உங்களுக்குச் சின்ன அண்ணாமலையைத் தெரியுமா? ……… தெரியாதா? தெரிந்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது. கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் உறவினர். தேவகோட்டை வாசி. நல்ல தமிழ் அன்பர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் நெருங்கிய தோழர். ராஜாஜியின் தொண்டர், 'சிறிய திருவடி' என்று அன்போடு அழைக்கப் பட்டவர். தமிழ்ப் பண்ணை எனும் புத்தக வெளியீட்டகம் நடத்தியவர். தமிழரசுக் கழகத்திற்காக "சங்கப் பலகை" எனும் பத்திரிகை நடத்தியவர். கம்பீரமான தோற்றம். சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப்பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.
"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.
இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தேமாதரம்' என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.
ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.
இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.
இவர் நான்கு முறை சிறை சென்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம் செய்திருக்கிறார். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி அவர்களால் சத்தியாக்கிரகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவகோட்டையில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். இவரை அங்கு கைது செய்யாததால் அங்கிருந்து சென்னை வரை நடந்தே வந்து வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். சென்னையில் கைது செய்யப் பட்டார். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னும் இவர் போராட்ட மனப்பான்மையை விடவில்லை.
தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்றும், திருப்பதி, கன்னியாகுமரி பகுதிகள் தமிழ் நாட்டோடு சேரவேண்டுமென்கிற எல்லைப் போராட்டத்திலும், சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும், ஆந்திராவுக்குக் கொடுக்கக்கூடாது என்ற போராட்டத்திலும் முக்கியப் பங்கேற்று சிறை சென்றிருக்கிறார். இப்படி வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டம், சிறை என்றே கழித்து விட்டார். இவ்வளவு தியாகம் செய்தும் கட்சியிலோ, அரசாங்கத்திலோ எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
இவருடைய தியாகத்தையும், பட்டம் பதவியில் ஆசையில்லாத மனப் பக்குவத்தையும் ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் உதாரணமாகக் கொள்ள வேண்டும்."
(திரு சின்ன அண்ணாமலை எழுதிய "தியாகச்சுடர்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசியது)
இனி திரு சின்ன அண்ணாமலை அவர்களின் வாயால் 1942இல் திருவாடனையில் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். நமக்காக அவர் எழுதிவைத்திருக்கிறார். நாம்தான் அதைப் படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொள்வோம்.
"1942 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும் கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.
ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத அபாயம் என்று கருதி போலீஸார் அன்றிரவே என்னைக் கைது செய்வது என்று முடிவு செய்து விட்டனர்.
இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்க மாட்டார்கள், சில பேர்தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்குச் சுமார் பத்து லாரி ரிசர்வ் போலீசைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக் கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.
அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரசர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது. "உங்களைக் கைது செய்திருக்கிறோம்" என்று போலீசார் சொன்னார்கள்.
இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக்கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ "இராமவிலாஸ்" பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.
திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி மக்கள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீசைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.
என்னை ஏற்றிக் கொண்டு சென்ற இராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்து கொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸைச் சாம்பலாக்கி விட்டார்கள். அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக் கூடாது என்று மக்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள்.
அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து கோர்ட் கட்டடத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை.
பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு திருவாடனையை நோக்கி வந்தது. திருவாடனை வரும் வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும் உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடனையை நோக்கி வந்தார்கள்.
சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சப்-ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.
நான் சொன்னேன், 'இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்' என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.
அவர்கள் சொன்னார்கள், 'நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம். வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?' என்று கேட்டார்கள்.
'அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான் பொறுப்பு' என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் 'சூரப்புலி' சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும்.
என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.
இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடையென்றும், கட்டடத்திற்கு தீ வை என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முனால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.
பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து "இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
"நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?" என்று நான் திருப்பிக் கேட்டேன்.
"இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்" என்று பதில் சொன்னார்.
"சரி, அப்படியே செய்யுங்கள்" என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்துதான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.
அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.
பட்டப்பகல் 12 மணிக்குப் பல ஆயிரக் கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.
அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.
மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது.
தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை.மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் 1942இல் சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.
விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.
அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்போது நான் குறுக்கிட்டு, "அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்" என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள்.
நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ அவர்களது உடைகள் என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.
பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில் ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.
மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள்.
எல்லோரையும் சமாதானப் படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோடின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.
போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்று கொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது.
உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு "எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா" என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள்.
இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும் குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால் அவைகளைச் சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின் குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்து விடுகிறது.
ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும். எவ்வித பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப் பட்டுள்ளது.
இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர்.
நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டிருந்தோம். உயிர் போன பலரும், உயிர் போகும் தருவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல் நின்று கொண்டிருந்தேன். இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசலவெற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போது எற்படும் பயங்கரமான கிரீச் எனும் அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.
இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்று விழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.
தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?
(பிறகு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படித் தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள். மேற்கொண்டு நடந்தவற்றையும் எழுதுகிறோம்.)
நன்றி: குமரன் பதிப்பகம், சென்னை வெளியிட்ட சின்ன அண்ணாமலை எழுதிய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" நூல். வி.கோபாலன் privarsh@gmail.com --Ksubashini (பேச்சு) 15:52, 10 செப்டெம்பர் 2013 (CDT)
*********************************************
( more material from a blog...koottanchoru)
தனது பத்தாவது வயதிலேயே, தனது ஊரிலேயே, தனது உறவினர் வீட்டிலேயே, மஹாத்மா காந்தியைத் தரிசிப்பதற்கு ஒருவர் எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் ?
இந்த பாக்கியம் பெற்றவர் காரைக்குடியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலைதான்.. இளைஞன் அண்ணாமலையின் சிறிய தாயார் உமையாள் ஆச்சி, ராய.சொக்கலிங்கத்தின் துணைவியார் – 1934ல் மஹாத்மா காரைக்குடி வந்த போது இந்த நிகழ்ச்சி நடந்தது. இது மட்டுமல்ல, பிற்காலத்திலே, காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையை தமிழில் வெளியிட அண்ணலிடமே அனுமதி பெற்றவரும் கூட. இவருக்குச் சின்ன அண்ணாமலை என்ற பெயர் சூட்டியது வேறு யாருமல்ல, இராஜாஜி அவர்களேதான்.
காரைக்குடி சா.கணேசனின் உறவினர் இவர் – சின்னஞ்சிறு பிராயத்திலேயே தேசத்தைப் பற்றியும் காந்திஜியைப் பற்றியும் நன்கறிந்து, தேசப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணாமலை.
இளம் வயதில் காரைக்குடியிலும், மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரிலிருந்த ஆங்கிலோ-சைனீஸ் பள்ளியிலும் படித்தவர். தனது பதின்மூன்றாவது வயதிலே உமையாள் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டார்.
"மேடையில் பேசுபவர்களுக்கு சுவையாக எழுதத் தெரியாது, எழுதத் தெரிந்தவர்களுக்கு மேடையில் அழகாகப் பேச வராது.அண்ணாமலை இதற்கு விதிவிலக்கு! சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர்,
பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய கூட்டத்திலே மணிக்கணக்கில் பிரசங்கமாரி பொழியக்கூடியவர்,
ஆவேசமாகப் பேசுவார்,
அழ வைக்கும்படி பேசுவார்,
சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார் – இவரைப் போன்றவர்கள் நமது சட்ட சபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாகும் என்று நான் எண்ணுவது உண்டு. பேசும் ஆற்றலைப் போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் சின்ன அண்ணமலை – அழகிய சிறு கதைகள், சிறந்த நாவல்கள், ரசமான பிரயாணக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் (“காணக் கண்கோடி வேண்டும்” என்ற நூலின் முன்னுரையில் கல்கி எழுதியது) சின்ன அண்ணாமலை கல்கி கிருஷ்ணமூர்த்தியைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் வரித்துக் கொண்டவர்.
திரு. சத்தியமூர்த்தி கலந்து கொண்ட அரசியல் மானாட்டில், அண்ணமலை பேசி முடித்தவுடன் அவரைப் பாராட்டி நாவன்மையைப் புகழ்ந்த சத்தியமூர்த்தி தான் அணிந்திருந்த காவி கலர் கதர் அங்கவஸ்திரம் ஒன்றைச் சபையின் கரகோஷத்தினிடை அவருக்குப் போர்த்தினார். அந்த நினைவாகவே இவர் தன் வாழ் நாள் முழுதும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிந்து வந்தார்.
ஆகஸ்ட் , 1942ல் நடந்த விடுதலைப் புரட்சியின் போது, பல பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு கனல் தெறிக்கப் பேசியவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார் – மறு நாள் பகலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைக்கதவை உடைத்துத் திறந்து இவரை விடுதலை செய்தார்கள்.
இவர் நடத்திய தமிழ்ப் பண்ணை புத்தகாலயம், இராஜாஜி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மற்றவர்களின் புத்தகங்களைப் பதிப்பித்தது. அண்ணாமலை எழுதிய முதல் புத்தகம் “சீனத்துச் சிங்காரி”
மகாத்மா காந்தி கடைசியாகச் சென்னை வந்த போது, இராஜாஜி அண்ணாமலையை அண்ணலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாமலையின் சிறைவாசம், விடுதலை பற்றிச் சொல்லிய பிறகு ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார் அண்ணாமலை, உங்கள் அனுமதி தேவை என்றிருக்கிறார் இராஜாஜி. “நஷ்டம் வராமல் பத்திரிகை நடத்துவாயா” என்று காந்தி கேட்டதற்கு “இவரும் உங்களைப் போல் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்தான்” என்றாராம் இராஜாஜி. மகிழ்ச்சியில் திளைத்த மகாத்மா, உடனேயே ‘தமிழ் ஹரிஜன்’ துவக்க விழா நடத்தி விடலாம் என்று சொல்லி முதல் காரியமாக தமிழிலேயே ‘தமிழ் ஹரிஜன்’ என்றெழுதித் துவக்கி வைத்தார்.
அண்ணாமலை கல்கியைச் சந்தித்ததே ஒரு சுவாரசியமான கதை. தேவகோட்டையில் ராஜாஜி வந்திருந்த போது ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அண்ணாமலை அக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர். அண்மையில் கல்கி எழுதி ஆனந்தவிகடனில் தலையங்கமாக வெளி வந்த ராஜாஜி பற்றிய விஷயங்களை நன்றாகவே மனப்பாடம் செய்திருந்தார் அண்ணாமலை. முதலில் மேடை நடுக்கம் தான் – ராஜாஜி ஊக்கிவிடவும் கணீரென்ற குரலில் தான் பேச வேண்டியதை தைரியமாக எடுத்துரைத்தார். ராஜாஜி ஆசிகள் வழங்கி கூடவே “நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்றார்.
பேச்சு முடிந்தவுடன் மேடையில் பின்புறம் அமர்ந்தார் அண்ணாமலை. அருகில் இருந்த ஒருவர் ‘ரொம்ப நன்றாகப் பேசினீர்கள் – இவ்வளவு விஷயம் எங்கு படித்தீர்கள்’ என்று கேட்டார். அவரிடம் உண்மையை மறைக்கக் கூடாதென்று ”ஆனந்தவிகடனில்” என்றார் அண்ணாமலை. யார் எழுதியது தெரியுமா என்றார் அந்த மனிதர். கல்கி என்றார் அண்ணாமலை. அவரைத் தெரியுமா? தெரியாது, நான் பார்த்ததில்லை. பார்த்தால் என்ன செய்வீர்கள்? சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வேன். “அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க” என்றார். ஏன் என்று கேட்டார் அண்ணமலை. நான்தான் அந்தக் கல்கி என்று பதில் வந்தது (அண்ணாமலை எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” என்ற புத்தகத்திலிருந்து)
தன் வாழ்வில் அனேக தேசபக்தர்களைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றவர் சின்ன அண்ணாமலை.
சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்ததில் ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.. 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, தொண்டர்கள் ஏமாற்றமும் சோர்வும் அடைந்திருந்தனர். அப்போது தமிழ் நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் சிவாஜிக்கென்று அனேக ரசிக மன்றங்கள் வைத்திருக்கின்றனர், இவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தால் காங்கிரசுக்குப் புதிய பலம் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர்.
இதன் காரணமாகவேதான் 1969 ஆகஸ்டு மாதம் ” அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பு உருவாகியது.
அதன் முதல் பேரவை அக்டோபர் முதல் தேதியன்று சென்னையில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. சரித்திரம் காணாத ஊர்வலமும், தென்னாட்டு, வடனாட்டு நட்சத்திரங்களும், அலை மோதினர். காங்கிரசைப் பலப்படுத்த அண்ணாமலை மறைமுகமாகச் செய்த இந்த ஏற்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டமில்லாததால் அதன் இலக்கை எட்டிப் பார்க்க முடியவில்லை. அண்ணாமலை ஏழு வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக இருந்தார்.
நிறைய நூல்கள் இவர் எழுதியும், அந்த நூல்களின் விவரங்கள் கிடைக்கவில்லை — இவர் எழுதிய முதல் நூல் “சீனத்துச் சிங்காரி” நினைவுக்கு வரும் மற்ற நூல்கள் – தியாகச் சுடர், சொன்னால் நம்ப மாட்டீர்கள், கண்டறியாதன கண்டேன், காணக் கண் கோடி வேண்டும் என்பவை.
(தகவல் உபயம் – சொன்னால் நம்ப மாட்டீர்கள்! – சின்ன அண்ணாமலை – குமரன் பதிப்பகம்}
ஆர்வி: சின்ன அண்ணாமலையின் சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை சிறு வயதில் நானும் படித்திருக்கிறேன். அவர் கல்கி, ராஜாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். பின்னாளில் சிவாஜி, காமராஜ் ஆகியோருக்கு நெருக்கமாக மாறினார். ம.பொ.சிக்கு சின்ன அண்ணாமலையிடம் ஒரு வேலை செட்டப் செய்ய ராஜாஜி நடத்திய முயற்சிகள் ஏனோ பலிக்கவில்லை. அவருக்கு கல்கி ஒரு காரே வாங்கிக் கொடுத்திருக்கிறார். சி. அண்ணாமலையின் முதல் கார் அதுதானாம்.