்தினார். நுண்ணுயிர்சூழகம் என்னும் கருத்து பலவிடங்களில் சரியான புரிதலின்றி தவறாக நுண்ணங்களை மட்டும் குறிப்பிடுவதனை சிறந்த விளக்கங்களுடன் அதில் உரையாற்றியவர்கள் எடுத்துக்கூறினர். நுண்ணுயிர்சூழகம் பற்றிய கற்றை மற்றும் அறிவினை மேலும் விருத்தி செய்யும் வழிவகைகள் பற்றியும் கலந்தாராயப்பட்டது. நுண்ணங்கிகள் பற்றிய சிறந்த விளக்கத்தை மக்களுக்கம் மாணவர்களுக்கும் மேலும் பரப்புவதற்கான வழிவகைகளை இலங்கை நுண்ணங்கியலாளர்கள் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை எதிர்காலங்களில் ஏற்பாடு செய்யும் என எடுத்துரைக்கப்பட்டது.
ஏழாம் திகதி நடைபெற்ற வருடாந்த ஆய்வு மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக ஹெங்கொங் பல்கலைக்கழக வைரசுஆய்வு நிபுணர் பேராசிரியர் சிறியால் மலிக் பீரிஸ் [Josheph Sriyalal Malik Pieris] அவர்கள் 'உயிரியல்மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவனது பங்களிப்பு' பற்றி உரையாற்றினார். கோவிட ;வைரசு பற்றிய சிறப்பாய்வுகளை செய்த இவர் நுண்ணங்கியலில் சிறந்த புலமையாளராகவும் கடமையாற்றுகின்றார். இவரைத்தொடர்ந்து பேராதனை பல்கலைக்கழக இணைந்த மருத்துவ கற்கை பேராசிரியை சகீனா அவர்கள் ' நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பில் பன்முறைஅலகுகளின் தாக்கம் ' பற்றி சிறப்புரையாற்றினார். இவற்றைத் தொடர்ந்து மீண்டும் பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்களது 'உயிரியல் தொழினுட்பத்தின் இன்றையநிலை' பற்றிய சிறப்புரையும் நடைபெற்றது. மிகவும் ஆழமான சிறந்த விடயங்களுடன் இவ்வுரைகள் அமைந்திருந்தமை அனைவருக்கும் பயனுள்ளதாகவும் நுண்ணங்கியில் சார்ந்த பல வினாக்களுக்கு விடைகளை தந்ததாகவும் அமைந்தன. இவ்வுரைகளுக்கிடையே ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக பயனுள்ளதாக நடைபெற்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கை நுண்ணங்கியலாளர்களின் சங்கத்தின் வருடாந்த நிகழ்வுகள் இவ்வருடம் பேராதனைக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டுடன் நடைபெற்றமை சிறப்புக்குரியது. இதில் முக்கிய பங்காற்றிய கிளையின் தலைவி கலாநிதி திருமதி த திலீபன் மற்றும் செயலாளர் கலாநிதி திருமதி தேவகி ஞானகாருண்யன்; மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்புக்கள் இந்நிகழ்வுகளுக்கு உந்துகோலாக அமைந்தன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வெளியே இலங்கை நுண்ணங்கியியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகளுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்ததுடன் அதனது அனைத்து செயற்பாடுகளும் சிறப்பாக தரமானவையாக நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறான பலவிற்பன்னர்கள் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று அதிலுள்ள அறிவுசார் விடயங்கள் எமது மக்களுக்கு கிடைக்க ஆவனசெய்தல் வேண்டும்.
"Food security is in Question due to the drugs of Antimicrobial Resistance"
This article describes about the development of Antibiotic resistance due to the mishandling or misuse of those antibiotics and this created a vacuum in usage of any antibiotics if at all necessary against any infectious diseases. This ultimately affect the food security activities due to improper handling and keeping the people sick.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது அவசிய தேவைகருதி நுண்ணுயிர்க்கொல்லி (Antimicrobial Resistance - Drugs) இரசாயனங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவற்றின் பயன்பாடும் எதிர்பார்த்த அளவைவிட அதிகரித்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது. பலதேவைகளுக்காக நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) பதார்த்தங்கள் சந்தையில் பெருமளவில் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அவற்றின் பயன்பாடு தற்காலத்தில் மிகவும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் எதிர்பார்த்த அடைய எத்தனிக்கின்ற இலக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இன்னமும் இருக்கின்றது.
நுண்ணுயிர்க்கொல்லி தடுப்பு என்பது நுண்ணுயிரிகள் அவற்றுக்கெதிராக அவற்றை கொல்லவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிராக தமக்குள்ளே உருவாக்கும் தம்மை தப்பித்துக்கொள்ளவைக்கும் அல்லது அதற்கெதிராக செயற்படும் பொறிமுறையாகும். இதன் மூலம் தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் நீண்டகால பாவனையில் அவற்றுக்கெதிராக சக்தியற்றவையாக மாறிவிடும். இதற்கு நுண்ணங்கிகளில் காணப்படும் தப்பிப் பிழைத்தல் பொறிமுறை ஒரு காரணமாகும். இதில் ஆச்சரியப்பட வைக்கும் செய்தி என்னவெனில் வழக்கமாக நாம்; தொற்றுநோய்களுக்கான காரணிகளான பக்ரீறியா, பங்கசு, வைரசு மற்றும் புரட்டசோவன்கள் போன்றனவற்றுக் கெதிராக பயன்படுத்தும் மருந்துகளாகும்.
நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்க்கும் திறன் நுண்ணுயிரிகளுக்கு வரத்தொடங்கினால் வழக்கமாக எமக்கு வழங்கப்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பரிந்துரைகள் அல்லது நிவாரங்கள் எதுவும் செயற்படமாட்டாது. முhறாக அவை முற்றுமுழுதாக மலினப்படுத்தப்பட்டுவிடும். இதன் மூலம் அவ்வாறான மருந்துகளை நாம் பரிந்துரைத்தபடி பயன்படுத்தினாலும் அவை எமக்கான சாதாரண நோயைக்கூட மாற்றும் சக்தியிழந்துவிடும். இதன் விளைவாக மனிதகுலத்திலே இழப்புக்களும் இவைதவிர தாவரங்களை இன்னும் கால்நடைகளை இழக்கவும் நேரிடும்.
விவசாயத்தில் இதன் மூலம் உற்பத்தியிழப்பு, வாழ்வாதார பாதிப்பு, இவற்றுடன் சுற்றுசூழல் பாதிப்பு என்பன ஏற்படவும் இதன் மூலம் உணவுச் சங்கிலியில் தொற்று ஏற்படவும் வாய்ப்புக்களுண்டு. ஒவ்வொரு முறையும் நுண்ணுயிர்க்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவற்றுக் கெதிராக எமக்குத் தெரியாமலேயே நுண்ணுயிரிகளில் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடுகின்றது. இதனால் நாம் பயன்படுத்தும் நுண்ணயிர்க்கொல்லி மருந்துகள் எதுவுமே இறுதியில் பயனற்றதாகிவிடும். இதில் பலர் மருத்துவர்களின் பரிந்துரைகளை அலட்சியம் செய்து தாமே ஒரே நுண்ணுயிர்க்கொல்லிகளை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும். முறைப்படி மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே நுண்ணுயிர்க்கொல்லிகளை பயன்படுத்துதல் மிகவும் அவசியமானதாகும்.
நுண்ணுயிர்க்கொல்லி ஏதிர்க்கும் திறன் என்பது உலகளாவிய பிரச்சனையாகும். குறிப்பாக மனிதனிரும் விலங்குகளிலும் இந்தப் பிரச்சனை பூதாகாரமானதாக உருவெடுத்திருக்கின்றது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளிலும் மில்லியன் கணக்கான விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக உலக உணவு தாபன அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றுத.
இங்கே நுண்ணுயிர்க்கொல்லிகளை தாவர மற்றும் விலங்கு உற்பத்தியில்; பயன்படுத்துவதில் பல காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. சூழலை மாற்றியமைப்பதன் வாயிலாகவும் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதனாலும் ஊட்டச்சத்து மற்றும் கால்நடை முகாமைத்துவத்தை சிறப்பாக பேணுவதனாலும் நோய்களை வருமுன் தடுக்க முடியுமான நோரங்களில் நுண்ணுயிர்க்கொல்லிகளை தேவையற்று பயன்படுத்தல்
2. தாவர மற்றும் விலங்கு நோய் விற்பன்னர்களுக்கான தட்டுப்பாடு மற்றும் இவ்வாறான விற்பன்னர்களுக்கு தேவையான அவசியமான பயிற்சிகள் வழங்கப்படாமை
3. நுண்ணுயிர்க்கொல்லிகளை தவறாக உற்பத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் மருந்துகளாக கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்துதல்
4. நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை முறையான சிபார்சினடிப்படையி;ல் மக்களுக்கு கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்தல். மருந்தகங்கள் இது விடயத்தில் இன்னும் சிறப்பான நடைமுறையை கடைப்பிடித்தல்.
5. இணைய வழிமூலமாக நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் கிடைக்கின்றமையும் அவற்றை பலரும் வாங்கி அது பற்றிய அறிவின்றி பயன்படுத்துதலும்.
6. முறையற்ற திறனற்ற மிகவும் மலிவான நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளின் கிடைக்கின்ற தன்மையால் இதனை பலரும் இலகுவில் வாங்கி பயன்படுத்தும் தன்மை.
7. அதிகளவிலான பயன்பாடும் அதனால் அந்த நுண்ணுயிர்க்கொல்லிகள் பயனற்றுப் போவதும்
8. இவையெல்லாவற்றையும் விட எமது கலாச்சாரமும் அரசியல் ஆதாயமும் பொருளாதார நெருக்கடியும் நுண்ணுயிர்க்கொல்லிகளை முறையாக பயன்படுத்து விடாமை. எதற்கும் காசு பணம் என அலைகின்ற கூட்டம் இந்த விடயத்தில் தமது கைங்கரியத்தை காட்டுவதனால் இந்த நெருக்கடியிலிருந்து மீளமுடியாதிருக்கின்றமை.
விவசாயத்தில் நுண்ணுயிர்க்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்திருக்கின்றமைக்கு தாவரங்களில் குறிப்பாக விலங்குகளில் ஏற்படும் நோய்கள் முக்கிய காரணமாகும். அதிலும் உணவாக பயன்படும் பொருட்களை தரும் விலங்குகளில் பயன்படுத்தும் நுண்ணுயிர்க்கொல்லிகளின் தாக்கம் மிகவும் அதிகமானது. வுpலங்குகளை நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுத்தும் இவ்வகை மருந்துகள் இறுதியில் மனிதனுக்கு எமனாக மாறும் நிலையையும் நாம் காண முடிகின்றது. சிபார்சு செய்யப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பதிலாக குறிப்பாக நோய் வராமல் தடுக்கும் மருந்தகளுக்கு பதிலாக அதிகளவில் பயன்படுத்தும் மருந்துகளால் பாதிப்பு அதிகமே.
மீன்களுக்கு வழங்கப்படும் 70-80 சதவீதமான நுண்ணுயிர்க்கொல்லிகள் நீரிலேயே விடப்படுவதனால் அவை நீர்நிலைகளில் பரவுகின்றன. கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் 75-90 சதவீதமான நுண்ணுயிர்க்கொல்லிகள் சமிபாடடையாமலேயே வெளிவிடப்படுவதனால் கழிவுத்தொகுதியில் நிரப்பப்படுகின்றன. 2010இல் கால்நடைகளுக்க பயன்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க்கொல்லிகளின் அளவு 63,151 தொன்கள் இந்த நிலைமை 2030இல் 67சதவீதம் உயர்ந்து 105,596 தொன்களாக மாறிவிடும். ஆக மொத்தத்தில் நுண்ணுயிர்க்கொல்லிகளின் முறையற்ற பாவனையை தவிர்த்து உணவுப் பாதுகாப்பிற்கு இடர் ஏற்படுத்தாதிருப்பது அனைவரின் நல்வாழ்வுக்கு உறுதுணயாகும்.
"Black mould in the plants grown in households: Less damage due to the mould growth"
This article describes about the incidence of establishing Sooty Mould on the honey dew secreted by the sucking insects like whitefly. These hemipterans secrete honey dew which attracts the sooty mould air borne fungal sprores and grow on it, as a results a black colour is found on the plant leaves affecting the photosynthesis. However this mould is not a parasitic group and has less problem to the human beings other than having breathing difficulties to those asthmatic patients.
வாருங்கள் எம்மனிய உறவுகளே!
வரண்ட வானிலை வாட்டியெடுக்கும் அனல் காற்று. அவ்வப்போது மனமிரங்கி தருணம் பார்த்து கொட்டுவது போல மழை. பெய்தது போலிருக்கும் உடனடியாகவே நிலம் காய்ந்து விடும். ஆனாலும் தாவரங்களுக்கு ஆறுதல் தந்ததுபோல ஆங்காங்கே அள்ளித் தெளிக்கின்றது. இந்த நிலை இப்படியே செப்டம்பர் மாதம் வரையென எதிர்வு கூறல்கள் வந்து கொண்டேயிருக்கின்றது. என்ன செய்வது என தெரியாது பலரும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வீடுகளில் உள்ள தாவரங்களின் மேற்பரப்பில் ஒரு வகையான கறுப்பு பூஞ்சணம் (Black mould) வளர்ந்திருப்பதனை கண்ட மக்கள் இதுபற்றி அறிய விரும்பியதால் இந்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. இந்த கறுத்த பூஞ்சணம் சாறு உறுஞ்சும் பூச்சிகளால் வெளிவிடப்படும் ஒருவகையான தேன்சுரப்பில் வளர்வது ஆகும். சாறு உறுஞ்சும் பூச்சிகளான வெண்ணீ, செதில் பூச்சி, மாவுப்பூச்சி, அழுக்கணவன் மற்றும் இலைத்தத்தி ஆகியனவற்றினால் வெளியிடப்படும் ஒருவகை பதார்த்தமே இந்த தேன் சுரப்பு (Honey due).
சாறு உறுஞ்சும் பூச்சிகள் தாம் உறுஞ்சும் தாவர சாற்றின் 50 சதவீதத்தையே தமது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. மீதியான 50 வீதமான சுரப்பை அவை தேன்சுரப்பாக மாற்றி வெளிவிடுகின்றன. இவ்வாறாக வெளிவிடப்படும் தேன் சுரப்பில் மேற்கூறிய கறுப்பு பூஞ்சணம் தொற்றுதலாகி வளர்ந்து விடும். அதிகமான தேன்சுரப்பு வெளிவிடும் போதும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதும் அதிக தேன்சுரப்பு வெளியிடப்படுவதனால் அந்த தேன்சுரப்புகள் கீழள்ள இலைகளில் தண்டுகளில் படிகின்றபோது அதில் கறுப்பு பூஞ்சணம் தொற்றுதாலகின்றது. தேன் சுரப்பு இனிப்புத் தன்மையுடையதாக இருப்பதனால் கறுப்புக் வளியிலுள்ள பூஞ்சணத்தின் வித்திகள் விழுந்து முளைக்கின்றன.
கறுப்பு பூஞ்சணம் கப்நோடியம் (Capnodium) என்னும் வகையினதாகும். இந்த பூஞ்சணம் பல்வேறுபட்ட வெப்பநிலைகளை தாக்குப் பிடிக்கும் தன்மையுடையதாகும். அத்துடன் பரந்து வளரும் கறுப்பு பூஞ்சணம் தென்னையில் தொற்றுதலாகியிருக்கும் வெண்ணீயினால் வெளியிடப்படும் தேன்சுரப்பில் வளர ஆரம்பிக்கின்றது. தென்னை உயரமான மரமாக இருப்பதனால் அதிலிருந்து விழும் தேன்சுரப்பு கீழுள்ள மற்றைய மரங்களின் இலைப்பரப்புக்கள் காய்கள் கனிகள் என்பனவற்றின் மேலும் விழுந்து படிகின்றது. அதில் கறுப்பு பூஞ்சணங்கள் வளர்வது பரந்து வட்ட அளவில் இப்பூஞ்சணத்தினால் தொற்றுதலுக்குள்ளாகி அதிகரித்த சுட்டெரிக்கும் வெப்பநிலையிலும் தாக்குப் பிடிக்கின்றதென்றால் இதனது வீரியத்தை என்னவென்பது.
தாவரங்களில் பரந்து பட்ட அளவில் ஒரு படையாக வளரும் கறுப்பு பூஞ்சணம் இலகுவாக அனைத்து சிற்றிலைகளின் மேற்பரப்பிலும் வாழையாயின் அனைத்து மேற்பரப்பிலும் வளருகின்றது. தென்னை உயரமான மரமாக பழங்கள் இருப்பதனால் அதிலிருந்து வெளியேறும் தேன்சுரப்பு கீழுள்ள அனைத்து தாவரங்களிலும் படிந்து வீடுமுழுவதுமே வளரத் தொடங்கிவிடும். இந்த பூஞ்சணத்தின் வளர்ச்சியால் மனிதனுக்கு நேரிடையான பாதிப்ப எதுவும் இல்லையென கண்டறிந்தாலும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சாதகமானதாக இல்லை.
இலைப்பரப்புகளில ; வளரும் இக் கறுத்த புஞ்;சணத்தினால் ஒளித்தொகுப்பு பாதிக்கப்படுவதுடன் தாவரங்கள் சோபையிழந்து மஞ்சள் நிறமாகி பார்ப்பதற்கு நோய்வாய்ப்பட்டதை நினைவுபடுத்துகின்றத. மற்றைய காய்கள் கனிகளில் இந்நோய்கள் பரவதொடங்கிவிடும். அனைத்து தாவரங்களிலும் விழுந்த தேன்சுரப்பிலே இப்பூஞ்சணம் வளர்வதனால் இவற்றை சமாளிப்பது சிரமமாக இருக்கின்றது. இக்கறுத்த பூஞ்சணத்தின் வித்திகள் அதிகளவில் காற்றில் காணப்படுவதனால் சுவாச நோய் உள்ளவர்களுக்தகு இ;ப் பூஞ்சணத்தின் வித்திகள் ஒவ்வாமை தன்மையை ஏற்படுத்தும் தன்மையுடையது.
மேலும் மனிதருக்கோ அல்லது கால்நடைகளுக்கோ இப்பூஞ்சணம் தொற்றுதலாக இல்லாதிருப்பதனால் எதுவித பின்விளைவுகளும் இல்லை. ஆனாலும் இதனுடன் மிகவும் அவதானமாக இருத்தல் அவசியமானதாகும்.
"Natural Disasters to shake the world : The Climate is dancing inevitably
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நமக்கான அழிவை நாமே விதைத்து விட்டிருக்கின்றோமோ என உலகத்தின் நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் கட்டியங்கூறிக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நாம் எதிர்பார்த்ததை விட நிகழப்போகின்றன என்பது மட்டும் கண்கூடு. விஞ்ஞானத்தின் பல்வேறு பரிணாமங்களை நாம் உருவாக்கி அதனை எமது தேவைக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால் அதனது விளைவுகள் இன்னும் அபரிவிதமாக இருக்கப் போகின்றன என்பதனை மட்டும் நாம் நம்ப தயாராக இல்லை. எமது தற்றுணிவின் வீராப்பாக இது இருந்தாலும் இயற்கையின் பரிணாமங்களை நாம் இன்னும் பலவாறாக காண இருக்கின்றோம் என்பதனை மட்டும் இப்போதைக்கு ஊகிக்க முடிகின்றது. பாலைவன நாடாக காணப்பட்ட துபாய் நாட்டில் பெய்த அடர்மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் இதற்கொரு சான்று மட்டுமே. இன்னமும் பலவற்றை நாம் வருங்காலத்தில் எதிர்பார்க்க தயாராக வேண்டும்.
துபாய் நாடு கடந்த ஏப்ரல் 16 இலிருந்து 17ம் திகதி வரை இரண்டு வருடங்கள் முழுமையாக பெய்யும் மழை 24 மணித்தியாலங்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றது. பாலைவன பூமி வெள்ளக்காடானது. மழைக்காக ஏங்கியிருக்கும்; நாடு வான்பரப்பில் இரசாயனங்களை தெழித்து மழையை அவ்வப்போது பெற்றுக் கொண்டதாக தகவல். ஆனால் இரசாயனமே இல்லாது நாள்முழுக்க கொட்டித்தீர்த்து துபாய் நாட்டை பிரட்டிப்போட்டிருக்கின்றது அங்கேயுருவான வெள்ளம். கரைபுரண்டோடும் வெள்ளத்தைப் பார்த்து துபாய் மக்கள் என்ன உலகமே வியப்பிலாழ்ந்திருக்கின்றது. நடந்தது துபாய் நாட்டுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமான இயற்கையின் வெளிப்படையான செய்தி. பேரிடர்கள் இனி எங்கும் எப்படியுட் வராலாம். அதற்கு நாம் தயாராக வேண்டும். இயற்கைக்கு மறாக நாம் செய்யும் அனைத்து நிகழ்வுகளும் இத்தகைய பேரிடர்களை ஏற்படுத்தப் போகின்றன.
நம்நாட்டில் வழமைக்கு மாறான வெப்பநிலை அதிகரிப்பு, உஷ்ணமான காற்று, சிலவேளைகளில் காற்றென்று எதுவுமில்லாமல் இலைகுழைகள் அசைவு எதுவுமின்றி; தகிக்க வைக்கும் வெப்பநிலை. மரத்துக்குக் கீழே கூட ஒதுங்க முடியாதளவிற்கு மிகவும் வரண்ட காலநிலை. எங்கும் நீருக்காக ஏங்கும் மக்கள் அதுவும் நன்னீருக்காக குடிப்பதற்கு தேவையான நீருக்காக அலையும் மக்கள், கால்நடைகள் என இந்த குரோதி வருடம் பல இன்னல்களை எமக்கு தரவிருக்கின்றது என்பதும் மட்டும் தெரிகின்றது.
கடந்த கிழமை பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்று முடிந்த 'மாற்றமடையும் காலநிலையை மையைப்படுத்திய செயற்பாடுகளும் அவற்றுடன் உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக உணவுத்தொகுதியிலேற்படுத்தும் மாற்றங்கள்' என்னும் கருத்தில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆறு நாடுகளின் பிரதிநிதிகளும் அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழகமும்; ஒன்றிணைந்து பலகுழுகலந்தாய்வுகள் மூலம் பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்;.
அந்தந்த நாடுகளில் காலநிலைமாற்றத்தின் நிலைமைகள், அதற்காக அந்தந்த நாடுகளின் செயற்பாடுகள் திட்டங்கள் அனைத்தும் அலசிஆராயப்பட்டன. அரசாங்க கொள்கைகளை இன்னும் காலநிலைமாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கானதாக மாற்றியமைத்தல், வௌ;வேறு நாடுகளில் நடைமுறையிலிருந்கும் கொள்கைசார் செயல்வடிவங்கள், அவற்றின் குறைபாடுகள் மற்றும் செயற்றிறன்கள், என்பனவற்றை செப்பனிடுதல், இணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் மாறிவரும் காலநிலை பற்றிய எதிர்வுகூறல்களை துல்லியமானதாக விவசாயிகள் மற்றும் தொழிற்றுறைக்கு அறிவித்தல், இவை பற்றிய கற்றல் செயன்முறைகளை மெருகூட்டுதல், மேலும் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தல் என்பனவற்றுடன் தேவையான கணனிசார் தகவல்களை அனைத்து மட்டத்திலிருந்தும் பெற்று அதனை பயன்படுத்தி காலநிலை மாற்றத்திற்கான தகவல்களை துல்லியமாக அந்தந்த பகுதிசார்ந்த மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தல் வேண்டும்.
அந்த வகையில் ஊடகங்கள் மற்றும் இணைய வழி தகவல்களையும் மொபைல் தொழிநுட்பத்தினூடாக மக்களுக்க விரைந்து தெரியப்படுத்தும் செயலிகள் பிறநாடுகளில் இருப்பதனை சுட்டிக்காட்டி அவற்றை அனைத்து நாடுகளிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தல், கற்றல் செயற்பாடுகளில் அனைத்து மட்டத்திலும் இதற்கான கற்றல் பாடங்களை உருவாக்குதல், அவற்றை துறைசார் நிபுணர்களைக் கொண்டு மக்களுக்கு வழங்குதல் என பலவகையான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் இனங்காணப்பட்டுள்ளன. எமது பகுதியில் நிலவும் அதீத வெப்பநிலையின் தன்மை பற்றியும் அதனால் விவசாய செய்கை, கால்நடைவளர்ப்பு மற்றும் ஏனைய விவசாயஞ் சார் தொழில்களிலேற்படும் பாதிப்பு, பயிர்ச்செய்கையில் இன்னும் பயிர் அறுவடையில் அறுவடைசெய்ததை சந்தைப்படுத்துவதில் மேலும் மேலதிகமானதை களஞ்சியப்படுத்துவதில் என பல பிரச்சனைகளை மேலதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
நடப்பு நிலைமைகளுக்கேற்ற எதிர்வுகூறல்கள் வெளிப்படவேண்டும் என பலரும் அங்கலாய்க்கின்ற இந்நேரத்தில் இத்தகைய எதிர்வு கூறல்கள் பாரிய தகவல் திரட்டல் மற்றும் அவற்றை ஆய்ந்தறிந்து காலநிலையின் தன்மையை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் அவர்களை தயார்ப்படுத்துவதற்கும் தயார்நிலையில் இருப்பதற்கும் அனைத்தும் இணைந்த காலநிலை மாற்றத்திற்கான நிலையமொன்று வடபகுதியில் நிறுவப்படல் வேண்டும். இதில் வேண்டிய தொழினுட்பவசதிகளுடனிணைந்த அனைத்து துறைசார் நிபுணர்களையும் ஒன்றிணைந்த குழு உருவாக்கப்பட்டு மக்களுக்கு தேவையான நம்பகமான துல்லியமான எதிர்வு கூறல்களை முன்னெடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.
எமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பினையும் ஊட்டச்சத்து பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு இத்தகைய நிலையத்தின் உருவாக்கத்திற்கு அனைவரும் முன்வருவோம். எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் செயன்முறை மூலம் பேரிடர்களிலிருந்து எமது மக்களை காப்பாற்றும் பொறுப்பு எமக்கானது என்பதனை கருத்தில் கொள்வோம்.
"Todays Forum on South Asia Climate Change"
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
தற்போதய காலநிலை அதுவும் அதிகரித்த உஷ்ணம் என்பதனை அனைத்து நாடுகளும் உணரத்தலைப்பட்டிருக்கின்றன. இந்த காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமானது தென்கிழக்காசிய நாடுகளில் இன்னும் அதிகமாக உணரப்பட்டிருப்பதுடன் அதனது விளைவுகளையும் கணிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் இதுவரை அந்தந்த நாடுகளில் காலநிலை மாற்றத்தினை குறைப்பதற்காக அல்லது தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளின் நடைமுறைப்படுத்தப்பட்டவை மற்றும் விளைவுகளை கலந்தாய்வதற்காக மூன்று நாள் மாநாடு நேற்றைய தினம் பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் ஆரப்பித்திருக்கின்றது.
எமது நாட்டிலிருந்து பேராதனைப் பல்கலைக்கழக விவசாயபீட பேராசிரியர் புத்தி மாரம்பே அவர்களும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிருருவாக்குனர் கலாநிதி கருணாரத்த அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர்களுடன் மூவரணியில் ஒருவனாக கலந்து கொண்டு பங்களாதேஷ் டாக்காவிலிருந்து இந்த விபரங்களைத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய திட்டங்களின் அனுசரணையுடன் அதன் ஓரங்கமாக இந்த மாநாடு பங்களாதேஷ் நாட்டின் உயரிய நிறுவனமான 'பங்களாதேஷின் எதிர்கால பண்ணைச்செய்கை' ( Farming Future of Bangladesh) என்னும் நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வருகை தந்த காலநிலைமாற்றத்தில் புலமையாளர்களைக் கொண்ட பலருடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மியன்மார், நேபாளம், இவர்களுடன் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள்; புலமையாளர்கள் பலரும் கலந்து தங்களது கருத்துக்களையும் திட்டங்களையும் விபரிக்கின்றனர். அந்தந்த நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துதிட்டங்களையும் அலசி ஆராய்ந்து எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியனவற்றை அனுபவத்துடனான திட்டமிடல்களை செய்வதன் மூலம் நிறைவேற்ற முயற்கின்கின்றனர்.
எமது நாட்டின் வடபகுதியில் காலநிலை மாற்றம் இதுவென தற்போது நாங்கள் பலரும் உடலால் உணரும் நிலைக்கு உடலெரிவு, வரண்ட காற்று, சுட்டெரிக்கும் வெய்யில், பகலில் மட்டுமல்ல இரவிலும் தகிக்கும் உஷ்ணம் என்பன ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றின் தாக்கம் பலருடைய உடல் நிலைமையை நோய்வாய்ப்படுத்தும் நிலைக்கு இட்டுச்செல்லுமோ எனும் பயம் பீதியும் உருவாகியிருக்கின்றது. ஏற்கெனவே ஊட்டச்சத்து குறைவான மக்களுக்கும் நோயெதிர்ப்புத்தன்மை நலிவானவர்களுக்கும் இந்த மாற்றம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஆதலால் நாம் கவனமாக இருத்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அதிகளவில் நீரருந்துவதன் மூலம் உடலை குளிர்மையாகவும் உடலுறுப்புக்களை பாதிப்பின்றியும் பாதுகாத்துக் கொள்ளலாம். வெளியில் வெயிலில் நடமாடுவதனை இயன்றவரை தவிர்க்கவும் அறியத் தந்திருக்கின்றார்கள்.
அதிகரித்த வெப்பநிலை எமது பிரதேசத்தில் இன்னும் அதிகரித்து செப்டம்பர் மாதம் வரை எம்மை வாட்டிவதைக்கப் போகின்றதென்பதனை கட்டியங்கூறியும் உள்ளனர். இவற்றுடன் அதிகரித்த வரட்சி இதனால் நிலத்தடி நீருக்கான தட்டுப்பாடு, மழை பெய்யும் போது ஏற்படும் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு, வெள்ளப்பெருக்கினால் மலைப்பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவு, மண்ணில் ஊட்டச்சத்தினளவு இழப்பு, கடற்கரையோரத்தில் கடல்நீர் உட்புகுவதால் ஏற்படும் உவர்தன்மை, பயிர்செய்யும் நிலங்களின் வளக்குறைபாடு, இப்படிப்பலவகையான தாக்கங்கள் எம்மில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இன்னமும் மக்களுக்காக உணவுற்பத்தியில் திறந்த உள்ளத்துடன் பயிர்செய்யும் விவசாயப் பெருமக்களை காத்திடும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கப்படல் வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதன் அவசியம் பல்வேறு மட்டங்களில் உணரப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அனைத்து விவசாய பெருமக்களுக்கும் விவசாயஞ்சார் தொழிற்றுறைக்கும் இந்த செய்திகள் விரைந்து குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்றடைய வேண்டும். தற்போதிருக்கும் தொழினுட்பங்களை பயன்படுத்தி மிகவும் துல்லியமாக காலநிலை மாற்றம் அதனது விளைவுகள் கணித்தறியப்பட்டால் மாத்திரமே எதிர்கால விவசாயத்தையும் விவசாயியையும் காப்பாற்ற முடியும். உலகளாவிய ரீதியில் விஞ்ஞான தொழினுட்பத்தை பயன்படுத்தி பெறப்படும் தகவல்கள், செய்மதிpகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி பெறப்படும் கணிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அவற்றை விவசாயப் பெருமக்களுக்கு சந்தைப்படுத்துனாகளுக்கு, தொழிற்றுறைக்கு இன்னும் அனைத்து மக்களுக்கும் பகிரப்படவேண்டும்.
இதற்காக எமது பிரதேசத்து ஊடகங்களை இணையவழி தகவல் பரிமாற்றங்களையும் பயன்படுத்த முடியும். இதைவிட அனைத்து மக்களின்; பயன்பாட்டிலிருக்கும் மொபைல் தொழிநுட்பத்தின் செயற்பாட்டையும் பயனுள்ளவாறு விரிவுபடுத்த வேண்டும். வருமுன் காத்தல் என்னும் கோட்பாட்டுக்கிணங்க அதீத தொழினுட்பத்தின் பயன்பாட்டை இன்னும் விசாலித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவது மட்டுமின்றி அவர்களை இந்த n சயன்முறைக்குள் உள்ளீர்pகக்கும் செயற்பாட்டையும் செய்தல் வேண்டும். கல்விச் சீர்திருத்தம் நடைபெறும் இக்காலகட்டத்தில் பயனுள்ளதாக மாணவர்களுக்கான அறிவு ரீதியாகவும் அனுபவரீதியாகவும் அவர்களை காலநிலை மாற்றத்தின் செயலணிக்குள் உள்ளடக்கியதாக திட்டங்களும் தீட்டப்படல் வேண்டும். அனுவபரீதியான கல்வியின் வரிசையில் காலநிலை மாற்றத்திற்கு எதிர்காலத்தில் முகங்கொடுக்கும் வருங்கால மாணவ சந்ததியை இப்போதிருந்தே தயார்ப்படுத்துவது மிக மிக அவசியமானதாகும். அதற்காக அவர்களது பாடத்திட்டத்திலும் இன்னும் செயன்முறைகளிலும் காலநிலையை துல்லியமாக அறிதல் அதிலேற்படும் மாற்றங்கள் அதனாலான விளைவுகள் எவ்வாறு தடுப்பது என்பன பற்றிய அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
விவசாய பெருமக்களுக்கு அவ்வப்போது காலநிலை மாற்றத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டமைப்பு வடபகுதியில் நிறுவப்படல் வேண்டும். வானிலை ஆய்வு திணைக்களம், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகளின் அமைப்புக்கள் இணைந்த செயலணி உருவாக்கம் மிகவும் அவசியம். அனைவரும் இணைந்த நிறுவனமயமாக்கலின் ஊடாக இனிவருங்காலத்து பிரச்சனைகளை முன்கூட்டியே அனுமானித்து அதுவும் துல்லியமாக கணித்து அதனை முற்கூட்டியே வெளிப்படுத்தும் நிலைக்;கு நாம் வந்தாலன்றி அதன் தாக்கத்திலிருந்து எவரும் தப்பிவி;ட முடியாது. யாழ்ப்பாணத்தில் வந்த நிஷா புயலின் பாதிப்பை உணர்ந்தவர்களுக்கு இந்த செய்தியும் அதனது தேவைப்பாடும் முழுமையாக விளங்கும். பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ள தயாராவதே தற்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எம்மால் செய்யக்கூடிய கைமாறாக அமையும். வாருங்கள் எமது வளத்தையும் எமது சந்ததியையும் காத்து எமது நாட்டில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இழப்புகளை குறைத்து அல்லது தவிர்த்து வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் வரும் பேரிடர்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும் மனப்பக்குவத்தையும் எம்மவர்களிடையே விதைத்து அனைவரையும் காத்திடுவோம்.
"Importance and usage Bioeconomy"
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உயிர்ப்பொருளாதாரத்தில் (Bioeconomy) இத்தேசத்தை உணவுப் பாதுகாப்புடனான நேர்மை எழுச்சியுடன் கட்டியெழுப்ப முடியும் என்பதனை உணவு மற்றும் விவசாய தாபனம் எடுத்துக்கூறியிருக்கின்றது. இந்த உயிர்ப்பொருளாதாரத்தில் இது எப்படி முடியும் என்பதனை இயற்கையுடனான வாழ்க்கை முறையை உதாரணமாக காட்டி விளக்கியிருக்கின்றார்கள். சரி ஒரு கணம் நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையை நினைத்துப் பார்ப்போமா?
எமக்குத் தேவையான ஊட்டச்சத்தான சமனான உணவு இயற்கை முறையில் கிடைக்கின்றதென்பதனை உறுதிசெய்து கொள்வோம். நாம் உண்ணுகின்ற உணவில் கழிவு அல்லது தேவையற்றவை மிகவும் குறைவாக இருப்பதனையும் கவனித்துக் கொள்வோம். உண்ணுகின்ற உணவாக உருவாகும் போது அதில் வரும் பக்கவிளைபொருட்களை பயனுள்ள இடுபொருளாக மாற்றிக்கொள்வோம். நாம் மாற்று உயிர்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் அசேதன பீடைநாசினிகள் மற்றும் அசேதன பசளைகளை இயன்றவரை தவிர்த்துக் கொள்வோம். எமது தேவைக்காக நாம் புதைபடிவங்கள் (Fossil fuel) மற்றும் பிளாஸ்ரிக் வகைகளை குறைந்தளவில் அல்லது தேவைகருதி அளவுடன் பயன்படுத்துவோம்.
உயிர்ப்பொருட்களான பூஞ்சணம், மரம் மற்றும் கடல்வாழ் தாவரங்கள் குறிப்பாக கடற்சாதாளைகள், நீர்வாழ் தாவரங்கள் என்பனவற்றை இடுபொருட்களாக கொண்ட தொழிற்துறைக்கு தேவையான புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம். மண்ணினை தாவரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நன்மை தரும் நுண்ணங்கிகளை இனங்கண்டு மேலும் இனப்பெருக்கி அவற்றின் பயன்பாட்டை முழுவதுமாக உணரச் செய்வதோடு மட்டுமல்லாது அவற்றை முழுஅளவில் பயன்படுத்தவும் தலைப்படுவோம். உள்ளூர் மக்களுக்கான உருவாக்கமாக இது மாறும் போது அதனது தனித்துவமே தனி. இதன் மூலம் உணவுப்பண்டங்களின் போக்குவரத்து இலகுவாக்கப்படும். நம்பிக்கையுள்ள வணிகம் மேன்மையுறுவதுடன் அதனை தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்;. என்ன யோசிக்கின்றீர்கள் ? இவையெல்லாம் சாத்தியமா என்றல்லவா ?. நம்பினால் நம்புங்கள், இவையனைத்தும் தற்போது எமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் இதனை உணரத் தலைப்படவில்லை. இதனை உயிர்ப்பொருளாதாரம் என அழைப்பார்கள்.
இவ்வாறான உயிர்ப்பொருளாதாரத்தினை முன்னோக்கி நகர்த்தும் பாரிய பொறுப்பில் உலக உணவு மற்றும் விவசாய தாபனம் ஈடுபட்டிருக்கும் இந்நேரத்தில் நாமும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு எமது மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும்;.
இவ்வாறு செய்வதன் மூலம் 1. உணவுப்பாதுகாப்பில் ஏற்படும் (Decline in Food security) சரிவை சீர்செய்து கொள்வதுடன் அதனை தக்கவைத்துக் கொள்ளலாம். அத்துடன் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது. உணவில் தேவையானளவு ஊட்டச்சத்து அவசியம் தேவை. ஊட்டச்சத்து குறைபாடு காணப்படின் அது உடல் நலிவுற்று நோயுருவாக்கலை நோக்கியதாகிவிடும்.
2. இதன் மூலம் காபன் வெளியிடுவது (Reducing Carbon emission) குறைக்கப்படும். காபனின் அளவு வெளியிடுவது எமது சூழலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். கரியமில வாயுவின் வெளியேற்றம் அதிகரிப்பது ஒட்சிசன் காபனீரொட்சைட்டு வீதத்தில் பாதிப்பினை ஏற்படுத்திவிடும். இதனால் இந்த சமனிலை குழப்பத்தை சீர்செய்வதற்கு உயிர்ப்பொருளாதாரத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்தல் அவசியமாகின்றது.
3. பல்வகைத்தன்மையை பாதுகாத்தல் (Securing biodiversity) மிகவும் அவசியமானதாகும். எமக்கிருக்கின்ற வளங்களில் மிகமுக்கியமானது பல்வகைத்தன்மையினுள் ஒன்றிணைக்கப்பட்ட பல வகை தாவரங்கள், நுண்ணங்கிகள் மற்றும் விலங்கினங்கள் ஆகும். இவ்வாறான பல்வகைத்தன்மையை பேணும் போது ஒன்றில் தங்கியிருத்தல் என்பதிலிருந்து மாறி பலவகையான அங்கிகள் நுண்ணங்கிகளை பயன்படுத்தும் நிலைமை ஏற்படுவதோடு அவற்றிலிருந்து பயன்பாடும் அதிகளவில் கிடைக்கும். பல்வகைத் தன்மை பல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமையும். பலவகைத்தன்மையை தக்கவைத்தல் உயிர்ப்பொருளாதாரத்தில் மிகமுக்கியமான அணுகுமுறையாகும்.
5. நச்சுக் கழிவுகளை அகற்றுதல் (Removal of toxic wastes) என்பது உயிர்ப்பொருளாதாரத்தில் முக்கியமான இன்னொரு நிலையாகும். அன்றாட பயன்பாட்டில் பல நச்சுக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றை முறையாக கழிவுமுகாமைத்துவம் ஊடாக அகற்றுதல் நன்மை தரும். குறிப்பாக நுண்ண்கிகளைப் பயன்படுத்தி நச்சுக் கழிவுகளை பிரிகையடையச் செய்து அவற்றை பாதுகாப்பாக அகற்றல் வேண்டும். நச்சுக் கழிவுகள் சூழலை சென்றடைந்தால் அது அனைத்து நன்மைதரும் அங்கிகள் மற்றும் நுண்ணங்கிகளுக்கு பாதகாமாகவே அமைந்துவிடும்.
6. கிராமிய சமூகத்தை கட்டியமைத்தல் (Establishing Rural community) அதற்கு மேலும் வலுவூட்டும். கிராமிய கட்டமைப்பில் உயிர்ப்பொருளாதாரத்தை முழுஅளவில் பயன்படுத்துவதற்கோ மாறாக அதனை மேன்மையடையச் செய்யவோ வழிகளுண்டு. கிராமிய சமூகத்தின் உருவாக்கம் ஒன்றிணைந்த குழச்செயற்பாட்டுக்கு மேலும் வலுச்சேர்க்கும். மக்களிடையே நல்ல புரிந்துணர்வும் குழுவாக இணைந்து செயற்படும் மனநிலையும் உருவாகும். இந்த ஆக்கபூர்வமான இணைப்பு இவ்வாறான திட்டங்களை செயற்படுத்த மிகமிக அவசியமானதாகும். உளமதில் புரிந்துணர்வு உருவாகி மனதளவில் அனைவரும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இது உயிர்ப்பொருளாதாரத்தினை மேலும் வலுவூட்டும்.
ஆக மொத்தத்தில் உயிர்ப்பொருளாதாரம் இயற்கைவழி வாழ்க்கை என்பதற்கு மேலாக இயற்கைப் பேணுவதற்காக நாம் செய்யும் கைம்மாறு ஆகும். எமது வாழ்க்கையின் சீர்மைக்கு இயற்கை தரும் அனைத்து வளங்களையும் நாம் பயன்படுத்தி அதனை பேணிக் காப்பதுடன் அதிலுள்ள வளங்களை அதீத பயன்பாட்டுக்கும் உள்ளடக்கலாம். என்று நாம் எமது சூழலை நேசிக்கின்றோமோ. இயற்கைக்கு அங்கீகாரம் கொடுக்கின்றோமோ அன்று எமக்கான வாழ்க்கையின் வசந்தவாசல் திறக்கப்பட்டதெனலாம். வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் அனைவருக்கும் உயிர்ப்பொருளாதாரம் என்னும் அவர்தம் கையிலிருக்கும் சாவி நல்வாழ்வின் வாசலை திறந்துவிடும். முயற்சியுண்டானால் வீழ்ச்சியில்லை என்பது வேதவாக்கு.
மார்ச்சு 21 உலக காடுகள் தினம்: அழித்தால் அழிந்துவிடும் மனிதஇனம் !
March 21 was the world Forest Day, if it get destroyed, even humans will also diminished.
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
வளிமண்டல வெப்பநிலை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கின்றது. வெளியில் மட்டுமல்ல வீட்டினுள்ளும் காற்றோட்டமில்லாது உள்வெப்பநிலையும் உயர்ந்திருக்கின்றது. இந்த வெப்பத்தையே தாக்குப்பிடிக்கமுடியவில்லை. வெப்பநிலை உயர்வடைவதனால் மனிதருக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் தாண்டி பயிர்களில் பூச்சி பீடைகளின் தாக்கமும் எதர்பாராதளவிற்கு அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக தென்னையில் ஆரம்பித்த வெண்ணீ பல தாவரங்களுக்கு பரவி அதனது வீரியத்தை சமாளிக்க முடியாது திண்டாட வைத்துள்ளது;.
வெப்பநிலை அதிகரிப்பதனை சமாளிக்கும் நிலைப்பாட்டில் வேளாண்காடுகளையும் ஏனைய காடுகளினதும் மீள்உருவாக்கம் முன்னுரிமையளிக்கப்;;பட்;தாக அறியப்பட்டுள்ளது. இம்முறை முறைதவறிய வெப்பநிலை மழையைக் காணாததால் இன்னும் சுவாசம் சம்பந்தமான பாதிப்புக்கள் மனிதக்கு அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள். காடுகளை வளர்ப்பதற்காக முன்னோடி முயற்சியாக நீரேந்து பரப்புகளில் கண்டல்தாவரங்களை அடுக்கி வளர்ப்பதற்கும் முயற்சி செய்திருக்கின்றார்கள்.
இவ்வருடத்துக்கான கருப்பொருளாக 'காடுகளும்; கண்டுபிடிப்புக்களும்: சிறப்பான உலகுக்கான புதிய தீர்வுகள்'; (Forests and innovation: Transparency and Technology for a better world) என வரையறுத்திருக்கின்றார்கள். கண்டுபிடிப்புக்களும் தொழினுட்பமும் சேர்ந்து காடுகளின் மீளுருவாக்கம் மற்றும் அதனது அதியுச்ச பயன்பாடு என்பனவற்றை கண்காணிப்பதற்கும் மேலும் காடுகளினை கண்காணிப்பதன் மூலம் ஒவ்வொரு நாடும் தமது பங்களிப்பினை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் திட்டமிடலில் உள்ளடக்கியிருக்கின்றன. ஐக்கியநாடுகள் வலையமைப்பினூடான காலநிலை மாற்றத்தின் கட்டமைப்பினால் துல்லியமாக கணிக்கப்பட்டதன் படி வெளிப்படையான சரியான தகவல்களுடாகவும் காடுகளை கண்டுபிடிப்பினாலான கண்காணிப்பின் மூலமாகவும் உலகில் 13.7 மில்லியன் தொன்கள் காபனீரொட்சைட்டு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தின் குறைவினை துல்லியமாக கணிப்பதனால் காலநிலை மாற்றத்தினாலான பாதிப்புக்களை ஓரளவிற்கேனும் தவிர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது.
எமது நாட்டில் காடுகளின் வளம் மிக முக்கியமானது. வடமாகாணத்தில் குறிப்பாக நெடுங்கேணியிலிருந்து வவுனியா வரையான வனப்பகுதி சிறப்புக்குரியது. ஆனால் அதனை கண்காணாது சிலர் மரங்களுக்கு தீவைத்து எரித்து அதனை தங்களது பயன்பாட்டுக்கு பயன்படுத்த முனைகின்றனர். இந்த காட்டுப்பகுதி அரசுக்கு சொந்தமானது, இதில் தனியாருக்கு பயன்படுத்தவென இருக்கின்ற வளத்தை அழிக்கக்கூடாது.
காடுகள் எமது பொது சொத்து. அதில் மக்களின் வாழ்வாதாரமும் உள்ளடங்கியிருக்கின்றது. எமக்கான பல்வகை வளங்களும் இருக்கின்றன. இந்த வளத்தை அழித்து விட்டு பின் காடுகளை உருவாக்குதல் என திட்டங்கள் தீட்டுவதில் எந்த பிரயோசனமுமில்லை. வனத்துறை இவ்வாறான காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்தல் வேண்டும். மரமொன்றை நடுகைசெய்து விருட்சமாக வளர்வதற்கு எடுக்கும் காலங்கள் வருடக்கணக்கில் என்பதனால் அவ்வாறான மரங்களை வெட்டுவதனையோ அல்லது எரிப்பதனையோ நாம் தவிர்க்க வேண்டும்.
காடுகளை அழிப்பதற்கெதிரான நடவடிக்ககைகளுக்கு புதிய தொழினுட்ப விருத்தி தேவைப்படுகின்றது. வருடந்தோறும் 10 மில்லியன் ஹெக்டேர்கள் காடுகள் அழிக்கப்படுவதும் ஏறக்குறைய 70 மில்லியன் ஹெக்டேயர் காடுகள் இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீயினால் அழிக்கப்படுவதும் அளவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இவ்வாறான அழிவுகளை தவிர்க்கக்கூடிய வழிவகைகளை முன்கூட்டியே அனுமானிப்பதற்கு காடுகளின் விஸ்தீரணம் அதிலேற்படும் இழப்புக்கள் என்பன துல்லியமாக கணக்கிடப்படல் வேண்டும். இவ்வாறான துல்லியமான கணிப்புக்கள் காடுகளை அழிவடைவதை முன்கூட்டியறியும் நிலைமையை உருவாக்குவதோடு காடுகளையே தஞ்சமென்றிருக்கும் அங்கு வாழும் சுதேசிகளை மேம்படுத்தல் மற்றும் காடுகள் பற்றிய வரைபுகளை செம்மைப்படுத்தல் அதனுடன் காடுசார் காலநிலை நிதிநிலையை வரையறுக்கவும் இவ்வாறான தகவல்கள் பயன்படும். அதனால் காடுகளை விருத்தி செய்வதன் மூலமே நாம் இந்த உலகில் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்பதனை உணர்வோமானால் காடுகளை மீளுருவாக்கம் செய்யும் அனைத்து முறைகளையும் நடைமுறைப்படுத்துதல் அவசியமானதாகின்றது. தனிமனிதனால் இது சாத்தியமில்லை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காடுகளை அழிப்பதை தடுப்பதோடு அதனை மீண்டும் மேம்படுத்திக் கொள்வதன் மூலமே மனித அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். எந்த கண்டுபிடிப்புக்களும் இயற்கையுடன் தோற்றே போய்விடுகின்றன. இருப்பதனை அழித்துவிட்டு புதியதை தேடுவதில் எதுவும் கிடைக்காது என்பதற்கு எமக்கு பாடந்தந்த இயற்கை அழிவுகள் முன்னுதாரணமாகும். காடுகளை பாதுகாப்பதோடு அதனை மேலும்; விருத்தி செய்ய ஒவ்வொரு குடும்பமும் மனிதனும் செயற்படல் வேண்டும்.
தென்னையில் வாழையில் கட்டுக்கடங்காத வெண்ணீயின் தாக்கம் !
The uncontrollable incidence of whitefly in coconut and banana
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது பிரதேசம் என்றுமில்லாதவாறு அதிகரித்த வெப்பத்தினால் உயிரினங்கள் அனைத்தும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தென்னையில் வெண்ஈ (Whitefly) எனப்படும் ஒருவகை பூச்சிபீடையின் தாக்கம் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வெண்ஈ பரவலாக வடமாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றன. ஆரம்பத்தில் செவ்விளநீர் மரங்களில் அதிகமாக பரவிக்காணப்பட்ட வெண்ஈ இப்போது தென்னையிலிருந்து வாழை கொய்யா ஐம்பு செவ்வரத்தை, நாவல், வெண்டி, மா, எலுருமிச்சை மற்றும் இலையகலமாக காணப்படும் எந்த பயிர்களிலும் இன்னும் அழகுத் தாவரங்களிலும் பரவத் தொடங்கியிருக்கின்றது. இந்த வெண்ஈ மென்மையானதாக இருந்தாலும் தற்போதிருக்கும் அதிகரித்து வெப்பம் இதனது பெருக்கத்திற்கும் பரவலுக்கும் ஏதுவாயிருக்கின்றது.
வெண்ஈ என்பது ஒரு சாறு உறுஞ்சும் பூச்சியாகும். அதனது குறைஉருமாற்றத்தில் முட்டை, அணங்கு மற்றும் நிறைவுடலி என்பன காணப்படுகின்றன. அணங்கும் நிறைவுடலியும் சாறு உறுஞ்சும் வாயுறுப்பினைக் கொண்டுள்ளதனால் இரண்டுமே தென்னோலையிலிருந்து சாற்றினை உறுஞ்சக் கூடியனவாகும். இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருப்பதனால் இலகுவாக கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. இந்த வெண்ஈ வெளிநாட்டிலிருந்து எமது நாட்டுக்குள் குடிபெயர்ந்ததனாலும் இங்குள்ள சுவாத்தியம் அதாவது எமது சூழல் வெண்ஈ பல்கிப்பெருக வழிசமைத்தமையினாலும் இயற்கையாக இதனை கட்டுக்குள் வைத்திருக்கும் எந்த இரைகௌவிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சியில் பரவும் நுண்ணங்கிகள் என்பன இல்லாதிருக்கும் காரணத்தினால் இவற்றின் பெருக்கத்தை இயற்கையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
சாறு உறுஞ்சும் பூச்சிகளை வழமையாகவே கட்டுப்படுத்துவதென்பது இயலாத காரியம். அந்த வகையில் இவற்றுக்கான இரசாயன பாவனையை உயரங்குறைந்த சிறந்த தென்னையினங்களுக்கு விசிறினாலும் அருகிலுள்ள காணியில் வெண்ஈ தாக்கம் அதிகமாக இருந்தால் இரசாயனம் விசிறுவதில் பயனேதுமில்லை. மாறாக குறிப்பிட்ட தென்னைகளில் இதனது பாதிப்பு தென்பட்டால் சாறு உறுஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்த ஊடுபுகும் பூச்சிநாசினியை பயன்படுத்தலாம். இருப்பினும் குறிப்பிட்ட மரங்களுக்கு மட்டும் அசேதன பீடைநாசினியை விசிறி எந்த விதபயனும் ஏற்படப்போவதில்லை. தற்காலிகமாக தாக்கத்தில் குறைவை அவதானிக்க முடியும் என்பதோடு மீண்டும் வெள்ளை ஈக்கள் பரவ எத்தனிக்கும். செவ்விளநீர் குலைகளில் மஞ்சள் நிறத்திற்கு வெள்ளைஈக்கள் ஈர்க்கப்படுவதனால் அவற்றில் தாக்கம் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியாக சந்தையில் கடந்த ஆண்டு ஏறக்குறைய 95 லட்சம் செவ்விளநீர்கள் ஏற்றுமதியாகிய நிலையில் இவ்வருடம் இவ்வாறான வெள்ளைஈ பாதிப்பு செவ்விளநீர்களில் அதிகமாக காணப்படுபவதனால் இம்முறை செவ்விளநீர் விற்பனை மந்தகதியிலேயே இருக்கும் என கூறியிருக்கின்றார்.
அமெரிக்காவின் 2004 இல் முதன்முறையாக காணப்பட்ட இவ் வெண்ஈ பின்னர் 2016ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இப்பூச்சியின் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் ஒட்டும் பொறிகளை பயன்படுத்தி இப்பூச்சியினை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முயற்சித்த போதும் முழுமையாக கட்டப்படுத்த முடியவில்லை. இலங்கையில் இதனை கட்டுப்படுத்த ஒருவகை என்காசியா எனப்படும் ஒட்டுண்ணி பரிந்துரைக்கப்பட்ட போதும் தற்போதய மிகவும் அதிக வெப்பநிலையான சூழலில் அந்த ஒட்டு;ண்ணியிக் பெருக்கம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் இந்த ஒட்டு;ண்ணியினால் இதனை கட்டுப்படுத்துவது சிரமம்.
பெண் ஈயை விட ஆண் வெள்ளைஈக்கள் அளவில் சிறியதாயும் இதனது முன் இறக்கைகளில் கரும்புள்ளிகள் காணப்படும். வயதுமுதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளைச் சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டைகள் ஒருவித மெழுகுப் பூச்சுடன் காணப்படுவதனால் இவற்றை இலகுவாக அவதானிக்கலாம்.
வெண்ஈக்;களின் உணவு செரிமான வீதம் 50 சதவீதமாகும். ஆதனால் இது தாவரங்களிலிருந்து உறுஞ்சும் தாவர சுரப்பில் அரைவாசியை மட்டுமே தமது சமிபாட்டுத் தேவைக்காக பயன்படுத்தும் மீதமானவற்றை ஒருவகை தேன் சுரப்பாக வெளியே விடுகின்றன. இது அனைத்து சாறு உறுஞ்சும் பூச்சிகளுக்கும் பொருந்தும். வெளிவிடப்படும் தேன்சுரப்பு இலைகளில் படிந்து அதில் அழுகல் வளரி கரிய நிற பூஞ்சணமான கப்நோடியம் (Capnodium) வளரும். இந்த பூஞ்சண தொற்று அதிகமாகும் போது இலைப்பரப்பு முழுக்க அது பரந்து ஒளித்தொகுப்பை பாதித்துவிடும். இந்த நேரத்தில் மழைபெய்யுமாயின் இப்பூஞ்சணம் கழுவிச்செல்லப்பட்டுவிடும்.
வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த இந்நேரத்தில் அதிகமாக வேறு இரசாயனங்களை குறிப்பாக களைநாசினிகளை தேவையற்று விசிறுவதனை தவிர்க்கவேண்டும். தாவரம் வரண்டு போகதவண்ணம் நீர்ப்பாசனம் கொடுக்கப்படல் வேண்டும். மண்ணில் ஊட்டச்சத்து குறைபாடிருந்தாலும் இப்பூச்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும். மழை பெய்தால் அந்த மழைநீர் வெள்ளை ஈக்களையும் இதனால் உருவாக்கப்பட்ட கப்நோடியம் எனப்படும் ஒருவகை அழுகல்வளரிப் பூஞ்சணத்தையும் கழுவிச் செல்லும், ஆகையால் மழை பெய்தால் வெள்ளை ஈக்களின் பெருக்கம் மட்டுப்படுத்தப்பட்டு விடும். வெள்ளை ஈக்களில் நோயாக்கிகளாக காணப்படும் வேட்டிசிலியம் லகானி எனப்படும் பூஞ்சணம் பரிந்துரைக்கப்;பட்டாலும் இப்பூஞ்சணம் அதிகரித்த வெப்பநிலையில் வளரும் தன்மையற்றது.
வேப்பங்கொட்டைசாறு 5சதவீதம், நொச்சியிலைச் சாறு (50கிராம் ஃலிற்றருக்கு) என்பனவற்றை விசிற சிபார்ச செய்யப்பட்டள்ளது. தண்ணீர் பீச்சித் தெளிப்பது வெள்ளை ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும். தொடர்;ச்சியாக கண்காணித்து தெரிவு செய்த முறைகளை பயன்படுத்தல் வேண்டும். இவற்றுடன் மஞ்சள் ஒட்டுப் பொறிகளை(லநடடழற ளவiஉமல வசயி) காணிகளில் வைக்கலாம். வாழை, ஐம்பு, செவ்வரத்தை, என பல தாவரங்களில் இப்பூச்சியின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். இவ்வாறான அனைத்து முறைகளையும் ஒரு ங்கிணைத்து அனைவரும் சேர்ந்து இப்பீடையைக் கட்டுப்படுத்து நம்மாலான முயற்சிகள் அனைத்தையும் செய்வோம்.
பத்தோடு பதினொன்றும் சேர்ந்தால் மனைத்தோட்டமும் வளங்கொழிக்கும் !
If eleven items added to ten (trees) the home garden become a wealth and health place
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலகம் உழலத்தொடங்கிவிட்டதன் அறிகுறி பரவலாக தெரிகின்றது. அதீத மழை, அதிகூடிய வரட்சி, பனிப்புயல், எரிமலை வீறாப்பு, வெள்ளப்பெருக்கு, என பன்முகப் பார்வையை அவ்வப்போது வெளிப்படுத்திய வண்ணமே இருக்கின்றது. எது தேவையோ அதனை எடுத்துக் கொண்டு மற்றையதை தவிர்த்படியே நாம் வாழ்ந்து செல்லல் வேண்டும். எமக்கிருக்கும் இடவசதி போதுமானது என முதலில் முடிவெடுத்துக் கொண்டு அதில் என்ன என்ன நடுகை செய்தால் பசுமை எம்மைச் சுற்றி பரந்திருக்கும் என பாருங்கள். காய் கனி உருவாகும் தாவரங்களை அதிகம் விரும்பி நடுகை செய்தால் பறவைகள், சிறிய மிருகங்கள் மற்றும் பூச்சிகள் சிலந்தி என பலதும் பத்தும் எமது மனையிலமையும் தோட்டத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளாகிவிடுவர்.
பூக்கும் தாவரங்களை நடுகை செய்து கொண்டால் மகரந்த சேர்க்கைக்காக சிறிய பறவைகள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சி இன்னும் ஏனைய பூச்சிகள், என பல எமது மனைக்கு வருகைதருவனவாகிவிடும். மகரந்த சேர்க்கையினால் மனையில் ஒருவகை உயிரினங்களின் ஊடால் அதிகமாக இருக்கும். இது ஒருவகை உயிரியக்க சக்தியை மனைத்தோட்;டத்திற்கு வழங்கும். இந்த உயிரியக்க சக்தி முதன்மைச் சக்தியாகி உயிரினங்களுக்கு இடையேயான சமனிலையை பேணுவதற்குதவும். இவ்வாறு மனைத்தோட்டத்தில் இயற்கைவழி பயிர்களின்; உற்பத்தி நடைபெறுவதனால் அதில் பயிர்பீடைகள் நோய்கள் என்பனவற்றின் பிரச்சனை அதிகமாக எழுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பீடை மற்றும் நோய்களைத் தவிர மனைத்தோட்டம் சுற்றுக்சூழல் சமனிலையின் ஓரங்கமாகிவிடும்.
அதிகாலையில் கண்விழிக்கும் போது கேட்கும் அந்த ரீங்காரமான இணைந்த சப்தங்களுக்கும் இணைந்து இருளைக்கிழித்து கூவும் செவ்வேலுருக்கும் சொந்தக்காரர்களை செவிமடுக்கலாம். அந்த இசையும் தனியிசை தானே. குயில்கள் கூவுவதும், கோழிகள் கொக் கொக் என்பதுவும் காகங்கள் கரைவதும் புலுனிகள் கீச்சிடுவதும் அணில்கள் கொறிப்பதுவும் இரட்டைவால் குருவி மௌனமாகவே வந்து போவதும் அவ்வப்போது மரங்கொத்தி தலையை காட்டுவதும் அன்றாட நிகழ்வுகளாகவே மாறிவிடும். அந்த குரலொலிகளின் சங்கமத்திற்கு மாற்றிசை இன்னும் எங்கும் வரவேயில்லை.
பத்தென்பது மனையில் வளர்ந்து எமக்கு பலவகையான பயன்களைத்தரும் மரங்கள் ஆகும். பத்து மரங்களும் அவசியம் வீட்டிலிருந்தால் பஞ்சமென்பதில்லையே. அந்த பத்தையும் நிரல்படுத்திப்பார்த்தால் மனையொன்றிற்கு தென்னை நான்கும், கமுகு நான்கும், பப்பாசி நான்கும், மாமரமிரண்டும், பலாவொன்றும், ஐம்பு இரண்டும், தேசிதோடையொவ்வொன்றும், நெல்லி சிறியதும் பெரியதுமாக இரண்டும், கொய்யா ஒன்றும், விளம்பியொன்றும்; என கூட்ட கணக்கும் சரியானது. கமுகு அன்றான உணவுக்கானதாக இல்லாவிட்டாலும் அதிலிருந்து பெறப்படும் பாக்கும் மரம் வளர்ந்து பின் காய்த்தல் குறையும் போது சிலாகையாகவும் இன்னும் விறகுத்தேவைக்கும் பயன்படும். இவைதவிர மனை விலங்குகளான பசு, ஆடு, கோழி ஆகியனவற்றிற்கான உணவாகவும் எரிப்பதற்கு விறகும் கிடைத்துவிடும். எரிவாயுவும் எரிபொருளும் கிடைக்காதபோது நாம் விறகிற்கு மாறியதை மீண்டும் நினைவுபடுத்தினால் மேற்கூறியதன் அர்த்தம் புரியும்.
இந்த பத்து மரங்களும் அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் வளரக்கூடியவாறு மனைத்தோட்டத்தை அமைத்தால் அவர் மனையில் உள்ளவர்களின் உணவுக்காக பயன்படுத்தியது போக மீதியை விற்கவும் செய்யலாம். சிறுவருமானமும் இதன்மூலம் வந்து சேரும். மனையில் சற்;று அதிகமாக நிலம் இருந்தால் மேற்கூறிய மரங்களின் எண்ணிக்கையை சற்றே அதிகரித்து மனைப் பொருளாதாரத்தினை இன்னமும் மேம்படுத்திக்; கொள்ளலாம். இவ்வருமானத்தை மேலும் அதிகரிக்க கீழுள்ளவற்றினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதய வளிமண்டலம் மிகவும் உஸ்ணமானதாகவும் அதன்மூலம் நோய்களை உடலில் ஏற்படுத்தவும் காரணமாகலாம். இயற்கை நிழலிலும் குளிர்மையிலும் வாழ நாம் பழகிக் கொண்டால் அனைவரது வாழ்க்கையும் சிறப்புறும்;.
பதினொன்று என்பதில் செடி, கொடி, கிழங்கு, வேர்த்தண்டு, ஓடி, ஏறி, வளரி, படரி, பூண்டு, புல், என்பனவற்றை பட்டியலிடலாம். மனைத்தோட்டமென்பது பல்வகையான தாவரங்களைக் கொண்டதுடன் விலங்குகளையும் உள்ளடக்கியதாகும். மனையிலிருந்து உற்பத்தியாகும் பயிர்களின் மூலமான உயிர்ப்பு சக்தி எமது உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை (Immunity) தருவதோடு நேர்மறை சக்தியையும் (Positive energy) உருவாக்கிவிடும். நாம் உணவிலெடுக்கும் சுத்தமான உடனடி மரக்கறிகள், பழங்கள், கீரைவகைகள் என்பனவற்றிலிருந்து நோயெதிர்ப்பு சக்தியை நாம் பெற்றிடலாம். அவற்றிலிருக்கும் அன்ரிஒட்சின்கள் எமது உடலுக்கு வலுச்சேர்ப்பனவாகும். அவை தவிர ஒவ்வொன்றிலிருமிருந்து கிடைக்கும் விற்றமின்கள், ஏனைய தாதுக்கள் அவசியம் உடலுக்கு தேவையானதும் உடலின் விருத்திக்கு பெரிதும் பயன்படுவனவாகும்.
கீரைவகைகள் அவசியம் உணவில் சேர்க்கப்படல் வேண்டும். தினமொரு கீரை என கிழமைக்கு 7 கீரைவகைகள் நாம் எமது மனையில் வளர்த்து உணவாக்கிக் கொள்ளலாம். சிறுகீரை, வல்லாரை, பொன்னாங்காணி, கங்குன், பொதினா, முருங்கை, அகத்தி, இவை தவிர இன்னும் பலவகையான பச்சையிலை வகைகள் எமக்காக இருக்கின்றன. மூலிகைத் தாவரங்களும் இவற்றினுள் அடங்கும். உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் மனையில் நாம் வளர்த்து உண்ணும் உணவினுள் இருக்கும் போது அவற்றைத் தேடி மருந்துக் கடைகளுக்கு அலையவேண்டாமே. இயற்கையான மருத்துவகுணமுள்ள தாவரங்களை நாம் எமது உணவில் சேர்த்துக் கொண்டால் அந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் எமது மனமும் வாழ்க்கையும் குதூகலிக்கும்.
மரங்களை மனைத்தோட்டத்தில் நடுவதனால் அதனை தக்கவைக்க முடிவதோடு ஏனையவற்றை உள்ளடக்கி மனைத் தோட்டத்தை விருத்தி செய்யலாம். ஓய்வு வேளைகளில் மனைத்தோட்டத்தில் உள்ள தாவரங்களுடன் விலங்குகளுடன் உறவாடுங்கள். மனதிலிருக்கும் அனைத்து பிடிப்புக்களும் விலகி மனம் ஒருநிலைப்படுவதுடன் எம்மை நெருங்கிய அனைத்து மனஅழுத்தத்திலிருந்தும் கவலைகளிலிருந்தும் இன்னும் மனச்சோர்விலிருந்தும் விடுபட்டுக் கொள்ளலாம். பசுமையான சூழலை உருவாக்குவதற்கும் மனையைச் சுற்றி நிழலை ஏற்படுத்துவதற்கும் மரங்கள் அவசியமானதவையாகும். ஆதலால் எமக்கு உணவளிக்கும் மரங்களையும் ஏனைய தாவரங்களையும் மனைத்தோட்டத்தில் வளர்த்து நாம் பயன்பெறுவோம்.
பூச்சி வேளாண்மை கருக்கொள்கின்றது, நாமும் இதில் பயன்பெறலாம் !
We could get benefits from emerging Insect Farming ?
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நம் நாடு மெல்ல மெல்ல பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வதற்கான பிரயத்தனங்கள் பலவற்றை முன்னெடுக்கின்ற போதிலும் உயர்வடைந்த பொருட்களின் விலைகள் கிஞ்சித்தும் தாமாக குறையும் சாத்தியக்கூறு தற்போதைக்கில்லை. மறுபக்கம் ஏறியிறங்கும் அமெரிக்க டாலரின் பெறுமதி எமது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியே செல்கின்றது. இவ்வேளையில் இவ்விடரில் சிக்கித்தவிக்கும் எமக்கு நமது உணவை குறிப்பிட்ட அளவில் நாமே உற்பத்தி செய்து இப்பேரிடரிலிருந்து எம்மையெல்லாம் காப்பாற்றிக் கொள்ள வழிகள் பலவுண்டு. எளிய பல தொழினுட்பங்களை நாம் பயன்படுத்தத் தொடங்கினால் அதனை நாம் விரைந்து செய்வது காலத்திற்கேற்ற கைங்கரியமாக இருக்கும்.
புரதச்சத்துக்கான முக்கியமான உணவாக கோழி முட்டை மற்றும் இறைச்சி என்பன இருக்கின்ற போதும் அவற்றின் விலைகள் எகிறிச் செல்கின்றதனால் கோழிவளர்ப்பாளர்கள் ஒருவகையில் நன்மையடைந்தாலும் அதனை உணவாக கொள்பவர்களுக்கு விலையதிகரிப்பு மகிழ்வான செய்தியல்ல. இந்த விலையதிகரிப்புக்கு காரணமாக கோழித்தீவனத்தை முதன்மைப்படுத்தலாம். கோழித்தீவனத்தை எம்மூரிலேயே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பினை மீளவும் தரும்படி எம்மினிய உறவுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுருக்கமாக தரப்பட்டுள்ளது.
கோழித் தீவனத்தின் உற்பத்தியில் சற்று கவனஞ்செலுத்தினால் முட்டையின் விலையை தளம்பலடையாது மக்கள் ;வாங்கி பயன்படுத்தும் குறைந்த விலைக்கு விற்கக்கூடிய வாய்ப்பு உண்டென்பதனை நாமெல்லோரும் உணரமுடியும். எமது உணவில் புரதச்சத்துடன் ஏனைய சத்துக்களை பெறக்கூடிய வாய்ப்பு கோழி இறைச்சி மற்றும் முட்டையில் இருப்பதனால் அதனது கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும் விலை குறைத்து அனைத்து மக்களும் வாங்கும் நிலைக்கும் அதனை கொண்டுவரவேண்டும்;.
கோழித்தீவனத்திற்கு இருவகையான உணவினை நாம் உள்ளீடாக பயன்படுத்த முடியும். ஒன்று தானிய வகைகள். இன்னொன்று விலங்கு உணவுகள். எமது உணவுக்காகவும் கோழித்தீவனத்திற்கு தேவையான தானியங்களையும் பயிரிடாத நிலப்பரப்பில் பயிர்செய்வதை ஊக்குவித்தல் சிறந்தது. அவ்வாறான பயிர்களில் உழுந்து, பயறு, கௌபீ, பயற்றை, கொள்ளு, காட்டுக்கொள்ளு, சணல், குரக்கன், கம்பு, இறுங்கு, சோளம்.... என பலவகையான தானியப்பயிர்களை குறிப்பாக அவரைப்பயிர்களை விளைவித்து தேவையான தீவனத்தினை தயார்செய்து கொள்ளலாம்.
தீவனத்தின் மறுபகுதியாக கோழிக்குத் தேவையான புரதம் மற்றும் விற்றமின்களை வழங்குவதற்காக பூச்சி புழுக்களை உணவாக வழங்கலாம். பூச்சிகளை வளர்த்து அவற்றின் பயன்பாட்டை பெருக்குதலே பூச்சி வேளாண்மை (Insect Farming) எனப்படும். இங்கே புழுக்கள் என்பன எமது பிரதேசத்தில் இயற்கையாகவே காணப்படும் அழுகிய சேதனப்பொருட்களில் தானாகவே தொற்றுதலாகி வளரக்கூடிய கறுத்த வேலையாள் ஈ ( Black soldier fly) எனப்படும் ஒருவகையான இலையனின் குறைப்பருவமாகும்;.
இலையான் (fly) உருவத்தில் பெரிதாக காணப்படுவதனால் இதனை குளவி எனவும் பலர் தவறாக கருதுவதுண்டு. இதற்கு கொட்டும் உறுப்பு இல்லாத காரணத்தினால் மனிதனுக்கு எந்தவித தீங்கினையும் இந்த இலையான் ஏற்படுத்துவதில்லை. மேலும் இந்த இலையானின் இளம்பருவமான புழுப்பருவமே கோழிகளுக்கான சிறந்த தீவனமாக விளங்குகின்றது. முட்டையிடும் கோழிகள் மற்றும் இறைச்சிக்கான கோழிகளுக்கான உணவாக இந்த புழுக்களை அப்படியேயும் இன்னும் அரைத்து பவுடராக கோழியினது உணவில் கலந்தும் வழங்க முடியும். கொhல்லைப்புற கோழிவளர்ப்புக்கு தனித்துவமான புழு கூடாரத்தினை உருவாக்கி தேவையானளவு புழுக்களை அறுவடை செய்துகொள்ளலாம் அல்லது புழுக்களை கோழிகளுக்கு எளிய பொறிமுறை மூலம் கிடைக்கச் செய்யலாம். இதற்காக கொல்லைப்புற கறுத்த வேலையாள் ஈ வளர்ப்பு அலகினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
கோழி உணவாக இந்த புழுக்களை நீங்களே உங்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்து வழங்க முடியும். வீட்டுத்தோட்டத்தில் கோழிவளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கும் கோழிகளின் உணவாக இந்த புழுக்கள் சிறந்த தீனியாக அமையும். எமது வீடுகளில் உருவாகும் சேதன கழிவில் இலகுவாக வளர்க்கக்கூடிய இப்புழுக்களை வளர்த்து கோழிகளுக்கும் மீன்வளர்ப்பில் மீன்களுக்கும் சிறந்த புரதம் மற்றும் ஊட்;டச்சத்து நிறைந்த உணவாக வழங்க முடியும். குறிப்பாக மரக்கறிக் கழிவுகள் இன்னும் பழங்களின் கழிவுகள் அதிலும் பலாச்சக்கை எனப்படும் பலாப்பழத்தில் சுளையை எடுத்தபின் மீதியாவதனை சக்கை என அழைப்பர் அதனை பயன்படுத்தி; சிறப்பாக இந்தப் புழுக்களை வளர்க்கமுடியும்.
சேதனக் கழிவுகள் அழுகலடையத் தொடங்கும் போது இந்த இலையான் தானாகவே வந்து முட்டையிடும் . எமது ஊரில் இவ்வாறான இலையான் அதிகமாகவே காணப்படும். முட்டை பொரித்து புழுக்கள் வெளிவந்து சேதனக் கழிவுகளில் வளரத் தொடங்கும். கோழிகளின் அளவுக்கேற்ப புழுக்களை உணவாக வழங்கலாம். தற்போதுள்ள விலைகூடிய தீவன நிலையில் இப்புழுக்களை வளர்த்து கோழிவளர்ப்பை தொடர்ந்து இலாபமூட்டும் தொழிலாக செய்ய முடியும்.
எமது தேகாரோக்கியத்தை நாமே காப்போம்! அலட்சியம் வேண்டாம்!
Let us look after our health: avoid ignorance ?
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
கோவிட்டின் தாக்கம், பொருளாதாரத்தின் வீழ்ச்சி, அவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம், தரமான பொருட்களுக்கான கேள்வி, மக்களின் வாங்கும் திறனில் வீழ்ச்சி, குடும்பங்களின் வருமானத்தில் இறுக்கம், மாதாந்த வருமானத்தினால் தற்போதய செலவை கட்டுப்படுத்த முடியாத நிலை, வைத்தியச் செலவுகள் அதிகரிப்பு, அவசியமான மருந்துகள் தட்டுப்பாடு, வாகனச்செலவும் போக்குவரத்து செலவும் கட்டுக்கடங்காமல் எகிறியிருக்கும் நிலை.... வாழ்வாதாரத்தை தக்கவைக்க நினைக்கும் அனைத்து குடும்பங்களுக்குமான பேரிடி இது.
மனவுளைச்சலிலேயே தினமும் நாட்களை கடந்து செல்வதாக வறுமைப்பட்டுப்போன குடும்ப தலைவர் சினந்துகொண்டார்;. மக்கள் மனதில் மகிழ்ச்சியில்லை. பலகுடும்பங்களில் அடுப்பு எரிவதில்லை என்னும் உண்மையை இங்கே உணர்த்தியே ஆகவேண்டும். மூன்று வேளை உணவருந்திய மக்கள் தற்போது ஒருவேளையேனும் வயிராற உண்டால் போதுமானதென நினைக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
எத்துணை இடர்வரினும் எம்மவர்கள் தமது சமயோசித புத்தியாலும், அதீத உழைப்பாலும், அனைத்து இடர்களையும் தாண்டி பெருமை சேர்த்தவர்கள் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். எமக்கிருக்கும் விவசாய பூமி என்றும் பொய்த்ததில்லை. வானம் பார்த்து விவசாயம் செய்து வரலாறு கண்டவர்கள் இருக்கின்ற வளங்களை முழுமையாக பயன்படுத்தி இக்கால இடர்களைத் தாண்டிச் செல்வோம். விவசாயிகளுக்குள் இந்த இறுமாப்பு இருக்கும் வரை எமது மக்களுக்கான உணவை அவர்கள் உற்பத்தி செய்வதில் என்றும் அக்கறை காட்டுவர். இது அவர்களுக்கான கடமையும் கூட. அனைத்து விவசாயப் பெருமக்களின் கொள்கைகளும் அனைத்து மக்களுக்குமான உணவு உற்பத்தி செய்தல் என்பதோடு தானும் உண்டு ஏனையவர்களுக்கும் உணவளிக்கும் பக்குவம் அவர்களுக்குண்டு;. இதற்கு நாமெல்லோரும் நாளொன்றில் குறிப்பிட்ட காலஅளவிற்கு உற்பத்தியாளனாக மாறவேண்டும். எமக்கான உணவின் குறிப்பிட்ட பகுதியை எமது இடத்தில் உற்பத்தி செய்தல் வேண்டும்.
உணவுத்தட்டுப்பாடு வரும் என்று பலரும் அடித்துரைத்தாலும் உணவிருந்தாலும் அதனால் எமக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தினையும் உள்ளீர்க்க முடியாது. நாம் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருக்கப் போகின்றோம் என்பது தான் பல தாய்மார்களின் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. பிள்ளைகளின் மூளை தேவையானளவு வளர்ச்சியடைந்து தமது அறிவாற்றலை விருத்தி செய்கின்ற இளம்பருவத்தில் அவர்களுக்குத் தேவையான சமனான ஊட்டச்சத்ததினை தத்தமது உணவின் மூலமாக பெறமுடியாத சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என பலர் அறிவுறுத்தியிருக்கின்றார்கள். ஆக மொத்தத்;தில் உடல் உளவளர்ச்சி குன்றியவர்களாக எமது எதிர்கால சந்ததி மாறப்போகின்றது என்னும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாகவே வெளிவருகின்றது.
உணவுற்பத்தியில் அவரைப் பயிர்களினதும் சிறுதானியங்களினதும்; பங்கு அளப்பரியது. ஆவரைப் பயிர்களில் குறிப்பாக உழுந்து, பயறு, கௌபீ, கடலை, கொண்டல்கடலை, பருப்பு, துவரம் பருப்பு, நிலக்கடலை, இவ்வாறாக கிடைக்கும் அதிகமான புரதம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அவரைப்பயிர்களில் தான் அதிகளவு புரதமுமுண்டு. சிறிதானியங்களில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து. இவைதவிர குறிப்பிட்ட விற்றமின்கள், உடலுக்கு அவசியம் தேவையான அமினோ அமிலங்கள் என பலவற்றை சிறுதானியங்கள் கொண்டிருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இவ்வாறான அவரைப் பயிர்களையும் சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்குவதற்கான வழிவகைகளை அனைவரும் கலந்தாலோசித்து நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும். சிறுதானியங்களின் நல்ல விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு அவர்கள் தம் நிலத்தில் பயிரிட வழிசெய்தல் வேண்டும். சிறுதானியங்களில் அதிகம் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, விற்றமின்கள், மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் இவற்றுடன் உடலில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரி;க்க வல்ல 'அன்ரி ஒட்சிசன்கள் (யுவெழைஒலபநn); எனப்படும் உயிர்ச்சத்து குறிப்பாக தொற்று நோய்கள் எமதுடலை நெருங்காது பாதுகாத்துக் கொள்கின்றன.
குரக்கன், கம்பு, இறுங்கு. சாமை, குதிரைவாலி, வரகு, கேள்வரகு, தினை, என பலவகையான சிறுதானியங்கள் எம்மூரில் உண்டு. ஆனால் இவற்றின் விளைச்சலும் உற்பத்தியும் போதாது. வழக்கமாக விளைச்சல் அதிகமாவதிற்;கு பசளைப்பிரயோகம் அவசியம். இவ்றான விளைச்சலை அதிகரிக்கும் செயற்பாடு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அனைத்து மக்களின் தேவைக்கும் இதனது உற்பத்தி போதாது. அதில் அதிகம் விருப்புடையவர் காளான் வளர்ப்பு பொறிமுறையை விடுத்து தத்தமது கை கைவண்ணத்தில் உருவான படைப்புக்களை காட்சிப்படுத்தி அவற்றை விற்பதற்கான முயற்சியும் கைகூடும் எனலாம்.
அரிசி கோதுமை போன்ற தானியங்களுடன் ஒப்பிடும் போது சிறுதானியங்களில் பலவகையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து காணப்படுகின்றன. இவற்றினை எமது உணவுப் பாதுகாப்பிற்கு எடுத்துக் கொள்ளலாம். அனைத்து மக்களும் இவ்வாறான அவரைப் பயிர்களையும் சிறுதானியங்களையும் உற்பத்தி செய்யும் போது அவற்றுக்கான சந்தை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கச் செய்யும். மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமும் இவ்வருடமும் கொண்டாடப்படும் நிகழ்வுகளில் பாரம்பரிய் உறவுகளின் பங்களிப்போடு அனைவராலும் பயன்படுத்தும் உணவாக அவரைகளையும் சிறுதானியங்களும் விளங்குகின்றன. இதை அனைவரும் உணர்ந்து அவரைப்பயிர்கள், மற்றும் சிறுதானியங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதனை ஊக்குவிக்கலாம். தன்கையே தனக்குதவி போல எம்மை நாமே காப்பாற்றுவதைத் தவிர வேறுவழியில்லை காணீர்.
வெள்ளத்தில் விளைந்த நெல்லில் ஆசனிக்குசெறிவாகி பாதிப்பை ஏற்படுத்துமா ?
Will arsenic increase in flooded rice cause damage?
This article describes about the increase of arsenic, and inorganic arsenic found in rice will cause any negative effect or damage? Yes, it has been highlighted that this effect is obvious when the asenic content in rice is high. Due to flooding, the inorganic arsenic trapped in the soil particles will get released, therefore these arsenic will get absorbed through the roots of the plants.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் இதிலுமா என பலருக்கும் இன்றைய தலைப்பை பார்த்தவுடன் ஏதேதோ சொல்லத் தோன்றும். வெள்ளத்தில் விளைந்த நெல்லையும் புற்றுநோயையும் சம்பந்தப்படுத்தி பல செய்திகள் வருவதனால் அதனைப் பற்றி தேடியதில் கிடைத்ததை அறியத்தருகின்றேன். இது சார்ந்து பல ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. அவற்றின் முடிவுகளும் வெள்ளத்தில் விளைந்த நெல்லையும் புற்றுநோயையும் சம்பந்தப்படுத்தி வெளிக்கொணர்ந்ததால் எமது உறவுகளுக்கும் இதனைப்பற்றி எடுத்துக்கூற வேண்டியதாயிற்று.
புற்றுநோய் தற்போது பரவலாக பலருக்கும் வயதுவேறுபாடின்றி பால் வேறுபாடின்றி வரத்தொடங்கியிருக்கின்றது. இதிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளை நாம் ஆரம்பகால இனங்காணலுடன் கடைப்பிடித்தால் இக்கொடிய நோயிலிருந்து தப்பிப்பது சுலபமானது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பிந்தியநிலையில் பல்கிப்பெருகிய நிலையில் இனங்காணலும் தமது வயதுவந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இருப்பது இருந்தது தெரிந்தும் அலட்சியப்படுத்தலினாலுமே நோய்க்குள் துவளநேரிடுகின்றது. யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம் அதிலும் மனிதனில் பலவகையான புற்றுநோய்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இதற்கு உரிய மருத்துவ ஆலோசனை அவ்வப்போது பெறப்படுதல் மிக மிக அவசியம். வித்தியாசமான கட்டிகள் அல்லது வித்தியாசமான வலிகள், இரத்தப்போக்கு, உடல்களைத்தல் என எதுவிருந்தாலும் அவசியம் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
வழமையாகவே எமதுடலில் கலங்களின் விருத்தி நடந்து கொண்டேயிருக்கும். அபிரிவிதமான வளர்ச்சியை கலங்கள் அடைந்து ஒழுங்கற்ற முறையில் கட்டுப்பாடற்ற விதத்தில் பல்கிப்பெருகும் போது அது எமது உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்திகளை அதன் நிலைகளை தாண்டி தம்பாட்டில் வளரத்தொடங்குவதனையே புற்றுநோய் என இனங்காணுகின்றனர். இதில் எமது உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியின் தன்மை மற்றும் அளவு புற்றுநோய்க்கலங்கள் உருவாவதனை தடுக்காது போகும் நிலையெய்தும் போது பிரச்சனை விபரீதமாகிவிடுகின்றது. புற்றுநோய் இனங்காணப்பட்டவர்கள் அனுபவிக்கும் வேதனை சொல்லிலடங்காது. உடல் வலியைபிட உளவலி மிகவும் பெரிது. அதிலும் புற்றுநோயில் அவதிப்படுபவர்களை கவனிக்கும் உறவுகள் அடையும் வலியை எதிலும் விபரிக்க முடியாது. ஒட்டு மொத்தத்தில் ஒரு குடும்பத்தின் அத்திபாரத்தையே ஆட்டங்காணவைக்கும் கொடியநோயாகவே புற்றுநோயைக் காணலாம்.
அண்;மையில் வெள்ளத்தில் அருவிவெட்டி நெல்மணிகளை காப்பற் றோட்டுகளில் காயவைத்தது பற்றி செய்திகளைப் பார்த்தோம். காலந்தப்பி காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடாக அறுவடைக்காலத்தில் மழை பெய்யும் போது வெள்ளருவிவெட்டு என வெட்டி அவற்றை காயவைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு எமது விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டார்கள். குறிப்பாக பூநகரிப் பிரதேசத்தில் பூநகரியிலிருந்து பரந்தன் செல்லும் பாதைகளில் விவசாயப் பெருமக்கள் அறுவடை செய்த நெல்லை காயவைத்ததைக் கண்டோம். விவசாய பெருமக்களுக்கு இவ்வாறு நெல்லை காயவைப்பதற்கான பிரத்தியேகமான இடங்கள் என்று எதுவுமில்லை. அதனால் அவர்களுக்கு நனைந்த நெல்லை காயவைப்பதற்கு வயல்களுக்கு அண்மையிலுள்ள பாதைகளிலேயே அறுவடைசெய்தவற்றை விரைந்து காய வைத்தெடுத்தனர்;. ஆனால் இவ்வாறு பாதைகளில் காயவைத்த நெல்லை அரிசியாக்கி உணவாகக் கொண்டால் அதனை உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமென செய்தியொன்று ஊசலாடுகின்றது. இது உண்மையா என ஆய்வுக்குட்படுத்தி பார்க்கவேண்டும்.
ஆசனிக்கு எனப்படும் வேதியியல் பொருள் இயற்கையாகவே சூழலில் காணப்படும் ஒன்றாகும். இயற்கையில் அசேதன ஆசனிக்காக இருக்கும் போது அதில் நச்சுத்தன்மை அதிகமாக காணப்படும். காலநிலை மாறி அதிகரித்த மழைவீழ்ச்சியில் வயல்நிலங்கள் வெள்ளக்காடாகவே இருக்கும் போது வெள்ளத்தில் (flooded rice) வளர்ந்த நெல்லில் மண்ணினுள் பிடித்துவைக்கப்பட அசேதன ஆசனிக்கு விடுபட்டு தாவரங்களால் அகத்துறிஞ்சுவதற்காக இலகுவாக கிடைத்துவிடும்;;. இதன்காரணமாக அசேதன ஆசனிக்கு அதிகளவில் நெல்மணிகளில் குறிப்பாக தவிடு பகுதியில் செறிவாகிவிடும். குத்தரிசியில் (parboiled rice) நெல்லை அவித்த பின்னர் அதனை குற்றும் போது தவிடு தனியாக பிரிக்கப்படுவதனால் செறிவாகியிருக்கும் ஆசனிக்கு தவிட்டுடன் அகற்றப்படுவதனால் குத்தரிசியில் இந்தப் பிரச்சனை மிக மிக குறைவு என கூறப்பட்டுள்ளது. என்றாலும் நாம் ஆசனிக்கு என்னும் வேதியியல் பொருளினால் எமது உணவில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.
நெல்லினை குற்றி பெறப்படும் அரிசி நன்றாக வேகவேண்டு;ம். இவ்வாறான நெல்லினை அரைகுறையாக வேகவைத்து பெறப்படும் சோற்றை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் வளர்ந்த நெல்லில் காணப்படும் ஆசனிக்கு எனப்படும் வேதியல் பொருள் இரவுமுழுவதும் நெல்லை ஊறவைத்து மறுநாள் அதனை அவித்து குற்றும்போது அதிகளவில் (கிட்டத்தட்ட 80சதவீதமான) வெளியேற்றப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையை எம்மவர்கள் காலங்காலமாக செய்து வருவதனால் ஆசனிக்கு எனப்படும் வேதியியல் பொருளின் பாதிப்பு எமக்கு அநேகமாக இல்லாமலேயே இருந்திருக்கின்றது. இதனை ஆய்வுரீதியாக செய்து தற்போது குத்தரிசியினை நன்றாக வேகவைத்து சோறாக்கி உணவாக்கினால் பிரச்சனையேதும் இல்லையென கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
எம்மவர்கள் வெள்ளை அரிசிசோற்றைவிட குத்தரிசியில் நாட்டங்கொண்டதற்கான காரணம் இதுவென்பதும் இதன் மூலமாக எளிதில் நெல்லிலேற்படக்கூடிய நச்சுத்தன்மை அகற்றப்பட காரணமாக இருப்பதனையும் பாருங்கள். தவிடு அகற்றப்படும் அதே நேரத்தில் இரவில் ஊறவைத்து மறுநாள் அவித்து காயவைத்து குற்றியெடுக்கும் குத்தரிசியின் மகத்துவம் இன்னும் பெறுமதிசேர்ந்ததாக மாறியிருக்கின்றது.
சமனான ஊட்டச்சத்தான உணவுக்கான தேவை !
Urge of balanced and nutritive food !
This article describes about the need for balanced and nutritive food for the food and nutritional security. Due to the economic crisis, many families struggle with the income generation and to provide balanced and nutritive food to the family members. It is proposed to have a home garden with all the essential plants and maintains for its establishment.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
பேரிடிபோல வந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து இத்தேசம் மீள்வதற்கான அணுகுமுறைகளை நிதிவழங்கும் நாடுகளினதும் அமைப்புக்களினதும் பரிந்துரைகளை கவனத்தில் கேட்டு உருவாக்கி அதனை அனைத்து மக்களும் அனைத்து மட்டத்திலும் செய்து காட்டவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் இளவயதினரிடையே குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய தகவலொன்று அனைவரையும் சிந்திக்க தூண்டியிருக்கின்றது. இதுவொரு அவசரமான அறைகூவலாக சுகாதாரப் பகுதியிலிருந்து விடுக்கப்பட்டிருக்கின்றது. வெறுமனே இதனை நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு குடும்பத்தையும் அதனது வாழ்வாதாரத்தில் பாதித்திருக்கின்றது. குறிப்பாக நிதிநெருக்கடிக்குள் சிக்கி அன்றாடம் தக்கவைத்து தப்பிப் பிழைத்து வாழும் மக்களும், மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் அல்லல்படும் மக்களும் இந்த ஊட்டச்சத்து குறைபாடு (Nutritional Deficiency) என்னும் பொறிக்குள் வீழ்ந்துவிடுவது சுலபமாகியுள்ளது.
இதற்கான பரப்புரைகளை மக்களுக்கு அறியத்தரும் வழிவகைகளை வலுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்திக்கும் அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நாம் அவசியம் இறங்க வேண்டியவர்களாகியிருக்கின்றோம். ஒவ்வொருவரின் மனையிலும் நிதிநெருக்கடியேற்படும் போது சமனான ஊட்டச்சத்தான உணவை அவர்கள் உண்பதற்கான வாய்ப்புக்களை இழக்கின்றார்கள். வளர்ந்து வரும் எதிர்கால சந்ததியான குழந்தைகள் இந்த பாதிப்புக்குள் உள்வாங்கப்பட்டால் அவர்களை மீட்டு வளமான சந்ததியாக வளர்த்தெடு;க்க மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஊட்டச்சத்து நலிவடையும் போது தானாகவே உடலில் எதிர்ப்பு சக்தி நலிவடைந்து செல்லும் என்பதனை நாம் அறிந்து கொண்டும் அது பற்றி சிறிதளவிலேனும் அறிந்து பல்வகைத்தன்மையுடைய மனைத்தோட்டத்தை உருவாக்குவது அவசியமாகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி ஊட்டச்சத்து குறைபாடு என்பது மூன்றுவகைகளுக்குள் உள்ளடங்கியிருக்கின்றது. ஒருவரின் உயரத்திற்கு தேவையான நிறையில் போதாமை (Low weight for height), ஒருவருடைய வயதிற்கான உயரத்தில் குறைபாடு (Low height for age), மற்றும் ஒருவருடைய வயதிற்கான நிறை போதாமை (Low weight for age) ஆகும். இவற்றுடன் நுண்ணூட்டச்சத்து போதாமை அல்லது அதிகமாக இருப்பதான நிலையிலும் நுண்ணூட்டச்சத்தில் குறைவிடாது தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை உணவுடன் வழங்கவேண்டியது அவசியமாகும். பெற்றோர் தம்முடைய ஊட்டச்சத்து குறைபாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு தாம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கான தினமும் மூன்றுவேளை உணவுக்காக கையேந்திநிற்கும் நிலையில் இருந்து விடுபட நாடுரீதியான பொறிமுறையை மேலும் வலுப்படுத்தல் வேண்டும்.
உலகளாவிய ரீதியில் 2014 இல் 462 மில்லியன் மக்கள் குறைவான உடல்நிறையைக் கொண்டிருந்து போது 1.9 பில்லியன் மக்கள் அதிகமான உடல்நிறையைக் கொண்டிருந்தது அறியப்பட்டது. 2016 இல் 5 வயதிற்கு குறைவான 155 மில்லியன் குழந்தைகள் உடல்நிறை குறைவாகவும் உயரத்தில் குறைவானவர்களாகவும் காணப்பட்டபோது 41 மில்லியன் குழந்தைகள் அதிகரித்த உடல்பருமனைக் கொண்டவர்களாக காணப்பட்டமையும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. எமது நாட்டின் அண்மைக்கால தரவுகள் தென்னாசியாவிலேயே அதிகரித்த ஊட்டச்சத்து குறைபாடு;ள்ள 5 வயதுக்கு குறைவான குழந்தைகளைக் கொண்டு இரண்;டாம் நிலையிலுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் 17 சதவீதமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவைதவிர வயது வந்த பெண்கள் ஊட்டச்சத்த குறைபாடால் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2000 ஆண்டளவில் கிட்டத்தட்ட 40 சதவீதமாக இருந்த ஊட்;டச்சத்து குறைபாடு கணிசமான அளவு 2010ம் ஆண்டளவில் 30 சதவீதமாக குறைந்து தற்போது மீண்டும் 37 சதவீத புள்ளிநிலையை அடையும் நிலைக்கு வந்திருக்கின்றது. இதற்கு அவர்களின் மனைப்பொருளாதாரத்தின் நிதிநிலைமை முக்கியமான காரணமாக முன்வைக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிநிலை விரைந்து தீர்க்கப்படக்கூடியதொன்றல்ல என்பதனால் பெண்களின் குறிப்பாக தாய்மையடையும் பெண்களின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
எதிர்பார்த்திருக்கும் வழிவகைகள் அனைத்தும் சாதகமான நிலையில் எமக்கு இல்லையென்பதனை புரிந்து கொண்டால் இவர்களுக்கான சமனான ஊட்டச்சத்தான உணவை பெறுவதற்கான வழிவகைகளையும் அவர்களுக்கான அன்றாடம் அவசியத் தேவைக்கான பணத்தை பெறுவதற்கான வழிவகைகளையும் அவர்களாகவே பெறுவதற்கான செயல்திட்டமாகவே மனைத்தோட்டத்தை பரிந்துரைத்திருக்கின்றனர். கிராம சந்தைகளை (Village markets) உருவாக்கினால் தமது மனையில் பெறும் உணவில் மேலதிகமானதை சிறியளவிலேனும் விற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களுக்கான வருமானத்தை பெருக்கும் வழிமுறைக்கு அந்தந்தப் பகுதியின் பொறுப்புவாய்ந்த மக்கள் நலசேவையாளர்கள்; வித்திட வேண்டும். கோவிட் 19 ஐ கடந்து தற்போது கோஸ்ட்டா 2 என்னும் புதிய தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புக்கள் பற்றி விவாதிக்கும் இந்நேரத்தில் கோவிட் 19 இல் பெற்ற அனுபவத்தை பாடமாக்கி இன்னொரு நுண்ணங்கித்தாக்கம் பெரிதாக உணரப்படுவதற்கு முன்னதாக உணவுற்பத்தியை பெருக்கி அதில் தேவையான ஊட்டச்சத்தினை அனைவரும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியாக வேண்டும். வருமுன் காப்போம் என்னும் மகுட வாசகத்தை நாம் மீண்டும் மீட்டிப்பார்க்கவேண்டிய இத்தருணத்தை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வோமானால் எமது மக்களை மீண்டும் ஏற்படக்கூடிய நுண்ணங்கி மற்றும் வேறெந்தவகையான பேரிடரிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளமுடியும். எமது உடலில் தேவையான நோயெதிர்;ப்பு சக்தியை இயற்கையாக நாம் ஏற்படுத்திக் கொண்டால் இவ்வாறான பேரிடர்களிலிருந்து எம்மைகாப்பாற்றிக் கொள்ள முடியும்.
எமக்கான சமனான ஊட்டச்சத்தான உணவை நாம் அனைவரும் இணைந்து உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை முனைப்புடன் முடுக்கிவிடவேண்டியதன் அவசியம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. எம்மால் எதுவும் முடியும் என்னும் தாரக மந்திரத்தை அனைவரதும் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கச் செய்து அனைவரையும் ஒன்றிணைத்து இக்கட்டான இச்சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவோம்.
இருகிழமைகளுக்கு தினமொரு கீரை !
Daily a green leafy vegetable for two weeks !
This article describes about the need for leafy vegetables for the daily diet. There are 14 types of leafy vegetables locally available and can be grown in home gardens. These leafy vegetables need not be grown in large extent, with the available space at homestead, we could grow them and consume as afresh. Having rich of easily absorbable and essential nutrients, leafy vegetables have plenty of antioxydents, which are essentially required for the sustenance of immunity. Below listed 14 types of leafy vegetables with their effect against illnesses, we could grow them organically and make use of them to prevent the diseases as well as curing diseases over a period.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
கீரைவகைகள் (Leafy vegetables) இயற்கையாகவே நமதுணவில் தவிர்க்கமுடியாத ஒரு உணவாகும். இவை பச்சையாகவே உண்ணக்கூடியனவாக இருந்தாலும் செரிமானத்தை ஊக்கப்படுத்தவும் இலகுவில் அகத்துறுஞ்சப்படவும் இவற்றை விட அன்ரிஒட்சிடென்கள் (Antioxydents) அதிகமாக உள்ள அத்துணை சக்திவாய்ந்த மதிப்புமிக்க கீரை வகைகளை ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படுகின்ற குழந்தைகள், இளையவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் இன்னும் ஏனையோரும் தமது உணவில் அவசியம் இடம்பெற முயற்சிக்க வேண்டும். கீரைவகைகள் சேதன முறையிலேயே வளர்த்துக் கொள்ளலாம்.
அதிலும் கிராமப்புறம் தவிர்ந்த நகர்ப்புறங்களில் கூட வீட்டினில் கிடைக்கின்ற நிலப்பரப்பில,; சாடிகளில், நான்குபுறமும் கட்டியெழுப்பியிருக்கும் மதில்சுவர்களில் நிலைக்குத்தான பயிர்வளர்ப்பாக இவற்றை இலகுவாக வளர்த்துக் கொள்ளலாம். கீரைவகைகள் வளர்வதற்கு அதிகம் இடுபொருட்கள் தேவைப்படமாட்டாது. வீட்டில் சமையலறையில் கிடைக்கும் கழிவுகளை இலகுமுறையில் மீள்சுழற்சி செய்து இயற்கைப் பசளைகளை உருவாக்கிக் கொள்ளலாம். சிறிய மண்புழு வளர்ப்பு அலகை வீட்டின் ஓரத்தில் உருவாக்கி மண்புழுஉரம், மண்புழு திரவம் மற்றும் மண்புழுதேநீர் என்பனவற்றை நீங்களாகவே உற்பத்தி செய்து கொள்ளலாம். கிடைக்கின்ற வீட்டு கழிவுகளை முறையாக சேகரித்து அவற்றிலிருந்து இயற்கையாக பசளைகளை பெறலாமே.
இயற்கை தந்த இலகுவாக வளர்த்துக்கொளளக்கூடிய கீரைவகைகள் எம்மிடம் இருக்கையில் இவற்றை பொழுதுபோக்காக வளர்க்கும் பொறிமுறையை அறிந்து கொண்டால் உணவு மூலமாகவே இவற்றை நாம் உள்ளெடுத்துக் கொள்ளும் போது கீழ்க்குறிப்பிட்ட நோய்களுக்காக மருத்துவரை தேடியோட வேண்டிய தேவை ஏற்படாது. மாறாக உடல் உஸ்ணத்தை குறைத்து குளிர்மையாக ஊட்டச்சத்து நிறைந்ததாக சமனிலையில் வைத்திருக்கும் பலவகை பசுங்;கீரைவகைகள் எமது ஊட்டச்சத்தை இலகுவில் பெற எமக்குதவும்.
எமது வீடுகளில் கிடைக்கின்ற நிலபரப்பில் சூரிய ஒளிபடுகின்ற இடத்தில் சிறுஅளவில் அனைத்து கீரைவகைகளையும் வளர்த்துக் கொள்ளலாம். முருங்கையை உயிர்வேலிகளில் நடுகைசெய்து விட்டால் முருங்கைக் காயை தேவையானபோது அறுவடை செய்வதுடன் கிழமைக்கு ஒன்றாக அதன் இலையையும் எமது சமையல் நிரலுக்குள் சேர்த்துக் கொள்ளலாம்.
அஸ்த்துமா நோயை குணமாக்க தூதுவளைக்கீரை, இரத்த சோகைக்கு பசலைக்கீரை, ஈளைக்கு அல்லது அஸ்துமாவுக்கு முசுமுசுக்கை, உயர்இரத்த அழுத்தத்தைத் தீர்க்க் பருப்புக்கீரை, எலும்பு தேய்மானத்திற்கு முருங்கைக்கீரை, எலும்பிற்கு வலுச்சேர்க்க இளம்பிரண்டை, சிறுநீர்பிரச்சனையை தீர்க்கும் சிறுகீரை, நீரிழிவுக்கு வெந்தயக்கீரை, கல்லீரலிலுள்ள பிரச்சனைகளுக்கு கரிசாலை, காமாலைக்கு கீழாநெல்லி, குடல்புண்ணை ஆற்றும் மணத்தக்காளிக் கீரை, பல்லுக்கு வேலாலன், பசியின்மைக்கு அகத்திக்கீரை மற்றும் சீரகமிஞ்சி, பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்காணிக் கீரை, மஞ்சள் காமாலைக்கு கரிசலாங்கண்ணி கீரை, மலச்சிக்கலை தீர்க்க முளைக்கீரை, மூட்டுவலியை நீக்கும் முடக்கத்தான் கீரை, தோல்நோய்களை தீர்க்கும் அரைக்கீரை, முடிவளர நீலிநெல்லி, மூளைக்கு மற்றும் ஞாபகமறதியைப் போக்கும் வல்லாரைக் கீரை என பல்வகைக்கீரை வகைகள் பலவுண்டு. இயற்கையாக விரைந்து வளரக்கூடிய இவ்வாறான மூலிகைகளை எம்முடைய பிரதேசத்தில் சிறியதாக வளர்த்து தினமும் உட்கொள்ளலாம்.
மேற்கூறிய கீரைவகைகளை விட இன்னும் பலவுண்டு. கிராமப்புறங்களில் மக்கள் தாமாக இவற்றை சேகரித்து உணவாக்கும் விதத்தையும் நாம் காணலாம். நாளுக்கொரு கீரை என நாம் கணக்கில் வைத்துக்கொண்டால் எமக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் காசு பணமின்றி நாமே வளர்த்து உண்ணும் நிலையுண்டே.
இந்த கீரைவகைகள் சிறந்ததாக சுகாதாரமான முறையில் சேதன வழியில் சிறு தொட்டிகளில் எமது மனைகளில் கிடைக்கின்ற இடவசதியுள்ள இடங்களில் வளர்த்துக் கொள்ளமுடியும். சரியான கீரை வகைகளை இனங்கண்டு அவற்றை உட்கொள்ளுவதனால் எமதுடலுக்கு தேவையான அவசியமான விற்றமின்கள் நார்ச்சத்துக்கள் கிடைக்கச் செய்ய முடியும். மருந்து வகைகளை வாங்கி உணவாகக் கொள்ளாமல் பசுமையான கீரை வகைகள் எமது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்கும்.
மரக்கறிகளின் அதீத விலையுயர்வை தடுக்கும் தந்திரோபாயம் தேவை !
The need for a mechanism to manage price hike of vegetables !
This article describes about the need for
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எங்களூர் பயிர்ச்செய்கை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பலவகையான பீடை நோய் என்பனவற்றின் சேதங்களை தாக்குப்பிடித்து முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில் எதிர்காலத்து விவசாயத்தின் நிலை மிகவும் தளம்பலுக்குள்ளாகும் என எதிர்வுகூறப்படுகின்றது. மரக்கறிப் பயிர்கள் இம்முறை பெய்த அதீத மழையின் காரணத்தினால் அழிவுக்குள்ளாகியதால் அதனது விலைகளில் அதிகூடிய தளம்பல் பதிவாகியிருக்கின்றது. மரக்கறிப் பிரியர்களுக்கு இந்த அதீத விலையுயர்வு ஏமாற்றத்தையும் எதிர்ப்புணர்வையும் உருவாக்கியிருக்கின்றது.
விவசாய செய்கையில் காலந்தாழ்த்திய பயிர்ச்செய்கைகள் நடைமுறையிலிருந்த போதும் காலநிலை அசம்பாவிதங்களினால் இத்தகைய விலையுயர்வு வழக்கமாக காலபோகத்தில் இருக்கின்ற போதும் இம்முறை பொருளாதார இடறுநிலை காரணமாக மரக்கறிப்பொருட்களின் விலைகளை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. நூறுகிராம் காரட் இருநூறு ரூபாவாகியிருக்கும் துர்ப்பாக்கிய நிலை வரலாற்றில் இவ்வருடம் பதிவாகியிருக்கின்றது. விவசாயிகளுக்கு இந்த விலையுயர்வு இலாபத்தை தந்தாலும் நுகர்வோருக்கு வாழ்வாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பயிர்ச்செய்கை திட்டமிடல்கள் குறிப்பிட்ட திறனுடனான பயிற்சிகளுடன் நடைபெற்றும் இவ்வாறான அதியுயர் விலையேற்றம் ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும். வழமைக்கு மாறாக விலைஉயர்வை இவ்வாறு கட்டுக்கடங்காமல் ஏறவிடாமல் தடுப்பதற்கு உரிய தந்திரோபாயங்கள் உருவாக்கப்படல் வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இன்னமும் சாக்குப் போக்கு சொல்லாமல் இவ்வாறான விலையுயுர்வை தடுப்பதற்கான வழிவகைகளை காலநிலை எதிர்வுகூறலுடன் நடைமுறைக்கு கொண்டு வருதல் வேண்டும்.
காலநிலை மாற்றம் எதிர்பார்த்தளவில் இல்லாமல் அதீத மாற்றத்துக்குள்ளாகும் நிலை இம்மாதிரியான காலநிலை இடர்களுக்கு காரணமானதாக இருந்தாலும் தற்போதுள்ள விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்னமும் துல்லியமாக இந்த மாற்றங்களை எதிர்வுகூற முடியாதிருக்கின்றது. இந்த நிலைமையில் குறிப்பாக காலநிலை எதிர்வுகூறலில் அவசியம் முன்னேற்றம் ஏற்படல் வேண்டும். விவசாயத்தையும் விவசாயியையும் காப்பாற்றும் நிலைக்கு வடமாகாணத்தில் காலநிலையை துல்லியமாக எதிர்வுகூறும் நிலையம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளுக்கு முன்னேற்பாடான தகவல்கள் தெரிவிக்கப்படல் அவசியம். இந்த கட்டமைப்பு உருவாக்கப்படாததன் காரணமாகவும் கிடைத்த தகவல்கள் சரியாக விவசாய பெருமக்களுக்கு சென்றடையாத காரணத்தினாலும் பூநகரிப் பகுதியில் பாதையில் காயவைக்கப்பட்ட அறுவடைசெய்த நெல் பெய்த அடர்மழையில் நனைந்து மேலும் விவசாயிகளை கஷ்டத்துக்கள்ளாக்கியிருக்கின்றது
தகவல் தொழினுட்பம் அதீத வளர்ச்சியில் வெற்றிநடைபோடும் போது காலநிலை மாற்ற எதிர்வுகூறல்கள் மேலை நாடுகளிலுள்ள தொழினுட்பத்தை உள்வாங்கி இன்னும் துல்லியமாக விவசாயப் பெருமக்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும். யாழ்ப்பாணப்பல்கலைக்கழக புவியியல் துறையின் கலாநிதி பிரதீபராஐh தன்னுடைய புலமையின் வெளிப்பாடாக முகப்புத்தகத்தில் இவ்வாறான துல்லியமான எதிர்வுகூறலை தரமான வரைபடங்களூடான தகவல்களுடன் வெளிக்கொணர்வதனை காணலாம். இதில் பலர் நன்மையடைந்துள்ளதனை அவர்களின் கருத்துக்களிலிருந்து காணலாம். இருப்பினும் இத்தகைய தகவல்கள் அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும் கிடைக்கவில்லையென்ற உணர்வு வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. இவருடைய புலமையை முதன்மைப்படுத்தி வடமாகாணத்துக்குரிய காலநிலை எதிர்வுகூறல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை வளிமண்டலத் திணைக்களத்தின் இணைப்புடன் வடமாகாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துறைசார் வல்லுனர்களை இணைத்து விரைந்துருவாக்கல் அவசியமாகும். வெறுமனே எதிர்வு கூறல்களாக இல்லாமல் காலநிலை மாற்றம், மழை வீழ்ச்சி, வரட்சி, பயிர்ச்செய்கை, பீடை நோய் பாதிப்பு, சந்தைப்படுத்தல், என பலவகைத் தகவல்களும் இதில் வெளிக்கொணரப்படல் வேண்டும்.
மேலும் வீட்டுத்தோட்டங்களில் பயிர்;ச்செய்கை செய்யப்படும் மரக்கறிப் பயிர்களை கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் நடைமுறையும் உருவாக்கப்படல் வேண்டும். விவசாயத் திணைக்களத்தால் முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் தோட்டங்களின் விளைபொருட்களை தகுந்த சந்தைப்படுத்தல் பொறிமுறை மூலம் சந்தைப்படுத்தும் பொறிமுறையை உருவாக்கினால் சிறுதோட்ட வெள்ளாண்மை சந்தைக்கு வந்து விலைகளின் தளம்பலை ஓரளவுக்கு எதிர்வு கொள்ளும். காரட்டுக்கு நுவரெலியாவையும் தம்புள்ள சந்தையையும் காத்திராது எங்களூர் மரக்கறிப் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவித்து அவற்றை எம்மவர் நியாய விலையில் கொள்வனவு செய்ய வழிவகுத்தல் அவசியமானதாகும்.
ஒவ்வொருமுறையும் கற்றறிதல் என்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் என்றும் கூறிக்கொண்டிருக்காமல் அவசியமான திட்டமிடல்கள் மரக்கறிப் பயிர்களின் உற்பத்தி சார்பாக ஏற்படுத்தப்படுமானால் அதீத விலைத்தளம்பல்களை ஓரளவுக்கேனும் மரக்கறிப் பயிர்கள் தட்டுப்பாடான குறிப்பாக சமய விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் காலங்களில் கட்டுப்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு தேவையான மரக்கறிப்பயிர்களை கிடைக்க செய்ய முடியும். விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியையும் குறிப்பாக தகவல் தொழினுட்பத்தின் மேம்பாட்டையும் இத்துறைசார்ந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர இது சார்ந்த புலமையாளர்களின் உதவியுடன் திட்டங்கள் நடைச்சாத்தியமான பொறிமுறை அமுல்படுத்தப்படல் அவசியமாகும்.
வடமாகாணத்துக்கென காலநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு நிலையத்தின் அவசியம் !
The need for Centre for forecasting and research on Climate change to Northern Province !
This article describes about the need for Centre for Forecasting and Research on climate as climate change is experienced in every work of life and its predictions are very essential to the farmer, fisherment, livestock growers, industrialists, and all as early detection is best to cure and to overcome such struggle. The centre propsed will serve to all sectors and inaddition to the service provided by the Meteorological stations, the added services are essential to safeguard the farming and farmers
2024ம் ஆண்டு தமிழர்களின் தைப்பொங்கல் இம்முறை பொருளாதார வறுமைக்குள்ளும் வெடிகள் வெடித்து வழக்கமான கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கின்றது. தைமகளின் வருகையை வருணபகவானுக்கு பொங்கி படையலிட்டு சிக்கனமாகவும் செழிப்புடன்; நல்லறவுகளுடன்; சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். சந்தைகளில் பல்வகை தைப்பொங்கல்; பொருட்கள் விற்பனையும் நடைபெற்றிருக்கின்றது என்றாலும் பனையோலை தோரணமும் விற்பனைக்கு வந்திருப்பது இம்முறை ஸ்பெசலான விடயமாகும்.
உறவுப் பாலம் உணர்வுபூர்வமாக உருப்பெறும் நாட்களை நோக்கி பலத்த எதிர்பார்ப்புக்களை நாமும் தேடிக்கொண்டிருக்கையில் மறுபக்கத்தில் நம்மவர் விவசாய செய்கையின்; எதிர்பார்ப்புக்கள் காலநிலையை மையப்படுத்தியே நகர்ந்து கொண்டிருப்பதனை அனைத்து மக்களும் விவசாயப் பெருமக்களும் ஏன் தொழிற்றுறை சார்ந்தவர்களும் உணரத்தொடங்கியிருக்கின்றனர். பூகோள ரீதியில் காலநிலை மாற்றம் என்பது பேசுபொருளான காலந்தொட்டு எம்மைநோக்கி காலநிலையின் தடுமாற்றம் ஆழநகரத் தலைப்படும் என பலதடவைகள் பலரும் எழுதியும் பேசியும் அவ்வப்போது திட்டமிட்டும் அவற்றை நடைமுறைப்படுத்தல்களுக்கு முக்கியத்துவம் என்னவோ பெரிதாகக் கொடுக்கப்படவில்லை.
தற்போது காலநிலை மாற்றத்தைப் பற்றி சிலாகிக்க அனைவரும் தலைப்பட்டுள்ளனர். இது நல்ல செய்தி என்றாலும் திட்டமிடுதல் மட்டத்திலும் திட்;டங்களை நடைமுறைப்படுத்தும் நம்மவர்; ஆளுகின்ற மன்றத்திலும் இது காலங்காலமாக பேச்சிலிருந்தாலும் அதற்கான நடைமுறைப்படுத்தல்கள் முழுமையாக நடைமுறையிலில்லை. வளிமண்டல ஆய்வு திணைக்களத்தின் அறிவிப்போடு எமது காலநிலை மாற்ற செய்திகள் நின்றுவிடுகின்றன. அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ்அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் புலமையாளர்களும் தொழிலதிபர்கள், விவசாய பெருமக்கள் தனியார் துறையினர் என பலருமிணைந்து காலநிலையை துல்லியமாக கணித்தலும் அதனை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதற்குமான நிலையத்தின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. வந்த பின் நொந்து நோவதைவிட முன்கூட்டியே எம்மை தயார்ப்படுத்திக் கொள்வதற்கான செயலுருவாக்கமாகவே காலநிலை முன்னறிவிப்பு நிலையத்தை வடமாகாணத்தில் உருவாக்குவதன் அவசியம் பரிந்துரைக்கப்பட்டது. இதில் ஆய்வுகளை நடாத்தியும் கடந்தகால அனர்த்தங்கள், தவறுகள் ஆகியனவற்றை மீட்டுப்பார்த்ததும் எதிர்கால நிலைமைகளை ஓரளவுக்கேனும் எதிர்வுகூறவும் தலைப்பட வேண்டும்.
இவ்வாறான நிலையத்தின் அவசியம் முன்னுணரப்பட்டுள்ளதாக கலந்துரையாடல்களின் முடிவுகள் தெரிவித்திருந்தாலும் இதனை உருவாக்குவதற்கு அரசநிதியில் பெருந்தொகை ஒதுக்கப்படவில்லை என்பதனை விட ஒதுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தனியாரின் நிதி மற்றும் தொழினுட்ப பங்களிப்பினால் காலநிலை அவதான மற்றும் முன்னறிவிப்பு நிலையம் வடபகுதியில் உருவாவதற்கு வழியண்டு என்பதனை கூட்டத்தில் கலந்துரையாடிய போது எடுத்துச் சொல்லப்பட்டது. இத்துறைசார் புலமையாளர்களை இன்னும் பெருக்கி ஒருங்கிணைந்த முறையில் செயற்கை நுண்ணறிவு உட்பட அனைத்து உயர்தொழினுட்பங்களுடன் கூடிய நிலையமாக உருவாக்குவது அனைத்து மக்களுக்கும் செய்யும் பேருதவியாகும்;. இதனால் விவசாயத்துறையில் வரும் பலவகை இன்னல்களை சேதங்களை முன்கூட்டியே தவிர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். விவசாயஞ்சார் தொழிற்றுறையும் தம்மை முற்கூட்டியே தயார்ப்படுத்திக் கொள்ளலாம்.
வளிமண்டல திணைக்களம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (கணனித்துறை, புவியியல் துறை, விவசாயம் தொழினுட்பம் மற்றும் பொறியியல் பீடங்கள்;), விவசாயம,; மீன்பிடி, கால்நடை மற்றும் சுற்றுசூழல் திணைக்களங்கள்,; சுற்றுலாத்துறை, யாழ் எப்எம், டான் தொலைக்காட்சி, யாழ் ஊடகத்துறை குறிப்பாக பத்திரிகைகள் என்பன இணைந்த ஒரு ஒழுங்கமர்வு கட்டமைப்பினூடாக இக்கைங்கரியத்தை முன்னெடுக்கலாம். இவற்றுக்கும் மேலாக இணைய வசதியையும் பயன்படுத்தி கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாக செயலிகளை பயன்படுத்தியும் இத்தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இவையனைத்தையும் தானியங்கி பொறிமுறை (யுரவழஅயவழைn) மூலம் கணிப்பிட முடியுமாதலால் இந்நிலையத்தினை அமைப்பதற்கான முன்னுரிமை 2024ம் ஆண்டு வடமாகாண அல்லது மாவட்ட திட்டங்களுக்குள் கொடுக்கப்படல் வேண்டும். புலம்பெயர் தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் முடியும். உலகிலுள்ள சிறந்த தொழிநுட்பங்களை உள்வாங்கி இந்நிலையம் செயற்படத்தொடங்கினால் பலருக்கும் குறிப்பாக தொழிற்றுறையிலுள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
காலநிலை மாற்றம் நீண்டகாலத்துக்கான அறிவிப்பு என்றாலும் அன்றைய வானிலை செய்திகளும் மக்களுக்கு பெரிதும் உதவும். துணிந்து காரியத்தில் இறங்குவதற்கு காலநிலை மற்றும் வானிலை பற்றிய துல்லியமான கணிப்புக்கள் மிக மிக அவசியமானதாகும். இந்நிலையத்தின் வருகையை அதிலிருந்து துல்லியமான முன்னறிவுப்புகள் எம்மவர்களை வந்தடைய அனைவரினதும் அருளாசி கிடைக்க வேண்டும். மழை வருகை பற்றிய விடயங்கள், வரட்சி, காலபோக சிறுபோக மாற்றங்கள், பயிரினங்களின் பயன்பாடு, கிடைக்கும் மழைவீழ்ச்சியினளவு, வெள்ள அபாயம், குளிர், நீர்நிலைபற்றிய செய்திகள், என பலவற்றை கிராம மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்க1ளுக்கு கிடைத்திட வழிசெய்தல் வேண்டும்.
வடமாகாண அந்நிய செலாவணியும் புகையிலைச்செய்கையின் பங்களிப்பும் !
Northern Province Foreign Exchange and contribution of Tobacco cultivation !
This article describes about the Northern province GDP (Gross national product} and followed by exploring the possibility of encouraging tobacco cultivation. This crop is a non-edible cash crop, which farmers prefer to grow them due their demand . Further the leaves of tobacco after harvesting have to be dried, processed with special type of Coda, which was prepared to value add its quality and once prepared can be exported to foreign market. As a cash crop, not required much inputs to cultivate it.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இலங்கையின் மூன்றாவது அதிக நிலப்பரப்பைக் (8884 சதுர கிலோமீற்றர்) கொண்ட வடமாகாணம் வளங்கள் பலவற்றைக் கொண்டும் ஏறக்குறைய 11 மில்லியன் சனத்தொகையைக் கொண்டுமிருந்தும்; இதனது அந்நிய செலாவணி 3 சதவீதத்திலேயே மேலெழமுடியாமல் நீண்ட காலமாக தங்கிநிற்கின்றது. இதற்கு இங்குள்ள வளங்களை நாம் வினைத்திறனாக உலக சந்தையை நோக்கி பெருமளவில் நகர்த்தாததும் மேநாட்டவர் நிவாரணத்தை இரண்டு கைகளிலும் வாங்கிப் பழகியதும் காரணமாகும். போர்க்காலத்தில் அடிபட்டுப் போன எமது பொருளாதாரம் மீண்டெழ முடியாமல் வாங்கிப் பழக்கிய கலாச்சாரமாக மாற்றிவிட்டதுடன் மாகாணம் வாங்கியதை பத்து வருடங்கள் கழித்து தேசமே கையேந்தி வாங்கும் நிலைக்கு வந்ததை இந்த இடத்தில் எண்ணிப்; பார்த்தல் தகும். எமது வினைத்திறனற்ற அணுகுமுறைகளை மீட்டிப்பார்க்காது குறைகாண்பதிலேயே எமது நேரம் செலவாகியிருக்கின்றது. எம்மால் என்ன முடியும்? ஏன் முடியாது? என்னும் வினாக்களுக்கு இன்னமும் விடைதேடிக்கொண்டிருக்கின்றோம்.
சுயத்தில் நம்பிக்கை வைக்காததும் அந்நிய நாட்டு மோகமும் இவற்றுக்கு மேலெழுந்த வாரியான காரணங்களென்றாலும் வடமாகாணத்து உற்பத்திகளை எம்மவர்களின் பயன்பாடு போக அதிகதரமுள்ள பொருட்களாக உலக சந்தையில் நிலைபெறச் செய்யாமையினால் எமது மாகாணத்து உற்பத்தியும் பெருகாது அதற்கான சிறந்த சந்தைவாய்ப்பையும் பெற்றுக் கொடுக்க முடியாது அவதிப்பட வைத்திருக்கின்றது. இதனை பேசுபொருளாக வைத்து பலகாலமாக நாம் தென்பகுதி தண்ணீர் போத்தலுடன் பேசிக்கொண்டோமே தவிர ஆக்கபூர்வமான செயல்வடிவங்கள் எதனையும் ஒருங்கிணைத்து முறையாக முன்னெடுக்கவில்லை என்பதனை வருத்தத்துடன் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். வடமாகாண சபை என்னும் அதிகார கட்டமைப்புக்குள் இருந்த கணிசமான வாய்ப்புக்களையும் தவறவிட்டு வடமாகாண உற்பத்திகள் உலக சந்தையில் நிரந்தரமான இடம் பிடிக்காது எமது வளங்களை பாதுகாத்து அவற்றை வினைத்திறனாக பயன்படுத்த எத்தனிக்காத நிலையில் எமது மக்களின் அன்றாட வருமானத்தை கூட அதிகரிக்க முடியாத ஏதிலிகளாயினோம்;.
2023 ஆகஸ்ட் மாதத்தில் தேசவிவசாயத்தின்; அதியுயர் சபை எமது உற்பத்தி இங்குள்ள மக்களுக்கு உணவளிக்க போதுமென்றும் அதனால் நெல் இறக்குமதி அவசியமில்லை எனவும் அதனுடன் சேர்த்து கௌபீ, குரக்கன், உழுந்து, பயறு, நிலக்கடலை என்பனவும் உற்பத்தியில் அதிகரித்துள்ளமையினால் அவற்றினை இறக்குமதி செய்யத் தேவையில்லை என முடிவாயிற்று. அசேதன உரங்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்தபின் உற்பத்தியில் கணிசமான உயர்வைக் கண்டவுடன் இந்த செய்திகள் வெளிவந்தன. நல்ல சகுனம் எம் தேசத்திற்கு என எண்ணி முடிக்கையில் பொருளாதார நிலைகுலைவு மக்களின் குடும்ப வருமானத்தையும் (கயஅடைல inஉழஅந) பொருட்களை வாங்கும் சக்தியையும் (pரசஉhயளiபெ pழறநச) நலிவடையச் செய்து விட்டிருக்கின்றது. சாதாரண குடிமகனின் வாழ்க்கையில் பொருளாதாரம் சுமையாகியிருக்கின்றது. பஞ்சம் பட்டினி நிலைமை அதிகரிக்கவும் வாய்ப்புக்களை உயர்த்தியிருக்கின்றது.
குறிப்பாக பனைவளத்தை நம்பிவாழும் குடும்பங்களை அதிலேயே தங்கியிருக்க இன்னும் கட்டாயப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உயரிய திட்டங்கள் முறையாக முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அவர்கள் அதில் பயனடைந்தனர் என்னும் செய்தி காதுவழி வரும் வரை எம்மவர் வாழ்வாதாரப் பிரச்சனையை நாமும் தக்கவைத்து அதில் குளிர்காய நினைப்பது போலவே தோன்றுகின்றதல்லவா. எமது வளத்தைப்பெருக்கி அதிலிருந்து உலக தரமான பொருட்களை மதிப்பேற்றஞ் செய்து வர்த்தகப் பொருளாக்கி வடமாகாணத்து உற்பத்தி (ஆயனந in ழேசவாநசn Pசழஎinஉந ழக ளுசi டுயமெய) என்னும் அடையாளத்துடன் உலக சந்தையில் வலம் வர வைத்தலுடன் எமக்கான விடிவு காலம் ஆரம்பமாகும் எனலாம். இன்னொருவர் கைகளில் தங்கிநிற்கும் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு எமது உற்பத்தியை பெருக்கி எம்மவர் பொருட்களை தரத்தில் கோலோச்சும் பொருட்களாக விற்பனைக்கு விடும்போது எம்மவர் மதிப்பும் உலக தரத்தில் பொருட்களின் மதிப்பும் அதிகரிக்கும்.
புகையிலை எமது மக்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த பயிர். புகையிலைச் செய்கையில் யாழ்ப்பாணத்தவர் பெயர்போனவர்கள். உடுப்பிட்டி புகையிலை, நீர்வேலி புகையிலை இன்னும் தீவகத்துப் புகையிலை என ஒவ்வொன்றுக்கும் அந்தந்த நிலத்து மண்வாசனை இருக்கும். அறுவடைசெய்த புகையிலைகளை கட்டி மதில்களில் காயப்போட்டு காய்ந்ததற்கு கோடா சேர்த்து மதிப்பேற்றி விற்பனைக்கு வரும். புகையிலைப் பயிர்ச்செய்கையால் விவசாயப் பெருமக்கள் நட்டப்பட்டதில்லை ஆனால் அரச உதவிகள் எதுவும் புகையிலைச் செய்கைக்கு கிடைப்பதில்லை. புகையிலை செய்கையில் மூன்று நான்கு இலைகளை விற்று வரும் பணம் அந்த புகையிலை செடியை உற்பத்தி செய்ய போதுமானது. மீதி 8-10 இலைகளும் உற்பத்தியாளனுக்கு ஆதாயமாக வந்து சேரும். இப்படியொரு பணப்பயிராக எதனையும் கணிப்பிட முடியவில்லை என்பதாலும் இப்பயிர் எம்மவர்களுடன் காலங்காலமாக பயிரிடப்பட்டதாலும் முறையான பொறிமுறைக்கூடாக மீளவும் புகையிலை செய்கையினை மீளுருவாக்கலாம்.
ஒருகாலத்தில் ஸ்ரீவியா எனப்படும் இனிப்புக்கு பதிலாக பயன்படும் ஒருவகை தாவரத்தை இங்கு வளர்த்து இனிப்புசுவையூட்டியாக பயன்படுத்த பலவாய்ப்புக்களை உருவாக்கினார்கள். ஆனால் என்னவோ மக்களின் மனப்பாங்கு அதனை வளர்ப்பதிலும் சந்தைப்படுத்தலிலும் அதிக அக்கறை காட்டவில்லை. ஸ்ரீவியா பயிரை உலகளவில் பலநாடுகள் வளர்;த்து பயன்பெற்ற போதிலும் எமத நாட்டில் அதற்காக வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையெனலாம்.
மேற்கூறிய நிலைமையை அவதானமாக அலசிப்பார்த்தால் புகையிலை செய்கையின் மேலுள்ள கட்டுப்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்யவேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். புகையிலைச் செய்கையால் புற்று நோய் அதிகரித்திருப்பதென்பது மிகைப்படுத்திய செய்தியாகவே பார்க்கலாம். இலங்கையில் ஏறக்குறைய முதலாம் நிலையிலிருப்பது; மார்பகபுற்றுநோய் (22 சதவீதம்) வாய்வழிபுற்று நொய் (ஆகக்கூடியது 12 சதவீதம்) கருப்பை புற்றுநோய் (6 சதவீதம்) என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையும் மீண்டும் அலசி ஆராய்ந்து ஏற்றுமதிக்காக தரமான புகையிலை உற்பத்தியை ஊக்குவிக்கலாம்;.
புகையிலை செய்கையினை அரச நடைமுறைகளுக்குட்பட்டு தரநிர்ணயஞ் செய்து உலக தரத்திற்கு உயர்த்தி அதனை உலக சந்தையில் விற்பனைக்கு விடலாம். உள்ளூரில் இதனது பயன்பாட்டை மட்டுப்படுத்தலாம். தென்பகுதியில் கஞ்சா பயிரிட அனுமதிக்கப்பட்டிருப்பது போல காலங்காலமாக இங்கே பயிர்ச்செய்கை செய்யப்பட்ட புகையிலையை தொடர்ந்து வடமாகாணத்தில் பயிர்ச்செய்ய வழிவகைகளை செய்து கொடுப்பதோடு அதற்கு சட்ட வரையறையுள்ள அங்கீகாரமும் கொடுக்கப்பட்டால் அதிக ஆதாயமின்றி அல்லலுறும் உற்பத்தியாளனுக்கு இதன் மூலம் ஆதாயமும் எமது அந்நியநாட்டுச் செலாவணியும் அதிகரிக்கும். மிகச் சிறியளவில் ஆயுர்வேத மருந்துற்பத்திக்கு பயன்படுத்த உற்பத்தியான கஞ்சா இப்போது கிளைவிட்டு பரவ ஆரம்பித்திருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ புகையிலைச் செய்கையில் ஈடுபட தற்போதய பொருளாதார நெருக்குவாரமும் முயலுகின்றது.
அந்த இறுக்கத்தில் வேறுவழியின்றி விவசாயப் பெருமக்களே புகையிலையை பயிர்செய்து தமது ஏனைய பயிர்களில் வரும் இழப்பையும ;காலநிலை மாற்றத்தால் பயிர்களை இழக்கும் ஒவ்வொரு விவசாய பெருமகனுக்கும் இந்த வசதி ஆறுதலளிக்கும். ஒன்றில் இழந்ததை இன்னொன்றி;ல் கிடைக்கும் என்பார்கள். அது போல புகையிலைச் செய்கை முறைப்படி செய்யப்பட்டால் இதுவும் எமது விளைவுகளில் முதன்மையாகும். அதனை சட்ட திட்டங்களுக்கமைவாக பதப்படுத்தி மதிப்பேற்றஞ் செய்தால் வெளிநாட்டு சந்தையில் புகையிலையிலிருந்து அதிக ஆதாயத்தை பெற வழியுண்டு. எங்களூர் கோடா தொழினுட்பத்திற்கு வெளிநாடுகளில் அதிக மவுசு உண்டு. ஆகவே புகையிலையை அசேதன உரம் மற்றும் பீடைநாசினிகள் தவிர்த்து உற்பத்தி செய்ய முயன்றால் அதுவே எமது அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ளும்.
புகையிலைக்கு மாற்றாக எந்தப் பயிரிலும் இவ்வளவுக்கு ஆதாயம் கிடைக்காது என்றாலும் போக்குவரத்து இன்னும் இலகுவாக்கப்பட்டு நாம் விளைவிக்கும் பயிர்களுக்கான மதிப்பேற்றம் அதிகரித்து அதற்கு சிறந்த சந்தைவாய்ப்பும் அதிகரிக்கப்பட்டால் எங்களூர் மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிக இலாபம் பெறமுடியும். இவற்றுக்கெல்லாம் அச்சாணியாக அமையும் உலகதரக்கட்டுப்பாட்டு பொறிமுறைகளை வடமாகாணத்தில் உருவாக்கினால் இவையனைத்தும் சாத்தியமே.
இதேபோல பனைமரத்தின் மதிப்பேற்றஞ்செய்த பொருட்களை தரநிர்ணய கட்டுப்பாடுகளுக்கமைவாக உற்பத்தி செய்தால் எமது ஊரில் தற்;போது தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பனையிலிருந்து பெறப்படும் நுங்கு அழகாக சீவி வெட்டியெழுக்கப்பட்டு பதனிடப்படும் கொள்கலனில் விற்பனைக்கு உலகசந்தைக்கு வந்திருக்கின்றது. அவை இந்தோனேசியாவிலிருந்து சந்தைப்படுத்தப்படுவதாக அறியமுடியும். பனைமரத்திலிருந்து பெறப்படும் கள்ளு மற்றும ;ஏனைய பொருட்களின் உலக சந்தைவாய்ப்பை ஏற்படுத்திய எமது புலம்பெயர்ந்த உறவுகள் தங்களது சந்தைப்படுத்தலுக்கு இங்குள்ள உற்பத்தி போதாதாக இருப்பதாக கூறியிருக்கின்றார். இருக்கின்ற பனைவளத்தை நாம் பாதுகாக்கின்ற அதே நேரத்தில் அதிலிருந்து பெறப்படும் உற்பத்திகளை உலகதரநிர்ணயத்துடனான சந்தைவாய்ப்பை ஏற்படுத்தும் பொறிமுறைகளுக்குள் நாம் வந்தாலன்றி எமது உற்பத்திகளுக்கான அந்நிய செலாவணியை பெறுவது கடினமாக இருக்கும்.
அம்பரலங்காய் என்னும் இயற்கையுணவு !
Ambaralankai: A natural food !
This article describes about
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது உணவில் அதிகம் பயன்படுத்தாத காய்கள் கனிகள் என பலவகையானவை எம்மூரிலுண்டு. இவை இயற்கையாக மற்றும் பயிரிடுவதன் மூலம் நாம் இலகுவில் எமது அன்றாட தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வப்போது எமது தேவைக்காக பயன்படுத்துவதோடு சரி ஆனால் இவற்றின் ;பெறுமதி தெரிந்தால் எமது உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கின்றதல்லவா. வெறுமனே கனியாக அல்லது காயாக அல்லாது இவற்றில் செறிந்திருக்கும் ஊட்டச்சத்தினை அவதானித்தால் எமது தேகாரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுவனவாகவும் இவை அமைந்துவிடுகின்றன. இந்தவகையில் பல காய்களும் கனிகளும் எமக்காகவே இயற்கை தந்துவைத்திருக்கின்றது. அவற்றினை இனங்கண்டு பயன்படுத்தும் போது அவற்றிற்கான பெறுமதியும் அதிகரிக்கும்.
அம்பரலங்கா (ளுpழனெயைள னரடளளை) எமது நாட்டில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஜமைக்கா தீவுகளில் வளர்க்கப்படுகின்றது. இதனது கனி நார்ச்சத்துடன் சேர்த்து ஊட்டச்சத்து அதிகமானதாகவும் காணப்படுகின்றது. அம்பரலாங்காய் செங்காயாகவும் பழுத்த பழமாகவும்; உணவாக்கிக் கொள்ளலாம். இதற்கு கோல்டன் அப்பிள் (Golden Apple) எனவும் ஜு பிளம்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றது.
எம்மூரில் எமது வீட்டுத் தோட்டங்களில் இலகுவாக வளரக்கூடிய பல்லாண்டு வாழும் நடுத்தர உயரமுடைய மரமாக வளரக்கூடியது. அம்பரலங்காய் பழுத்திராத போது பச்சையாகவும், கடினத்தன்மையுடையதாகவும் அவற்றுடன் கடித்துண்ணுவதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டு ஒருவகை கயர்ப்புத்தன்மையுடையதாக இருக்கும். காய் கனிந்து வரும்போது மஞ்சள் நிறமுடையதாகவும் அதிகளவில் பழச்சாற்றைக் கொண்டதாக மாற்றம் பெறும். இப்பழச்சாற்றை அன்னாசி போன்றவற்றுடன் கலந்து உணவாக்குவாகள். அம்பரலங்காவை உணவாக உட்கொள்வதனால் இதயம், குடல், கண், மற்றும் தோல் ஆகியனவற்றின் செயற்பாட்டுடன் இணைந்திருப்பதுடன் உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு தொகுதியை இயக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது.
அம்பரலங்கா பழங்களை நன்றாக நீரில் கழுவி அதிலுள்ள அழுக்குகளை அகற்றிவிட்டு அப்படியே அதனை கடித்து உணவாக்கலாம். அல்லது சிறிய துண்டுகளாக்கியும் உணவாக்கலாம். அதிகளவில் ஊட்டச்சத்தினைக் கொண்டிருப்பதனால் இவற்றின் பழங்களிலிருந்து ஜாம், nஐலி மற்றும் ஏனைய சுவையான உணவுகளையும் தயாரிக்கலாம். சிலர் இப்பழங்களின் துண்டுகளை மிளகாய்த்தூள் மற்றும் உப்பு தடவி அதனது கைப்புத்தன்மையை அகற்றிவிட்டு உணவாக்கலாம். இவற்றின் காய்களை துண்டுகளாக்கி ஊறுகாய் மற்றும் nஐலி என்பனவற்றையும் தயாரித்துக் கொள்ளலாம். அத்துடன் சற்று உவர்ப்புத் தன்மையுடைய கூழ் மற்றும் சுவைக்கூட்டும் தயாரிக்கலாம்.
அம்பரலங்காவின் இளம் இலைகளை காயுடன் சேர்த்து அவித்து இலைக்கறியாக உணவாக்கலாம். முற்றிய இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஏனைய உள்ளீடுகளுடன் சேர்த்து சலாட் தயாரிக்க பயன்படுத்தலாம். சலாட் இனது சுவையை அதிகரிக்க வேண்டியளவு சரக்குவகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அம்பரலங்காயிலுள்ள ஊட்டச்சத்து எமக்கான தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கின்றது. ஒரு அம்பரலங்கா பழத்தில் ஏறக்குறைய 69.12 கிலோ கலோரி சக்திப்பெறுமானமும், 0.45 சதவீதம் புரதமும், 16.65 சதவீதம் காபோவைதரேற்றும் 3 மில்லிகிராம் இரும்புச் சத்தும், 22 கிராம் பொசுபரசும், தேவையானளவு செமிபாடடையும் நார்ச்சத்தும் 0.08 சதவீதம் கொழுப்புச் சத்தும், கிலோவுக்கு 3018 மில்லிகிராம் சோடியம், 344 மில்லிகிராம் பொட்டாசியம் 94.7 மில்லிகிராம் கல்சியம் என்பனவற்றுடன் விற்றமின் ஏ, பி, மற்றும் சீ என்பனவும் இருக்கின்றன.
சுகாதார நன்மைகளாக அம்பரலங்காவின் பழங்களில் இலைகளில் இயற்கையான அன்ரிஒட்சிடென்கள் (Antioxydents) காணப்படுகின்றன. அதனுடன் நுண்ணங்கியெதிர்ப்புக்குரிய (Antimicrobials) காரணிகளும் காணப்படுவதனால் உடலில் ஏற்படும் தேவையற்ற நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கவும் குறிப்பாக புற்றுநோய் கலங்களைஇயற்கையாகவே கட்டுப்படுத்தும் வல்லமையுடையதாக காணப்படுகின்றது. அம்பரலங்காயில் உள்ள விற்றமின் சீ யினால் அதனை உணவாக்கும் போது எமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. குறிப்பாக அனீமியா உள்ளவர்களுக்கு அதிலிருந்து விடுபட இரும்புச்சத்தை அகத்துறுஞ்சும் செயன்முறையை மேன்மைப்படுத்துதல், கலங்களின் அழிவிலிருந்து பாதுகாத்தல், அதிகம் களைப்புத்தன்மை ஏற்பட்டபின் அதிலிருந்து விடுபட உடலை சமனடையவைக்க உதவும், குருதி கட்டியாதலை கரைக்கும் தன்;மையுடையதால் மூளைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்களை தவிர்ப்பதன் மூலம் இதயநோய் மற்றும் பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (Stroke) போன்ற நோய்களிலிருந்து விடுபட, கொலாஜன் இனது உற்பத்தியை தூண்டுவதனால் காயங்கள் ஆறுவதற்கும் அதிலிருந்து வேறு சேதங்கள்; தோலில் ஏற்படாமல் தடுப்பதற்கும் இது உதவுகின்றது.
இவற்றை விட அம்பரலங்காவினை உட்கொள்வதனால் ஏற்படும் பிற நன்மைகளாக சமிபாடடைவதிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கும். அதாவது இப்பழத்திலுள்ள நீர்த்தன்மை மற்றும் நார்த்தன்மை நீர்ப்போக்கு (Dehydration) ஏற்படாமல் தடுப்பதற்கும் வயிற்றிலுள்ள அழுக்குகள் அகற்றப்படவும் அதன்மூலம் மலச்சிக்கல் (Constipation) ஏற்படாமல் தடுக்கவும் வழியண்டாகின்றது. மலம் நீர்த்தன்மையாக வெளியேற்றப்படுவதனை தடுக்க நார்த்தன்மை அவசியமாகின்றது. அவ்வாறான நார்த்தன்மை உடைய பழமாக அம்பரலங்கா காணப்படுவதனால் இதனை உண்பதனால் மலம் இறுக்கமாக கட்டியாக வெளியேறும். இவற்றுக்கு மேலாக இதிலுள்ள நார்ச்சத்து குருதியில் அமுக்கம் மற்றும் கொலஸ்திரோல் என்பனவற்றை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றது. நீரிழிவு நோயாளர்களில் இன்சுலின் எதிர்ப்பு தன்மை உருவாவதனை நார்ச்சத்து தடுக்கின்றது. மேலும் இக்கனியிலுள்ள நார்ப்பொருளின் அளவு அதிகமாக காணப்படுவதனால் உளசுகாதாரத்தை பேணவும் அதன் மூலம் மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்கவும் வழிகிடைக்கின்றது.
அம்பரலங்காவின் இலைகள் மற்றும் தண்டின் வெளித்தோல் என்பன அழற்சி (iகெடயஅயவழைn) என்பனவற்றை ஆற்றுவதற்கு பயன்படுகின்றன. மேலும் சீதபேதி அல்லது இரத்தக்கழித்தல், குடல்அழற்சி மற்றும் குரல்வளை அழற்சி என்பனவற்றை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. இதிலுள்ள அதிகளவிலான விற்றமின் ஏ கண்பார்வை அதிகரிப்பு நன்மையுடையதாக இருக்கின்றது. குறிப்பாக இரவுக்குருடாதல் நோயை கட்டுப்படுத்துவதற்கு இதனது பழங்களும் இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதிலுள்ள விற்றமின் சீ யானது விரைந்து முதிர்வடைதலை தவிர்க்கின்றது. இதில் காணப்படும் அன்ரிஒட்சிடென்கள் புகைபிடித்தலால் மற்றும் சூரிய ஒளியினாலேற்படும் ஏற்படும் விரைந்த முதுமை என்பனவற்றை தவிர்க்கும். மேலும் பற்களினுடைய சுகாதாரத்திற்கும் எலும்புகளின் தேகாரோக்கியத்திற்கும் இதிலுள்ள கல்சியம் மற்றும் பொசுபரசு என்பன உதவுகின்றன. இதனை பயன்படுத்தும் போது சிறுநீர்க்கழித்தல் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் இதனை உணவாக்குதலை அவசியம் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தாவரத்திற்கும் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்ற படியால் நாம் அவசியம் இவை பற்றி அறிந்து பயன்படுத்துதல் அவசியமாகும்.
மேற்கூறிய இன்னோரன்ன பயன்பாடுடைய அம்பரலங்கா வினை நாம் வளர்த்து உணவாக்கிக் கொள்ளலாம். அதேநேரத்தில் இதனை வளர்த்து சந்தைப்படுத்துவதன் மூலம் ஏனையவர்களும் வாங்கி பயன்படுத்துவதற்கு ஏதுவாகும்.
இதில் இவ்வளவு இருக்கிறதா ? அறிந்ததும் அறியாததும் !
Are these having this much? The known and unknown !
This article describes about the potential of plants and their nutritional and other information. These information would help to utilize them as these nature driven invaluable substances easily grown and commonly available are often ignored due to our ignorance. This article gives the glimpses of those plants to be grown even in home gardens and consumed without much cost.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நாம் உணவாக உண்ணும் பல விதமான உணவுப் பதார்த்தங்களில் அவை மா வகையாயினும் தானியவகையாயினும் கிழங்கு வகையாயினும் இலைவகையாயினும் இன்னும் மரக்கறி வகையாயினும் நல்லன என்பனவற்றை தெரிந்து உணவாக உட்கொண்டால் உடலுக்கும் தைரியமாக ஊட்டச்சத்தாக இருக்கும் இலகுவில் செரிமானமும் அடைந்துவிடும். அதிலும அன்றாடம் உண்ணுகின்ற உணவுப் பொருட்களில் நாம் தெரிவு செய்து பல்வகைத்தன்மையை உள்ளடக்கியதாக உணவு அமைந்துவிட்டால் எமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை இலகுவில் பெற்றிடலாம்.
மரவள்ளியும் வத்தாளையும்
கிழங்கு வகைகளுள் உள்ளடங்கும் மரவள்ளியும் வத்தாளையும் மாச்சத்தை கொண்டிருப்பவை. மரவள்ளியுடன் ஒப்பிடும் போது வத்தாளையிலுள்ள மாச்சத்து நீரிழிவு நோயாளர்களுக்கு பாதகம் குறைந்தது. அதிலுள்ள கிளைசீமிக் சுட்டி மரவள்ளியிலுள்ளதிலும் குறைவானதாகவே காணப்படுகின்றது. வத்தாளையில் குறைந்தளவு கிளைசீமிக் சுட்டி காணப்படுவது இதற்குரிய விசேஷமாகும். மரவள்ளியிலும் பார்க்க வத்தாளை கிழங்கில் நீரிழிவு நோயாளர்கள் உட்கொள்ளக்கூடிய அளவு மட்டுப்படுத்தப்பட்ட மாச்சத்தும் அதிகளவில் நார்ச்சத்தும் உள்ளதனால் நீரிழிவு நோய்கண்டவர்கள் மரவள்ளியைத் தவிர்த்து வத்தாளையை உணவாக்கலாம்.
அத்துடன் வத்தாளையில் அதிகளவில் மக்னீசியமும் காணப்படுவதனால் இரண்டாவது வகை (வலிந ஐஐ) நீரிழிவு நோயாளருக்கு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. வத்தாளை செய்கையில் பிரச்சனையாக இருப்பது அதில் பாதிப்பை ஏற்படுத்தும் நீள்மூஞ்சி வண்டு (ளுறநநவ pழவயவழ றநநஎடை) மட்டுமே. இதனது சேதத்தை மட்டுப்படுத்தினால் அல்லது இல்லாதொழித்தால் வத்தாளையிலும் அதிகளவில் இலாபமீட்டமுடியும். வத்தாளை கிழங்கை அவித்து, சீவி பொரித்தும் உண்பார்கள். மரவள்ளிக் கிழங்கில் மாச்சத்து அதிகமாக காணப்படுவதனால் அதனை சுட்டு, வேகவைத்து, உண்பது போல வத்தாளையிலும் பலவகை தின்பண்டங்களை உருவாக்கலாம்.
காரட்டும் பீற்றுட்டும்
காரட்டும் பீற்றுட்டும் உடல்வாகுவிற்கு ஏற்ற வேர்த்தாவர உணவுவகைகள். இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதனால் உணவு செரிமானத்தினை இலகுவாக்கிவிடும். அத்துடன் உடலிலுள்ள நச்சுப் பதார்த்தங்களை அகற்றுவதற்கு கரட்டும் பீற்றுட்டும் பயன்படும். இரண்டிலும் பீற்றா கரோட்டின் காணப்படுவதனால் கண்பார்வைக்கு மிகவும் சிறந்தாக கருதப்படுகின்றது. உற்பத்தியில் பீற்றுட்டினை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாகவும் எமது நாட்டின் தென்பகுதியில்; அதிகளவில் விளைவிக்கப்பட்டு நாட்டின் பலபாகங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டாலும் வடமாகாணத்திலும் காரட் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் மலையகத்தில் உற்பத்தியாகும் காரட்டின் மென்மைத் தன்மையும் இனிப்புத் தன்மையும் வடபகுதியில் உற்பத்தி செய்யப்படுவதற்கு இருப்பதில்லை. இரண்டிலும் குறைவான கொழுப்பும் அதிகமான உணவுநார்த்தன்மையும்; காணப்படுகின்றது.
பீற்றுட் எமது பிரதேசத்தில் இலகுவில் பயிரிடக்கூடியதும் விலை மலிவாக கிடைக்கக்கூடியதுமான பயிர். இதில் மேலதிகமாக விற்றமின் சீ யும் பீ 6ம் காணப்படுகின்றன. மேலும் பீற்றுட் இல் காணப்படும் பொட்டாசியம் உடலின் நீர்ச்சமனிலையை பேணவும் நைதரேற்று உடலில் நிலையை குறைக்கவும் உதவும். இவை காபோவைதரேற்று மற்றும் கொழுப்பு என்பனவற்றின் அனுசேபத்திற்கு உதவுபவையாகும். இரண்டிலும் நோய் மற்றும் பீடைத்தாக்கம் மிகவும் குறைவானதாகவே காணப்படும். அதனால் நஞ்சற்ற உணவென பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எமது உணவில் இவையிரண்டினையும் கணிசமானளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காரட் மற்றும் பீற்றுட் சாற்றினை காலை உணவருந்துவதற்கு முன்பதாக அருந்தினால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை பேணிக்காக்கும் அன்ரிஒட்சிடன்கள் இலகுவில் எமது உடலினால் அகத்துறுஞ்சப்பட ஏதுவாகும். அத்துடன் எமது உடலினது தோலின் வளர்ச்சிக்கு இரண்டும் அவசியம் தேவையானதுமாகும். விலைமலிவாக எது கிடைக்கின்றதோ அதனை உணவில் சேர்த்துக்கொள்வன் மூலம்; இயற்கையாக பீற்றா கரோட்டினை உடலுக்கு கொடுக்கும் வழியிருக்கின்றதல்லவா. மேலும்; பார்வைக்கோளாறு வராமலும் பார்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் பருப்பும் துவரைப்பருப்பும்
மஞ்சள் பருப்பும் துவரம் பருப்பும் அவரையினத்தை சார்ந்தவையாதலால் இரண்டிலும் புரதச்சத்து அதிகமாக காணப்படும். இருந்தாலும் துவரம் பருப்பில் கணிசமானளவு புரதச்சத்து, நார்ச்சத்து அத்துடன் அதிகளவில் அன்ரிஒட்சிசன்களும்க காணப்படுகின்றன. இரண்டு பருப்புக்களையும் புரதச்சத்துக்கு மாற்றீடாக பயன்படுத்துலாம். ஆனால் ஊட்டச்சத்தும் சுவையும் துவரைப்பருப்பில் அதிகம் ஆனாலும் எதுவென்றாலும் அதிகமாக உட்கொண்டால் அமிர்தமும் நஞ்சு. அந்த நிலைமை இங்கும் காணப்படுகின்றது. அளந்தறிந்துண் என்பார்கள் அதுபோல அவரைகள் என்பதனால் அளவுக்கு மீறி உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கம்பும் குரக்கனும்
கம்புப்பயிரும் குரக்கனும் தானியப் பயிர்கள். இரண்டிலும் மாச்சத்து அதிகமாக இருப்பினும் கம்புப் பயிரில் கூழ் காய்ச்சி விவசாயப் பெருமக்கள் விரும்பியுண்பர். அதிலுள்ள ஊட்டச்சத்து எதலும் வாராதென்பர். கம்பு எந்த உள்ளீடுகளும் இல்லாது பயிர்செய்கைப்படும வரண்ட பிரதேசத்து ;பயிராகும். குரக்கனுக்கும் அதே நிலைமைதான். ஆனால் குரக்கனிலுள்ள ஊட்டச்சத்து வித்தியாசமானது. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் குரக்கன் களி மிகவும் பிரபல்யமானது. இரண்டுமே வறுமைப்பட்டவர்களின் உணவு என விளிப்பார்கள். கம்பும் குரக்கனும் இருந்தால் பஞ்சமேது என்பது முன்னோர்கள் கூறிவைத்தது. எமது பிரதேசத்தில் கம்பும் குரக்கனும் அதிகளவில் பயிரிட்டு எமது பிரதேசத்து வறுமையை விட்டொழிப்போம்.
ஐம்புவும் விளிம்பியும்
நீரிழிவு நோயாளர்கள் விரும்பியுண்ணும் பழமாக ஐம்புவினையும் விளிம்பியையும் குறிப்பிடலாம். முழுக்க முழுக்க நீர்ச்சத்தினைக் கொண்டிருந்தாலும் இதில் சீனிச்சத்து மிகவும் குறைவு அத்துடன் இருக்கின்ற கலோரிப் பெறுமானமும் குறைவாகும். இவ்வகைப் பழங்களை வீட்டுத்தோட்டத்தில் சிறப்பாக வளர்த்து எமக்கு உணவாக கொள்ளலாம். நாமாக உற்பத்தி செய்து அறுவடையும் செய்து உணவாக பயன்படுத்தக் கூடிய இவ்வகைப் பழங்களை நாம் அரிதாகவே எமது உணவில் சேர்த்துக் கொள்ளவதுண்டு. பல்வகைகளுமுடைய பழங்களில் ஐம்புவும் விளிம்பியும் மிக முக்கியமான பழப்பயிர்களாகும். நாமே உற்பத்தி செய்து உணவாக்க பழகிக் கொள்வோம்.
உலக உணவு தினம் : இம்முறை நீருக்கு முன்னுரிமை !
World Food Day: Priority is given this time to Water !
This article describes about the Celebration of world food day and the priroty is given this time to the importance of Water. Water is the food and with out water food production is impossible. As is highlighted that the food and nutritional security is the focal point to meet the sustainable development goals in the year 2030, it was expressed that that target is challengeable and all the countries need to work hard towards the target. War has devastated the properties and the people and this has to be stopped with amicable solutions.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
2023 ஒக்டோபர் 16 இல் உலகளாவிய உணவு தினத்தை (World Food Day) உலக உணவு தாபனம் (Food and Agriculture Organization) 1945ம் ஆண்டு ஆரம்பித்த நாளை நினைவிலிருத்தி 'அதிகரித்து வரும் உலகளவிலான பஞ்சம் பட்டினியை (Hunger and powerty) முன்னிலைப்படுத்தி அதிலும் உணவுஉற்பத்திக்கு தேவையான நீர் இற்கு முக்கியத்துவம் கொடுத்து பலநிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றது. நீரின்றி இவ்வுலகேது என்னும் பொய்யாமொழிக்கிணங்க நீரின்றி உணவில்லை என்பதனையும் உணவின்றி மக்களில்லை என்னும் அறைகூவல்கள் nஐனீவாவிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றது. உணவுப் பாதுகாப்பு என்பதன் விரிவாக்கமாக நீர்பாதுகாப்பும் முக்கியமானதாக உணரப்பட்டிருக்கின்றதுடன் இதுபற்றிய கலந்துரையாடல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீரின் தேவை உணவுற்பத்தியில் அவசியம் என்பதனை முன்னிறுத்தி நீரின் பாதுகாப்பையும் இதில் உள்ளடக்கியிருக்கின்றார்கள். நீரைத்தேடியோடும் நிலைக்கு வரட்சி பலநாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. மாறாக வெள்ளப்பெருக்கும் தவிர்க்கமுடியாத துன்பியல் நிகழ்வாக மாறியிருக்கின்றது.
உலகத்தில் இவ்வருடம் எதிர்பாராத விதமாக பலவிதமான இயற்கை அழிவுகளையும் (Natural Disasters) மனித அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. பல நாடுகளில் உணவின்றி மக்கள் தவிப்பதனை தினந்தினம் செய்திகள் தெரிவிக்கின்றன. போர்மேகம் ஐரோப்பாவில் தொடங்கி ஆசியாவின் மேற்குக்கரையில் மையம் கொண்டிருப்பது பலவழிகளில் இன்னும் பிரச்சனைகளை தோற்றுவிக்கப் போகின்றது. பெரியவர் சிறியவர் என்பதிலேயே அப்பாவிகளான பலவுயிர்கள் காவுகொள்ளப் படுகின்றன. இதில் ஒருவேளை உணவுக்காக தவிக்கும் நிலையை உலகம் கணக்கிலெடுக்காதிருப்பது ஆச்சரியத்திற்குள்ளாகின்றது. எப்படியாவது போர்மேகத்தினை உருளவைத்து தம்மிடமிருக்கும் போர்த்தளபாடங்களை பரீட்சித்துப் பார்க்கும் களமாக இவ்வாறான நிகழ்வுகளை விரும்பி ஏற்படுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொள்ளும் நிலைமையை எதுவும் தடுத்து நிறுத்தவில்லை.
ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் (Sustainable Development Goals) உணவுப் பாதுகாப்பு (Food Security) மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (Nutritional Security) என 2030ம் ஆண்டை நிர்ணயஞ் செய்திருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறு அருகிவருவதாகவே தென்படுகின்றது. உலகம் அழிவுப்பாதையை தேர்ந்தெடுத்ததன் விளைவாக அநாவசியமாக மக்கள் இறக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. உலக அழிவுக்கான பாதையை விஞ்ஞானத்தின் அபிரிவிதமான வளர்ச்சியும் ஊக்குவிக்கின்றதா என்னும் ஒரு தோற்றப்பாடும் எழுந்திருக்கின்றது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் பரீட்சித்துப்பார்க்கும் தளமாக இவ்வாறான நொந்துபோன மக்களை பயன்படுதுவது எந்தவிதமான நியாயப்படுத்தல்களுக்கும் உட்படாது.
உணவு உற்பத்தியில் பாரியளவிலான வீழ்ச்சியேற்பட வாய்ப்பிருக்கின்றது. அதில் உணவுப்பஞ்சம் என்பது ஒரு புறமிருக்க ஊட்டச்சத்து குறைபாடு என்பது இன்னொரு பிரச்சனையாக எழுந்திருக்கின்றது. பொதுவாக கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தின் வீரியம் குறைவடைந்ததாக காணப்பட்டாலும் தற்போது உலக சனத்தொகையைக் கருத்தில் கொண்டால் பதினொரு சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் சூடான் நைஜீரியா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இவ்வாறான உணவுப்பஞ்சத்தை பாரியளவில் தற்போது உணர்ந்திருக்கின்றன. இந்நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஏதுமறியாத பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினந்தினம் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருப்பதும் ஒருபுறமிருக்க ஐரோப்பாவில் ரஷ்யா-உக்ரைன் போரும் இஸ்ரேல்-பாலஸ்த{ன போரும் இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றது.
உணவுப் பஞ்சத்தைப் பொறுத்தவரையில் ஆபிரிக்காவிலுள்ள சகாரா பகுதி, தென் மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில்; அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பிரதேசங்கள் உள்நாட்டுப் போரில் தம்மையே அழித்துக்கொண்டிருக்கும் போது இயற்கையின் அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி என்பன இன்னொரு பக்கத்தில் இம்மக்களை வரட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றன. எல்நினோவின் தாக்கமும் காலநிலை மாற்றத்தின் தாக்கமும் இவற்றுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப்போர்கள் வலுவடைந்திருக்கின்றதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த வருடம் இம்மாதத்திலேயே போரின் உக்கிரம் விசாலமடைந்து காணப்படுகின்றது. இதன் மூலமாக மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்ததும் இன்னும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டதாலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. உணவுப் பஞ்சம் ஒருபுறமிருக்க கிடைக்கின்ற உணவும் ஊட்டச்சத்தற்ற உணவாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாதிருக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.
தற்போது உலக உணவு உற்பத்தி இப்போதிருக்கின்ற மக்களுடைய தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக அறிவிக்கப்பட்டும் இந்த உற்பத்தியான உணவு சரியாக பகிர்ந்தளிக்கப் பட்டிருந்தால் இவ்வாறான பஞ்சம் ஏற்படுவதற்கு சாத்தியமேயில்லை. அப்படியாயின் உணவு உற்பத்தி, அதன் கிடைக்கும் தன்மை என்பனவற்றையும் தாண்டி உற்பத்தியான உணவை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கச்செய்வதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. ஏதோ ஒரு காரணி தடைக்கல்லாக இருப்பது உணரப்பட்டிருக்கின்றது அல்லவா? இதன் பின்புலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இருப்பதென்பது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றதல்லவா. அந்த நாடுகளிலிருந்து தான் நாம் எமக்கு வருடாவருடம் கடனையும் பெற்றுக்கொள்ளுகின்றோம். பட்டினி போட்டுவிட்டு கடனும் தருகின்ற செயலை என்னவென்பது? காலாகாலத்திற்கு கடனாளியாகவே இருந்தால் தான் எம்மையும் ஏதோவொருவிதத்தில் ஆளுமைக்குட்படுத்த முடியும் என்னும் எண்ணம் இருக்கும் வரை இது தொடரத்தான் போகின்றது. மாறாக நாமாக சிந்தித்து எமது வளங்களை பயன்படுத்தி எமது நாட்டை நாம் முன்னுயர்த்த என்று முயற்சிக்கின்றோமோ அன்றிலிருந்து தான் எமக்கு விடிவுகாலம் என்பதனை நம்மினிய உறவுகள் இதிலிரந்து புரிந்துகொள்ள வேண்டும்.
விஞ்ஞானம் விண்ணில் பறந்து பிற கோள்களில் மனிதன் வாழலாமா என பெருமெடுப்பில் போட்டிபோட்டு ஆய்வினை செய்துகொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றார்களென்பது எல்லோர் மனதையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருக்கின்றதல்லவா. நன்றாக கவனியுங்கள்! இந்த நிலைமை இங்கும் இருக்கின்றது. உணவு உற்பத்தி ஒருபுறமும் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிக்கொண்டிருக்கும் மக்களை கிராமங்களுக்குள்ளே எந்தவித வருமானமுமின்றி உதவிகளுமின்றி விடப்பட்டுள்ள குடும்பங்களை கேட்டறிந்தால் தெரிந்துகொள்வீர்கள். விஞ்ஞானத்தின் உயர்வு ஆக்கத்திற்காய் இருக்கும் மட்டும் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஆனால் அதனை அழிப்பதற்கும் தீங்கு செய்வதற்கும் புதிய கண்டுபிடிப்புக்களை பரீட்சித்து பார்க்கவும் முயலும் போது விஞ்ஞான வளர்ச்சியின் எதிர்பார்த்த நோக்கம் ஈடேறவில்லை எனவே தோன்றுகின்றது.
உணவுற்பத்தியிலும் ஊட்டச்சத்தினை சமனிலைப்படுத்தும் நிலைக்கும் இந்த பாரபட்சம் நடந்து கொண்டிருக்கின்றது. உலக ஓட்டத்தில் விரைந்துணவு தயாரிக்கும் நிலையில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது ஆனால் அதற்காக இயற்கையின் தன்மையை மாற்றி சூழலையும் மாற்றி புதியவகை இனங்களை உற்பத்தி செய்து அதனால் ஏற்படு;ம் பின்விளைவுகளை சிறிதேனும் சிந்தியாது சுழன்றுகொண்டிருக்கும் இவ்வுலகத்தின் சமகால நடப்புக்கள் ஒரு போதும் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போவதில்லை மாறாக பல தீங்கான நிலைமைகளுக்குள்ளேயே தள்ளிவிடுகின்றன. பசியும் பட்டினியும் இன்னும் தலைவிரித்தாடும் நிலைமைகளே அனுமானிக்கப்படுகின்றன.
பட்டினியின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரின் உக்கிரத்தினுள் உடைந்து போனவையாகவே காணப்படுகின்றன. இருப்பதையும் அழித்தொழித்து உதவியென்று உள்நாட்டுப் போர்களை ஊக்குவித்து அந்தந்த நாடுகளில் அபிவிருத்தியின் அடித்தளமான கிராமங்கள் உடைத்தெறியப்பட்ட சோகக்கதைகளே அநேகம். அடித்தளத்தை உடைத்தெறிந்து விட்டு எவ்வாறு அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். அதிலும் உணவுற்பத்தியின் மையங்களே கிராமங்கள் தானே! அபிவிருத்தி பற்றி கருத்தரங்கு மற்றும் மாநாடுகள்; பல நடைபெற்றும் அவற்றின் தொனிப்பொருளான கிராம அபிவிருத்தி பற்றிய தீர்க்கமான முடிவுகள் பெறப்படவில்லை அத்துடன் அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கமும் முழுமைபெறவில்லை. சாக்குப் போக்குக்கு செய்யப்படும் திட்டங்களாகவும் அவற்றினால் மக்களுக்கான வழிகாட்டல்கள் முழுமையானதாக இல்லாதிருப்பதும் கவலைதரும் விடயங்களே!
பசி பட்டினியினோடு சேர்ந்து ஊட்டச்சத்து குறைபாடும் சேர்ந்து மக்களை வாட்டுகின்ற சோகம் உலகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிகின்றதா? சத்துணவு திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்கள் பலவற்றில் ஒரு வேளை உணவுக்காகவாவது பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள 5 வயதிற்கு கீழான 155 மில்லியன் சிறுவர்கள் அல்லது பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் மிகமுக்கியமான தகவல் அனைவரையும் சிந்திக்க தூண்டியிருக்கின்றது. இன்னும் நம்மில் பலருக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களைக்கூட அறிந்துணர முடியாதிருப்பதனை என்னவென்பது.
இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி நமது பிரதேசத்து திட்டங்களனைத்தும் இவற்றுக்கான தீர்வினை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும். திட்டங்களின் முடிவுகள் மாற்றுவழிகளை பரிந்துரைக்கும் நேரத்தில் அவற்றிற்கான முடிவுகளையும் தீர்க்கமானதாக அறிவிக்க வேண்டும். எமது பிரதேசத்தில் இந்த உணவுத்தட்டுப்பாடு ஏற்படாமலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இன்னும் அவசியம் தேவைப்படுவோர் என இனங்காணப்படுபவருக்கும் உதவிட வேண்டும். உள்நாட்டுப் போரில் துவண்டுபோன வட உகண்டா நாடு போருக்கும் பின்னரான சரியான திட்டமிடல்களுக்கூடாக தற்போது தம்மை வளமுள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வளமான சந்ததியின் எதிர்காலம் சரியாக தீட்டப்படும் திட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் மேலும் அதற்கான சேவைகளிலும் தங்கியிருக்கின்றது. எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் வாழ்க்கை முறைக்குள் நாமாக வந்திருப்பதனை மேற்கூறிய அனைத்தும் உணர வைத்ருக்கின்றன. எமது உள்ளூர் வளங்களை சிறப்பாக வினைத்திறனாக எமது வாழ்வியல் விடிவுகளை வெளிக்கொணர நாம் இன்னும் முயற்சி செய்வோம். இதில் தான் எமது வாழ்க்கைக்கு அர்த்தமும் இருக்கின்றது.
மறந்தும் மறவாத பாரம்பரிய முறைமை : தளர்ந்து பின் தானெழும் !
Unfogetten Traditional methods: Relaxed and then will raise up !
This article describes about the unforgotten or forgotten traditional methods which dwindle often and get its raise once understood its importance especially by the younger generations . The culture and tradition of the people are tremendous and outsiders of different language, religion and of culture preferred due to its existence in pure form. Especially those migrated to foreign countries are now adopting it and visit often to mingle with their relatives and carryover to their residents.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது பிரதேசம் பல்வகை அறிவு சார்ந்து அனுபவங்களை சுமந்து தவத்திருவாய் வாழ்ந்த பூர்வீகங்களைக் கொண்ட எமக்கேயுரித்தான கலை கலாச்சார பின்னணிகளை பிரதிபலிக்கும் மக்கள் வாழும் பிரதேசம். இடையில் நடந்தேறிய பல்வகை முரண்பாடுகளால் அனைத்தும் சிக்கி சிதறி சின்னாபின்னமாக சிதைந்துவிட்டதென பலர் அங்கலாய்த்தாலும் இன்னும் அவை ஏதோ ஒருவகையில் ஒவ்வொருவர் வாழ்வியலிலும்; வெளிக்;கொணர்ந்த வண்ணமே இருக்கின்றன. அடுத்து வரும் சந்ததிக்கு எமது பாரம்பரியத்தில் அதீத ஈடுபாடு இருப்பதை அறிந்தால் இவற்றை மேலும் பேணிப்பாதுகாக்கும் பொறிமுறை தானெழும்.
அழியவில்லை என்று கூறுவதை விட அழியாது என்று நெஞ்சுயர்த்திக் கொள்ளலாம். எமது பரம்பரையலகுகளுக்குள் ஒளிந்திருக்கும் இந்த பாரம்பரியம் எமது அடையாளத்தின் எழுவாய். புலம்பெயர்ந்த பரம்பரையலகுகள் அந்த சூழலுக்கேற்ப திரிபடைந்து மாறிவிடும் என்பதற்கும் மேலாக திரிபுகளுக்குள் எமது அடையாளத்தை தக்கவைக்கும் செயற்பாடுகளை காணும் போது பாரம்பரியம் பரம்பரை பரம்பரையாக பரம்பரையலகுகளுக்குள் நிச்சயம் சென்றடையும் எனலாம். எமது பாரம்பரியத்தை அறியவும் அதையொற்றி வாழவும் பிறதேசத்தவர் பிறமொழி பேசுபவர்கள் விருப்பப்படுகின்ற அளவுக்கு எமது வாழ்வியலை வளமாக்கி வாழ்ந்து காட்டினால் அதற்கான அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இங்கில்லை, புலம் பெயர்ந்த தேசத்தில் அதனை தேடியெடுத்து பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களையும் எமது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களுக்குள் வாழப்பழக்குவதனைக் கண்கொண்டு காணீர்;.
பாரம்பரியம் என்பது எமது நடையுடைபாவனை என்பதற்கு மேலாக உணவுற்பத்தி, உண்ணும் உணவு, உணவு பகிர்ந்தளிப்பு, உணவு சேமிப்பு, எமது பயிரினம், பூர்வீக தாவர விலங்கினங்கள், இயற்கை வளங்களின் இருப்பு, பயன்பாடு, பாதுகாப்பு, தனிமனித குடும்ப சமூக சுகாதாரம், சுதேச மருத்துவம், உரிமை, தெரிவு, நற்சிந்தனை, மனப்பாங்கு, சொல்லாடல், மொழிப்பற்று, இறைவழிபாடு இவற்றுடன்; ஆளுமை, ஆட்சியதிகாரம் என அனைத்தும் அடங்கும். இவற்றை வாழ்வாங்கு வாழ்ந்து அனுபவித்தவர்களுடன் உரையாடினால் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். நல்லவண்ணம் வாழ்வதற்கான நெறிமுறை தவறாத நேரியல்வாழ்வியலுக்கான அடித்தளமாகவே எமது பாரம்பரியம் உருவானது இன்னும் உருவகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது அதிலிருந்து இடறி விலகி நடப்பிலிருந்த தவிர்க்கப்பட வேண்டிய செயற்பாடுகள் அனைத்தையும் பாரம்பரியத்தினுள் திணிப்பதும் நடந்திருக்கின்றது. அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டாலன்றி பின்வரும் சந்ததி அறிந்து சீர்மிகு வாழ வழியில்லாது போய்விடும்.
எமது பாரம்பரியத்தினுள் உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறப்பாகவே உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதனை அதனுள் உள்ளார்ந்து பார்த்தால் விளங்கும். உள்ளூர் உணவுப்பொருட்களைப் பயன்படுத்தியே எமது உணவின் வடிவம் இருந்தமையும் பழையதென்றாலும் பாங்காக அதனை பயன்படுத்திய காலங்களை நிச்சயம் இன்றைய இளையவர்கள் அனுபவிக்க வைத்தல் வேண்டும். எமது உணவு வகைகளுக்குள் உயிர்ச்சத்து இருந்தது. மருந்தாக பயன்பட்டது. தனிமனித குடும்ப சுகாதாரத்தை அதுவாகவே பேணிப் பாதுகாத்தது.
நேற்றைய தினம் மல்லாவி மகாவித்தியாலயத்தில் ஆரம்பமான தொழில்தகைமையாளராக்கும் பாடசாலை தோட்ட திட்டம்; (Etrepreneurial School Garden) என்னும் கருத்துப்பொதி உணவுப் பாதுகாப்பினை மையப்படுத்தி (Food Security) கல்வி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சி இன்றைய தினமும் நடைபெறுகின்றது. அனைவரும் பார்த்து கேட்டு அறியவேண்டியவை பல மாணவர்களின் கல்வித்திணைக்களத்தின் விவசாயத் திணைக்களத்தின் விவசாய பீடத்தின் ஒன்றிணைவுடன் நடைபெறுகின்றது. வடமாகாண செயலாளர் அலுவலகத்தினது திட்டஅனுசரணையில் கல்வித்திணைக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு ஒப்பேறியிருக்கி;ன்றது. இதில் பாடசாலை மாணவர்களின் செயற்பாடுகள் ஆசிரியர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருந்தமை பாராட்டுக்குரியதாகின்றது. அனைத்து பாடசாலைகளிலும் இத்தகைய வகுப்பறைக்கு வெளியிலான செயற்பாட்டுக் கூடங்கள் மாணவர்களின் முயற்சியினால் ஆரம்பிக்கப்படுவது சிறப்புக்குரியதொன்று.
கறுப்பன் மொறுங்கன் நெல்லை பயிர்செய்து அதன் அரிசியில்; சோறு காய்ச்சி அன்றிரவு நீரில் ஊறவைத்து அடுத்த நாள் பழஞ்சோற்றை பதமாக எடுத்து முதல்நாள் மீதியாக்கி சூடாக்கி வைத்த மீன்குழம்பை விட்டு பிரட்டி கவளமாக தாய்மை தருகின்ற சுகமும் சுவையும் இன்னும் எந்த உணவிலும் வந்ததில்லை. பழஞ்சோறு பழங்கறி கவளம் என்றாலும் அதனுள் அத்தனை பழமையின் பாரம்பரியம் சுவையோடு இருந்ததும் தாய் அதனைக் குழைத்து தன் அன்பை மேல் வைத்து தந்த உணவு எப்படி தித்திக்காதிருக்கும். இந்த கவளம் பனையோலையில் பிளா கோலி அதனுள் வைத்து உண்ணும் சுகம் அவசியம் எம் சந்ததி அறிந்திருக்க வேண்டும். இந்த கரை பச்சையில்லை என்று அக்கரை நோக்கியோடும் இளையவர்குழாம் அங்கிருந்து பார்க்கையில் இக்கரையும் பசுமையென்றறிந்தபின் கவலைப்பட்டு என்னபயன்.
நாம் நாமாக வாழும் காலத்தை இறைவன் எமக்காக தந்தனன். இந்த காலம் இப்பிறப்பு பின்பு வராது. மூத்தோர் வீட்டிலிருந்தால் ஒவ்வொன்றாக சொல்லி அன்புகலந்த கண்டிப்புடன் செய்யச்சொல்லி வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழப்பழக்கிவிடுவார்கள். நாம் தான் சுதந்திரம் வேண்டுமென்று சுமையென்று பெற்றவர்களை தவிர்த்து தந்திரமாக தனிக்குடியென்று போய் இறுதியில் இருந்த வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு உறவுகளை தேடியோடி இறுதியில் அதனையும் தொலைத்து விடுகின்றோம். தகவல் தொழினுட்பம் வசதியான வாழ்க்கையென தந்தது இதைத்தானே என வழுக்கிவிழுந்தவர்கள் ஆதங்கப்படுவதனை அறிய முடிகின்றது. இதில் மிஞ்சிப்போவது இருபக்கமும் அல்லல்படும் மனவுளைச்சலேயன்றி வேறேதுமில்லை.
வாழ்க்கை என்பதில் உடற்சுகாதாரத்துடன் உணவு முறையும் முக்கியமாகின்றது. பாரம்பரிய உணவு முறைமைக்குள் அனைத்தும் அடங்கியிருந்தது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கலந்த உணவாகவே அவை உருவாக்கப்பட்டன. சாதாரண வாழ்க்கை வாழும் படிப்பறிவில்லாத தாய்தந்தைக்கு கூட குடும்பத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை தேடிக்கொடுக்கும் கடமையிருந்தது. இதனையே அவரவர்; வீடுகளில் அருக்கின்ற இடவசதியைப் பயன்படுத்தி வீட்டுத்தோட்டங்களை அமைத்து தமக்கான உணவை தாமேதேடிக்கொண்டனர். வீட்டிலொரு தோட்டம் விளைந்தன காய்கனிகள் கூடி விரும்பி விருந்துண்ண வைத்தது அந்த கூட்டுக்குடும்பம். தோட்டத்திலுள்ளவை தவிர்ந்த ஏனையவற்றுக்கு சந்தையை நாடவேண்டியிருந்தது. இன்றும் அந்த நிலையிலேயே இருக்க வைத்திருக்கின்றது வந்து போன இன்னும் வருமென எதிர்வுகூறும் கோவிட் எனும் கொடிய தொற்று வியாதி. உடலில் எதிர்ப்பு சக்தியில்லாதவர்களை தேடித் தாக்கிய இந்நோய் அவர்களில் பலரினது உயிரினையும் காவு கொண்டுவிட்டது.
எங்களூர் விளையாட்டுகளை இப்போது அரிதும் புதிருமாக காணக்கிடைக்கின்றது. தனியனாக ஆடும் ஊஞ்சலும் இரண்டு பனைகளை இணைத்து வளைவைத்து கட்டி அதில் பலர் இருந்தாடும் ஊஞ்சல் எங்கிருக்கின்றது. இருகரையும் நின்று குனிந்து உந்துபவர்களின் உடல்தகுதி இன்று எந்த உடற்பயிற்சியையும் செய்தாலும் வராது. இவை பலருடன் இருந்து இணைந்து குதூகலிக்கும் மகிழ்ச்சிக்குரிய காலங்கள் என்பன மறைந்து போய் பலர் இணைந்த வாழ்க்கையை இணையத்தளம் உருக்குலைத்துவிட்டது. இந்த படங்களை இணையத்திலும் தேடமுடியாது. தகவல் தொழி;னுட்பம் தந்த நன்மைகள் பல அதன் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தாமல் அதன் மோகத்துக்குள் மூழ்கிய பல இளையவர்கள் வாழ்வாங்கு வாழத்தெரியாமல் உருக்குலைந்து போயினர். நல்ல விடயங்களை அவரறிய வைப்போம்.
கிராமத்து ஒற்றுமை அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்கும் போது மட்டுமே முழுமை பெறுகின்றது. ஆனால் அதனை மீண்டும் மீட்டெடுத்து அனைவரையும் குதூகலிக்க வைக்கும் நிகழ்வுகளை முழுமனதாக வரவேற்போம். எம்மவர்கள் எம்மைநோக்கி வருவதற்கான வழிவகைகளை மீட்டுப் பார்ப்போம். நல்லூரானின் திருவிழாவினை பார்க்க வெளியிடங்களிலிருந்து குவிந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் அதுபோல எமது பாரம்பரிய உணவு, வாழ்க்கைமுறையை வாழ்ந்து பார்க்க எம்மவர்கள் நிச்சயம் விருப்பப்படுவர். அவர்களுக்கான இடங்களை உருவாக்கினால் அதிலேயே எமது சுற்றுலாத்துறை விருத்தியடையும். எமது பாரம்பரிய முறைகளுக்க நாம் விரைந்து முக்கியத்துவம் கொடுத்தால் அவை எம்மையும் வாழவைத்து எமது சந்ததியையும் மீட்சியடைய வைக்கும்.
உணவு விரயமாதலும் வீணாதலும் : உலகளவிலான விழிப்புணர்வுக்கான அழைப்பு !
Food Loss and Food Waste: A call for the global awareness !
This article describes about the food loss and food waste and internationally their is needed awareness programmes to safe the food wastage. Global Food production is at its risk of natural calamities and especially the climate change, thus what ever the food produced it has to be properly utilized without wasting them unnecessarily. At UN, it had been decided to celebrate September 29 as an international event.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உணவு உற்பத்தி பெருகிவரும் உலக சனத்தொகைக்கு போதாதென்ற கணிப்பினூடாக உற்பத்தியாகும் உணவினை விரயமாகாமலும் கழிவாக வீணாகாமலும் வினைத்திறனாக பயன்படுத்தல் வேண்டும். செப்டம்பர் 29 உணவு விரயமாக்கலும் வீணாதலுக்குமான விழிப்புணர்வுக்கான அழைப்பாக உலகளவில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. உலகளவில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்கு நியாயமான பலகாரணங்கள் உண்டு. அதில் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 2018 தகவலின் படி 2050ஆம் ஆண்டளவில் உலகசனத்தொகை 10 பில்லியன் மக்கள் ஆகி அதில் 70 சதவீதம் நகர்ப்புறங்களில் குடிபெயர்ந்து விடுவர். இதனுடன் சேர்ந்து வருமானத்தின் அதிகரிப்பும் வாழ்க்கைத் தர மேம்பாடும் இணைந்து உணவுக்கான தேவையை அதிகரித்துவிடும் என்பதற்கப்பால் குறிப்பாக உணவின் தெரிவை அதன் உண்ணும ;முறைமையை மாற்றுவதோடு; உணவுக்கான அதிலும் பழுதடையக்கூடிய உணவுப்;பொருட்களின் கிடைக்கும் தன்மையையும் மாற்றிவிடும் என்கின்றனர்.
இறுதியான தகவலின் படி உலகளவில் 3 மில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவு கிடைக்காது வாழ்கின்றார்கள் எனவும் ஏறக்குறைய 690 மில்லியன் மக்கள் பசிபட்டினியினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு அதிகளவில் காணப்படுவதாகவும் இவற்றின் தாக்கம் உணவு சார்ந்த வயிறூதல் மற்றும் உடல் பருத்தல் மற்றும் உணவு சார்ந்த தொற்றாநோய்கள் ஏற்படுவதாகவும் குறிப்பாக இதயநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு என்பன அதிகளவில் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைவிட ஏறக்குறைய 600 மில்லியன் மக்கள் உணவுடன் தொடர்பான் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலகளவில் வருடத்திற்கு 400இ000 இறப்புக்கள் ஏற்படுவதாகவும் பாதுகாப்பற்ற உணவுகள் மனிதனுக்கு சவாலாக மாறியுள்ளதுடன் அவர்களது வருவாய் மற்றும் சுகாதாரத்தில் அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த நிலைமை குறிப்பாக வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களையும் வருமானம் குறைந்த குடும்பங்களையும் அதிகம் பாதிக்கின்றதென அறியப்படுகின்றது. மேலும் இது நடுத்தர குடும்ப மக்களையும் அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் இன்னும் போர் நடக்கின்ற நாடுகளில் இடம்பெயர்பவர்களையும் புலம்பெயர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கின்றது.
தற்போதய உணவு உட்கொள்ளும் முறைமையில்; உணவு சார்ந்த சுகாதாரத்திற்கு அதிகம் செலவாவதுடன் 2030ம் ஆண்டளவில் தொற்றா நோய்களும் (ழேn உழஅஅரniஉயடிடந னளைநயளநள) அதிகரித்து அநாவசிய இறப்புக்கள் ஏற்படும் போது உணவுசார் சுகாதாரத்திற்கு 1.3 ரில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் எனவும் இது சராசரி தேவையைவிட மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக தற்போதய உணவு உட்கொள்ளும் முறைமையுடன் நேரடிதொடர்புள்ள பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றம் உணவுசார் சமூகசெலவினை 1.7 ரில்லியன் (17,000,000,000,000) டாலராக அதிகரிக்கும். ஐரோப்பாவில் உணவுக் கழிவிலிருந்து 254 மில்லியன் தொன் காபனீரொட்சைட்டு சூழலுக்கு வெளியிடப்படுகின்றது என கணித்திருக்கின்றனர்.
மேலே கணக்கிட்டதன் படி உலக உணவு வலையமைப்பிலிருந்து வளர்ச்சியடையும் உலக சனத்தொகைக்கு உணவளிப்பதாயின் 2050ம் ஆண்டளவில் கடினமாயிருப்பதுடன் அதன் பின்னர் நிலைமை மிகவும் பாரதூரமான நிலைக்கு செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனாலும் வழமையான வர்த்தக நிலைமையில் இருக்கின்ற இயற்கை வளங்களின் அடிப்படையிலும் சுற்றுச்சூழலிலேற்படும் தாக்கத்தினாலும் உற்பத்தி அதிகரித்து உலக உணவு தொகுதி; ஏனைய தொழினுட்பங்களுடன் இணைக்கப்படும். இவற்றுள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்பை எதிர்கொள்ளவும் உற்பத்தியை தக்கவைக்கவும் வேண்டியிருக்கும். எது எப்படியிருந்தாலும் சிறுஉற்பத்தியளர்களின் தரத்தினுடன் சிறிய விவசாயஉற்பத்தியை உள்ளூர், தேசியளவில் மற்றும் உலகளவிலுள்ள சந்தைக்கு எடுத்துச் செல்லல் வேண்டும். இந்த விடயத்தில் தாவரங்களிலும் வளர்ப்பு விலங்குகளிலும் ஏற்படும் பீடைகளும் நோய்களும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்களும் உண்டு.
இவற்றை விட முரண்பாடுகள், தர்க்க நிலைமைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் விவசாயஞ் சார் வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பதால் பசி பட்டினியினை முடிவுறுத்தும் முயற்சிகள் மீண்டும் பிற்போடப்பட்டும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இவற்றுடன் எரிபொருள் விநியோகம் என்பன மேலும் இடர்களைச் சந்திக்கும்.
2023ம் ஆண்டுக்கான உணவு விவசாய தாபனத்தின் தகவலின் படி 2022ம் ஆண்டில் 735 மில்லியன் மக்கள் பசிபட்டினியினுள்; சிக்குண்டார்கள். இந்நிலையில் உணவு விரயமாதல் மற்றும் கழிவாதல் உணவு வழங்கல் தொகுதியின் செயற்பாட்டை நலிவடையச் செய்துவிடும். இதில் உணவு விரயமாதல் மற்றும் வீணாதல் உணவுற்பத்தியிலிருந்து உணவு உட்கொள்ளும் வரையான உணவு வழங்கல் சங்கிலியமைப்பில் அதிக தாக்கத்தைச் செலுத்தும். இதற்கும் மேலாக அறுவடைக்குப் பிந்திய நிலையிலிருந்து (Pழளவ hயசஎநளவ) சந்தைப்படுத்தலின் ஆகக்குறைந்த சங்கிலியமைப்பின் சில்லறைவிற்பனை (சுநவயடை) நிலைவரை 14 சதவீதம் உற்பத்தியான உணவு விரயமாகிவிடும்;. ஐரோப்பாவில் கணிப்பிடப்பட்டதன் படி ஒருவர் வருடமொன்றுக்கு 131 கிலோகிராம் உணவை விரயமாக்குவதாகவும் இதன் படி வருடத்திற்கு 58 மில்லியன் தொன் உணவு விரயமாக்கப்படுகின்றது. இதனை கணக்கிட்டு 132 பில்லியன் யூரோக்கள் (இலங்கை நாணயத்தின் படி 46இ000இ000இ000இ000ஃஸ்ரீ) என அறிவித்திருக்கின்றார்கள். அதே நேரம் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவின்றி தவிக்கின்றனர் என்றால் பாருங்களேன்.
ஏறக்குறைய 10 சதவீதமான அனைத்து உணவும் ஒவ்வொரு மட்டத்திலும் வீணாக்;கப்படுகின்றது. இவ்வாறு வீணாக்கப்படும் உணவு வினைத்திறனாக விரயமாகாது பயன்படுத்தப்பட்டால் உணவின்றி தவிக்கின்ற பல மக்களுக்கு உணவளிக்க முடியும். இந்த உணவு வழங்கலில் கிடைத்தலில் சமநிலை எய்தலை வினைத்திறனாக செய்யும் பொறிமுறை எதுவும் இதுவரையில் வெற்றிபெறவில்லை.
உணவு வழங்கல், நுகர்வோர் மட்டத்தில் இன்னும் சில்லறை வியாபாரத்தில் 17 சதவீதமான உலகளாவிய உணவுற்பத்தி விரயமாக்கப்படும். இவற்றுடன் உலகெங்குமிருந்து கிடைத்திருக்கின்ற தகவல்கள் முழுமைபெறாததால் மொத்த உணவு விரயம் அறுவடைக்கு முந்திய நிலையிலிருந்து உணவ வழங்கல் சங்கிலியின் இறுதிவரை எதி;ர்பார்க்கப்பட்டதை விட மேலும் அதிகமானதாகவே இருக்கும்.
தற்போதுள்ள விவசாய உணவுத்தொகுதிகள் சீரற்ற நிலையில் தளம்பலுடன் காணப்படுவதனால் இந்நிலைமை இனிவருங்காலங்களில் இன்னும் மோசமான நிலைமையையே எட்ட எத்தனிக்கும்.; குறிப்பாக விவசாய நிலங்களின் உற்பத்தித்திறன் நலிவடைவதாலும் பச்சைவீட்டு வாயுக்களின் அதிகரிப்பும் உயிர்ப்பல்வகைiயின் இழப்பும் அதிகளவிலான நிலத்தடிநீர் பயன்பாடும் இவற்றுக்கான முக்கிய காரணங்களாக எடுத்தியம்பப் பட்டிருக்கின்றன. சூழலிலேற்படுகின்ற மாற்றங்கள் உணவுத்தொகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தி காலநிலை மாற்றத்தின் அதீத தாக்கத்துக்குள் மேலும் சிக்குண்டு போக வைத்துவிடும். எதிர்பாராத காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடு இவற்றினை மேலும் விபரீதமாக்கிவிடும்.
இந்நிலையில் உணவு வீணாதல் மற்றும் விரயமாதலை குறைப்பதற்கான முயற்சிகள் விரைந்தெடுக்கப்பட்டாலன்றி உணவுக்கான தேவையை சீர்செய்ய முடியாது. இது 2030 ம் ஆண்டளவில் எதிர்பார்க்கப்பட்ட பேண்தகு அபிவிருத்தி இலக்கினை சாத்தியமற்றதாக்கி விடும். விவசாய உணவு தொகுதிகளின் வினைத்திறனான மாற்றம் உணவு கிடைத்தலிலிருந்து உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு ஆரோக்கியமான உணவு கிடைத்தலை உறுதி செய்வதுடன் அதனை தக்கவைக்கவும் உந்துதலளிக்கும். எனவே தான் எமது சூழலை பாதுகாக்கின்ற அனைத்து முயற்சிகளையும் நாம் விரைந்து எடுத்திட வேண்டும். இது மக்களின் பங்களிப்புடன் செயற்படுத்தும் திட்டங்களூடாக செய்ய முடியும். வீட்டிலிருந்து ஆரம்பித்து உணவை வீணாக்குவதை தவிர்க்க பழகிக்கொண்டால் உலகத்திற்கான உணவினை உற்பத்தியானதிலிருந்தே வழங்கிட முடியும்.
மதிப்பேற துடிக்கும் மரக்கறிகள் !
Vegetables willing to be Value added !
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இன்றைய தினம் ( 27 செப்டம்பர்) உலக சுற்றுலா தினம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடத்தினால் உலக சுற்றுலா தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கொண்டாட்டத்தில் அறுசுவை உணவுகளினதும் கைப்பணிப் பொருட்களின் காட்சியும் இவற்றுடன் கலாச்சாரத் திருவிழாவும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. எமது இருப்பினை தக்கவைப்பதற்கு எமது கலை கலாச்சாரத்துடனான சுற்றுலா மையங்களும் அவற்றின் மூலம் எமது மக்களுக்கு கிடைக்கவிருக்கும் தொழில்வாய்ப்பு மற்றும் வருமானமும் முக்கியமாக கவனிக்கத்தக்கன.
எமது பாரம்பரியத்தை பேணிப்;பாதுகாக்கும் அதேவேளை அவற்றினை நாடிவரும் வெளிநாட்டு மக்களை கவர்ந்திழுத்து எமது அந்நியநாட்டு செலாவாணியை பெருக்கும் கைங்கரியம் எம்மவர்களுக்கு கிடைத்திருக்கும் வரம். நாம் எமது வளங்களை தக்கவகையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். எம்மவர்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணின் மணத்தை நுகரத்துடிக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்தாலும் எமது தேசத்துக்கு வந்து இங்குள்ள நிகழ்வுகளில் கலந்து மகிழும் நிலைமையை உருவாக்க வேண்டும்.
மொரீசியஸ் ஒரு தீவு. விவசாய நாடாக இருந்த இத்தீவு தற்போது அனைவரும் விரும்பிச் செல்லும் சுற்றுலா நாடாக பரிணமித்திருக்கின்றது. மக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான அனைத்து உணவுவகைகள் மற்றம் காட்சி மையங்களை அனைத்து இடங்களிலும் கவரத்தக்கதாக உருவாக்கியிருக்கின்றார்கள். அனைவரின் உழைப்பும் அதில் தெரிகின்றது. தனிநபர் வருமானமும் குடும்ப வருமானமும் பெருகி மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்.
வெளிநாட்டு உணவுகளில் எம்மவர்களுக்கிருக்கும் மோகம் தற்காலிகமானது. பாரம்பரிய உணவு தேடி மக்கள் தற்போது அலையத் தொடங்கிவிட்டனர். பாரம்பரிய உணவு தயாரிப்பு கூடங்கள் பரந்து பட்ட அளவில் உருவாவது எமது மக்களை மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் சுவையில் நிச்சயமாக சுண்டியிழுக்கும். எமது பொருட்களையும் மதிப்பேற்றஞ் செய்து எமக்கேயுரித்தான பாரம்பரிய உணவுகளில் கலந்திருக்கும் அறுசுவைகளில் பரிமாறும் காலத்தை எம்மூர் வளங்களும் உற்பத்திப்பொருட்களும் எதிர்நோக்கியிருக்கின்றன.
இப்போது எங்களூர் மரக்கறிகளின் விலைகள் ஓடி மலிந்து விட்டிருக்கின்றன. மலிந்தது என்னவோ மக்களுக்கு மகிழ்ச்சி தான். நுகர்வோராக பார்த்தால் ஒரு முருங்கைக்காய் 20 ரூபாய்க்கு என சந்தையில் கூறியதும் முகம் மலர்ந்தது. கிலோ மூவாயிரம் விற்ற முருங்கைக்காய் நூறுரூபா என்றால் அதுவும் பொருட்களின் விலைகள் எகிறியிருக்கும் நிலையில் சாத்தியமாயிருக்கிறதே. எங்களூர் உற்பத்தியின் வினைத்திறன் இது. ஆனால் இந்த விலை அடுத்த மாதம் மாறிவிடும். வருடம் முழுக்க ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கும்.
உற்பத்தியாளனுக்கு கையில் எதிர்பார்த்த காசு வராது அல்லல்படும் காலம். அவர்கள் மனமுடைந்து போயிருக்கும் தருணமிது. அட மாட்டுக்கும் அதிகமாக போட முடியாதே என அங்கலாய்த்தார் விவசாய பெருமகனார். உள்ளூர் முருங்கையின் அளவு மாறாதிருக்க இந்திய முருங்கையினம் அளவு பெருத்து சதைவைத்து அதுவும் ருசியாகத்தான் இருக்கின்றது. முருங்கைச் செய்கையிலேயே அதீத மாற்றத்தைக் கொண்டுவந்த இந்திய முருங்கையினம் அதிகமாக பயிரிடப்படுகின்ற காரணத்தாலும் திருவிழாக்களை மையப்படுத்தி நடுகை செய்ததாலும் திடுதிப்பென உற்பத்தி அதிகரிக்க விலை எதிர்பாராத கீழ்நோக்கிய தளம்பலை சந்தித்திருக்கின்றது.
இந்த நிலைமை ஏனைய மரக்கறி வகைகளுக்கும் ஏற்படுவது வழக்கம். இதற்கு ஏற்ற தொழிநுட்பம் இருந்தால் இவ்வாறு பழுதடையக்கூடிய மரக்கறி வகைகளை மதிப்பேற்றஞ் செய்து நீண்ட காலம் வைத்திருக்கக்கூடிய வழிவகைகளை அவசியம் உள்வாங்க வேண்டும். எமது உணவுப் பழக்கத்தை மாற்றும் கைங்கரியத்தை நாம் அறிமுகப்படுத்த இவ்வாறான உணவுஉற்பத்தி செய்யும் நிறவனங்கள் முயற்சி செய்யலாம். பழுதடையக்கூடிய மரக்கறிப் பயிர்களை விரைந்து மதிப்பேற்றஞ் செய்து கொண்டால் அவை கிடைக்காத காலங்களிலும் அவற்றை பயன்படுத்த முடியும்.
தேசிக்காய் ஊறுகாயாவதும் பாகற்காய் வற்றலாவதும் இதுபோலத்தான். அதுபோல ஏனைய மரக்கறி வகைகளையும் வற்றல் போடும் கலாச்சாரம் எம்மவர்களிடம் இருந்தாலும்; அந்த வற்றல்களை எம்மவர்கள் விரும்பி வாங்கி பயன்படுத்துவதில்லை. மரக்கறி வற்றல்களுக்கு பெரிய மவுசும் இல்லை. அவற்றின் தரம் மற்றும் மதிப்பேற்றும் பொருளிலேற்படும் மாற்றங்கள், புதியவகை உணவுப் பொருட்களின் தேவை மக்கள் விரும்பும் சுவை இவையனைத்தும் எமது வினைத்திறனிலேயே தங்கியிருக்கின்றது. இந்த வினைத்திறனை அதிகரிக்க தகுந்த தொழினுட்பத்தின் உதவி அவசியம் தேவை.
இந்த நிலைமைதான் பனாட்டுக்கும் என்றால் பாருங்களேன். பனம்பழத்தின் பயன்பாடு ஏதோவொரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. பனங்களியை பல்தேவைகளுக்கு பயன்படுத்தும் தொழினுட்பம் என ஆய்வுகளில் வெளிப்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றினது பயன்பாடு உயரவில்லை. எங்களூர் பொருள், அதற்குரிய காலத்தில் அதிகம் கிடைக்கும் பொருள் ஆனால் அவற்றினது உச்ச பயன்பாட்டை இன்னும் உயர்;த்திச் செல்ல முடியவில்லை. உள்ளூரிலிருப்பவர்கள் அதீத ஆதாயத்தைநோக்கி நகர்வதாலும் பிறதேசத்திலிருந்து வந்தவர்கள் நுகர்வோரை குறிவைத்து ஆதாயத்தை மையப்படுத்தியிருப்பதனால் உள்ளூர் பொருட்களின் மதிப்பேற்றம் பெரியளவிலானதாக இல்லை. தமிழ்க்கடவுள் அருள்பாலிக்கும் நல்லூன் செல்வச்சந்நிதி திருவிழாவிற்கு வந்து சென்ற மக்கள் கூட்டத்திற்கு உற்பத்தியில் தளரடையாது மரக்கறிப்பயிர்கள் வந்து கொண்டேயிருந்த காரணத்தினால் அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்திருந்தனர். இதுவும் ஒருவகையில் கடவுளுக்கான தொண்டு. ஏர்பிடித்தவன் சோர்வடையாது இருப்பதனால்; தான் பயிர் உற்பத்தியும் பெருகுகின்றது.
எமது தேசத்தில் தொழினுட்ப பற்றாக்குறை காணப்படுவது இதற்குக் காரணம். இந்த தொழினுட்பங்கள் ஏனைய நாடுகளில் பிரபல்யமடைந்திருந்தாலும் எம்மவர்கள் பயன்படுத்துவது குறைவாகவே இருக்கின்றது. தொழினுட்பங்களை வெளிக்கொணரும்; இயந்திரங்களின் விலைகள் எகிறுவதாலும் அவற்றை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுவும் இதற்கொரு காரணம் எனக் கூறலாம். இவற்றுக்கு மாற்று வழி காணாது விட்டால் உற்பத்தியாளனை நட்டப்பட விடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுகின்றோம்.
ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் ஒரே பயிரை அதிகளவில் விளைவிக்கின்ற காரணத்தால் இந்தநிலை ஏற்பட்டுவிடுகின்றது. நுகர்வோருக்கு அதீத சந்தோசத்தை கொடுத்திருக்கும் மலிவான விலையில் மரக்கறிகள் சிலசமயங்களில் விற்கப்படாமல்; சந்தைகளில தேங்கியும் இருக்கின்றன. இங்கிருக்கின்ற மரக்கறிகளின் நிலை இப்படியென்றால் தம்புள்ள சந்தைகளிலிருந்து வரும் மரக்கறிகளும் மக்கள் வாங்கக்கூடியளவில் விலைகளில் தளர்வு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு வரும் மரக்கறிக் பயிர்களை மதிப்பேற்றஞ் செய்து அவை கிடைக்காத காலங்களில் விலைகளை அதிகரிக்காது மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வழிவகைகளை ஏற்படுத்தல் தகும்.
மக்கள் தமது தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம் பயிர்களை வளர்க்கத் தொடங்கியது எமது தேசத்தில் பசி பட்டினி என மக்கள் அல்லல்படும் வாய்ப்புக்களைக் குறைத்திருக்கின்றது. ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டில் வெள்ளம் அ10னால் இங்கே பூமி காய்ந்திருக்கின்றது. மேகக்கூட்டம் வந்து பின் கலையும் நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது. எது எப்படியிருந்தாலும் நாம் வரண்ட தேசத்தில் வாழவில்லை என்பதைப் போல எமது தேசமும் பசுமையாயிருக்கின்றது. இந்த வளங்களை விட்டுவிட்டு எந்த வளத்தைத் தேடியோடுகின்றோம் என்பது தான் இன்னும் பலருக்கு புரியவில்லை.
மாறும் உலக வழக்கமும் உணவுப்பழக்கமும் உண்ணும் பழக்கமும் !
Changing global tradition, food habits and feeding habits
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் நோய் தெரியத்தொடங்கி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி உயிர்களைக் காவுகொள்கின்றது. புற்று நோயின் (Cancer) தாக்கம் தற்போது பரந்து பட்ட அளவில் பெண்களை பாதிக்கின்றது என்னும் செய்தி மிகவும் முக்கியமானதாக கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆண்களும் விதிவிலக்கல்ல என்றாலும் தரவுகளின் படி பெண்களுக்கு புற்றுநோய் பரவல் அதிகமாகவே கணிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆண்கள் பெண்கள் என்பதனைத் தாண்டி வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் முதியோர் வரை பலருக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டிருக்கின்றது என்பதுடன் பலரது உயிர்களை காவுகொண்டுள்ளது என்பது தான் துன்பியலான செய்தியாகும். இதில் பரம்பரையாக இந்த நோய் வருகின்றது என்பதை தவிர்த்துப் பார்த்தால் வேறு பல காரணிகளும் புற்றுநோய் உருவாவதற்கு காரணமாகின்றன.
கடந்த மாதம் அறிவிப்பொன்று சுகாதாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதில் 25 – 35 வரையான வயதுடைய பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றன அதிகளவில் ஏற்படுவதாகவும் அதனால் அண்மையிலுள்ள புற்றுநோய் கண்காணிப்பு நிலையத்திற்கு தவறாமல் சென்று தங்களை பரீட்சித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கின்றனர். தமக்குள்ள நோய் சார்ந்த தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படும் எனவும் அறிவுக்கப் பட்டுள்ளது. இந்த அறிவித்தலை அதிகம் பேர் அலட்சியம் செய்வது தெரிகின்றது. புற்றுநோயின் தன்மையை கண்டறிய CA 125 என்னும் இரத்தப் பரிசோதனையும் செய்யப்படுகின்றது. முழுவதுமாக இது புற்றுநோயால் என்பதனை உறுதிசெய்யாவிட்டாலும் இதன் கணிப்புகளை புற்றுநோயை மாறும் உலக வழக்கமும் உணவுப்பழக்கமும் உண்ணும் பழக்கமும் !
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
காலநிலை மாற்றமடைய தொடங்கியதிலிருந்து கோவிட் 19 இனது தாக்கம் அதிகரித்ததிலிருந்து இன்னும் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்ததிலிருந்து உலகெங்கும் போர்மேகங்கள் சூழ்ந்ததிலிருந்து உலக வழக்கம் முற்றிலும் மாறுபட்டிருப்பதனை காணலாம். மக்களின் இறப்பு என்பது சாதாரணமானதாக உருவெடுத்துள்ளது. என்ன வசதியிருந்தும் விஞ்ஞானம் உலகைமிஞ்சி வளர்ந்துவிட்ட பின்பும் உணவு போதாமை உலக மக்களை வாட்டியெடுக்க தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படைக் காரணம் உணவுற்பத்தி ஒருபக்கம் அவற்றினது கிடைக்கும் தன்மை மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் தன்மை இன்னொரு பக்கம் இவை இரண்டுக்குமிடையில் சந்தைப்படுத்தலும் விலைத்தளம்பலும் மூன்றாவது பக்கம். என்றும் எப்போதும் எம்மாலேயே எமக்கு அழிவு என்பது சரியாகத்தான் இருக்கின்றது.
மக்கள் உணவுக்காக கையேந்தும் நிலைமை எதிர்பாராத விதமாக பலநாடுகளில் அதிகரித்துள்ளது. உணவுப் போதாமை சூடானில் தொடங்கி பல நாடுகளில் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. உணவுற்பத்தியிலும் கணிசமானளவு வீழ்ச்சி கண்டிருக்கின்ற வருடமாக பதியப்பட்டிருக்கின்றது. கிடைக்கின்ற உணவை தெரிவுசெய்வதில் தான் பிரச்சனையென்றால் உண்ணுகின்ற பழக்கத்தைக் கூட மாற்ற எமக்கு இயலாதிருக்கின்றது. பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் இயற்கையாக கிடைத்த உணவை தமக்கேற்ப தயார்செய்து உண்டு நீடுகாலம் வாழ்ந்தனர் என்பதனை அறியும் போது அந்த யுகம் இனித் திருப்ப வராதா என்ற ஏக்கமும் இருக்கவே செய்கின்றுத.
ஒரு பக்கம் குடிக்க நீரின்றி நிலம் வரண்டு மனிதன் மட்டுமல்ல விலங்குகளும் தவிக்கும் காட்சிகளும் மறுபுறம் துருவப் பகுதிகளில் குறிப்பாக அன்ராட்டிக்கா மற்றும் பச்சைநில (புசநநn டயனெ) பனிக்கட்டிகள் கரைந்து கடல் நீரின் மட்டம் அதிகரிக்கின்ற செய்திகளும் இதனால் மிகவும் தாழ்வான கடற்கரைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அதிகூடிய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவில் டானியல் சூறாவளியின் பின்விளைவாக டரானா நகரில் எப்போதும் வரண்டிருக்கும் நிலம் கொட்டுமழையின் தொடர்ச்சியாக திடிரென்று உருவான வெள்ளப்பெருக்கினாலும்; இரு அணைகள் உடைப்பெடுத்தமையும் உறக்கத்திலிருந்த மக்களை அள்ளியெடுத்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. ஏறக்குறைய 20இ000 மக்களை உறவுகள் கடலுக்குள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இதனை மேலும் தீவிரமாக்கி நாளாந்தம் நிகழும் இயற்கை அனர்த்தங்கள் பலநாடுகளில்; உணவு நீர் உறையுள் என அனைத்திலும் பிரச்சனைகளை மேலும் விரிவாக்கிவிட்டுள்ளன. அதிகரித்த வளிமண்டல வெப்பநிலையின் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவலாக கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை என பல நாடுகளில் ஏற்பட்டதனைத் தொடர்ந்து பல அழிவுகளும் இடம்பெறுகின்றன. இயற்கையான வனப்பகுதிகளில் உருவான தீ பரவலடைந்து காற்றின் வேகத்தில் சுழன்றெழுந்து விரைந்து பலஇடங்களை எரித்தழித்துவிட்டது. விஞ்ஞானம் ஒருபக்கம் வளர்ந்து செல்ல இயற்கை அனர்த்தங்களின் விபரீதங்களும் அதிகரித்தே செல்கின்றன. இயற்கையை தீர்மானிப்பதற்கும் அதன் அழிவுகளை அனர்த்தங்களை கட்டுப்படுத்தவும் விஞ்ஞானம் இன்னமும் திணறிக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.
2024ம் ஆண்டு 1.5 பாகை செல்சியஸ் இனால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் என கணிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த உயர்வு துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள்; உருகி கடல் மட்டம் மேலும் அதிகரிக்கும் நிலைமை தோன்றியிருக்கின்றது. கடல் மட்டம் அதிகரிக்கும் போது பலநாடுகளின் கரையோரப் பகுதிகள் நீரினுள் மூழ்கிவிடும் அபாயத்தையும் காணீர்;. இதில் பங்களாதேஷ், சீனா, இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் கரையோரங்கள் இந்த அனர்த்தத்துக்குள் அகப்பட்டுவிடும்; எனவும் ஏறக்குறைய 900 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்படைய நேரிடும் எனவும் கணிப்பிடப்பட்டிருக்கின்றது. மாலைதீவு ஏற்கெனவே இந்த இடருக்குள் வரவிருக்கின்றது என எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. எமது நாட்டிற்கு தற்போதைக்கு இப்பிரச்சனை இல்லையென்றாலும் யாழ்ப்பாணம் கடல் பரப்பிலிருந்து பத்து மீற்றர் உயரத்தில் இருப்பதால் எதுவும் நடக்கலாம் என எண்ணுவோம்.
இறுதியாக மொராக்கோவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்களை பலசொத்துக்களை இழந்து வீதியில் எதுவுமின்றி தவிக்க விட்டிருக்கின்றது. அனர்த்தங்கள் அனைத்தும் கண்மூடி திறப்பதற்குள் நடந்தேறியவையாக அழிவின் கோரமுகத்தை காட்டிநிற்கின்றன. இயற்கையனர்த்தங்களின் இறுதி வடிவம் உணவு மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையாகவே உள்ளது. இவற்றைத் தவிர்த்து எந்த முன்னேற்றத்தையும் மனிதன் கண்டுவிட முடியாது.
நெருக்கடி நிலைக்குள் சிக்கியிருக்கும் நாடுகளை மீட்கும் போராட்டத்தில் ஐ.நாவின் அமைப்புக்கள் மற்றும் பல தொண்டு அமைப்புக்கள் இடைவிடாது உதவிக்கரத்தை நீட்டியிருக்கும் இவ்வேளையில் இன்னமும் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் மக்களுக்கான முழுமையான உதவிகள் உலகமெங்கும் சென்றடையவில்லை. பல்வேறுபட்ட இடர்களுக்குள் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்டெடுப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல.
எமது பிரதேசத்தில் உணவில்லை என்பதனை விட நாம் கொண்ட உணவுப்பழக்கத்தினாலும் உண்ணும் பழக்கத்தினாலும் எம்மில் பலர் பட்டினியின் விளிம்பில் நிற்கின்றனர். தேவை கருதியாவது பழக்கவழக்கத்தை மாற்றினால் இத்தகைய இடர்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட உணவுகளை நாம் உண்பதனையே எமது தினவழக்கமாக கொண்டிருக்கின்றோம். ஆனால் அவ்வகை உணவுகளை தயாரிக்க அதிக செலவாகும் என்பதனை நாம் கவனத்திற்கொள்வதில்லை. உணவுற்பத்தி செலவு அதிகரிக்கின்ற காரணத்தினால் உணவுப்பொருட்களின் செலவும் அதிகரித்து விட்டிருக்கின்றுத. எமது நாட்டின் பொருளார மீட்சி என்பது கற்பனைக்கெட்டாத தூரத்திலிருக்கும் போது அதனை கருத்திற்கொண்டு எமது வாழ்க்கை முறைகளை வரவு செலவுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளாதவரை எவருக்குமே மீட்சியில்லை.
பீட்சா, பர்கர், கொத்து, என்பன அளவுகடந்த கொழுப்பை எமது உடலில் சேர்த்துவிடும். உண்ணஉண்ண சுவையானதாக இருப்பதால் அதற்கு நாம் அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் எமக்கான உணவுகள் பல எமது இயற்கை தந்திருக்கின்றது. இலைக்கறி வகைகள், கிழங்குகள், காய்கறிகள், தண்டுகள், காய்கள், கனிகள், கொடிகள், படரிகள் இன்னும் இவற்றை வைத்து மதிப்பேற்றஞ்; செய்த உணவுப் பொருட்கள் என பலவற்றை கொண்டிருக்கின்றோம். இருக்கும் சனத்தொகைக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கான விவசாயப் பெருமக்களும் போதியளவு நிலமும் உண்டு. எமது உற்பத்தி, களஞ்சியப்படுத்தி, மதிப்பேற்றி இன்னும்; சந்தைத் தொழினுட்பத்தை விருத்தி செய்யாது முட்டையையும் இறைச்சியையும் இன்னும் உணவையும் இறக்குமதி செய்து இன்னும் எமது மக்களை வறியவர்களாக்கி சோம்பேறியாக்குவதைத் தவிர இவற்றினால் வேறு என்ன செய்துவிட முடியும். எமது பாரம்பரிய உணவுகளிலேயே எமது சுகாதாரம் தங்கியிருக்கின்றது என்பதனை இன்னுமா நாம் புரிந்து கொள்ளவில்லை?
உணவுப்பழக்கம் தான் அப்படியென்றால் உண்ணும் பழக்கமும் மாறாதிருக்கின்றது. அளவான உணவு, சமனிலையான உணவு, பல்வகையான (னுiஎநசளகைநைன கழழன) உணவு இன்னும் இயற்கையாக கிடைக்கின்ற உணவுப்பொருட்களை முடிந்தளவு நீராவியில் அவித்து எண்ணைய்வகைகளை தவிர்த்து உண்ணும் போது எந்த நோயும் தன்னுள்ளே அடங்கிவிடுகின்ற தன்மையை அனுபவத்தில் உணர்ந்தவர்களை கேளுங்கள். உணவு செமிபாடடையும் காலத்தை கணித்து அதன்பின்னர் உணவினை உண்டுவர சமிபாட்டு பிரச்சனைகள் தானாக தீர்வினைக் காணும். அளவுக்கு மேலே திணிக்க திணிக்க வயிறு உப்பிவிடுவதுடன் அனைத்து நோய்களும் அணுகத் தொடங்கிவிடும். சாதாரணமாக நீரிழிவு, இதயநோய், கண்பார்வை குறைபாடு, குனிந்து நிமிரமுடியாமை, சோம்பல் என்பன எமது உணவுப் பழக்கத்தினாலும் உண்ணும் பழக்கத்தினாலும் ஏற்படுகின்றதனை உணர்ந்து நம்மை நாமே கட்டுப்படுத்தத் தொடங்கினால் அனைத்தும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். முக்கியமாக எமது மனமும் ஒருநிலைப்படும். இவையனைத்திற்கும் மனமே முக்கிய காரணம். எந்த வழக்கத்தையும் பழக்கத்தையும் மாற்றும் திறன் மனதிற்கு உண்டு. இதனை எமது நல்வாழ்வுக்காக ஒருதரம் மாற்றித்தான் பார்ப்போமே.
புற்றுநோயின் புரிதலும் புரியாத புதிர்களும் !
The well understood and unfurled secrets of Cancer !
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் நோய் தெரியத்தொடங்கி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி உயிர்களைக் காவுகொள்கின்றது. புற்று நோயின் (Cancer) தாக்கம் தற்போது பரந்து பட்ட அளவில் பெண்களை பாதிக்கின்றது என்னும் செய்தி மிகவும் முக்கியமானதாக கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆண்களும் விதிவிலக்கல்ல என்றாலும் தரவுகளின் படி பெண்களுக்கு புற்றுநோய் பரவல் அதிகமாகவே கணிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆண்கள் பெண்கள் என்பதனைத் தாண்டி வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் முதியோர் வரை பலருக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டிருக்கின்றது என்பதுடன் பலரது உயிர்களை காவுகொண்டுள்ளது என்பது தான் துன்பியலான செய்தியாகும். இதில் பரம்பரையாக இந்த நோய் வருகின்றது என்பதை தவிர்த்துப் பார்த்தால் வேறு பல காரணிகளும் புற்றுநோய் உருவாவதற்கு காரணமாகின்றன.
கடந்த மாதம் அறிவிப்பொன்று சுகாதாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதில் 25 – 35 வரையான வயதுடைய பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றன அதிகளவில் ஏற்படுவதாகவும் அதனால் அண்மையிலுள்ள புற்றுநோய் கண்காணிப்பு நிலையத்திற்கு தவறாமல் சென்று தங்களை பரீட்சித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கின்றனர். தமக்குள்ள நோய் சார்ந்த தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படும் எனவும் அறிவுக்கப் பட்டுள்ளது. இந்த அறிவித்தலை அதிகம் பேர் அலட்சியம் செய்வது தெரிகின்றது. புற்றுநோயின் தன்மையை கண்டறிய CA 125 என்னும் இரத்தப் பரிசோதனையும் செய்யப்படுகின்றது. முழுவதுமாக இது புற்றுநோயால் என்பதனை உறுதிசெய்யாவிட்டாலும் இதன் கணிப்புகளை புற்றுநோயை உறுதிசெய்ய பயன்படுத்துகின்றார்கள்.
இங்கே சைவ உணவு உண்பவர்களுக்கும் இந்நோயின் தாக்கம் இருப்பது தான் புரியாத புதிரில் ஒன்றாகும். பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரிந்தவர் இறுதிவரை உடற்பயிற்சியில் தினமும் உடலை உயிர்ப்பித்தவர் மரக்கறிவகைகளை உண்டவர் இறைபக்தியிலேயே இருந்தவர் குறிப்பாக தினமும் கோவா கறியென்றால் அலாதிப்பிரியம் அவருக்கு வந்தது குடல்புற்றுநோய் என்றால் கோவாவிற்கு இலையரிபுழுக்களை கட்டுப்படுத்த தினமும் விசிறப்பட்ட பீடைநாசினிகளால் புற்றுநோய் வந்திருக்குமா என்னும் வினாவுக்கு இன்னமும் விடைகிடைக்கவில்லை.
விவசாயியொருவர் பீடைநாசினிகளை அந்தந்த பீடைநாசினி கம்பனிகளிலிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்து தினமும் அதிகாலையில் நடுகை செய்த அனைத்திற்கும் பல்துலக்க முன் ஒரு விசிறு விசிறிவிட்டு தான் மறுவேலை செய்வதாக பெருமிதம் கொண்டார். அவர் நடுகை செய்தவற்றில் சிறுகீரையும் வல்லாரையும் பொன்னாங்காணியும் என இலைக்கறி வகைகள் தவிர வெண்டியும் கோவாவும் பூக்கோவாவும் கத்தரியும் மிகமுக்கியமான பயிர்கள். இருபத்தைந்து நாள் சிறுகீரைக்கு எதற்கு இந்த விசிறல் என்றால் அப்போது தான் சந்தையில் கீரைப்பிடி பிடித்தபடி கம்பீரமாக இருக்கும், தேடி வாங்குபவர் சந்தோசமாக வாங்கி செல்வார்கள் என்றார். இப்போது திருவிழாக் காலம். அங்கே இங்கே என பல கோவில்களிலும் திருவிழா களைகட்டியிருக்கும் இவ்வேளையில் மரக்கறிகளுக்கும் கேள்வி அதிகம். இலாபம் அதிகம் வரும் என்னும் நோக்கில் கீரைக்கும் வல்லாரைக்கும் விசிறும் அசேதன பசளையும் பீடைநாசினியும் நுகர்வோரை அதிகம் பாதிக்கும்;.
25 நாள் கீரைக்கு பீடைநாசினி தெளித்தால் தெளித்து 14 நாட்களுக்கு பின்னரேயே சந்தைப்படுத்தல் வேண்டும். அவ்வாறாயின் எப்போது விசிறி எப்போது அறுவடைசெய்வது?. இந்த சூட்சுமம் பீடைநாசினி விசிறும் விவசாயிக்கே சமர்ப்பணம். சிறுகீரை என்றுதானே அதற்கு பெயர் ஆனால் கீரை செடியாக அல்லவா விற்பனைக்கு வருகின்றது. எப்படி இப்படி நீண்டு வளர்ந்து சதைபிடித்து தண்டு பெருத்து இலை விரிந்தது என்பது இரண்டாவது புதிர்.
அதற்காக அனைத்து விவசாயிகளையும் குறை கூறமுடியாது. மக்களுக்கு நல்லனவற்றை விற்க வேண்டும் என்னும் எண்ணம் பலரிடம் இருப்பதனை அசேதன இரசாயன பசளைகளையும் பீடைநாசினிகளையும் அறவே தவிர்த்து மாடுகட்டி அதில் பயிர்செய்வதிலிருந்து கண்டு கொள்ளலாம். நஞ்சற்ற மரக்கறிகளை நாடுபவர்கள் இந்த விடயத்தில் அவதானம் தேவை. வீட்டில் ஒரு தோட்டமிருந்தால் இவ்வகை இலைக்கறிகளை நாமே நட்டு அறுவடையும் செய்து தேவைப்படும்போது உணவாக்கலாம். தன்கையே தனக்குதவி என்பது போல தன்னையே நம்பலாமே.
ஓடியாடித்திரிந்த மழலை ஐந்தாமாண்டு பரீட்சை எடுக்கவிருந்த வேளை சுகவீனமென வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுதான் அங்கிருந்து இறுதியில் பெட்டியிலேயே எடுத்து வந்தார்கள். வைத்தியர்களும் வைத்தியசாலையும் எவ்வளவோ முயற்சித்தும் அந்த மழலையை காப்பாற்ற முடியவேயில்லை. காரணம் இரத்தப்புற்றுநோய் என இறுதியாக்கினர். அரும்பெரும் பாடுபட்டு பிறந்த ஆண்குழந்தை நிமிர்ந்து எழுகையில் எதற்கு வந்தது இரத்தப்புற்றுநோய்? இந்த வயதில் இப்படியொரு துன்பத்தை தந்தது ஏன்?பத்தாண்டுகள் ஓடியும் இன்னும் அந்த இழப்பை மறக்க முடியாத பெற்றோர்களுக்கு வந்த துன்பம் மூன்றாவது புதிர்?
மறைந்த மண்ணியல் ஆசான் பாணபொக்கே அவர்களின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் அதிகமான புற்றுநோயாளர்கள் இருந்தமைக்கு உணவில் இன்னும் குடிக்கும் நீரில் பாரஉலோகங்கள் இருந்தமை ஒரு காரணமாகுமா என பலஆய்வுகள் செய்யப்பட்டன. எதுவுமே அறுதியாக இதுதான் புற்றுநோய்க்கான தோற்றுவாய் என கூறவில்லை. முன்மொழிவுகளாகவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பாரஉலோகங்களுக்கும் சிறுநீரக செயற்பாட்டுக்கும் தொடர்பு இருந்தாலும் புற்றுநோய்க்கான காரணியாக இதுவும் முன்வைக்கப்படுவது சிந்திக்க வைத்துள்ளது.
உணவில் அப்படியொன்றும் இல்லை என்றுதான் வாதிட்டாலும் புலால் தவிர்த்து மதுவின்றி வெற்றிலை பாக்கு புகையிலையை நாள் முழுக்க சொதப்பாத மாதர்க்கும் புற்றுநோய் கண்டிருக்கின்றது. இனப்பெருக்க தொகுதியில் வரும் புற்றுநோய்கள் இவை எவற்றிலுமடங்காதவை. அதிலும் பெண்களின் இனப்பெருக்க தொகுதியில் குறிப்பாக குழந்தைக்கான கரு மையங்கொள்ளும் கருவறையிலும் அந்த சிசுவுக்கான உணவு தரும் மார்பகத்திலும் புற்றுநோய் உருவாவதற்காக தளம் இருக்கின்றதென்பது விதியின் நியதியே. சிறந்த பெறுபேறுகள் பெற்று மருத்துவர்களாக பொறியியலாளர்களாக பரிணமித்த பிள்ளைகள் உருவான கருவறை அந்த தாய்மையின் உயிரை காவுகொள்ளும் புற்றுநோய்க்கான களமாக உருவாவதை தவிர்க்க வழிகள் அவசியம் அறிந்துணரப்படல் வேண்டும். வருமுன் காப்போம் என்னும் மகுட வாசகத்தின் உட்பொருளை அலசினால் இவ்வகை புற்றுநோய்களை ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் (Early Diagnosis) அவற்றிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்றே புற்றுநோய் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.
வாயிலிருந்து குதம் வரை சமிபாட்டுத் தொகுதியில் எந்த இடத்திலும் புற்றுநோய் ஏற்படுவது போல நுரையீரல், இன்னும் உமிழ்நீர் சுரப்பியிலும் இது ஏற்படுகின்றது. ஆனால் சரியானமுறையில் புற்றுநோயின் குணங்குறிகளை ஆரம்பத்தில் இனங்காணத்தவறின் அது கறையான் புற்றுபோல வளர்ந்துவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும். கருவறையை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிட்டால் இதற்கான வாய்ப்புக்கள் குறைவென்றாலும் ஏதும் உடலில் வித்தியாசமாக உணர்ந்தால் வைத்தியர்களின் பரிந்துரைகளை உடனடியாகவே செவிமடுத்தல் அவசியம். மருத்துவ தவறுகளால் முழுமையாக வெட்டியெடுக்கப்பட்ட கருவறையை 100 சதவீதம் போர்மலின் கரைசலுக்குள் அமிழ்த்தாத நிலையில் புற்றுநோய் இருந்த பகுதி மேலிருந்ததால் அதனது இருக்கை சோதனையில் வெளிக்கொணரப்படவில்லை. இதனால் புற்றுநோய் தன்கணக்கில் பல்கிப் பெருகியும் அதனது இருப்பை சோதனைகள் பலவும் மறைத்துவிட்டன. அதனது உருவாக்கம் பற்றிய ஊகங்களுக்கும் இடமளிக்கவில்லை. பல்கிப் பெருகி ஊளைச்சதையாக வளர்ந்துவிட்ட புற்றுநோய்க்கலங்களை பின்னர் அழிப்பதென்பது இயலாததாகவே கருதப்படுகின்றது. கற்றவர் மட்டத்தில் இந்த அறிவு புரிந்துணர்வு இல்லாதிருந்த காரணத்தால் அதில் உழன்றுகொண்டிருக்கும் அனுபவத்தினை இங்கே பதிவுசெய்தேன். இவ்வகையில் புற்றுநோய்பற்றிய அறிவினை அனைத்து மக்களுக்கும் குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கும் அறிவுறுத்துவது அவசியமாகும். இதில் ஊடகங்களின் பங்கும் அளப்பரியது.
எமது விவசாய உயிரியல் துறையில் நேர்மையான கண்ணியமான தற்துணிவான பெண் தொழினுட்பவியலாளருக்கு உருவாகியது கருவறை புற்றுநோய். தனது தாய்க்கு வந்தது தனக்கும் வந்ததை நினைத்து தினந்தினம் துடிதுடித்த அந்த உடன்பிறப்பு தன்னை காப்பாற்றிக் கொள்ள அனைத்து சிகிச்சைகளையும் ஓடியோடிச் செய்தும் இறுதியில் 38 வயதில் அந்த இரு குழந்தைகளின் தாய் உயிர் பிரிந்துவிட்டது. தினந்தினம் தனக்கான நோயின் வலியை கூறி ஆதங்கப்பட்ட ஆன்மா அவதிப்பட்டே உயிரை நீத்தது. எவரையும் எதிலும் நோகடிக்காத அன்புடன் தன் ஆளுமையை வெளிக்காட்டிய உன்னத ஆன்மா அவதிப்பட்ட தருணங்கள் இன்னும் மறக்க முடியாதவை. உலகில் நல்லவருக்கு நல்லதையே எண்ணுபவருக்கு நல்லுள்ளங் கொண்டவருக்கு எப்படி புற்றுநோய் வருகின்றது?இதுவும் இன்னும் புரியாத நான்காவது புதிர்.
ஆண்களின் இனப்பெருக்க தொகுதியில் விந்துகளுக்கான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும் விந்தின் அசைவுக்கு ஏதுவான சுரப்பை சுரக்கின்ற புரொஸ்ரேற்று என்னும் சுரப்பியில் உருவாகும் புற்றுநோயாகும். இது தவிர பல்வேறு புற்றுநோய்களை சுகாதார திணைக்களம் வரிசைப்படுத்தியிருக்கின்றது. எம்மண்ணிலேயே ஆரம்ப நிலையில் தகுந்த சிகிச்சை பெற்று பலர் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். இதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் வைத்தியர்கள் தாதிமார் கடவுளின் பிள்ளைகளே.
அநேகமான புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை (Radiotherapy) மூலமாகவும் தனித்துவமான வேதியியல் மருந்துகளை குருதியோட்டத்தில் ஊசியால் உட்செலுத்தியும்; (Chemotherapy) சிகிச்சையளிக்கின்றனர். அறுவைச் சிகிச்சை (Surgery) மூலம் புற்றுநோய்க் கட்டிகள் (கலங்கள்) அகற்றப்பட்டால் அதனது பெருக்கம் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாதிருப்பின் மேற்கூறிய கதிரியக்க மற்றும் வேதியியல் சிகிச்சைகளுக்கு கட்டுப்படத்தவறின் விளைவு விபரீதமானது தான். இவற்றைவிட PET -CT Scan மற்றும் CT-Scan படங்களின் உதவியுடன் நேரடியாக புற்றுநோய்க்கலங்களை கதிரியக்க சிகிச்சை (Image Guided Radiotherapy-IGRT) மூலம் சக்தியற்றதாக்கும் வழிமுறையும் உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்டி புற்றுநோய்கலங்களை கட்டுப்படுத்தும் (Immunotherapy) சிகிச்சை முறைகளும் புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதில் புற்றுநோய் கலங்களை முழுமையாக அகற்றுவதென்பது இயலாததென்பதால் அவற்றின் பெருக்கத்தை தடுத்து அல்லது குறைத்து அல்லது செயலிழக்க செய்து நோயேற்பட்டவரின் வாழ்நாளை அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இவற்றுக்கான செலவு அதிகமானது.
இங்கிலாந்தில் ஐனென்டெக் டோச் நிறுவனம் அடிஸோலிசூமாப் (Adizolizumab) என்னும் ஊசிமருந்தை புற்றுநோயை குணப்படுத்த கண்டுபிடித்திருப்பதாக செய்தியொன்று ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றது. 2024இல் புற்றுநோய்க்கான மருந்து உலகில் கண்டறியப்படும் என தீர்க்கதரிசி பாபாவங்கா எதிர்வு கூறியிருப்பதும் நினைவில் நிற்கின்றது. பாரம்பரிய வைத்தியத்தில் சொர்க்க மரம் (Simarouba glauca) என அழைக்கப்படும் மரத்தின் இலைகள் புவுடராக்கப்பட்டு புற்றுநோய் சிகிக்சைக்காக பயன்படுத்தப்படுகின்றது. வேதியியல் சிகிச்சைக்காக பயன்படும் அநேகமான மருந்துகள் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்ப்பட்டவை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. இதில் இன்னொரு அம்சமாக பாரம்பரிய மருத்துவத்தையும் சித்த வைத்தியத்தையும் மேலைத்தேய மருத்துவத்தையும் இணைத்;த சிகிச்சை முறை இவ்வாறான நோய்களுக்கு இல்லாதிருப்பது எதிரும்புதிருமாக இருக்கின்றது. கொள்கைகளும் முறைகளும் வேறுவேறு என்றாலும் புற்றுநோயை குணப்படுத்த அறிவியல் ரீதியான இந்த இணைப்பு உதவுமா என்பதே இங்குள்ள கேள்வி. பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படும் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தும் மேலைத்தேய மருத்துவம் புற்றுநோயை குணமாக்க அனைத்தும் இணைந்ததொரு முறையை பரிந்துரைக்க முன்வராதது ஏன் என்பதும் இன்னொரு புதிராகவே உள்ளது.
எகிறும் வளிவெப்பநிலை - நீர்ப்பற்றாக்குறையும் பரவும் காட்டுத்தீயும்
Increasing air temperature - Shortage of water and spreading forest fire
This article describes about the increasing of air temperature at recent past and it's immediate causes are the shortage of water for agriculture and household purpose plus spreading forest fire in many countries devastating the natural and other resources. The city of many places were under fire due to its high speed of spreading due to high wind.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எல்நினோவின் தாக்கம் தற்போது பரந்து பட்ட அளவில் உலக மக்களை அதிகம் பாதிப்படைய வைத்திருக்கின்றது. நாமும் அதற்கு விதிவிலக்கல்ல. வளிவெப்பநிலை எகிறிக்கொண்டிருக்கின்றது. உடலில் ஒருவகை எரிச்சல் ஏற்படுவதனால் இவ்வாறான நிலைமைகளில் அனைவரும் அவதானமாக இருத்தல் வேண்டும். வரப்பே தலகாணி, வைக்கோலே பஞ்சுமெத்தை, வெற்றுடம்பே பட்டாடை என வாழ்ந்து வயலில் பயிர்களை விளைவிப்பவருக்கும் சோதனையான காலமிது. முன்பு போல காலைவேளையில் வெற்றுடலுடன் வயலில் இறங்கி வேலைசெய்ய முடியாது. அளவுக்கதிகமான வெப்பத்தின் தாக்கம் உடலில் தோலை அதிகமாக சுட்டெரிக்கின்றது. பயிர்கள் விரைந்து வாடுவதும் வழமைக்கு மாறாக அதிகமான அளவு நீர்ப்பாய்ச்ச வேண்டியுமிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் நீர்ப்பற்றாக்குறையுள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டாலும் அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. இது மழைக்குரிய காலமில்லை என்றாலும் சில இடங்களில் அவ்வப்போது மழை தூறி மண்ணை நனைத்திருக்கின்றது. இந்த நனைப்பு எழுகின்ற உஸ்ணத்தினை தணிக்கப் போதாது.
தாவர இழையங்களில் விளைச்சலில் பாதிப்பு
பயிர்களில் அதிக உஷ்ணத்தின் காரணமாக குறிப்பாக அவற்றினது இலைகளில் ஒளித்தொகுப்பு பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அதிக வெப்பநிலை தாவரங்களில் ஊட்டச்சத்து குறைவடைய ஏதுவாவதுடன் இலைப்பகுதியின் விருத்தியின்மை மற்றும் மகரந்த மணிகளில் பாதிப்பு இவற்றினால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படும் போது விதை உற்பத்தியாதல் தவிர்க்கப்படுகின்றது. ஒளித்தொகுப்பு பாதிக்கப்படும் போது தாவரம் தேவையான உணவை உற்பத்தி செய்யாதிருப்பதனால் விளைச்சலும் அதிகளவில் பாதிக்கப்படும். இவ்வாறான நிலைமை தொடர்ந்து நீடித்தால் வயலில் உற்பத்தி குறைவடையும். ஏற்கெனவே உள்ளீட்டுப் பொருட்களின் விலையேற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயப் பெருமக்கள் அதிக வெப்பத்தால் விளைச்சலும் பாதிப்படையும் போது மனச்சோர்வடைகின்றனர்.
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காதுவிட்டால் அவர்களுக்கான ஆதாயம் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். வயலையே நம்பி வாழ்க்கை நடாத்தும் விவசாய பெருமக்களுக்கு அதிகரித்த வெப்பம் நட்டத்தையே ஏற்படுத்தும். ஆதலால் விளைவிக்கின்ற பொருட்களுக்கு தரமான சந்தைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டியது அவசியமானதாகும். அத்துடன் களஞ்சியவசதியும் அவசியம் ஏற்படுத்திக் கொடுத்தல் சிறப்பானதாகும். தமிழ்நாட்டு உழவர்சந்தையில் இவ்வாறான களஞ்சிய வசதிகளுடன் சந்தைக்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருப்பது இதற்காகத்தான். கோவிட்; 19இல் மீண்டும் களைகட்டிய 'ஊர்ச்சந்தைகளை' மையப்படுத்துதல் இனிவருங்கால இடர்களை சமாளிக்க உதவும்.
நீர்ப்பற்றாக்குறை
நீர் தேங்கியிருக்கின்ற இடங்களில் அதிகரித்த உஷ்ணத்தினால் நீர் விரைவாக வற்றத் தொடங்கியிருக்கின்றது. நிலத்தடி நீரும் எமக்கு சொச்சமாகத்தான் காணப்படுகின்றது. வரட்சியினால் அதிகளவு நீர் உறுஞ்சப்படும் போது விவசாயக் கிணறுகள் உவர்த்தன்மையடைய வாய்ப்புக்கள் அதிகமாகும். இது விடயத்தில் ஒரு கிணற்றிலிருந்து பல குழாய்களைப் பொருத்தி ஒரேநேரத்தில் நீரை உறுஞ்சுவதைத் தவிர்த்து சுழற்சி முறையில் நீர்பாய்ச்சுவதனால் கிணறு வற்றாமலும் உவராகாமலும் தவிர்த்துக்கொள்ளலாம். இதிலாவது ஒற்றுமை அவசியம் இன்றேல் எவருக்கும் பின்நாளில் அந்தக் கிணறு பயனாகாமல் போகலாம். எத்தனை தடவைதான் அறிவுறுத்தினாலும் ' எனக்கென்ன 'என்னும் சுயநலத்தால் காலக்கிரமத்தில் எவருக்குமில்லாமலும் போகலாம். அட அதனையும் வரவேற்க ஒரு கூட்டமிருக்கிறது என்றால் பாருங்களேன்.
நீர்ப்பற்றாக்குறை எழும் போது பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்பிருக்கின்றது. களனிகளில் நீர்தேங்கும் இடங்களில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்வதில் அவதானம் வேண்டும். இறக்கின்ற மீன்களை பிடித்து விற்பனை செய்வதாகவும் ஒரு செய்தி உலாவருகின்றது. நீர்வற்றி அழுக்கான இடங்களில் இறக்கின்ற மீன்களில் உருவாகும் இந்நோய்கள் மீன்களை விலைமலிவென்றும் அலட்சியப்படுத்தியும் உண்பதனால் மனிதனில் இலகுவாக பாதிப்பேற்பட வாய்ப்புக்களுண்டு. இது தவிர எலிக்காய்ச்சலும் பரவுவதாக சுகாதாரத் துறை அறிவித்திருக்கின்றது. நீர் வற்றலின் போது விலங்குகளில் உள்ள தொற்று நோய்கள் மனிதனுக்கேற்பட வாய்ப்புக்கள் அதிகம். மேலும் சிறுவிலங்குகள் என்றாலும் நீர் தேடி அலைந்து இறக்கின்ற மற்றும் அவற்றின் எச்சங்கள் மூலமாகவும் நோய்கள் பரவும் தன்மை அதிகம். பலசரக்கு கடைகளில் சாக்குகளிலுள்ள தானியங்கள் அப்படியே திறந்து விட்டபடி கடையை மூடிச்செல்வதனை நீங்கள் அவதானிக்கலாம். இரவில் எலிகள் அனைத்து தானியப் பைகளிலும் சிறுநீர் கழித்தும் மலங்கழித்தும் சென்றிருப்பதனை அவதானிக்கலாம். நீங்கள் வாங்கும் உணவுப்பொருட்களுடன் எலியின் மலக்கழிவு (பிளுக்கை) காய்ந்து கலந்திருப்பதனை காணலாம். அதனை பிடைக்கும் போது அகற்றிவிடுவது பலருக்குத் தெரியாது. இங்கே தான் இவை பற்றிய அறிவு அவசியமாகத் தேவைப்படுகின்றது. தவறின் அவற்றினாலேற்படும் நோய்களை தவிர்க்க முடியாது.
வெப்பநிலை அதிகரித்து நிலத்தடிநீர்; போதாமையால் பல்லாண்டு கால தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். உயிர்க்காப்பு நீர்ப்பாசனம் அவசியம் இம்மரங்களுக்கு வழங்கப்படல் வேண்டும். தவறின் இம்மரங்களை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் நாம் தள்ளப்படுவோம்.
காட்டுத்தீ
இயற்கையழிவின் ஓரு பக்கம் எரித்தழிக்கும் காட்டுத்தீயாகும். அதிகரித்த வெப்பநிலையால் உலகெங்கும் காட்டுத்தீ உருவாகி பரவி பல அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதனை செய்திகள் பல தெரிவித்தாலும் எமது நாட்டிலும் இவ்வாறான காட்டுத்தீ உருவாகியிருக்கின்றது. அமெரிக்காவில் மட்டும் இவ்வருடம் பலவிடங்களில் காட்டுத்தீ பரவியிருக்கின்றது. அரிசோனாவில், கலிபோனியாவில், கொலரடோவில், புளோரிடாவில், ஹவாயில், இடாகோவில், மொன்ரானாவில், நிவேடாவில், நியூமெக்சிக்கோவில், வடக்கு கரோலினாவில், ஒருஐpயோனில், மற்றும் வோசிங்டனில் என பலவிடங்களில் தீப்பிடித்து எரிந்திருக்கின்றது.
ஹவாய் தீவுகளிலுள்ள மாவேய் (ஆயரi) நகரத்தில் ஏற்பட்ட தீயில் ஏறக்குறைய 111 பேர்வரை இறந்தும் காணாமலும் போயிருக்கின்றனர். அந்த நகரத்தில் 150 ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்து கிளைகள் பரப்பி; விருட்சமாக இருந்த ஆலமரம் இத்தீயில் எரிந்து சாம்பராகியிருக்கின்ற காட்சியை காண முடியவில்லை. வீடுகள் கார்கள் மரங்கள் என கிடைத்ததெல்லாம் தீக்குள் சங்கமமாகிவிட்ட காட்சியை காண முடியவில்லை. நகரமே சுடுகாடாகியிருக்கின்றதையும் மக்கள் தீக்குள் அகப்படாமல் கடற்கரைநோக்கி ஓடி கடலுக்குள் குதித்து தப்பியதும் தீ பரவ வழியில்லாத கற்பாறைகளுக்குள்ளும் சமதரைகளுக்குள்ளும் ஓடி தப்பித்தனர். ஆனால் பலரது வீடுகள் வதிவிடங்கள் என அழிந்துவிட்டன.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயானது வேகமாக பரவியிருக்கின்றது. சேதங்கள் அதிகம் என கணிப்பிட்டிருக்கின்றார்கள். குறித்த மாகாணத்தில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பரவியிருக்கின்றது. அதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தியும் இருக்கின்றார்கள். இதற்கும் மேலாக கனடாவின் மேற்கு கெலோனா நகரத்தில் தீயானது பரவி வருவதனால் 2400 வீடுகளில் வசிக்கும் 36,000 பேர் குடியிருந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அதிலிருந்து எல்லோ-நைப் நகரத்தை நோக்கியும் த வேகமாக பரவியதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள்.
எமது நாட்டிலும் தீப்பரவல்கள் நடந்திருக்கின்றன. இன்னும் எதிர்பார்க்கலாம். வெப்பநிலை அதிகரிக்க இவ்வாறான நிகழ்வுகளை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வூட்டி அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இது சார்ந்து பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துதல் நல்லது
மருந்தும் உணவும் எமனாகலாம் இதுபற்றிய தெளிவு அவசியம் வேண்டும்.
The Medicine and Food may cause death: An awareness is essential on this
This article describes about the poisoning of the medicine and food. it is essential to have a clear understanding on both when we consume. There are valid evidences the wrong and low quality medicines caused casualties and even the spoiled /contaminated/incompatible food caused death. It is essential to create awareness among the public on these issues especially when taking antibiotics - which may develop Antibiotic Resistance (AMR)
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
அலட்சியத்தால் கவலையீனத்தால் நாம் உண்ணும் உணவும் உட்கொள்ளும் மருந்தும் எமதுயிரை காவுகொள்ளும் நிலை பற்றி அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். தற்போது ஆங்காங்கே நடந்தேறும் அனைவரும் தவிர்க்கக்கூடிய இவ்வாறான நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியே இது. அவசியம் இதனைப் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நண்பர்களுக்கு அயலவர்க்கு தெரியப்படுத்துங்கள். உங்களாலும் பலவுயிர்களைக் காப்பாற்ற முடியும்;.
எமது முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு [ Food is the Medicine aned Medicine is the Food] என கூறியதன் அடிப்படையில் நாம் உண்ணும் உணவானது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் விற்றமின்கள் மற்றும் மூலிகைத் தன்மை இவையனைத்தும் கொண்டுள்ளதால் மருந்தாகவும் தொழிற்படுகின்றது. அதேவேளையில் நாம் பயன்படுத்தும் மருந்தும் பாரம்பரிய மருத்துவத்தில் பலவேளைகளில் இயற்கையின் உணவாகவே இருக்கின்றது. மேலைத்தேய மருத்துவத்தில் நோயை குணமாக்கும் இந்த உணவும் மருந்தும் ஒன்றுக்கொன்று ஒத்தியைவதால் அவையிரண்டினாலுமான பயனை நாம் முழுமையாக அனுபவிக்க முடிகின்றது. சுகதேகிகளாக வாழவும் வழிகிடைக்கின்றது.
மாறாக இரசாயன தாக்கத்தில் ஈடுபடக்கூடிய மருந்துகள் ஒவ்வாத தன்மையுடையதாயிருந்து அவையிரண்டையும் ஒரேநேரத்தில் உள்ளெடுக்கும் போது ஒன்றுக்கொன்று முரணாக அமைவதால் உடல்நிலைமை பாரதூரமாகிவிடும். மேலும் உணவும் மருந்தும் ஒன்றையொன்று ஒவ்வாத தன்மைக்குள் அல்லது மாறாக தமக்குள்ளே இரசாயன தாக்கத்தில் ஈடுபட்டால்; எமது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் நிலைக்கு செல்லக்கூடிய நிலைமையும் உண்டு. இந்த வித்தியாசத்தை உணர்ந்து பயன்படுத்தும் மருந்துகளுக்கு சா.முன் மற்றும் சா.பின் என குறித்துத் தருகின்றார்கள். இதனது விளக்கம் சாப்பிடுவதற்கு முன் மற்றும் சாப்பிட்டதற்கு பின் எனவாகும். இதனை சிலேடையாக சாவதற்கு முன் மற்றும் சாவுக்கு பின் எனவும் விரிக்கலாம் என்றார் நம்மாழ்வார். மருத்துவரின் சரியான ஆலோசனையின்
மாயோ (Mayo) அல்லது மயோனெஸிஸ் எனப்படும் பதார்த்தம்; தடிப்பான, குளிர்மையான மற்றும் கிறீம் போன்றதொரு சோஸ் (Souce) ஆகும். இதில் 75 சதவீதம் கொழுப்புஇ 14 சதவீதம் கொலஸ்திரோல்; இன்னும் சோடியம் 635 மில்லிகிராம் இருக்கின்றன. அநேனகமான பெரிய வியாபாரக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனைப் பாவித்து சான்விட்ச்சுகள் (Sandwich);, ஹம்பேஐர்ஸ் (Humburs), சலாட்டு கூட்டு (Salad), பிரெஞ்சு வறுவல்கள் (French Fry), பீட்சா (Pizza மற்றும் பர்கர்கள் (Burger) தயாரிக்கப்படுகின்றன. ஓரளவிற்கு வசதி படைத்தவர்களின் உணவாக இவை இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இத்தகைய உணவுகளை விரும்பியுண்ணுவதனையும் அதனை வெளிநாட்டு தகுதிக்குரிய உணவாகவும் அடையாளப்படுத்தி இங்குள்ள மக்களுக்கும் இவ்வுணவுகளை பழக்கிவிட்டு செல்கின்றனர்.
பிரித்தானியாவின் பட்ஜெட் பல்பொருள் அங்காடி கடைகளுக்கு, Pழவவள Pயசவநெசளாip டுவன என்னும் நிறுவனம் விநியோகிக்கும் மயோனேஸில் இல் கிருமிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அதை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது. Pழவவள' வுசரககடந ஆயலழnயெளைந என்னும், 230 கிராம் அளவுள்ள மயோனெஸிஸ் பாக்கெட்களே திரும்பப் பெறப்படுகின்றன. 2024, ஜூலை டிநளவ டிநகழசந திகதியும், 18823 என்னும் டியவஉh உழனந கொண்ட மயோனெஸிஸ் தான் பாதிக்கப்பட்டுள்ளது.
உண்ண உண்ண இன்னும் உண்ணத் தூண்டும் உணவுகளாக இவை இருப்பதற்கு அஐpநொமோட்டோ ஜயுதi-ழெ-அழவழஸ வைப் போல இந்த மாயோநெய்ஸ்சை உணவில் கலக்கின்றார்கள். அஐநொமோட்டோ என்பது வேதியியலில் ஆளுபு எனப்படும் ஆழழெளழனரைஅ புடரவயஅயவந ஆகும். மிச்சர்கள் தயாரிப்பதற்கு அநேகமானவர்கள் அஐpநொமோட்டைவைப் பயன்படுத்துவது வழக்கம். ஏனெனில் அது ஒருதரம் நாக்கில் சுவைக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவைநரம்புகளை நாக்கில் தட்டி உசுப்பிவிடும். இருந்த இருக்கையிலேயே ஒரு கிலோ மிக்சர் பக்கற்றை கிரிக்கட் மற்றும் கால்பந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டு உள்ளிறக்கும் கனவான்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். எது எப்படியாயினும் அளவாக இவற்றை அருந்தினால் பிரச்சனை குறைவு. ஆனால் அளவுக்கதிகமானால் அமிர்தமும் நஞசுதானே.
இவ்வுணவுப்பொருட்கள் சுகதேகிகளுக்கு எந்த பிரச்சனையையும் உருவாக்குவதில்லை என்னும் பொதுவான கருத்து எம்மவர்களுக்கு எவ்வகையிலும் பொருந்துவதில்லை. ஏதோவொரு பிரச்சனையுடன் காலந்தள்ளும் அளவுக்கு எமது உடலின்;; ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. சரியான தேவையான நித்திரையின்றி முழுமையான ஊட்டச்சத்தான உணவின்றி நீர் அதிகம் அருந்தாது, அவசர உணவுகளுக்குள் (குயளவ கழழன) எமது வாழ்க்கையைத் திணிக்கப்பழகிய பின்பு அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாகவே இருப்பதாக பலர் முனகுவதும் காதுகளில் ஒலிக்கின்றது. அப்படிப்பட்ட சூழலில் இவ்வகையான எமக்கும் எமது சுவாத்தியத்திற்கும் ஒத்துவராத உணவு வகைகளைத் தவிர்த்து எமது பாரம்பரிய உணவுகளை; உண்டால் அதிகம் தீங்கு வராமல் எமது உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
உணவு தான் இப்படியென்றால் மருந்து வகைகளிலும் தற்போது பிரச்சனை உருவாகியிருக்கின்றது. ஒன்று நோய்கிருமிகளுக்கெதிராக நாம் உட்கொள்ளும் அன்ரிபயோடிக்ஸ் போன்றன தேவையற்ற விதத்தில் சரியான மருத்துவ ஆலோசனையின்றி உட்கொண்டுவிட்டு பின்னர் அவற்றினால் பயனேதுமின்றிப் போகும் போது மருத்துவரை நாடுவதில் எதுவித பயனுமில்லை. நாமாகவே எமதுடலில் நோயெதிர்ப்பு சக்தியிழப்புக்கு காரணமாயிருக்கின்றோம் என்பதனை எவரும் கவனிப்பதில்லை. மேலும் சரியான அறிவின்றி தகுதியின்றி பலர் மருந்துகளை சிபார்சு செய்வதனையும் பலவிடங்களில் சுட்டிக்காட்டப் படுகின்றது. நோயொன்றுக்கு மாத்திரை அல்லது குளிகை வேலைசெய்யத் தொடங்கியவுடன் அவரே உடனடி வைத்தியராக பலருக்கு அறிவுரை கொடுக்க தொடங்கிவிடுவார். உடலைப் பரீட்சித்து உள்ள பிரச்சனையை அறியாமல் தேவையற்ற விதத்தில் மருந்துகளை உட்கொள்வது பிரச்சனையை மேலும் அதிகரித்து விடும். வருமுன் காப்பதும் வந்தபின் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதனை குணப்படுத்த முயல்வதுமே சிறந்தது எனக்கொள்க.
இப்போது வலிமை குறைந்த சரியாக பரீட்சிக்கப்படாத அதே வர்த்தக நாமத்தில் வேறு பல மருந்துகள் (நாமத்தில் யாரும் அதிகம் கவனிக்காத மாதிரி சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி) சந்தையில் புழக்கத்தில் வந்திருக்கின்றன என்னும் செய்தி ஒருகணம் நெஞ்சை உலுக்கவைக்கின்றது. நோயாளியொருவர் மருத்துவ நிலையங்களில் உள்ள மருந்துகளை நம்பிக்கையுடனேயே வாங்கி பயன்படுத்தும் நிலையில் போலி மருந்துகளும் விற்பனைக்கு வருகின்றன என்னும் செய்தியை நம்பமுடியவில்லை. சுகாதாரத் திணைக்களமே 300க்கும் மேற்பட்ட மருந்துகளை தடைசெய்திருக்கின்றது அல்லது சந்தையில் கிடைக்காது செய்திருக்கி;ன்றது. இவை எங்கிருந்து வருகின்றன. அவ்வாறு பரீட்சித்துப் பார்க்காமல் எமது சந்தையில் எவ்வாறு விற்பனைக்கு வருகின்றன என்பது எமது சுகாதார கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நிலையாகும். அதிலும் இங்கு வந்த பொருட்கள் விற்பனையாகாது தேங்கினால் வேறு வழிகளில் விற்பனையாகிவிடும். பயன்படுத்தும் காலந்தவிர்ந்த பல உணவுப் பொருட்கள் மருந்துகள் எம்மையறியாமலேயே அவற்றின் லேபல்களை மாற்றி மறைத்து விற்பனையாவதனை கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம். அவ்வாறு விற்கப்படும் மருந்துகளின் சக்தி வெகுவாக குறைந்திருப்பதோடு அதன் பக்க விளைவுகளும் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை.
கண்ணுக்கு விடும் சொட்டு மருந்திலிருந்து பலருக்கு ஒவ்வாமை தன்மை உருவாகியிருந்ததும் அதனால் பலர் வெளிநாடுகளில் நோய்வாய்ப்பட்டதாகவும்; செய்திகள் கூறுகின்றன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒருவகை கண்மருந்து அல்லது கண் சொட்டு மருந்தில் காணப்பட்ட மருந்துகளுக்கு எதிர்ப்புடைய ஒருவகை பக்ரீறியாவான சூடோமோனசு ஒறுஐpனோசா (Pளநரனழஅழயௌ யரசபைiழெளய) வினால் அதனைப் பயன்படுத்தியவர்களுக்கு பார்வையிழப்பு ஏற்படவும் கண்ணை முழுமையாக அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றவும் செய்திருக்கின்றது. இது விடயத்தில் நாம் மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகின்றது. கண் மருத்துவரின் சிபார்சின்றி எந்த மருந்துகளையும் வர்த்தக நாமங்களையும் வேறு யாரினதும் சிபார்சுகளை கேட்டு பயன்படுத்த வேண்டாம். அங்கே நிகழ்ந்ததைப் போன்று நம்மவர்களும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டாமே.
தேவையின்றி அவசியமின்றி ஒரு வேளைக்கான உணவை திணிக்க வேண்டாமே, அதேபோல மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாமே. தொடர்ந்து காய்ச்சல் காயுது என பனடோலை அவ்வப்போதும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்தி இறுதியில் உயிரை மாய்த்த சோகக்கதையையும் இத்தேசம் பதிவு செய்திருக்கின்றது. அவதானமாக இருத்தலும் தேவையான உணவை உண்பதும் மருத்துவத்தை சரியான வழியில் அணுகுவதும் பிரச்சனைகளை குறைக்க வழிசெய்யும்.
இலங்கையிலுள்ள மருத்துவக் கட்டமைப்பு சிறப்பானது. இருக்கின்ற வசதிவாய்ப்புக்களைக் கொண்டு சிறந்த மருத்துவம் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. அதனால் சுகாதாரத் துறையில் நம்பிக்கை வைத்து அவர்களின் சிபார்சின் பிரகாரம் எமக்கு வரும் நோய்களை குணப்படுத்த அனைவரும் முயற்சிப்போம்.
குடும்பவறுமையைப் போக்கும் வள்ளி(கிழங்கு)களும் பூசணி (குடும்ப) பயிர்களும்
Rhizomes/tubers and Curcurbitacease crops will resolve household hunger
This article describes about the role and potential of Valli [T]- tubers and rhizomes and pumpkin family crops, which can be used to fight against family poverty. These crops can be easily grown as well as they have diversity in their morphology, growth, nutrition and taste. These crops can be grown in the home gardens with less care and input .
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
ஊனின்றி அனுதினம் உணவின்றி உயிர்கள் அல்லாடும் நிலைமைக்குள் நம்நாடு வந்திருப்பது யாரும் எதிர்பார்த்திராத காலத்தின் கோலமாகும். சரியாக திட்டமிட்டு மக்களின் எதிர்காலத்தை மையப்படுத்தியிருதால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்பதனை திரும்ப திரும்ப உரைத்து என்ன பலன். இத்தேசத்தில் வறுமையின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாகும் குடும்பங்கள் கணக்கிலடங்காதவை. அவர்களின் ஆகக் குறைந்தது ஒருநாளுக்கான குடும்ப செலவுக்கான பணம் அன்றாடம் செய்யும் தொழில் மூலம் கிடைக்காது குழந்தைகளையும் வயதானவர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் கொண்டுள்ள குடும்பங்கள்அவதிப்படுகின்ற நிலைமை பாரீர். சுயஉற்பத்தி குடும்ப பொருளாதாரத்திற்குள் ஜளுநடக-கயசஅiபெ கயஅடைல நஉழழெஅலஸ இவ்வாறான வறுமையில் வாடும் மக்களை உள்ளீர்ப்பதற்கான திட்டங்கள் பலவுண்டு. அவற்றுள்; முதன்மையான குடும்ப விவசாயம் (Family Farming) என்னும் ஒரு தசாப்தத்திற்கான விழிப்புணர்வு ஏற்கெனவே நடைமுறையிலிருந்தாலும் இன்னும் அதனுள் பல குடும்பங்கள் இணைக்கப்படவில்லை.
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஐகத்தினையே அழித்திடுவோம்..... என அன்றே அறைகூவிய பாரதிக்;கும் இங்கே தனியொருவனுக்கு உணவில்லையென்றாலும் மின்சாரத்தை உருவாக்கிடுவோம் ... என்னும் சிந்தனை உள்ளவர்களுக்கும் எத்துணை வேறுபாடு. நீர்வளத்தை தவிர்த்து மீள்சுழற்சி சக்தி (சுநநெறயடிடந நநெசபல) மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வழிகள் பலவிருந்தும் ஆங்காங்கே சூரியசக்தியினாலும் காற்றாலைகளினாலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை நிறுவினாலும் அணுஉலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரம் இருந்தும் இந்நாடும் இம்மனிதர்களும் ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் உணவுற்பத்தியில் ஈடுபடும் உழவர்பெருமக்களின் வயிற்றிலடிக்க முயல்வதைத்தவிர எதை உருப்படியாக செய்துவிட்டார்கள். நம்விவசாயிகளை வயற்காட்டில் தானுண்டு தன்வேலையுண்டு என வேலைசெய்ய விடுவதற்குப் பதிலாக கொடிபிடித்து கொந்தளித்து வீதியிலிறக்கி நியாயம் கேட்க வைத்ததன் நோக்கம் என்ன?கோவிட் 19 காலப்பகுதியில் ஒவ்வொருவரின் வீடுதேடி உணவு வந்திராவிடில் அனைவருக்கும் தற்போதய விபரீதமான முடிவுகளும் தமது சமூகம் சார்ந்திராத நிலைமையும் ஓரளவாவது புரிந்திருக்கும். இப்படியே கற்றுக்கொண்ட பாடங்களை அவ்வப்போது மறந்து போவதால் அதற்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.
குடும்பதலைவரின் வருமானத்தின் மூலம் அன்றாடம் அவரவர் குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் அங்கலாய்க்கும் நிலையில் தற்போது பலகுடும்பங்கள் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைவரும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றார்கள் என்னும் கசப்பான உண்மையை அனைவரும் உணரவேண்டும். இதுவே பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் ஜறுழஅநn-hநயனநன கயஅடைநைளஸ என்றால் இன்னும் பலமடங்குகளாக பிரச்சனை உருவெடுத்துள்ளது. ஒரு குடும்பத்திற்கான ஒருநாளுக்கான உணவு முழுமையாக கிடைக்காமல் பிள்ளைகள் கர்ப்பிணிப்பெண்கள் உள்ளடங்கலாக பட்டினியுடன் நாட்களைக் கழிக்கும் நிலை தோன்றத் தொடங்கிவிட்டது. ஊட்டச்சத்து குறைபாடு ஜஆயடரெவசவைழைஸெ இன்னும் அதிகரிக்கும் நிலை தோன்ற வாய்ப்புண்டு. இது நிச்சயமாக தேகாரோக்கியமான சமூகத்தை நாம் எதிர்பார்க்கும் எதிர்கால சந்ததியை உருவாக்க வாய்ப்பளிக்காது.
பூசணி குடும்ப பயிர்களில் கரடினொயிட்டுக்கள், ரேர்பினோயிட்டுக்கள், சப்போனின்கள், மற்றும் தாவர வேதியியல் பொருட்கள் அதிகளவில் உண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கான உணவினை குறிப்பாக காபோவைதரேற்று (75-97% வரை), தேவையான புரதம் (0.23-0.5%) மற்றும் நார்ச்சத்து என ஓரளவுக்கு அனைத்தையும் கிடைக்கச் செய்வதற்கான பூசணி குடும்பத்து பயிர்களை ஏனைய பயிர்களுடன் நாட்டி அவற்றிலிருந்து வயிற்றுப் பசியை போக்குவதற்கு வழிசெய்யலாம். பூசணி குடும்ப பயிர்களையும் கிழங்கு பயிர்களையும் வளர்ப்பதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை. எமது வரண்ட தேசத்திற்கான பயிர்களாக இவை இருப்பதனால் குறைந்த கவனிப்போடு தேவையான காய்கறிகளை உணவைப் பெறமுடியும். மக்களை அவரவர் வீடுகளில் இருக்கின்ற இடவசதி மற்றும் நீர்வசதியைப் பொறுத்து இலகுவில் அதிகளவில் உள்ளீடுகள் தேவைப்படாத கிழங்குப் பயிர்கள் மற்றும் பூசணிக் குடும்பப் பயிர்களை பயிர்செய்ய உதவலாம்.
வள்ளிக் கிழங்குப் பயிர்களில் மரவள்ளி, மோதகவள்ளி, இராசவள்ளி, சக்கரைவள்ளி அல்லது சீனிவள்ளி, இவற்றுடன் கரணை, சட்டிக்கரணை, உருளைக்கிழங்கு, போன்றன எமக்காக இருக்கின்றன. நாம் அன்றாடம் ஒரு குறிப்பிட்ட பயிர்களைத்தான் உண்டு பழகியதால் ஏனையவற்றை உண்பதற்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்னும் காரணத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிடைக்கின்ற ஊட்டச்சத்தான உணவினை சுத்தமானதாக உண்ணப்பழக்கிக் கொள்ளல் வேண்டும். தயாரிப்பு முறைகளை மாற்றி அவற்றையே சுவையான உணவாக உற்பத்தி செய்யலாம். மக்களின் மனமாற்றம் இவ்விடயத்தில் அவசியம் கவனிக்கப்படல் வேண்டும். தேவை வரும் போது மனமாற்றமும்
பூசணிக் குடும்பத்தை (Cucurbitaceae) ஆங்கிலத்தில் gourd குடும்பம் எனவும் கூறுவார்கள். இவையாவும் இயற்கை எனும் கடவுள் தந்த ஒரு குடும்பத்துப் பயிர்கள்; எனவும் கருதலாம். இக்குடும்ப பயிர்களில் பூசணி (Pumpkin), டுபாய் பூசணி (Dubai pumpkin), தார்ப்பூசணி, நீத்துப் பூசணி(Ash gourd), புடோல் (ளுயெமந பழரசன) , பாகல் (டீவைவநச பழரசன);, கெக்கரி (ஊரஉரஅடிநச), வெள்ளரி (றூவைந பழரசன), பீர்க்கு (சுனைபநஃளுpழபெந பழரசன), வத்தகை (pழiவெநன பழரசன) , சுரைக்காய்(டீழவவடந பழரசன) இவற்றைவிட ஆங்கிலத்தில் பலவகையுண்டு. தமிழ்ப்பெயர்கள்;; பயன்பாட்டிலில்லாத யுppடந பழரசனஇ ளுpiநெ புழரசனஇ ஐஎல பழரசனஇ டீயடில பழரசனஇ ர்யசைல பழரசன மற்றும் டீரளாநட பழரசன இன்னும் இன்னோரன்ன பூசணி குடும்ப பயிர்வகைகள் வித்தியாசமான சுவைகளுடன் ஊட்டச்சத்துக்களுடன் எமக்கான உணவுக்காக உண்டு.
அதிகளவில் எமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை செலவு குறைவாகவும் இலகுவில் சமிபாடடையக் கூடியவாறு இத்தகைய பயிர்கள் கொண்டிருப்பது இயற்கையன்னை எமக்கு தந்த கொடையாகும். இவற்றைத் தவிர்த்து நாம் செயற்கையாக உருவாக்கப்பட்ட விரைவுணவுகளில்; அதிக அக்கறை காட்டி உண்டு எமக்கான தேகாரோக்கியத்தையும் இழந்து விடுகின்றோம். பர்கர் பீட்சா என்பன எம்மவர்கள் அதிகம் நாட்டங்கொண்டதால் அதைவிட வெளிநாடுகளிலிருந்து வந்து போன சொந்தங்கள் பழக்கிவிட்டுப் போனதால் அதனையும் அதிக விலை கொடுத்து வாங்கியுண்டு நோயாளிகளாக்கி விட்டுள்ளனர்.
பிள்ளைகளுக்கு உணவூட்டும் அம்மாக்களுக்கு தயவான வேண்டுகோள். விதைக்காக கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கை விற்பனைசெய்கின்றவர்களிடம் அதனை வாங்கி அவித்து மசித்து உங்கள் மழலைகளுக்கு உணவாக கொடுக்காதீர்கள். அதிகளவில் பங்கசுநாசினி மற்றும் பூச்சி நாசினிகளால் தோய்த்து எடுக்கப்பட்ட இவை விதைக்காக மட்டுமேயன்றி உணவுக்காக பயன்படுத்தக் கூடாது. ஏனைய தொற்று ஏற்படும் நுண்ணங்கிகளிலிருந்து பாதுகாக்க இம்மாதிரியான விதை உருளைக்கிழங்கில் அதிகளவு அசேதன இரசாயனப் பதார்த்தங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இவற்றை உண்ணும் பிள்ளைகளுக்கு அஐPரணக் கோளாறுகள் ஏற்படுவதுடன் வேறு பல நோய்களும் உருவாக வாய்ப்புக்களை நீங்களாகவே ஏற்படுத்திவிடாதீர்கள்.
இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விவசாயிகளின்பால் கரிசனை கொண்டவர்களும் அவர்களுக்கான உள்ளீடுகளை பெறுவதற்கும் குறிப்பாக மேற்குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்வதற்கான விதைகள் மற்றும் தண்டுத் துண்டங்களை பெறுவதற்கோ அல்லது பெற்று அவர்களுக்கு வழங்குவதற்கோ உதவலாம். உற்பத்தி செய்தவற்றில் மேலதிகமானவற்றை உள்ளூர் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி விற்பனை செய்வதற்கும் வழிசெய்யலாம். விவசாய நிறுவனங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் இது விடயத்தில் தனியான மற்றும் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தற்காலிகமான செயற்பாடாக இத்திட்டங்கள் அமைவதும் பின்னர் அதனை கவனியாது முறையாக கணக்கெடுக்காது விடுவதும் இவ்வாறான திட்டங்களின் செயல்படுத்தல்களில் இதுகாலும் நாம் அவதானித்த பலவீனங்களாகும்.
பலஇடங்களில் சந்தைப்படுத்தல் சிறியளவிலாயினும் பெரியளவாயினும் செய்வதற்கு பொறிமுறைகள் இருந்தும் அவை இப்போது மீண்டும் நடைமுறையிலில்லை. கோவிட் 19 காலப்பகுதியில் கிராமம் கிராமமாக குறிப்பிட்ட பாதைக்கென சந்தைப்படுத்தல் அலகுகளும் இன்னும் சீமெந்தினால் கட்டப்பட்ட சந்தைகளின் கதவுகள் மூடப்பட்ட போது மூலைக்கொரு கோவில்களின் வீதிகளில் அனைத்து விவசாயப் பொருட்களும் விற்கப்பட்டதனை நாம் அவ்வளவு இலகுவில் மறந்து விட முடியாது. அந்நேரம் இருந்த இடர்காலத்துக்காக தேவைகருதி உருவான இவ்வாறான உள்ளூர் சந்தைக் கட்டமைப்பே மேலும் விஸ்தீரணம் செய்ய வழிசெய்யலாம். குடும்பங்களில் மேலதிகமாக உற்பத்தியாகும் காய்கறிகளை, கனிகளை விற்பனை செய்வதற்கான எளிய பொறிமுறைகளை உருவாக்கினால் அந்த குடும்பங்களுக்கு வருமானமும் வந்து சேரும். இவையாவும் செயலளவில் நடைமுறைப்படுத்துவது யார்? எப்படி? என்னும் வினாக்களை அந்தந்த கிராம சமூகங்களுக்கே விட்டுவிடுவோம். தமக்கான வசதிவாய்ப்பை பொறிமுறையை கோவிட் கற்றுத்தந்த பாடங்களை அடிப்படையாக வைத்து அவர்கள் கண்டறிந்து செயற்படுத்துவார்கள் என்னும் நம்பிக்கை உண்டு.
ஆரோக்கிய மூப்பின் தசாப்தமும் நோயெதிர்ப்புத்தன்மையும்
The Decade of healthy adults and Disease Resistance
This article captioned " Decade of healthy aging and Disease Resistance" , and describes about the celebration of healthy aging from 2020 -2030. Further immunity of a body rests with aging and when aging takes place the immunity declines. It has been proved that from the age of 20 the body immunity started declining. Hence both have to be taken care to extend the life span of elders.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இப்போதிருக்கும் காலம் இன்னல்கள் பல சூழ்ந்துள்ள இடர்காலமெனினும் அவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக புதிய வகை நோய்கள், மாறாத அறிகுறிகள், இருந்தும் அவற்றைப் பொருட்படுத்துவதா இல்லையா என்னும் அங்கலாய்ப்பு என பலவாறாக எம்மவர்கள் உளநெருக்கீட்டுக்கு ஆளாயிருக்கின்றார்கள். ஒரு புறம் கோவிட் போன்ற பரம்பலடைந்து பலவுயிர்களை காவிய தொற்று நோய் இப்பவும் இன்னமும் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளில் பலருக்கு தொற்றாகி பலருயிர்களை காவுகொண்டுவரும் செய்திகள் இன்னமும் பயப்பீதியை எம்முள் ஏற்படுத்தி வருகின்றது.
கோவிட் போன்ற வேறு பல வைரசுகள் பரவலடையும் சாத்தியக்கூறுகளையும் நாம்; தள்ளிவைத்துவிட முடியாது. அவ்வப்போது இன்னது எனத் தெரியாமலேயே பரவி ஆட்கொண்டு அவற்றினை கண்டுபிடிக்கும் முன்னரேயே உயிர்களைக் காவுகொள்கின்றது. வெறும் காய்ச்சல் தானே என தாமே தமக்கு வைத்தியம் செய்து பனடோலை திணித்து காலம் செல்ல செல்ல அது வேலைசெய்யவில்லை என்றவுடன் வைத்தியரை நாடும் நிலைக்குள் நம்முள் பலர் நோயாளிகளாக இப்பவும் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் தங்களது கவலையீனத்தால் நோய் முற்றி இறந்துவிடுவதும் தற்கால செய்திகளாகும். வருமுன் காப்பதும் வந்தபின் அதற்கு தகுந்த சிகிச்சை பெறுவதும் அவசியம் என்பதனை எவ்வளவு முறைதான் எடுத்துக்கூற முடியும். அஐhக்கிரதையாக இருப்பதும் தான்தோன்றித்தனமாக செயற்படுவதும் இறுதியில் உயிர்காவும் நிலைக்குள் எம்மைத் தள்ளிவிடும் என்பதனை இன்னுமாவது நாம் அறிந்திராவிடில் இறைவனால் கூட எம்மைக் காப்பாற்ற முடியாது.
ஐக்கிய நாடுகள் தாபனம் 2021 இலிருந்து 2030 வரையான பத்தாண்டு காலத்தை ஆரோக்கிய மூப்புக்கான தசாப்தம் (னுநஉயனந ழக ர்நயடவால யுபiபெ) என பரிந்துரைத்து அதனை கொண்டாடுவதற்கான பல செயற்றிட்டங்களை தீட்டி மக்களை விழிப்படைய வைத்திருக்கின்றது. மூத்தோர் அனைவருக்கும் இத்தசாப்பத்தில் ஆரோக்கியமான வாழ்வு கிடைத்து அவர்கள் இப்பூமியிலிருந்தும் இப்பிறப்பிலிருந்தும் விடைபெறும் வரை சுகமாக வாழ்வதற்கான வழிகளை செய்யவேண்டியது அவர்கள் சார்ந்த அனைவருக்குமான பொறுப்பாகும். இருபது வயதிலிருந்து எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி வயதாக வயதாக மெல்ல மெல்லக் குறைவடையத் தொடங்கும் என மருத்துவம் கூறுகின்றது. ஐம்பதுகளைத் தாண்டும் போது இன்னும் இழப்பு அதிகமாகத் தொடங்கும். இவ்வயதில் நாம் ஏனைய முறைகளின் மூலம் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முற்படல் வேண்டும். தவறின் இது அது எனத் தெரியாமல் எதிலும் தொற்றி இறுதியாக எம்உடலிலும் தொற்றுதலாகும் தொற்று நோக்களிலிருந்து எம்மை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
உணவு உற்பத்தி செய்பவன் தினமும் வருந்தியுழைத்து அறுவடை செய்ய நிர்ப்;பந்திக்கப்பட்டிருக்கிறான். இருப்பினும் விஞ்ஞான தொழினுட்பம் அவனது உழைப்பை இலகுவாக்கினாலும் உடலுழைப்பை நெகிழவிட்டுவிடும். சுகதேகியாக முதுமையிலும் வயல்முனைகொத்தி, ஏர்கொண்டுழுது, விதைவிதைத்து அறுவடைசெய்யும் அவனுக்கு இணை அவனேதான். அவருள் இருக்கும் நல்ல ஆன்மா அவர்களை சுகதேகிகளாக இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.; கோவிட் வைரசு பரவியகாலங்களில் விவசாயி தன்தொழிலை செய்து கொண்டேயிருந்ததால் தான் அனைவரும் தனித்தனியாக அவரவர் மனைகளில்; ஒதுங்கியிருக்க உணவு வந்து வாசலில் நின்றது. பணமுள்ளவருக்கு பிரச்சனை எழவில்லை ஆனால் அன்றாடம் பிழைப்பவர்களுக்கு எவ்வகையிலும் எதுவும் உதவவில்லை. பட்டினியுடன் தான் நாட்களை எண்ணினார்கள்.
மூப்பு வரும்வரை ஓடியோடி உழைத்த உயிர்களை, வாழ வைத்த தெய்வங்களை, செய்த தியாகங்களை, அவர்பட்ட இடர்களை நொடிப்பொடியில் மறந்துபோகும் மக்காளுக்கு மத்தியில் இன்னமும் அவர்களுக்கான பணிவிடைகளையும், உணர்வால் அவர்களது அன்பிற்கு கட்டுப்பட்டும், அவர்தம் தேவையுணர்ந்து, தம்சுகம் தொலைத்து, பசிக்க மறந்து அர்ப்பணித்திருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் தலைசாய்க்க வேண்டியது எம் கடமையாகும். பத்தாண்டுகள் என்ன பலநூறு ஆண்டுகளுக்கு இப்பூவுடலை நீத்த ஆன்மாக்கள் வாழ்த்தி ஆசிவழங்கி வணங்கிநிற்கும். இருக்கும் போது செய்யாது இல்லாதபோது தம்இருப்பைக் காட்டும் ஈரமற்றவர்;களுக்கு மத்தியில் அவ்வப்போது அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களை ஆசுவாசப்படுத்தி அன்புடன் நெருடும் ஒவ்வொரு நொடியும் மூத்தவர்களுக்கு செய்யும் பணிவிடையாகும். இறைவனுக்கு செய்யும் நேர்த்திக் காணிக்கையாகும். மூத்தோரின் புன்னகையில் இதயம் கனக்கும், ஈரேழுலகமும் இன்புறும்;.
இவ்வகையில் எழுதும் இக்கைகள் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களையும் சிவபூமி அறக்கட்டளையையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்பின. திருப்பணிகளை அவர் தமக்குரிய ஆளுமையுடன் திட்டமிட்டு ஒப்பாற்றும் திறனும் புலம்பெயர்ந்த பரோபகாரிகள் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் அவர் செய்துமுடித்த இறைபணிகளும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அறுபது தாண்டிய இளையவராக, பிட்டுக்கு மண்சுமந்தவர் தழும்பை தாமும் சுமந்து, இளையவர் சமூகத்துக்கு வழிகாட்டியாக, தாய்க்குலத்திற்கு தாய்தந்தையாக, மூத்தவர் பலருக்கு பிள்ளையாக அவர்களுக்கு இறுதியில் கொள்ளியும் வைத்து அந்த ஆன்மாக்களை வழியனுப்பிவைக்கும் செல்வனாக பரிணமித்திருக்கும் பெரியவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் கொடுத்து கௌரவித்திருந்தாலும் அதற்கும் மேலாக அவரை கௌரவித்து மேன்மையுற வைத்தல் இப்பல்கலைக்கழக அன்னைக்கு இன்னும் பெருமை சேர்க்கும்.
மூத்தவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அன்னவர் செய்து அவர்களுக்கான காப்பகத்தில் வாழும் தெய்வங்கள்; உலாவரும் காட்சியை சென்று காணுங்கள். மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து அவர்களின் பெருமை பேசும் திறன்களை விருத்திசெய்யும் ஆலயத்திற்கும் சென்று பாருங்கள். இந்த தரிசனம் எங்கு சென்றாலும் கிடைக்காது. மூத்தோருடன்; ஒருநிமிடம் ஆறஅமர இருந்து அன்பாக பேசுங்கள். பெத்தது மறந்தாலும் மற்றையவர் தங்களைத் தாங்குவர் என்னும் மனத்துணிவை அவர்களுக்கு கொடுங்கள். மனத்துணிவு நோயெதிர்ப்பு சக்தியை மெருகூட்டும். தற்துணிவு உயர்வான மனநிலையை, சிந்தனையை, நல்லெண்ணங்களை உருவாக்கும். நோய்க்கு மருந்து மட்டும் தீனியல்ல. மனமும் அதன் நிலையும் மிகவும் முக்கியமானது. நல்லுணர்வால் உயிர்பெற்றவர்கள் பலர். எது இருந்தும் மனம் மங்கலானால் அவர் நோயாளியே. இப்படிப் பலருடன் நாம் தினமும் உலாவருகின்றோம். சற்று நிதானமாக உங்களைச் சுற்றியுள்ள சொந்தங்களையும் நண்பர்களையும் அவதானியுங்கள். ஒவ்வொருவரினதும் மனநிலையை நடைமுறையை கவனியுங்கள். மேற்கூறியதை நீங்களும் நிச்சயமாக ஏற்றுக்கொள்வீர்கள்.
நோயெதிர்ப்பு சக்தி உடலில் பெருகுவதற்கு சத்தான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மிகவும் முக்கியமானது. இதற்காக அதிகவிலைகொடுத்து சத்துமா ரின்களை வாங்குவதை விட எம்தேசத்திலிருக்கும் இலை, செடிகொடி, மரக்கறி, கிழங்கு, காய் கனிகள் அனைத்திலும் அனைத்தும் கிடைக்கும். இவற்றுடன் முட்டை, பால், மீன், இறைச்சி இவற்றிலும் கிடைக்கும். இதனுடன் அனுதினமும் சிறியளவில் உடற்பயிற்சியும் அவசியமானது.
முதுமையில் உடலொடுங்கி உணர்வடங்கி போகும் நிலைவரும் போது அருகிருந்து அவர்களுக்கு தெம்பு கொடுங்கள். நரம்புதளர்ந்து பக்கவாதம் வந்து படுக்கையில் தளர்ந்தாலும்; மனம் தைரியமானால் மீண்டும் எழுந்து நடப்பர். என் அனுபவத்தில் என் தந்தையில் கண்டது இது. உடலை நோய்களுக்கு எதிர்ப்புடையதாக வைத்திருக்கும் கைங்கரியத்தை கவனிப்பீர். மூத்தோரை கனம்பண்ணி அவர்தம் ஆசி பெற்று அவர்கள் சுகதேகியாக வாழ நாமும் எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்திடுவோம்.
This articles describes about many people are not easting day meal. On an average, one person should consume the required calories in a day. The poor income, escalation of food commodity prices threatens lives of poor and allows to consume only once.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இன்றைய இக்கட்டுரையின் முக்கிய செய்தி ஆரோக்கியமானதாக இல்லை. தினமும் சராசரியாக உண்ணவேண்டிய உணவினை உண்ணாமலேயே உலகத்தில் மக்கள் பட்டினியில் வாழுகின்ற நிலைமையினை அவதானித்து கணித்து உலக உணவு ஸ்தாபனம் அறிவித்திருக்கின்றது. இது எமது நாட்டிற்கு முழுமையாக பொருந்தும். எமது நாட்டில் தவறான அணுகுமுறைகளால் உருவாக்கப்பட்ட பொருளாதார பேரழிவிற்குள் சிக்கி அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் எகிறி கட்டுக்கடங்காத நிலைமைக்கு சென்றதன் காரணமாக ஒருவர் அன்றாடம் உண்ண வேண்டிய உணவினை உண்ணாது குறைந்த ஊட்டச்சத்துடையவராக (ஆயடரெவசவைழைn) பல்வேறுபட்ட சுகாதார பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையான துன்பியல் நிகழ்வுகள் வறுமையின் பிடியில் சிக்கி அல்லல்படும் மக்களை மேலும் வதைக்கும் செயலாகும்.
சாதாரண குடும்பங்களின் பொருளாதரத்திலும் இது அதீத தாக்கத்தை செலுத்துவதால் மக்கள் உடல் நலிவுற்று இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்து விடுகின்றனர். இதன் காரணமாக தொற்று நோய்கள் இலகுவில் இவர்களை விரைந்து பாதிக்கச் செய்கின்றது. இது உணவுப் பாதுகாப்பு (Food security) மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (Nutritional Security) என்னும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் எதிர்பார்ப்பிற்கு வந்த புதிதான சவாலாக அறியப்;படுகின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த வருடம் 691-783 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலை தொடருமாயின் 2030 ம் ஆண்டளவில் 600 மில்லியன் மக்கள் பட்டினியால் துவண்டு துன்புறும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவர்.
சாதாரணமாகவே நாளொன்றுக்கு ஆண் ஒருவருக்கு 2500 கலோரிகளும் பெண் ஒருவருக்கு 2000 கலோரிகளும் தேவைப்படுகின்றன. வயது வித்தியாசம் இந்த சக்தித் தேவையினை முடிவு செய்தாலும் சாரசரியாக மனிதனொருவருக்கான சக்தியை உட்கொள்ளாது விட்டால் அவருக்கு ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படுகின்றது. தவிர்க்கக் கூடியதான இந்த நிகழ்வு பல மக்களின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. உணவு இருந்தாலும் அது அனைத்து மக்களினதும் வயிற்றினை நிரப்பும் நிலையிலில்லை. உற்பத்தியாளன் உற்பத்தி செய்த உணவை அவர்கள் நட்டப்படாமல் நுகர்வோருக்கு விநியோக்கிக்கும் முழுமையான கட்டமைப்பு எங்களிடத்திலில்லாதது இந்த வெற்றிடத்திற்கு காரணமாகும்.
நெல் உற்பத்தி செய்தவன் விற்கமுடியாமல் இருக்கும் துர்ப்பாக்கிய நிலைமை இப்போதும் அரங்கேறுகின்றது. அதுவும் வடமாகாணத்தில் கிளிநொச்சியில் சிவப்பு நெல் 70மூ விளைவிக்கப்படுகின்றது. ஆனால் வெள்ளை நெல் 30மூ தான் விளைகின்றது. இங்குள்ள மக்கள் சிவப்பு நெல்லினை விரும்புவதாலும் அதற்கான கேள்வி அதிகமாக இருப்பதாலும் சிவப்பு நெல்லை தெரிந்தெடுத்து விளைவிக்கின்றனர். ஆனால் 20ம் திகதி விவசாய பீடத்தில் நடைபெற்ற விவசாய மாணவர்களுக்கும் விவசாய பெருமக்களுக்குமான கலந்துரையாடலில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளால் இந்த விடயம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. சிவப்பு நெல்லுக்கான விலையை நிர்ணயிப்பதில் ஏற்படுத்தப்படும் தாமதம் இதற்கொரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.
எமது நாட்டில்; நெற்பயிரில் மட்டுமல்ல ஏனைய பயிர்களுக்குமான விவசாய உற்பத்திக்;கொள்கைகள் (Crop policies) காலத்துக்குக் காலம் அரசாங்கங்கள் மாறும்போது அவர்களது புதியகொள்கைகள் முன்மொழியப்படுவதனால் பயிர்களுக்கான கொள்கைகளும் மாற்றப்படுகின்றன. இதனால் விவசாயபெருமக்கள் பாரிய அளவில் அவதிப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது. விவசாயத்தை ஒரு மதிப்பு மிக்க தொழிலாக கௌரவப்படுத்தாத காரணத்தாலும் சந்தைவாய்ப்பு சீரானதாக இல்லாமையாலும் இந்த நிலையென்பதனைத் தாண்டி இந்த தொழிலை விட்டு இளையவர்கள் வெளியேறுகின்ற நிலைமையையும் அவதானிக்கலாம். இத்தனைக்கும் வெளிநாட்டு மோகம் மற்றும் குடும்ப பொருளாதார உயர்வுக்காக மக்கள் குறிப்பாக இளையவர்களும் வெளியேறுகின்ற தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. எந்த தொழிலிலும் ஆதாயம் ஈட்ட முடியாத நிலையேற்பட்டதனால் இந்த நிலையென ஊகிக்கலாம்.
தற்போது எமது நாட்டில் தனிமனித வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. தொழிற்றுறையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேலைவாய்ப்பினை பாதித்திருக்கின்றது. குடும்ப வருமானத்தில் ஏற்பட்ட இந்த நிலைமை குழந்தைகள் பெரியவர்கள் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட அனைவரையும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக மாற்றியிருக்கின்றது. அனைவருக்கும் உணவு என்னும் பொதுப்படையான கூற்று அடிபட்டுப்போயிருக்கின்றது. மக்கள் வாங்கி உண்ணக்கூடியளவில் பொருட்களின் விலைகள் இருந்தாலன்றி தின கூலியாக பணிபுரிபவருக்கு கிடைக்கின்ற ஊதியம் அன்றைய பொழுதில் அவரது குடும்பம் முழுமையாக உண்பதற்கு போதாது.
இந்நிலையில் மூன்றுவேளை சமனான ஊட்டச்சத்தான உணவென்பது பகல்கனவாகவே இருக்கின்றது. வறுமை நிலையிலிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் இன்னும் அடிபடுகின்ற நிலைக்குள் வந்தாகிவிட்டது. போரினால் பாதிக்கப்பட்டு பலவழிகளில் குடும்ப உறுப்பினர்களையும் பொருளாதாரத்தையும் தொலைத்து நிற்கும் மக்களுக்கு இந்த தாக்கம் மிகவும் வலிநிறைந்ததாகும். மற்றைய பக்கத்தில் அன்றாடம் தயாரிக்கும் உணவில் மீதியை மக்கள் கழிவாக கழிவுதொட்டியிலும் தெருக்களிலும் கொட்டுவதனை காணலாம். இவ்வாறான மேலதிகமான உணவை சுகாதார முறைப்படி மக்களிடம் பெற்று உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்தால் அவர்களின் பசிபோக்க ஏதுவாயிருக்கும்.
இப்போதிருக்கும் இக்கட்டான நெருக்கடி தருணத்தில் குடும்பங்களில் இருக்கும் மேலதிகமாக உணவை சுகாதார முறைப்படி பொதி செய்து உணவின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்குவதற்கான பொறிமுறை அவசியம் உருவாக்கப்படல் வேண்டும். அதன் மூலமாக உணவின்றி தவிக்கும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கான உணவைப் பெற ஊக்குவிக்கலாம். இன்னும் உணவு வழங்க விருப்பம் தெரிவிக்கும் பெருமனிதர்களிடமிருந்து இவ்வாறான உணவை பெற்ற வழங்க உதவிசெய்யலாம். இதற்காக இணையவழி தொடர்பாடலை உருவாக்கலாம். எதொற்கோ பயன்படும் வாட்சப், முகப்புத்தகம் மற்றும் அனைத்து இணையவழி செயலிகள் இந்த இடர்களையும் கடவுளுக்கு செய்யும் சேவைபோன்ற கைங்கரியத்திற்கு உதவிடலாம். சிறுதுளி பெருவெள்ளம். அதிக செலவின்றி உதவி தேவையான மக்களுக்கான சலுகையிலான வகையில் உணவு கிடைக்க வழிசெய்யமுடியும்.
சமூகப் பணியாளர்கள், பிரதிபலன் எதுவும் பார்க்காது தொழில் புரியும் அன்பு நெஞ்சங்கள், தொண்டர்கள், என அனைவரையும் ஒன்று திரட்டி அந்தந்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் அறிவுறுத்தினால் அவர்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றும் நல்ல செயலாக இதனை முன்னகர்த்லாம்;. உணவு தினமும் எமக்கு கிடைக்கின்றது என்பது முக்கியமல்ல உணவின்றி தவிக்கும் மக்களுக்கும் இந்த உணவு போய்சேர வேண்டும் என்பதில் மானுடராக பிறந்ததில் எமக்கு கடமையும் பங்கும் உள்ளது.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
வடகிழக்கு மாகாணங்களில் பரந்து பட்டு வளரும் கற்பகதருவாம் பனைவளத்தின் அருமைபெருமையை உலகறியச் செய்வதன் மூலம் எமது இருப்பை தக்கவைக்க வேண்டிய நிலையெமக்கு. இத்தாயக பூமியின் ஒருங்கிணைப்பை சொல்லாமல் சொல்லிநிற்கும் கற்பகதருவின் ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதால் இன்று இந்த நிலை எமக்கு. இதற்காக வடமாகாணத்தில் வருடந்தோறும் கண்காட்சிகளும் அதனூடாக பனைசார் பொருட்களின் சந்தைவாய்ப்பை குறிப்பாக பனைசார் வாழ்வியலுள் வாழும் மக்களுக்கான அரிய வாய்ப்பாக எமக்குள்ளே உருவாக்கும் நற்செயலுக்கு பாராட்டுக்கள். ஆடிப்பிறப்பில் பிறப்பெடுத்து கற்பகதருவள்ளலின்; நினைவுநாளில் முடிவுறும் கற்பகதருவிற்கான பெருவிழா இம்முறை களைகட்டியிருக்கின்றது. ஆடிக்கூழுக்கு பயன்படும் பனை வெல்லம் பிறதேவைகளுக்கும் நம்மவர்கள் பயன்படுத்த வேண்டும் என்னும் செய்தி இதில் முக்கியத்துவம் பெறுக்கின்றது. மருத்துவக் குணம் கொண்ட பனைவெல்லத்தினை எமது பயன்பாட்டிற்குள் உள்ளடக்குவது எமது கடமையாகிறது. சிறு துண்டு பனைவெல்லத்துடன் தேநீர் குடித்த காலம் வெல்லத்தின் அளவையும் தேவையையும் அனுபவத்தின் கணிப்பாக்கியிருக்கின்றது.
இருக்கின்ற வளத்தை விட்டுவிட்டு இல்லாததை தேடிக்கொண்டிருக்கிறோம். கற்பகதரு வெல்லத்தை பயன்படுத்துவதை தவிர்த்து கரும்பு வெல்லத்திற்கு நாமேன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பலரும் பலமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டதனால் சபையேறி இது பேசுபொருளாகியிருக்கிறது. வெள்ளை வெல்லத்திற்காக நிலத்தடி வெள்ளம் நிர்க்கதியாகும் நிலையை ஆய்வாளர்கள் அன்றே சொல்லிவைத்துவிட்டார்கள். அதனால் அன்றைய குறுநிலைமன்னர் அரசாணையில் இவ்வகை முன்னெடுப்புக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது,
வயது வேறுபாடின்றி பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் ஏற்படும் நீரிழிவு நோயின் தீவிரதன்மையை உணர்ந்தும் வெல்லத்தின் பாவனையை கட்டுப்படுத்தும் வழிவகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது தேவையின் பால் கற்பகதருவின் வெல்லத்தை பயன்படுத்த ஊக்குவிக்காது அதனை இன்னும் மதிப்பேற்றம் செய்து புதிய பொருளாக உலகசந்தையில் வலம்வர வாய்ப்பினை ஏற்படுத்தாது வெள்ளை வெல்லத்தை அதிகளவில் உற்பத்தி செய்வதன் நோக்கத்தை இன்னமும் மக்கள் புரிந்து கொண்டிலர். அந்நிய செலாவாணியை இவ்வாறான தொழிற்றுறை அபிவிருத்தி மூலம் பெருக்குவதிலுள்ள பாதகநிலையை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
இருப்பினும் மறைந்த வள்ளல் மில்க்வைற் தொழிலதிபர் கலாநிதி கனகராசா அவர்களின் நன்முயற்சியால் வடபுலமெங்கும் பல இடங்களில் நாட்டப்பட்ட பனைகள் ஓங்கி வளர்ந்து நிற்கும் நிலை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. பெருமனிதர் செம்மணியில் சாலையோரம் வரிசையில் நாட்டிய பனைகளின் நுங்கு ஏறுதிறனுள்ளவருக்கு வாழ வழிகாட்டி பலரது தாகத்தையடக்கியது. யாழ்ப்பாணத்து சவர்க்கார தொழிற்சாலையை உருவாக்கி எம்மவர்கள் ஒரு காலம் அதனையே பயன்படுத்திய பாங்கு இலகுவில் மறக்கத்தக்கதன்று. பாதையெங்கும் பார்த்து பார்த்து நடவுசெய்யப்பட்ட பனைகள் இன்று நீண்டு நிமிர்ந்து வளர்ந்து தனக்குரிய இறுமாப்புடன் காணப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. சுயநலம் பாராது அன்னார் செய்த நற்காரியம் இன்று பலஇடங்களில் காணக்கிடைக்கின்றது. இருந்தாலும் இறந்தாலும் பனையின் பயன்பாடு பெரிது மகத்துவமும் பெரிது. அதுபோல மறைந்தும் பனைமரத்தினூடே உயிர்கொண்டெழுந்த்pருக்கும் பெரியவரை நினைவுகூரும் இவ்வாரம் சிறப்புக்குரியது.
வரண்ட வலயத்துக்குரியதென அடையாளப்படுத்தினாலும் பனையின் மகத்துவம் அளப்பரியது. பனை என்பது விஞ்ஞானத்தின் பார்வையில் வெறும் ஒருவித்திலை மரமல்ல, விருட்சம். பனை என்பது வெறும் ஜடமல்ல. அது ஒரு சூழலின் தோற்றுவாய். பனை என்பது பத்தில் ஒன்றல்ல. அது ஒரு தலவிருட்சத்தின் உருவகம். பனை என்பது ஈரெழுத்து மட்டுமல்ல தான் கொண்ட சமூகத்தின் உயிரெழுத்து. வடகிழக்கு மாகாணங்களின் வாழ்வின் அடையாளங்களில் முக்கியமானது. இதனை பெயர்த்தெடுத்து காலிமுகத்திடலில் நடவு செய்த போதும் இருந்த படியே இருக்கிறது இன்றும். உயிர்பல்வகைமையில் தான் கொண்ட சூழலை மாற்றி எந்த உயிரினமும் விருத்திகண்டதில்லை. அந்த விஞ்ஞான கோட்பாட்டை அனுபவமாக்கி இதில் காணலாம்.
பனையென்பது ஒருவித்திலையின் உயர்ச்சி. கற்பகதருவாக கொள்ளப்படுகின்ற பனையின் பயன்பாடு மிகவும் உன்னதமானது. வடகிழக்கு பகுதிகளைப் பொறுத்தவரையில் பனை வளம்மிக்கதாக காணப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கின்றது. பனைமரங்கள் செழிப்பாக காணப்படுகின்ற இடங்களில் நாம் எதிர்பார்த்த சூழல் பேணப்படுகின்றது எனலாம். எமது வாழ்வியல் பனைசார்ந்த சூழல் தொகுதியினுள்ளேயே உள்வாங்கப்பட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம். இயற்கையின் சுகத்தை அனுபவிக்காத நகரவாசிகளுக்கு நிச்சயமாக இதனது அருமை தெரியவராது என்றாலும் உண்ண உணவாக, உறையுளாக, உடையாக இன்னும் பலவழிகளில் பனையின் பெறுமதி உள்ளார்ந்திருக்கின்றது.
ஆனால் பல்லாண்டு காலமாக இருந்த அசாதாரண சூழ்நிலைமாறி இந்த மண் அபிவிருத்தி காண துடிக்கின்றபோது தானாக முளைத்திருக்கும் பனையை குறிப்பாக வடலிகளை இரும்பு கரங்கள் கொண்டு பிடுங்கியழித்துவிட்டு அதே குடும்பத்தைச் சேர்ந்த தென்னையை நடவு செய்கின்றார்கள். அண்ணனை பிடிங்கி வெளியே எறிந்து விட்டு தம்பியை நடவுசெய்வதற்கு ஒப்பானது இது. ஒரு குடும்பத்து (தாவர வகைப்படுத்தலில் பாமேசியே என்னும் குடும்பத்துள் பனையும் தென்னையும் உள்ளடக்கப்படுகின்றன) உறவுகளுக்குள் ஏனிந்த பாகுபாடு. இது பனைக்கான முக்கியத்துவத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்காதததனால் ஏற்பட்ட விளைவாகும். பனையின் பயன்பாடுகளை ஆய்வு ரீரியாக ஆக்கபூர்வமான பல்வகைப் பொருட்கள் ரீதியாக அந்நிய செலாவணி ரீதியாக தொழில்நுட்பம் சார்ந்து முன்னோக்கி நகர்த்தாததன் எதிரொலியாகவும் இதனைக் கருதலாம். தென்னையை நடுவதனால் பிற்காலத்திற்கு அதன் பயன் கிடைக்கும் என்பதற்கு மேலாக பனையிலிருந்து கிடைக்கும் பயன்பாடுகளை நாம் அதே இலாபத்துடன் சந்தைப்படுத்த முடியாதிருப்பதும் இன்னொரு காரணமாகும். பனை தென்னை பயன்பாடுகளை முழுவதுமாக அறிந்துணராத நிர்ப்பந்தத்தினால் ஏற்பட்ட நிலையிது.
பனையின் சிறப்புக்கள் பலப்பல. மரம் முழுக்க முழுமையாக மனிதனுக்கு பயன்படக்கூடியது என்பதனாலேயே இதற்கு இவ்வளவு சிறப்பும். ஓங்கி வளர்ந்து, தனித்து நின்று ஓங்கியடிக்கும் காற்றுக்கும் சுழற்றியடிக்கும் சூறாவளிக்கும் தாக்குப்பிடிக்கும் மரம் என்பதுடன் வெள்ளத்திலும் கால்பதித்து நிற்கும் தன்மை வாய்ந்தது என்பது இந்த அடைமொழிக்கு உரிமையானதாகின்றது. பனை மரத்திற்கு மறுக்கப்படும் அந்தஸ்து இங்குள்ள மனிதருக்கு மறுக்கப்படும் உரிமைக்கானதாகும். தமிழ்நாட்டின் மரமாக பனை அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போது வடமாகாண சபையின் மரமாக பனைக்கு அந்த உரிமம் மறுக்கப்பட்டிருக்கின்றது. மருது மரத்திற்கு அந்த உரிமை கொடுக்கப்பட்டு அதற்கு கிடைத்த பேரதிர்ஸ்டம் பனைமரத்திற்கு கிடைக்கவில்லை.
பனை எமது சொத்து. அதனை நாம் பாதுகாக்க தவறினால் இயற்கையின் சீற்றத்திற்கு நாம் உள்ளாகவேண்டி வரும் என்பதனையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். எமது சூழலை நாம் பாதுகாப்பது போலன்றி வராது. நிஷh புயல் வந்த போதும் சுனாமி வந்தபோதும் கரையோரத்தில் பலஉயிர்களை பனை காத்திருக்கின்றது என்பதனை அந்த அனர்த்தத்திற்குள் சிக்கியவர்களைக் கேட்டால் தெரியவரும். எமக்கு நல்லனவற்றைத் தருகின்ற பனையை நாம் தெய்வமாக பாதுகாக்க வேண்டும். வெட்டிச்சரித்து கொண்டாடக்கூடாது. இயற்கையை அனுசரித்து நாம் வாழப்பழகவில்லையாயின் அதன்பின் வரும் அனைத்து துன்பங்களுக்கும் முகங்கொடுக்க தயாராகவும் வேண்டும்.
இயக்கச்சியிலிருந்து பளைநோக்கி ஏ9 பாதையில் பயணிப்பவர்களுக்கு பாதையோரத்தில் பனையும் அரசமரமும் அல்லது பனையும் ஆலமரமும் இணைந்திருக்கும் காட்சி நிச்சயம் தட்டுப்படும். தனித்தனியே இருக்கக்கூடிய இரு விருட்சங்களும் இணைந்திருக்கின்ற விசித்திரமென்ன? ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் இரு விருட்சங்களும் ஒன்றாக இணைந்து எமக்கு இயற்கையின் செய்தியாக சொல்கின்ற செய்தியென்ன? இரண்டும் இருவகைகளைச் சார்ந்தன. ஓன்று ஒருவித்திலை (பனை) மற்றையது இருவித்திலை தாவரம். இருப்பினும் தமக்கான அடையாளங்களை உயர்ந்து வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடு;த்து அவரவர் தனித்துவத்தை வெளிக்காட்டி நிற்கும் விந்தையை இயற்கை நமக்கு பாடமாக கற்றுக்கொடுக்கின்றது. பனை சூழல் தொகுதியில் இன்னொரு மரத்தையும் இணைத்து பல்வகைத்தன்மையை இனங்காட்டி அதிலும் தான் உயர்ந்து வளர்ந்து தனது அடையாளத்தை காட்டி நிற்பதை காணுங்கள். இன்னொரு செய்தியும் அடங்கியிருக்கின்றது. வளர்ந்திருக்கும் பனைமரத்தில் பறவைகள் வந்திருந்து எடுத்து வந்த அரசமர ஆலமர பழங்களை கொத்தித் தின்னும் போது அதிலிருந்து விழுகின்ற விதைகள் பனைமர இடுக்குகளில் தங்கி அங்கிருந்து வளரத் தொடங்குகின்றன. ஆக மொத்தத்தில் இந்த இரு விருட்சங்களின் இவ்வாறான இருப்புக்கு பறவையின் (மூன்றாந் தரப்பின்) உதவி தேவைப்படுக்கின்றது என்பதும் வெளிப்படையாகின்றது. இதுவும் எமக்கான செய்தியாகவும் பாடமாகவும் இருக்குமோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
இயற்கையின் கொடையாக எமக்கு கிடைத்த பொக்கிஷமே கற்பகதரு. இயற்கையின் வனப்பில் பனைமரங்களின் சலசலப்பில் அதனது சுகந்தத்தை அனுபவிக்க கிடைத்தவர்கள் பேறு பெற்றவர்களாவர். எமக்காக இயற்கை தந்த அரும் கொடையை பாதுகாக்க அமரர் கனகராசா எடுத்த முயற்சிக்கு நாம் கொடுக்கும் கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையுமே அவரின் ஞாபகமாக இவ்வாரத்தில் பனைக்கான வாரமாக கொண்டாடுவது. இந்த முயற்சிக்கு எம்மாலான ஆதரவை கொடுப்பதுடன் வடபுலத்து மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக்கலந்திருக்கின்ற பனையின் விருத்திக்கு நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபடுவதுடன் பனை பற்றிய நல்ல செய்திகளை மக்களுக்கு அறியத்தருவதுடன் அதனது பயன்பாட்டையும் நாம் விரிவுபடுத்துவோமாக.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
அலட்சியம் கூடாது. இதனை மண் காய்ச்சல் என அழைப்பதுடன் நாட்டின் பலபாகங்களில் இந்நோய் பரவிவருவதாக மருத்துவசங்கம் அறிவுறுத்தியிருக்கின்றது. விழிப்பாக இருக்கும் வரைக்கும் எம்மை நாம் எந்த இடரிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளலாம். வருகின்ற பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு தகுந்த நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டால்; அவற்றிலிருந்து அவர்களாகவே தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கும் அணுகுமுறையிது. மருந்துகிடைப்பதில் தட்டுப்பாட்டுடன் விலைகளும் அதிகரித்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் வருமுன் காக்கும் செயன்முறையாக வலம்புரியினூடாக மக்களுக்கான அறிவுரீதியான செய்திகளை தருவதன் மூலம் எமது மக்களை காப்பாற்றும் முன்னகர்வாக இக்கட்டுரை அமைகின்றது.
அழுக்கு மண்ணிலிருந்தும் நீரிலிருந்தும் தொற்றி உயிரைகாவு கொள்ளும் நோய் பற்றி அறியலாம் வாரீர். வருமுன் காப்பது என்பதனை மீண்டும் நினைவிலிருத்தும் நோயைப்பற்றிய அவசிய தகவல் இது.
இந்நோயானது மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மக்களிடையே பரவலாக பதிவாகியிருக்கின்றது. இந்த நோய் மனிதர்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பாரதூரமானது ஆகும். குறிப்பாக அழுக்கு மண்ணிலிருந்தும் நீரிலிருந்தும் தொற்று ஏற்படுவதனால் விவசாய செய்கையிலீடுபடும் உழவர் பெருமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகின்றது. நோய் முற்றுதடையும் நிலைவரும்போது நியுமோனியா மற்றும் இறுதியில் இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நோய் தொற்றுதலாகி பெருக்கமடைவதற்கு சராசரியாக 9 நாட்கள் தேவைப்படுகின்றது. இருப்பினும் 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே இதனது தொற்றுதலுக்கான அறிகுறிகளை அவதானிக்கலாம்.
மிலியோய்டோசிஸ் எனப்படுவது ஒரு தொற்று நோயாகும். மனிதருக்கும் விலங்குகளுக்கும் தொற்றுதல் ஏற்படுத்தக் கூடியது. இது ஒருவகையான (புசயஅ நெபயவiஎந) பேர்கொல்டேறியா சூடோமலெய் (டீரசமாழடனநசயை pளநரனழஅயடடநi) (முன்னதாக சூடோமோனசு சூடோமலெய் என அறியப்பட்டது) எனப்படும் மண், நீர் மற்றும் தாவரங்களில் காணப்படும் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுத்தப்படுகின்றது. கடினமாக சூழலிலும் வாழக்கூடிய இப்பக்ரீறியா மாறுபட்ட கார அமிலத்தன்மையுடைய ஊடகத்திலும் தப்பிப்பிழைக்க வல்லது.
இது வடகிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், பப்பாநியூகினியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில்; அதிகமாக காணப்படுவதாக அறியப்படுகின்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகள், உழவர் பெருமக்கள், படைவீரர்கள், கட்டுமாண தொழிலில் ஈடுபடுவோர், அதிகளவில் குடிப்பழக்கம் உடையவர்கள், மற்றும் தொற்றுதலாகியுள்ள அழுக்கு மண்ணில் தொடுகையை ஏற்படுத்துபவர்களுக்கு குறிப்பாக தோல் அழற்சியுடையவர்கள், நீரிழிவு நோயாளிகள், எரிதல் மற்றும் சுவாச குறைபாடு உடையவர்களுக்கு இந்நோய் விரைந்து தொற்றுதலாகும். ஏனையோர் இந்நோயின் குணங்குறிகள் வேறுபட்டதாக இருந்தாலும் பொதுவான குணங்குறிகளை வைத்து மருத்துவரை நாடுவது சிறந்தது என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. உலகளவில் வருடத்துக்கு 165.000 தொற்றாளர்களை அடையாளப்படுத்தியிருந்தாலும் 89இ000 பேர் இந்த நோயினால் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசநோய் (வுரடிநசஉரடழளளை) மற்றும் நுரையீரல் அழற்சி (pநெரஅழnயை) போன்ற நோய்களைப் போன்று இருந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென அறிக்கைகள்; தெரிவிக்கின்றன. இந்நோயின் அறிகுறிகளாக நோவுடனான வீக்கம், காய்ச்சல், இருமல், சிலவேளைகளில் அதிகரித்த காய்ச்சல், தலையிடி, சுவாசிப்பதில் இடர்ப்பாடு என விரிந்து செல்கின்றது. தேகாரோக்கியமான மனிதர்களிலும் நோயை உண்டாக்கும் தன்மையுடையதான இந்த பக்ரீறியா, நீரிழிவு, கல்லீரல் நோயுடையவர்கள், சுவாசப்பை நோயுடையவர்கள், புற்றுநோயாளிகள், மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்படும் நோயெதிர்ப்பு தன்மை குறைவானவர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இந்த பக்ரீறியாவை இனங்காண இரத்தம், மலம், சலம், மற்றும் சளி போன்றவற்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்படும்;.
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்ரீறியாவினால் ஏற்படும் மிலியோய்டோசிஸ் என்னும் மண் காய்ச்சல்; பரவி வருகின்றது. பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீரைக் குடித்தல் அழுக்கு மண்ணில் தொடுகை ஏற்படுத்தல்;; ஊடாக இந்த பக்ரீறியாக்கள் மனிதனுக்கு தொற்றுவதாக அறிவித்துள்ளனர். எந்த வயதினரையும் இந் நோய் தாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பினும் 40 இலிருந்து 60 வயது வரையானவர்களில்; அதிகமாக காணப்படுவதாக அறியப்படுகின்றது.
மிலியோய்டோசிஸ் நோயேற்படுவதற்கு நோயியலில் அவதானிக்கப்படும் மூன்று காரணிகள் முக்கியமானதாக கருதப்படுகின்றன. நோயெதிர்ப்பு சக்தி குறைந்த உடல் தேகாரோக்கியமற்ற மனிதர்கள் (ளரளஉநிவiடிடந hழளவ), ஏற்புடையதான சூழல் (கயஎழரசயடிடந நnஎசைழnஅநவெ) மற்றும் வீரியமான நோயாக்கியான பக்ரீறியா நுண்ணங்கி (எசைரடநவெ pயவாழபநn). இவை மூன்றும் ஒருங்கமைந்தால் நோயேற்படுதலை தவிர்க்க முடியாது. ஆதலினால் இந்நோயை முகாமைப்படுத்துவதில் முன்னேற்பாடான நடவடிக்கையாக (pசநஎநவெiஎந) தேகாரோக்கியமான உடலை வைத்திருப்பது, மாசான சூழலை தவிர்த்தல் மற்றும் வீரியமான பக்ரீறியாவை பரவவிடாது தடுத்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நோய் முக்கோணம் (னளைநயளந வசயைபெடந) என அழைத்தாலும் இம்மூன்று காரணிகளையும் அவதானித்து நோய்க்கு அனுசரணையான மற்றும் ஆதாரமான விடயங்களை தவிர்த்துக் கொள்ளுதல் நோயிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் முக்கியமான அணுகுமுறையாகும். கோவிட் 19 வந்தபோது நாம் எம்மை நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் முன்னேற்பாடாக நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து செய்ததினால் எமது தேசத்தில் இந்நோயின் தாக்கத்தையும ;பரவலையும ;மிகவும் நேர்த்தியாக குறைக்கக் கூடியதாயிருந்தது.
மனிதர்களிடமிருந்தோ அல்லது மிருகங்களிடமிருந்தோ நேரடியாக தொற்றுதலேற்படும் வாய்ப்புக்கள் மிகவும் அரிதாக காணப்பட்டாலும் தோல், உண்ணுதல் மற்றும் உட்சுவாசத்தினால் இந்நோய் அதிகரிக்கும் அல்லது பரவும் வாய்ப்பு அதிகமாகும். மழைகாலங்களி;ல் குறிப்பாக பருவமழை காலங்களில் அதிகமாக தொற்றுதல் ஏற்படுகின்றது.
மேற்கூறிய குணங்குறிகள் மற்றும் மனிதரில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும். அலட்சியமாக இருந்து காலங்கடந்தால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
This articles explains about the Potential Soil borne Antagonistic fungus, Trichoderma: Enemy for the plant disease causing fungi and nematodes. Trichoderma is an antagonistic fungus, which is soil borne and seldom controls the pathogenic fungi and nematodes that cause diseases to the crop plants in the soil.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது எதிரிக்கு எதிரி எமக்கு நண்பன் என்பார்கள். இந்த மூத்தோர் வாக்கினூடாக விவசாயச் செய்கையில் குறிப்பாக பூச்சிபீடைகள் மற்றும் நெமற்றோட்டு புழுக்களை கட்டுப்படுத்தும் உயிர்க்காரணியான (bioagent) மண்வாழ் பூஞ்சணம் (soil borne fungi) பற்றியதான விளக்கத்தையும் அதன் பயன்பாட்டையும் இக்கட்டுரை விளக்குகின்றது. உயிரியல் காரணிகள் விவசாயிக்கும் விவசாயத்திற்கும் பலவழிகளில் நன்மைதருகின்றவையாகும். மண்ணில் வாழுகின்ற இப் பூஞ்சணமானது தாவரங்களில் நோயை உருவாக்குகின்ற (plant disease causing) தீமைதரும் பூஞ்சணங்களின் பெருக்கத்தையும் அதனது இருக்கையையும் தொற்றுஏற்படுத்தி அழிக்கும் வல்லமையுள்ளது. விவசாய செய்கையில் முனைப்பு காட்டும் விவசாய பெருமக்களுக்கும் விவசாய பண்ணைகளை உருவாக்கும் தொழில் வல்லுனர்களுக்கும் இப்பூஞ்சணம் பற்றிய அறிவு இருந்தால் இதனை உற்பத்தி செய்து இலகுவாக பயன்படுத்தலாம்.
வருமுன் காப்போம் (Prevention is better than cure) என்பது பீடை முகாமைத்துவத்தில் மிகவும் முக்கியமான தொனிப்பொருளாகும். இந்த சிறந்த செய்கையை (best practice) கவனத்திற் கொண்டு விவசாய செய்கையில் முன்கூட்டிய தயார்ப்படுத்தலில் ஈடுபடலாம். ஆரம்ப பயிர்களின் வளர்ச்சியில் அவற்றினது தாவர வேர்களில் நோயுருவாக்கம் என்பது அத்திபாரத்தில் பழுது ஏற்படுவது என்பதற்கு சமனாகும். அத்திபாரம் ஆட்டம் கண்டால் எந்த கட்டடமும் நிலைத்து நிற்காது அது போல பயிர்கள் வளரும் ஆரம்ப காலத்தில் குறிப்பாக நாற்றுக் காலப்பகுதியில் குறிப்பாக விதையிலிருந்து எழுந்து பூக்கின்றதான காலப்பகுதி வரை பயிர்கள் செழிப்பாக நோயின்றி வளருவதனை நாம் உறுதிசெய்து கௌ;வது அவசியம்.
இந்த நன்மைதரும் பூஞ்சணத்தை 'ரைக்கோடேர்மா ' (Trichoderma) எனப் பெயரிட்டு உயிரியல் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்துவர். எமது மண்ணில் வாழும் நன்மை தரும் பூஞ்சணமான ரைக்கோடேர்மா பலவிதங்களில் மண்ணில் குறிப்பாக வேர்களில் நோயையேற்படுத்தும் நோயாக்கி பூஞ்சணங்களையும், தாவரங்களின் வேர்களில் முடிச்சுக்களை (Root galls) உருவாக்கி பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் நெமற்றோட்டுக்களையும் (Nematodes) விரைந்து கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. விவசாய பெருமக்களால் ஆகக்குறைந்த ஆய்வுகூட வசதியுடன் நுண்ணங்கியியல் பற்றிய அடிப்படை அறிவுடன் உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி இவ்வாறான நன்மைதரும் பூஞ்சணத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தாக்கங்களிலிருந்து பயிர்வகைகளை முன்னோடியாக காப்பாற்றுவதுடன் அவற்றின் செழிப்பான வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் நிலைமையை மண்ணில் உருவாக்கிவிட முடியும்.
ரைக்கோடேர்மாவின் தன்மை
இதுவொரு நன்மைதருகின்ற பூஞ்சணமாக இருக்கின்றபோதிலும் ஏனைய பூஞ்சணங்களைப் போலல்லாது தாவரங்களில் நோயாக்கும் பூஞ்சணங்களை பலவழிகளில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இயற்கையாக எமது மண்ணில் காணப்படுவதனால் இதனை இனம்பெருக்கி விவசாய செய்கையில் பயன்படுத்துவதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. இதனது உற்பத்தியின் வீரியத்தன்மை மிகவும் அதிகமாக இருப்பதனால் இப்பூஞ்சணத்தை ஆய்வுகூடங்களில் வளர்க்கின்ற போது அதிகளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. இப்பூஞ்சணம் நோயாக்கி பூஞ்சணங்களில் ஒட்டுண்ணியாக (parasite) வாழ்ந்து அதனை அழிக்கக்கூடிய சிறப்பினைக் கொண்டிருப்பது இதனது முதலாவது சிறப்பியல்பாகும். இதனையே ஆரம்பத்தில் எதிரிக்கு எதிரி எமக்கு நண்பன் எனக்குறிப்பிட்டேன். மேலும் இப்பூஞ்சணத்தினால் சுரக்கப்படும் ஒருவகையான நோயெதிரி சுரப்பு (Disease resistant exudate) தாவர நோயாக்கி பூஞ்சணங்களின் விருத்தியை கட்டுப்படுத்தும் இயல்புடையது. இது இப்பூஞ்சணத்தினது இரண்டாவது சிறப்பு. மூன்றாவதாக நோயாக்கி பூஞ்சணங்களுடன் போட்டிபோட்டு (disease causing fungi) சத்துக்களை அகத்துறுஞ்சும் தன்மையுடையதானால் இப்பூஞ்சணம் குறைந்த காலத்தில் விரைந்து பெருகும் தன்மையுடையாகின்றது.
ரைக்கோடேர்மாவின் செயற்படுதிறன்
அழுகல் வளரியாக மண்ணில் வளரும் இப்பூஞ்சணத்தின் விசேட இயல்பாக நோயாக்கி பூஞ்சணங்களினை கட்டுப்படுத்தும் இயல்பு பெரிதும் வரவேற்கத்தக்கதும் அதிகளவில் பயன்படுத்தப்படுதலுமாகும். இப்பூஞ்சணம் இலிங்கமில் இனப்பெருக்கத்ததில் அதிகளவிலான வித்திகளை உருவாக்கும் காரணத்தினால் இப்பூஞ்சண வித்திகளே அப்பூஞ்சண கரைசலின் செயற்படுதிறனை நிர்ணயிக்கும் தன்மையுடையதாகின்றது. இதுதவிர அநேகமான பூஞ்சணங்களின்; இயல்புகளைப்போல பூஞ்சண சிற்றிழைகளும் புதிதான பூஞ்சணத்தை உருவாக்கும் தன்மையுடையதனால் வித்திகளையும் சிறிய பூஞ்சண இழைகளையும் ஒன்றிணைத்தும் பூஞ்சணத்தை வளர்த்துக்கொள்ளலாம்.
ரைக்கோடேர்மாவின் பயன்பாடு
இப்பூஞ்சணத்தை அதிகளவில் விதைநேர்த்தி மற்றும் நாற்றுகளின் நேர்த்திக்காக பயன்படுத்தப்படுவதுண்டு. பொதுவாக விவசாயப் பெருமக்கள் இதற்காக கப்ரான் மற்றும் திராம் எனப்படும் அசேதன பூஞ்சண நாசினியையே பயன்படுத்துவதுண்டு. ஆனாலும் இயற்கையாக காணப்படும் இலகுவில் வளர்க்கப்படும் இத்தகைய பூஞ்சண எதிரியை பாரியளவில் வளர்த்து பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதனால் மண்ணில் வாழும் தாவர நோயாக்கிகளைக் கட்டுப்படுத்துவதோடு தாவரங்களின் வேர்களுக்கும் காப்பரணாக நன்மை தரும் நுண்ணங்கிகளின் பெருக்கத்தினை ஊக்குவிக்கலாம். தாவர வேர்களுக்கு நன்மைதரும் நுண்ணங்கிகளின் உதவி தேவை. அதன் மூலம் தாவரங்கள் தமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இலகுவில் அகத்துறிஞ்ச ஏதுவாகின்றது. மேலும் இப்பூஞ்சண கரைசலை பயிரின் வேர்த்தொகுதிக்கு இடுவதன் (னுசநnஉhiபெ) மூலமும் வேர்த்தொகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க முடியும். காளான் வளர்க்கும் செயன்முறைபோன்ற நடைமுறையில் இப்பூஞ்சணத்தை உள்ளூர் மூலப்பொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கும் தொழினுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதால் எங்களூரிலேயே இதனை வளர்த்து விவசாய செய்கையில் இதனை பயன்படுத்த முடியும்.
தாவர நோயாக்கிகளையும் நெமற்றோட்டுகளையுகும் கட்டுப்படுத்தும் இப்பூஞ்சணத்தின் பயன்பாட்டை பயிர்ச்செய்கையில் செயற்படுத்தி வளமான பயிர்ச்செய்கையை நாம் பெற்றிட முடியும். இயற்கை வழி விவசாயத்திற்கான இடுபொருளாக இவ்வாறான நன்மைதரும் இயற்கை எதிரிகளை பயன்படுவதால் பயிர்களின் விளைச்சலும் கூடி அதிகலாபம் பெறுவதற்கும் வழிகளுண்டு.
This article describes about the "increased air temperature and increasing of pests". Nowadays the air temperature is increased abnormally and its burning sensation is experienced by people living in this region. When the air temperature increases, the pest outbreak also happens as they shorten their life cycle and multiplies faster than ever. The impact of this increase in pest population is troublesome to the crop cultivation.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நம்மக்கள் தற்போது முழுமையாக உணரத் தலைப்பட்டிருப்பதனை அன்றாடம் நிகழும் பல்வேறு நிகழ்வுகளிலிருந்து அறிந்துகொள்ள முடியும். காலநிலையை நிர்ணயிக்கும் அலகுகளில் தப்பிதமான மழைவீழ்ச்சியும் வெப்பத்தின் அதீத அதிகரிப்பும் விவசாய செய்கையினை முழுவதுமாக பாதித்திருக்கின்றது. கால்நடைகள் மிருகங்கள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலையை அவசியம் அனைவரும் உணர்ந்திருப்பர். வளிமண்டல வெப்பநிலை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் உடல் மற்றும் உள ரீதியான நோய்கள் வருமுன் பாதுகாத்தல் அவசியமானதாகும். உணவுத்தேவையில் நாம் தற்போது பின்னடைவாகியிருக்கின்றோம் என்பதனை எமது உற்பத்தியின் தளம்பலிலிருந்து அவதானிக்க முடிகின்றது. மரக்கறிப் பயிர்கள் தற்போது விலைகுறைந்திருந்தாலும் மீண்டும் உச்சம் தொடும் காலம் வெகுதூரமில்லை. இதற்கான காரணங்கள் பலவாகினும் உற்பத்தி குறைந்திருப்பது அதிலொரு முக்கியமான காரணமாகும்.
காலநிலை நாம் எப்போதும் உணராத நிலையைத் தொட்டிருக்கின்றது. இந்த உயர்வான வெப்பநிலை ஏப்ரல் கடைசி மற்றும் மே மற்றும் ஐ_ன் ஐ_லை மாதங்களில் உணரப்படுவதுண்டு. ஆனால் அதிகரிக்கும் வெப்பநிலை ஒரு நிலையைத் தாண்டி மீண்டும் உயர்வடைவதும் மழைவீழ்ச்சி அருகிப்போவதும் காலநிலையில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதென்பதனை கட்டிங் கூறுகின்றன. எமது சூழல் மாற்றமடையத் தொடங்கிவிட்டது என்பதனை மாற்றி உலக சூழல் மாற்றத்துக்கேற்றவாறு ஒப்பிசைக்கத் தொடங்கியிருக்கின்றது. காலங்காலமாக இருந்து வந்த பருவநிலைகளில் மாற்றங்கள் பூகோள ரீதியாக ஏற்படத் தொடங்கியது எமக்கான கடினமான காலமாக உணரப்படுகின்றது. இச்சிறு தீவில் இன்னோரன்ன மாற்றங்கள் ஏற்படுவது ஆச்சரியமான காரணமாக இருப்பினும் இந்த மாற்றம் பாரியளவில் மக்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்திருக்கின்றது.
குறிப்பாக சாறு உறுஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கம்; வெப்பநிலை அதிகரிப்போடு அதிகரிப்பதாகவே கணிக்கப்படுகின்றன. இவ்வாறான பூச்சிப்பீடைகள் வெப்பநிலை அதிகரிக்க தமது வாழ்க்கை வட்டத்தை சுருக்கி விரைவிலேயே பல்கிப்பெருகுகின்றன. காலநிலையின் முக்கிய அம்சமான வெப்பநிலை வாழ்க்கை வட்டத்தை மாற்றி விரைந்து பெருகுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதனால் இக்காலகட்டத்தில் பூச்சி பீடைகள் மற்றும் நோய்கள் விரைந்து அதிகரிக்கும் நிலைமையைக் கொண்டிருக்கின்றன.
வெண்ணீயினுடைய தாக்கம்
வெள்ளைஈ எனக் பெயரிட்டு இது தவறாக ஈக்கள் வகையானதான பூச்சி பீடையாக கருதுகின்றனர். மாறாக தாவரங்களில் குறிப்பாக இளநீர் தென்னைகளில் சாறுஉறுஞ்சும் வகையினதாக குத்தியுறுஞ்சும் வாயுறுப்புக்களைக் கொண்டிருப்பதனால் இவற்றை கெமிப்தீறா வருணத்தில் அடக்கியிருக்கின்றார்கள். வெண்ணீ (றாவைநகடல) என அழைப்பதே சிறந்தது. இங்கு எப்படி அழைப்பது என்பது முக்கியமல்ல. இதனுடைய பரம்பல், குடித்தொகைப் பெருக்கம், தாவரங்களில் ஏற்படுத்தப்படும் சேதங்கள் மிக முக்கியமானவையாகும். இளநீர் தென்னைகளின் ஓலைகளில் வெண்ணீயினுடைய தாக்கம் மிகவும் விரைவாக ஏற்பட்டு இலைகள் கருகி கறுப்பு நிறமாக தோற்றமளிக்கின்றன. இதில் முக்கியமான விடயமாக இவ்வாறான வெண்ணீக்கள் தாம் குத்தியுறுஞ்சி உண்ணுகின்ற உணவின் ஏறக்குறைய 50 சதவீதமானவற்றை தமக்கான உணவுத்தேவைக்காக சமிபாடடையச் செய்து அகத்துறுஞ்சுகின்றன. மீதியை ஒருவகை தேன்சுரப்பாக வெளிவிடுகின்றன. இது குத்தியுறுஞ்சும் வகையான பூச்சிகளின் குணமாக இருப்பதனால் இவ்வாறான தேன்சுரப்புகள் கீழுள்ள இலைகளில் தாவரங்களில் இன்னும் கிணறுகளில் நேரடியாக விழுவதனால் அதில் கிளடிஸ்போறியம் அல்லது கப்நோடியம் ஒருவகை என்னும் பூஞ்சணம் வளரத்தொடங்கிவிடும். இந்த பூஞ்சணத்தால் நேரடியான பாதிப்பு மனிதனுக்கு இல்லையென்றாலும் பூஞ்சணம் இலைப்பரப்பு முழுவதுமாக வளர்ந்து விடுவதனால் தாவரங்களின் ஒளித்தொகுப்பு பாதிக்கப்படுவதுடன் புஞ்சணம் வளரும்போது அவற்றினாலான தாக்கம் அதிகரித்து காணப்படும்.
மேற்கூறிய வெண்ணீ தென்னோலையின் கீழ்ப்புறத்தி;ல் அதிக எண்ணிக்கையுடையாகவே ஓலையின் இலைகளுக்குள் மறைந்து வாழ்கின்றது. இவை தற்போது யாழ்ப்பாணத்தில் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் அகன்ற இலை ஐம்பு, வாழை குறிப்பாக கப்பல் வாழை (கீழ்ப்பக்கத்து வாழையிலைகளை அவதானிக்கலாம் ) மிளகு, வெத்தலை இன்னும் பல அகன்ற இலை அழகுத்தாவரங்களின் பின்பக்கத்தில் முட்டையிட்டு பொரித்து பல்கிப் பெருகுவதை அவதானிக்கலாம். இவ்வாறாக அதிகரித்த உயிரங1கிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது சுலபமல்ல.
வெண்ணீக்கள் மென்மையான உடலமைப்பைக் கொண்ட நாலிறகுள்ள ஒருவகையான பூச்சியினத்தை சார்ந்தவை. ஆதனால் அது மென்மையானதாக ஆறு கால்களை கொண்டதாக அறியப்பட்டுள்ளது. இவற்றினால் சாறு உறுஞ்சப்படும் போது அப்பகுதி வெளிறியதாக காணப்படும். வாழைகளில் பலஇடங்களி;ல் பாரியளவில் இவ்வாறான வெண்ணீ குடித்தொகை காணப்படுகின்றன. அதிலும் அவை கீழ்ப்பகுதியிலுள்ள வாழை இலைகளில் ஓரங்குல விட்டத்திலான வட்டவடிவமான மெழுகுச்சுரப்பினை ஏற்படுத்தி அதில் முட்டையும் இட்டு இளவயது வெண்ணீ களின் பருவங்கள் அதிகமாக காணப்படுகின்றன. வாழைகளில் வெண்ணீக்களின் தாக்கம் நேரடியாக அதிகமாக காணமுடியவில்லை. ஆனால் அவை வாழையிலைகளின் கீழ்ப்பகுதியில் அதிகமாக முட்டையிட்டு இவகுவாக பரவிவிடுகின்றன. ஆதலினால் தென்னைகளுக்கு மருந்து தெளித்தால் மட்டும் வெண்ணீக்களினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால் வெண்ணீக்களின் எண்ணிக்கையை மிகவும் குறைத்துவிட முடியும்.
எனவே வெண்ணீக்களின் பரம்பல் மற்றும் அதனது தாக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. இதனது பெருக்கம் எமது சூழலுக்கு இணைவானதாக இருப்பதால் சேதம் அதிகரிக்கவும் கூடும். வெண்ணீ பல்வகைத் தன்மை கொண்ட உணவுப் பழக்கமுடையதாக இருப்பதனால் அது வீடுகளில் வளர்க்கப்படும் அழகுத்தாவரங்களில் அகன்ற இலைத்தாவரங்களில் இதனது குடிகளை காணலாம். இதுவும் வெண்ணீக்களின் பெருக்கத்தை அதிகரிக்க காரணமாக இருக்கின்றன.
வெண்ணீக்களை கட்டுப்படுத்துவது பற்றி இதற்கு முதல் கட்டுரையில் தந்திருக்கின்றேன். வெண்ணீக்களைப் போல வெப்பநிலை அதிகரிப்பிற்கு பனிப்பூச்சி (வுhசipள) என்னும் ஒருவகை பூச்சியும் மாற்றத்தை விரைந்து காட்டும். பனிப்பூச்சியின் தாக்கம் மிளகாயில் மாதுளம்பழத்தில் நிலக்கடலையில் இன்னும் தேயிலையில் அதிகமாக காண முடியும். பனிப்பூச்சியும் தாவரங்களின் இலைகளில் சுரண்டி உறுஞ்சக்கூடிய வகையினதாகும். இவற்றின் தாக்கத்தினால் இலைகள் மேல்நோக்கி சுருண்டுவிடும். இவற்றினது தாக்கத்தையும் இலகுவில் இனங்காண முடியும்.
இவை தவிர சிற்றுண்ணி (ஆவைநள) எனப்படும் ஒருவகை அங்கியும்; அதிகரித்த வெப்பநிலைக்கு ஏற்ப பெருக்கமடையும் தன்மையைக் கொண்டுள்ளது. அநேகமாக சாறு உறுஞ்சும் அங்கிகள் வெப்பநிலைக்கு இயைவடைந்து பலகிப்பெருகுவதனை நாம் அறிவு பூர்வமாக புரிந்து கொண்டால் இந்த வெப்பநிலை உயர்வினை வயலில் வீடுகளில் குறைப்பதற்கான வேளாண்காடுகள் போன்றதொரு தன்மையை உருவாக்குதல் மிகவும் சிறந்தது. அதாவது பல்வகைத் தன்மையுடைய தாவரங்களை இணைத்து பயிர்ச்செய்கையை ஏற்படுத்துவதன் மூலம் வெப்பநிலை உயர்வை ஓரளவிற்கு சமாளிக்க முடிகின்றது.
மொத்தத்தில் காலநிலை மாற்றம் என்னும் போது மாற்றத்தை நாம் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் இனி இப்படியான சிறுபோகத்தில் ஏற்படப்போகின்றது. அதற்கேற்ப நாம் எமது பயிர்களை தாவரங்களை வளர்த்து வெப்பநிலையினாலான தாக்கத்திலிருந்து பயிர்ச்செய்கையையும் எம்மையும் காப்பாற்றிக் கொள்ளலாம். வீதி அகலிப்பு மற்றும் வேறு தேவைகளுக்கு மரங்களை அகற்றும் போது அவசியம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மரங்களை அகற்றுவதை தவிர்ப்பது அவசியமானதாகும். விவசாய செய்கையில் பல்வகைத் தன்மையை முழுமையாக உள்ளீர்த்தால் இந்த இடரை நாம் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.
Diseases and pests of small onion
அச்சுவேலி இடைக்காடு வெங்காயச் செய்கையாளர்களின் கோரிக்கைக்கிணங்க இக்கட்டுரை முக்கியமாக தரப்;பட்டுள்ளது. வெங்காயத்தில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தங்களுக்கு அறியத்தந் உற்பத்தியாளர்களுக்கான பிரச்சனை பற்றிய விளக்கத்தை கேட்டிருக்கின்றார்கள். இக்கட்டுரைக்கூடாக உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னரான சேமிப்பு என்பனவற்றில் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
சின்ன வெங்காயத்தில் நோய்களானவை சூழலுடன் மிகவும் தொடர்புபட்டவை. அதிலும் அநேகமானவை பூஞ்சண நோய்களாகும். அதனால் காலமறிந்து நேரமறிந்து வெங்காயச் செய்கை செய்யப்படல் வேண்டும். பூஞ்சண நோய்கள் அதிகமாக வெளிக்கொணரும் காலத்தில் வெங்காய செய்கை செய்யப்படுமானால் இத்தகைய பூஞ்சண நோய்களை தவிர்க்க முடியாது போய்விடும். இருப்பினும் காலபோகத்து வெங்காயச் செய்கையில் இத்தகைய நிலைமை தோன்றுவதனை தவிர்ப்பதற்கு வழக்கமான வெங்காய செய்கை செய்யும் காலத்திலிருந்து முன்னதாகவே அல்லது அந்த காலத்தைத் தவிர்த்து பின்னதாகவே நடுகை செய்யலாம். ஆனாலும் தற்போதய காலகட்டத்தில் காலநிலை எவ்வாறு மாற்றமடையும் என எதிர்வு கூறுவது கடினமாகவே இருப்பதனால் எதற்கும் முன்னேற்பாடான பயிர்ச்செய்கை முறைகளைப் பின்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்வது நல்லது.
1. கீழ்ப்பூஞ்சண நோய் (னுழறநெல அடைனநற)
சின்ன வெங்காயத்தில் கீழ்ப்பூஞ்சண நோய் இலகுவில் தொற்றிக் கொள்ளும் நோயாகும். அத்துடன் இப்பூஞ்சணநோய் தொற்றுதலான விதைக் குமிழ், தொற்றுதலுள்ள வெங்காயத்தாள் மற்றும் வெங்காய குமிழ்கள் இவற்றுடன் மேற்படி பூஞ்சணத்தின் மீதிகள் மண்ணில் இருந்தாலும் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடியன. கூடிய மட்டும் இவ்வாறான பூஞ்சணத்தொற்று வெங்காயத்தில் ஏற்படாதிருக்க பார்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் நடுகை செய்து வளர்ந்து வரும் போது ஏற்படும் அசாதாரண வளிமண்டல ஈரப்பதன் மற்றும் இரவுநேர குளிர்மையான வெப்பநிலை, காலைவேளைகளில் காணப்படும் அதீத பனி என்பன இப்பூஞ்சணத்தின் தொற்று அதிகரிக்க காரணமாயிருக்கின்றன. இந்நோய் பரவினால் இலைகளின் நுனிகள் மஞ்சள்; நிறமாகவும் நோயின் தாக்கத்தினால் இறக்கத் தொடங்குவதையும் வைத்து அவதானிக்கலாம்.
அதனால் விவசாயப் பெருமக்கள் இவ்வாறான தொற்றுதல் காணப்பட்ட தறையிலிருந்து வெங்காயக்குமிழ்களை விதைக்காகப் பயன்படுத்துவதனை நிச்சயமாக தவிர்க்கப்படல் வேண்டும். மேலும் வெங்காய தாள்கள் மற்றும் பயன்படுத்தும் சேதனபசளைகளூடாகவும் இப்பூஞ்சணம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் வெங்காயத் தறையை பொலித்தி;ன் துணியால் மூடி நிலத்தின் மேற்பக்கத்தினை தொற்று நீக்கியபின்னர் வெங்காயக் குமிழ்களை நடுகை செய்யலாம். இதிலும் மேற்படி பூஞ்சணம் இறந்த சேதனப் பொருட்களில் வாழக்கூடிய வல்லமையுள்ளதனால் அவற்றை முழுமையாக அழிப்பதென்பது கடினம்.
இவ்வாறான தொற்று நோய்கள் இலகுவில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு பரவக்கூடியனவாதலால் மிகவும் கவனமாக இதனை கட்டுப்படுத்துவது நல்லது. இப்பூஞ்சணத்தின் பூஞ்சணசிறுஇழைகள், மற்றும் வித்திகள் விரைந்து தொற்று ஏற்படுத்தக் கூடியனவாகையால் இப்பூஞ்சணத்தின் எந்தப்பாகமும் நிலத்தில் விழுந்தால் முளைத்து பரவத்தொடங்கிவிடும். எனவே நோயற்ற வெங்காயத் தறைகள் தெரிவுசெய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் விதை வெங்காய குமிழ்கள் நடுகைக்காக பயன்படுத்தப்படும். விதைவெங்காயத்தை நடுகைக்காக பயன்படுத்தும் போது கப்ரான் அல்லது திராம் எனும் தொற்றுநீக்கி இரசாயனங்களைப் பயன்படுத்தலாம் அல்லது ரைக்கோடேர்மா எனப்படும் பூஞ்சண எதிரி மூலமாக இவ்வாறான பூஞ்சணநோய்களை இலகுவாக பயன்படுத்தலாம். விதை நேர்த்தி இவ்வாறான நிலைமைகளில் கைகொடுக்கும் திறன் உடையவை. வளர்ந்து வரும் வெங்காயத்தில் வேறெந்த நோயும் ஏற்படாவண்ணம் ரைக்கோடேர்மா காப்பாற்றிக்கொள்ளும்.
வெங்காய குமிழின் தெரிவு நோய்காரணிகளை தவிர்க்கும் முகமாக இருத்தல் மிகவும் அவசியமானதாகும். மேலும் விதைக்குமிழின் நேர்த்தி செய்தல் இன்னும் நோய்க்காரணிகளை தவிர்ப்பதற்கு உதவும். இவற்றுடன் நோய் பரவஆரம்பித்து விட்டால் 1 லிற்றர் நீரில் டைத்தேன் எம் 45 என்னும் பூஞ்சண நாசினியை கரைத்து தொற்றான குழிழ்களின் மேல் விசிறலாம். பூஞ்சண நாசியை விசிறும் போது பத்து நாட்கள் மூன்றுமுறை இடைவெளி விட்டு விசிறுவதாலும் கட்டுப்படுத்தலாம்.
[14.9.2022 Valampuri Newspaper]
கறுப்பிலையான் பண்ணை [ Farming of Black soldier fly - BSF ] !
This article explains about how to have a farming on Black soldier fly using a decomposing organic wastes materials. The maggots of BSF can be used as protein supplement to the chicks [poultry industry] and commercial feed for the chicken can be prepared using this as base materials.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
கோழிவளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவற்றுக்கான தீவனத்தை வாங்குவதில் தற்போதயை விலை உயர்வு பிரச்சனையாகவே உள்ளது. விலையதிகரிப்புக்கு மேலாக அவற்றிலிருந்து பெறப்படும் முட்டை மற்றும் இறைச்சி என்பனவற்றை விலையதிகரித்தே விற்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. உற்பத்தியாளனுக்கு இந்த விலையதிகரிப்பு உற்பத்திபொருட்களை விலையதிகரித்து விற்கவேண்டிய கட்டாயத்திலும் இவர்களுடன் பொருட்களை வாங்கி விற்பவர்களுக்கும் இந்த இடர்ப்பாடு மனத்தாக்கத்தை ஏற்படுத்தியே இருக்கின்றது. இவற்றை வாங்கவரும் பொதுமக்கள் விற்பவர்களை குறைசொல்வதிலேயே கருத்தாக இருப்பதனால் இந்த சந்தைப்படுத்தல் முறைமை பெருத்த பெருமூச்சுக்களுடனேயே நடைபெறுகின்றதென்பதனை அனைவரும் அவதானித்திருப்பீர்கள்.
தவிர்க்க முடியாத நிலைமையென்றாலும் உற்பத்தியின் விலை தீவனத்திலேயே முழுக்க முழுக்க தங்கியிருப்பதனால் அதனது விலையை குறைப்பதற்கான முயற்சியிது. வாருங்கள் இந்த கறுப்பிலையான் பண்ணையை (Black soldier fly farm ) உருவாக்குவது பற்றி இதில் சுருக்கமாக விளக்க முயற்சிக்கின்றேன். எதுவும் அனுபவத்தின் மூலமான செய்கை என்பதனால் முயற்சி செய்து தான் பாருங்களேன். இதற்குள் பலவிடயங்கள் பொதிந்திருக்கின்றன.
கறுப்பிலையான்(Hermetia illucens) எமது பிரதேசத்தில் அழுகலான சேதனப்பொருட்களில் இயற்கையாகவே தொற்றுதலாகி அவற்றில் பல்கிப்பெருகும் ஆற்றலுள்ளது. தாவரக்கழிவுகளாயினும் சரி விலங்குக் கழிவுகளாயினும் சரி இவ்விலையான் அவற்றில் முட்டையிட்டு அவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள் அளவு சிறிதாக ஆரம்பத்தில் காணப்படும். பின்னர் அவை கழிவுகளை உண்ணத்தொடங்கி தமது உடல் பருமனை அதிகரித்துக் கொள்ளும். இவ்வாறு பல்வேறு அளவுகளில் வளரும் புழுக்களை வயது அடிப்படையில் கோழிகளுக்கு உணவாக கொடுப்பதற்கு குறிப்பாக கோழிகுஞ்சுகளுக்கு வழங்குவதற்கு சிறந்ததாக இருக்கும். முட்டை பொரித்து வெளிவரும் புழுக்கள் ஆரம்பத்தில் சிறிய உணவுத்துணிக்கைகளை உண்ண ஆரம்பிப்பதனால் அரிசித்தவிட்டினை தூவிவிடுவது நல்லது. இலகுவாக அரிசித்தவிட்டில் உண்டு வளரும் புழுக்கள் பின்னர் சேதனக் கழிவுகளில் உண்ணத் தொடங்கிவிடும்.
சேதனக்கழிவுகள் பலவிதம்
எமது பிரதேசத்தில் உருவாகும் சேதனக்கழிவுகளில் பலவிதங்களுண்டு. இவற்றை நாம் இலகுவாக கறுப்பிலையானை விருத்தி செய்வதற்கும் அதனது புழுக்களை பல்வேறு அளவுகளில் அதிகமாக வளரச்செய்து கோழிகளுக்கு உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே சேதனக் கழிவுகள் அழுகலடையத் தொடங்கும் போதுதான் இந்த கறுப்பிலையான் அதில் முட்டையிடத்தொடங்கும். அ10தலினால் அழுகலடையும் வரையும் வேறு பூச்சிகள் மொய்க்கத் தொடங்குவதால் இக்கழிவுகளினுள் இவ்விலையானின் புழுக்கள் சிலவற்றை விடும்போது மற்றைய பூச்சிகளின் பெருக்கம் குறைவடைந்துவிடும். மேலும் உயிரியல் துறையில் செய்த ஆய்வில் கறுப்பிலையானின் புழுக்கள் பெருக பெருக ஏனைய பூச்சிகளின் பெருக்கம் மற்றும் மொய்த்தல் என்பன குறைவடைந்து இறுதியில் இப்புழுக்களே அதிகமாக பெருகி காணப்படும். புழுக்களை பட்டர் அல்லது மென்மஞ்சள் நிறமான குடம்பி பருவத்திலேயே கோழிகளுக்கு வழங்கவேண்டும். அவை வளர்ந்து கறுத்த கூட்டுப்புழுவாக மாறினால் அதனை கோழிகள் உணவாக கொள்ளாது. ஏனெனில் அவற்றினது தோல் கடினமானதாக மாறி அவற்றினால் உண்ணமுடியாததுடன் கூட்டுப்புழுவில் உருமாற்றம் நிகழ்ந்து நிறைவுடலியான இலையான் உருவாதல் நிகழ்வதனாலாகும். குஞ்சுகளுக்கு சிறிய புழுக்களையும் பின்னர் கோழிக்குஞ்சுகளின் வயதிற்கேற்ப புழுக்களை தெரிவுசெய்து வழங்கலாம்.
கறுப்பிலையான் புழுக்களிலுள்ள ஊட்டச்சத்து
கறுப்பிலையான் புழுக்களை காயவைத்து நிறுத்தெடுத்தால் அதில் 50 சதவீதமான புரதமும் 35 சதவீதமான கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இவை தவிர தேவையான அமினோ அமிலங்களும் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. இதனை கோழிகள், பன்றி, மற்றும் மீன்கள் குறிப்பாக இறால் வளர்ப்புக்கும் தீவனமாக பயன்படுத்தக்கூடியதாகும். வெளிநாடுகளில் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவில் இவ்வாறான கறுப்பிலையான் பண்ணைகள் பல உருவாக்கப்பட்டு இதனது புழுக்களை அப்படியே உணவாகவும் அவற்றை காயவைத்து அரைத்து தீவனத்திற்கேற்ற சிறு கட்டிகளாகவும் உருமாற்றி வழங்க முடியும். இது ஒரு சிறுதொழில் முயற்சி. கறுப்பிலையானை வளர்ப்பது மற்றும் அதனை உணவாக குறிப்பாக கோழிகளுக்கு உகந்த தீவனமாக மாற்றுவதனை பெருதொழில் முயற்சியாகவும் மாற்றலாம். எம்மூரில் கிடைக்கும் சேதனக் கழிவுகள் குறிப்பாக பழத்தொழிற்சாலையில் வெளிவரும் கழிவுகள், இறைச்சிக் கடையில், மீன்சந்தையில் வெளிவரும் கழிவுகளிலும் இதனை இலகுவில் வளர்க்கலாம். சேதனக் கழிவுகள் அழுகத்தொடங்கும் போது இவ்விலையான் வந்து முட்டையிடுவதனால் இவ்விலையானினால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முயற்சி செய்தால் பலனை நிச்சயம் அனுபவிக்கலாம்.
[7.9.2022 Valampuri Newspaper]
கோழி வளர்ப்பிற்கு உள்ளூர் தீவனம்!
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கும் எமக்கு நமது உணவை நாமே உற்பத்தி செய்து இப்பேரிடரிலிருந்து எம்மையெல்லாம் காப்பாற்றிக் கொள்ள வழிகள் பலவுண்டு. அதனை நாம் விரைந்து செய்தல் காலத்திற்கேற்ற கைங்கரியமாக இருக்கும். கோழி முட்டை மற்றும் இறைச்சி என்பனவற்றின் விலைகள் எகிறிச் செல்கின்றதனால் கோழிவளர்ப்பாளர்கள் ஒருவகையில் நன்மையடைந்தாலும் அதனை உணவாக கொள்பவர்களுக்கு விலையதிகரிப்பு மகிழ்வான செய்தியல்ல. இந்த விலையதிகரிப்புக்கு காரணமாக கோழித்தீவனத்தை முதன்மைப்படுத்தலாம். கோழித்தீவனத்தை எம்மூரிலேயே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பினை இங்கே தருகின்றேன். இது பற்றிய மேலதிக தகவல்கள் தேவையெனினும் அது பற்றி விரிவாக தர விரும்புகின்றேன். தீவனத்தின் உற்பத்தியில் சற்று கவனஞ்செலுத்தினால் முட்டையின் விலையை தளம்பலடையாது மக்கள ;வாங்கி பயன்படுத்தும் குறைந்த விலைக்கு விற்கக்கூடிய வாய்ப்பு உண்டென்பதனை நாமெல்லோரும் உணரமுடியும். எமது உணவில் புரதச்சத்துடன் ஏனைய சத்துக்களை பெறக்கூடிய வாய்ப்பு கோழி இறைச்சி மற்றும் முட்டையில் இருப்பதனால் அதனது கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும் விலை குறைத்து அனைத்து மக்களும் வாங்கும் நிலைக்கும் அதனை கொண்டுவரவேண்டும் என்பதும் இதனூடாக வெளிக்கொணரும் செய்தியாகும்.
கோழித்தீவனத்திற்கு இருவகையான உணவினை நாம் உள்ளீடாக பயன்படுத்த முடியும். ஒன்று தானிய வகைகள். இன்னொன்று விலங்கு உணவுகள். எமது உணவுக்காகவும் கோழித்தீவனத்திற்கு தேவையான தானியங்களையும் பயிரிடாத நிலப்பரப்பில் பயிர்செய்வதை ஊக்குவித்தல் சிறந்தது. அவ்வாறான பயிர்களில் உழுந்து, பயறு, கௌபீ, பயற்றை, கொள்ளு, காட்டுக்கொள்ளு, சணல், குரக்கன், கம்பு, இறுங்கு, சோளம்.... ஏன பலவகையான பயிர்வகைகளை விளைவித்து தீவனத்தினை தயார்செய்து கொள்ளலாம்.
தீவனத்தின் மறுபகுதியாக கோழிக்குத் தேவையான புரதம் மற்றும் விற்றமின்களை வழங்குவதற்காக பூச்சி புழுக்களை உணவாக வழங்கலாம். இங்கே புழுக்கள் என்பன எமது பிரதேசத்தில் இயற்கையாகவே காணப்படும் அழுகிய சேதனப்பொருட்களில் தானாகவே தொற்றுதலாகி வளரக்கூடிய கறுத்த வேலையாள் ஈ (Black soldier fly ) எனப்படும் ஒருவகையான இலையான். உருவத்தில் பெரிதாக காணப்படுவதனால் இதனை குளவி எனவும் பலர் தவறாக கருதுவதுண்டு. இதற்கு கொட்டும் உறுப்பு இல்லாத காரணத்தினால் மனிதனுக்கு எந்தவித தீங்கினையும் இந்த இலையான் ஏற்படுத்துவதில்லை. மேலும் இந்த இலையானின் இளம்பருவமான புழுப்பருவமே கோழிகளுக்கான சிறந்த தீவனமாக விளங்குகின்றது. முட்டையிடும் கோழிகள் மற்றும் இறைச்சிக்கான கோழிகளுக்கான உணவாக இந்த புழுக்களை அப்படியேயும் இன்னும் அரைத்து பவுடராக கோழியினது உணவில் கலந்தும் வழங்க முடியும். இது பற்றி விரிவான விளக்கங்களை தொடர்ந்து உங்களுக்கு தரவிருக்கின்றோம்.
கோழி உணவாக இந்த புழுக்களை நீங்களே உங்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்து வழங்க முடியும். வீட்டுத்தோட்டத்தில் கோழிவளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கும் கோழிகளின் உணவாக இந்த புழுக்கள் சிறந்த தீனியாக அமையும். எமக்கிருக்கும் சேதனக் கழிவில் இலகுவாக வளர்க்கக்கூடிய இப்புழுக்களை வளர்த்து கோழிகளுக்கு மீன்வளர்ப்பில் மீன்களுக்கும் உணவாக சிறந்த புரதம் மற்றும் ஊட்;டச்சத்து நிறைந்த உணவாக வழங்க முடியும். குறிப்பாக மரக்கறிக் கழிவுகள் இன்னும் பழங்களின் கழிவுகள் என்பனவற்றில் இலகுவாக மிகவும் சிறப்பாக இந்தப் புழுக்களை வளர்க்கமுடியும். சேதனக் கழிவுகள் அழுகலடையத் தொடங்கும் போது இந்த இலையான் தானாகவே வந்து முட்டையிடும் . முட்டை பொரித்து புழுக்கள் வெளிவந்த சேதனக் கழிவுகளில் வளரத் தொடங்கும். கோழிகளின் அளவுக்கேற்ப புழுக்களை உணவாக வழங்கலாம்.
தற்போதுள்ள விலைகூடிய தீவன நிலையில் இப்புழுக்களை வளர்த்து கோழிவளர்ப்பை தொடர்ந்து இலாபமூட்டும் தொழிலாக செய்ய முடியும்.
[10.07.2021 Valampuri Newspaper]
யாழ்நகரில் குடும்பப் பண்ணையில் பாசுமதி நெல்லுற்பத்தி
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உணவுற்பத்திபற்றி உலக உணவு மற்றும் விவசாய தாபனம் தொடங்கி அனைத்து நிறுவனங்களும் அதிகளவில் கரிசனை கொள்ளும் அவசரமான காலமாக தற்போதய நடப்பு நாட்களை நாம் கவனத்திற் கொள்ளலாம். கொரோனா வைரசுவின் தாக்கம் அதீத தொற்றுதலாக பரிணமிக்கும் நிலைவருவதை நடப்பு நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன.
மக்களாக நாம் பொறுப்புடன் நடந்து கொள்ளும் வரை இந்த வைரசுவின் பரவலையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தவிர்க்க முடியாமலே போய்விடும். அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை நாம் இயன்றளவிற்கு நடைமுறைப்படுத்துவதும் சுகாதராத்துறை மேற்கொள்ளும் நோய்த்தடுப்பு மற்றும் நோயெதிர்ப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிப்பதும் இன்னும் எமக்கான பாதுகாப்பினை நாமே முன்னின்று செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். இது எவரும் எதிர்பார்த்திராத இடர்காலம். அனைத்துலகுமே அங்கலாய்த்து விடைதெரியாது திகைத்திருக்கும் தருணங்கள். மருத்துவ உலகம் களைத்துவிட்டதாகவே உணர்கின்றோம். தினமும் கொரோனா நோயாளிகளுடன் காலத்தைக் கழிக்கும் வைத்தியர்கள், தாதிமார், தொழினுட்ப உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் குறிப்பாக அம்புலன்ஸ் வண்டியின் ஓட்டுனர்கள். என பலரும் அயராது உழைத்து மக்களைக் காப்பாற்றும் செயற்பாடு மிகவும் போற்றுதற்குரியது. பலரது குடும்பங்களில் பலஉயிர்களை கண்ணயராது பாதுகாத்து காப்பாற்றியதால் பலருக்கு வைத்தியர்கள்
கொரோனா அச்சுறுத்தலில் மிகவும் அவதானமாக கையாளவேண்டிய விடயமாக உணவுற்பத்தி அமைந்துள்ளது. இவ்வருட இறுதியில் உணவுக்கு பஞ்சம் வரலாம் என்ற செய்தி மிகவும் உன்னிப்பாகவும் அவதானமாகவும் கருத்திலெடுக்க வேண்டும். உணவுற்பத்தி செய்பவனுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டாலன்றி உணவுத்தட்டுப்பாட்டை நிவாத்தி செய்வது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். ஆதலினால் நாம் எமக்கான உணவு நாமே இயன்றளவிற்கு உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. நோய் நாம் எவரும் எதிர்பாராத உச்சத்திற்கு சென்றால் நாட்டை முழுமையாக முடிக்கவேண்டியும் ஏற்பட்டால் உணவுற்பத்தியும் அதனது சந்தைப்படுத்தலும் மற்றும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதும் என அனைத்திலும் அதீத கவனத்தை தற்போதிருந்தே செலுத்தினால் எந்த இடர்வந்தாலும் நாம் அதனை சமாளித்துக் கொள்ளலாம்.
அனைத்தையும் கவனத்திற்கொண்டு தற்போதய ஆண்டினை உலக பழவகைகள் மற்றும் மரக்கறிப்பயிர்களுக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள். இது கொரோனா காலத்தில் மக்களை விழிப்புடன் அவர்களுக்கு தேவையான சேதன உணவை தமது நிலப்பரப்பில் அவரவர் மனைகளில் உற்பத்தி செய்து உண்பதற்கான உந்துதலாகும். பயிர்கள், ஆடு, மாடு, கோழி, தாரா என குடும்பப் பண்ணையில் அனைத்தையும் வளர்த்து தமது சத்துணவை உற்பத்தி செய்து உண்ணும் கலாச்சாரத்திற்குள் கொரோனா கொண்டுவந்து விட்டிருப்பதனை இன்னமும் நாம் உணராமல் இருந்தால் வரப்போகும் நெருக்கடியை சமாளிக்க முடியாமலேயே போய்விடும். இந்த நிலையில் கிடைக்கின்ற நிலவசதியைப் பொறுத்து குடும்பப் பண்ணையை நாம் அமைத்துக் கொள்வதற்கான உதாரணங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் யாழ்நகரில் பொஸ்கோ பாடசாலைக்கருகில் அதிலுள்ள குளத்தின் எதிர்ப்புறத்தில் இருக்கின்ற குறுகிய நிலப்பரப்பில் தாவரங்கள் பல வளர்க்கப்படுகின்ற நிலையில் இப்போது பசுமதி நெல்லினை வளர்த்துக் காட்டியிருக்கும் பாங்கினைப் பார்க்கும் போது இனி தானியப்பயிர்களை குறிப்பாக நெல்லினை வளர்க்க முடியும் என்னும் செய்தி அனைவருக்குமுரியதாகும்;.
சகாயதேவன் என்பவரின் முழுமுயற்சியின் அறுவடையாக அவரது குறுகிய நிலப்பரப்பில் மனைத்தோட்டத்தில் பசுமதி நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகி இருப்பதனை பார்க்கும் போது எம்மவர்கள் எதை செய்யமுடியாதென்று விட்டுவைத்தார்கள். உந்துதலும் ஊக்கமும் இருந்தால் எம்மவர்கள் எதனையும் செய்து சாதனைகள் படைப்பார்கள் என்பதனை இந்த சிறு உதாரணம் எடுத்துக் காட்டியிருக்கின்றது. தாவரங்களின் வகைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு இது நல்லதொரு உதாரணம்.
வழக்கமாக நாம் பயிரிடும் நெல்லினமாக இல்லாமல் பசுமதி நெல்லினை விதைத்து அதனை பக்குவமாக வளர்த்து தற்போது அறுவடைக்கு தயாராக்கியிருக்கும் நிலையைப் பாருங்கள். சகாயதேவன் அவர்களின் வீட்டில் காணப்படும் அனைத்து தாவரங்களும் உயிர்ப்பல்வகைமையை முழுமையாக கவனத்திலெடுத்து அதனது பயன்பாட்டை உணர்ந்து பல்வகைத் தாவரங்களை முறையாக சேதனப் பசளையை மட்டும் பயன்படுத்தியும் வீட்டிலுள்ள கழிவுகளை பசளைகளாக்கியும் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இருக்கின்ற இடைவெளிகளிலெல்லாம் பயிர்களை வளர்த்திருக்கும் பாங்கு குடும்பத்திற்கு தேவையான அனைத்த உணவினையும் பக்குவமாக தெரிந்தெடுத்து ஒருங்கிணைத்து வளர்த்திருக்கின்றார். அதுவும் நகர்ப்பகுதியில் இடவசதி அருமையாக இருக்கின்ற இடத்தைத் தெரிவுசெய்து அதில் சிறப்பாக வீட்டுத்தோட்டத்துடனிணைந்த குடும்ப பண்ணையை அமைத்திருக்கும் விதம் சிறப்புக்குரியது. சுமையலறைக்கழிவுகளை ஒருவகை ஈக்களின் குடம்பியை வைத்து உக்கவைத்து பசளையாக்கி நிலத்திற்கு மீள்சுழற்சி செய்கின்றார்.
குடும்பப் பண்ணை முறைமை தற்போது மிகவும் பிரபல்யமாக வருவதற்கு பல காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டு போனாலும் அனைத்தையும் தாண்டி சிறுவிவசாயியாகவே மாறியிருக்கும் சகாயநாதன் போனறவர்களின் இவ்வாறான உற்பத்திகளும் அவர்களின் விடாமுயற்சியும் மக்களுக்கு தெரியப்படுத்தும் அதே நேரத்தில் அவர்களை இந்த துறைக்குள் ஊக்குவித்ததும் நல்ல செய்தியாகவே நாம் பார்க்கின்றோம். அவரின் இந்த முயற்சி பலரினதும் ஆர்வத்தினை தூண்டுவதாகவே அமைந்திருப்பது இன்னும் சிறப்புக்குரிய செய்தியாகும்.
கொரோன காலத்தில் உணவுக்கான பஞ்சம் வராமல் நாமாகவே உணவுற்பத்திய-pல் சிறுதளவிலாவது கரிசனை காட்டினால் அதற்கான பிரதிபலனை நாம் எதிர்பாராமலேயே கிடைக்கும் என்பது ஐதீகம் இருப்பினும் அதற்கு பஞ்சம் இல்லையென்பதனை பஞ்சத்தை விரட்ட இவர்போன்றவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை எழுதும் இக்கைகள் விரும்புகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள் சேதனமுறையில் உற்பத்தியான உணவுப் பொருட்கள் என் அனைத்திலும் நாம் கவனஞ் செலுத்து வேண்டும். இது இன்னொரு விடியலுக்கான ஆரம்பப் புள்ளியாகும்.
This article highlights the World Environment Day celebrated on June 5th and its importance with the help of local examples. Further this day also connected with Agriculture for the safety of the mother earth. This year of celebration was coupled with the Corona virus pandemic outbreak and we didn't care about the precautions to safeguard all. This can be done by the collective responsibility and accountability of the Citizen of Sri Lanka.
ஐ_ன் 5ம் திகதியான நேற்றையதினம் கொண்டாடப்பட்ட உலக சுற்றாடல் தினம் மகிழ்ச்சியை அதிகளவில் அள்ளித் தெளித்திருக்கின்றது. கடந்த வருடம் பூமி வரண்டிருந்தது இருப்பினும் அது போலல்லாது இம்முறை ஆங்காங்கே சிறுபோகத்து மழையாக இல்லாது எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. சுற்று சூழல் குளிர்வதற்குப் பதிலாக உஸ்ணமாகவே காணப்படுகின்றது. குளங்கள் குட்டைகளில் நீர் இல்லாதிருப்பினும் கிடைத்த நீரை பயன்படுத்தி நுளம்பு பெருக்கம் அதிகளவிலானதாக உணரப்படுகின்றது. சுற்று சூழல் மாற்றமடைந்திருக்கின்றது. சூழல் சுத்தமாகியிருக்கின்றது. கொரோனாவின் தாக்கத்தினால் இது உணரப்பட்டிருக்கின்றதை ஆராய்ந்திருக்கின்றார்கள்.
கொரோனா ஊரடங்கினால் விவசாயப் பெருமக்கள் தமது விளைபொருட்களை தகுந்த விலைக்கு விற்ற முடியாமல் அவதிப்பட்டதை நாமறிவோம்;. ஊரடங்கி அவரவர் வீட்டிலேயே அடங்கினதால் அறுவடைசெய்ய விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் இருந்ததால் அடுத்த முறை போகத்திற்கு விவசாயசெய்கையை தொடர்வதற்கு அவர்களிடம் பணபலம் அதிகமிருக்காது. இது இவ்வாறாயிருப்பினும் சுற்றுசூழலில் கொரோனாவினால் பல் நன்மைகள் நடந்தேறியிருக்கின்றன. மனிதர்களின் நடமாட்டம் திடீரென முடக்கப்பட்டதால் சுற்றுச்சூழலில் மாசுக்கள் குறைந்திருக்கின்றதனை நாமறிவோம். விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் அசைவற்றிருந்தன. மனிதர்களின் நடமாட்டம் முழுவதுமாக தடைப்பட்டது. உயிரினங்கள் பல தெருவுக்குள் இறங்கி வீட்டுக்குள்ளிருந்த அனைவரையும் அதிசயமாக பார்த்த காட்சிகளும் உண்டு. தொழிற்சாலைகள் அசைவற்று இருந்தமையினால் சூழல் குளிர்ந்தது. இந்த மாற்றத்தை உலக மக்கள் அனைவரும் முதன் முதலாக உணரத் தலைப்பட்டனர். இது இயற்கையின் விபரீதத்தில் ஒன்று என கூறலாம்.
தற்போதய வடபகுதி; பயிர்ச்செய்கை இன்னும அசேதன இரசாயனத்தை நம்பியதாகவே இருக்கின்றது. நம்நாட்டு விவசாயம் திசைமாறி அசேதன இரசாயனங்களின் பயன்பாட்டிற்குள் மூழ்கிவிட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டு விவசாயப் பெருமக்களின் பயிர்ச்செய்கையில் அன்றாட பயன்பாட்டு பொருளாக விவசாயத்திற்கான முதலீடுகளில் அசேதன நச்சுப்பொருட்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இது பற்றிய கரிசனை பலரிடமும் பலமட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அவசியம் எதிர்கொள்ள வேண்டிய விடயமாகவும் அதற்கான தீர்வினை எட்டுவதற்கான வழிமுறைகளையும் நாமே கண்டுபிடிக்க வேண்டும். அசேதன இரசாயனங்களில் பசளைகள், பீடைநாசினிகள் மற்றும் பூப்பதைத் தூண்டும் ஓமோன்கள், தாவர வளர்ச்;சி ஊக்கிகள், கனியவைத்தல் என பலவகைப்பட்டன பயன்படு;த்தப்படுகின்றன. இவற்றினது பக்கவிளைவுகள் பற்றி ஆய்வறிக்கைகள் தெரிவித்தாலும் அவற்றினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி இன்னும் ஐயப்பாடுகள் இருக்கவே செய்கின்றது. தீங்கற்றதென கூறப்பட்ட இரசாயனங்களினால் ஏற்படும் பின்விளைவுகள் பின்நாட்களில் பாரதூரமானதாக இருப்பதை காலங்கடந்து அறியமுடிகின்றது. இது ஒருபக்கமிருக்க பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களினால் ஏற்படும் தாக்கங்கள் மனிதனிலும் சூழலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாலும் அவற்றிலிருந்து மீளவேண்டிய அவசியத்தை உணர்ந்ததாலும் அசேதன இரசாயனங்களுக்குப் பதிலாக மாற்றுமுறைகளை பரிந்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாமனைவரும் உள்ளோம். விவசாயப் பெருமக்களும் இந்த விளைவுகளைப்பற்றி அறிந்து சிந்தித்து பயன்படுத்தும் அசேதன இரசாயனங்களின் அளவை கணிசமான அளவிற்கு குறைக்க ஒத்துழைக்க வேண்டும். பரிந்துரைப்பவர்களுக்கும் பயன்படுத்துபவருக்குமான புரிந்துணர்வு இங்கே எய்தப்படல் வேண்டும் என்பதோடு மாற்று வழிகளுக்கான நஞ்சற்ற முறைகளை விவசாய பெருமக்கள் இலகுவாக பெறுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்.
மாற்று வழிகளில் பலவற்றை பரிந்துரைக்கலாம். உயிர்ப்பசளைகள், உயிர்க்கொல்லிகள் (பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகள், களை கொல்லிகள்) மற்றும் இரைகௌவிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் நுண்ணங்கிகள் என பலவகைகளுண்டு. இவற்றைப்பற்றி ஆய்வுகளும் நிறையவே செய்யப்பட்டிருந்தாலும் எமது பிரதேசத்திற்கு உகந்ததான அங்கிகளை இனங்கண்டு அவற்றை இனம்பெருக்கி விவசாய பெருமக்கள் இலகுவாகவும் மலிவாகவும் பெற ஆவனசெய்ய செய்தல் வேண்டும். இன்னும் இவ்வகையான நுண்ணங்கிகள், அங்கிகள் பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்படல் வேண்டும். இவற்றை பயன்படுத்தும் போது அசேதன பசளைகளின் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றம், பயிர் விளைச்சலில் ஏற்படுத்தும் மாற்றம், குறிப்பாக சூழலில் ஏற்படுத்தும் மாற்றம் என்பன கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இவற்றுக்காக இத்துறைசார்ந்த மாணவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும். இவ்வாறானவற்றை பயன்படுத்தும் போது அவற்றினது தரம் நிர்ணயஞ் செய்யப்படவேண்டியதுடன் அதனை தொடர்ந்தும் கண்காணிப்பதற்கு உரிய வழிவகைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இயற்கையுணவைத் தேடி உலகமே அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது. கொரோனா வந்தது இப்படியென்றால் இனி வரப்போகும் ஆபத்துக்களை உலகம் எப்படி தாங்கப்போகின்றது. கொரோனா வைரசுவினால் பலஆயிரம் மக்கள் இறந்துபோனார்கள். இது நல்லதொரு பாடமாக அனைவருக்கும் இனிவரும் காலத்தில் இயற்கையை அனுசரித்து வாழ வழிசொல்லப்பட்டிருக்கின்றது. பொருளாதாரம் திடீரென ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணங்கியால் முடங்கிப் போயிருக்கின்றது.
விவசாயத்தில் அசேதன இரசாயன பசளைகளைப் போல உயிர்ப்பசளைகள் விரைந்து தொழிற்பட மாட்டாதவை. அதனால் பயிர்களில் உயிர்ப்பசளைகளின் தாக்கம் உடனடியாகத் தெரிவதில்லை. இது விவசாயப் பெருமக்களிடையே உயிர்ப்பசளைகளினை பயன்படுத்துவதில் தற்காலிக பின்னடைவை தோற்றுவிக்கும். ஆனால் அசேதன இரசாயன பசளைகளைப் போலன்றி உயிர்பசளைகளும் நுண்ணங்கிகளும் நின்று பெருகி மண்ணுக்கு வளஞ்சேர்ப்பனவாகும். காலப்போக்கில் உயிர்ப்பசளைகளினது தாக்கம் மண்ணிலும் பயிரிலும் உணரப்படும்.
உயிர்ப்பசளைகளை பயன்படுத்துவது விளைநிலத்திற்கும் பயிருக்கும் நல்லது. அத்துடன் அதனால் சூழல் வளப்படும். இயற்கையுடனான விவசாயத்திற்கான திறவுகோலாக அது அமையும். எமது சூழல் தொகுதி தனித்துவமானது அத்துடன் அந்நியதேசத்திலிருந்து நுண்ணங்கிகளை வரவழைக்காமல் எமது பகுதியில் உள்ள வளமான அங்கிகளைப் பிரித்தெடுத்து அவற்றை இனங்கண்டு அவற்றினது பீடைகட்டுப்படுத்தும் ஆற்றல் அல்லது தாவரத்திற்கேற்ற பசளைப் பெறுமானத்தை ஈடுகட்டும் வழிவகைகளை அறிதல் வேண்டும். உயிர்ப்பசளைகள் தாவரத்திற்கு எதுவித தீங்கையும் ஏற்படுத்தாது. மேலும் இவ்வாறான அங்கிகள் இங்குள்ள சூழலில் அதிகமாக பெறக்கூடியதாக இருப்பதனால் இங்கும் அவை பல்வேறு தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வாய்ப்புண்டு. அத்துடன் உயிர்ப்பசளைகளை கழிவுப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்தால் சாலையோரம் தேங்கிக்கிடக்கும் குப்பைகளுக்கு 'குட்பை' சொல்ல கிடைக்கும் வாய்ப்பின் மூலம் கழிவகற்றல் திட்டம் நிறைவுபெறும். வீட்டில் சேரும் தாவரக்கழிவுகளை முறையாக மீள்சுழற்சி செய்து அவற்றை இயற்கையுரமாக பயன்படுத்துவது விரிவாக்கப்படல் வேண்டும். நாம் இந்த இடர்காலத்தில் கற்றுக்கொண்டவை ஏராளம். அவற்றை அலசியாராய்ந்து இயற்கைவழி விவசாயத்திற்கு எம்மை நாம் மாற்றிக் கொள்ளாது விட்டால் இந்த அனுபவமும் வீணாகப் போய்விடும்.
இன்றைய காலகட்டத்தில் உயிர்பசளைகளை உற்;பத்திசெய்வதற்கான ஆய்வுகூட வசதி பாரியளவில் தேவைப்படுகின்றது. இவ்வாறான உயிர்பசளைகளை உற்பத்தி செய்வதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வரவேண்டியது அவசியமாகும். ஆய்வுகள் பல இன்னும் இவ்வாறான உயிர்ப்பசளைகளை உற்பத்தி செய்வதிலும் அவற்றினது பயன்பாடு, பாதிப்பு இன்னும் அவற்றினால் சூழலில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் அனைத்துமே கண்காணிக்கப்படுவதுடன் மேலும் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக விவசாயப் பெருமக்களை இவ் உயிர்ப்பசளைகளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். விவசாயப் பெருமக்களிடையே மனமாற்றத்தை கொண்டுவருவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் பலவழிகளிலும் நாம் முயற்சி செய்ய வேண்டும். விவசாயப் பெருமக்களை அசேதன இரசாயனப் பாவனையிலிருந்து விடுவித்து சேதன விவசாயத்தை செய்ய ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
இந்த மாற்றத்தை எமக்கான மாற்றமாக கொண்டு இயற்கைவழி விவசாயத்தை மேலும் முன்னெடுக்கலாம். உற்பத்தியாளர்கள் அனைவரையும் பாதுகாக்கின்ற அதேநேரத்தில் அவர்களின் உணவுற்பத்திக்கான வழிவகைகளையும் குறிப்பாக சந்தைப்படுத்தலையும் முறையாக ஏற்படுத்திக் கொடுத்தால் எமதுவிவசாயத்தைக் காப்பாற்றுகின்ற அதே நேரத்தில் எமது வளங்களையும் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். ஐ_ன் 5ம் திகதியான நேற்றையதினம் கொண்டாடப்பட்ட உலக சுற்றாடல் தினம் மகிழ்ச்சியை அதிகளவில் அள்ளித் தெளித்திருக்கின்றது. கடந்த வருடம் பூமி வரண்டிருந்தது இருப்பினும் அது போலல்லாது இம்முறை ஆங்காங்கே சிறுபோகத்து மழையாக இல்லாது எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. சுற்று சூழல் குளிர்வதற்குப் பதிலாக உஸ்ணமாகவே காணப்படுகின்றது. குளங்கள் குட்டைகளில் நீர் இல்லாதிருப்பினும் கிடைத்த நீரை பயன்படுத்தி நுளம்பு பெருக்கம் அதிகளவிலானதாக உணரப்படுகின்றது. சுற்று சூழல் மாற்றமடைந்திருக்கின்றது. சூழல் சுத்தமாகியிருக்கின்றது. கொரோனாவின் தாக்கத்தினால் இது உணரப்பட்டிருக்கின்றதை ஆராய்ந்திருக்கின்றார்கள்.
கொரோனா ஊரடங்கினால் விவசாயப் பெருமக்கள் தமது விளைபொருட்களை தகுந்த விலைக்கு விற்ற முடியாமல் அவதிப்பட்டதை நாமறிவோம்;. ஊரடங்கி அவரவர் வீட்டிலேயே அடங்கினதால் அறுவடைசெய்ய விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் இருந்ததால் அடுத்த முறை போகத்திற்கு விவசாயசெய்கையை தொடர்வதற்கு அவர்களிடம் பணபலம் அதிகமிருக்காது. இது இவ்வாறாயிருப்பினும் சுற்றுசூழலில் கொரோனாவினால் பல் நன்மைகள் நடந்தேறியிருக்கின்றன. மனிதர்களின் நடமாட்டம் திடீரென முடக்கப்பட்டதால் சுற்றுச்சூழலில் மாசுக்கள் குறைந்திருக்கின்றதனை நாமறிவோம். விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் அசைவற்றிருந்தன. மனிதர்களின் நடமாட்டம் முழுவதுமாக தடைப்பட்டது. உயிரினங்கள் பல தெருவுக்குள் இறங்கி வீட்டுக்குள்ளிருந்த அனைவரையும் அதிசயமாக பார்த்த காட்சிகளும் உண்டு. தொழிற்சாலைகள் அசைவற்று இருந்தமையினால் சூழல் குளிர்ந்தது. இந்த மாற்றத்தை உலக மக்கள் அனைவரும் முதன் முதலாக உணரத் தலைப்பட்டனர். இது இயற்கையின் விபரீதத்தில் ஒன்று என கூறலாம்.
தற்போதய வடபகுதி; பயிர்ச்செய்கை இன்னும அசேதன இரசாயனத்தை நம்பியதாகவே இருக்கின்றது. நம்நாட்டு விவசாயம் திசைமாறி அசேதன இரசாயனங்களின் பயன்பாட்டிற்குள் மூழ்கிவிட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டு விவசாயப் பெருமக்களின் பயிர்ச்செய்கையில் அன்றாட பயன்பாட்டு பொருளாக விவசாயத்திற்கான முதலீடுகளில் அசேதன நச்சுப்பொருட்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இது பற்றிய கரிசனை பலரிடமும் பலமட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அவசியம் எதிர்கொள்ள வேண்டிய விடயமாகவும் அதற்கான தீர்வினை எட்டுவதற்கான வழிமுறைகளையும் நாமே கண்டுபிடிக்க வேண்டும். அசேதன இரசாயனங்களில் பசளைகள், பீடைநாசினிகள் மற்றும் பூப்பதைத் தூண்டும் ஓமோன்கள், தாவர வளர்ச்;சி ஊக்கிகள், கனியவைத்தல் என பலவகைப்பட்டன பயன்படு;த்தப்படுகின்றன. இவற்றினது பக்கவிளைவுகள் பற்றி ஆய்வறிக்கைகள் தெரிவித்தாலும் அவற்றினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி இன்னும் ஐயப்பாடுகள் இருக்கவே செய்கின்றது. தீங்கற்றதென கூறப்பட்ட இரசாயனங்களினால் ஏற்படும் பின்விளைவுகள் பின்நாட்களில் பாரதூரமானதாக இருப்பதை காலங்கடந்து அறியமுடிகின்றது. இது ஒருபக்கமிருக்க பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களினால் ஏற்படும் தாக்கங்கள் மனிதனிலும் சூழலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாலும் அவற்றிலிருந்து மீளவேண்டிய அவசியத்தை உணர்ந்ததாலும் அசேதன இரசாயனங்களுக்குப் பதிலாக மாற்றுமுறைகளை பரிந்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாமனைவரும் உள்ளோம். விவசாயப் பெருமக்களும் இந்த விளைவுகளைப்பற்றி அறிந்து சிந்தித்து பயன்படுத்தும் அசேதன இரசாயனங்களின் அளவை கணிசமான அளவிற்கு குறைக்க ஒத்துழைக்க வேண்டும். பரிந்துரைப்பவர்களுக்கும் பயன்படுத்துபவருக்குமான புரிந்துணர்வு இங்கே எய்தப்படல் வேண்டும் என்பதோடு மாற்று வழிகளுக்கான நஞ்சற்ற முறைகளை விவசாய பெருமக்கள் இலகுவாக பெறுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்.
மாற்று வழிகளில் பலவற்றை பரிந்துரைக்கலாம். உயிர்ப்பசளைகள், உயிர்க்கொல்லிகள் (பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகள், களை கொல்லிகள்) மற்றும் இரைகௌவிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் நுண்ணங்கிகள் என பலவகைகளுண்டு. இவற்றைப்பற்றி ஆய்வுகளும் நிறையவே செய்யப்பட்டிருந்தாலும் எமது பிரதேசத்திற்கு உகந்ததான அங்கிகளை இனங்கண்டு அவற்றை இனம்பெருக்கி விவசாய பெருமக்கள் இலகுவாகவும் மலிவாகவும் பெற ஆவனசெய்ய செய்தல் வேண்டும். இன்னும் இவ்வகையான நுண்ணங்கிகள், அங்கிகள் பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்படல் வேண்டும். இவற்றை பயன்படுத்தும் போது அசேதன பசளைகளின் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றம், பயிர் விளைச்சலில் ஏற்படுத்தும் மாற்றம், குறிப்பாக சூழலில் ஏற்படுத்தும் மாற்றம் என்பன கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இவற்றுக்காக இத்துறைசார்ந்த மாணவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும். இவ்வாறானவற்றை பயன்படுத்தும் போது அவற்றினது தரம் நிர்ணயஞ் செய்யப்படவேண்டியதுடன் அதனை தொடர்ந்தும் கண்காணிப்பதற்கு உரிய வழிவகைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இயற்கையுணவைத் தேடி உலகமே அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது. கொரோனா வந்தது இப்படியென்றால் இனி வரப்போகும் ஆபத்துக்களை உலகம் எப்படி தாங்கப்போகின்றது. கொரோனா வைரசுவினால் பலஆயிரம் மக்கள் இறந்துபோனார்கள். இது நல்லதொரு பாடமாக அனைவருக்கும் இனிவரும் காலத்தில் இயற்கையை அனுசரித்து வாழ வழிசொல்லப்பட்டிருக்கின்றது. பொருளாதாரம் திடீரென ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணங்கியால் முடங்கிப் போயிருக்கின்றது.
விவசாயத்தில் அசேதன இரசாயன பசளைகளைப் போல உயிர்ப்பசளைகள் விரைந்து தொழிற்பட மாட்டாதவை. அதனால் பயிர்களில் உயிர்ப்பசளைகளின் தாக்கம் உடனடியாகத் தெரிவதில்லை. இது விவசாயப் பெருமக்களிடையே உயிர்ப்பசளைகளினை பயன்படுத்துவதில் தற்காலிக பின்னடைவை தோற்றுவிக்கும். ஆனால் அசேதன இரசாயன பசளைகளைப் போலன்றி உயிர்பசளைகளும் நுண்ணங்கிகளும் நின்று பெருகி மண்ணுக்கு வளஞ்சேர்ப்பனவாகும். காலப்போக்கில் உயிர்ப்பசளைகளினது தாக்கம் மண்ணிலும் பயிரிலும் உணரப்படும்.
உயிர்ப்பசளைகளை பயன்படுத்துவது விளைநிலத்திற்கும் பயிருக்கும் நல்லது. அத்துடன் அதனால் சூழல் வளப்படும். இயற்கையுடனான விவசாயத்திற்கான திறவுகோலாக அது அமையும். எமது சூழல் தொகுதி தனித்துவமானது அத்துடன் அந்நியதேசத்திலிருந்து நுண்ணங்கிகளை வரவழைக்காமல் எமது பகுதியில் உள்ள வளமான அங்கிகளைப் பிரித்தெடுத்து அவற்றை இனங்கண்டு அவற்றினது பீடைகட்டுப்படுத்தும் ஆற்றல் அல்லது தாவரத்திற்கேற்ற பசளைப் பெறுமானத்தை ஈடுகட்டும் வழிவகைகளை அறிதல் வேண்டும். உயிர்ப்பசளைகள் தாவரத்திற்கு எதுவித தீங்கையும் ஏற்படுத்தாது. மேலும் இவ்வாறான அங்கிகள் இங்குள்ள சூழலில் அதிகமாக பெறக்கூடியதாக இருப்பதனால் இங்கும் அவை பல்வேறு தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வாய்ப்புண்டு. அத்துடன் உயிர்ப்பசளைகளை கழிவுப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்தால் சாலையோரம் தேங்கிக்கிடக்கும் குப்பைகளுக்கு 'குட்பை' சொல்ல கிடைக்கும் வாய்ப்பின் மூலம் கழிவகற்றல் திட்டம் நிறைவுபெறும். வீட்டில் சேரும் தாவரக்கழிவுகளை முறையாக மீள்சுழற்சி செய்து அவற்றை இயற்கையுரமாக பயன்படுத்துவது விரிவாக்கப்படல் வேண்டும். நாம் இந்த இடர்காலத்தில் கற்றுக்கொண்டவை ஏராளம். அவற்றை அலசியாராய்ந்து இயற்கைவழி விவசாயத்திற்கு எம்மை நாம் மாற்றிக் கொள்ளாது விட்டால் இந்த அனுபவமும் வீணாகப் போய்விடும்.
இன்றைய காலகட்டத்தில் உயிர்பசளைகளை உற்;பத்திசெய்வதற்கான ஆய்வுகூட வசதி பாரியளவில் தேவைப்படுகின்றது. இவ்வாறான உயிர்பசளைகளை உற்பத்தி செய்வதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வரவேண்டியது அவசியமாகும். ஆய்வுகள் பல இன்னும் இவ்வாறான உயிர்ப்பசளைகளை உற்பத்தி செய்வதிலும் அவற்றினது பயன்பாடு, பாதிப்பு இன்னும் அவற்றினால் சூழலில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் அனைத்துமே கண்காணிக்கப்படுவதுடன் மேலும் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக விவசாயப் பெருமக்களை இவ் உயிர்ப்பசளைகளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். விவசாயப் பெருமக்களிடையே மனமாற்றத்தை கொண்டுவருவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் பலவழிகளிலும் நாம் முயற்சி செய்ய வேண்டும். விவசாயப் பெருமக்களை அசேதன இரசாயனப் பாவனையிலிருந்து விடுவித்து சேதன விவசாயத்தை செய்ய ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
இந்த மாற்றத்தை எமக்கான மாற்றமாக கொண்டு இயற்கைவழி விவசாயத்தை மேலும் முன்னெடுக்கலாம். உற்பத்தியாளர்கள் அனைவரையும் பாதுகாக்கின்ற அதேநேரத்தில் அவர்களின் உணவுற்பத்திக்கான வழிவகைகளையும் குறிப்பாக சந்தைப்படுத்தலையும் முறையாக ஏற்படுத்திக் கொடுத்தால் எமதுவிவசாயத்தைக் காப்பாற்றுகின்ற அதே நேரத்தில் எமது வளங்களையும் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Desert Locusts are damaging the crops in millions. Their population is built up large scale and they are moving from Iran and other South African countries and finally ends up to northern part of India. The grasshoppers eat large number of food materials and are going to keep the countries vigilant.
31.05.2020
'பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல' என சிலேடையாக கூறும் வழக்கம் எம்மத்தியில் உண்டு. ஆக மொத்தத்தில் நொந்து போயிருப்பவரை மீண்டும் நோகடிக்கின்ற கதையாக வருகின்றது எமக்கான இன்னொரு பேராபத்து. இது இம்முறை மனிதர்களில் நோயை ஏற்படுத்திய கொரோனா வைரசுவல்ல. மாறாக மனிதர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை அம்சமான உணவுற்பத்தியை அழித்தொழிக்க அந்த வைரசுவின் தாக்கத்தினுள் நாம் இன்னும் அடிபட்டுக் கொண்டிருக்கையில் படையெடுக்கின்றன பாலைவனத்து வெட்டுக்கிளிகள் (Desert Locusts)!. பாலைவனத்தில் கோடிக்கணக்கில் ஒரு செறிவான பரந்துபட்ட மழைமேகம் போல படையெடுக்கும் இவ்வாறான பூச்சிப்பீடையினத்தைச் சேர்ந்த சிறிய உணர்கொம்புள்ள வெட்டுக்கிளிகள் (Short horned Grasshoppers) ஆபிரிக்க தேசத்தில் முதலில் அதிகளவிலான சேதத்தை ஏற்படுத்திய பின்னர் வளைகுடா பகுதியூடாக நகர்ந்து ஆசிய நாடுகளின் பரப்பிற்குள் வந்தேறியிருக்கின்றன. பாகிஸ்தான் தேசத்தில் இதனது சேதம் முழுமையாக உணரப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் இவற்றினது தாக்கம் அதிதீவிரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கிழக்கு ஆபிரிக்க நாடுகளான கென்யா, எதியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை முற்றுகையிட்ட இவ் வெட்டுக்கிளிகள் அந்த நாடுகளில் பாரிய சேதத்தை உண்டுபண்ணியுள்ளன. தாவரங்களை முழுவதுமாக தின்று ஏப்பமிடும் இவ்வாறான வெட்டுக்கிளிகள் பயிர்ச்செய்கையின் போது அவ்வப்போது சிறியளவிலான சேதங்களை உண்டுபண்ணுவதுண்டு. ஆனால் தற்போதுள்ள நிலைமையை கவனமாக அவதானித்தால் இந்திய தேசத்திற்குள் வந்திருக்கும் பல மில்லியன் கணக்கிலான வெட்டுக்கிளிகள் அதனைத் தாண்டி இலங்கைப்பரப்பினுள் வருவதற்கு அதிக நேரமெடுக்காது. இதனால் நாம் முன்கூட்டியே அவதானமாக இருக்க எமது விவசாயப் பெருமக்களுக்கு அறிவூட்டல் அவசியமாகும். ஆனால் இதைப்பற்றி எமது விவசாயிகளுக்கு எவ்விதமான செய்திகளோ அல்லது விழிப்புணர்வுகளோ இதுவரையில் பாரியளவில் ஏற்படுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
வெட்டுக்கிளிகளைப் (Grasshoppers ) பொறுத்தவரையில் தற்போதுள்ள காலம் அதற்கு மிகவும் சாதகமான காலமாக உணரப்படுகின்றது. மழைகாலம் ஆரம்பித்தது போல ஆங்காங்கே மழைபெய்வதும் தென்னிலங்கையில் மழைவீழ்ச்சி அதிகமாக உணரப்பட்டுள்ள நிலையில் வெட்டுக்கிளிகள் விரைந்து இனப்பெருக்கத்திலீடுபட்டு அதிகளவில் அதுவும் மில்லியன் கணக்கில் பல்கிப்பெருகிவிட வாய்ப்புக்கள் அதிகம். நாம் விரைந்து செயற்பட்டால் இதனது தாக்கத்தை ஓரளவிற்கேனும் குறைக்கலாம். தவறினால் இதனால் உணவுற்பத்தி மிகவும் பாதிப்படைய சாத்தியக்கூறுகள் அதிகமாகும். ஒரு சதுர கிலோமீற்றர் அளவில் தொகையாக வரும் வெட்டுக்கிளிகள் ஒருநாளில் 36,000 பேர் உண்ணக்கூடிய உணவை தின்று விடுமாம் என்றால் அவற்றின் வேகத்தைப் பாருங்களேன். இப்படியே போனால் நிலைமை மிக மோசமாகத்தான் இருக்கும் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.
இவற்றினது இனப்பெருக்கத்தின் வீரீயத்தை கணக்கிட்டால் பூமிப்பந்திலுள்ள தாவரங்களின் இருபது சதவீதத்தை விரைந்து உண்ணுமளவுக்கு இருக்கும் என பூச்சியியலாளர்கள் கருதுகின்றார்கள். அத்துடன் இவ்வாறு உண்ணும் போது அது இப்பூமியிலுள்ள மக்கட்தொகையின் பத்தில் ஒரு பகுதியினருக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திவிடுவதனால் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்கின்றார்கள் புலமையாளர்கள். ஒரு பக்கம் கொரோனா வைரசுவின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் இன்னமும் நாம் போராடிக்கொண்டும் எங்கே தொற்றிவிடுமோ என்ற பயப்பீதியுடனும் எமது அன்றாட அலுவல்களை செய்யவேண்டியிருக்கும் போது உணவினை உற்பத்தி செய்வதிலும் இடர் வரின் என்செய்வது. உலக உணவு மற்றும் வேளாண்மை நிலையத்தின் தகவல்படி பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கம் முன்னைய காலங்களைவிட அதீதமாக இருப்பதாகவும் ஆபிரிக்க நாடுகளில் இது பில்லியன் கணக்கில் ஒரு படைபோல் நகர்ந்து பச்சைத்தாவரங்கள் அனைத்தையும் உணவாக்கி ஏப்பமிடுகின்றன என்றால் அதனை பயிர்செய்த விவசாயியி;ன் நிலையை எண்ணிப்பாருங்கள். பாரிய ஒரு கூட்டமாக வந்து முற்றுகையிடும் இவ்வெட்டுக்கிளிகள் ஓரிடத்தில் வந்தமரும் போது அந்த இடமே வெறுமையான எதுவித பச்சையிலைகளும் இல்லாமல் உண்டுவிடுகின்றன. அந்தளவுக்கு இவற்றினாலேற்படும் சேதம் மிக அதிகமாகும்.
இவ்வாறான நிலையில் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக பலமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள. வானூர்தி மூலம் இரசாயனங்களை தெளிப்பதாகவும் அ10னால் அதற்கும் இவ்வெட்டுக்கிளிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது அந்நாட்டு அரசாங்கங்கள் தவிக்கின்றன. நொந்து போயிருக்கும் விவசாயியின் விளைச்சலும் கைவந்து சேராவிட்டால் அவர்களால் அடுத்த பயிர்ச்செய்கைக்கு தாக்குப்பிடிக்க முடியாதுபோய்விடும். இரசாயனப் பாவிப்பு சூழலையும் அதிகளவில் மாசுபடுத்திவிடும் என்பதனால் என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்து;ப்போயிருக்கின்றனர் மக்கள். அதிகளவிலான செலவில் கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தினாலும் இவ்வகை வெட்டுக்கிளிகள் தம்மை தக்கவைப்பதற்கான அனைத்து வழிமுறைகளை பயன்படுத்துவதனாலும் இந்தப் பிரச்சனை தற்போது பூதாகாரமாக எழுந்திருகின்றது. கொரோனாவினால் பஞ்சம் பட்டினி தலைதூக்க வாய்ப்புள்ளதாக உலகளாவிய விஞ்ஞானிகளிடமிருந்து அறிக்கைள் வந்தவண்ணமே இருக்கின்றன. அவ்வாறாயின் நாம் எவ்வகை முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதனை கவனத்திற்கொள்க.
வெட்டியுண்ணும் வாயுறுப்பைக் கொண்ட வெட்டுக்கிளிகளின் உடல் கடினமானது ஆகும். எந்த காலநிலையிலும் தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான பலவற்றையும் அவை வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. பறந்து செல்வதற்கான இருசோடி இறகுகளைக் கொண்டிருந்தாலும் பின்சோடி இறகுகளால் இவை இலகுவாக பறந்து திரியக்கூடியன. அவற்றின் இளையபருவங்கள் நிறைவுடலிகளைப்போல இருந்தாலும் அவற்றுக்கு நன்றாக வளர்ந்த வெ;டடுக்கிளிகளைப் போல இலகுகள் கிடையாது. இருப்பினும் அவை விரைந்து பரவலடையக்கூடியன. மிகவும் அடர்த்தியான கூட்டமாக வரும் இந்த வெட்டுக்கிளிகளை சமாளிப்பது கடினமெனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான அதிகளவில் வெட்டுக்கிளிகளைப் பார்ப்பவர்கள் விரைந்து இதுபற்றி தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் வெட்டுக்கிளிகளினால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க முடியும். கொரோனாவினால் உணவுப்பஞ்சம் வரும் என முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டிருக்கும் நிலையில் வெட்டுக்கிளிகளின் தாக்கமும் அதிகரித்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிட சாத்தியமுண்டு. பொறுப்புணர்ந்து நாம் அனைவரும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியதும் வெட்டுக்கிளிகளின் சேதத்தை அல்லது வெட்டுக்கிளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதனை அவதானித்தால் அதனை உடன் எமக்கோ அல்லது விவசாயத் திணைக்கள விரிவாக்க உத்தியோகத்தர்களுக்கோ இன்னும் உங்களது கிராம அலுவலரிடமோ தெரிவிப்பது அவசியமானதாகும். எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இது மிகவும் அவசியமானதாகும்.
The world Toilet Day is celebrated on November 19 every year. It is estimated that 4.2 Billion people in the world didn't have proper toilets to use and this created many health problems especially spreading communicable diseases. Further although the toilets are built with sophistication if the users are not cooperating to maintain its cleanliness, will be difficulty to maintain hygienically. Hence creating awareness among the public is very essential at this stage to prevent any such diseases spreading from this tidy room. If all get together, this cleanliness could be achieved with satisfaction.
16.11.2019
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
கழிவுகளை முகாமைத்துவப்படுத்தல் என்னும் விடயம் பல கருத்தரங்குகளில் விரிவாக ஆராயப்பட்டு வருவதனையும் உரைகளில் முக்கியத்துவப்படுத்தப்படுவதனையும் நாம் அறியமுடிகின்றது. ஆனாலும் கழிவுகள் எப்படியிருந்தனவோ அப்படியே கைவிடப்பட்டிருப்பதனையும் காணலாம். கழிவுகளை அன்றாடம் அகற்றி அவற்றை முறையாக தனிமைப்படுத்தி மீள்சுழற்சி (Recycling) செய்ய வேண்டியனவற்றை மீள்சுழற்சிக்கு அனுப்பி மீதியை அதற்கான பாதுகாப்பான முறையில் அகற்றுவதே முறையாகும்.
இதற்காக சட்டங்களும் அதைவைத்து திட்டங்களும் என பல உருவாக்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களும் ஆட்சிமுறைமைகளுக்குள் இருந்தும் அதனை பொறுப்பில் இருப்பவர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என்னும் குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. வெறுமனே ஆட்சியாளர்களை குற்றஞ்சாட்டுவதோடு நில்லாமல் பொறுப்புள்ள சமூகமாக ஆற்றலுடைய தனிமனிதனாக நாம் எதனைச் செய்யலாம் என்பதனையும் ஆழமாக அணுகினால் இதற்கான விடை இலகுவில் கிடைத்துவிடும். வெளியிலிருந்து வரும் கழிவுகளை முகாமைப்படுத்துவதில் இவ்வளவு சிக்கல் என்றால் உள்ளிருந்து எமது உடலிலிருந்து வெளிவரும் மனிதக் கழிவுகளை என்ன செய்வதென்ற பிரச்சனையும் தற்போது எழுந்துள்ளது. பல இடங்களில் இன்னும் திறந்த பாதுகாப்பற்ற கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகின்றார்கள். இதனால் சுகாதார சீர்கேடு எழுவதை சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். மனிதக் கழிவுகளால் ஏற்படுத்தப்படும் நோய்கள் இறப்புக்கும் வித்திடும் என்னும் நிலையில் இதனை அவதானமாக சுகாதாரத்துடன் முகாமைப்படுத்தல் அவசியமாகின்றது.
உலகளாவிய ரீதியில் 4.2 பில்லியன் மக்கள் சுகாதாரமான முறையான கழிப்பக வசதியின்றி வாழ்கின்றார்கள் என கணிப்பீடு காட்டிநிற்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் பலநாடுகள் இணைந்து உருவாக்கப்பட்ட 17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் (17 Sustainable Development Goals) ஆறாவது இலக்கு ஆக வரையறை செய்யப்பட்டிருப்பது “அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் கழிப்பக வசதி” என்பதாகும். சுத்தமான கழிப்பகங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனினதும் சுகாதாரத்தையும் அவர் வாழும் சமூகத்தின் சுற்றுச்சூழலையும் சுகாதாரமானதாக வைத்திருப்பதற்கான முயற்சி இதுவாகும். இதன் மூலம் மனிதக் கழிவுகளினால் பரவப்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியுமென்பதுடன் ஒவ்வொரு மனிதனதும் சுகாதாரமான வாழ்வுக்கான அடித்தளமாகவும் இது அமையப்பெறும். 2030ஆம் ஆண்டளவில் ஒவ்வொருவருடைய சுகாதாரமான வாழ்வும் நிர்ணயஞ் செய்யப்படுகின்றதற்கான முயற்சியாகவே இதனை உருவாக்கியிருக்கின்றார்கள்.
நவம்பர் 19ம் திகதியை உலக கழிப்பக தினமாக (World Toilet Day) அறிவிக்கப்பட்டு வருடாவருடம் சுத்தமான சுகாதாரமான கழிப்பகத்தை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுடன் இத்தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. இவ்வருட (2019) உலக கழிப்பக தினத்திற்கான கருப்பொருளாக 'எவரையும் தவிர்த்தலாகாது (Leaving no one behind) என்பது முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு www.worldtoiletday.info என்னும் இணையத்தளத்தை அணுகலாம். இதுபற்றிய கழிப்பகங்கள் பற்றிய பேச்சுக்கள் (Toilet talks) பல்வேறு மட்டங்களில் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இணையத்தள வாயிலாக பல பேச்சுக்கள் பதிவும் செய்யப்பட்டிருக்கின்றன (https://marcuserridge9.wixsite.com/toilettalks). மாணவர்களுக்கு கல்வியில் கழிவக சுகாதாரம் பற்றியும் சுத்தமான கழிப்பகங்களை வைத்திருப்பது பற்றியும் அறிவுறுத்த வேண்டும். பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடாத்துவதும் இது பற்றி கட்டுரைகளை பிரசுரிப்பதனால் மக்களுக்கு முறையான கழிப்பகங்களை பயன்படுத்தி சரியான வழியில் சுகாதாரத்தை பேணுவதற்குரிய விழிப்புணர்வை வழங்குவதன் மூலம் தனிமனித, குடும்ப இன்னும் சமூக சுகாதாரத்iப் பேண முடியும்.
ஜப்பான் நாடு முன்மாதிரியாக...
ஜப்பான் நாட்டில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களை முதலில் தமது கழிப்பகங்களை சுத்தப்படுத்தியபின் தினமும் கற்றல் செயற்பாட்டை ஆரம்பிப்பதை முகப்புத்தகத்தில் வெளியான காணொலியில் கண்டு ஆச்சரியமடைந்தோம். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே கழிப்பகங்களை சுத்தஞ்செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்குள் கழிப்பக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை நடைமுறை பழக்க வழக்கத்தின் மூலம் கற்பிப்பதனை இது வெளிக்காட்டியிருக்கின்றது. ஒவ்வொருவரும் கழிப்பக சுகாதாரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதனை இந்த கற்றல் செயற்பாட்டு நடைமுறையினூடாக வெளிப்படுத்துவதனை காணலாம். இதற்கு பெற்றோரின் முழுமையான ஆதரவும் வழங்கப்பட்டிருக்கின்றது. கழிப்பகங்களை சிறப்பாக கட்டிவைப்பதனால் மட்டும் கழிப்பக சுகாதாரத்தைப் பேண முடியாது. அவற்றை பயன்படுத்துபவர்களும் ஒத்துழைக்க வேண்டும். பொது கழிப்பகங்களை எமது கழிப்பகமாக ஒவ்வொருவரும் நினைவிலிறுத்திக் கொண்டால் அதனை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
நமது மலசலகூடம் படும்பாடு.
மலங்கழிப்பதற்காக கழிப்பகத்தைப் பயன்படுத்துபவர்கள் முறையாக நீரை ஊற்றி அதனை சுத்தஞ் செய்துவிட்டு சென்றாலே மற்றையவர் முகஞ்சுழிக்காமல் அதனை பயன்படுத்த முடியும். பலர் கழிப்பகங்களை பயன்படுத்தியபின் முறையாக நீர்ஊற்றி கழிப்பகத்தை சுத்தப்படுத்துவதில்லை. இது பலருக்கு அசௌகரியத்தையும் துர்நாற்றத்தையும் உருவாக்குவதனால் அதனை பயன்படுத்த முடியாது போவதையும் காணலாம். தமது கழிவை சுத்தப்படுத்துவதில் சிலர் அருவருப்பதையும் காண முடிகின்றது. தமது மலக்கழிவைப்பார்த்து அருவருப்பவர் மற்றையவரின் நிலையை கொஞ்சமேனும் எண்ணிப் பார்ப்பதில்லை. சிறுநீர் கழிப்பவர்கள் கூட அதனை முறையற்று கழிப்பதனால் மற்றையவர்கள் அதனை உடனடியாக பாவிக்க முடியாதிருக்கின்றது.
ஆண்களுடைய (மல)சல கூடத்தில் வந்த மாத்திரத்தில் அவருக்குள்ளிருக்கின்ற அவசரத்தில் முன்னாலுள்ள பேசனுக்குள் கவனமாகக் கழிக்காமல் வெளியில் சிந்திவிட்டும் செல்கின்றதனை அவதானிக்கலாம். இதனால் அந்த இடத்திலேயே துர்நாற்றம் எழும்பத் தொடங்கிவிடும். மலசல கூடத்தினுள் மலத்தைக் கழிக்கும் போது அதிலிருந்து புகைப்பவர்கள் விட்ட புகையின் மணம் மலக்கழிவின் மணத்தைவிட துர்நாற்றமாக இருப்பதாக பலர் குறைபட்டுக்கொள்வதுமுண்டு. இந்த விசித்திரத்தில் சிலர் மலசல கூடத்தில் கூட தொ(ல்)லைபேசியை பயன்படுத்துவதனையும் காணலாம். இதற்குக் கூட அவருக்கு தனியான நேரமில்லை என எங்களூர் பெரியவர் முணுமுணுத்தார். மலக்கழிவை வெளியேற்றியவர் தொலைபேசி உரையாடலுடனேயே அதனை கழுவக்கூட நேரமில்லாமல் சென்றுவிடுவதனையும் காணலாம். அடுத்து வருபவர் கழித்தவரின் கழிவை கழுவிய பின்னரேயே பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அறிவு சார்ந்த சமூகத்தின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
பெண்களுடைய மலசல கூடத்தில் அவர்கள் தமது மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் நப்கின்களை (Sanitory napkins) அப்படியே மலக்குழிக்குள் இட்டுச் செல்வதனால் அனைத்தும் சேர்ந்து அந்தக் குழாயை அடைத்து நீர் தேங்கி துர்நாற்றமும் நுளம்பும் பெருகுவதற்கு வாய்ப்பாகி விடுகின்றது. இதனைத் தவிர்ப்பதானால் பயன்படுத்திய நப்கின்களை அதற்குரிய வாளியினுள் பொதியிட்டு வைத்தால் சுகாதாரமான முறையில் அதனை அகற்ற முடியும். இதற்கான வசதிகள் கழிப்பகங்களில் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
மலசல கூடங்களுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க முடியாதிருப்பது இதற்கொரு காரணமாகும். CCTV காமராக்களை மலசல கூடங்களுக்குள் பொருத்த முடியாதிருப்பதனால் இந்த கண்காணிக்கும் பொறிமுறை இடர்ப்படுகின்றது. ஆனால் இதற்கான கண்காணிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டு பயன்படுத்துபவர்களை அறிவுறுத்தினாலன்றி சுகாதாரமானதாக மலசல கூடங்களை பயன்படுத்த முடியாது.
குறிப்பாக மலசலகூடத்தை சுத்தஞ் செய்பவர்களின் மனநிலையைக் கூட எவரும் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களும் மனிதர்களே என்னும் உணர்வு கூட எழுவதில்லை. மலசல கூடத்தை சுத்தமாக பாவிப்பவர்கள் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. ஒரு சிலர் செய்கின்ற அநாகரீகமான செய்கைகளால் அனைவரும் பாதிக்கப்படுகின்றார்கள். மலசல கூடங்களைச் சரியாக முறையில் பயன்படுத்தாதவர்களுக்கு அந்த மலசல கூடத்தை அன்றைய தினம் சுத்தப்படுத்துவதை தண்டனையாக அறிவிக்க வேண்டும்.
எது எப்படியிருப்பினும் 'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதற்கிணங்க எமது மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான கழிப்பகத்தைப்பற்றியும் கழிப்பகத்தை பயன்படுத்துவது பற்றியும் அறிவுறுத்த நடவடிக்கைகள் மேலும் எடுக்கப்படல் வேண்டும். எதனையும் 'எமது' என எண்ணினால் அதனை நாம் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்வோம். இந்த மனமாற்றம் எமக்குள்ளே முதலில் வரும்வரை எம்மால் மார்தட்டி எதனையும் செய்யமுடியாது என்பதனை புரிந்து கொள்ளுங்கள். தரமான கல்வியில் இத்தகைய விடயங்களும் உள்ளடக்கப்பட்டு மாற்றம் ஒன்றினூடாக எழும் விழிப்புணர்வு ஒன்றே இதனை என்றோவொரு நாள் முழுமைப்படுத்தும் என எண்ணலாம்.
Articles in websites on Environment, Agriculture, Biodiversity, Ecosystem and Plant protection
உலகளவில் உருக்கொண்ட உணவுப்பஞ்சம்! - Click here
The power of the nation is in the development of Villages. The overall development of all the villages will immensely contribute and become the development of the country. The resources of every village have to be identified and based on the identified resources plans should be developed through public participation and their desire and those plans should be implemented giving priorities.
கிராமத்திலுள்ள வளங்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவதன் மூலம் கிராமத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் அதேநேரத்தில் அங்குள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் போரினால் மற்றும் விபத்துக்களால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட இன்னும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.
17.02.2018
ஒரு தேசத்தின் பலம் கிராமத்திலிருக்கின்றது என கூறுவார்கள். கிராமத்தின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஓவ்வொரு கிராமத்திலிருக்கும் வளங்களை முறையான தரவுகளின் படி கணக்கெடுத்தால் அந்தந்த கிராமங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களை நிபுணர்களின் உதவியுடனும் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கேற்பவும் வகைப்படுத்திக்கொள்ளலாம். கிராமத்திலுள்ள வளங்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவதன் மூலம் கிராமத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் அதேநேரத்தில் அங்குள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் போரினால் மற்றும் விபத்துக்களால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட இன்னும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். கிராமத்து மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் எந்த தொழிற்றிட்டத்திற்கும் இதனூடாக வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தால் வாழ்வாதாரப்பிரச்சனைக்கு அடிப்படைக்காரணமாக இருக்கின்ற தனிமனித மற்றும் குடும்ப வருமானத்தை பெருக்குதல் (Income generation) என்பது இலகுவாக ஆகிவிடும். ஆக மொத்தத்தில் நாம் அனைவரும் கிராம சக்தி என்னும் இந்த கருப்பொருளுக்கூடாக சாதாரண நடைமுறையில் கடைப்பிடிப்பனவற்றிலிருந்து மாற்றி யோசிக்கும் காலகட்டத்திற்கு வந்திருக்கின்றோம்.
இலங்கையில் முக்கியமான உணவுப்பொருட்கள், கால்நடைப் பொருட்கள் மற்றும் மீன்களை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் என ஏறக்குறைய 200 பில்லியன் உணவுப்பொருட்கள் வருடாவருடம் இறக்குமதி செய்யப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவ்வாறான பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடியனவாகவும், தரமானதாகவும் அதன்மூலம் உணவுக்காக செலவழிக்கும் அந்நிய செலாவணியையும் சேமித்துக்கொள்ள முடியும். எமது நாட்டினது மக்களின் உணவுப்பழக்கத்தை கருத்தில்கொண்டால் இன்னும் மக்கள் உணவு உட்கொள்ளும் வழக்கத்தை அவதானித்தால் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி ஒருவர் தினமும் 200கிராம் மரக்கறியுணவும் பழங்களும் உட்கொள்ளவேண்டும். ஆனால், தற்போதய கணிப்பின்படி ஒருவரின் உணவு 100 கிராமாகவே இருக்கின்றது. அதாவது நாம் தினசரி உள்ளெடுக்கவேண்டிய உணவின் அளவில் சரிக்கரவாசியையே உணவாக உள்ளெடுக்கின்றோம். கடலுணவுகளை கருத்தில் கொண்டால் பரிந்துரைக்கப்பட்டட அளவான 60கிராம் கடலுணவுக்குப் பதிலாக தனியொருவரின் உணவில் 40கிராம் மட்டுமே உள்ளெடுக்கப்படுவதான கணிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் ஒருவர் சராசரியாக தினமும் 100மி.லீ கால்நடை பாற்பொருட்களை உள்ளெடுப்பதற்குப் பதிலாக மிகவும் குறைவான அளவையே உட்கொள்ளுவதும்; கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் ஊட்டச்சத்து குறைவான உணவினை உட்கொள்ளுவதாகவும் அதன்காரணமாக ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைவடையும் போது அது பலநோய்களுக்கு அடித்தளமிட்டுவிடும். குறிப்பாக உடலிலுள்ள கலங்கள் மற்றும் புன்கலன்கள் சரியாக செயற்படாமல் போய்விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துவிடுகின்றது. உடல்நலக்குறைபாடுடைய மக்களை கொண்டிருக்கும் தேசமாக நம்நாடு மாறிவிடக்கூடாது என்பதற்கான கரிசனை தற்போது பலரிடமும் உருவாகியிருப்பது நல்லசெய்தியாக இருப்பினும் அதற்காக மாற்று வழிகளை நாம் பரிந்துரைக்கவேண்டிய அவசியமான நிலையிலுமுள்ளோம். தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்கூடாக ஊட்டச்சத்து அதிகமுள்ள தரமான உணவுப்பொருட்கள் கிடைக்கச் செய்தல் வேண்டும். இதற்காக அனைவரும் சேர்ந்து உழைக்கவேண்டும்.
கிராம சக்தி என்னும் இந்த கருப்பொருளுக்கூடாக ஒவ்வொரு குடும்பத்தினதும் தனிமனித வருமானம் மற்றும் குடும்ப வருமானம் என்பன அதிகரிப்பதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கான வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களையும் நாம் ஏற்படுத்திக்கொடுத்தாக வேண்டும். பயிர்ச்செய்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் தற்போது காலநிலை மாற்றத்தினால் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய காரணிகளை முந்திக்கொண்டு காலநிலைமாற்றம் (Climate change) அனைவரையும் மாற்றத்திற்குள்ளாக்கியிருக்கின்றது.
இதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய உணவுற்பத்தி திட்டத்தினூடாக முக்கியமான நோக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன. நாட்டினை உணவுற்பத்தியில் தன்னிறைவு கொண்டதாக மாற்றிக்காட்டுதல். அதற்காக உணவுற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உற்பத்தியாகும் உணவும் நஞ்சற்ற மற்றும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அதிகமாக உற்பத்தியாகும் போது அதனை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வழிகிடைக்கும் அதன்மூலம் எமது உள்ளூர் உற்பத்தி;ப் பொருட்களை வெளிநாட்டு சந்தையில் விற்பனைக்கு விடும்போது அதனாலான அந்நியசெலவாணியும் கிடைக்கும்.
எமது பிரசேதத்திலுள்ள வளங்கள் கிராமரீதியாக இனங்காணப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்குமான திட்டங்கள் தனித்தனியாக தீட்டுப்படல் வேண்டும். ஒரேமாதிரியான வளங்களுடைய அண்டைக்கிராமங்களை தேவையேற்படின் ஒனறிணைக்கலாம். கிராமஞ்சார் திட்டங்களானமையால் உடனடியாக இவை அமுல்படுத்தப்படல் வேண்டும். இத்திட்டங்களில் உணவுற்பத்தியானது உள்வாங்கப்படும் போது அங்குள்ள விவசாயிகளுக்கான உணவுற்பத்தி பற்றிய தேவையான தகவல்களையும் அவர்களது உற்பத்தியினை தகுந்த விலைக்கு விற்பதற்கான சந்தைவாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
உணவுற்பத்தியின் போது நாம் பயன்படுத்தும் தற்போதய பயிரினங்களை ஒருகணம் மீள்கணிப்பிற்குள்ளாக்க வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. காலநிலைமாற்றத்தினால் ஏற்படும் பயிரிழப்பிற்கு காரணமாயிருக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டாலன்றி விவசாயிகளினால் சிறப்பான விவசாயச்செய்கையை செய்யமுடியாதிருக்கின்றது. முன்னைய காலத்து பயிர்ச்செய்கை முறைகளிலிருந்து தேவையான மாற்றங்களை உள்வாங்கி தற்போதய பயிர்ச்செய்கையை சமகால பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கக்கூடியதான வகையில் பயிர்ச்செய்கையில் புதிய சூழலுக்கிணைவான தொழில்நுட்பங்களை உள்வாங்கி தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். விவசாய செய்கையில் பிரச்சனைகளாக உள்ள பீடைகள் மற்றும் நோய்களின் பிரச்சனைகள் இவற்றினைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூஞ்சண நாசினிகள் உள்ளடங்கலாக பீடைநாசினிகள் மேலதிக பயன்பாடு அவற்றினாலான சூழலில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் என்பன கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும். மேலும் பயிர்ச்செய்கைக்கு தேவையான உள்ளீடுகளான சிறந்த விதை, பசளை, பீடைக்கட்டுப்பாட்டு முறைகள், நீர் மற்றும் வளமான மண் என்பனவற்றை கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகளைப் பற்றியும் நாம் அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.
எமது பிரதேசத்திற்கு அவசியமாக தேவையான சூழலுக்கிணைவான தொழில்நுட்பங்களின் உருவாக்கம் தற்போது உணரப்பட்டுள்ள நிலையில் உலகில் வேறு இடங்களில் பயன்பாட்டிலுள்ள எமக்கு அநுசரணையான தொழில்நுட்பங்களை எமது மக்களுக்கு அறிமுகஞ்செய்வதனை இன்னும் தொடருதல் வேண்டும். மேலும் இவ்வாறான தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நாம் கண்டாகவேண்டும். விவசாய பெருமக்களுக்கு தேவையான பரிந்துரைகள் கிரமமாக கிடைப்பதற்கான பொறிமுறையும் ஏற்படுத்தப்படல் வேண்டும். விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்குள்ளால் எமது விவசாயியையும் விவசாயத்தையும் நாம் உள்வாங்கி செல்லவேண்டும் என்பதும் அவசியமானதாகும்;.
உற்பத்தியாகும் விளைபொருட்களை சேமிக்கும் தன்மை அதற்கான சேமிப்பு களஞ்சிய அறைகள் அவற்றை மதிப்பேற்றஞ் செய்து புதிய பொருட்களாக உள்ளூர் மற்றும் உலகசந்தைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிவகைகள். இன்னும் அவற்றிற்கு தேவையான தரநிர்ணயம் (Quality testing), பொதி செய்தல் (Packaging) மற்றும் அடையாளப்படுத்தல் (Branding or labelling) என்பன இதில் கவனத்திற்கொள்ள வேண்டும். இவையனைத்தையும் கவனத்திற்கெடுக்கும் போது உற்பத்திச்செலவினத்தையும் கணிசமான அளவிற்கு குறைப்பதற்கும் அதன்மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இதற்காக பயிர்ச்செய்கையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் கவனத்திற் கொண்டு; திட்டங்கள் தீட்டப்படல் வேண்டும்.
மேலம் எந்த திட்டமானாலும் விவசாய பெருமக்கள், விவசாய பண்ணையாளர்கள், விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் உணவு விற்பனை நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் ஏனைய உணவுற்பத்தியுடனும் அதனது பயன்பாட்டுடனும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துக்கள் பெறப்பட்டு சிறந்த வினைத்திறனான திட்டங்களாக அவை உருவாக்கப்பட்டால் அவற்றின் நடைமுறைப்படுத்தல்கள் இலகுவாகவும் நாம் எதிர்பார்த்த பலனையும் தரும்.
மக்கள் மயப்படுத்தப்பட்ட எந்த திட்டமும் மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக அந்தந்த கிராமத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டால் அவை இலகுவாக மக்களின் வரவேற்பினையும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வருமானத்தை அதிகரிக்கவும் அதன்மூலம் அவர்களுக்கான சிறந்த வாழ்க்கை இந்த நஞ்சற்ற நிறைவான தேசத்தினால் வழங்க முடியும். பயிர்ச்செய்கை வெறுமனே பயிர்களை வளர்ப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல மாறாக கால்நடை பகுதியின் பங்களிப்பும் அவசியமானதாகும். கால்நடை மற்றும் பயிர்;செய்கை என்பன இணைந்த பயிர்ச்செய்கை தொகுதியை பரிந்துரைப்பது அவசியமானதாகும். இதனை ஒருங்கிணைந்த பண்ணைப் பயிர்ச்செய்கை என அழைக்கலாம். கிடைக்கின்ற சேதன பசளைகளை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்புக்களை நாம் இன்னமும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நன்மை தருகின்ற நுண்ணங்கிகளின் பயன்பாட்டினையும் நாம் விரிவாக்க வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்வு கொள்ள மண்ணில் பயிர்ச்செய்கையில் நன்மைதரும் பல நுண்ணங்கிகளின் பயன்பாட்டினை நாம் அதிகரிக்க வேண்டும். அவற்றை தொழிற்சாலை பொருட்களாக உருவாக்கி எம்மவர்கள் வாங்கி பயன்படுத்த வழிசமைத்தல் வேண்டும்.
மேலும் எமது பிரதேசத்திலுள்ள பல தாவரங்கள் குறிப்பாக மூலிகைத்தாவரங்கள் பயனுள்ளதாகவும் அதிக விலைக்கு விற்க முடியுமாயினும் அதற்காக நிறுவனக் கட்டமைப்பு இன்மையால் அதனை பெரியளவில் உற்பத்தி செய்து விற்கமுடியாதிருக்கின்றது. இவ்வாறான மூலிகைகளை விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு அவசியமாகின்றது. இதற்காக நாம் அனைவரும் பாடுபடுதல் அவசியமாகும்.
கிராம சக்தி என்பது நாம் இதுவரை உணர்ந்திராத பலமான சக்தியாகும். விவசாயப் பெருமக்களையும் பொது மக்களையும் தொழிற்றுறையாளர்களையும் இணைக்கின்ற பாலமாக ஒரு பொறிமுறையை உருவாக்கி தகவல்களை பரிமாற்றும் வழிவகையையும் நாம் ஏற்படுத்திக் கொண்டால் அதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் புத்துயிர் கொடுப்பதற்கான வழிவகைகளை செய்யமுடியும். முயன்றால் எதுவும் முடியும் என்பதனை முழுமையாக நாம் நம்புவோமாக.
The Good message from International Family Farming
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலக குடும்பவேளாண்மைக்கான ஆண்டாக (International year of Family Farming) 2014 இனை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தினால் [ United Nations ] பிரகடனப்படுத்தப்பட்டு உலக உணவு ஸ்தாபனத்தின் [Food and Agriculture Organization] அனுசரணையுடன் அனுஷடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. உலகெங்குமிருக்கின்ற மக்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த அணுகுமுறையை ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் உருவாக்கியிருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை அடிப்படையாக வைத்து தற்போது இதனை தொடர்ச்சியாக 2028 ஆண்டு வரை தொடர்ந்து பத்தாண்டு (Decade of International Family Farming – 2017-2028) காலப்பகுதிக்குமாக பிரகடனப்படுத்தியிருக்கின்றது.
20.01.2018
குடும்ப வேளாண்மையில் பலவிதமான நன்மைகளுண்டு. இருக்கின்ற வளங்களை வினைத்திறனான வகையில் பயன்படுத்துதல் மற்றும் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் வேளாண்மையினை முனைப்புடன் செய்வதே இதன் நோக்கமாகும். குறிப்பாக பயிர்ச்செய்கைக்கான வேலையாள் தேவையினை குடும்ப விஞ்ஞான தொழில்நுட்பத்தினூடாக புதிய எளிய கண்டுபிடிப்புக்களை [Simple novel innovations] வேளாண்செய்கையில் பயன்படுத்துவதும் இதனது இன்னொரு எதிர்பார்ப்பாகும். அத்துடன் நொந்துபோயிருக்கின்ற மக்களுக்கான தீர்வாகவும் குடும்ப வேளாண்மை அமையும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
2008 ஆம் ஆண்டு ஆபிரிக்க ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க கண்டங்களிலுள்ள 60 நாடுகளில் உள்ள 350 நிறுவனங்களிணைந்த உலக கிராமிய மன்றத்தினால் உலக குடும்ப வேளாண்மைக்கான ஆண்டினை 2014 இல் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு பிலிப்பைன்சு நாட்டினது கோரிக்கைக்கு இணைவாக 37வது உலக உணவு ஸ்தாபனத்தினது மாநாட்டு அமர்வில் பிரேரிக்கப்பட்டதற்கு இணைவாக ஐக்கிய நாடுகளின் 66வது பொதுக்கூட்டத்தில் 2014ம் ஆண்டினை உலக குடும்ப வேளாண்மைக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உலகளாவிய நாடுகளின் அரசாங்கங்களுடன் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான திட்டம் மற்றும் உலக உணவு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம் [Food and Agriculture Organization] ஆகியனவற்றுடன் உலக உணவு ஸ்தாபனத்தின் அனுசரணையும் பெறப்பட்டு வெற்றிகரமான திட்டமாக இதனை உருவாக்கி காட்டியிருக்கின்றார்கள்.
உலக குடு;ம்ப வேளாண்மை பத்தாண்டினது முக்கிய நோக்கமாக குடும்ப வேளாண்மையின் தரத்தை மேலுயர்த்துதலும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இலாபத்தை உயர்த்துதலுடன் பசி பட்டினியிலிருந்து மக்களை பாதுகாத்தல்; உணவு பாதுகாப்பினை வழங்கல் இவற்றுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தலுமாகும். இதனை அடியொற்றி உலக உணவு ஸ்தாபனத்தின் நடவடிக்கைகள் உலக மையங்களிலுள்ள நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறுபட்ட உணவுற்பத்தி, வாழ்வாதார உயர்ச்சி மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றுடன் இணைந்து கொண்டது. மலர்ந்திருக்கும் 2018ம் புத்தாண்டு குடும்ப வேளாண்மைக்கு மேலும் முக்கியத்துவம் கொடுப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவரும் என நம்புவோம்.
குடும்ப வேளாண்மையின் முக்கியத்துவம் எமது பிரதேசத்தைப் பொறுத்த வரையில் நஞ்சற்ற உணவுற்பத்தியிலும் பலவகையான உணவுற்பத்தி மற்றும் போரில் உறவுகளை, உடமைகளை இன்னும் குடும்ப தலைமையை இழந்திருக்கும் மக்களுக்கு நன்மை பயத்தலாகும். உலகளாவிய ரீதியில் சிறிய விவசாயிகளின் கருத்துக்களை உலகம் உன்னிப்பாக றியோ20 எனத்தலைப்பிட்டு உலகளாவிய மாநாட்டில் கலந்தாலோசித்திருக்கிள்றது. அதற்கும் மேலாக ஐக்கிய நாடுகளின் கவனத்தை குடும்ப வேளாண்மை ஈர்த்திருப்பதற்கும் காரணமுண்டு. உலகலாவிய ரீதியில் பார்த்தால் உணவுற்பத்தி அனைவருமிணைந்த செயன்முறையாக பரிணமித்திருப்பதனால் குடும்ப வேளாண்மையில் குடும்ப அங்கத்தவர்கள் பங்கு கொண்டு அவரவர் திறனுக்கேற்ப வசதிக்கேற்ப சிறு சிறு வேலைகளை செய்து கொடுப்பது முக்கியத்துவமாகிறது. குடும்பத்தினது உழைப்பு முழுமையாக உள்வாங்கப்படுவது இதில் அவசியமானதொன்று.
குடும்ப வேளாண்மையின் ஓரங்கமாக வீட்டுத்தோட்டம் [Home garden] அமைப்பது வடபகுதியைப் பொறுத்தவரையில் நஞ்சற்ற உணவை [Poison-free food] மக்கள் உட்கொள்ள வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டதாகக் கொள்ளலாம். வீட்டுத்தோட்டத்தில் பலவகையான சிறிய எளிய பாரம்பரிய முறைசார்ந்த தொழில்நுட்பங்களை உள்வாங்லாம். மேலும் நஞ்சற்ற உணவின் அவசியத்தை அனைவரும் தற்போது உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய நாடுகளின் பிரேரணை முன்மொழியப்பட்டிருப்பதும் இதனை மேலும் வலுவூட்டுவதாக இருக்கின்றது. அதிலும் சேதன வேளாண்மையின் ஊடாக உற்பத்திசெய்யும் உணவினை உட்கொள்வது இங்கே சாலப்பொருந்தும். அசேதன இரசாயனங்களின் அளவற்ற பாவனையினால் மக்களுக்கேற்படும் அசௌகரியங்களை குறிப்பாக மக்களது சுகாதாரம் பற்றிய விடயத்தை முன்னிறுத்தலாம். சேதன வேளாண்மையை ஊக்குவிக்கும் விடயங்களை மக்கள் மன்றங்களில் அவசியம் கலந்துரையாடி அதன் மூலம் நஞ்சற்ற உணவினை மக்கள் பெறுவதற்கு ஆவன செய்வது அவசியமாகும். வடபகுதியில் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தப்படும் பீடைநாசினிகள் [Pesticides] மற்றும் அசேத இரசாயனப்பசளைகள் [Inorganic Fertilizers] என்பவற்றின் பாவனையை மட்டுப்படுத்துவதற்கும் பீடைகளைக் கட்டுப்படுத்துவற்கு பீடைநாசினிகள் தவிர்ந்த ஏனைய வழிமுறைகளை பயன்படுத்துவதற்கும் மாகாண மட்டத்தில் பல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இவற்றுடன் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வினை [Creation of Awareness] ஏற்படுத்துவதன் மூலம் அவர்களினை குடும்ப வேளாண்மைக்குள் குறிப்பாக வீட்டுத்தோட்டத்தின் முழுமையான பங்குதாரர்களாக மாற்றிவிடலாம். வடபகுதியில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுள் தொடர்ந்தும் இப்பீடைநாசினிகளின் தாக்கம் பலமானதாக மக்களின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டிருக்கின்றது. இதனை நாம் அவசியமான விடயமாக கருத்திற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரத்தில் அவர்கள் நஞ்சற்ற உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
சேதன விவசாயம் பற்றிய கலந்துரையாடலில் ஐPவஉயிர் வேளாண்மை [ Biodynamic Farming] பற்றிய விளக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். சேதன வேளாண்மையினை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களுடன் கிராமிய மட்;டத்தில் பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கு படுத்தி மக்களின் முழுமையான பங்களிப்பினூடாக நஞ்சற்ற உணவினை உற்பத்திசெய்யும் காலத்தை எதிர்பார்த்திருக்கின்றது. இது அனைவரும் இணைந்து செயற்படுத்த வேண்டிய விடயமாகும். வெறுமனே அங்கும் இங்குமாக திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்த்து உண்மையாக இனிவரும் எமது சந்ததியை வளமானதாக வாழவைக்க உழைத்தல் அவசியமாகின்றது. விவசாயம் சார்ந்த அனைவருக்குமான தலையாய பணியாகவும் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சேதன வேளாண்மையை முன்னெடுக்க கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இறுதியில் கைகூடாமல் போனதை கசப்பான அனுபவமாக கொள்ளாது இன்னும் பல்வேறுபட்ட முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வது அவசியமாகும். எமது சூழலை நாம் பாதுகாக்க தவறினால் நாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு மேலும் முகங்கொடுக்க முடியாது போய்விடும். குடும்ப வேளாண்மை என்பதனை மையப்படுத்தி இவ்வாண்டு செயற்பாடுகளுக்குள் சேதன வேளாண்மையை முன்னிலைப்படுத்தி செயற்திட்டங்களை தீட்டுதல் முக்கியம் பெறுகின்றது.
எமது சூழலை நாமே பாதுகாக்க தவறினால் எமது எதிர்கால சந்ததி வாழ்வதற்கு வழியில்லாமல் போய்விடும். இதனை நாம் அனுபவமூடாக தெரிந்தும் உணர்ந்தும் இன்னும் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நாம் இத்தேசத்திற்கு செய்யும் துரோகமாகவே கொள்ளவேண்டும். வாருங்கள் அனைவரும் இணைந்து சேதன வேளாண்மை உலகத்தை கட்டியெழுப்புவோம். இது சொல்லிச் செல்வதற்கல்ல செய்து காட்டுவதற்கான அறைகூவலாகும்.
Being in the same family replacing Palmyrah with Coconut is why?
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
பனை எங்கள் சூழல், பனை எங்கள் பண்பாடு, மற்றும் எங்கள் பொருளாதாரம் என்னும் வடமாகாண பனை ஆராய்ச்சி நிலையத்தின் பனை அபிவிருத்தி கண்காட்சி திறப்பு நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியிருக்கின்றது. மறைந்த வள்ளல் மில்க்வைற் தொழிலதிபர் கலாநிதி கனகராசா அவர்களின் நன்முயற்சியால் வடபுலமெங்கும் பல இடங்களில் பனைகள் ஓங்கி வளர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. பாதையெங்கும் பார்த்து பார்த்து நடவுசெய்யப்பட்ட பனைகள் இன்று நீண்டு நிமிர்ந்து வளர்ந்து தனக்குரிய இறுமாப்புடன் காணப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. சுயநலம் பாராது அன்னார் செய்ய நற்காரியம் இன்று பலஇடங்களில் கண்ணூடாக காணக்கிடைக்கின்றது. இப்படியான பெரியவரை நினைவுகூரும் இவ்வாரம் சிறப்புக்குரியது.
23.12.2017
வரண்ட வலயத்துக்குரியதென அடையாளப்படுத்தினாலும் பனையின் மகத்துவம் அளப்பரியது. பனை என்பது வெறும் மரமல்ல அது ஒரு மனித சமூகத்தின் அடையாளம். பனை என்பது வெறும் ஜடமல்ல. அது ஒரு சூழலின் தோற்றுவாய். பனை என்பது பத்தில் ஒன்றல்ல. அது ஒரு தலவிருட்சத்தின் உருவகம். பனை என்பது ஈரெழுத்து மட்டுமல்ல.வடமாகாணத்தின் அடையாளங்களில் முக்கியமானது பனை என்னும் கற்பகதரு. இது எமக்குரிய அடையாளமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அது ஒருவித்திலையின் உயர்ச்சி. கற்பகதருவாக கொள்ளப்படுகின்ற பனையின் பயன்பாடு மிகவும் உன்னதமானது. வடபகுதியைப் பொறுத்தவரையில் பனை வளம்மிக்கதாக காணப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டியதாகவும் இது இருக்கின்றது. மரத்திற்கு அரசியல் தெரியாது. ஆனால் மரத்தை அரசியல் காரணி ஆக்கியிருக்கிறோம். பனைமரங்கள் செழிப்பாக காணப்படுகின்ற இடங்களில் நாம் எதிர்பார்த்த சூழல் பேணப்படுகின்றது எனலாம். எமது வாழ்வியல் பனைசார்ந்த சூழல் தொகுதியினுள்ளேயே உள்வாங்கப்பட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம். இதனை பலர் உண்ர்ந்திருந்தாலும் அநேகமானவர்கள் உணர தவறியிருக்கின்றார்கள். இயற்கையின் சுகத்தை அனுபவிக்காத நகரவாசிகளுக்கு நிச்சயமாக இதனது அருமை தெரியவராது என்றாலும் உண்ண உணவாக, உறையுளாக, உடையாக இன்னும் பலவழிகளில் பனையின் பெறுமதி உள்ளார்ந்திருக்கின்றது.
ஆனால் பல்லாண்டு காலமாக இருந்த அசாதாரண சூழ்நிலைமாறி இந்த மண் அபிவிருத்தி காண துடிக்கின்றபோது தானாக முளைத்திருக்கும் பனையை குறிப்பாக வடலிகளை இரும்பு கரங்கள் கொண்டு பிடுங்கியழித்துவிட்டு அதே குடும்பத்தைச் சேர்ந்த தென்னையை நடவு செய்கின்றார்கள். அண்ணனை பிடிங்கி வெளியே எறிந்து விட்டு தம்பியை நடவுசெய்வதற்கு ஒப்பானது இது. ஒரு குடும்பத்து (தாவர வகைப்படுத்தலில் பாமேசியே என்னும் குடும்பத்துள் பனையும் தென்னையும் உள்ளடக்கப்படுகின்றன) உறவுகளுக்குள் ஏனிந்த பாகுபாடு. இது பனைக்கான முக்கியத்துவத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்காதததனால் ஏற்பட்ட விளைவாகும். பனையின் பயன்பாடுகளை நாம் தொழில்நுட்பம் சார்ந்து முன்னோக்கி நகர்த்தாததன் எதிரொலியாகவும் இதனைக் கருதலாம். தென்னையை நடுவதனால் பிற்காலத்திற்கு அதன் பயன் கிடைக்கும் என்பதற்கு மேலாக பனையிலிருந்து கிடைக்கும் பயன்பாடுகளை நாம் அதே இலாபத்துடன் சந்தைப்படுத்த முடியாதிருப்பதும் இன்னொரு காரணமாகும்.
இங்குள்ள மக்கள் பனைசார் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தவர்கள் வாழுகின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. கற்பகதரு என விரும்பியழைக்கப்படும் பனையின் சிறப்புக்கள் பலப்பல. மரம் முழுக்க முழுமையாக மனிதனுக்கு பயன்படக்கூடியது என்பதனாலேயே இதற்கு இவ்வளவு சிறப்பும். ஓங்கி வளர்ந்து, தனித்து நின்று ஓங்கியடிக்கும் காற்றுக்கும் சுழற்றியடிக்கும் சூறாவளிக்கும் தாக்குப்பிடிக்கும் மரம் என்பதுடன் வெள்ளத்திலும் கால்பதித்து நிற்கும் தன்மை வாய்ந்தது என்பது இந்த அடைமொழிக்கு உரிமையானதாகின்றது. பனை மரத்திற்கு மறுக்கப்படும் அந்தஸ்து இங்குள்ள மனிதருக்கு மறுக்கப்படும் உரிமைக்கானதாகும். ஆனால் என்னவோ தெரியவில்லை வடமாகாண சபையின் மரமாக பனைக்கு அந்த உரிமம் மறுக்கப்பட்டிருக்கின்றது. மருது மரத்திற்கு அந்த உரிமை கொடுக்கப்பட்டதன் சூட்சுமமும் இன்னும் புரியவில்லை. தமிழ்நாட்டின் மரமாக பனை அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போது எம்மால் ஏன் இந்த மதிப்பைக் கொடுக்க முடியவில்லை. உரியவர்களிடமே இதனை பரிசீலிக்க விட்டுவிடுவோம்.
பனை எமது சொத்து. அதனை நாம் பாதுகாக்க தவறினால் இயற்கையின் சீற்றத்திற்கு நாம் உள்ளாகவேண்டி வரும் என்பதனையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். எமது சூழலை நாம் பாதுகாப்பது போலன்றி வராது. நிஷh புயல் வந்த போதும் சுனாமி வந்தபோதும் கரையோரத்தில் பலஉயிர்களை பனை காத்திருக்கின்றது என்பதனை அந்த அனாத்தத்திற்குள் சிக்கியவர்களைக் கேட்டால் தெரியவரும். எமக்கு நல்லனவற்றைத் தருகின்ற பனையை நாம் தெய்வமாக பாதுகாக்க வேண்டும். வெட்டிச்சரித்து கொண்டாடக்கூடாது. இயற்கையை அனுசரித்து நாம் வாழப்பழகவில்லையாயின் அதன்பின் வரும் அனைத்து துன்பங்களுக்கும் முகங்கொடுக்க தயாராகவும் வேண்டும்.
இயக்கச்சியிலிருந்து பளைநோக்கி ஏ9 பாதையில் பயணிப்பவர்களுக்கு பாதையோரத்தில் பனையும் அரசமரமும் அல்லது பனையும் ஆலமரமும் இணைந்திருக்கும் காட்சி நிச்சயம் தட்டுப்படும். தனித்தனியே இருக்க முடிகின்ற இருமரங்களும் இணைந்திருக்கின்ற விசித்திரமென்ன? ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் இரு விருட்சங்களும் ஒன்றாக இணைந்து எமக்கு இயற்கையின் செய்தியாக சொல்கின்ற செய்தியென்ன? இரண்டும் இருவகைகளைச் சார்ந்தன. ஓன்று ஒருவித்திலை [Monocotyledon] (பனை-Palmyrah) மற்றையது இருவித்திலை [Dicotyledon] (ஆலமரம் அல்லது அரசமரம் – Ficus tree) தாவரங்கள். இருப்பினும் தமக்கான அடையாளங்களை உயர்ந்து வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடு;த்து அவரவர் தனித்துவத்தை வெளிக்காட்டி காட்டும் விந்தையை இயற்கை நமக்கு பாடமாக கற்றுக்கொடுக்கின்றது. எமது அடையாளங்களை நாம் பாதுகாப்பதை விடுத்து இன்னொருவர் சிரத்தையெடுத்து பாதுகாப்பார் என நாம் எண்ணக்கூடாது. நாம் நாமாக இருக்கின்ற வரையில் எமக்கான அடையாளத்தை தொலைக்காதவரையில் எமக்கான அனைத்தும் கிடைக்கும் என்பது செய்தியாக மட்டுமல்லாது எமக்கான படிப்பிiனாகவும் கருதலாம். பனை சூழல் தொகுதியில் இன்னொரு மரத்தையும் இணைத்து பல்வகைத்தன்மையை இனங்காட்டி அதிலும் தான் உயர்ந்து வளர்ந்து தனது அடையாளத்தை காட்டி நிற்பதை காணுங்கள்.
இயற்கையின் கொடையாக எமக்கு கிடைத்த பொக்கிஷமே கற்பகதரு. இயற்கையின் வனப்பில் பனைமரங்களின் சலசலப்பில் அதனது சுகந்தத்தை அனுபவிக்க கிடைத்தவர்கள் பேறு பெற்றவர்களாவர். எமக்காக இயற்கை தந்த அரும் கொடையை பாதுகாக்க அமரர் கனகராசா எடுத்த முயற்சிக்கு நாம் கொடுக்கும் கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையுமே அவரின் ஞாபகமாக இவ்வாரத்தில் பனைக்கான வாரமாக கொண்டாடுவது. இந்த முயற்சிக்கு எம்மாலான ஆதரவை கொடுப்பதுடன் வடபுலத்து மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக்கலந்திருக்கின்ற பனையின் விருத்திக்கு நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபடுவதுடன் பனை பற்றிய நல்ல செய்திகளை மக்களுக்கு அறியத்தருவதுடன் அதனது பயன்பாட்டையும் நாம் விரிவுபடுத்துவோமாக.
(Ecological Agriculture will reduce the usage of Inorganic chemicals !)
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலகத்தில் தினந்தினம் பல மாற்றங்கள் இயற்கையாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இயற்கையோடு இயைந்து வாழ நாம் தலைப்பட்டிருப்பது நல்ல செய்தியாகவும் அதற்காக எடுக்கப்படும் முயந்சிகளும் பாராட்டத்தக்கது. இன்னொரு பசுமைப்புரட்சியினூடாக (Another Green Revolution) பலரும் எதிர்பார்ப்பதைப்போல வெறுமனே உணவுற்பத்திப் பெருக்கத்துடன் முன்னிற்காது அனைவருக்கும் நிறையுணவு அதிலும் சத்துணவு என்பனவற்றை விரைந்து பெற்றுக்கொடுக்கும் மக்களிணைந்த கூட்டுமுயற்சியாகவே இருக்க வேண்டும். அறுபதுகளில் நடந்தேறிய பசுமைப்புரட்சியின் பலன்களை நாம் உணவில் அதன் உற்பத்தியில் பெற்றிருக்கின்றோம் என்பதை மறுப்பதற்கில்லை.
16.12.2017
ஆனால் எந்தவொரு தொழில்நுட்பமாயினும் அதனை தவறான வழியில் பிரயோகிக்கும் போது நாம் எதிர்பார்த்த பலன்களுக்கு மேலாக பாரதூரமான விளைவுகளையும் நாம் சந்திக்கவேண்டியேற்படுகின்றது. இது தவிர்க்க முடியாததாக இருப்பினும் பசுமைப்புரட்சியின் விளைவாக திருந்திய கலப்பின பயிரினங்களை பயன்படுத்திய போது அவை உள்ளீடுகளில் முழுக்க முழுக்க தங்கியிருந்ததாலும் உள்ளீடுகளின் பாவனை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு பெருகியதாலும் எமக்கும் சூழலுக்கும் இதனால் பாதகான விளைவுகள் ஏற்பட காரணமாயிற்று என்பது நெருடலான செய்தியாகும். பசுமைப்புரட்சியினூடாக உணவுற்பத்தியை விரைந்து பெருக்கியதால் ஒருபக்கத்தில் உணவின்றி மடியும் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்பது உண்மைதான். இது ஒரு நல்ல விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பதற்கப்பால் பசியால் வாடிய உயிர்களுக்கு உணவளித்த பெருமை இது சார்ந்த விஞ்ஞானிகளைச் சாரும். இந்த வியத்தகு புரட்சியைச் செய்தவர் போர்லாக் ஆவர். தானியப் பயிர்களில் ஏற்படுத்திய இந்த அதீத விளைச்சல் உலகப்பசியை போக்கிய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. இதனை உலகமே வியந்து வாழ்த்தியதையும் இதில் குறிப்பிட்டேயாக வேண்டும். அதே பசுமைப் புரட்சி நீண்டகால நோக்கில் பல பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனை தற்போது நாமெல்லோரும் உணரத் தொடங்கியிருக்கின்றோம். பாதிவழியில் காரணம் கண்டறிய இடம்விடாது உயிர்களை அவசரமாக அநியாயமாக காவுகொள்ளும் போது மனதில் எங்கேயோ நெருடுகின்றது. புற்றுநோய் என தெரிந்து இறப்பவர்கள் சிலர், மாறாக இது இன்னது என தெரியாது இறப்பவர்கள் பலர். இனந்தெரியாத சிறுநீரக நோய் (CKDu-Chronic Kidney Disease of unknown aetiology) என மருத்துவம் அடையாளப்படுத்தியபோது பலர் இதனால் இறந்துவிட்டார்கள். என்ன செய்வதென தெரியாது அனைவரையும் திக்குமுக்காட வைத்திருக்கும் இவ்விளைவுகளைப் பற்றி அனைவரும் ஆழமாக அக்கறையுடன் சிந்திக்க வேண்டிய தருணமிது.
பயன்படுத்தப்படும் அசேதன இரசாயனங்கள் (Inorganic chemicals) மிகவும் ஆபத்தானவை. வெறுமனே யூரியா என்றாலும் எதுவும் அளவுக்கதிகமானால் நஞ்சாகிவிடும். இங்கே பயன்படுத்துபவை நஞ்சென்றாலும் அதனை வாங்கியே பயன்படுத்த அனைவரும் விரும்புகின்றனர். குறிப்பாக இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தான் அதிகளவிலான புற்று நோயாளர்கள் (Cancer patients) இனங்காணப்பட்டிருப்பது அனைவரும் கவனிக்க வேண்டிய விடயம். புற்று நோயென்பது ஆட்கொல்லி நோய். ஈவு இரக்கம் எதுவுமின்றி வயது வேறுபாடின்றி இன்னும் ஆண் பெண் என்ற எதுவித பேதமுமின்றி திடுதிப்பென கவர்ந்திழுக்கும் நோயிது. அண்மையில் இறந்தவர்களை ஆராய்ந்து பார்த்தால் குறிப்பாக மரக்கறி மட்டும் உணவுண்ணும் மனிதர்கள் பலர் இறந்திருப்பதும் அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்தால் அதில் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அசேதன இரசாயனங்களை முன்னிலைப்படுத்த முடிகின்றது. ஆனாலும் அசேதன இரசாயனங்களால் தான் புற்றுநோய் என்பதை அடித்துக்கூற விஞ்ஞானம் இன்னும் முனைந்து கொண்டேயிருக்கின்றது.
ஆரம்பத்தில் புற்றுநோயை இனங்காண முடிந்தால் சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் எனவும் மேலும் உணவு மூலம் ஏற்படும் புற்றுநோயை இல்லாதொழிக்க பயன்படுத்தப்படும் அசேதன இரசாயன பாவனையை மட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். மேலும் எமது பழக்க வழக்கங்களும் இதற்கு ஒத்துப்போவதாகவும் பாக்குவெற்றிலையை வாயினுள் வைத்து மென்னுபவர்களுக்கு வாய்வழிப் புற்றுநோய் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சுண்ணாம்பினையும்; புகையிலையினையும் தொடர்ந்து வாயினுள் வைத்து மென்னுபவர்களுக்கு வாய்புற்றுநோய் (Mouth cancer) உருவாக வாய்ப்புக்கள் அதிகமாகும். நோயின்றி மக்கள் வாழ்வதற்கான வழிவகைகளை நாம் கண்டாக வேண்டும்;. உலக நடப்புக்களில் இவ்வாறான விளைவுகளை சமாளிக்கத்தக்கதான உணவுற்பத்தியை அடுத்த நுற்றாண்டின் கண்டுபிடிப்பாக நாம் காணவேண்டும். விவசாயத்தின் பக்கத்தில் இதற்கான விடையை நாமே தேடிக்கொள்ள வேண்டும்;. தினமும் பணங்கொடுத்து மரக்கறியுடன் நஞ்சையும் வாங்கிச்செல்லும் எங்கள் உறவுகளின் மரணத்திற்கு நாமும் காரணமாக இருக்கின்றோம் என்பதை மறுக்கமுடியாது.
இதற்கு விவசாய பெருமக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். மாறாக பீடைநாசினிகளில்லாத பயிர்ச்செய்கைக்கான வசதிவாய்ப்புக்களையும் நாம் தேடிக்கொடுக்க வேண்டும். இதில் இலைப்பசளைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இலைப்பசளைகளின் தொழிலைத்தான் மண்புழு திரவம் செய்கின்றது. விளைநிலத்தில் விவசாயியினால் செய்துகொள்ளக்கூடிய இதனை அனைவரும் பயன்படுத்தி எமது பூமியை வளமாக்குவதோடு மாசடைவதிலுமிருந்து தவிர்க்கலாம். விவசாயியின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழுவினை (Earthworm) வளர்ப்பதன் மூலம் சிறந்த மண்புழு உரத்தையும் மண்புழு திரவத்தையும் பெற்றுக்கொள்ளலாம். சேதன விவசாயத்திற்கான அடிப்படையாக இவை அமைந்திருப்பது எமக்குண்டான ஆறுதல் தரும் செய்தியாகும். தற்போது மண்ணிற்கு பயன்படுத்தும் பசளைகளை மட்டுப்படுப்படுத்தினால் மட்டுமே நிலம் மாசாவது தடுக்கப்படும். இந்நிலையில் நிலத்திற்கு பயன்படுத்தும் பசளைகளை விட அதற்கு மாற்றீடாக இலையினால் அகத்துறிஞ்சப்படும் பசளைகளை விசிறுதல் சிறந்தது.
இலைக்கான போசாக்கு என்பது ஊட்டச்சத்து கரைசலை இலைக்கு விசிறும் போது இலையினூடக அவை அகத்துறிஞ்சப்பட்டு தாவரத்திற்கு பயன்படுவதாகும். இங்கே அதிகமானளவில் ஊட்டச்சத்து கரைசலை பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுவதுடன் தாவரத்திற்கும் தேவையான அளவில் ஊட்டச்சத்து கிடைக்கும். இலையினூடாக பசளைப்பிரயோகம் சூழல் மாசடைவதையும் வெகுவாகக் குறைக்கும். அதிகளவில் மண்ணினுள் அசேதன பசளைகளை பிரயோகிக்காது தேவைக்கேற்றளவில் பசளைகளை பிரயோகிப்பதே சிறந்தது. இந்த எளிய தொழில்நுட்பத்தை உள்வாங்குவது சூழல் மாசடைவதை தடுக்கும் என்பதால் அதனை நாமும் கடைப்பிடிக்கலாம்.
உயிர்ப்பசளைகளின் பிரயோகத்தை அதிகரிக்க வாய்ப்புக் கிடைக்கும் போது அசேதன பசளைகளின் அளவினையும் நாம் கணிசமான அளவிற்கு குறைத்திட முடியும். இதற்காக தற்போது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் சூழலியல் விவசாயத்தினூடாக எமது சூழலை சுத்தமாக வைத்திருக்கவும் அதிலுள்ள அனைத்து உயிரிகளினதும் பயன்பாட்டைப் பெற்று விவசாயச் செய்கையை மேம்படுத்த முடியும் என அறியமுடிகின்றது. உலக உணவு தாபனம் (Food and Agriculture Organization) சூழலியல் விவசாயத்தை (Ecological Agriculture)
முன்வைத்து நடாத்திய போட்டிகளில் பரிசு பெற்ற வரைபடம் தானிது. மாணவர்களை இன்னும் மக்களை ஊக்குவித்து நஞ்சற்ற உணவுற்பத்தி வழிகளுக்குள் நாம் முன்னோக்கி நகரவேண்டும். நாம் வாழும் பிரதேசத்து சூழலியல் தன்மைகளை அவதானித்து அதற்கேற்ப பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டால் நஞ்சற்ற தேசத்தின் குரலை பலமாக கேட்கமுடியும்.
(World Soil Day – December 5)
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலக மண் தினம் (World Soil Day) டிசெம்பர் 5ந்திகதி கொண்டாடப்பட்டிருக்கின்றது. உலகளாவிய உணவு மற்றும் விவசாய நிறுவனம் (Food and Agriculture Organization) இதற்காக பல வழிகளை கையாண்டு இந்த தினத்தை உலகமக்கள் அனைவரும் அறிந்துணர செய்திருக்கின்றது. உலக மண் தினத்தின் முக்கியத்துவம் பற்றி உலகமே கொண்டாடவேண்டிய தேவை எழுந்துள்ளதற்கு பல காரணங்களை இனங்கண்டாலும்; அவற்றுள் உள்ளார்ந்து எழுந்திருக்கும் முக்கியகாரணமாக அதனது வளத்தை குறிப்பிடலாம்.
09.12.2017
மண்ணின் வளம் என்பது மண்சார்ந்திருக்கின்ற அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையையும் அவற்றின் வாழிடத்தையும் இவற்றினால் மண்ணின் தன்மையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களையும் சுட்டிநிற்பதாக பொருள் கொள்ளலாம். மண் அல்லது நிலம் என்பதனூடாக உயிர்ப்பின் தன்மையை வெளிக்காட்டுகின்றதனை காணலாம். அதாவது மண்ணிற்கு உயிருண்டு என கூறுவதில் தப்பேதுமில்லை. மண்ணிலுள்ள உயிர்ப்பின் தன்மையை அதில் பயிரிடும் எந்த வகையான பயிராக இருந்தாலும் அதன் வளர்ச்சியில் உற்பத்தியில் மண்ணின் பங்களிப்பு மிக மிக அதிகம். சிறந்த ஒரு ஊடகமாக மண் இருக்கின்றது என்னும் உண்மையை நாம் அநேகமான இடங்களில் மறந்தேபோய்விடுகின்றோம்.
மண் என்பது ஒரு கலவை எனவும் வெறுமனே மண்துணிக்கைகளால் ஆனது என்று நாம் கணித்துவிடக்கூடாது. கலவையானாலும் இந்தக்கலவை பல்வேறுபட்ட உயிரினங்களின் வாழிடமாக இருக்கின்றதென்றால் நம்பமுடிகின்றதா? மண்ணினுள் பல்வேறு வகையான அங்கிகள் வாழ்கின்றன. பொதுவாக இந்த அங்கிகள் இன்னும் நுண்ணங்கிகள் மண்ணை வளப்படுத்தும் செயற்பாட்டுக்காகவே மண்ணில் பொதிந்திருக்கின்றன. மாறாக தீமை தரும் நுண்ணங்கிகள் மற்றும் உயிரினங்களும் இதனுள் உள்ளடக்கம். மண்ணில் அதிகளவில் நன்மைதரும் நுண்ணங்கிகள் காணப்படும் போது அதனை நாம் வளமுள்ள மண்;ணாக எண்ணுகின்றோம். நுண்ணிங்கிககள் மற்றும் அங்கிகளற்ற மண்ணில் எதுவுமிருக்காது. அதாவது அந்த மண்ணுக்கு உயிர்ப்பிருக்காது. மண்ணில் காணப்படும் அங்கிகள் மற்றும் நுண்ணங்கிகளின் இயக்கத்தினால் காபன் வட்டம், நைதரசன் வட்டம் என பலவகையான ஊட்டச்சத்து மாற்றங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு மண்ணில் உள்ள நுண்ணங்கிகளினதும் அங்கிகளினதும் செயற்பாடு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இந்த பூகோளத்தில் மண்ணினை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? மண்ணினை சிறப்பானதாக நீண்டகாலத்திற்கு வாழ்தகைமையுள்ளதாக முகாமைத்துவப்படுததி பாதுபாப்பதனால்; பலவிதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக காலநிலை மாற்றத்தினாலேற்படும் பிரச்சனைகளை வெற்றிகொள்வதற்கு, பஞ்சத்தை இல்லாதொழிக்க, குடிப்பதற்கு நல்ல நீரை பெற்றுக்கொள்வதற்கு, உயிர்ப்பல்வகைத்தன்மையை பாதுகாத்துக்கொள்ள, இன்னும் மாறிவரும் சூழல்நிலைமைகளுக்குள் எம்மை பழக்கிக்கொள்ள, வரட்சியை தாக்குப்பிடிக்க, வாழ்வாதாரத்தை முன்னேற்ற, சூழல் மாசாக்கிகளின் அளவினை குறைக்க, சூழலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆகும். மண்ணில் சேதனகாபனின் அளவினை அதிகரிக்க தற்போது எங்களிடமுள்ள மண்ணினை அவசியம் நாம் பாதுகாக்கவேண்டும். உலகத்திலுள்ள மண்ணானது காபனினை அதிகளவில் கொண்டிருப்பதனால் அது வளியில் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைப்பதற்கு உதவுகின்றது. மூன்றில் ஒரு பகுதி மண் விரயமாக்கப்பட்டிருக்கின்றது. பூமியிலுள்ள மண்ணினை பாதுகாப்பதனால் 51 ஜிகா டன்கள் காபனை வளிமண்டலத்திலிருந்து மண்ணினுள் பதிக்கமுடியும். இதனால் காலநிலை மாற்றத்தினை நாம் இலகுவாக எதிர்கொள்ள முடியும். 2015 இலிருந்து 2050 வரையான காலப்பகுதியில் உணவுக்கான தேவை 49சதவீதத்தினால் அதிகரிக்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாய உற்பத்திகள் அதிகரிக்க வேண்டிய தேவையும் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு உணவூட்டவேண்டிய பொறுப்பும் முன்னெழுந்துள்ளது. இதன்மூலமே நாம் இனங்கண்ட பேண்தகு அபிவிருத்திக்கான நோக்கங்களை அடையமுடியும். இவையெல்லாவற்றிற்கும் எமக்கு வளமுள்ள மண் (குநசவடைந ளழடைள) அவசியமாகின்றது. வளமான மண்ணில் தேவையானளவு மண்காபன் நிறைந்திருக்கும் போது அது பயிர்களை சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கும் பயிர்கள் சிறப்பாக வளர்வதற்கும் வழிசெய்கின்றது. குறிப்பாக ஊட்டச்சத்துக்களின் மீள்சுழற்சியும் நீர் வடிந்து செல்லும் தன்மையும் மண்ணில் நீர்சேமிப்பதற்கான வழிவகைகளும் மேன்மையுறுவதற்கு இது வழிவகுக்கும். மண்ணில் சிறப்பான முகாமைத்துவத்தின் மூலம் மண்காபனின் அளவை அதிகரிப்பதால் உணவுற்பத்தியை வருடமொன்றுக்கு 17.6 மெகாடன்களால் அதிகரிக்க முடியும் என அறிய முடிகின்றது. இதன் மூலம் மொத்த உணவுற்பத்தியை வரட்சியான காலப்பகுதியிலும் அதிகரிப்பதற்கு வழிகிடைக்கும்.
அவ்வாறாயின் மண்ணிலுள்ள காபனின் அளவை; அளந்தறிய முடிந்தால் பலபிரச்சனைகளுக்கு விடைகண்டிடலாம். ஆனால் இவ்வாறு அளவிடுவது இலகுவான காரியமன்று. அதற்காக அதிகரித்த செலவும் அதிகமான வேலைப் பளுவும், இன்னும் சிறந்த ஆய்வு கூடமும் அவசியமாகும். அநேகமான நாடுகளில் மண்ணிலுள்ள காபனை மதிப்பிடுவதற்கு தேசிய மண்பற்றிய தகவல்கள் முழுமையாக இல்லை. ஆனாலும் வேறுபட்ட முறையியலினூடாக மண்ணிலுள்ள காபனை மதிப்பிடுவதும் சரியான தகவல்களை முழுமையாகத் தராது. இந்நிலையில் தான் உலக மண்தகவல் தொகுதி (Global Soil information system) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலாவது உற்பத்தியாக உலக மண்காபன் வரைபடம் (Global Soil Carbon Map- GSC Map) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த நாடுகள் தங்களது மண்வரைபடத்தினதும்; மண்ணின் காபன் வரைபடத்தின் மூலமும் மண்ணில் காபனை வினைத்திறனாக சேமிப்பதற்கான தீர்மானங்களை எடுக்கமுடியும். இதன் மூலம் ஒரு நாட்டின் மண்ணின் தகவல்கள் பெறப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டு அவை முக்கியமான சான்றாதாரங்களுடனான தீர்மானங்களை எடுப்பதற்கு பயன்படுகின்றன. மேலும் மண்ணரித்தலுக்குள்ளான பகுதிகள், வரட்சியான பகுதிகள் என்பன இலகுவில் இனங்காணப்பட்டு அவற்றினை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வழிகளை தேட வழிசெய்திருக்கின்றது. 2030ம் ஆண்டுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை அனைத்து இடங்களிலும் வினைத்திறனாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த உலக மண்காபன் வரைபடம் டிசெம்பர் 5ந்தாம் திகதி உலகத்திலுள்ள மக்கள் பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மண்ணிலுள்ள சேதன காபனை பாதுகாப்பதற்காக இவ்வாறான வரைபடங்கள் உதவுவதோடு அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மக்கள் தற்போது இவற்றை பற்றியறிந்து அதன்மூலம் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆவலாக உள்ளனர். மண்ணுக்கான முக்கியத்துவத்தை அறிவிக்கும் உலக மண்தினம் டிசம்பர் 5இல் மக்களால் எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக கொண்டாடப்படல் வேண்டும். பூமித்தாயை நாம் பாதுகாத்தால் எம்மை பூமித்தாய் பாதுகாப்பார். நல்லது செய்யவே நாம் என்றும் நினைப்போம்.
உலக மண் தினம் (World Soil Day) டிசெம்பர் 5ந்திகதி கொண்டாடப்பட்டிருக்கின்றது. உலகளாவிய உணவு மற்றும் விவசாய நிறுவனம் (Food and Agriculture Organization) இதற்காக பல வழிகளை கையாண்டு இந்த தினத்தை உலகமக்கள் அனைவரும் அறிந்துணர செய்திருக்கின்றது. உலக மண் தினத்தின் முக்கியத்துவம் பற்றி உலகமே கொண்டாடவேண்டிய தேவை எழுந்துள்ளதற்கு பல காரணங்களை இனங்கண்டாலும்; அவற்றுள் உள்ளார்ந்து எழுந்திருக்கும் முக்கியகாரணமாக அதனது வளத்தை குறிப்பிடலாம். மண்ணின் வளம் என்பது மண்சார்ந்திருக்கின்ற அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையையும் அவற்றின் வாழிடத்தையும் இவற்றினால் மண்ணின் தன்மையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களையும் சுட்டிநிற்பதாக பொருள் கொள்ளலாம். மண் அல்லது நிலம் என்பதனூடாக உயிர்ப்பின் தன்மையை வெளிக்காட்டுகின்றதனை காணலாம். அதாவது மண்ணிற்கு உயிருண்டு என கூறுவதில் தப்பேதுமில்லை. மண்ணிலுள்ள உயிர்ப்பின் தன்மையை அதில் பயிரிடும் எந்த வகையான பயிராக இருந்தாலும் அதன் வளர்ச்சியில் உற்பத்தியில் மண்ணின் பங்களிப்பு மிக மிக அதிகம். சிறந்த ஒரு ஊடகமாக மண் இருக்கின்றது என்னும் உண்மையை நாம் அநேகமான இடங்களில் மறந்தேபோய்விடுகின்றோம்.
மண் என்பது ஒரு கலவை எனவும் வெறுமனே மண்துணிக்கைகளால் ஆனது என்று நாம் கணித்துவிடக்கூடாது. கலவையானாலும் இந்தக்கலவை பல்வேறுபட்ட உயிரினங்களின் வாழிடமாக இருக்கின்றதென்றால் நம்பமுடிகின்றதா? மண்ணினுள் பல்வேறு வகையான அங்கிகள் வாழ்கின்றன. பொதுவாக இந்த அங்கிகள் இன்னும் நுண்ணங்கிகள் மண்ணை வளப்படுத்தும் செயற்பாட்டுக்காகவே மண்ணில் பொதிந்திருக்கின்றன. மாறாக தீமை தரும் நுண்ணங்கிகள் மற்றும் உயிரினங்களும் இதனுள் உள்ளடக்கம். மண்ணில் அதிகளவில் நன்மைதரும் நுண்ணங்கிகள் காணப்படும் போது அதனை நாம் வளமுள்ள மண்ணாக எண்ணுகின்றோம். நுண்ணிங்கிககள் மற்றும் அங்கிகளற்ற மண்ணில் எதுவுமிருக்காது. அதாவது அந்த மண்ணுக்கு உயிர்ப்பிருக்காது. மண்ணில் காணப்படும் அங்கிகள் மற்றும் நுண்ணங்கிகளின் இயக்கத்தினால் காபன் வட்டம், நைதரசன் வட்டம் என பலவகையான ஊட்டச்சத்து மாற்றங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு மண்ணில் உள்ள நுண்ணங்கிகளினதும் அங்கிகளினதும் செயற்பாடு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இந்த பூகோளத்தில் மண்ணினை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? மண்ணினை சிறப்பானதாக நீண்டகாலத்திற்கு வாழ்தகைமையுள்ளதாக முகாமைத்துவப்படுததி பாதுபாப்பதனால்; பலவிதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக காலநிலை மாற்றத்தினாலேற்படும் பிரச்சனைகளை வெற்றிகொள்வதற்கு, பஞ்சத்தை இல்லாதொழிக்க, குடிப்பதற்கு நல்ல நீரை பெற்றுக்கொள்வதற்கு, உயிர்ப்பல்வகைத்தன்மையை பாதுகாத்துக்கொள்ள, இன்னும் மாறிவரும் சூழல்நிலைமைகளுக்குள் எம்மை பழக்கிக்கொள்ள, வரட்சியை தாக்குப்பிடிக்க, வாழ்வாதாரத்தை முன்னேற்ற, சூழல் மாசாக்கிகளின் அளவினை குறைக்க, சூழலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆகும். மண்ணில் சேதனகாபனின் அளவினை அதிகரிக்க தற்போது எங்களிடமுள்ள மண்ணினை அவசியம் நாம் பாதுகாக்கவேண்டும். உலகத்திலுள்ள மண்ணானது காபனினை அதிகளவில் கொண்டிருப்பதனால் அது வளியில் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைப்பதற்கு உதவுகின்றது. மூன்றில் ஒரு பகுதி மண் விரயமாக்கப்பட்டிருக்கின்றது. பூமியிலுள்ள மண்ணினை பாதுகாப்பதனால் 51 ஜிகா டன்கள் காபனை வளிமண்டலத்திலிருந்து மண்ணினுள் பதிக்கமுடியும். இதனால் காலநிலை மாற்றத்தினை நாம் இலகுவாக எதிர்கொள்ள முடியும். 2015 இலிருந்து 2050 வரையான காலப்பகுதியில் உணவுக்கான தேவை 49சதவீதத்தினால் அதிகரிக்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாய உற்பத்திகள் அதிகரிக்க வேண்டிய தேவையும் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு உணவூட்டவேண்டிய பொறுப்பும் முன்னெழுந்துள்ளது. இதன்மூலமே நாம் இனங்கண்ட பேண்தகு அபிவிருத்திக்கான நோக்கங்களை அடையமுடியும். இவையெல்லாவற்றிற்கும் எமக்கு வளமுள்ள மண் (Fertile soil) அவசியமாகின்றது. வளமான மண்ணில் தேவையானளவு மண்காபன் (Soil carbon) நிறைந்திருக்கும் போது அது பயிர்களை சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கும் பயிர்கள் சிறப்பாக வளர்வதற்கும் வழிசெய்கின்றது. குறிப்பாக ஊட்டச்சத்துக்களின் மீள்சுழற்சியும் நீர் வடிந்து செல்லும் தன்மையும் மண்ணில் நீர்சேமிப்பதற்கான வழிவகைகளும் மேன்மையுறுவதற்கு இது வழிவகுக்கும். மண்ணில் சிறப்பான முகாமைத்துவத்தின் மூலம் மண்காபனின் அளவை அதிகரிப்பதால் உணவுற்பத்தியை வருடமொன்றுக்கு 17.6 மெகாடன்களால் அதிகரிக்க முடியும் என அறிய முடிகின்றது. இதன் மூலம் மொத்த உணவுற்பத்தியை வரட்சியான காலப்பகுதியிலும் அதிகரிப்பதற்கு வழிகிடைக்கும்.
அவ்வாறாயின் மண்ணிலுள்ள காபனின் அளவை அளந்தறிய முடிந்தால் பலபிரச்சனைகளுக்கு விடைகண்டிடலாம். ஆனால் இவ்வாறு அளவிடுவது இலகுவான காரியமன்று. அதற்காக அதிகரித்த செலவும் அதிகமான வேலைப் பளுவும், இன்னும் சிறந்த ஆய்வு கூடமும் அவசியமாகும். அநேகமான நாடுகளில் மண்ணிலுள்ள காபனை மதிப்பிடுவதற்கு தேசிய மண்பற்றிய தகவல்கள் முழுமையாக இல்லை. ஆனாலும் வேறுபட்ட முறையியலினூடாக மண்ணிலுள்ள காபனை மதிப்பிடுவதும் சரியான தகவல்களை முழுமையாகத் தராது. இந்நிலையில் தான் உலக மண்தகவல் தொகுதி (Global Soil information system) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலாவது உற்பத்தியாக உலக மண்காபன் வரைபடம் (Global Soil Carbon Map - GSC Map) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த நாடுகள் தங்களது மண்வரைபடத்தினதும்; மண்ணின் காபன் வரைபடத்தின் மூலமும் மண்ணில் காபனை வினைத்திறனாக சேமிப்பதற்கான தீர்மானங்களை எடுக்கமுடியும். இதன் மூலம் ஒரு நாட்டின் மண்ணின் தகவல்கள் பெறப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டு அவை முக்கியமான சான்றாதாரங்களுடனான தீர்மானங்களை எடுப்பதற்கு பயன்படுகின்றன. மேலும் மண்ணரித்தலுக்குள்ளான பகுதிகள், வரட்சியான பகுதிகள் என்பன இலகுவில் இனங்காணப்பட்டு அவற்றினை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வழிகளை தேட வழிசெய்திருக்கின்றது. 2030ம் ஆண்டுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை அனைத்து இடங்களிலும் வினைத்திறனாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த உலக மண்காபன் வரைபடம் டிசெம்பர் 5ந்தாம் திகதி உலகத்திலுள்ள மக்கள் பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மண்ணிலுள்ள சேதன காபனை பாதுகாப்பதற்காக இவ்வாறான வரைபடங்கள் உதவுவதோடு அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மக்கள் தற்போது இவற்றை பற்றியறிந்து அதன்மூலம் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆவலாக உள்ளனர். மண்ணுக்கான முக்கியத்துவத்தை அறிவிக்கும் உலக மண்தினம் டிசம்பர் 5இல் மக்களால் எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக கொண்டாடப்படல் வேண்டும். பூமித்தாயை நாம் பாதுகாத்தால் எம்மை பூமித்தாய் பாதுகாப்பார். நல்லது செய்யவே நாம் என்றும் நினைப்போம்.
02.12.2017
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
2017 நவம்பர் மாதம்; 29 மற்றும் 30ம் திகதிகளில் உலக நீர் முகாமைத்துவ நிறுவனத்தில் (Internatioal Water Management Institute) அந்நிறுவனத்தினதும், தேசிய உற்பத்தி செயலகமும் (National Productivity Secretariat), இலங்கை சப்பிரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களுமிணைந்து இரண்டு நாள் தேசிய ஆய்வுக்கருத்தரங்கினை உயிர்ப்பசளைகளுக்கும் உயிர்ப்பீடைகொல்லிகளுக்குமாக (Biofertilizers and Biopesticides) நடாத்தி முடித்திருக்கின்றார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த ஆய்வுக்கருத்தரங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அசேதன பீடைநாசினிகளிலும்; பசளைகளிலும் முழுமையாகத் தங்கியிருக்கின்ற எமது விவசாயச் செய்கையில் அண்டைநாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் உயிர்ப்பசளைகள் மற்றும் உயிர்ப்பீடைநாசினிகளை உற்பத்தி செய்வதற்கும் அவற்றை விவசாயப் பெருமக்கள் மற்றும் தொழில்ரீதியாக உற்பத்தி செய்வது பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள் என்பனவும் பல ஆய்வாளர்கள் மற்றும் வளவாளர்களைக் கொண்டு விரிவாக ஆராயப்பட்டது. எமது நாட்டில் இவ்வாறான உயிர்ப்பசளைகள் மற்றும் உயிர்ப்பீடைநாசினிகளை அதிகமாக உருவாக்குவதற்கும் அவற்றை விற்பனைக்கு விடுவதிலும் பலவிதமான முட்டுக்கட்டைகள் இருந்தமையால் இந்த ஆய்வுக் கருத்தரங்கில் இவற்றை அந்தந்த அரச நிறுவன அதிகாரிகளிடம் முன்வைத்து அதற்கான வழிவகைகளையும் ஆராய்வதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது.அது பற்றி எமது இனிய உறவுகளிடம் இக்கட்டுரையூடாக பகிர்ந்து கொள்வதில் எழுதும் இக்கைகள் மகிழ்வடைகின்றன.
பசுமைப்புரட்சியின் தாக்கமாக உள்வாங்கப்பட்ட அசேதன இரசாயனங்கள் பசளைகளாக இன்னும் பீடைநாசினிகளாக எமது பிரதேசத்தை ஆக்கிரமித்து இறுதியில் நல்ல உணவுற்பத்தியை தருவதற்கு பதிலாக இன்னோரன்ன நோய்களை மனிதனில் உருவாக்குவதற்கும் காரணமாகிவிட்டிருக்கின்றன. இதன்பயனாக அசேதன இரசாயனங்களின்றி விவசாயமில்லை என்னும் நிலை உருவாக்கிவிடப்பட்டிருக்கின்றது. இது பீடைநாசினிகளை உருவாக்கும் முதலைகளினால் மக்களின் குறிப்பாக விவசாயப் பெருமக்களின் உற்பத்திச் செலவை அதிகரித்து அவர்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய ஆதாயத்தை வெகுவாக குறைத்து விட்டிருக்கின்றன. நஞ்சு எனத்தெரிந்தும் அவற்றை விவசாயிகளினால் தவிர்க்க முடியாதவாறு பீடைப்பெருக்கமும் அதிகரித்துவிட்டது. இந்ந இக்கட்டான நிலையில் விவசாயிகளைக் காப்பாற்றும் முக்கிய செயற்பாடாக உயிரியல் கட்டுப்பாட்டினை முன்னேற்ற பலவழிவகைளில் முயற்சிகளும் மேற்படுத்தப்பட்ட போதும் அவற்றை தொடர்ந்து ஓரேநிலையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு பலகாரணங்களை இங்கு முன்வைக்க விரும்பினாலும் மிக முக்கியமாக அசேதன பீடைநாசினிகள் விரைந்து பீடைகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதனாலும் அதிக விலையென்றாலும் பட்டிதொட்டியெங்கும் கிடைக்கக் கூடியதாகவிருந்தாலுமாகும். மேலும் அசேதன இரசாயனங்களை உற்பத்தி செய்யும் மற்றும் சந்தைப்படுத்தும் பெரிய தொழில்நிறுவனங்கள் தங்களது அசேதன இரசாயன உற்பத்திச் செலவினத்தை ஏழை விவசாயிகளிடம் அறவிட முனைந்ததும் காரணமாகும்.
குறிப்பாக தனித்துவமான அசேதன பீடைகொல்லியொன்றை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கு ஏறக்குறைய 300 மில்லியன் ரூபாக்கள் வரையில் செலவிடவேண்டியிருக்கின்றதாம். இவற்றை பீடைநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து மட்டும் தான் அறவிடவேண்டியிருக்கின்றதாம். அதற்கிடையில் அதனை விவசாயிகளுக்கு சிபார்சு செய்வதற்கு அந்த நாடுகளின் அரச நிறுவனங்களிலுள்ள மதிப்பார்ந்த அதிகாரிகளுக்கு தெரிந்தும் தெரியாமலும் பணத்தை வாரியிறைக்க வேண்டியும் இருக்கின்றதாம். இறுதியாக அனைத்தும் இந்த ஏழைவிவசாயிகளை மையப்படுத்தியதாகவே மாறியிருக்கின்றதனை பாருங்கள். ஆனால் தற்போது எமது நாட்டில் பல சூழலை மாசுபடுத்தும் குறிப்பாக மனிதனுக்கு சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் அசேதன இரசாயனங்களை எமது அரசாங்கம் தடைசெய்வதிருப்பதும் நன்மைக்கான காரியமெனவே கொள்ள முடியும். ஆனால் அதற்கு மாற்று வழிகளை பரிந்துரைக்காதிருப்பது விவசாயத்தை பீடைகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாதிருக்கின்றது என விவசாய பெருமகனார் ஒருவர் கூறிப்பெருமூச்செறிந்தார்.
உயிர்ப்பீடைகொல்லிகள் எமது நாட்டுக்கு புதிதல்ல. 1890களிலிருந்து எமது நாட்டில் பிரித்தானியர்கள் ஆட்சிஅதிகாரத்திலிருந்த போது நுண்ணங்கிப் பீடைகொல்லிகள் இனங்காணப்பட்டு அவற்றைப்பற்றி விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் இருந்திருக்கின்றார்கள். அதுவும் இப்படியான நுண்ணங்கிப் பீடைகொல்லிகளை அவர்கள் தேயிலையில் உள்ள பீடைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தியிருந்திருக்கின்றார்கள் என்னும் செய்தியையும் அறிய முடிகின்றது. பிரித்தானியர்களின் ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்தபோது இது சார்ந்த அனைத்து தகவல்களையும் அவர்கள் எடுத்துச் சென்று பிரித்தானியாவிலுள்ள கியூ பூங்காவில் (Kew Garden) பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்னும் தகவலையும் அறிய முடிகின்றது.
தற்போது அசேதன இரசாயனங்களினால் ஏற்படுத்தப்படும் சூழல் மாசாக்கம் மற்றும் மனிதன், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களை அதிகளவில் பாதிக்கும் தன்மைவாய்ந்ததாக அசேதன இரசாயனங்கள் மாற்றமடைந்திருப்பதனால் அவற்றை எமது அரசாங்கம் அவ்வப்போது தடைசெய்ய முடிவெடுத்து கடந்த வருடம் முக்கியமான அசேதன இரசாயனங்களான குளொர்பைறிபொஸ், என்டோசல்பான், காபோபியுறான் அல்லது பியூறடான், கிளைபோசேற்று என்பனவற்றை தடைசெய்தது. இதற்கு முக்கிய காரணமாக மத்திய மாகாணத்தில் குறிப்பாக அநுராதபுரம் மற்றும் மதவாச்சி பகுதிகளில் பல விவசாய பெருமக்களிடையே இனந்தெரியாத சிறுநீரக நோய் காணப்பட்டமையாகும். இந்த நோய்க்கான காரணிகளில் முதன்மையானது அந்த இடங்களில் களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கிளைபோசேற்று (Glyphosate) ஆகும். எமது சூழலில் ஏற்படுத்தப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இவ்வாறன பீடைநாசினிகள் மற்றும் பங்கசுநாசினிகள் மனிதனின் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் நஞ்சுபொருட்களாக மாற்றம்பெற்றதாலும் அவற்றை வேறுவழியின்றி அரசாங்கம் தடைசெய்தது. ஆனால் தடைசெய்யப்பட்டதற்கு மாற்றுவழிகளை பரிந்துரைக்கவில்லை. அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை. தற்போது இதனை உணர்ந்த வயம்ப மற்றும் சப்பரகமுவ பல்கலைக்கழகங்கள் முதன்முறையாக உயிர்பீடைகொல்லிகளையும் உயிர்ப்பசளைகளைப்பற்றியும் ஆராய முற்பட்டு பலநல்ல முடிவுகளை எடுத்திருக்கின்றன. அந்த வகையில் இவ்வாய்வு மாநாட்டிற்கு வருகைதந்த பல ஆய்வாளர்கள், உயிர்பீடைகொல்லிகள் மற்றும் உயிர்பசளைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள், அரச ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து பயிர் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிகள் வெளிநாட்டு புலமையாளர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இக்கருத்துக்கள் நிச்சயமாக தொடந்ந்து வரும் காலங்களில் பாரியளவில் இதனை முன்னெடுப்பதற்கு வழிவகைசெய்யும் என முழுமையாக நம்பியிருக்கின்றோம்.
இலங்யையில் உயிர்ப்பீடைகொல்லிகளுக்கொன்று எதுவிதமான சட்ட வரைபுகளும் இதுவரையில்லை. அதனால் அதனை உற்பத்தி செய்பவர்களிடையே நம்பிக்கையின்மையும் தமது உற்பத்திப் பொருட்கள் தரமற்றதென நிர்ணயஞ்செய்வதற்கான வாய்ப்க்கள் இருப்பதாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சரியான திட்ட வரைபுக்கூடாக இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்தால் அவை வெற்றிபெற வாய்ப்புக்கள் உண்டு. அதேநேரத்தில் எமது பகுதிகளில் விசிறப்படும் பீடைநாசினிகள் மற்றும் களைநாசினிகள் என்பனவற்றின் தற்போது நிலையை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
உயிர்ப்பீடைகொல்லிகளை நாம் பயன்படுத்த ஆரம்பித்தால் விவசாயிகள் தமக்கு தேவையான ஆதாயத்தை பெறுவும் அதேநேரத்தில் தேவைக்கேற்ப அசேதன இரசாயனத்தை பயன்படுத்தவும் வழிசெய்து கொடுக்கலாம். பீடைநாசினிகள் உற்;பத்தி செய்யும் நிறுவுனங்கள் குறிப்பிட்ட அசேதன இரசாயனத்தை உற்பத்தி செய்ய அதி கரித்த உற்பத்திச் செலவுகளை கொடுப்பதனால் அவற்றை பெறுவதற்காக குறிப்பிட்ட பீடைநாசினிகளின் கம்பனிகள் அந்தந்த அசேதன இரசாயனத்தை விவசாயப் பெருமக்களிடமிருந்தே அறவிட முனைகின்றன. அதனாலேயே அசேதன இரசாயனங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறு பயன்படுத்தப்படும் அசேதன இரசாயனங்கள் இறுதியில் நல்ல விலைக்கு விற்பதனால் ஆதாயம் உற்பத்தியாளருக்கும் மற்றும் அதனை சந்தைப்படுத்துபவர்களுக்கும் சென்றடைகின்றன.
நிகழ்வில் கலந்து கொண்ட பீடைநாசினிகளுக்கான பதிவாளர் (Registrar of Pesticides) கலாநிதி ஜே.ஏ. சுமித் அவர்கள் உயிர்ப்பீடைநாசினிகளின் தரம் பற்றிய விளக்கக் குறைவும் அது பற்றிய தரநிர்ணயம் இல்லாமையும் அதனை எமது நாட்டில் உற்பத்திசெய்வதற்கான இடர்ப்பாடுகள் பற்றியும் அதனால் தமக்கு சரியான அளவுகள் மற்றும் அவற்றின் சிறப்புக்களைப் பற்றிய விளங்கம் பெற்ற பின்னரேயே அவ்வாறான பீடைநாச-pனிகள் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். ஆனாலும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் இவ்வாறான உயிர்ப்பீடைநாசினிகளுக்கான பதிவினை இலகுவாக மேற்கொள்ள ஆவனசெய்யப்படும் எனவும் ஆனாலும் அதற்கான சான்றுறுதி சரியான ஆய்வுதகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். சில உயிர்ப்பீடைநாசினிகள் போலியாக உருவாக்கப்படுவதாலும் இன்னும் சில சரியான முறையில் பீடைகளைக்கட்டுப்படுத்தவில்லை என்பதாலும் அரச ஆய்வுஆராய்ச்சி நிலையத்தில் உறுதிசெய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டால் அதனை தாம் கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த கருத்தரங்கில் முற்று முழுதாக அசேதன பீடைநாசினிகளை இல்லாதொழிக்க முடியாதென்றும் அவற்றின் தேவை விவசாயிகளுக்கு உண்டு என்பதாலும் விவசாயிகளே அதனை தெரிவுசெய்வதில் முடிவெடுக்கட்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான அசேதன இரசாயனங்களினை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் உயிரிரசாயனங்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்களை ஒன்றிணைந்து செயற்படுத்தவும் கொள்கையளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்ப்பசளைகளை உற்பத்தி செய்து விவசாயப் பெருமக்களுக்கு கிடைக்கச்செய்வதற்கான வழிவகைகளும் உயிர்ப்பீடைநாசினிகளை உற்பத்தி செய்வதனை ஊக்குவிக்கவும் உள்ளூரில் உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிக்கவும் அதற்கான சட்டவரைபுகளை உருவாக்கும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
15.10.2017
[ October 19: World Farmers Day ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
ஓக்டோபர் 19ம் திகதி உலக உழவர் தினமாகும். இந்நன்னாளில் உலகத்திலுள்ள உழவர்களை ஒரு கணம் நினைந்து கொள்ளுதல் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையும் கௌரவமுமாகும். "சேற்றில் அவர் கைவைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்" என உழவர்களின் பெருமையை எடுத்துச்சொல்லி "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என திருக்குறளிலும் "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என எடுத்தியம்பிய தலைமைக் கவியின் முழக்கமும் உழவர் தம் பெருமையை ஓங்கியுரைத்திருக்கின்றன. பட்டினிச்சாவை ஒழிப்பதற்காக தமது முழுநேரத்தையும் செலவழித்து உணவுற்பத்தி செய்யும் உழவர் பெருமக்களுக்கான இத்தினம் நஞ்சற்ற தேசத்தை கட்டியெழுப்பும் அரச தலைவரின் கொள்கைகளுக்கு ஒத்திசைவானதாகும். எம்மிடமிருக்கும் இயற்கையான வளத்தை நாம் இனங்கண்டு முழுமையாக பயன்படுத்தத் தொடங்கினால் எமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்ய முடியும்.
உழவுத்தொழில் ஒன்றும் சாதாரண தொழிலன்று. ஆரம்ப காலங்களிலுள்ள உழவுத்தொழில் போல தற்போது இல்லை. விஞ்ஞான தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப உழவுத்தொழிலும் பல மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. எது இருந்தாலும் உழவுத்தொழிலை அடிப்படையில் உணவுற்பத்திக்கான தொழிலாக கொள்வதால் இதற்கு அத்துணை சிறப்பு. வெறும் பகட்டினை வைத்துக்கொண்டு உழவுத்தொழிலை பலர் கைவிட்ட வரலாறுகள் பலவுண்டு. அதற்கு உழவுத்தொழிலால் கிடைக்கும் ஆதாயமும் போதியளவில் இல்லாததும் ஒரு காரணம். பல இடர்களுக்கு மத்தியில் உற்பத்தியான பொருளை தகுந்த விலைக்கு விற்கமுடியாதிருப்பதாலும் சந்தைவாய்ப்பு போதியளவில் இல்லாததாலும் உற்பத்தியானவற்றை மண்ணிலேயே புதைத்த கதைகளும் பலவுண்டு. விவசாய செய்கையில் நொந்து போய் தமது கடன்களை மீள செலுத்த முடியாது பல உழவர்கள் தற்கொலை செய்த செய்து கொண்டிருக்கின்ற செய்திகளும் தினந்தினம் வந்து கொண்டிருக்கின்றன. மாறாக இந்தியாவின் தமிழகத்தில் அதிதொழிநுட்ப துறையான கணனித்தொழிலிலிருந்து விடுபட்டு கற்றுத்தேறிய இளைஞர்கள் விவசாய பண்ணைகளை அமைத்து பயிருற்பத்தியில் ஈடுபடுவது இன்னொரு பக்கத்தில் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருக்கின்றது. இந்த மாற்றம் விவசாயத்துறைக்கான சிறப்பானதாக கருதலாம். கணனித்துறையில் ஊதியம் அதிகமாக கிடைத்தாலும் அதிக வேலைப்பளு இருப்பதாகவும் அதனால் தங்களது சந்தோசத்தை தொலைத்துவிட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து விடுபட்டு இயற்கை விவசாயப் பண்ணைகளை அமைத்து அதில் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து தமது குடும்ப வாழ்க்கையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
உழவுத்தொழிலில் தற்போதய முக்கிய பிரச்சனையாக முன்னெழுந்திருப்பது காலநிலை மாற்றமாகும் (Climate change). தொடர்ச்சியாக நிலம் வரண்டிருப்பதும் மழைவீழ்ச்சி எதிர்பார்த்த காலத்தில் கிடைக்காததும், அப்படி கிடைக்கும் போது மழை குறுகிய காலத்தில் பெய்து வெள்ளமாக மாறி விவசாயத்தை மேலும் பல இன்னல்களுக்குள்ளாக்கியிருக்கின்றது. மழை பெய்யலாம் அல்லது பெய்யாமல் விடலாம் என்னும் கணிப்பீடுகளும் இன்னும் முடிவுவெடுக்க உதவாத ஊகங்களும் விவசாயத்தை எந்தளவில் காப்பாற்ற முடியும் என உழவர் பெருமக்கள் வினவுவது நியாயமாகத்தான் இருக்கின்றது. வளர்ந்துவிட்ட விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் துல்லியமாக காலநிலை மாற்றத்தை இன்னமும் கணிப்பிட முடியாமலிருப்பது எமது இயலாமையே தவிர வேறொன்றுமில்லை. இதற்கான கற்கை நெறிகள் விரிவுபடுத்தப்பட்டு அதன் பிரயோகம் முழுமையாக விவசாயத்திற்கு கிடைக்க வழிசெய்தல் வேண்டும்.
மேலும் உழவர்களின் பிள்ளைகள் கற்பதற்கான வழிவகைகளும் இன்னும் விரிவுபடுத்தப்படல் வேண்டும். வயல்நிலத்திலேயே தங்களது பெரும்பான்மையான காலத்தைக்கழிக்கும் இப்பெருமக்களின் கல்வியறிவை மேம்படுத்த மேலும் திட்டங்கள் வகுத்து அவர்களின் பிள்ளைகளாவது விவசாயத்தை கற்பதற்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் செயற்றிட்டத்தில் இதற்கான வாய்ப்புக்களை வழங்க ஆவனசெய்ய வேண்டும்.
எமது நாட்டில் உழவுத்தொழிலுக்கான மதிப்பு என்னவோ நாம் எதிர்பார்த்த அளவில் இல்லைத்தான். விவசாயக் கற்கை நெறிகளுக்குள் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. மேலும் அவர்களுக்கான தொழில்வாய்ப்பு ஓரளவுக்கு காணப்பட்டாலும் விவசாயக் கல்வி என்னும் போது ஒரு இளக்காரத்தன்மை காணப்படுவது சமூகத்தின் குறைபாடாகும். எமது சமூகத்தில் விவசாயத்தொழில் செய்பவர்களுக்கான அந்தஸ்தும் மதிப்பும் மலினப்படுத்தப்பட்டே இருக்கின்றது. என்ன வீரம் பேசினாலும் அந்த வீரத்தைப் பேசுவதற்கான சக்தியைக் கொடுக்கும் உணவுக்காக மூன்று வேளையும் காத்திருக்கவேண்டிய நிலையில் அந்த உணவை உற்பத்தி செய்பவனுக்கு மதிப்பு கொடுக்க எந்த சமூகமும் முன்னிற்பதில்லை. இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களை நாம் தேடியாக வேண்டும்.
தற்போதய அரச தலைவரின் கொள்கையும் ஊக்கமும் 2018ம் எமது நாட்டில் ஆண்டினை விவசாயத்திற்காக (Year of Food Production ) பிரகடனப்படுத்த எடுத்திருக்கும் முயற்சிகளுக்கும் விவசாயத்தின் பக்கத்திலிருந்தும் அனைத்து விவசாயிகளின் சார்பாகவும் எழுதும் இக்கைகள் வாழ்த்துகின்றன. விவசாயிகளை காப்பாற்றும் கொள்கைகளை அரசாங்கம் இன்னும் இறுக்கமாகவும் அவர்களுக்கான வசதிகள் மற்றும் சலுகைகளை மேலும் அதிகரிக்கும் போது விவசாய செய்கையிலிருந்து எவரும் விடுபட முயற்சிக்க மாட்டார்கள். மாறாக விவசாய செய்கைகளில் இன்னும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவர். உற்பத்தி மட்டுமே உழவர்களின் பிரச்சனையாக இல்லை. சந்தைப்படுத்தல் மிகவும் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் உற்பத்தியாக்கிய பொருட்களை ஏற்ற விலையில் சந்தைப்படுத்த முடியாதிருக்கின்றது. இந்த இடர்ப்பாடு நீண்டகாலமாக இருந்தாலும் அதனை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான எந்தத் தீர்வும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது.
விவசாயச் செய்கையானது கிராமத்தில் பொதிந்திருக்கும் மிகப்பெரிய தொழிற்றுறை. இந்த தொழிற்றுறையின் விருத்தி பற்றி சிந்திப்பவர்கள் கிராமத்து அபிவிருத்தி பற்றியும் சிந்திப்பது அவசியமாகின்றது. ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் வளங்கள் அனைத்தையும் முழுமையாக பட்டியலிட்டு அவற்றினை வைத்துக்கொண்டு என்ன வகையில் அபிவிருத்தியினை செய்யலாம் என திட்டத்தை தீட்டினால் அது அந்த கிராமத்தின் அபிவிருத்திக்கு பெரிதும் பயன்தரும். நாம் எதிர்பார்த்த பலனும் கிடைக்கும். மாறாக கிராமத்து மக்களின் விருப்பமின்றி அபிவிருத்தி முயற்சிகளை செய்வது எந்தளவிலும் நீண்டநாள் எதிர்பார்ப்பில் பயனைத் தராது. இதுவே தொழில்முயற்சிகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். விருப்பமற்ற தொழிற்றுறையை ஒரு கிராமத்தில் உருவாக்குவதால் எந்தவித பயனுமில்லை.
உழவுத்தொழிலில் பல இறுக்கங்கள் இன்னும் கவலை தரும் பல விடயங்கள் இருந்தாலும் அனைத்தையும் தாங்கி அனைத்து மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என மண்ணில் போராடும் உழவர்களை நாம் மனதார பாராட்ட வேண்டும். அவர்தம் உயர்ச்சிக்கும் நாம் பங்களிக்க வேண்டும். உழவுத்தொழிலின் உயர்வு "வரப்புயர நீர் உயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயர குடியுயரும், குடியுயர கோன் உயர்வான்", என்பதிலிருந்து எந்தளவிற்கு கட்டமைப்புக் கொண்டதாக இருக்கின்றது என புரியும். அந்த நாட்களில் இவற்றையெல்லாம் சொல்லிச் சென்றதனை நாம் இம்மியளவேனும் கவனத்திற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக இதெல்லாம் எமக்கில்லை என்னும் விதண்டாவாதம் பேரும் மக்களும் நம்மிடையே இருக்கின்றார்கள்.
எது எப்படியிருப்பினும் உழவுத்தொழிலின் விருத்திபற்றி தினந்தினம் சிந்தித்து நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்க நாமும் உழவர் பெருமக்களோடு இந்நாளில் இணைவோம். இந்த இணைவு தொடர்ச்சியாக அவர்களின் வளமான வாழ்வு பற்றியும் சிந்திக்க தலைப்படவேண்டும்.
வரப்பே தலகாணி,
வைக்கோலே பஞ்சு மெத்தை,
வெற்றுடம்போ சிற்றாடை,
ஓ! அந்த வெள்ளையுள்ளங்களே!
உங்களை தலைசாய்த்து வணங்குகின்றோம்!.
ஒருவித்திலையினதும் இருவித்திலையினதும் இணைவு தரும் அர்த்தங்கள் பல!
[ Plenty of meaning in the union of Monocots and Dicots ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
பயிர்ச்செய்கையில் தனியான பயிராக (Mono crop) பயிர்செய்யப்படுவது வழமை. காலங்காலமாக தனிப்பயிரை பயிர்செய்வது எம்மவர்களின் தெரிவாகவும் இருந்து வருகின்றது. இதற்கான காரணமாக தனித்துவமாக எதனையும் சுட்டிக்கூறமுடியாதிருப்பினும் தனிப்பயிரினால் ஆதாயம் அதிகமென எம்மவர்கள் காரணமாகக் கூறுவர். அதனை முழுமையாக நியாயப்படுத்த முடியவில்லையாயினும் அது பணப்பயிராக (Cash crop) அதிலும் அதிகூடிய வருவாய் தரும் பயிராக இருந்தால் இந்த நியாயப்படுத்தலுக்கு அது வலிமைசேர்ப்பதாக இருக்கும். ஆக மொத்தத்தில் தனிப்பயிராக பயிர்செய்வதால் ஆதாயம் அதிகமென வாதாடுபவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அந்த பயிரில் எந்தவிதமான பீடைபிரச்சனைகளும் இல்லாதவிடத்து இதனை ஏற்றுக்கொள்ளமுடியும் ஆனால் நாம் பயிரிடும் பயிர்களின் பீடைப்பிரச்சனை பாரிய பிரச்சனையாக முன்னெழுந்துள்ளதனை உணர்ந்தால் நாம் எமது முடிவினை மாற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுகின்றோம். தனிப்பயிராக பயிர்செய்வதனால் ஏற்படும் பீடைப்பிரச்சனையிலிருந்து தீர்வாக எதனை சிந்திக்கலாம் என்பதற்கான விடையே இன்றைய தலைப்பு.
அதென்ன ஒருவித்திலையும் இருவித்திலையும்? சாதாரண மக்களுக்கு இது எவ்வாறு விளங்கும் என நீங்கள் கேட்பது எழுதும் இக்கைகளுக்கும் கேட்கின்றது. அது ஒன்றும் பெரியவிடயமல்லவே. நெல்,சோளம், இறுங்கு, குரக்கன், தினை, வரகு, சாமை, வெங்காயம், இஞ்சி, மஞ்சள், வாழை, கரும்பு, தென்னை, பனை, கமுகு, மற்றும் புற்கள் என ஒருவித்திலைத்தாவரங்கள் பலவுண்டு. இவற்றின் நீளமான இலையை வைத்துக்கொண்டும் இலைகளிலுள்ள நரம்புகளின் அமைப்பை வைத்துக்கொண்டும் நீங்கள் அவற்றை ஒருவித்திலை (Monocotyledons) என கண்டுபிடித்துவிடலாம். மாறாக இருவித்திலை (Dicotyledons) தாவரங்கள் எனப்படுபவை நாம் வழமையாக பயிரிடும் கத்தரி தக்காளி மிளகாயிலிருந்து அவரைப்பயிர்கள் மற்றும் பல்லாண்டு தாவரங்களான பப்பாசி, மா, பலா, என பலவும் இதனுள் அடங்கும். சரி இங்கே ஒருவித்திலைத் தாவரங்களுக்கும் இருவித்திலைத் தாவரங்களுக்குமான முக்கியமான வேறுபாடுகளை வரிசைப்படுத்தினால் இவை இரண்டும் அடிப்படையில் அமைப்பில் வித்தியாசமானவை. அத்துடன் இவற்றின் தோற்றமும் வித்தியாசமானது. மேலும் இவற்றின் இழையவியல் அமைப்பிலும் வேறுபாடுகள் காணப்படும். இவற்றுடன் முக்கியமானது என்னவெனில் இவ்விரண்டினதும் தேவைகள் வேறு வேறானவை. அதாவது இவற்றினது ஊட்டச்சத்து தேவை வித்தியாசமானதாக இருப்பதனால் ஓரிடத்தில் ஒருவித்திலையையும் இருவித்திலையையும் வளர்க்கும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிபோடாது வளர்ந்திருப்பதை நாம் காணமுடியும்.
இதில் என்ன அதிசயமென்றால் ஒருவித்திலை பயிரிலும் இருவித்திலைப் பயிரிலும் தாக்கும் பீடைகள் வேறுபட்டவையாக இருப்பதுதான். இதுதான் இயற்கையின் நியதியோ என அதிசயிக்க வைத்திருக்கின்றது. அதனால் தனியாக ஒருவித்திலையையோ அல்லது இருவித்திலை பயிரையோ பயிர்செய்யாது இரண்டையும் கலந்து கலப்பு பயிராக பயிர்செய்தால் அவற்றில் ஏற்படும் பீடைப்பிரச்சனையை கணிசமான அளவு குறைத்து விடலாம். இதனை இப்படி கூறினால் எப்படி விளங்கும்? உதாரணத்துடன் தந்தால் தானே புரிந்து கொள்ள முடியும் என்றல்லவா கேட்கின்றீர்கள். சரி தொடர்ந்து உதாரணங்களைப் பார்ப்போம்.
மரக்கறிப்பயிர்களை நடவு செய்யும் போது குறிப்பாக மிளகாய் மற்றும் கத்தரி, தக்காளியை நடவு செய்யும் போது வெங்காயத்தை சேர்த்து நடவு செய்யலாம். ஏனெனில் மிளகாய் கத்தரி மற்றும் தக்காளி பயிர்களில் தாக்கும் பூச்சி பீடைகள் வெங்காயத்தில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அதேபோல வெங்காயப்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிபீடைகள் மிளகாய், கத்தரி தக்காளியில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும் ஒருவித்திலை பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிபீடைகள் இருவித்திலைக் களைகளில் தங்கிவாழமுடியாதன அதுபோல இருவித்திலைக்களைகளில் வாழும் பூச்சிபீடைகள் ஒருவித்திலை தாவரங்களில் சேதத்தை ஏற்படுத்த முடியாதனவாகும். இவ்வாறான இயற்கையின் நியதியை நாம் முழுமையாக புரிந்து கொண்டால் பூச்சிபீடைகளை கட்டுப்படுத்தவும் களைகளை கட்டுப்படுத்துவதில் கையாளும் யுக்திகளை இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவித்திலையையும் இருவித்திலையையும் ஒன்றாகக்காணும் பாக்கியம் ஏ9 பாதையில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும். பளைப்பகுதியைத் தாண்டி இயக்கச்சியை நோக்கி பயணிக்கும் போது பாதையின் இருமருங்கிலும் பனையைச் சுற்றி ஆல் அல்லது அரசமரம் வளர்ந்திருப்பதை காணலாம். இந்த காட்சி இயற்கையின் வெளிப்பாடு பலவற்றை அடித்துச் சொல்லியிருந்தாலும் சூழலியல் சார்ந்து குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லியிருக்கின்றது. அதாவது ஒருவித்திலையும் (பனையும்) இருவித்திலையும் (ஆல் மற்றும் அரசமரம்) ஒன்றாக வளர்ந்தால் (Coexist) ஒன்றுக்கொன்று போட்டியின்றி ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வளர முடியுமென்றும் ஒவ்வொன்றும் தங்களது தனித்துவத்தை பேணமுடியும் எனவும் காட்டியிருக்கின்றன. இங்கே பனை வடமாகாணத்தை பிரதிபலிப்பதையும் அங்குள்ள பெரும்மான்மையான மக்களான தமிழ்மக்களை அடையாளப்படுத்துவதனையும் அரசமரம் தென்பகுதியின் பெரும்பான்மை மக்களையும் குறிப்பிட்டு கூறினால் பௌத்த மக்களை அடையாளப்படுத்துவதையும் காணலாம். அதாவது இரண்டு மரங்களும் இரு இனங்களை அடையாளப்படுத்தும் போது இரண்டும் தனித்தனியாக வாழ வல்லமையுள்ள மரங்களாயினும் தத்தமது மொழி, மதம், கலை கலாச்சாரம் என்பனவற்றை பேணிப்பாதுகாக்கும் அதே நேரத்தில் அவற்றுக்கான அடையாளங்கள் அங்கீகரிக்கப்படும் போது இரண்டும் ஒன்றாக குறுகிய இடத்தில் (ஒரு தீவில்) ஒற்றுமையாக வாழமுடியும் என்பதனை எடுத்துக்காட்டியிருக்கின்றன. இது இயற்கை நமக்கு காட்டியிருக்கும் உதாரணமாயினும் அதனையும் தாண்டி எமக்கான நடைமுறைச்சாத்தியமான விடயமாகவும் கருதமுடியும். ஒரு சூழல் தொகுதியில் தாவரங்கள் தாமாக வாழ்ந்து எமக்கு காட்டியிருக்கும் உதாரணத்தை நாம் உதாரணமாக அல்லாது அதனுள் பொதிந்திருக்கும் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளல் அவசியமாகின்றது அல்லவா.
08.10.2017
[ The gift of Nature ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இயற்கையை தாய்மைக்கு ஒப்பிடுகின்றோம் ஏனெனில் அள்ள அள்ள குறையாததை தருபவள் தாய் தானே. அந்த அன்புக்கு நிகரேது? இயற்கையை அழித்து மாற்றி செயற்கையுலகில் சஞ்சரிக்கப் பார்க்கின்றோம். இயற்கையின் மகிமைமையை உணராதவர்கள் எவருளர்? ஆனாலும் எமக்குத் தெரிந்ததெல்லாம் சிறிதளவு மட்டுமே. தேடத் தேட புதிது புதிதாக வந்துகெண்டேயிருக்கும் இந்த அதிசயத்தை எத்தனைபேர் அறிந்துளர்? அந்த மகிமையில் ஒன்றினைப்பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் துறையின் இறுதியாண்டு சிறப்பு மாணவி கோபிநந்தா சேதுகாவலர் செய்த ஆய்வு குறிப்பாக இயற்கையில் காணப்படும் உயிரியல் கட்டுப்பாடு பற்றி ஆய்ந்து விளக்கியிருக்கின்றது. எந்த ஆய்வினதும் முடிவுகள் வெறுமனே ஆய்வறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்னும் பிடிவாதமான கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டதன் முடிவாக அவர் செய்த ஆய்வினைப் பற்றி எமது மக்களும் படித்து அதனை நடைமுறையில் செய்து பார்த்து பயனுறவேண்டும் இன்னும் தொழிற்றுறை விருத்திக்கு வித்திடவேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கட்டுரையினூடாக தரப்பட்டு;ள்ளது.
இலங்கைத் தீவினை நஞ்சற்ற தேசமாக மாற்றியே தீருவேன் என நாட்டின் தலைவர் கங்கணம் கட்டியிருப்பது விவசாயத்தை நம்பியிருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் நஞ்சினை தினந்தினம் மரக்கறிவகைகள் மற்றும் கனிகளுடன் மேலும் உணவுப் பொருட்களுடன் உட்கொள்ளும் மக்களுக்கும் நம்பிக்கையைத் தந்திருக்கின்றது. இதற்கு அனுசரணையாக எந்த நடவடிக்கைகள் நடைபெற்றாலும் அதனை நிச்சயமாக மக்கள் வரவேற்பார்கள். இவ்வாறான திட்டத்திற்கு நாமும் அனுசரணையாக இருந்து நஞ்சாக பயன்படுத்தும் வேளாண் இரசாயனங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பரிந்துரைக்க தலைப்பட்டுள்ளோம். அந்த வகையில் மாற்றுவழிகளை எங்கு தேடுவோம் என்பதற்கு பதிலாக என்னிடம் வாருங்கள் அத்தனையுமிருக்கின்றது என இயற்கைத் தாயவள் அறைகூவி அழைத்திருந்தாள். அவள் சொல்லில் நம்பிக்கை கொண்டோம் கிடைத்தது பொக்கிஷம் தான். கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கும் என்பதன் அர்த்தம் இங்கே புரிந்தது. தேடுங்கள் அனைத்தும் கிடைக்கும் அதிலிருந்து என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற இயற்கை தாயவளின் அர்த்தம் இந்த ஆய்விலிருந்து புரிந்தது.
என்ன யோசிக்கின்றீர்கள்? அந்த பொக்கிஷத்தைப் பற்றித்தானே கேட்கின்றீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் அரும்பெரும் பொக்கிஷம். பீடைகளின் பிரச்சனைக்கு பீடைநாசினிகள் தான் தஞ்சம் என இருந்த எங்களுக்கும் இன்னும் பலருக்கும் அதைவிட மாற்று வழிகள் இருப்பதைப் பறைசாற்றியிருக்கின்றது இந்த ஆய்வு. இவ்வருடம் வரண்டு போன பூமி, உஸ்ணமான காலநிலை, வரட்சி தாண்டவமாடியிருக்கும் பிரதேசம். குடிநீருக்கு மக்களை அலைக்கழிக்க வைத்திருக்கின்றது இயற்றையின் சீற்றம். இயற்கையின் இந்த அகோர தாண்டவத்திலும் கூட ஆங்காங்கே மழை பெய்திருக்கின்றது. மழையென்றால் ஆங்காங்கே இடங்களைத் தெரிவுசெய்து மழை பெய்திருக்கன்றது. அது கூட அதிசயம் தான் ஆனாலும் இந்த வரட்சியில் உஸ்ணத்தில் பூஞ்சணங்களின் வளர்ச்சி பெருக்கம் என்பன மிகவும் கேள்விக்குறியானதாகும். இந்த உஸ்ணத்தில் சிற்றுண்ணிகளின் தாக்கம் வழக்கமாகவே அதிகமாக இருக்கும். வளிமண்டல வெப்பநிலை கூடக்கூட சிற்றுண்ணி அதனது வாழ்க்கை வட்டத்தை குறுக்கிக்கொண்டு; பல்கிப் பெருகிவிடும். இந்தமாதிரியான இருபுள்ளிகள் கொண்ட சிற்றுண்ணி (Two spotted Mite – Oligonychus sp.) கிளிறிசிடியாவில், வேம்பில், நித்தியகல்யாணியில், சிறுகுறிஞ்சாவில் இன்னும் முருக்கமர இலையில் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேமாதத்தில் திடிரென ஒரு மழை, சற்று ஓங்கியடித்த மழை என்று கூறலாம். மழை ஓய்ந்து இரண்டாம் நாள் கிறிறிசிடியாவில் அதிகமாக சேதத்தை ஏற்படுத்திய இருபுள்ளிகள் கொண்ட சிற்றுண்ணியில் குறிப்பிட்ட ஓருவகை பூஞ்சணம் (Rhizopus sp.) இயற்கையாக வளர்ந்திருந்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. அனைத்து சிற்றுண்ணிகளும் இறந்த நிலையில் அந்த சிற்றுண்ணிகளின் மேல் இந்த பூஞ்சணம் வளர்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அனைத்து சிற்றுண்ணிகளும் இறப்பதற்கு இந்த பூஞ்சணத்தின் வளர்ச்சியே காரணமென ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இயற்கையாக வளர்ந்த பூஞ்சணம் சிற்றுண்ணிகளை முழுமையாக இறக்கச் செய்து அதில் பலவிதமான பூஞ்சண வித்திகளை உற்பத்தி செய்திருந்தமையையும் காணமுடிந்தது. இவ்வாறான நன்மைதரும் பூஞ்சணங்களை நாம் கண்டுபிடித்து அவற்றின் தொழிற்பாடுகளை அவதானமாக அவதானித்தால் அவை தொழிற்படும் விதம் மூலம் அவற்றினை நாம் பிரித்தெடுத்த செயற்கையாக தயாரித்து சிற்றுண்ணி பீடைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. ஓன்று கடும் வரட்சியிலிருந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட மழைக்குப் பிறகு வளர்ந்திருந்த பூஞ்சணத்தின் வலிமையைப் பற்றி இன்னும் விபரிக்க வேண்டும். அதைப்பற்றி இன்னொரு இடத்தில் விளக்கமாகப் பார்ப்போம்.
இங்கே அவதானிக்க வேண்டியது என்னவெனில் மழைபெய்ந்ததும் அந்த ஈரப்பதனையும் குறைந்த வெப்பநிலையையும் பயன்படுத்தி வளியிலுள்ள இரைபோபஸ் என்னும் பூஞசணம் சிற்றுண்ணியில் இயற்கையாகவே தொற்றுதலை ஏற்படுத்தி விரைவாக வளர்ந்து அனைத்து சிற்றுண்ணிகளையும் அழித்தது தான் இந்த விசித்திரம். இயற்கையிலேயே மருந்திருக்கும் போது நாம் எங்கேயோ தேடி எதையோ பயன்படுத்தி இருந்த இயற்கைக் கட்டுப்பாட்டு பொறிமுறையையும் அழித்து விடுகின்றோம். இயற்கை பொறிமுறையை நாம் அழித்து விட்டு செயற்கை கட்டுப்பாடான பீடைநாசினியை பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம். அதில் பீடை கட்டுப்படுகின்றதோ இல்லையோ எமது சூழலை, குடிநீரை இன்னும் உணவுகளை நஞ்சாக்கி விடுகின்றோம். இந்த நஞ்சை நாம் உணவுடன் உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித்தான் அறிந்திருப்பீர்களே. சிறுநீரகக் கோளாறு இன்னும் இருதயக் கோளாறுகள் இவற்றுடன் புற்று நோய் போன்றவற்றுக்கும் இந்த பீடைநாசினி மற்றும் அசேதன பசளைகளும் காரணமாகும்.
இயற்கையாக உள்ள உயிரியல் கட்டுப்பாட்டுப் பொறிமுறையை கண்டுபிடித்த கோபிநந்தா சேதுகாவலரின் ஆய்வுத்திறமை இந்த இடத்தில் பாராட்டப்பட்டு பதிவுசெய்யப்படவேண்டியதாகும். அவரது ஆய்வில் இந்த சேதத்தை விளைவிக்கும் இருபுள்ளிகள் கொண்ட சிற்றுண்ணி பற்றியும் சேதத்தின் தன்மை பற்றியும் இன்னும் குறிப்பிட்ட பூஞ்சணத்தைப் பற்றியும் விரிவான ஆய்வுகள் அதனை தொடர்ந்தும் ஆய்வுக்குட்படுத்தி அதனை சிறந்த இயற்கை கட்டுப்பாட்டு பொறிமுறையாக எமது பீடைகளுக்கு பயன்படுத்த இன்னும் ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான இயற்கைப் பொறிமுறைகளை கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்துவதன் மூலமும் இன்னும் அவற்றை பாதுகாப்பதன் மூலமும் மேலும் பல பீடைகளைக் கட்டுப்படுத்துவது இலகுவானதாகும். இயற்கை வழி பீடைக்கட்டுப்பாடு என்பதனால் விரைந்து நாம் பயன்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டாகவேண்டும். இந்த பொறிமுறையை தொழிற்றுறையாக்கி உயிரியல் பீடைக்கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். நன்றே செய் அதனையும் இன்றே செய் என்பார்கள். அதற்குரிய வழிவகைகளை தேடுவதற்கு இந்த ஆய்வுக்குழு அதீதமுயற்சிகளை எடுத்திருக்கின்றது. நிச்சயமாக எமது மக்களுக்கு இந்த உயிரியல் பொறிமுறை (Biological control) சிறந்த ஒரு கைங்கரியமாக இருக்கும்.
01.10.2017
இலகு தொழில்நுட்பத்தின் இன்றைய தேவை!
[ The current need of of simple technologies ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
விவசாயசெய்கையின் வடிவம் எம்மூரில் மாற்றம்பெறத் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் விவசாய பண்ணைகள் வைப்பதில் பலர் ஆர்வம் காட்டுவதும் அதில் பிரச்சனையாக இருக்கும் தொழிலாளர் தேவையை ஈடுகட்ட தொழில்நுட்பத்தின் உள்ளீர்த்தலை தேடி ஊக்குவிப்பதுமாகும். தற்போதய விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கின்றது. பலவேலைகளை சுலபமாக செய்வதற்கான இலகு தொழில்நுட்பங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதனால் நாம் ஒருபுறம் சோம்பேறிகளாக மாறிவருகின்றோம் என்ற கசப்பான உண்மையுடன் இவற்றைப் பயன்படுத்துவதால் பல வேலைகளை இன்னும் வினைத்திறனாக செய்ய முடிவதாகவும் தொழில்சார்ந்த பலபிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிவதாகவும் இவற்றை அதிகம் பயன்படுத்தும் தொழிலில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலகு தொழில்நுட்பமென்பது எமக்குத் தேவையான காரியங்களை செலவதிகமில்லாமல் தொழிலாளர்கள் பலரின் வேலைகளை ஒன்றிணைத்து சுலபமாக எளிய இயந்திரமயமாக்கலின் மூலம் செய்து முடிப்பதுதான். இது குறித்த தொழிலை தங்குதடையின்றி எதிர்பார்த்தளவு வினைத்திறனுடன் குறித்த நேரஅட்டவணையில் செய்து முடிப்பதற்கு உதவும். குறிப்பாக விவசாய செய்கையில் பாரிய நிலப்பரப்பை முகாமைத்துவப்படுத்துவதற்கும் அதிலுள்ள வேலைகளை செய்து முடிக்கவும் இலகு தொழில்நுட்பங்கள் குறிப்பாக இலகு கருவிகள் தினமும் அறிமுகஞ்செய்யப்பட்டு அவை பலராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் கண்டுபிடிப்புக்கள் தினமும் அங்கே உருவாக்கப்படுவது தான் ஆனால் எமது பிரதேசத்தில் கண்டுபிடிப்புக்களுக்கான ஊக்கம் இன்னும் போதாது என்கிறார்கள் நிபுணர்கள். புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக திட்டங்களும் பயிற்சிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் நாம் எதிர்பார்த்த அடைவினை எட்டவில்லையென்பது மனதினை குடைகின்ற செய்தி. என்ன சாதித்தோம் என்பதில் விரல்விட்டு சொல்வதற்கென்று என்ன இருக்கின்றது? மாறாக நாம் உள்ளதை சிறப்பாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள். இதனால் யாரோ கண்டுபிடித்ததை நாம் அனுபவிப்பவராக உள்ளோமே தவிர நாம் எமக்கானதை உருவாக்க முனையவில்லை. எமது கண்டுபிடிப்பு எமது தயாரிப்பு என இவ்வாறான இலகுதொழில்நுட்பங்கள் கைவிட்டுஎண்ணுமளவுக்குக்கூட இங்கில்லை.
தற்போது மேலைத்தேய நாடுகளில் தன்னியக்க உதவியுடன் பலகருமங்கள் ஆற்றப்படுகின்றன. இன்னும் கூறினால் வீட்டுத்தேவைகளை தன்னியக்க பொறிமுறைமூலம் நடாத்தப்படுகின்றன. வேலைக்குரிய அறிவித்தலை கட்டளையாக வழங்கினால் மட்டும் போதுமானது இயந்திரம் (automatic) தானாக இயங்கி குறித்த வேலையை கனகச்சிதமாக முடித்துவிடுகின்றது. இதைவிட தற்போது ட்றோன் (Drone) எனப்படும் றிமோட்கொன்றோலரினால் (தன்னியக்க கருவியினால்) இயக்கப்படும் சிறியளவிலான பறக்கும் கருவியின் அறிமுகம் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை எம்மவர்கள் திருமணவீடு மற்றும் விழாக்களில் படம் பிடிக்கவும் நிகழ்வை வீடியோவாக பதிவுசெய்யவும் மட்டும் பயன்படுத்துகின்றார்களே தவிர வேறு பயனுள்ள தேவைகளுக்கு பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் இன்னும் ஏனைய நாடுகளிலும் இதனை விவசாய பண்ணைகளை கண்காணிக்கவும் குறிப்பாக பயிர்களில் ஏற்படும் பீடைமற்றும் நோய்களை கண்டறிவதற்காகவும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் வேறு பிரச்சனைகள் என்பனவற்றை கண்காணிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். தற்போது இவ்வகையான பலவிதங்களில் பலவிலைகளில் ட்றோன் கண்காணிப்பு கமெராவுடன் கூடியதாக கருவிகள் சந்தைகளில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தும் போது மேலதிக அவதானிப்பும் தேவையாக இருக்கின்றது. இவ்வாறான கமெராவுடன் கூடிய ட்றோன்களை தவறான கலாச்சார சீரழிவுகளுக்கும் பயன்படுத்த முடியும். அதனால் சரியான சட்ட திட்ட வரைபுகளுடன் இதனது பயன்பாடு வரையறுக்கப்பட்டாலன்றி இவ்வகை தொழில்நுட்பங்களை பாதகமாக தொழில்களுக்கும் பயன்படுத்துவதை தடுக்க முடியாது. வளர்முக நாடுகளில் இனிவருங்காலங்களில் இவ்வாறான இலகுதொழில்நுட்பங்களின் வருகையை நாம் எதிர்வுகொள்ள தயாராகினாலும் எமது உற்பத்தியாக எங்களது கண்டுபிடிப்புக்களாக இவ்வகை தொழில்நுட்கங்களை உருவாக்கி எம்மவர் பயன்படுத்தும் நாளை நாம் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம். எங்களது இளைய சமுதாயம் இதற்கான முழுமுயற்சிகளையும் எடுக்க நாம் அவர்களுக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். எங்களது கல்வியின் சிறப்பு இத்தகைய கண்டுபிடிப்புக்களுக்கு வழிசமைப்பதாக இருக்கவேண்டும். க.பொ.த உயர்தரத்திலும் பல்கலையிலும் தொழில்நுட்பத்தை பாடமாக கற்கும் மாணவர்களுக்கான ஊக்க சக்தியாக இந்த அறிவிப்பை பிரபலப்படுத்துவோம். பொறியியல் துறை, விஞ்ஞானத்துறை, விவசாயத்துறை, மருத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, கலைத்துறை மற்றும் முகாமைத்துவத்துறையின் இணைவு பலம்மிக்க தொழிற்றுறையை கட்டியெழுப்ப உதவும் என எண்ணுவோம். இதற்கான செயற்றிட்டங்களை நாம் விரைந்து வடிவமைக்க வேண்டும்.
எமது பிரதேசத்தை அபிவிருத்தியில் உயர்த்துவதென்பது வெறுமனே கட்டிடங்களின் உருவாக்கமல்ல. மனிதவலுவை முறையாக திறமையாக பயன்படுத்துவதன் மூலம் நாம் எமக்கு தேவையானவற்றை உருவாக்கி நல்ல சிறந்த தேசத்தை வடிவமைக்க வேண்டும். தனிமனித ஆளுமையல்ல இது. பலரிணைந்த இயக்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு முழுமைபெற்ற எமது தேசம் உலகில் அபிவிருத்தியில் முன்னிற்கும் தேசமாக நஞ்சற்ற தேசமாக அனைவருக்கும் உணவு அனைவருக்கும் தொழில் அனைவருக்கும் மகிழ்ச்சிகலந்த வாழ்க்கை கிடைக்க நாம் எல்லோரும் பாடுபடவேண்டும்.
எந்த தொழில்நுட்பமாயினும் சரி எமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் அவற்றுக்கான தெரிவும் பயன்பாடும் சரியாக முறையாக வரையறை செய்யப்படல் வேண்டும். குறிப்பாக மருத்துவத்துறையில் இதன் பயன்பாடு அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய தொழிற்றுறைகளுக்குள்ளும் குறிப்பாக தனியார் தொழிற்றுறையிலும் இவற்றின் பயன்பாடு அதிகம் எதிர்பார்ப்பப்படுகின்றது. அதேவேளை மக்களுக்கான தொழில்வாய்ப்புக்களும் அதிகரித்த வண்ணமே இருக்கவேண்டும். புதிய தொழிற்றுறைகள் உருவாக்கப்பட்டாலன்றி நாம் இவற்றுக்கான களமமைத்துக் கொடுக்க முடியாது.
ஆகமொத்தத்தில் இலகு தொழில்நுட்பங்களை நாமும் எமக்கேற்ற வகையில் மலிவானதாக கண்டறிந்து அறிமுகஞ்செய்ய முனையவேண்டும். இந்த தேவை இனி என்றும் எமக்கு தேவையானதாக இருக்கப்போகின்றதையும் நாம் உணர்ந்துகொள்வது நல்லது. பல்லின மக்கள் வாழும் இத்தேசத்தில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்துவதுடன் ஒவ்வொருவருக்குமான அங்கீகாரத்தையும் வழங்கும் நிலைவரும் போது இந்த தேசம் உயர்ந்தெழும். தேசத்தின் மைந்தர்கள் என்னும் உணர்வு நிச்சயம் எமது நாட்டை பலபடிகள் உயர்த்தி உயர்வானதொரு தேசமாக சுட்டிநிற்கும்.
உலகளவில் உருக்கொண்ட உணவுப்பஞ்சம் !
[ The globalized Famine ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலக உணவு தாபனத்தின் (Food and Agriculture Organization) அண்மைக்கால அறிக்கை உலகளாவிய பஞ்சம் பற்றி உலகமக்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. உலக மக்கள் என்னும் போது நாமும் எமது பங்குக்கு இந்த பஞ்சத்தை இல்லாதொழிக்க முற்படவேண்டும் என்பது அதனுள் உள்ளார்ந்திருக்கின்றது என்பதாகும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினையே அழித்திடுவோம் என முழங்கிய எட்டயபுரத்துக் குரல் ஒய்ந்து விட்டதாக இன்னமும் நாம் கருதவில்லை என்பதற்கு சான்றாக இந்த அறிவிப்பு உலக உணவு தாபனத்திலிருந்து ஒலித்திருக்கின்றது. உலக மக்களை சிந்திக்கத்தூண்டும் இந்த செய்தியினூடாக நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் எம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இதனை நாம் நல்லதொரு பாடமாகவும் படிப்பினையாகவும் வரித்துக்கொள்ளவேண்டும் என்பதும் எழுதும் இக்கைகளின் எதிர்பார்ப்பாகும்.
உலக உணவு தாபனத்தின் (இணையத்தள முகவரி: www.fao.org) அறிக்கை பலவிடயங்களை கோடிட்டுக்காட்டியிருக்கின்றது. அதில் உணவுப்பஞ்சம் என்பது ஒரு புறமிருக்க ஊட்டச்சத்து குறைபாடு என்பது இன்னொரு பிரச்சனையாக எழுந்திருக்கின்றது. இதற்கு முதலும் இக்கட்டுரைத்தொடரில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி அலசப்பட்டாலும் தற்போது உலகளாவிய ரீதியில் இதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது எம்மையும் மேலும் இது பற்றி சிந்திக்க வைத்திருக்கின்றது. பொதுவாக கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தின் வீரியம் குறைவடைந்ததாக காணப்பட்டாலும் தற்போது உலக சனத்தொகையைக் கருத்தில் கொண்டால் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் 2015 ஆம் ஆண்டளவில் 775 மில்லியனாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடான மக்களுடன் ஒப்பிடும் போது 2016 ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 815 மில்லியன் மக்களாக அதிகரித்திருக்கின்றது. அதாவது அதிகரிக்கும் மக்கட்தொகையுடன் இந்த ஊட்டச்சத்து நலிவான மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது. இந்த செய்தி தென் சூடானில் இவ்வாண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் செய்தியோடு சூட்டோடு சூட்டாக உலகமக்களை வந்து சேர்ந்திருக்கின்றது. தென் சூடானுடன் நைஜீரியா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இவ்வாறான உணவுப்பஞ்சத்தை தற்போது உணர்ந்திருக்கின்றன. இந்நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஏதுமறியாத பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினந்தினம் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருப்பதும் உலக முதலாளிகளுக்கு இன்னமும் தெரியவில்லை என்றா நினைக்கின்றீர்கள்? இல்லையில்லை இவற்றை கண்டும் காணாதவர்கள் போல பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள் என்னும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்தும் செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் உலகமும் உலக நிறுவனங்களும் ஏதும் செய்யமுடியாது வாளாவெட்டியாக பார்த்துக்கொண்டிருப்பது எமது இயலாமையை எடுத்தியம்புவதாக அமைகின்றது.
உணவுப் பஞ்சத்தைப் பொறுத்தவரையில் ஆபிரிக்காவிலுள்ள சகாரா பகுதி, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில்; அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பிரதேசங்கள் உள்நாட்டுப் போரில் தம்மையே அழித்துக்கொண்டிருக்கும் போது இயற்கையின் அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி என்பன இன்னொரு பக்கத்தில் இம்மக்களை வரட்டியெடுத்துக்கொண்டிருக்கின்றன. எல்நினோவின் (El-nino) தாக்கமும் காலநிலை மாற்றத்தின் (Climate Change) தாக்கமும் இவற்றுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப்போர்கள் வலுவடைந்திருக்கின்றதாக தெரிவித்திருக்கின்றனர். இதன் மூலமாக மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்ததும் இன்னும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டதாலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. உணவுப் பஞ்சம் ஒருபுறமிருக்க கிடைக்கின்ற உணவும் ஊட்டச்சத்தற்ற உணவாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாதிருக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. மேலும் தற்போது சந்தைப்படுத்தல் குறிப்பாக ஏற்றுமதி செய்யும் தொகை குறைவடைந்திருப்பதனால் இறக்குமதியின் அளவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இறக்குமதியாகும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிகழும் போது அது சராசரி ஒரு மனிதனையும் அவர் சார்ந்த குடும்பத்தையும் வெகுவாக பாதித்துவிடும், பாதித்தும் இருக்கின்றதனை உறுதிப்படுத்த முடியும்.
விஞ்ஞான தொழில்நுட்பம் அபரிவிதமாக வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் கூட இவ்வாறான உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது என்றால் உலகம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என்பதனை அனுமானிக்க முடிகின்றதல்லவா. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது உலக உணவு உற்பத்தி இப்போதிருக்கின்ற மக்களுடைய தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக அறிவிக்கப்பட்டும் இந்த உற்பத்தியான உணவு சரியாக பகிர்ந்தளிக்கப் பட்டிருந்தால் இவ்வாறான பஞ்சம் ஏற்படுவதற்கு சாத்தியமேயில்லை. அப்படியாயின் உணவு உற்பத்தி, அதன் கிடைதன்மை என்பனவற்றையும் தாண்டி உற்பத்தியான உணவை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கச்செய்வதில் ஏதோ ஒரு காரணி தடைக்கல்லாக இருப்பது உணரப்பட்டிருக்கின்றது அல்லவா? இதன் பின்புலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இருப்பதென்பது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றதல்லவா. அந்த நாடுகளிலிருந்து தான் நாம் எமக்கு வருடாவருடம் கடனையும் பெற்றுக்கொள்ளுகின்றோம். பட்டினி போட்டுவிட்டு கடனும் தருகின்ற செயலை என்னவென்பது? காலாகாலத்திற்கு கடனாளியாகவே இருந்தால் தான் எம்மையும் ஏதோவொருவிதத்தில் ஆளுமைக்குட்படுத்த முடியும் என்னும் எண்ணம் இருக்கும் வரை இது தொடரத்தான் போகின்றது. மாறாக என்று நாமாக சிந்தித்து எமது வளங்களை பயன்படுத்தி எமது நாட்டை நாம் முன்னுயர்த்த முயற்சிக்கின்றோமோ அன்றிலிருந்து தான் எமக்கு விடிவுகாலம் என்பதனை நம்மினிய உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து அதன் உயர்வைப்பார்த்து இலங்கையைப் போல வரவேண்டும் என எண்ணினார்களாம். ஆனால் இப்போது நாம் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் உயர்வையும் அண்ணார்ந்து பார்த்து நாமும் சிங்கப்பூர் போல வரவேண்டும் என எண்ணுகின்றோம். காலச்சக்கரம் எவ்வாறு சுழன்றிருக்கின்றது பார்த்தீர்களா? அவர்கள் எம்மைப்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கும் போது நாம் நம்மை நாமே அழித்துக்கொண்டோம். தற்போது அவர்களைப் பார்த்து வளர எத்தனிக்கின்றோம் ஆனால் அழித்ததிலிருந்து மீள்வதற்கு பலகாலம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.
விஞ்ஞானம் பிற கோள்களில் மனிதன் வாழலாமா என பெருமெடுப்பில் ஆய்வினை செய்துகொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றார்களென்பது எல்லோர் மனதையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருக்கின்றதல்லவா. நன்றாக கவனியுங்கள்! இந்த நிலைமை இங்கும் இருக்கின்றது. உணவு உற்பத்தி ஒருபுறமும் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிக்கொண்டிருக்கும் மக்களை கிராமங்களுக்குள்ளே எந்தவித வருமானமுமின்றி உதவிகளுமின்றி விடப்பட்டுள்ள குடும்பங்களை கேட்டறிந்தால் தெரிந்துகொள்வீர்கள். விஞ்ஞானத்தின் உயர்வு ஆக்கத்திற்காய் இருக்கும் மட்டும் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஆனால் அதனை அழிப்பதற்கும் தீங்கு செய்வதற்கும் பயன்படுத்த முயலும் போது விஞ்ஞான வளர்ச்சியின் எதிர்பார்த்த நோக்கம் ஈடேறவில்லை எனவே தோன்றுகின்றது. உணவுற்பத்தியிலும் இந்த பாரபட்சம் நடந்து கொண்டிருக்கின்றது. விரைந்துணவு தயாரிக்கும் நிலையில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது ஆனால் அதற்காக இயற்கையின் தன்மையை மாற்றி சூழலையும் மாற்றி புதியவகை இனங்களை உற்பத்தி செய்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சிறிதேனும் சிந்தியாது சுழன்றுகொண்டிருக்கும் இவ்வுலகத்தின் சமகால நடப்புக்கள் ஒரு போதும் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போவதில்லை மாறாக பல தீங்கான நிலைமைகளுக்குள்ளேயே தள்ளிவிடுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. பசியும் பட்டினியும் இன்னும் தலைவிரித்தாடும் நிலைமைகளே அனுமானிக்கப்படுகின்றன.
பட்டினியின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரின் உக்கிரத்தினுள் உடைந்து போனவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறான உள்நாட்டுப் போர்களினால் அபிவிருத்தியின் அடித்தளமான கிராமங்கள் உடைத்தெறியப்பட்ட சோகக்கதைகளே அநேகம். அடித்தளத்தை உடைத்தெறிந்து விட்டு எவ்வாறு அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். அதிலும் உணவுற்பத்தியின் மையங்களே கிராமங்கள் தானே! இந்த இடத்தில் தான் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். அபிவிருத்தி பற்றி கருத்தரங்கு மற்றும் மாநாடுகள்; பல நடைபெற்றும் அவற்றின் தொனிப்பொருளான கிராம அபிவிருத்தி பற்றிய தீர்க்கமான முடிவுகள் பெறப்படவில்லை. அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கமும் ஈடேறவில்லை. சாக்குப் போக்குக்கு செய்யப்படும் திட்டங்களாகவும் அவற்றினால் மக்களுக்கான வழிகாட்டல்கள் முழுமையானதாக இல்லாதிருப்பதும் கவலைதரும் விடயங்களே!
பசி பட்டினியினோடு சேர்ந்து ஊட்டச்சத்து குறைபாடும் சேர்ந்து மக்களை வாட்டுகின்ற சோகம் உலகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிகின்றதா? சத்துணவு திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்கள் பலவற்றில் ஒரு வேளை உணவுக்காகவாவது பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள 5 வயதிற்கு கீழான 155 மில்லியன் சிறுவர்கள் அல்லது பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் மிகமுக்கியமான தகவல் அனைவரையும் சிந்திக்க தூண்டியிருக்கின்றது. இன்னும் நம்மில் பலருக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களைக்கூட அறிந்துணர முடியாதிருப்பதனை என்னவென்பது. இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி நமது பிரதேசத்து திட்டங்களனைத்தும் இவற்றுக்கான தீர்வினை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும். திட்டங்களின் முடிவுகள் மாற்றுவழிகளை பரிந்துரைக்கும் நேரத்தில் அவற்றிற்கான முடிவுகளையும் தீர்க்கமானதாக அறிவிக்க வேண்டும். எமது பிரதேசத்தில் இந்த உணவுத்தட்டுப்பாடு ஏற்படாமலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இன்னும் அவசியம் தேவைப்படுவோர் என இனங்காணப்படுபவருக்கும் வழங்கப்பட ஆவன செய்யப்படவேண்டும். உள்நாட்டுப் போரில் துவண்டுபோன வட உகண்டா நாடு போருக்கும் பின்னரான சரியான திட்டமிடல்களுக்கூடாக தற்போது தம்மை வளமுள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வளமான சந்ததியின் எதிர்காலம் சரியாக தீட்டப்படும் திட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் மேலும் அதற்கான சேவைகளிலும் தங்கியிருக்கின்றது.
'சிறுகக்கட்டி பெருக வாழ்' என்பதனை எமது மூதாதையர் எடுத்துக்கூறியதனை றியோ+20 முக்கியமான செய்தியாக சொல்லிச் சென்றிருக்கின்றது. இதனை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டால் மேற்கூறிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இளையவர் மனத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். வருங்காலம் அவர்களுக்கானது. சிறுகக்கட்டி என விளித்திருப்பது எமது சிறியளவிலான உற்பத்தியினை மையப்படுத்திய வீட்டுத்தோட்டங்களை குறிப்பிட்டுச் கூறலாம். ஏனெனில் வீட்டுத்தோட்டங்களில் பல்வகைப் பயிர்களை பயிரிட சிபார்சு செய்யப்பட்டதன் நோக்கம் ஒரு நேரத்தில் வகைவகையான பயிர்களை (multiple crops) அறுவடைசெய்து ஆகக்குறைந்தது தங்களது அன்றாட தேவைக்காக பயன்படுத்த வழியுண்டு. நஞ்சற்ற பயிர்களை உற்பத்தி செய்யவும் இன்னும் ஒரே நேரத்தில் பலவகை பயிர்களை பயிரிட்டு உணவுக்காக பெறவும் வீட்டுத்தோட்டங்கள் (Home gardens) உதவும். அதனை இன்னும் வலியுறுத்தினால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், ஒருவேளை உணவுக்காக தவிக்கும் மக்கள், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காலத்தைக் கழிக்கும் மழலைகள், பெண்கள் என பலருக்கும் நிறைவான உணவை கிடைக்கச்செய்ய வழிசெய்யலாம். இதற்கு இன்னமும் காலங்கடந்து விடவில்லை. அனைவரும் இந்த விடயத்திற்காகவாவது ஒன்று திரண்டால் சாது மிரண்டால் எமது தேசத்தை வளமுள்ள நிறைவான தேசமாக கட்டியெழுப்பலாம்.
ஊட்டச்சத்து இன்றி வருங்காலமேது நமது சந்ததிக்கு?
[ Without nutrition what is the future for younger generation ? ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நல்லதொரு மாற்றத்தைப் பற்றி இங்கே பேசத்தலைப்படுகின்றோம். இது எங்கள் எல்லோரைப் பற்றியதுமாகும். எமது நல்வாழ்வு பற்றியதும் எமது வருங்கால சந்ததியின் நிலைபற்றியதுமான அலசலாகும். இன்று இத்தருணத்தில் இதனைப்பற்றி பேசுவதற்கு காரணம் உண்டு. திசைகெட்டு தன்னிலை மறந்து போகின்ற இளைய சமுதாயத்தை வளப்படுத்த வேண்டிய காலம் இது. தவறின் அனைவரும் ஒருநாள் வருந்தவேண்டியிருக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! படித்து என்ன பலன்? உழைத்து என்ன பலன்? சொத்தை சேர்த்தும் என்ன பலன்? இந்த நோயற்ற செல்வத்தினைத் தொலைத்துவிட்டு பலர் தற்போது நிர்க்கதியாக நிற்கின்றார்கள். நோயென்பது நாம் விரும்பி வரவழைத்ததல்ல என்றாலும் எமது தவறான செய்கைகளினால் வழிமுறை தவறிய நடைமுறை பழக்கங்களினால் நாம் அதனை வில்லங்கமாக வரவழைத்துவிடுகின்றோம். எமது தவறை நாமே கவனித்து திருத்திக்கொள்ளாவிடில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவது? தலைமுறை பற்றியும் வளமான வாழ்வு பற்றியும் நாம் அவ்வப்போது சிந்திப்பதோடு சரி போதாக்குறைக்கு ஒரு கருத்தரங்கு அதிலும் சிலர் வந்து தமக்குத் தெரிந்த மொழியில் உள்ளதை சொல்லிவிட்டுப் போவர். அவ்வளவு தான். அதற்குப் பின்பு எதுவுமே நடப்பதாகத் தெரியவில்லை.
நல்ல மனம் வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். நல்லவர் சகவாசம் வேண்டும். நாலடியாரில் பாடல் வேண்டும். எம்மையும் மற்றையவர் மதித்திட வேண்டும். ஊர்போற்ற வாழவேண்டும். இது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருப்பினும் அப்படி வாழ தலைப்படவில்லையே. விஞ்ஞானம் வளர வளர அதன் பயன்பாடுகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றதென்பது உண்மையே. இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் நல்லவழியில் பயன்படுத்துவோமாயின் அது பலருக்கும் பயனுள்ளதாகவும் இன்னும் வளர்ச்சிப்பாதையில் நாம் உயர்ந்து செல்லவும் உதவும். மாறாக தற்போதுள்ள இளைய சமூகம் இந்த வளர்ச்சிப்பாதையை இலகுவான வாழ்க்கைக்கான வழியாக எதுவிதமான முயற்சியுமின்றி பொழுது போக்குவதனை மையமாக வைத்தே நகர முற்படுகின்றனர் என்பது கவலைதரும் விடயமாக தெரிகின்றது. உழைக்கவேண்டும் என சொல்லிக் கொடுப்பவரும் இல்லை, உழைக்க ஊக்கம் கொடு;ப்பவரும் இல்லை மாறாக புலம்பெயர்ந்து சென்ற உறவுகள் பலஆண்டுகளுக்குப் பின் தமது பிறப்பிடம் வந்து சொந்தங்களுக்காக பலவித இனாம்களை குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களை தமது பங்குக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதனை வைத்து இங்குள்ளவர்களுக்கு ஆரம்ப நாட்களில் எய்தப்படும் இன்பம் பின்னர் தொடர்வதில்லை மாறாக இவ்வாறாக கிடைக்கும் அற்ப வசதிவாய்ப்புக்கள் அவர்களுக்கு இடையூறாகவே மாறிவிட சந்தர்ப்பங்கள் அதிகம். இவ்வளவு விடயங்களிலும் தமது நேரத்தை பணத்தைச் செலவழிப்பவர்கள் தமது உணவிலும் குறிப்பாக ஊட்டச்சத்து விடயத்திலும் அதிக கவனஞ் செலுத்துவதில்லை என்பதனையே பலரும் குறைபட்டுக்கொண்டுள்ளார்கள்.
வரப்பே தலகாணி, வைக்கோலே பஞ்சுமெத்தை, வெற்றுடம்பே பட்டாடை என வெள்ளையுள்ளங்களாக வாழ்ந்த எமது மூதாதையர் சொல்லிச்சென்ற செய்திகள் பல. அனைத்தையும் மறந்து விட்டோம். சுகாதாரமான உணவு எமது பாரம்பரியத்தின் அடிப்படை. அதனை நாம் முழுமையாக மாற்றிவிட்டோம். பீட்சாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தற்போது எமது பாரம்பரிய உணவுக்கு கிடைப்பதில்லை. ஒருவருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து பலமடங்கு அதிகமான விலையுள்ள பீட்சாக்களில் கிடைப்பதாக பலர் எண்ணிக்கொள்கின்றார்கள். ஆனால் பாரம்பரிய உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்திற்கு அளவே இல்லை. இதனை மையப்படுத்தி குறிப்பாக மாணவ மாணவியருக்கு ஊட்டச்சத்து பற்றிய விளக்கங்கள் அதிகமாக கொடுக்கப்படல் வேண்டும் என உலகளாவிய நிறுவனங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றன. நாம் உண்ணும் உணவு சமபோஷ உணவாக பல்வகைத்தன்மையுடையதாக அனைத்து சத்துக்களும் உள்ளடங்கிய உணவாக இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு தற்போது இல்லை. ஏதோ ஒன்றை திணித்தால் போதுமானது என்னும் அளவிற்கு நிலைமை மாற்றமடைந்திருக்கின்றது எனலாம். யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம் என்னும் நிலைமையை எய்தியபின் இதனை மாற்றியமைத்தல் என்பது சிரமமான காரியமே. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்னும் மகுட வாசகத்திற்கேற்ப எமது காரியங்களை நாம் திட்டமிட்டு செய்தல் வேண்டும். இயலும் என்றால் இயலும் என்பார்கள் அதனையே நாம் எமது செயலூக்கத்திற்கான உதாரணமாக்கிக் கொள்வோம்.
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய வலுவான விளக்கங்களைக் கொடுப்பதனை மையப்படுத்தியே பாடசாலைகளில் பாடசாலைத்தோட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கே பாடசாலைத் தோட்டம் என்பது வெறுமனே அழகுக்காக உருவாக்கப்படும் தோட்டங்களல்ல. ஒரு சில பாடசாலைகளில் குறிப்பிட்ட சில தாவரங்களை வளர்த்துவிட்டு அதனை பாடசாலைத்தோட்டம் என பெயர்சூட்ட முனைகின்றனர். ஆனால் பாடசாலைத்தோட்டங்கள் வெறுமனே அழகையும் பெயருக்கேற்றால் போல் ஒரு தோட்டமாகவும் இருந்தால் மட்டும் போதாது. அவற்றில் பாடசாலை மாதிரித்தோட்டத்திற்கான அம்சங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான தோட்டங்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள்pன் பங்களிப்புடனேயை நிறுவப்படல் வேண்டும். அதன் மூலம் பாடசாலைத் தோட்டம் பற்றி செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தல் இலகுவாகிவிடும்.
பாடசாலைத் தோட்டத்தினூடாக உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி வழங்கப்படுதல் உறுதிசெய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு பாடசாலைகளும் தமக்குரிய பாடசாலைத்தோட்டத்தை வளமாக உருவாக்கி அதனூடாக மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பற்றி அறிவூட்டலாம். இதற்காக பலபாடசாலைகளில் பாடசாலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியே. இருப்பினும் அவற்றையும் வகுப்பறைகளாக மாற்றி அதிலிருந்து பாடங்களைக் கற்பிக்கும் நாளும் வரவேண்டும். இங்கே செயன்முறைக் கல்வியை இவ்;வாறான பாடசாலைத் தோட்டங்களுக்கூடாக வழங்குவது இலகுவாக இருக்கும் என பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது. சிரியாவில் நிகழும் பட்டினிச்சாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக உலக உணவு தாபனம் பாடசாலைத் தோட்டத்தினை சிபார்சு செய்திருக்கின்றது. இதன் மூலம் இளஞ்சந்ததிக்கான உணவுத்தேவையையும் மற்றும் ஊட்டச்சத்து தேவையையும் பற்றிய விளக்கங்களை கொடுக்க முடியும் என்பதனை அங்குள்ள மக்களும் திட்டமிடலாளர்களும் உணர்ந்திருக்கின்றார்கள். சாவின் விழிம்பில் இருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காக கையாளப்படும் கடைசி துருப்பு சீட்டாக பாடசாலைத் தோட்டத்தை பரிந்துரைத்திருக்கின்றார்கள். அதனை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். இதனை நாமும் பின்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமே. எமது பாடசாலைகளை வளங்களுள்ள பாடசாலைகளாக இன்னும் பசுமை சூழல்நிறைந்த பாடசாலைகளாக மாற்றும் தன்மைக்கு பாடசாலைத் தோட்டங்களும் உதவிசெய்யும் என்பதோடு மாணவ மாணவிகள் இத்தோட்டங்களிலிருந்து தமக்கான செய்திகளை எடுத்துச் சென்று தமது குடும்பத்தினருக்கும் இன்னும் சமூகத்துக்கும் அளிக்க முடியும் என நம்பப்படுகின்றது.
பாடசாலைத்தோட்டங்களை உருவாக்கியிருக்கும் அதிபர்களுக்கும் அதில் முன்னின்று உழைத்த ஆசிரிய பெருமக்களுக்கும் இந்த தருணத்தில் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் இன்னும் இவ்வாறான பல்வகைமை கொண்ட பாடசாலைத் தோட்டங்களை சமூகத்திற்கு பயன்தரத்தக்க வகையில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. பாடசாலைத் தோட்டங்களூடாக மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் விளக்கமளிப்பதுடன் அவர்களுக்கும் இதன் பயன்பாடுகள் பற்றி தெரியப்படுத்துதல் நல்லது. இவ்வாறான விளக்கங்கள் மூலம் பாடசாலைத் தோட்டங்களிலுள்ள விடயங்களை பெற்றோர்கள் அவர்தம் பிள்ளைகள் இணைந்து தத்தமது வீட்டுத்தோட்டங்களை உருவாக்கி அதன் பயன்பாட்டை பெறுவதற்கு நாம் உதவியளிக்கலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துச்செல்லும் தற்காலத்தில் அதற்கான மாற்றுவழிகளை நாம் விரைந்து நடைமுறைப்படுத்தாது விட்டால் அதற்கான விளைவை எமது சந்ததியில் காண நேரிடும். இது வெறுமனே எழுத்தாக இல்லாது இதனை வாசிப்பவர்கள் அனைவரும் இது பற்றி ஒருகணம் சிந்திக்க வேண்டும் எனவும் அதன் பின் தம்மாலானவற்றை செய்து ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்க வழிசெய்வோமாக.
கணனி தொழில்நுட்பத் தொழிலிலிருந்து விடுபட்டு விவசாய பண்ணை நோக்கி!
[ Towards farming from Computer technology jobs ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
தற்சமயம் எங்கும் தொழில்தாருங்கள் என்னும் கோரிக்கைகளே பரவலாக முன்னெழுந்துள்ளதனை அவதானிக்கலாம். இதற்குப் பலகாரணங்கள் தரப்பட்டாலும் அனைவருக்குமான தொழில்தருவதற்கான முன்னேற்பாடுகள்; மூன்றாம் உலகநாட்டின் அரசகொள்கை வகுப்பாளர்களிடம் இல்லாதிருப்பதும் அனைவருக்கும் அரச தொழில் கொடுப்பதென்பதற்கான சாத்தியம் குறைவென்பதுமாகும். ஆனாலும் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சிறப்பாக பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்; பலத்த கனவுகளுடன் தம்;குடும்பச்சுமைகளையும் சுமந்தபடி பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டம் பெற்றபின் அடுத்தது என்ன எனத்தீர்மானிக்க முடியாதபடி ஆகிவிடுகின்றார்கள். வெளிநாடுகளில் தங்களது வேலையை பெறுவதற்கு பலருக்கு ஆர்வமிருந்தும் அவர்களிடம் போதியளவு நிதியின்மையும் இன்னல்களுக்குள்ளான குடும்பநிலைமையும் இன்னும் அவர்களுக்கு சுயமான தொழில்செய்வதற்கான ஆளுமையின்மையும் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு பட்டப்படிப்பிற்கும் கற்றவர்களுக்கான தொழில்பெறுதலுக்கான வாய்ப்புக்கள் மற்றும் மேற்படிப்பிற்கான வசதிவாய்ப்புக்கள் என்பனவற்றினை ஆராய்ந்து தான் அந்தந்த கற்கைநெறியினை கற்பிக்கின்றார்கள். இதில் கற்கைக்கான திட்டமிடலில் மாணவர்களது அறிவு விருத்திக்கு அப்பால் ஆளுமையினையும் திறன்களின் விருத்தியும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. கற்றபின் தமது திறன்விருத்திக்கேற்ப வேலையை பெற்றுக்கொள்வர் என்னும் எதிர்பார்ப்புடனும் அனுபவத்திற்கூடாக ஆளுமையினை வளர்த்துக்கொள்ளவும் அதற்காக தொழில்சார் பயிற்சிகள் கற்றல் காலங்களிலேயே வழங்கப்படுவதும் என இக்கற்கைநெறிகள் மீளவும் நெறிப்படுத்தப்;பட்டு உலகவங்கி அனுசரணையுடனான திட்டங்களுக்கூடாக நடைபெறுகின்றன. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தளவு அடைவு இத்திட்டங்களினால் கிடைக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.
அளவுக்கதிகமான மாணவர்கள் குறிப்பிட்ட பிரிவு அல்லது துறைசார்ந்த பட்டப்படிப்பிற்குள் உள்வாங்கப்படும் போது அவர்கள் கற்று வெளியேறும் காலத்தில் அங்கொரு தொழில்ரீதியான தேக்கநிலை வழமையாகக் காணப்படுகின்றது. இந்த தேக்கநிலை வருடாவருடம் பல்கலைக்கழகங்களுக்கு உட்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இன்னும் அதிகரித்துக்கொண்டு செல்வதனையும் அவதானிக்கலாம். குறிப்பாக கலை மற்றும் விஞ்ஞான பட்டதாரிகளின் வேலைவாய்ப்பென்பது விசேடமாக கருத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். இவர்களின் வேலைவாய்ப்பென்பது அதிகமாக உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப உருவாக்கப்படாது விட்டால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு வருடாவருடம் முகங்கொடுக்க வேண்டியிருக்கும். மாறாக இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே தொழில்நுட்ப பட்டப்படிப்பு இலங்கையெங்கும் பலபல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு அதற்காக விசேடமாக க.பொ.த உயர்தரத்திலிருந்து தொழில்நுட்பபிரிவு மாணவர்களும் உள்வாங்கப்பட்டு தற்போது அவர்களது பட்டப்படிப்பு கற்கைநெறி தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறாக உள்வாங்கப்படும் மாணவர்கள் பட்டதாரிகளாக வெளிவரும் போது அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் பற்றிய செயற்பாடு அதிகமாக நடைபெறுவதாக அறியமுடியவில்லை. இது தனியார் தொழிற்றுறை விருத்தியை மையப்படுத்தியதாக இல்லாது விட்டால் இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கவே செய்யும்.
இலங்கையில் வருடாவருடம் கிட்டத்தட்ட 2000-3000 வரையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் அதிகரித்த எண்ணிக்கையில் உள்வாங்கப்படுகின்றனர். இதற்காக புதிய கற்கைநெறிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்குள் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் வேலைவாய்ப்பென்பது அரசதொழிலை மட்டும் நம்பியிருக்காது நாடெங்கும் தனியார் தொழிற்றுறைகளின் உருவாக்கத்திலும் தங்கியிருக்கின்றது. அரசஇயந்திரத்தினால் எத்தனை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஒரேநேரத்தில் பெற்றுக்கொடுக்க முடியும்? மாறாக அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு எதுவிதத்திலும் சம்பந்தமேயில்லாத பட்டதாரி தொழில் பயிற்றுனராக அமர்த்திவிட்டு பின்னர் அந்ததொழிலும் வழங்கப்படும் குறைந்தசம்பளமும் அவர்களுக்கு மனநிறைவையும் அவர்களது அன்றாடத்தேவையையும் பூர்த்தி செய்யாதபோது தாமாகவே அதனை விட்டு வெளியேறி வேறு தொழில்தேடி செல்லும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது. பட்டத்தைப் பெற்றபின் எதுவித தொழில்வாய்ப்பும் இல்லாது வழிதெரியாது நிற்கும் பட்டதாரிகளுக்கு அதனை பெற்றுத்தருவது யார் என்னும் பலத்த கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.
இவற்றுடன் வேலைவழங்கப்படும் போது எதிர்பார்த்தளவில் வேலை செய்யப்படுவதில்லை என்னும் முறைப்பாடுகளும் வேலை தருபவர்களாலும் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட வேலையில் ஈடுபாடுகாட்டாததும், தரப்பட்ட வேலையினை வினைத்திறனாக செய்ய எத்தனிக்காமையும் வெறுமனே வேலை என்பதனை தமக்கொரு அரணாக பயன்படுத்துவதும் பொதுவான குறைகளாக இருந்தாலும் வேலை தருபவர்களது எதிர்பார்ப்பை வளருஞ்சந்ததி பூர்த்தி செய்வதில் மந்தநிலையிருப்பதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தநிலை எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்களும் இனங்காணப்படவேண்டும். வளர்ந்துவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அனுசரணை தொழில்கொள்வோரிடமும் தொழிலாளர்களிடமும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றது என்பது நிதர்சனமே. வாழ்க்கையை சுகமான வாழ்க்கையாக வேலைப்பழுவற்று பொழுதுபோக்குகளில் விருப்புக்கொள்ளும் போக்குக்குள் தற்போது இளையசமுதாயம் மாறியிருப்பது கவலைக்குரியதாகின்றது. இது பலஆண்டுகாலமாக போர்ச்சூழலில் சிறைப்பட்டிருந்த சமூகத்தில் அனைத்தும் கிடைக்கக்கூடியதாக ஆகியிருக்கும் போது அதற்குள்ளான உள்ளீர்;ப்பாக இருப்பது தவிர்க்கமுடியாததாயினும் அவர்கள் தம்நிலையை கருத்தில் கொண்டு தமக்கொரு வேலையை உருவாக்கிக்கொள்ளும் நிலைக்குள் வரவிரும்பாததும் இன்னொரு காரணமாக கருதப்படுகின்றது. மாறாக சுயமாகவேலையை செய்ய நினைக்கும் ஒருவருக்கான உதவிகளும் ஊக்குவிப்பும் இத்தேசத்தில் அரிதாகவே கிடைப்பதும்; கிடைப்பதை பயன்படுத்துவதில் காட்டும் ஈடுபாடு புதுமைகளை உருவாக்குவதில் இல்லாதிருப்பதுவும்இவற்றுக்குக் காரணமாக கொள்ளமுடியும்.
மாறாக அரச தொழிலல்லாது தனியார் தொழிற்றுறையும் வடபகுதியைப் பொறுத்தவரை எதிர்பார்த்தளவில் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை அள்ளித் தந்துவிடவில்லை என்னும் பொதுப்படையான உறுமல்களும் ஆங்காங்கே கேட்கவே செய்கின்றது. போர்நடைபெற்ற காலங்களில் தனியார்தொழில் என்பதற்கான வாய்ப்புக்கள் எதுவுமற்றதாக இருந்தது. அதன்பின்னர் மத்தியவங்கியின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து முதலீடுசெய்து தனியார் தொழிற்றுறையை விருத்திசெய்ய ஆர்வம் கொண்டிருந்தாலும் நாட்டின் நிலைமை அவர்களுக்கு சாதகமாக தெரியவில்லை. இந்த நிலையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களின் தொழிற்றுறை விருத்திக்கு வழிசமைப்பதும் அவசியமாகின்றது. ஆனால் இந்த முதலீடுகள் இங்குள்ள மக்களின் வேலைப்பிரச்சனைக்கு வழிகோலுவதாக இருக்கவேண்டுமே தவிர பிறஇடங்களிலிருந்து மக்களை வரவழைத்து வேலைகொடுப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் தென்பகுதியிலிருந்து தருவிக்கப்படும் வேலையாட்கள் சிறப்பாக இன்னும் எதிர்பார்க்கும் வேலைகளை கலைநுட்பத்துடன் வினைத்திறனாக செய்வதாக தொழிற்றுறையாளர்கள் தெரிவிப்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
கணணி தொழிலில் ஈடுபட்டுள்ள படித்த இளைஞர்களில் திடீர் மாற்றம்:
அது இவ்வாறிருக்க தமிழ்நாட்டில் ஒரு அதிசயம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கணனி தொழிற்றுறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பட்டதாரிகள் ஏறக்குறைய மாதமொன்றிற்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சங்கள் வரை பெறும் சம்பளத்துடனான வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்போது பண்ணையாளர்களாக மாறி விவசாயசெய்கையில் ஈடுபட்டுவருவதனை அறியமுடிகின்றது. இதற்காக அவர்கள் தரும் விளக்கம் விசித்திரமானதாகவும் பலருடைய கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைதருவதாகவும் அமைந்திருக்கின்றது. கணனி தொழில்நுட்பத்தில் பணிபுரியும் ஒருபட்டதாரி கிடைக்கும் அதிகூடிய சம்பளத்தில் தமது வாழ்க்கை தரத்தை இயன்றளவுக்கு உயர்த்திக்கொள்ளுவதும் அதற்காக புதிய வசதிவாய்ப்புக்களை தேடும் போது பலஆண்டுகளுக்கான கடன்களை பெறவேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெறும் கடன்களை அடைப்பதற்காக தம்மை குறிப்பிட்ட கணனி நிறுவனத்துடன் வேறுவழியின்றி பிணை முறியுடனான பந்தத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான நிறுவனங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டுமென்றும் இதனால் பலர் இனந்தெரியாத மனவுளைச்சல்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர். உயர்ந்த சம்பளத்தில் வேலை என்னும் போது வேலையின் தரமும் அளவும் அதிகமாகவே இருக்கவேண்டும் என வேலைதரும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதில் தப்பேதுமிருப்பதாக தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக இடைவிடாது வேலைக்குள் திணிக்கப்படும்போது தமது சந்தோசத்தை, இல்லத்தின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என பலர் இப்போது நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். கற்றலும் தொழில்செய்வதும் ஓடியோடி உழைப்பதும் அவரவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேயன்றி வேறெதற்கு. ஆனால் அந்த மகிழ்ச்சியே கேள்விக்குறியாகி நிறுவனமொன்றிற்கு அடிமையாக வாழ்வதனை இளையசமுதாயம் விரும்பவில்லையென்றே நினைக்கின்றது.
இதனால் அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு பலரையும் ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியிருக்கின்றது. தாம் செய்து வந்த அதிகூடிய லட்சங்களை வழங்கும் வேலையை இராஜினாமா செய்து விட்டு தமக்கென நிலங்களை வாங்கி அனைவரும் விவசாயம் செய்ய தொடங்கிவிட்டார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? தமது நிலங்களில் தொழில்நுட்பத்தினை உள்வாங்கிய பண்ணைகளை அமைத்து அதிலிருந்து ஆகக்குறைந்தது மாதமொன்றுக்கு இந்திய ரூபாவில் அறுபதினாயிரம் வரை பெறக்கூடியதாக இருப்பதாகவும் தற்போது தாம் முன்பிருந்ததை விட மிகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்துடன் குதூகலித்தும் இருப்பதாக கூறும் இவர்கள் எந்தவித பிணைமுறிகளும் இல்லாது மனம் அமைதியாகவும் நீண்ட நேரத்தை குடும்பத்துடன் கழிப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள். தமது பண்ணைகளில் சேதன முறைமூலமாக பயிர்களை உற்பத்தி செய்ய முடிவதாகவும் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதில் தாம் பெருமைப்படுவதாகவும் தெரிவிக்கும் இவர்கள் அளவாக தமது பண்ணையை தாம் நடாத்துவதாகவும் அதில் எந்தவித பிரச்சனைகளையும் தீர்க்கமுடிவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கிராமத்திலிருந்து நகரத்தைநோக்கி இளைய சமுதாயம் நகர்வதற்கு முக்கியமான காரணமாக நகரத்திலிருக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகளாகும். இந்த வசதிகளை கிராமத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்தால் நிச்சயமாக மேலே தெரிவித்த அதிசயங்கள் நம்நாட்டிலும் நடக்கும். கிராமத்து அபிவருத்தி என்பது அந்த கிராமத்திலுள்ள வளங்களுக்கேற்ப தொழிற்றுறைகளை உருவாக்குவதும் அதற்கான விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை உட்புகுத்துவதுமாகும். இவ்வாறு செய்தால் கிராமத்திலேயே அனைவருக்கும் தேவையான உணவும் அவற்றின் மதிப்பேற்றப்பட்ட பொருட்களும் எம்மவர் தரம்மிக்க பொருட்களாக எமது சந்தைக்கும் உலக சந்தைக்கும் கிடைக்கும். தரக்கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் உருவாக்கமும் பொருட்களை மதிப்பேற்றஞ் செய்து சந்தைவாய்ப்பை அதிகரிக்கும் வழிவகைகளும் கிடைக்கப்பெறும் போது இவையனைத்தும் சாத்தியமே. மேலும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி இங்கே முக்கியமாக கவனிக்கப்படுதல் வேண்டும். சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் அது சார்ந்த சேவைகளின் தேவையும் அவற்றின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது வேலையில்லாப் பிரச்சனைக்கு முடிந்தளவு தீர்வையும் அதற்கிணையான தொழிற்றுறை வளர்ச்சிக்கு வாய்ப்பையும் அதிகரிக்கும். விவசாயசெய்கையில் படித்த இளைய சமுதாயம் மீண்டும் ஆர்வம் கொண்டிருப்பது இனியொரு பசுமைப்புரட்சியில் பலநல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பலாம். இதுவொரு நல்ல சகுனமாகவே கருதப்படவேண்டியதாகும்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்.... ஆதலினால்...
[ Everything is beyound Farming... therefore....]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் முக்கியமானது உணவும் நீரும் உறையுளும் மட்டுமே. உணவின்றி எந்த உயிரினத்திலும் அசைவேது. உணவின்றி பட்டினியால் இறக்கும் மக்கள் கூட்டத்தை இவ்வுலகில் நாம் அறியக்கிடைத்தாலும் அந்த பட்டினிக்கு தீனிபோடும் பொறுப்பு ஒவ்வொருவரையும் சார்ந்தது. உழவுத்தொழிலுக்கு உரமிடாதுவிட்டால் எதுவிருந்தும் இறுதியில் உண்பதற்கு என எதுவுமிருக்காது. இங்கே உரமிடுதல் என்பது வெளிநாட்டு அசேதன இரசாயனப் பொருட்களை திணிப்பதல்ல. மாறாக உழவுத்தொழிலை சமகால விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் உள்வாங்கி அதனை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லல் என்பதாகும். உழவுத்தொழிலில் அக்கறை காட்டுகின்ற இளையவர் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது என பலதரப்பட்ட தரவுகள் எடுத்துக்கூறுவதிலிருந்து அதற்கான முக்கியத்துவம் நலிவடைந்து வருகின்றது என்பதுதானே பொருள். இதனை அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு திட்டமிடும் வல்லுனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே கட்டடங்களும் எமக்கொவ்வாத தொழில்நுட்பமும் எந்தவிதத்திலும் எமக்கு அபிவிருத்தியை தந்துவிடாது.
வடமாகாணத்து அபிவிருத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமானளவுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. எமது மொத்த உள்நாட்டு (வடமாகாண) உற்பத்தி GDP (Gross Domestic Product) என்பது 3-4 சதவீதமாக இருக்கும் அதேநேரத்தில் தென்பகுதியிலுள்ள மற்றைய மாகாணங்களின் புனுP மிகவும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை நாம் கண்டறிந்து கொண்டால் எமது பகுதியிலிருந்து உற்பத்தியாகிப் பொருட்கள் உலகசந்தைக்கு செல்லாததே காரணமாகும். எமது மாகாணத்தின் உற்பத்தி ஒருபுறமிருக்க அதனை தரமாக அதுவும் உலகத்தரம்வாய்ந்த அந்நிய செலாவாணியை பெறக்கூடியதாக உருவாக்கி உலகச்சந்தைக்கு எடுத்துச்சென்றாலன்றி இதனை நாம் உயர்த்திக்கொள்ள முடியாது. சுருக்கிச்கூறினால் ஒரு தேசத்தின் சிறப்புத்தன்மையை அல்லது ஆரோக்கியத்தை கட்டியங்கூறும் சுட்டியாகவே மொத்த உள்ளுர்உற்பத்தி அமைந்திருக்கின்றது. ஆதலினால் வடமாகாணத்தின் ஆரோக்கியத்தை கட்டியெழுப்பவேண்டுமாயின் இந்தச் சுட்டியின் அதிகரிப்பை நோக்கிய அபிவிருத்தி அமையவேண்டும். தரமான உற்பத்தி மற்றும் மதிப்பேற்றஞ்செய்த பொருட்கள் உலகச்சந்தையை எட்டிப்பார்ப்பதற்கான உலகத்தரத்தை கொண்டிருக்கவேண்டும். தொடர்ந்தும் உள்ளூர்ச்சந்தையை நம்பி எமது அபிவிருத்தியை குறிப்பாக உற்பத்தியை நாம் நகர்த்தக்கூடாது. மாறாக வடபகுதிப்பொருட்களுக்கு நல்லதொரு சந்தைவாய்ப்பை தென்பகுதியும் தரமுடியாது. ஆதலினால் உலகச்சந்தைக்கான தரத்துடன் கூடிய சிறந்த உற்பத்திப்பொருட்களை உற்பத்திசெய்யும், பொதிசெய்யும் வழிவகைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இத்தேசம் விடிவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வாய்ப்புக்களை பலவகைகளிலும் உருவாக்கிக்கொடுத்தாலன்றி இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களும் அரிதாகவே காணப்படுகின்றன. சுயதொழில் முயற்சித்திட்டங்கள் இன்னும் பலமாக உருவாக்கப்படவேண்டும். அதிலொன்றாகவே சுற்றுலாத்துறையை இனங்காண்கின்றனர். ஆனாலும் இவையனைத்தும் இருந்தாலும் இளையவர்கள் விவசாயத்தொழிலில் காட்டும் அக்கறை மகிழ்ச்சி தருவதாக இல்லை. இது விவசாய நாடான எமக்கும் விவசாயத்தில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த எமது மாகாணத்திற்கும் ஒரு நல்லசெய்தியாக இல்லை. வசதிகள் அதிகமாக இல்லாத காலங்களில் சிறப்பாக செய்யப்பட்ட விவசாயம் தற்போது மந்தநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமாக காலநிலை மாற்றத்தை நாம் முன்வைத்தாலும் இவையனைத்தையும் இருக்கின்ற விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றியமைக்க முடியும் என பிறதேசங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் கட்டியங்கூறிநிற்கின்றன. வரண்ட பாலைவனங்களை பசுமையாக்க முடியுமானால் எமது பிரதேசத்தை ஏன் நாம் மாற்றிக்காட்ட முடியாது. இதற்கான ஊக்குவிப்பு எதிர்பார்த்தளவில் இல்லையென நாம் எடுத்தமாத்திரத்தில் எவரையும் குறைகூறமுடியாது. அனைவரதும் பங்களிப்பு அவசியமாகின்றது என்றதனை நாம் இன்னும் கவனத்திற்கொள்ளவில்லை.
எமது அண்டைநாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பலவகையான இலகு தொழில்நுட்பங்கள் தினமும் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கான ஒன்றிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டு அங்கே விவசாய உற்பத்திகள், மதிப்பேற்றஞ் செய்த பொருட்கள், சிறந்த பண்ணை முறைகள், தனியார் தொழில்மையங்கள் என்பன சிறப்பாகவும் இத்தொழில்களை செய்வதற்கான ஆலோசனை மையங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிமையங்கள் என பலவும் அமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனை நாம் கண்கூடாக காணமுடிகின்றது. குறிப்பாக பலதரப்பட்ட வீட்டு உபகரணங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனை நாம் இன்னுமேன் கவனிக்கவில்லை. பலவகையான ஆய்வுகூட உபகரணங்கள் மலிவான முறையில் இலகுதொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வளரும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இந்தவகையில் அங்கே உற்பத்திக்கான சந்தைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உற்பத்திப்பொருட்கள் அதன் தேவைக்காக உற்பத்தியாவதாலும் ஏற்றுமதி செய்யப்படுவதனாலும் அங்கே தொழிற்றுறையின் விருத்தியென்பது இமாலய சாதனையாக பதியப்பட்டிருக்கின்றது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தொழிற்றுறைகளில் எமது இளையசமூகத்தை பயிற்றுவித்தால் குறிப்பாக அங்கு நடைபெறுகின்ற தொழில்விருத்திபற்றி நேரில்கண்டும் கேட்டும் அனுபவப்படவும் வாய்ப்புக்கிட்டினால் சுயமாக பலவகைத்தொழிற்றுறைகளை இங்கே செய்வதற்கு தேவையான உந்துதல் கிடைக்கும்.
புதிய தொழிற்றுறைகளுக்கான நிதியை வங்கிகள் மூலமாகவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலமாகவும் கடனாகவாவது கிடைக்க வழிசெய்தால் இத்தகைய மாற்றங்களை ஓரளவுக்கேனும் ஏற்படுத்தலாம். குறிப்பாக நிதியை கடனாகப்பெற்று அதனை அடைக்கமுடியாதபோது அவற்றை வட்டியுடன் திருப்பிச்செலுத்த வழிவகைகளையும் கண்டறியவேண்டும்.
இதேபோன்றதொரு வளர்ச்சி எமது தேசத்திலும் வேண்டும்! அதனை சாத்தியப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் புலமையாளர்களும் கல்விநிறுவனங்களும் குறிப்பாக ஆய்வு செய்யும் நிறுவனங்களும் அத்துடன் ஊடகங்களும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். போரின் கிடுக்குப்பிடிக்குள் சிக்கியிருந்ததேசம் மெல்லமெல்ல வளர்ச்சிகாணும் நிலைக்குள் வந்திருக்கும் இந்நேரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து அதற்கான வளர்ச்சிப்பாதைக்கும் எமது இளையசமூகத்தை இட்டுச்செல்வதற்கான வழிவகைகளை திட்டமிட்டு செயலாற்றவேண்டும். வடமாகாணத்தின் மொத்த உள்ளூர்உற்பத்தியின் பெறுபேறு சிறப்புறும் போது மற்றைய மாகாணங்களும் ஒன்றிணைந்தால் எமது நாடு முன்னேறும், மக்கள் அனைவரும் பயனடைவர். சரி இந்தப்பூனைக்கு மணிகட்டுபவர் யார் என்னும் இடர்ப்பாட்டிலேயே நாம் சிக்கிசிதைந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஆக்கபூர்வமான செயலில் இறங்குவது எப்போது?. விவசாயச்செய்கையை முழுமையாக கைவிட்டு எந்த அபிவிருத்தியையுமே நாம் மகிழ்ச்சியாக அடைந்திடமுடியாது. ஆதனால் விவசாயச்செய்கைக்கான முக்கியத்துவத்தில் எந்தவிதவிழுக்காடும் இல்லாதவாறு பார்த்துக்கொள்வதுடன் விவசாயச்செய்கையின் பரிமாணத்தை ஏனைய தொழிற்றுறையின் விருத்தியுடன் இணைத்துக்கொண்டால் பலவிதமான நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிடலாம்.
சுகமாக இருந்து சீவிக்கமுடியாது என பெரியவர் சொன்ன கருத்துக்கள் பொன்மொழிகளாகவே இன்றும் இருக்கின்றன. பலவகைகளிலும் வழியைத்தேடுபவர், வளரத்துடிப்பவர்களை தடுத்து நிறுத்தமுடியாது. ஆனால் இந்த வளர்ச்சிப்பாதை தேசஆரோக்கியத்திற்கு வழிகோலுவதாக அமையவேண்டும். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்பதிலிருந்து உழவுத்தொழிலுக்கு அதாவது விவசாய உற்பத்திக்கு எந்தவித பங்கமுமில்லாது தொழிற்றுறையை விருத்திசெய்ய வேண்டும். விவசாயத்தொழிலின் முன்னேற்றமின்றேல் அது எமக்கான குழியை நாமேதேடிக்கொண்டதாகவே முடியும்.
“தேனி இனம் அழிந்தால் மனித இனமும் அழிந்துவிடும்!”
[If bees are dead then human beings also will die ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலகின் மாமேதைகளில் ஒருவரும், மாபெரும் விஞ்ஞானியுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை இப்படி கூறினார். “உலகில் உள்ள தேனிக்கள் எல்லாம் அழிந்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் பூமியில் மனித இனமும் அழிந்து போகும்!”
தேனிக்களின் வாழ்வது மனிதர்களின் வாழ்க்கைக்கு எந்தவகையில் அவசியமானது? மனிதன் ஒன்றும் ஈசலை போல, தேனிக்களை தின்பது இல்லையே. ஈசல் போன்ற பூச்சியினங்கள் உலகின் பிரதான உணவும் இல்லையே என்றும் நமக்கு தோன்றலாம்.
உலகமானது தவிர்க்கவே முடியாத வகையில் பல்வேறு விலங்குகளின், உயிரினங்களின் சங்கிலித் தொடரால் ஆனாது. ஒரு கண்ணியில் இருந்து ஒரு உயிரினத்தை நீக்கினாலும் ஒட்டுமொத்த உயிரின சங்கிலியிலும் அது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பொருளில் தான் ஐன்ஸ்டீனின் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
தேனிக்கள் அழிந்துவிட்டால், பூக்களின் இனச்சேர்க்கை தடைபடும் அது பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கையை முற்றாக அழித்துவிடும் என்பதால் அது மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
காட்டை பொறுத்தவரை நாம் ஆபத்தானதாக பார்க்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அவையே இடைநிலையில் இருக்கும் மான் உள்ளிட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. ஒருவேளை சிங்கம், புலி போன்றவை அவற்றின் பற்களுக்காகவும், தோலுக்காகவும் முற்றாக கொல்லப்படுமேயானால் மான் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகி புல்வெளி மற்றும் செடிகள் முற்றாக அவைகளில் உண்ணப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். இந்த சமநிலையை பேணுவது மேலே இருக்கக்கூடிய விலங்குகள் தான்.
“ஓநாய் குலச்சின்னம்” உலகில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சீன நாவல். மாவோ தலைமையில் நடைபெற்ற புரட்சிக்கு பின்னான காலத்தில், வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு பழங்குடிகளின், மேய்ச்சல் சமூகத்தின் பல்லுயிர் பெருக்க வாழ்வியல் எப்படி சிதைக்கப்பட்டது என்பதையும், வளமாக செழிப்பாக இருந்த நிலங்கள் எப்படி பாலையானது என்பதையும் அழகாக விவரிக்கும் நூல்.
மனித உயிர்களையும், மேய்ச்சல் விலங்குகளையும் இரக்கமற்ற முறையில் கூர்மதியுடன் வேட்டையாடும் ஓநாய்களை அம்மக்கள் தெய்வமாக வழிபடுவதன் காரணம் என்ன? தாங்கள் இறந்தபிறகு தங்களது உடலை ஓநாய்கள் தின்றக் கொடுத்து, ஓநாய் தின்பதாலேயே தங்கள் ஆத்மாக்கள் சொர்க்கம் செல்வதாக மேய்ச்சல் நில மக்கள் கற்பித்துக் கொண்டதன் உளவியல் பின்னணி என்ன? எல்லாமே பல்லுயிர் பெருக்கம் தான் என்பது ஓநாய் குலச்சின்னத்தின் சாரம்.
வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே மனிதனை முழுமையானவனாகவும், ஒரு நாட்டையும், உலகையும் செழிப்பானதாகவும் மாற்றிவிடாது. கண்மூடித்தனமான தொழிற்துறை வளர்ச்சி சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கமும், அது பல்லுயிர் பெருக்கம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
நம்மூர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆதர்சனமாக குறிப்பிடும் ஜப்பானின் மசானபு ஃபுகோகா தனது வயலில் உள்ள சிலந்திகளை அழியாமல் காப்பது எந்த வகையில் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்து சீரான ஒரு சமச்சீர் மண்டலத்தை உருவாக்குகிறது என்பதை இயற்கை விவசாயம் தொடர்பான தனது நூலில் விளக்கியிருப்பார். இங்கு எதுவொன்றும் ஒன்றில் இருந்து மற்றொன்று தனித்ததல்ல.
பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்திவரும் உலக நாடுகளை தனது நெறிகாட்டுதல்களால் வழிப்படுத்த முயலும் ஐ.நா, மே 22ம் தேதியை உலக பல்லுயிர் பெருக்க நாளாக அறிவித்து, அதை கடைபிடித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் பல்லுயிர் பெருக்க நாளின் நோக்கமாக “பல்லுயிர் பெருக்கம் மற்றும் பேண வேண்டிய சுற்றுலா!” என்பதை அறிவித்துள்ளது.
சுற்றுலா என்பது பல்வேறு நாடுகளுக்கும் பெருத்த வருமானத்தை வாரி வழங்கும் ஒரு துறையாக விளங்குகிறது ஒருபுறம் என்றாலும், சுற்றுலா ஒருநாட்டின் சுற்றுச்சூழலை, பல்லுயிர் பெருக்கத்தை எப்படி சீரழிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வருமானத்திற்காக சுற்றுலாவிற்கான விதிகளை தளர்த்துவதற்கு பதிலாக, பல்லுயிர் பெருக்கத்தை பேணும் வகையில் தேவையான கட்டுக்கோப்புகளை கொண்டுவர வேண்டும்.
இவ்விவகாரத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தில் மனிதனுக்கும் இடமுண்டு. மனிதர்களை சூழலில் இருந்தும், சூழல் மண்டலத்தில் இருந்தும் பிரித்து அடையாளம் காண்பதும் பிழையாகிப் போகும். வனங்களில் அதன் ஒரு பகுதியாக, அதன் குழந்தைகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் பழங்குடி மக்களை வனங்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையாக பல்லுயிர் பெருக்க திட்டமும், சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பும் அமையக் கூடாது.
உலகிலேயே அதிக பல்லுயிர் பெருக்கமுள்ள இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலைகள். எழில் மிகுந்த இந்த மலைத்தொடரை அதன் இயல்பு நிலையிலையே பாதுகாப்பதும், வன விலங்குகளை காப்பதும், அதன் பழங்குடிகளை அவர்களின் பாரம்பரிய வாழ்வியலோடு வாழ விடுவதுமே சிறப்பான ஒன்றாக இருக்கும்.
பல்லுயிர் பெருக்கம் என்பது உலகில் காணப்படும் பல்வேறு வகையிலான உயிரினங்களை காப்பது. மனிதனே உலகின் பிரதானம் என்ற மனித மைய வாதத்தை தகர்த்து உலகில் வாழ எல்லா உயிர்களுக்கும் உரிமை உள்ளது என்ற அடிப்படையை உணர்வது. இதையே உலக பொதுமறையாம் திருக்குறள் சொல்கிறது,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.” (322வது குறள்)
தேனீக்களுக்கு மாற்றீடாக ரேபோதேனீக்களா?
[ Can the bee robots replace the Honey bees? ]
இது இராணித்தேனீயின் அறைகூவல்!.
எம்மைச்சீண்டிப்பார்த்து அழகுபார்க்கின்றீர்களா? நன்றிமறந்த ஜென்மங்களா நீங்கள் அனைவரும்?. கால்கட்டுப்போடுவதும், காலாறுவதும், காலைப்பிடிப்பதும், காலைவாருவதும், காலால்உதைப்பதும் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கலாம். ஆனால் எம்மினத்தில் அப்படியொரு நிகழ்வே இருக்காது. நாம் எம்பாட்டுக்கு எமது குலத்துடன் எமக்குரிய சட்டதிட்டங்களுடன் அனைவரும் குதூகலித்திருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? நீங்கள் வாழும் இந்தச் சூழலை காப்பாற்றுவதற்காக நாம் எவ்வாறெல்லாம் பாடுபடுகின்றோம் என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை? எவ்வளவோ அல்லல்பட்டு காடுமேடு என திரிந்து ஒவ்வொரு பூக்களிலிலுமிருந்து சிறிது சிறிதாக எமது இளஞ்சந்ததிக்கான உணவாக திரட்டியெடுத்து இனிப்பு பண்டமான தேனாக நாம் கட்டிய கூட்டுக்குள் சேமித்ததை எம்மை வதைத்தெடுத்து உண்டு களித்துவிட்டு இப்போது எமது குடியையே அழிக்க துணிந்துவிட்டீர்களா?
அழிவுக்கு வித்திடுகின்றீர்கள்! ஆபத்து! ஆபத்து!
என்னினத்தை அழிப்பதற்கு மனிதர்களே இவ்வாறும் திட்டமிடுகின்றீர்களா? ஆறறிவும் ஏழாம் அறிவும் இதற்குத்தான் பயன்படுத்துகின்றீர்களா? ஏதோ சுயபுத்தியிருப்பதாகவும் அறிவுகூர்மையிருப்பதாகவும் கூறிக்கொண்டு விஞ்ஞான தொழில்நுட்பத்தை வளர்த்தும் கொண்டு ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் எம்மையும் அழிக்கப்பார்க்கின்றீர்களா? கட்டுரையை கவனமாக வாசியுங்கள். புரிந்ததை புரிந்தவகையில் மற்றையவர்களுக்கும் எடுத்துச்சொல்லுங்கள்! கவனமின்றி காலங்கடந்தால் பின்னர் எதனையும் சரிசெய்ய முடியாது. முற்பகல் செய்மின் பிற்பகல் விளையும்! தற்போது நிகழுகின்ற அழிவுகள் அனர்த்தங்கள் அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம் என்பதனை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். வெள்ளம் வழிந்தோடும் கால்வாய்களை மூடிவிட்டு மாடிவீடுகள் கட்டி வாழ முற்படுகின்றீர்கள். மழைபெய்ந்து ஓடிவரும் நீர் தொடர்ந்து ஓடமுடியாது வழிமறித்து அடுக்கு மாடிகளைக் கட்டிவிட்டு இப்போது வெள்ள அனர்த்தம் என்கின்றீர்கள். இயந்கையாக வழிந்தோடும் இடங்களை மீண்டும் திருப்பித்தாருங்கள். சூழலைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை.
உங்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்மைசெய்யும் எமது குடியை குலத்தை அழிக்க நினைத்தால் மனிதகுலமே அழிந்துவிடும் என உங்களது அறிவியல் விஞ்ஞானி மாபெரும் விஞ்ஞானிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியிருப்பதும் அபாயஒலி எழுப்பியிருப்பதும் காதில் இன்னும் விழவில்லையா? இதைப்பற்றி அறிய அதனைப்பற்றி கலந்துரையாட எங்கே உங்களுக்கு நேரமிருக்கின்றது? ஓடியோடிக்கொண்டிருக்கின்றீர்கள்! எதைப்பற்றியும் அக்கறையில்லை. அவரவர் தமக்கேற்றாற்போல் அனைத்தையும் மாற்றியமைத்துக்கொண்டு இறுதியில் கழுத்துவரை பிரச்சனை முற்றியபின் பரிகாரம் தேட நினைக்கின்றீர்கள். இயற்கையை மதியுங்கள். அதற்கும் இடங்கொடுங்கள்.
சொல்ல வந்த விசயத்திற்கு வருகின்றேன். எம்மைப்போல ரோபோக்கள் கண்டுபிடித்திருக்கின்றீர்களாமே! அவற்றைக் கொண்டு எமது முக்கிய தொழிலான மகரந்தசேர்க்கையை செய்வதற்காகவாம். ஆயிரமாயிரம் ரோபோக்களை பயன்படுத்தி செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை நடாத்த முனைப்புடன் இருக்கின்றீர்களாம். இந்த கண்டுபிடிப்புக்களை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் உங்களால் செய்துகாட்ட முடியாது. நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். இயற்திரங்களைக் கொண்டு இயற்கையை உருவாக்க முடியாது. இயற்கையென்பது அனைத்து உயிரினங்களினதும் சங்கமம்.
ஆங்கிலத்தில் ட்றோன்கள் [Drones] எனப்படுபவை எமது தேனீகுடியில் உள்ள ஆண்தேனீக்களைக் குறிப்பிடும். இனப்பெருக்கம் தவிர்ந்த எந்தவொரு தொழிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. ஆனால் ட்றோன்கள் என்னும் இந்த பெயரை இயந்திரமொன்றுக்கு சூட்டப்பட்டு அதனை தற்போது திருமணநிகழ்வுகள் மற்றும் களியாட்டகள் இன்னும் ஏனைய நிகழ்வுகளை வீடியோ எடுப்பதற்கென தாமாக றிமோட்கொன்றோல் மூலமாக இயங்கும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேவையான சக்தி பற்றறிகள் மூலமாக வழங்கப்பட்டாலும் தற்போது சூரிய மின்கலங்களைப் பூட்டி அதில் சேமிக்கப்படும் சக்திகளை பயன்படுத்தி இந்தவகை ட்றோன்கள் இயக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இவ்வாறாக உங்களுடைய ஆடம்பர தேவைகளுடன் இதனை நிறுத்திக்கொள்வது நல்லது. எம்மை பிரதிபலிக்க நினைத்து இவ்வகை இயந்திரங்களை உருவாக்க தொடங்கியிருக்கின்றீர்கள். ஆதலினால் இதன்மூலம் எமக்கான முக்கியத்துவத்தை மலினப்படுத்த முயற்சித்திருக்கின்றீர்கள் என நாம் சிந்திக்கவேண்டியிருக்கின்றது. எமது பூச்சியினம் உள்ளிட்ட உயிரினங்களில்லாமல் அயன் மகரந்தசேர்க்கை நடைபெற சாத்தியமில்லை என்னும் எமது கருத்துக்கு எதிர்க்கருத்தாக ட்றோன்களின் உருவாக்கம் அமைந்திருக்கின்றது. இவ்வகை ட்றோன்களில் ஏற்கெனவே பெறப்பட்ட மகரந்த மணிகளை சேகரித்து அவற்றை பாதுகாத்து பயன்படுத்த முயற்சிக்கின்றீர்கள். இந்த வகை ட்றோன்களில் பூக்களில் காணப்படும் மகரந்த மணிகள் மற்றும் தேன் போன்றவற்றை இனங்காணும் துல்லியமான தூண்டிகள் பொருத்தப்பட்டிருப்பது இலகுவாக பூக்களை இனங்கான உதவும் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாதவாறு உணர்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எந்தவகை தொழில்நுட்பத்துடன் நீங்;கள் இயங்கினாலும் இயற்கையை ஒருங்கிணைக்கும் பொறுப்புக்குள் எமக்கும் பாரிய பங்களிப்பு உண்டு என்பதனை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இயற்கையிலுள்ள சூழல்தொகுதிக்குள் நடைபெறும் மாற்றங்களுக்கு அங்கிருக்கும் அனைத்து அங்கிகளும் காலநிலையும் காரணங்களாகும். இந்நிலையில் இவ்வாறு புதியவகை ட்றோன்களை அறிமுகஞ்செய்வதுடன் எம்மை ஓரங்கட்டினால் பல பாரிய விளைவுகளுக்குள் நீங்கள் சிக்கி சின்னாபின்னப்படவேண்டி நேரிடும் என்பதனை இந்த இடத்தில் எச்சரிக்கின்றோம். நாம் என்றுமே மனிதர்களுக்கு நண்பர்களாகவும் உங்களுக்கான தேன், மெழுகு மற்றும் அயன்மகரந்த சேர்க்கையை செய்வதனால் ஏறக்குறைய 40 சதவீதமான தாவரபயிர்களுக்கு அவற்றில் விளைச்சலுக்கு காரணமாகவும் இருக்கின்றோம். எமக்கு தேவையானதை (தேன் சுரப்பை மற்றும் மகரந்த மணிகளை) எடுத்துக்கொண்டு நாம் மகரந்த சேர்க்கையையும் ஊதியமின்றி செய்துகொண்டிருக்கின்றோம். இதற்காக எமது வேலையாள் தேனீக்களை முழுவதுமாக களமிறக்கியிருக்கின்றோம். உங்களைப் போல சமூக அந்தஸ்து எமக்கும் இருப்பதனால் நாமும் சிறப்பாக எமது தொழிற்பாடுகளை இணைந்து செய்துகொண்டிருக்கின்றோம். எமது குடிகளின் அழிவுகளுக்கு நீங்கள் ஒருபோதும் காரணமாக இருக்கக்கூடாது. நீங்கள் விசிறும் பீடைநாசினிகளால் எமது வேலையாள் தேனிக்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் நாம் தேவையறிந்து வேலையாள் தேனீக்களை மேலதிகமாக உருவாக்கி அந்தந்த வேலைகளை கனகச்சிதமாக செய்துகொண்டிருப்பதை நீங்களும் அறிவீர்கள். நாம் இவ்வாறு உங்களுக்கு உதவிசெய்யும் போது எங்களை ஒட்டுமொத்தமாகவே அழிப்பதற்காகவோ அல்லது எமது உதவியை பெறாது அயன்மகரந்த சேர்க்ககைகளை நடாத்துவதற்கு நீங்கள் திட்டமிடுவதனை எங்களுக்கும் அறியக்கிடைத்திருக்கின்றது. இதனை கருத்திற்கொண்டு நீங்கள் செய்யும் கண்டுபிடிப்புக்களை எமது குலம்போல ஏனைய இனங்களும் இணைந்து வாழ வழிசெய்வீர்கள் என நம்புகின்றோம்.
உலக சூழல்தினம் கடந்த 5ம் திகதியாகியமையால் அது சார்ந்து இந்தக்கோரிக்கையையும் உங்கள் முன் வைக்கின்றோம். சூழலைப்பாதுகாப்பதுடன் அதிலுள்ள உயிரினங்கள் அனைத்தைளயும் பாதுகாக்கவும் வேண்டும். தேனீக்காளான எமக்கும் எமது வாழ்வியலுக்கான வசதிவாய்ப்புக்கள் கிடைத்தாலன்றி எம்மாலும் எதுவும் செய்ய முடியாது. நாம் வாழும் சூழல்தொகுதி பல அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றதுடன் பல இடங்களில் எமது குடியும் கலைக்கப்பட்டிருக்கின்றன. தேனைபெறுவதற்காக எமது வதைகள் நொருக்கப்பட்டு பிழிந்தெடுக்கப்படுகின்றன. அதனால் எமது இளஞ்சமுதாயமும் வதைபட்டுக்கொண்டிருப்பதை இனியும் செய்யாது எமது குலத்தை வாழவைப்பதற்காக முன்முயற்சிகளில் ஆர்வம் காட்டுவதுடன் பலருடன் இணைந்து எமது குலத்தை காப்பாற்றவும் முன்வரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பட்டினி கொடுமையும் குப்பைமேடு சரிந்த இடரும் !
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
உலக உணவு தாபனத்தின் (Food and Agriculture Organization) கடைசியாக நடைபெற்ற கவுன்சிலில் உரத்துக் கூறப்பட்ட செய்தியாக பட்டினியை நோக்கி உலகம் என பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. 20 மில்லியன் மக்கள் அடுத்த ஆறுமாதங்களுக்குள் பட்டினியால் இறக்கப்போகின்றனர் என கட்டியங் கூறியிருக்கின்றார்கள். இது வெறும் செய்தியல்ல. உலக நடப்பினைப் பார்க்கும் போதும் காலநிலையின் கடினத்தை உணர்ந்த போதும் இது சாத்தியமாகும் என நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. உலகில் குறிப்பிட்ட தொகை மக்களுக்கு உணவில்லை என்பதும் அதனால் பட்டினிச்சாவை தடுக்கமுடியாதிருக்கும் என்னும் போது உள்ளார்ந்து ஒரு நெருடல் உருக்கொள்கின்றது பாருங்கள். இது மனிதகுலத்திற்கான சாபம் என்பதனைத் தவிர வேறென்பது?. தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினையே அழித்துவிடுவோம் என்ற அறைகூவல் ஓயமுன்பு உணவில்லையென்றாலும் ஜெகத்தினை அழித்தே தீருவோம் என்றாகியிருக்கின்ற ஓர்மம் மனித அவலமாக ஏவிளம்பியில் நடக்கின்றது. வெறுனே கலியுக காலமிது அதனால் நடக்கின்றது என வாளாவெட்டியாக நாமும் இருக்கப் பழகிவிட்டோம்.
ஒரு பக்கம் பட்டினிச்சாவை முழுமையாக தடுக்கவேண்டுமென பலவிதமான திட்டங்களை உலக தாபனங்களும் பலநாடுகளின் அரசாங்கங்களும் முனைப்புடன் செயற்பட முனைந்தாலும் நாம் எதிர்பார்க்கின்ற உணவுற்பத்தி முழுமையாக சாத்தியமா என்பதனை நாம் சற்றேனும் அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும். எங்கும் பகையுணர்வும், அரசியல் மயமும், போர்ச்சூழலும், அதற்கான முன்னேற்பாடுகளும் என உலகத்தின் நடப்புக்கள் அழிவை நோக்கியே விரிந்து செல்கின்றன. அழிவுக்கான முனைப்பை காட்டுகின்றதிலேயே பலநாடுகள் இருப்பதுவும் சமாதானம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்பன எம்மைவிட்டு விலகியே நிற்பதுவும் இவ்யுகத்தில் பட்டினிச்சாவுக்கு காரணமாக இருக்கின்றது. சந்திரனுக்கு நீர் தேடிச்சென்ற விஞ்ஞானத்தினால் இங்கே குடிப்பதற்கு நீரைக் கொடுக்க முடியாதிருக்கின்றது.
சோமாலியா, வடகிழக்கு நைஜீரியா, தென்சூடான், யேமன் ஆகிய நாடுகளில் தற்போது கொடூரமான பட்டினி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலுள்ள மக்கள் உண்ண உணவின்றி அதிலும் போசாக்கான உணவின்றி தினந்தினம் இறந்து கொண்டிருக்கும் செய்தி அனைவரையும் உலுக்கிவிட்டிருக்கின்றது. மழலைகள், வயதானோர், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரும் உணவுப்பற்றாக்குறைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் போதுமான உணவுற்பத்தி செய்யப்பட்டு தமது தேவைக்கதிகமானதை வர்த்தகத்தில் அதுவும் உலகநாடுகளில் அவற்றுக்கான விலையில் வீழ்ச்சியேற்படாதவண்ணம் கடலில் கொட்டும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நிதியென்றும் கடனென்றும் வளர்முக நாடுகளுக்கு தருவதாகவும் பிச்சையிடுவதாகவும் கூறிக்கொள்ளும் மேலைத்தேயம் மறுபக்கத்தில் அன்றாட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையினை வீழ்ச்சியடையாது பார்த்துக்கொண்டும் இருக்கின்றன என்றால் பாருங்களேன். இந்த இராஜதந்திரத்தில் அடிபட்டுப்போன மூன்றாம் உலக நாடுகள் மீளவும் முடியாமல் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாமல் சிக்கித் தவித்து சின்னாபின்னமாகிவிடுவதையும் அவதானிக்கலாம். பெருவளர்ச்சி கண்டிருக்கும் விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் இந்த பஞ்சம் பசி பட்டினியைத் தீர்க்கமுடியாதென்றா நினைக்கின்றீர்கள். முடியும் ஆனால் அவரவர்கள் மனது வைத்தால் தானே இவையெல்லாம் சாத்தியம். விஞ்ஞானம் நினைத்தாலும் மனிதன் நினைக்கவேண்டுமே! போருக்காக மனிதனை அவர்களின் உடைமைகளை அழிப்பதற்காக செலவிடப்படும் பணத்தை ஒன்று சேர்த்தால் உலகில் உற்பத்தியாகும் உணவினை அனைவருக்கும் கிடைக்கச் செய்தால் பஞ்சமும் பட்டினியும் ஒரு பொருட்டல்ல. மேலைத்தேய நாடுகளின் சட்ட வரைபுகள் மற்றைய நாடுகளினை அடிமைப்படுத்துவதிலும் அவர்களினை சுயமாக இயங்க அனுமதிக்காமையும் சொல்கேட்டு நடக்கும் செல்லப்பிள்ளைகளாக வைத்திருப்பதிலும் அக்கறை காட்டுவதனால் இத்தகைய எதிலும் தங்கியிருக்கும் நாடுகள் தம்மால் ஒரு நிலைக்கு மேல் எதுவும் செய்யமுடியாது இருக்கின்றன.
சோமாலியா, வடகிழக்கு நைஜீரியா, தென்சூடான், யேமன் நாடுகளுட்பட பலநாடுகனில் உள்நாட்டு கலவரங்களினாலும் போர்களினாலும் அந்தந்த நாடுகளின் பொருளாதார வளங்கள் அழிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இவற்றுடன் சேர்ந்து காலநிலை காரணிகளும் வரட்சியையும், பூமியதிர்ச்சியுடனான வெள்ள அனர்த்தத்தையும் இன்னும் சூறாவளியையும் தோற்றுவிப்பதனால் மேலும் பிரச்சனைகள் பூதாகாரமாக பெருகிவிட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தகவலின்படி யேமனில் 14.1 மில்லியன், ஆப்கானிஸ்தானில் 8.5 மில்லியன், வடக்கு நைஜீரியாவில் 8.1 மில்லியன், சிரியாவில் 7.1 மில்லியன் மற்றும் தெற்கு சூடானில் 4.4 மில்லியன் மக்களும் நடைபெறும் போரின் காரணமாக இடம்பெயர்ந்திருப்பதாக உலக உணவு தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இயற்கை அனர்த்தத்தின் காரணமாக எதியோப்பியாவில் 9.7 மில்லியன், மலாவியில் 6.7 மில்லியன், சிம்பாப்வேயில் 4.1 மில்லியன், கெய்ற்றியில் 1.5 மில்லியன், மற்றும் மொசாம்பிக்கில் 1.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுமிருக்கின்றார்கள். இந்த தகவல்கள் பாரியளவில் நடைபெற்ற பாதிப்புக்களை காட்டிநிற்பினும் மற்றைய நாடுகளிலும் இடப்பெயர்வுகள் பலவும் போரினாலும் இயற்கையனர்த்தங்களினாலும் நடைபெற்றிருக்கின்றன.
இவையொருபக்கம் இருக்க இனியொரு பசுமைப்புரட்சியில் உலகம் என்ன செய்யப்போகின்றது என்னும் வினா நிச்சயமாக உங்கள் முன் எழுந்திருக்கும். 60களில் நடைபெற்ற பசுமைப் புரட்சியின் தாக்கம் இன்னும் எமது தேசத்தில் உணவுற்பத்திக்கு உயிர்கொடுத்திருந்தாலும் எமது சூழலை வெகுவாகவே பாதித்திருக்கின்றது. மேலைத்தேயத்தின் சிந்தனைகளுக்குட்பட்டு எமது வளத்தை நாம் வினைத்திறனாக பயன்படுத்தத் தவறியதும் எமது சூழலை மாசுபடுத்தும் காரணிகளுக்கு நாம் அடிமையானதையும் தவிர வேறு எதனையும் நாம் புதிதாக உண்டுபண்ணவில்லை. அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடுகள் இவற்றை கட்டியங்கூறிநிற்பதனை நாம் கண்ணூடாக காணலாம். எமது நாட்டில் அண்மையில் நடைபெற்ற குப்பை மேடு சரிவும் அதனால் காவுகொள்ளப்பட்ட உயிர்களும் எமது கவலையீனமே தவிர வேறெதுவுமில்லை. குப்பைகளை வினைத்திறனாக மீள்சுழற்சி செய்யும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமையளிக்காமையும் புத்தாக்கங்களை அத்துறைசார்ந்து முன்நகர்த்தாததுமே இவ்வாறான பிரச்சனைகளை முன்கூட்டியே எதிர்கொள்ள திராணியற்று இருக்கவைத்துள்ளது. உருவாகும் கழிவுகளில் ஏறக்குறைய 80-85 சதவீதம் சேதனக் கழிவுகளாகவும் ஏனையவற்றில் விரைந்து உக்காதனவும், கண்ணாடி, உலோகம் மற்றும் பிளாஸ்ரிக் என்பனவும் காணப்படுகின்றன. சேதனக்கழிவுகளை இத்தேசம் முழுவதுமாக மீள்சுழற்சி செய்யும் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் அநேகமாக கழிவுகள் கூட்டுரமாக மாற்றப்பட்டு மீற்சுழற்சிமுறையில் பயிர்ச்செய்கைக்கு பயன்பட்டிருக்கும். ஆனால் எமது கவலையீனம் இங்கும்; உயிர்களைக் காவுகொள்வதில் இருந்திருக்கின்றது.
மேலைநாடுகளில் சூழலை மாசுபடுத்தும் காரணிகளின்; செயன்முறைகளுக்கு எதிராக இறுக்கமான சட்டதிட்டங்கள் வரையப்பட்டு அவை அமுல்படுத்தப்பட்டும் வருகின்றன. இதனை எமது நாட்டில் ஏன் செய்யமுடியவில்லை? இவையெல்லாம் எமது நாட்டில் அமுலிலிருக்கும் கோவைகளின் இறுக்கமற்ற தன்மையையும் அவற்றை முறையாக அமுல்படுத்தாத மக்கள்மயப்பட்ட சபைகளுமாகும்;. நாட்டின் சட்ட திட்டங்கள் வரையப்படுவதும் அவற்றை அங்கீகரிப்பதும் முறையாக அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியிருக்கின்றது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என கண்காணிப்பதும் அவற்றிலுள்ள தடைகளை நீக்கி முறையான செம்மையான நடைமுறைகளை உருவாக்கிக் கொடுப்பதும் அத்துறைசார்ந்த அதிகாரிகளின் கடமையாகும். அனைத்தையும் அரசியல் மயமாக்கி சட்டமும் திட்டங்களும் அரசியல் செல்வாக்கினுள் சிறைபட்டிருப்பதனால் இவற்றுக்கு என்றுமே தீர்வு கிடைக்காது என்றாகிவிட்டது.
உலகநாடுகளில் பசி பட்டினி என நாம் பேசிக்கொண்டாலும் எமது நாட்டிலும் இதற்கான சூழ்நிலைகள் இல்லையென்று நாம் வாளாதிருக்கலாகாது. அன்றாடம் வேலைசெய்து அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடாத்துபவர்களுக்கு இத்தகைய பட்டினியின் தாக்கம் அதிகம். இன்றும் பலருக்கு ஒருவேளை உணவுகூட கிடைக்கவில்லை என்பதும் உண்ணும் உணவு சமநிலையுணவாக இருக்காதிருப்பதும் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதும் எமக்கான எதிர்கால சவால்களாகும். ஊட்டச்சத்து குறைபாடு தனிமனித சுகாதார சீர்குலைவுக்கு வழிகோலும். பட்டினியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் அதே நேரத்தில் சுகாதாரமான உணவினை உற்பத்தி செய்வதற்கும் அதனை மக்கள் இலகுவாக பெறுவதற்கும் வழிவகை செய்தல் வேண்டும். கழிவு முகாமைத்துவத்திற்கு முக்கியத்துவமளித்து அதனை முழுவதுமாக மீள்சுழற்சி செய்து சேதனவிவசாயத்திற்கு உரமூட்டுவது இன்றைய சிந்தனைக்கும் நாளைய நல்வாழ்வுக்குமானதாகும். இது அனைவருக்குமான மேதினச் செய்தியாக வெறும் அரசியல் வார்த்தை ஜாலமாக இருந்துவிடாது அனைவரும் இணைந்து செயலாற்றும் செயற்பாடாக மாற்றம் பெறவேண்டும்.
'பயிர்களை' என்பதில் தமிழின் தனித்துவம்!
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
முத்தமிழுக்கு எத்தனை அழகு! அதிலுள்ள விளக்கங்களை நுணுக்கமாக படித்தால் பலவிடயங்களை நாம் அறிந்திடலாம் இன்னும் அள்ளிப் பருகிடலாம். அந்த வகையில் இன்றைய இக்கட்டுரையில் அழகுதமிழ்ச் சொல்லாக இருக்கும் 'பயிர்களை' (Crops) பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே தமிழைப்பற்றிய விளக்கமல்ல. மாறாக இச்சொல்லினூடாக பயிர்ச்செய்கையின் தன்மை பற்றியும் அது எவ்வாறு சிறப்பான பயிர்ச்செய்கையை நடைமுறைக்கு சாத்தியமான முறையில் செய்யலாம் என்பதனைப்பற்றியும் சிலாகிக்கின்றது எனலாம். சொல்லவந்ததை இலகுவான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உதாரணத்துடன் எடுத்துச்சொல்லும்போது தான் அதனை முழுமையாக எம்மவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற அனுபவ புரிந்துணர்வில் இந்த கட்டுரை தொடர்கின்றது.
தாவரங்கள் [Plants] என்பது பொதுமைப்பாடான சொல். அது எந்தவகையான தாவரங்களையும் சுட்டி நிற்பது புரிகின்றது. பயிர்கள் [Crops] எனப்படுபவை மனிதனால் தனது தேவையின்பால் வளர்க்கப்படும் தாவரங்கள் என விளிக்கலாம். அதில் களைகள் [Weeds] எனப்படுவவை மனிதனால் பயிர்செய்யப்படும் நிலத்தில் அந்த பயிர்களுக்கு சேதத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தவல்ல தாவரங்கள் என பொருள்படலாம். அதாவது களைகளும் தாவரங்களே ஆனால் அவர்களை நாம் பயிர்களாக கொள்வதில்லை. ஏனெனில் அவற்றை நாம் எமக்கு தேவையற்றவை என எண்ணி விடுகின்றோம். அதற்கும் மேலாக களைநாசினிகளைப் பயன்படுத்தி அவற்றை அழித்து விடுகின்றோம். அப்படியொரு கைங்கரியத்தில் பயன்படுத்துப்படும் களைநாசினி தான் கிளைபோசேற்று (Glyphosate) எனப்படும் ரவுண்டப் (Roundup). இந்த களைநாசினியை பயன்படுத்தும்போது விரைந்து வளரும் களைகளின் குருத்து பகுதியில் அவற்றின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் அமினோஅமிலங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது தடுக்கப்படுகின்றன. இதனால் தாவரத்திற்கு தேவையான குறிப்பிட்ட அமினோஅமிலங்கள் கிடைக்காமையால் களைமேலும் வளரமுடியாமல் இறக்கின்றது. பொறிமுறை சுலபமானதாக தான் இருக்கின்றது. இவ்வாறு களைநாசினியை பயன்படுத்தும் போது களைகள் விரைந்து வளர்வதனால் அது வளர்ச்சியில் முன்னிற்பதும் நெல் அல்லது பயிர்கள் பிந்தியே முளைக்கின்ற காரணத்தால் அவற்றிற்கு கிளைபோசேற்று களைநாசினியால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்பது இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது அல்லவா!. இதற்குப் பின்னால் இன்னொரு அண்மைக்கால கதையும் உண்டு. அதுதான் இந்த களைநாசினி தற்போது நமது நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. கிளைபோசேற்று இனை அதிகமாக பயன்படுத்துவதனால் அதனது மீதிகள் நீருடன் கலந்து குடிநீரிருடன் மனிதனினுடம்பில் செறிவாகி அதன் மூலம் இனந்தெரியாத சிறுநீரக நோய் மத்திய மாகாணத்தில் பலருக்கு ஏற்பட்டதாகவும் அதனால் பலவிவசாய பெருமக்கள் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கிளைபோசேற்று தடைசெய்யப்பட்டுவிட்டதனால் அதற்குப் பதிலாக யூரியாவுடன் அஜிநெமோட்டோ (மொனோசோடியம் குளூட்டாமேற்று) கலந்து விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றார்கள் என அறிய முடிகின்றது. உணவுக்கு பயன்படுத்தப்படும் அஜிநெமோட்டோவுக்கு இவ்வளவு சக்தியிருப்பதையும் அது எமதுடலில் எவ்வாறான விளைவுளை ஏற்படுத்தும் என்பதனையும் அநுமானிக்க முடிகின்றதா?
தாவரங்கள் (Plants), பயிர்கள் (Crops), களைகள் (Weeds) என்பனவற்றிற்கும் மேலாக மூலிகைத் தாவரங்கள் (Medicinal Plants) எனும் ஒருவகையையும் நாம் இதில் சேர்த்துக்கொள்ளலாம். மருத்துவக்குணங்கொண்ட மூலிகைத் தாவரங்களும் தாவரவகையினதே. மாற்றி வாசித்தால் ஒவ்வொரு தாவரத்திற்கும் மருத்துவக் குணங்களுண்டு என்பதாகும். இந்த இயல்பை புரிந்து கொண்டால் அவற்றை நாம் எமது தேவைக்காக பயன்படுத்துவோமாயின் அதற்காக மூலிகைத்தாவரங்களை நடுகைசெய்து அறுவடை செய்வோமாயின் அவையும் பயிர்களே!. மேலும் இவ்வாறான மூலிகைத்தாவரங்கள் அநேகமாக களைகளாகவே எமது வயல்நிலங்களில் காணப்படுகின்றன. நாம் எண்ணுகின்ற அநேகமான களைகள் மூலிகைத்தாவரங்களாக பாரம்பரிய மற்றும் சித்த வைத்தியத்தில் பாரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை நாம் வளர்க்கும் பயிர்களுடன் போட்டிபோடுவன எனவும் இவற்றினால் பயிர்களில் பலவிதமான பீடைகள் மற்றும் நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனாலும் மேலும் பயிர்களின் விளைச்சலை பாதிக்கும் காரணிகளாகவும் காணப்படுகின்றன. குறிப்பிட்டுச் கூறினால் நெல்வயல்களில் வளரும் கோரைப்புல் ஓரு பாரதூரமான களையாக காணப்படுகின்றது. பலவிதமான கோரைப்புற்கள் வயல்களில் நெற்பயிருக்கு போட்டியாக வளருவதனால் நெல்லுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் இடத்தையும் தாமே விரைந்து வளர்ந்து எடுத்துக்கொள்ளும் வீரியம் உண்டு. அதேபோல இவ்வகையான களைகள் எந்தவித பராமரிப்புமின்றி சிறப்பாக விரைவாக வளரக்கூடிய ஆற்றலை இயற்கையாகவே கொண்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில் எந்தத்தாவரமும் இம்மண்ணில் சிறப்பாக வளரக்கூடிய ஆற்றலுள்ளவையாகவே கணிக்கப்படுகின்றன. இன்னொருவகையில் பார்த்தால் மூலிகைத் தாவரங்கள் இயற்கையாகவே மலைகளிலே வளர்ந்து அவற்றை சேகரித்து மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றார்கள். பலவகையான மருந்துகள் உணவாகவே பயன்படுத்தப்படுகின்றன. உணவே மருந்து, மருந்தே உணவு.
இங்கே பயிர்கள், மற்றும் களைகள் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பயிர்ச்செய்கையில் பயிர்களை தெரிந்தெடுத்து வளர்க்கும் போது ஆங்கே உள்ள இடைவெளிகளில் களைகளும் தாமாகவே வளர்ந்து விடுகின்றன. பயிருக்கு வழங்கப்படும் அனைத்து உள்ளீடுகளையும் களைகளும் பெறுகின்றன என்பதே உண்மை. இதனை இப்படியும் பார்க்கலாம். நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பதற்கும் அர்த்தங்கள் பலப்பல. அதாவது பயிருக்கு வழங்கப்பட்ட உள்ளீடுகளான அசேதன பசளைகள் புல்லுக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன என விளங்கிக்கொள்ளலாம். அதிகமாக செயற்கைப் பசளைகளை பயன்படுத்தினால் அவற்றில் பயிர்கள் பயன்படுத்தியவை போக மீதியை களைகள் பயன்படுத்துகின்றன எனலாம். ஆனால் உண்மையில் பயிர்களின் வளர்ச்சிக்கென பயன்படுத்தப்பட்ட அசேதன பசளைகள் எனப்படும் செயற்கை உரங்கள் எங்களூர் பெரியவர் குறிப்பிடுவதைப் போல அவற்றுடன் போட்டிபோட்டு களைகள் தமக்குத் தேவையானவற்றை உணவாக அகத்துறுஞ்சுகின்றன. அதாவது ஒரு கல்லில் இருமாங்காய்கள் என குறிப்பிட்டாலும் பயிர்கள் என்னவே பயன்படுகின்றன என்றாலும் களைகள் பயன்பாடு இல்லையென்றாகி விடுகின்றதல்லவா. பயிர்கள் வளரும் விளைநிலத்தில் களைகள் தீங்கு விளைவிப்பனவாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒரு பக்கம் விலத்திவைத்து அவதானித்தால் களைகளும் நன்மை தருவனவாக பயன்படுபவையாக இருக்கின்றதனை சுட்டிக்காட்டலாம். களைகளை சேகரித்து அவற்றின் மூலிகைக்குணத்திற்கேற்ப அவற்றை பயன்படுத்தலாம். ஆக மொத்தத்தில் களைகளை பயிர்களாக பயன்படுத்தினால் நாம் அனாவசியமாக விசிறும் களைநாசினியும் அதற்கான செலவும் மீதியாகும். மேலும் நாம் உள்ள சூழலும் பாதுகாக்கப்படும். பயிர்களுடன் களைகளையும் ஏனைய பயிர்களாகவே நாம் பயன்படுத்தினால் அந்த குறிப்பிட்ட நிலத்திலிருந்து பெறப்படும் முழுமையாக ஆதாயம் கிடைக்கும். சூழலும் பாதுகாக்கப்படும்.
அதாவது பயிர்+களை = பயிர்களை என்றாகிவிடுகின்றதல்லவா. களைகளும் பயிர்களாக பயன்படுத்தப்பட்டால் பயிரின் பன்மைச்சொல்லாக 'பயிர்களை' என்றாகி விடுகின்றது. இங்கே பயிர்; மற்றும் களையை ஒன்றாக்கி பயிர்களாக காண்கின்றோம். 'பயிர்களை' எனும் போது அது இரு தாவரங்களைக் குறிப்பிடுவதனால் தாவரத்தொகுதியினையும் (Cropping System) ஒன்றிற்கு மேற்பட்ட உயிர்களின் கலப்பென்பதால் உயிர்ப்பல்வகையினையும் (Biodiversity) குறிக்கும். குறிப்பிட்ட நிலத்தில் வளரும் தாவரங்களை நாம் முழுமையாக பயன்படுத்துவோமானால் அங்கே அனாவசியமான களைநாசினி விசிறலும் அதற்காக களைபிடுங்கலும் தேவையற்றதாகிவிடும். இதனை இன்னும் உதாரணத்துடன் விளக்கமாக கூறினால் வயலில் வளரும் நெல்லும் கோரையும் - பயிர் மற்றும் களை என பிரித்துப் பார்க்காது நெல்லும் மூலிகையும் என மாற்றிப் பார்த்தால் இரண்டினாலும் பயனுண்டு என்றாகின்றது. இங்கே களைக்கட்டுப்பாடு என்பதற்கே இடமில்லை அதனால் அந்த செலவினம் முழுமையாக தேவைப்படாது. இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். மேட்டுப்பயிர்ச்செய்கையில் வளரும் பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெங்காயம் இவற்றுடன் அறுகம்புல் களையாக வளருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் களைநாசினி பயன்படுத்துகின்றார்கள். ஆனால் கத்தரி தக்காளியுடன் அறுகம்புல்லையும் பயிர்களாக பயன்படுத்தினால் அதிக இலாபம் கிடைக்கும். அறுகம்புல்லிலிருந்து சாறுபிழிந்து அதனை தற்போது பலரும் அருந்தத்தொடங்கிவிட்டனர். அந்தளவிற்கு மருத்துவ குணங்களைக்கொண்ட அறுகம்புல்லை நாம் அழிப்பது மட்டுமன்றி அதனால் தேவையற்ற செலவினத்தையும் ஏற்படுத்தி நாம் வாழும் சூழலையும் அழித்துவிடுகின்றோம். நாம் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய் கிழமையில் ஒருநாளில் எந்த உணவினையும் உண்ணாது பட்டினியாக இருக்கும். பின்னர் அது அறுகம்புல்லை உண்டு தனது உணவுக்கால்வாயை சீர்படுத்திக்கொள்ளும். தினமும் பலவகையான உணவுகளை நாம் எமது உணவுக்கால்வாயினுள் திணிக்கின்றோம். ஒருநாளுக்காவது அதற்கும் ஓய்வு தேவைப்படுகின்றது அல்லவா. அந்த முயற்சியில் நாயார் இறங்கி தனது சமிபாட்டுத்தொகுதியை சீர்செய்யும் நிலையைப் பாரீர். நாய்க்குத் தெரிந்தது எம்மவர்க்கு தெரியுதில்லை என ஒரு சிலர் முணுமுணுப்பதும் கேட்கின்றது. இல்லையில்லை எம்மவர்க்கும் தெரிந்திருக்கின்றது என்கின்றார்கள் மற்றையோர். வவுனியா அம்மாச்சி உணவகத்தில் அறுகம்புல் சாறும் விற்பனையில் முன்னணியில் நிற்பதாக அறியக்கிடைக்கின்றது.
அனைத்தையும் ஒருமித்து பார்த்தால் பயிர்கள், களைகள்; மூலிகைகள் ஆகிய தாவரங்களை நாம் பயன்படுத்த முனைந்தால் அனைத்திலிருந்தும் எமக்கு பயன்கள் கிடைக்கும். அதனால் 'பயிர்களை' என்னும் சொல்லுக்குள் தமிழில் இவ்வளவு ஆழமான அர்த்தம் புலப்படுவது செம்மொழியாம் தமிழ்மொழியின் அழகு அல்லவா.
கரவை மண்ணின் பெருமகனாம் மறைந்த பண்டிதர் வீரகத்தி அவர்களின் மனைக்கு அருகில் பிறந்து வளர்ந்ததால் அந்த ஊர்நெல்லுக்கு தமிழன்னை இறைத்த முத்தமிழ் நீர் வாய்க்கால் வழியோடி இந்த புல்லுக்கும் பொசிந்ததில் ஆச்சரியமில்லையே. இதுவே முதலாகி பன்னிரண்டு ஆண்டுகளாக விவசாயத்தை விஞ்ஞானத்தை சமகால அறிவியல் நடப்புக்களை இனியதமிழில் எம்மினிய உறவுகளுக்காக எழுதும் பாக்கியத்தை தந்திருக்கின்றது. பெரியவர் கானமயில்நாதனால் இனங்காணப்பட்ட இக்கைகளுக்கு இந்தவரம் இம்மண்ணும் தமிழன்னையும் தந்த பாக்கியமே. இக்கைகளில் உணர்விருக்கும்வரை இனியதமிழில் எழுதிக்கொண்டேயிருக்கும்.
வடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகள்!
[The research focusing towards the Development of Northern Province ]
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நாம் வாழும் காலம் எமது பிரதேசத்து வளர்ச்சியில் மிகமுக்கியமானது. நீண்டதொரு போர்ச்சூழலில் சிக்கி சின்னாபின்னப்பட்ட பிரதேசம் மீண்டெழ முனையும் போது அதற்கு தேவையான புலமையாளர்களின் ஆலோசனையும் திட்டமுன்மொழிவுகளும் இன்னும் தனியார் துறை வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பும் வேலைத்திட்டங்களும் வலிந்து உருவாக்கப்பட வேண்டியதாயிருக்கின்றது. போர் முடிந்தபின் 7 வருடங்கள் கழிந்த நிலையில் தனியார் துறையின் விருத்தி நாம் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. இதற்கு காரணங்கள் பலவாயினும் அபிவிருத்தித் திட்டங்களில் துறைசார் புலமையாளர்களின் உள்வாங்கல் போதாமை என உணரமுடிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தார்மீக கடமையொன்றுண்டு. தேசியமட்டத்திலும் மாகாண மட்டத்திலும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புக்கான உயர்பட்டப் படிப்புக்கான கல்வியைப் போதிக்கும் அதே நேரத்தில் தேசியமட்டப் பிரச்சனைகளையும் மாகாண மட்ட பிரச்சனைகளுக்கும் ஆய்வுரீதியாக தமது புலமைசார்ந்து ஆலோசனைகளை வழங்க முன்வரவேண்டும் என்பதுதான். தேசிய மட்டத்து பிரச்சனைகளை முகங்கொடுக்க அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து முன்வரும் போது மாகாண மட்ட பிரச்சனைகளை அபிவிருத்தி சார்ந்த திட்ட வரைபுகைள உருவாக்குவதற்கும் அதன் மூலம் இங்குள்ள இளைய சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான உத்திகளை வரைவதற்கும் புலமைசார் நிபுணர்களின் தேவை அவசியமாகின்றது.
புலமைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுவிட்டு பின்னர் அவர்களை விமர்சிக்கும் போக்கும் இப்போது உருவாகி வருகின்றது. கல்வியியலாளர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு தமது புலமைசார்ந்து ஆலோசனைகளை வழங்கஅனுமதிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்ததற்கு முக்கியகாரணங்களுள் இப்பிரதேசத்து வளர்ச்சியில் அங்குள்ள புலமைசார் நிபுணர்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தீட்டப்பட்டு அதன்மூலம் கிடைக்கின்ற நிதியை முழுவதுமாக மக்கள் பயன்பெறும்வண்ணம் பயன்படுத்த உதவவேண்டும். அதைவிடுத்து வெளிநாட்டு நிறுவனங்களின் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் நிதியை நாம் பெறுவதற்கான தகுந்த அபிவிருத்தி திட்;டங்களை புலமைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெறாது விடுவதனால் அவை எமக்கு கிடைக்காமலும் நிதிக்காக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அதனை முழுவதுமாக பயன்படுத்தாமலும் போகின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. இதற்காக வெறுமனே மாகாணசபையையோ அல்லது புலமையாளர்களையோ குறைகூறாது எமது தேசத்தின் அபிவிருத்திக்கான பணியில் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்த பணியாற்ற முன்வரவேண்டும்.
வடமாகாண அபிவிருத்தி திட்டங்களை வரைவதற்கான அனைத்து புள்ளிவிபரங்களும் திரட்டப்பட்டால் அவற்றை வைத்துக்கொண்டு மக்கள் நன்மையடையும் பலதிட்டங்களை உருவாக்க முடிவதுடன் அவற்றுக்கான நிதிஒதுக்கீட்டையும் பெறுவதற்கும் உதவமுடியும். இதற்காக மாகாண அபிவிருத்தி திட்டங்கள் சார்ந்து இன்னும் தனியார் தொழிற்றுறையினை உருவாக்குவதற்கு திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இளைய சமுதாயத்தின் வேலையில்லா திண்டாட்டத்தினை தீர்ப்பதற்கான வழிவகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளையும் உருவாக்கவேண்டும்.
வடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகளுக்கு பல்கலைக்கழகத்தில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். எமது பிரதேசத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் முடுக்கிவிடப்படல் வேண்டும். அனைத்து துறைசார்ந்த நிபுணர்களின் உதவியுடன் சமகால பிரச்சனைகளை ஆராய்ந்து தனியார் தொழிற்றுறையை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை பரிந்துரைக்க பல்கலைக்கழக நிபுணர்கள் சமூகம் முன்வரல் வேண்டும். அதற்காக பல்துறை ஆய்வுகளை அனைத்து துறைகளிலும் முடுக்கிவிட்டு வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் குறிப்பாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும் அத்துறைசார்ந்த சேவைகளை வழங்கும் துறைகளை இன்னும் அபிவிருத்திக்குள் உள்வாங்கி வடபுலத்து மக்களுக்கு வேலைவாய்ப்பினை கிடைக்கக்கூடியதாக செய்தல் வேண்டும். வடமாகாணத்தின் அபிவிருத்தி என்பது தனிநபர் உருவாக்கமோ அல்லது ஒரு குழுவின் செயற்பாடோ அல்ல. இது மக்கள் மயப்படுத்த அபிவிருத்தி திட்டமாக பரிணமிக்கும் போது அனைத்து மக்களுக்கும் அவரவர் தேவைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். ஆராய்ச்சியில் இருக்கின்ற வளங்கள் சார்ந்து அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவது பற்றி இன்னும் மதிப்பேற்றஞ் செய்த பொருட்களை சந்தைப்படுத்தல் சார்ந்து அனைத்து துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆய்வரங்காக மாற்றி அனைத்து துறை நிபுணர்களையும் ஒருங்கிணைத்து இத்திட்டங்களை வரைந்து அதனை செயற்படுத்துவதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இதில் மாணவர்களையும் ஒன்றிணைப்பது இன்னும் நன்மை தரும். மாணவர்களின் சமூக கடப்பாடு இத்தகைய திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தும் போது இன்னும் மேன்மைபெறும்.
பல்கலைக்கழகமும் சமூகமும் இணைந்த ஆய்வரங்கை நடாத்துவதற்கு திட்டங்கள் தீட்டப்படுவதும் அதன்மூலம் வடமாகாணத்திற்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை வரைவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும்.
வீட்டுத்தோட்டமும் டெங்கு நுளம்பு கட்டுப்பாடும்!
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இன்றைய தலைப்பு இரண்டு முக்கிய விடயங்களில் கரிசனை செலுத்த முனைகின்றது. ஒரு பக்கம் வீட்டுத்தோட்டத்தை நாம் ஊக்குவிக்கும் போது மறுபக்கம் வீட்டுத்தோட்டத்தில் தாவரங்களை வளர்க்க பயன்படுத்தும் கொள்கலன்களில் தண்ணீர் தேங்கி நின்று நுளம்பின் வாழிடமாக மாறுகின்றதனை சுகாதார பரிசோதகர்கள் அவதானித்து அது பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த எடுத்த முயற்சியின் பயனாக இக்கட்டுரை உருப்பெறுகின்றது. நிலம் காய்ந்து வரண்டிருந்த காலம் மாறி மழைகாலம் ஆரம்பித்ததற்கான சகுனமாக ஆரம்ப மழை ஆங்காங்கே பார்த்துப் பார்த்து பெய்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சடுதியாக இருட்டி பெய்த மழை பலரையும் வெருட்டியும் போட்டிருக்கின்றது. இவ்வாறு மழைபெய்யும் இடங்களில் காணப்படும் கவனிப்பாரற்றுச் சிதறிக்கிடக்கும் இன்னும் அவரவர் வீடுகளில் வேலைசெய்யும் தளங்களில் கவனமின்றி விசிறிப்பட்டிருக்கும் பயன்படுத்திய பிளாஸ்ரிக் மற்றும் தகரத்திலாக கொள்கலன்கள் மழைநீரை கிடைக்கின்ற நீரை விரும்பியோ விரும்பாமலோ தேக்கிவைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. சிறிய பெரிய கொள்கலன்களில் இலகுவாக நுளம்பு பெருக்கமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமே. அதிலும் மழைநீர் தேங்கியிருக்கும் இடங்களில் டெங்கு நுளம்பு போன்றன இலகுவாக வளரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமே. நாம் அவ்வாறான இடங்களில் நீர் தொடர்ச்சியாக தேங்காது தடுத்தால் நுளம்பு பெருகுவதனை இலகுவாக கட்டுப்படுத்தலாம்.
வீட்டுத்தோட்டங்களில் இன்னும் பாடசாலைத் தோட்டங்களில் பலவகையான பயனற்றதென கருதப்படும் இன்னும் பாவித்த கொள்கலன்களில் தாவரங்கள் இலகுவாக வளர்க்கப்படுவதனை அவதானிக்கலாம். 'கொள்கலனில் பயிர்ச்செய்கை' (Potted cultivation) என்னும் முறையின் கீழானதாக இதனை இலகுவாக தெரிவுசெய்து மக்கள் பயன்படுத்துவதனை காணலாம். அதிலும் பயன்படுத்தப்பட்ட வெற்றுப் போத்தல்கள் குறிப்பாக வெற்று பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்கள், தகர டப்பாக்கள், பாவித்த வாகன ரயர்கள், பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களினை பாதுகாப்பாக வைத்திருந்த கொள்கலன்கள்; இன்னும் பலவற்றை மக்கள் பயன்படுத்துவதனையும் அவற்றை நிறமூட்டி அழகாக வைத்திருப்பதனையும் காணலாம். ஆனால் இவ்வாறான கொள்கலன்களில் நீர்வழிந்தோடுவதற்கான வழிமுறை செய்யப்படாது விட்டிருந்தால் நீர் தேங்கிநிற்பதற்கு வாய்ப்பாகிவிடும். தொடர்ச்சியாக ஆகக்குறைந்தது 7 நாட்கள் நீர் தேங்கிநிற்குமாயின் அதிலே நுளம்பு முட்டையிட்டு குடம்பியாகி பின்னர் கூட்டுப்புழுவாகி இறுதியில் நிறைவுடலியாகிவிடும். ஏடிஸ் இயிப்ரி (யுநனநள யநபலிவi) நுளம்பினுடைய வாழ்க்கை வட்டம் மிகவும் குறுகியது. முட்டை 2-4 நாட்களில் குடம்பியாகிவிடும். குடம்பி தேங்கியிருக்கும் நீரில் வளர்ந்து ஆகக்குறைந்தது 4-6 நாட்களில் கூட்டுப்புழுவாகிவிடும். கூட்டுப்புழு 2 நாட்களில் நிறைவுடலியாகிவிடும். நிறைவுடலி பெண் நுளம்பு மனிதரைக்கடிக்கும் போது டெங்கு வைரசினை மனிதனில் உட்செலுத்திவிடும். நிறைவுடலி நுளம்பு 2 கிழமையிலிருந்து ஒரு மாதத்திற்கு வாழக்கூடியது என்றால் எத்தனை பேருக்கு அது டெங்கு நோயை காவிச்செல்ல முடியும் என கணக்கிட்டுப் பாருங்கள். கவனியாது நீர் தேங்கவிட்டிருக்கும் இடங்களை தெரிவுசெய்து அதனை துப்பரவாக வைத்திருத்தல் முக்கியமானதாகும்.
எங்கள் வீட்டில் உற்பத்தியாகும் நுளம்பு மற்றையவரைத்தான் கடிக்கும் என கனவு காணாதீர்கள். அது எம்மையும் கடிக்கும் என்பதுடன் எமக்கும் டெங்கு நோயினைப் பரப்பவல்லது என்பதனையும் மற்றையவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். டெங்கு என்பது ஆட்கொல்லி நோய். ஆதனால் வயது வேறுபாடின்றி பால் வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவர் என்பதோடு நாம் கவனயீனமாக இருந்தால் இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியாதென்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும். வீடுகள், காணிகள், அலுவலகங்கள் இன்னும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் நீர் தேங்கியிருக்கக்கூடிய இடங்களை இனங்கண்டு பொதுநலன் நோக்கி அனைவரும் முன்னின்று இந்த நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுத்தோட்டத்தில் தாவரங்கள் வளர்ப்பதற்காக மேற்கூறிய கொள்கலன்களில் நீர் தொடர்ச்சியாக தேங்கி நிற்கின்றதா என்பதனை தினமும் அவதானிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மண், உக்கல் மற்றும் பசளை என்பன இறுக்கமடைந்திருந்தால் இவ்வாறான கொள்கலன்களில் நீர் வழிந்தோடாது அப்படியே தேங்கி நிற்கும். தொடர்ச்சியாக தேங்கிநிற்கின்றதென்றால் உடனடியாக அந்த நீரை கொள்கலனிலிருந்து வெறியேற்ற வேண்டும். பின்னர் அந்த கொள்கலனிலுள்ள தாவரத்தையும் மண்ணையும் வெளியே எடுத்து விட்டு மணல்மண்கலந்து மீண்டும் கொள்கலனை நிரப்புதல் வேண்டும். நீர் பிடித்து நிற்பதற்காக தேங்காய் நார் எடுத்தபின்னர் கழிவாக வரும் சோத்தியை காளான் பூஞ்சணம் கொண்டு உக்கவைத்து பயன்படுத்தலாம். காளான் பூஞ்சணத்தை பயன்படுத்து உக்கவைக்கும் பொறிமுறையை தொழிற்சாலை வாயிலாக ஆரம்பித்து மக்களுக்கு கிடைக்கச் செய்யலாம்.
வீட்டுத்தோட்டத்தில் தாவரங்கள் கொள்கலனை முழுவதுமாக மூடிவளர்ந்திருப்பதனை அனுமதியாதீர்கள். கீழ்புறத்தில் தேவையானளவிற்கு கத்தரிந்து கொள்கலனினுள் உள்ளிருப்பதனை நீங்கள் கண்களால் காணக்கூடியவாறு தாவரத்தைக் கத்தரித்தல் வேண்டும். நன்றாக உக்காத எருவை அல்லது கூட்டெருவை பயன்படுத்தாதீர்கள். நன்றாக உக்காது வி;ட்டால் அவை இலகுவில் உக்குவதற்காக காலஅளவு அதிகமாகவும் அதனால் பல பிரச்சனைகளை எதிர்நோக்கவும் ஏற்படும்.
வீட்டுத் தோட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் தென்னை கோம்பைகள், சிரட்டை மற்றும் சிறிய மூடிகள் என்பனவற்றில் மழைநீர் தேங்கியிருப்பதனை நாம் இனங்கண்டு அவற்றை சேகரித்து நீரினை அப்புறப்படுத்தல் வேண்டும். மேலும் பொதுவாக இனங்கண்ட பிரச்சனைகளாக கொள்கலன்களில் தாவரங்களை வளர்க்கும் போது அவை அளவுக்கதிகமாக வளர்ந்து கொள்கலனை மூடியிருப்பதனால் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவற்றிக் கீழாக சிறிய பாத்திரங்களில் நீர் தேங்கியிருப்பதனை நாம் கவனிக்கத் தவறியிருப்போம். அந்த இடங்கள் நுளம்புகளின் வாழிடமாக இலகுவில் மாறிவிடும். பின்பென்ன? எமது அசட்டையீனத்தினால் நாமே நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாகிவிடுபோம்.
வீட்டுத் தோட்டத்தில் தாவரங்களை வளர்க்கும் போது நிலத்தில் வளர்ப்பது நல்லது. இல்லாது விட்டால் அதற்கான மாற்று வழியினையும் நாம் தெரிந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் நீர் அதிகம் நாட்டமற்ற அல்லது நீர் அதிகம் தேவைப்பட்டாத தாவர வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். தினமும் வீட்டுத் தோட்டத்திலுள்ள தாவரங்களுக்கும் இன்னும் வேறு இடங்களிலிருந்து தருவிக்கப்படும் புதிய வகை தாவரங்களுக்கும் நாம் தேவையான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். கொள்கலன்களை சுத்தப்படுத்தி மேலும் முக்கிய தாவரங்களை நடவு செய்வதற்கும் வழிவகை இருக்கவேண்டும்;.
வீட்டுத்தோட்ட மென்பது உங்களுக்கான உற்பத்தியை சுத்தமாக சிறப்பாக வினைத்திறன் மிக்கதாக ஆக்க வேண்டியது பொறுப்பு. இதுவொரு தேசத்துக்கான பிரச்சனை. எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு நாம் பொறுப்புடன் பங்காற்ற வேண்டியது அவசியமாகும். அனைவரும் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. இதனை நாமனைவரும் உணரத்தலைப்படுவது எப்போது?
டெங்கு நோய் தென்பகுதியிலிருந்து அதிகம் பேருக்கு தொற்றுதலாகி தற்போது நோய்தொற்றுதலை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் நடாத்தப்படுகின்றன. இவற்றுடன் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் பற்றிய அறிவூட்டல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மக்களை தயார்ப்படுத்தல் இவ்வாறான நோயினைக் கட்டுப்படுத்த உதவும். இது பற்றிய அறிவூட்டல் கண்காட்சியினை இலங்கை நுண்ணங்கியலாளர்கள் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை நடாத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதனை நடாத்துவதற்கு இலங்கை நுண்ணங்கியலாளர்கள் சங்கத்தின் அநுசரணையுடன் அதன் தலைவி பேராசிரியை வசந்தி தேவநேசன் அவர்களின் தலைமையின் கீழ் விரைவில் பல பாடசாலைகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது. அனைவரும் இணைந்து இக்கொடிய நோயிலிருந்து எம்மக்களைக் காப்பாற்ற முன்வருதல் வேண்டும்.
ஸ் ரீவியா என்னும் இனிப்புத்துளசி
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நல்லதொரு இனிப்பான செய்தியுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த இனிப்பான செய்தி பலநிலைகளில் பல வடிவங்களில் எமக்கு பயன்படப்போகின்றது என்பதனை இங்கே பதிவுசெய்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஸ் ரீவியா (Stevia redaudiana) என்பது சூரியகாந்தி குடும்ப (Family: Asteraceae - formerly Compositae) பயிராகவும் இலைகளில் அதிகம் இனிப்பூட்டி உள்ளபயிராகவும் காணப்படுகின்றது. இந்த சுவையூட்டியினால் நாம் பயன்படுத்தும் சீனியினளவை கணிசமான அளவில் கட்டுப்படுத்தலாம்.
ஸ் ரீவியா என்னும் தாவரத்திற்கு தென்னமெரிக்காதான் பிறப்பிடம். ஆனால் இது பாரிய அளவில் ஜப்பான், பிரேசில், சீனா இன்னும் பல நாடுகளில் பாரியளவில் வளர்க்கப்படுகின்றது. இதனது பழுத்த இலையில் ஏறக்குறைய 200-300 மடங்கு சாதாரண சீனியைவிட இனிப்புத்தன்மை இருப்பதும் இந்த சுவையூட்டியினை பயன்படுத்தினால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீனியின் அளவை கணிசமானளவு குறைக்கவும் முடியும். மேலும் இந்த தாவரம் ஏறக்குறைய 3 வருடங்கள் தொடச்சியான உற்பத்தியைத்தரவல்லதுடன் இதிலிருந்து முதல் நான்கு மாதத்திலிருந்தே இலைகளை அறுவடைசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஸ் ரீவியா தாவரம் செடிவகையைச் சார்ந்ததுடன் இதுவொரு சூரியகாந்தி குடும்ப தாவரமாகும். இக்குடும்பதாவரங்களில் சூரியகாந்தி, செவ்வந்தி, லெற்றூஸ் (இலைக்கறிப்பயிர்) போன்றன நன்மைதரும் பயிர்களாக காணப்படினும் ஒரு சில மருத்துவ மூலிகைகளாகவும் (மூக்குத்திப்பூண்டு) இன்னும் ஒருசில பலம்வாய்ந்த களையாகவும் (பாத்தீனியம்) காணப்படுகின்றன. இத்தாவரத்தின் வளர்ச்சிபற்றியும் எமது மண்ணில் இதனது பயிர்ச்செய்கை மற்றும் இதனை வளர்க்கும்போது செய்யவேண்டிய பயிர்ச்செய்கை முறைகள் பற்றியும் நாம் ஆய்வுரீதியாக அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நாடுகளில் இப்பயிரினை கெக்டேயர்களில் பயிர்ச்செய்கை செய்வதனை அறியும் போது எமது பிரதேசத்திற்கும் இது ஒரு பொருத்தமான மாற்றும்பயிராவதற்கு சாத்தியங்கள் அதிகமே. அதற்கும் மேலாக இதனது இனிப்புத்தன்மையின் முக்கிய செய்தியென்னவெனில் இதில் பூச்சிய கலோரி (Zero calorie) காணப்படுவதுதான். இதனால் இதனது இலைகளை சுவையூட்டியாக நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்த முடியும். அத்துடன் இரத்த அமுக்கத்தையும் குறைக்கும் தன்மையுடையதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தாவரத்தை நாம் எமது பகுதியில் அறிமுகஞ்செய்வதற்கு பலவிதமாக நற்காரணங்கள் காணப்படினும் இத்தாவரத்தைப்பற்றி முழுவதுமாக அறிந்து இதனை அறிமுகப்படுத்துவது சிறந்தது.
எமது பிரதேசத்தில் அந்நிய தாவரமொன்றை அறிமுகம் செய்யும் போது சுற்றுச்சூழல் அமைச்சினது (Ministry of Environment) அங்கமான உயிர்ப்பல்வகைமை (Biodiversity Secretariat) அலகினதும் வனவாசிகள் திணைக்களத்தினதும் (Wildlife Department) முறையான அனுமதி பெறப்படல் வேண்டும். மேலும் இத்தாவரத்தின் நன்மை தீமைகள் முழுவதுமாக அறியப்பட்டு மக்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்படல் வேண்டும்.
ஸ் ரீவியா தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்ததாகையால் இதனால் பல பயன்பாடுகள் சூரியாந்தி செவ்வந்தி போன்றனவற்றினாலான பயன்பாடுகள் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு. அதுபோல மூக்குத்திப்பூண்டு போல களையாகவே அன்றி மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே இது அமைய சாத்தியங்களுண்டு. மேலும் இன்னும் ஒரு படிமேல் சென்று அவதானித்தால் சூரியகாந்தி குடும்ப தாவரங்களுள் ஒன்றான பாத்தீனியத்தின் வீரியம் இதற்குண்டானால் அது ஒரு காலத்தில் பாரிய களையாக உருப்பெறவும் வாய்ப்புண்டு;. ஆனால் எமக்கு நன்மைதரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாலும் மக்களது சுகாதாரம் சார்ந்து பார்க்கும் போது பயன்பாடுகளே அதிகமாக இருப்பதாலும் இன்னும் மனிதருக்கு இதனால் நன்மைகளே அதிகம் கிடைக்க வழியுண்டு என்பதனாலும் இப்பயிரை நாம் அறிமுகம் செய்வது நல்லதென்றே தோன்றுகின்றது.
மேலும் இனிப்புத்துளசியின் பயன்பாடு உணவுசார்ந்த தொழிற்றுறைக்கு அவசியமானதாக காணப்படும். மேலும் இதன் பயன்பாடு நீரிழிவு நோயாளர்களுக்கும் சீனியை அதிகம் பயன்படுத்துவதற்கான மாற்று வழியாக காணப்படுவதனால் கரும்பு சீனியை இறக்குமதி செய்வதின் அளவினை கணிசமான அளவு குறைக்கவும் முடியும். இனிப்பு துளசியின் அறிமுகத்தினூடாக நாம் புகையிலைக்கு மாற்றுப்பயிராக சிந்திக்கவும் வாய்ப்புக்களுண்டு. தற்போது அரசாங்கம் புகையிலைச் செய்கையை தடைசெய்யும் நிலைக்குள் வந்திருக்கும் போது அதற்கு மாற்றீடாக இத்தாவரத்தை அதிகளவில் பயிர்செய்து எமக்குத் தேவையானளவு சுவையூட்டியை நாம் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.
இன்னும் இனிப்பு துளசி சிறந்த பயிராக ஜப்பான் பிரேசில் மற்றும் சீனாவில் பல கெக்டேயர்களில் பயிரிடப்படும் போது எமது பிரதேசத்தில் இதனை உற்பத்தி செய்து எமது அன்றாட உணவுகளில் இதனை பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. உள்ளுரில் தயாரிக்கப்படும் மென்பானங்களில் இனிப்புச் சுவைக்காக சுவையூட்டியாக ஸ்ரீவியா ஸ் ரீவியா என்னும் இனிப்பு துளசி பயன்படுமாக இருந்தால் எமது பிரதேசத்தில் நல்லதொரு தொழிற்றுறைக்கான மாற்றுப் பயிராகவும் தனிமனித சுகாதாரத்திற்கான சிறந்த பயிராகவும் இது அமைய வாய்ப்புக்கள் பலவுண்டு. ஆய்வுமுடிவுகள் நன்மைதருவனவாக அமைந்தால் நடைபெற்ற ஆய்வுகளின் அறிக்கை எமக்கு சாதகமாக அமையப்பெற்றால் நல்லதொரு தாவரத்தை நாம் பெற்றதாகஅமையும். இதனது நன்தை தீமைகளைப் பொறுத்தே இத்தாவரத்தின் அறிமுகம் அமைதல் வேண்டும். இன்னும் இதுபற்றி நாம் அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
உரமாகி மண்ணை வளமாக்கும் சேதன பசளைகள்!
நாம் வாழும் இந்த மண் இயற்கை எமக்குத் தந்த பொக்கிஷமே. அதில் 'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்' என அருளிச்சொல்லியிருக்கும் வாக்கியங்கள் எமக்கான பாடமாகவும் எம்மை இயக்கும் கருவியாகவும் அமைந்திருப்பதனை காணலாம். கண்ணுக்கு தெரிவதை வைத்துக்கொண்டு மட்டும் நாம் விவசாயம் செய்வது நீண்டநாள் நின்றுபிடிக்காது. ஏனெனில் தாவரம் ஒன்றிற்கு நிலத்திற்கு மேல் உள்ள பாகங்களை விட நிலத்தின் கீழுள்ள பாகங்கள் அதிலும் வேர்த்தொகுதி முக்கியமானதாகும். அத்திவாரம் இன்றி கட்டடங்கள் எப்படி? அத்திவாரம் ஆடினால் அனைத்தும் ஆடிடுமே என்பார்கள்.
மண்ணினை வளமானதாக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். மண்ணென்பது ஒரு கூட்டுத்தொகுதியாகும். அதனுள் உயிரியல் மற்றும் பௌதீக காரணிகளின் தொழிற்பாடு நடந்துகொண்டிருக்கின்றது. எவ்வளவுக்கெவ்வளவு உயிரியல் காரணிகளின் இயக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றதோ அவ்வளவிற்கு மண்ணின் வளமும் அதிகரித்து காணப்படும். வளமான மண் என்பது நன்மைதரும் நுண்ணங்கிகளின் செயற்பாடு அதிகமாக காணப்படுகின்ற மண்ணாகும். நன்மைதரும் நுண்ணங்கிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது மண்ணினுள் உள்ள உயிரிகளின் செயற்பாடு அதிகரித்துக் காணப்படும். இவ்வாறான நன்மைதரும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டின் மூலமாக தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்க முடியும். நுண்ணங்களின் செயற்பாட்டுக்கு தேவையாக காபன் மண்ணில் காணப்படுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது அதில் காணப்படும் சேதனப்பொருளின் அளவு ஆகும். இங்கே சேதனப்பொருளென்பது விளை நிலத்திற்கு நாம் இடுகின்ற கூட்டுரமும் மற்றும் சேதன பசளைகளாக இடப்படும் பசுந்தாள் பசளைகள் மற்றும் பசுந்தாள் இலைப்பசளைகளாகும். இவ்வாறான இயற்கையாக கிடைக்கும் பசளைகளை மண்ணில் இடும்போது இச்சேதன பசளைகளை உணவாக்கும் நன்மைதருகின்ற நுண்ணங்கிகளின் பெருக்கம் அதிகரிப்பதுடன் மண்ணினுள் தேவையான ஊட்டச்சத்தினளவும் அதிகரிக்கும். மேற்கூறிய நிலைக்கு விளைநிலத்தின் தன்மையை அதிகரிப்பதற்கும் அதிலுள்ள நன்மை தருகின்ற நுண்ணங்கிகளை அதிகரிக்க செய்வதற்கும் பயிர்ச்செய்கையில் நம்மவர்களால்; இடப்படும் கூட்டுரத்திற்கும் மேலதிகாக பசுந்தாள் இலைகள் மற்றும் பசுந்தாள் இலைப்பசளைகளை இடுவது வழக்கமாக இருக்கின்றது. இங்கே இடப்படும் இவ்வாறான பசுந்தாள் மற்றும் பசுந்தாள் இலைப்பசளைகள் உக்கி பிரிவடையும் போது நுண்ணங்கிகளுக்கான உணவாகவும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தாவரம் இலகுவில் அகத்துறிஞ்சத்தக்கதாகவும் மாறிவிடுகின்றன. பசுந்தாள் இலைப்பசளைகளானவை வேறிடத்தில் வளர்ந்த தாவரங்களின் இலைகளை பிரித்தெடுத்து விளைநிலத்தினுள் இடுவதாகும். இங்கே எருக்கலை, பூவரசு, பன்னை, கிளிறிசிடியா, பனையோலை என்பன பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும் இவற்றினை மண்ணினுள் இடுவதனால் மண்ணிலுள்ள நோயாக்கிகளை நெமற்றோட்டுகளை கட்டுப்படுத்தும் செயன்முறையாகவும் இதனை பார்க்கலாம். மண்ணினுள் நோயாக்கியாக இருக்கும் குறிப்பிட்ட நோயாக்கி பூஞ்சணங்களான ஸ்கிளிரோட்டியம் மற்றும் றைசொக்ரோனியா எனப்படுவன தாவரத்தின் வேர்ப்பகுதியை தாக்குவதுடன் அழுகலடையச் செய்வதனால் தாவரத்தை முழுமையாக விளைச்சல் தருகின்றதாக மாற்றிவிட முடியாது. இந்நோயாக்கிகளை பசுந்தாள் இலைப்பசளைகளை இடுவதன் மூலமாக அவற்றை வலுவிழக்கவோ அல்லது நோயை ஏற்படுத்துகின்ற தன்மையை குறைக்கவோ முடியும். வேப்பமிலை இதற்கு சிறந்த உதாரணமாக விவசாய உயிரியல் துறையில் அதன் சிறப்பு பிரிவு மாணவி ரோகினி சிவஞானபானு அவர்கள் செய்த ஆய்வின் மூலம் உணர்த்தப்பட்டிருக்கின்றது. வேம்பமிலையைத் தொடர்ந்து பனையோலை மற்றும் எருக்கலை என்பன சிறந்த முறையில் ஸ்கிளிரோட்டியம் பூஞ்சணத்தை கட்டுப்படுத்துவனவாக அமைந்துள்ளன. பசுந்தாள் பசளைகள் அதிகமாக இடப்படும் போது மண்ணினுள்ள ஊட்டச்சத்தினளவு அதிகரிக்கின்ற தன்மையும் அதனுடன் சேர்ந்து மண்ணில் உள்ள நுண்ணங்கிகளின் உயிர்ப்பு தன்மையும் அதிகரிக்கின்றது. இது மண்ணினை உயிர்ப்புடனாக வைத்திருக்க உதவும்.
சேதன விவசாய செய்கையில் காபன் வட்டத்தின் முக்கியத்துவம் முழுவதுமாக உணரப்பட்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான காபனை மண்ணினுள் தாவரத்திற்கு தேவையான மூலக்கூறாக வைத்திருப்பதற்காக சேதனப்பொருட்களை ஒட்சிசன் குறைவான நிலையில் எரித்து உயிர்சாம்பர் (Biochar) ஆக மாற்றுவதாகும். இதனை ஆங்கிலத்தில் பைறோலைசிசு (Pirolysis) எனப்படும். இதனால் உயிர்சாம்பலினுள் துளைகளினளவு அதிகரிக்கப்படுகின்ற தன்மையும் அதனுள் பல்வேறுவகையான நுண்ணங்கிகள் தங்கியிருந்து தமது பிரிந்தழிதலை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெறுகின்றது. மண்ணின் விளைவிக்கும் தன்மையை அதிகரிக்க செய்வதற்கு இவ்வாறான செயன்முறை பெரிதும் கைகொடுக்கும். இந்த தொழில்நுட்பம் ஆதிகாலத்திலிருந்தே எம்மவர்களினால் கடைப்பிடிக்கப்பட்டதென்றாலும் அதற்குரிய விஞ்ஞான விளக்கம் தற்போது கொடுக்கப்படும் போது இன்னும் இச்செயன்முறையில் நன்மைகளை நாம் அனைவரும் உணர முடிகின்றதல்லவா. தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டுவந்த பாரம்பரிய விவசாயச் செயன்முறைகளுக்குள் பலவிடயங்களை நாம் காணக்கூடியதாயிருக்கின்றது. கிடைக்கின்ற ஊட்டச்சத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதற்காக தொழில்நுட்பமாக இதனை கருதக்கூடியதாக இருப்பதுடன் இவ்வாறான செயன்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுதல் மண்ணின் வளத்தை மேலும் கூட்டுவதற்கு உறுதுணையாயுமிருக்கும்.
இவற்றை ஒருமித்து பார்த்தால் சேதன விவசாய செய்கையினை முன்னெடுப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் வழிவகைகள் இருக்கின்றது என்பதனை அனைவரும் உணர்வீர்கள். சேதன விவசாய செய்கைக்கு தேவையான அனைத்து எளிய மற்றும் உள்ளூர் தொழில்நுட்பங்களையும் ஒன்றிணைத்தால் விவசாய பெருமக்களை இதனுள் முழுமையாக ஈடுபட வைக்கலாம். சேதன விவசாய பொருட்களின் விலை சாதாரண விளைபொருட்களை விட அதிகமாகவே காணப்படும். நஞ்சற்ற உலகத்தை நாம் உருவாக்குவதற்கு இன்னும் நிறையவே பாடுபடவேண்டியிருக்கும்.
மண்ணினுள் உரமாகி தாவரத்தை வளமாக்கும் சேதன பசளைகள் பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ள நிலையில் சேதன விவசாயத்தை ஊக்குவ்pக்கும் செயன்முறைக்குள் நாமும் உள்வாங்கப்படல் வேண்டும்.
இதில் இவ்வளவு இருக்கிறதா ? அறிந்ததும் அறியாததும் !
Are these having this much? The known and unknown !
This article describes about the potential of plants and their nutritional and other information. These information would help to utilize them as these nature driven invaluable substances easily grown and commonly available are often ignored due to our ignorance. This article gives the glimpses of those plants to be grown even in home gardens and consumed without much cost.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
நாம் உணவாக உண்ணும் பல விதமான உணவுப் பதார்த்தங்களில் அவை மா வகையாயினும் தானியவகையாயினும் கிழங்கு வகையாயினும் இலைவகையாயினும் இன்னும் மரக்கறி வகையாயினும் நல்லன என்பனவற்றை தெரிந்து உணவாக உட்கொண்டால் உடலுக்கும் தைரியமாக ஊட்டச்சத்தாக இருக்கும் இலகுவில் செரிமானமும் அடைந்துவிடும். அதிலும அன்றாடம் உண்ணுகின்ற உணவுப் பொருட்களில் நாம் தெரிவு செய்து பல்வகைத்தன்மையை உள்ளடக்கியதாக உணவு அமைந்துவிட்டால் எமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை இலகுவில் பெற்றிடலாம்.
மரவள்ளியும் வத்தாளையும்
கிழங்கு வகைகளுள் உள்ளடங்கும் மரவள்ளியும் வத்தாளையும் மாச்சத்தை கொண்டிருப்பவை. மரவள்ளியுடன் ஒப்பிடும் போது வத்தாளையிலுள்ள மாச்சத்து நீரிழிவு நோயாளர்களுக்கு பாதகம் குறைந்தது. அதிலுள்ள கிளைசீமிக் சுட்டி மரவள்ளியிலுள்ளதிலும் குறைவானதாகவே காணப்படுகின்றது. வத்தாளையில் குறைந்தளவு கிளைசீமிக் சுட்டி காணப்படுவது இதற்குரிய விசேஷமாகும். மரவள்ளியிலும் பார்க்க வத்தாளை கிழங்கில் நீரிழிவு நோயாளர்கள் உட்கொள்ளக்கூடிய அளவு மட்டுப்படுத்தப்பட்ட மாச்சத்தும் அதிகளவில் நார்ச்சத்தும் உள்ளதனால் நீரிழிவு நோய்கண்டவர்கள் மரவள்ளியைத் தவிர்த்து வத்தாளையை உணவாக்கலாம்.
அத்துடன் வத்தாளையில் அதிகளவில் மக்னீசியமும் காணப்படுவதனால் இரண்டாவது வகை (வலிந ஐஐ) நீரிழிவு நோயாளருக்கு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. வத்தாளை செய்கையில் பிரச்சனையாக இருப்பது அதில் பாதிப்பை ஏற்படுத்தும் நீள்மூஞ்சி வண்டு (ளுறநநவ pழவயவழ றநநஎடை) மட்டுமே. இதனது சேதத்தை மட்டுப்படுத்தினால் அல்லது இல்லாதொழித்தால் வத்தாளையிலும் அதிகளவில் இலாபமீட்டமுடியும். வத்தாளை கிழங்கை அவித்து, சீவி பொரித்தும் உண்பார்கள். மரவள்ளிக் கிழங்கில் மாச்சத்து அதிகமாக காணப்படுவதனால் அதனை சுட்டு, வேகவைத்து, உண்பது போல வத்தாளையிலும் பலவகை தின்பண்டங்களை உருவாக்கலாம்.
காரட்டும் பீற்றுட்டும்
காரட்டும் பீற்றுட்டும் உடல்வாகுவிற்கு ஏற்ற வேர்த்தாவர உணவுவகைகள். இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதனால் உணவு செரிமானத்தினை இலகுவாக்கிவிடும். அத்துடன் உடலிலுள்ள நச்சுப் பதார்த்தங்களை அகற்றுவதற்கு கரட்டும் பீற்றுட்டும் பயன்படும். இரண்டிலும் பீற்றா கரோட்டின் காணப்படுவதனால் கண்பார்வைக்கு மிகவும் சிறந்தாக கருதப்படுகின்றது. உற்பத்தியில் பீற்றுட்டினை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாகவும் எமது நாட்டின் தென்பகுதியில்; அதிகளவில் விளைவிக்கப்பட்டு நாட்டின் பலபாகங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டாலும் வடமாகாணத்திலும் காரட் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் மலையகத்தில் உற்பத்தியாகும் காரட்டின் மென்மைத் தன்மையும் இனிப்புத் தன்மையும் வடபகுதியில் உற்பத்தி செய்யப்படுவதற்கு இருப்பதில்லை. இரண்டிலும் குறைவான கொழுப்பும் அதிகமான உணவுநார்த்தன்மையும்; காணப்படுகின்றது.
பீற்றுட் எமது பிரதேசத்தில் இலகுவில் பயிரிடக்கூடியதும் விலை மலிவாக கிடைக்கக்கூடியதுமான பயிர். இதில் மேலதிகமாக விற்றமின் சீ யும் பீ 6ம் காணப்படுகின்றன. மேலும் பீற்றுட் இல் காணப்படும் பொட்டாசியம் உடலின் நீர்ச்சமனிலையை பேணவும் நைதரேற்று உடலில் நிலையை குறைக்கவும் உதவும். இவை காபோவைதரேற்று மற்றும் கொழுப்பு என்பனவற்றின் அனுசேபத்திற்கு உதவுபவையாகும். இரண்டிலும் நோய் மற்றும் பீடைத்தாக்கம் மிகவும் குறைவானதாகவே காணப்படும். அதனால் நஞ்சற்ற உணவென பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எமது உணவில் இவையிரண்டினையும் கணிசமானளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காரட் மற்றும் பீற்றுட் சாற்றினை காலை உணவருந்துவதற்கு முன்பதாக அருந்தினால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை பேணிக்காக்கும் அன்ரிஒட்சிடன்கள் இலகுவில் எமது உடலினால் அகத்துறுஞ்சப்பட ஏதுவாகும். அத்துடன் எமது உடலினது தோலின் வளர்ச்சிக்கு இரண்டும் அவசியம் தேவையானதுமாகும். விலைமலிவாக எது கிடைக்கின்றதோ அதனை உணவில் சேர்த்துக்கொள்வன் மூலம்; இயற்கையாக பீற்றா கரோட்டினை உடலுக்கு கொடுக்கும் வழியிருக்கின்றதல்லவா. மேலும்; பார்வைக்கோளாறு வராமலும் பார்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் பருப்பும் துவரைப்பருப்பும்
மஞ்சள் பருப்பும் துவரம் பருப்பும் அவரையினத்தை சார்ந்தவையாதலால் இரண்டிலும் புரதச்சத்து அதிகமாக காணப்படும். இருந்தாலும் துவரம் பருப்பில் கணிசமானளவு புரதச்சத்து, நார்ச்சத்து அத்துடன் அதிகளவில் அன்ரிஒட்சிசன்களும்க காணப்படுகின்றன. இரண்டு பருப்புக்களையும் புரதச்சத்துக்கு மாற்றீடாக பயன்படுத்துலாம். ஆனால் ஊட்டச்சத்தும் சுவையும் துவரைப்பருப்பில் அதிகம் ஆனாலும் எதுவென்றாலும் அதிகமாக உட்கொண்டால் அமிர்தமும் நஞ்சு. அந்த நிலைமை இங்கும் காணப்படுகின்றது. அளந்தறிந்துண் என்பார்கள் அதுபோல அவரைகள் என்பதனால் அளவுக்கு மீறி உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கம்பும் குரக்கனும்
கம்புப்பயிரும் குரக்கனும் தானியப் பயிர்கள். இரண்டிலும் மாச்சத்து அதிகமாக இருப்பினும் கம்புப் பயிரில் கூழ் காய்ச்சி விவசாயப் பெருமக்கள் விரும்பியுண்பர். அதிலுள்ள ஊட்டச்சத்து எதலும் வாராதென்பர். கம்பு எந்த உள்ளீடுகளும் இல்லாது பயிர்செய்கைப்படும வரண்ட பிரதேசத்து ;பயிராகும். குரக்கனுக்கும் அதே நிலைமைதான். ஆனால் குரக்கனிலுள்ள ஊட்டச்சத்து வித்தியாசமானது. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் குரக்கன் களி மிகவும் பிரபல்யமானது. இரண்டுமே வறுமைப்பட்டவர்களின் உணவு என விளிப்பார்கள். கம்பும் குரக்கனும் இருந்தால் பஞ்சமேது என்பது முன்னோர்கள் கூறிவைத்தது. எமது பிரதேசத்தில் கம்பும் குரக்கனும் அதிகளவில் பயிரிட்டு எமது பிரதேசத்து வறுமையை விட்டொழிப்போம்.
ஐம்புவும் விளிம்பியும்
நீரிழிவு நோயாளர்கள் விரும்பியுண்ணும் பழமாக ஐம்புவினையும் விளிம்பியையும் குறிப்பிடலாம். முழுக்க முழுக்க நீர்ச்சத்தினைக் கொண்டிருந்தாலும் இதில் சீனிச்சத்து மிகவும் குறைவு அத்துடன் இருக்கின்ற கலோரிப் பெறுமானமும் குறைவாகும். இவ்வகைப் பழங்களை வீட்டுத்தோட்டத்தில் சிறப்பாக வளர்த்து எமக்கு உணவாக கொள்ளலாம். நாமாக உற்பத்தி செய்து அறுவடையும் செய்து உணவாக பயன்படுத்தக் கூடிய இவ்வகைப் பழங்களை நாம் அரிதாகவே எமது உணவில் சேர்த்துக் கொள்ளவதுண்டு. பல்வகைகளுமுடைய பழங்களில் ஐம்புவும் விளிம்பியும் மிக முக்கியமான பழப்பயிர்களாகும். நாமே உற்பத்தி செய்து உணவாக்க பழகிக் கொள்வோம்.
உலக உணவு தினம் : இம்முறை நீருக்கு முன்னுரிமை !
World Food Day: Priority is given this time to Water !
This article describes about the Celebration of world food day and the priroty is given this time to the importance of Water. Water is the food and with out water food production is impossible. As is highlighted that the food and nutritional security is the focal point to meet the sustainable development goals in the year 2030, it was expressed that that target is challengeable and all the countries need to work hard towards the target. War has devastated the properties and the people and this has to be stopped with amicable solutions.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
2023 ஒக்டோபர் 16 இல் உலகளாவிய உணவு தினத்தை (World Food Day) உலக உணவு தாபனம் (Food and Agriculture Organization) 1945ம் ஆண்டு ஆரம்பித்த நாளை நினைவிலிருத்தி 'அதிகரித்து வரும் உலகளவிலான பஞ்சம் பட்டினியை (Hunger and powerty) முன்னிலைப்படுத்தி அதிலும் உணவுஉற்பத்திக்கு தேவையான நீர் இற்கு முக்கியத்துவம் கொடுத்து பலநிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றது. நீரின்றி இவ்வுலகேது என்னும் பொய்யாமொழிக்கிணங்க நீரின்றி உணவில்லை என்பதனையும் உணவின்றி மக்களில்லை என்னும் அறைகூவல்கள் nஐனீவாவிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றது. உணவுப் பாதுகாப்பு என்பதன் விரிவாக்கமாக நீர்பாதுகாப்பும் முக்கியமானதாக உணரப்பட்டிருக்கின்றதுடன் இதுபற்றிய கலந்துரையாடல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீரின் தேவை உணவுற்பத்தியில் அவசியம் என்பதனை முன்னிறுத்தி நீரின் பாதுகாப்பையும் இதில் உள்ளடக்கியிருக்கின்றார்கள். நீரைத்தேடியோடும் நிலைக்கு வரட்சி பலநாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. மாறாக வெள்ளப்பெருக்கும் தவிர்க்கமுடியாத துன்பியல் நிகழ்வாக மாறியிருக்கின்றது.
உலகத்தில் இவ்வருடம் எதிர்பாராத விதமாக பலவிதமான இயற்கை அழிவுகளையும் (Natural Disasters) மனித அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. பல நாடுகளில் உணவின்றி மக்கள் தவிப்பதனை தினந்தினம் செய்திகள் தெரிவிக்கின்றன. போர்மேகம் ஐரோப்பாவில் தொடங்கி ஆசியாவின் மேற்குக்கரையில் மையம் கொண்டிருப்பது பலவழிகளில் இன்னும் பிரச்சனைகளை தோற்றுவிக்கப் போகின்றது. பெரியவர் சிறியவர் என்பதிலேயே அப்பாவிகளான பலவுயிர்கள் காவுகொள்ளப் படுகின்றன. இதில் ஒருவேளை உணவுக்காக தவிக்கும் நிலையை உலகம் கணக்கிலெடுக்காதிருப்பது ஆச்சரியத்திற்குள்ளாகின்றது. எப்படியாவது போர்மேகத்தினை உருளவைத்து தம்மிடமிருக்கும் போர்த்தளபாடங்களை பரீட்சித்துப் பார்க்கும் களமாக இவ்வாறான நிகழ்வுகளை விரும்பி ஏற்படுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொள்ளும் நிலைமையை எதுவும் தடுத்து நிறுத்தவில்லை.
ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் (Sustainable Development Goals) உணவுப் பாதுகாப்பு (Food Security) மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (Nutritional Security) என 2030ம் ஆண்டை நிர்ணயஞ் செய்திருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறு அருகிவருவதாகவே தென்படுகின்றது. உலகம் அழிவுப்பாதையை தேர்ந்தெடுத்ததன் விளைவாக அநாவசியமாக மக்கள் இறக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. உலக அழிவுக்கான பாதையை விஞ்ஞானத்தின் அபிரிவிதமான வளர்ச்சியும் ஊக்குவிக்கின்றதா என்னும் ஒரு தோற்றப்பாடும் எழுந்திருக்கின்றது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் பரீட்சித்துப்பார்க்கும் தளமாக இவ்வாறான நொந்துபோன மக்களை பயன்படுதுவது எந்தவிதமான நியாயப்படுத்தல்களுக்கும் உட்படாது.
உணவு உற்பத்தியில் பாரியளவிலான வீழ்ச்சியேற்பட வாய்ப்பிருக்கின்றது. அதில் உணவுப்பஞ்சம் என்பது ஒரு புறமிருக்க ஊட்டச்சத்து குறைபாடு என்பது இன்னொரு பிரச்சனையாக எழுந்திருக்கின்றது. பொதுவாக கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தின் வீரியம் குறைவடைந்ததாக காணப்பட்டாலும் தற்போது உலக சனத்தொகையைக் கருத்தில் கொண்டால் பதினொரு சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் சூடான் நைஜீரியா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இவ்வாறான உணவுப்பஞ்சத்தை பாரியளவில் தற்போது உணர்ந்திருக்கின்றன. இந்நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஏதுமறியாத பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினந்தினம் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருப்பதும் ஒருபுறமிருக்க ஐரோப்பாவில் ரஷ்யா-உக்ரைன் போரும் இஸ்ரேல்-பாலஸ்த{ன போரும் இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றது.
உணவுப் பஞ்சத்தைப் பொறுத்தவரையில் ஆபிரிக்காவிலுள்ள சகாரா பகுதி, தென் மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில்; அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பிரதேசங்கள் உள்நாட்டுப் போரில் தம்மையே அழித்துக்கொண்டிருக்கும் போது இயற்கையின் அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி என்பன இன்னொரு பக்கத்தில் இம்மக்களை வரட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றன. எல்நினோவின் தாக்கமும் காலநிலை மாற்றத்தின் தாக்கமும் இவற்றுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப்போர்கள் வலுவடைந்திருக்கின்றதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த வருடம் இம்மாதத்திலேயே போரின் உக்கிரம் விசாலமடைந்து காணப்படுகின்றது. இதன் மூலமாக மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்ததும் இன்னும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டதாலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. உணவுப் பஞ்சம் ஒருபுறமிருக்க கிடைக்கின்ற உணவும் ஊட்டச்சத்தற்ற உணவாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாதிருக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.
தற்போது உலக உணவு உற்பத்தி இப்போதிருக்கின்ற மக்களுடைய தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக அறிவிக்கப்பட்டும் இந்த உற்பத்தியான உணவு சரியாக பகிர்ந்தளிக்கப் பட்டிருந்தால் இவ்வாறான பஞ்சம் ஏற்படுவதற்கு சாத்தியமேயில்லை. அப்படியாயின் உணவு உற்பத்தி, அதன் கிடைக்கும் தன்மை என்பனவற்றையும் தாண்டி உற்பத்தியான உணவை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கச்செய்வதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. ஏதோ ஒரு காரணி தடைக்கல்லாக இருப்பது உணரப்பட்டிருக்கின்றது அல்லவா? இதன் பின்புலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இருப்பதென்பது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றதல்லவா. அந்த நாடுகளிலிருந்து தான் நாம் எமக்கு வருடாவருடம் கடனையும் பெற்றுக்கொள்ளுகின்றோம். பட்டினி போட்டுவிட்டு கடனும் தருகின்ற செயலை என்னவென்பது? காலாகாலத்திற்கு கடனாளியாகவே இருந்தால் தான் எம்மையும் ஏதோவொருவிதத்தில் ஆளுமைக்குட்படுத்த முடியும் என்னும் எண்ணம் இருக்கும் வரை இது தொடரத்தான் போகின்றது. மாறாக நாமாக சிந்தித்து எமது வளங்களை பயன்படுத்தி எமது நாட்டை நாம் முன்னுயர்த்த என்று முயற்சிக்கின்றோமோ அன்றிலிருந்து தான் எமக்கு விடிவுகாலம் என்பதனை நம்மினிய உறவுகள் இதிலிரந்து புரிந்துகொள்ள வேண்டும்.
விஞ்ஞானம் விண்ணில் பறந்து பிற கோள்களில் மனிதன் வாழலாமா என பெருமெடுப்பில் போட்டிபோட்டு ஆய்வினை செய்துகொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றார்களென்பது எல்லோர் மனதையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருக்கின்றதல்லவா. நன்றாக கவனியுங்கள்! இந்த நிலைமை இங்கும் இருக்கின்றது. உணவு உற்பத்தி ஒருபுறமும் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிக்கொண்டிருக்கும் மக்களை கிராமங்களுக்குள்ளே எந்தவித வருமானமுமின்றி உதவிகளுமின்றி விடப்பட்டுள்ள குடும்பங்களை கேட்டறிந்தால் தெரிந்துகொள்வீர்கள். விஞ்ஞானத்தின் உயர்வு ஆக்கத்திற்காய் இருக்கும் மட்டும் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஆனால் அதனை அழிப்பதற்கும் தீங்கு செய்வதற்கும் புதிய கண்டுபிடிப்புக்களை பரீட்சித்து பார்க்கவும் முயலும் போது விஞ்ஞான வளர்ச்சியின் எதிர்பார்த்த நோக்கம் ஈடேறவில்லை எனவே தோன்றுகின்றது.
உணவுற்பத்தியிலும் ஊட்டச்சத்தினை சமனிலைப்படுத்தும் நிலைக்கும் இந்த பாரபட்சம் நடந்து கொண்டிருக்கின்றது. உலக ஓட்டத்தில் விரைந்துணவு தயாரிக்கும் நிலையில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது ஆனால் அதற்காக இயற்கையின் தன்மையை மாற்றி சூழலையும் மாற்றி புதியவகை இனங்களை உற்பத்தி செய்து அதனால் ஏற்படு;ம் பின்விளைவுகளை சிறிதேனும் சிந்தியாது சுழன்றுகொண்டிருக்கும் இவ்வுலகத்தின் சமகால நடப்புக்கள் ஒரு போதும் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போவதில்லை மாறாக பல தீங்கான நிலைமைகளுக்குள்ளேயே தள்ளிவிடுகின்றன. பசியும் பட்டினியும் இன்னும் தலைவிரித்தாடும் நிலைமைகளே அனுமானிக்கப்படுகின்றன.
பட்டினியின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரின் உக்கிரத்தினுள் உடைந்து போனவையாகவே காணப்படுகின்றன. இருப்பதையும் அழித்தொழித்து உதவியென்று உள்நாட்டுப் போர்களை ஊக்குவித்து அந்தந்த நாடுகளில் அபிவிருத்தியின் அடித்தளமான கிராமங்கள் உடைத்தெறியப்பட்ட சோகக்கதைகளே அநேகம். அடித்தளத்தை உடைத்தெறிந்து விட்டு எவ்வாறு அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். அதிலும் உணவுற்பத்தியின் மையங்களே கிராமங்கள் தானே! அபிவிருத்தி பற்றி கருத்தரங்கு மற்றும் மாநாடுகள்; பல நடைபெற்றும் அவற்றின் தொனிப்பொருளான கிராம அபிவிருத்தி பற்றிய தீர்க்கமான முடிவுகள் பெறப்படவில்லை அத்துடன் அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கமும் முழுமைபெறவில்லை. சாக்குப் போக்குக்கு செய்யப்படும் திட்டங்களாகவும் அவற்றினால் மக்களுக்கான வழிகாட்டல்கள் முழுமையானதாக இல்லாதிருப்பதும் கவலைதரும் விடயங்களே!
பசி பட்டினியினோடு சேர்ந்து ஊட்டச்சத்து குறைபாடும் சேர்ந்து மக்களை வாட்டுகின்ற சோகம் உலகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிகின்றதா? சத்துணவு திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்கள் பலவற்றில் ஒரு வேளை உணவுக்காகவாவது பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள 5 வயதிற்கு கீழான 155 மில்லியன் சிறுவர்கள் அல்லது பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் மிகமுக்கியமான தகவல் அனைவரையும் சிந்திக்க தூண்டியிருக்கின்றது. இன்னும் நம்மில் பலருக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களைக்கூட அறிந்துணர முடியாதிருப்பதனை என்னவென்பது.
இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி நமது பிரதேசத்து திட்டங்களனைத்தும் இவற்றுக்கான தீர்வினை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும். திட்டங்களின் முடிவுகள் மாற்றுவழிகளை பரிந்துரைக்கும் நேரத்தில் அவற்றிற்கான முடிவுகளையும் தீர்க்கமானதாக அறிவிக்க வேண்டும். எமது பிரதேசத்தில் இந்த உணவுத்தட்டுப்பாடு ஏற்படாமலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இன்னும் அவசியம் தேவைப்படுவோர் என இனங்காணப்படுபவருக்கும் உதவிட வேண்டும். உள்நாட்டுப் போரில் துவண்டுபோன வட உகண்டா நாடு போருக்கும் பின்னரான சரியான திட்டமிடல்களுக்கூடாக தற்போது தம்மை வளமுள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வளமான சந்ததியின் எதிர்காலம் சரியாக தீட்டப்படும் திட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் மேலும் அதற்கான சேவைகளிலும் தங்கியிருக்கின்றது. எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் வாழ்க்கை முறைக்குள் நாமாக வந்திருப்பதனை மேற்கூறிய அனைத்தும் உணர வைத்ருக்கின்றன. எமது உள்ளூர் வளங்களை சிறப்பாக வினைத்திறனாக எமது வாழ்வியல் விடிவுகளை வெளிக்கொணர நாம் இன்னும் முயற்சி செய்வோம். இதில் தான் எமது வாழ்க்கைக்கு அர்த்தமும் இருக்கின்றது.
"Country in importation: Unavoidable and necessity to think "
This article describes about imports of goods to this Country and those unavoidable imports and to think in future about such imports.
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
எமது நாட்டின் வளர்ச்சிப் பாதை பலவித நெருக்கடிகளாலும் பொருளாதார சீர்குலைவுக்கான தவறான முடிவுகளாலும் முன்னைய காலங்களில் கட்டமைக்கப்பட்டிக்கின்றது. இந்த சரிவு எமது நாட்டில் அவ்வப்போது ஏற்பட்டிருப்பதனை நாம் சுட்டிக்காட்டினாலும் இறுதியில் பண்டங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். மக்களுக்கான உணவினை கிடைக்கச்செய்யும் வழிவகைகளை ஆராய்ந்த நாடு வேறுவழியின்றி உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இறக்குமதி செய்யும் நிலையெய்தியிருக்கின்றது. இந்த நிலைமையை எதிர்வருங்காலங்களில் தவிர்க்கக்கூடியவகையில் விவசாய உற்பத்தி; மாற்றியமைக்கப்படல் வேண்டும். காலபோக நெல்லுற்பத்தியின் விழுக்காடு தற்செயலானதென கணிப்பிடமுடியாதிருப்பதற்கு காரணமாக 2024 ம் வருடத்தில் 5.6 மில்லியன் தொன் நெல்லை உற்பத்தி செய்திருக்கின்றது.
இம்முறை நெல்லுற்பத்தியில் வீழ்ச்சிக்கு காரணங்களாக காலந்தப்பி பெய்த மழையும் அளவுக்கதிகமாக வெள்ளம்போட்ட மழையும் காரணமாக அமைந்திருக்கின்றன. மழைவீழ்ச்சி வழக்கமாக ஆனால் அதிகமாக இருந்ததாலும் பலவிதமான எதிர்வுகூறல்களுக்கு மத்தியிலும் பயிர்ச்செய்கை தளம்பல் போக்கிலேயே விவசாய பெருமக்களை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காலநிலை மாற்றம் முன்னைய காலங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை ஓரளவிற்கு புரிந்து கொண்டவர்களாக எமது விவசாய பெருமக்கள் இருந்த காரணத்தினால் பயிர்விளைச்சலில் பாரிய தாக்கங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் மழைவீழ்ச்சியின் தாக்கம் காலபோக செய்கையினை பாதிக்கும் நிலைக்குள் வந்திருப்பது வருங்காலங்களில் பயி;ர்ச்செய்கை திட்டமிடலுடனேயே இருக்க வேண்டும் என்பதனை மீளவும் நினைவுபடுத்துகின்றது. காலநிலை எதிர்வுகூறும் செய்திகளுக்கு முன்னுரிமையளித்தல் இதில் முக்கியத்துவமாகின்றது.
காலநிலை மாற்றம் எமது நாட்டில் தீவிர நிலைமைகளை உருவாக்க தொடங்கியிருப்பதனை காலந்தப்பிய அதிகரித்த மழைவீழ்ச்சி கட்டியங்கூறியிருக்கின்றது. வழமையான காலபோக சிறுபோக பயிர்ச்செய்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய நிலைமை எழுந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. மாசிமாதங்களில் பெய்யாத மழை அவ்வப்போது பெய்யத்தொடங்கியிருப்பது மாற்றத்தை காட்டிநிற்கின்றதல்லவா. இந்த மாற்றங்கள் இன்னும் பலவிதங்களில் வேறுபடப்போகின்றன என்பதனையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் பயிர்விளைச்சலில் மட்டுமல்ல பீடை மற்றும் நோய்களையும் பெருக்கிவிடுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. பயிரழிவு என்பது இவற்றினாலும் ஏற்படும் சேதம் என்பதனால் அவற்றிலிருந்து பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகளும் அவசியம் பயன்படுத்தப்படல் வேண்டும். வருமுன் காக்கும் செயன்முறைகளுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கலாம்.
எமது நாட்டில் வளங்களிருந்தும் நாம் பிற நாட்டிலிருந்து அதே பண்டங்களை இறக்குமதி செய்வது எமது பொருளாதார நிலைமையே மேலும் கேள்விக்குறியாக்கிவிடும். ஆனாலும் வேறுவழியின்றி மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியநிலையில் அரசு அளந்தறிந்து இவ்வாறான இறக்குமதிகளை அனுமதித்திருக்கின்றது. இம்முறை 30இ000 மெற்றிக் தொன் உப்பினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை முக்கிய செய்தியாகும். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் உப்பின் உற்பத்தியில் வீழ்ச்சியேற்பட்டதைத் தொடர்ந்து நுகர்வோருக்கான உப்பினை விலையேற்றமின்றி வழங்குவதற்காக அதிலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாதென்பதனை நோக்கமாக வைத்து உப்பு இறக்குமதிப்பொருளாகிவிட்டது.
இவ்வாறாக 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது கூட ஆளும் அரசின் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததாகவே அமைந்துள்ளதனை பார்க்கலாம். ஆனாலும் காலத்திற்கேற்ப எடுக்கப்பட்ட முடிவாகினும் எமது நாட்டில் இந்த உப்பு உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளையும் காலநிலையால் பாதிக்கப்படாதவாறு விளைச்சல் அறுவடை செய்யப்படல் வேண்டும் என்பதும் உப்பு உற்பத்தி வருங்காலங்களில் எந்த விதமான பாதிப்பின்றி மக்களுக்கு தேவையான அளவு அறுவடை செய்வதற்கான வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட்டு விளைச்சல் பெறப்படவேண்டும்.
உணவுப்பொருட்களை குறிப்பாக உருளைக்கிழங்கு, சின்னவெங்காயம், மற்றும் நெல் என்பனவற்றை நுகர்வோரின் தேவைக்கேற்ப இறக்குமதி செய்வது எப்போதுமே அவற்றின் சந்தை விலையை தளம்பலில்லாது குறைவாக நுகர்வோர் பயனுறும் வகையில் வைத்திருப்பர். ஆனால் உள்ளூர் உற்பத்தியாக இத்தகைய உணவுப்பொருட்கள் வரும்போது வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வது எந்தவகையிலும் சாலப்பொருந்தாது. இத்தகைய செயற்பாடுகள் கடந்த அரசாங்கங்களின் காலங்களில் நடந்ததனால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விவசாய செய்கையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முனைந்தனர் என்பது உண்மையே.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (புசழளள யெவழையெட Pசழனரஉவ) என்பது நாட்டின் பொருளாதார செயற்றிறனை மதிப்பிடப்பயன்படுகின்றது. இதனை நுகர்வோருக்கான செலவு, முதலீட்டு செலவு, அரச செலவு, மற்றும் மொத்த ஏற்றுமதி என்பனவற்றை கூட்டுவதிலிருந்து மொத்த இறக்குமதியை கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. இதில் நிகர ஏற்றுமதி எனப்படுவது மொத்த ஏற்றுமதியிலிருந்து மொத்த இறக்குமதியை கழிப்பதன் மூலம் கிடைக்கின்றது. இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களில் இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
இந்த சுட்டியின் மதிப்பீட்டின்படி வடமாகாணத்தின் பங்களிப்பு கணிசமான காணியில் உற்பத்தி செய்ய முடியும். அந்தவகையில் வடமாகாணத்தினது புனுP மிகவும் குறைவானதாக இருக்கின்றமைக்கு வடமாகாணத்தின் உற்பத்திப் பொருட்கள் உலகசந்தைக்கு செல்லாமை முதற்காரணமாகவும் அவற்றின் தரம் மேம்படுத்தப்பட்டால் அவற்றுக்கான கேள்வி அதிகரித்தால் உற்பத்திப்பொருளுக்கம் சிறந்த கேள்வி எழும். இறக்குமதியில் நாம் தொடர்ந்து ஈடுபடாமல் இங்குள்ள பொருட்களை தரமானதாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது எமக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களின் சந்தைவிலை பலமடங்காகும். இவ்வாறான வரியின் மூலம் இறக்குமதியாகும் அத்தியாவசிய பொருட்களின் செலவு சமனிடப்படும். இரண்டாவதாக உள்ளூர் பொருட்களின் உற்பத்திக்கும் சந்தைப்படுத்தலுக்கும் மானிய முறையை உருவாக்கலாம். இதன் மூலம் மக்கள் உள்ளுர் பொருட்களின் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபாடுடையவராவர். உள்ளூர் உற்பத்தி கணிசமானளவு உயர்வடைந்தால் உள்ளூர் சந்தைப்படுத்தலும் வர்த்தகமும் மேன்மையுறும். இதனால் உள்ளூர் பொருட்களின் கிடைக்கும் தன்மையும் அதிகரித்து அவற்றினது விலையும் குறைவடையும். இது நேரடியாகவே பொதுமக்கள் பயன்பெற வாய்ப்புக்களை உருவாக்கும். பசிபட்டினி என்பனவற்றை அறவே இல்லாதொழிக்க மற்றும் உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்ய இந்த கைங்கரியம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதில் முக்கியமாக தரமான பொருட்களின் உற்பத்தி முன்னிலையாக்கப்படும். அத்துடன் தரமான சேமிப்பு மற்றும் பொதிசெய்தலும் இவற்றினுள் உள்ளடங்கலாகும். எமது உள்ளூர் உற்பத்திகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நிலைமைக்கு மக்களை விரும்பியழைக்கும் செயலாக இவ்வாறான கொள்கைமாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவை ஒரு ஆரோக்கியமான சமூகநிலையை ஏற்படுத்த பெரிதும் துணைநிற்கும்.
சமகால கொள்கை மாற்றங்கள் விவசாயிகளையும் நுகர்வோரையும் கணக்கிலெடுத்து இருவரையும் பாதிக்கவிடாத ஏற்றுமதி இறக்குமதி விடயங்கள் கையாளப்படுவதனால் நாட்டின் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான ஒளிக்கீற்று தென்படுகின்றதெனலாம். எமது பொருளாதார சரிவு சீர்செய்யப்பட்டால் மக்களின் வாழ்வியலில் மாற்றம் ஏற்படுவதோடு நிம்மதியான வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும்.