என்னைப் பற்றி பெரிதாக சொல்வதற்கென்று எதுமில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவில் என்னும் ஊரில் பிறந்தவன். ஆரம்பக்கல்வியை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலும் ஆண்டு ஆறிலிருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றவன். க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் நான்கு அதிவிசேட சித்திகளுடன் முதன்மை மாவட்ட நிலை கிடைத்ததால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்புக் கிடைத்தது. மருத்துவபீடத்தில் ஐந்து வருடங்கள் காலந்தள்ளியதன் பயனாக ஒரு பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய தகுதியும் கிடைத்தது.
எழுத்துத்துறை ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் கல்கியின் பொன்னியின் செல்வனை ஆண்டு ஆறு பயிலும்போதே வாசித்தது எனச் சொல்லலாம். ஆனாலும் கவிதையில் ஒரு ஈர்ப்பை காதலை ஏற்படுத்திக் கொடுத்தவர் பண்டிதர் கவிஞர் ச வே பஞ்சாட்சரம் அவர்கள். ஆண்டு 9 பயிலும் போது தமிழின் அழகை விரித்துக் காட்டியதால் மயங்கிப்போனவர்களில் நானும் ஒருவன். ( அழகைக் கண்டதும் கவிழந்துவிடுகிற ஆண்பரம்பரைதானே நானும்!!). கல்லூரிச் சஞ்சிகைகளில் எமது எழுத்துக்கள் வந்தபோது எங்களை விட எங்கள் ஆசிரியர்கள் பூரித்துப் போனார்கள்.
பத்திரிகைத்துறையில் காலடி எடுத்து வைத்தது 1997 ஆண்டில்தான். மீள்பயணம் எனும் தலைப்பில் பாரதி மீண்டும் உலகுக்கு வந்ததாக ஒரு கற்பனைக் கவிதை பிரசுரமானது. (கவிதை என்றாலே கற்பனைதானே என்று நீங்கள் என்னுடன் சண்டை பிடிக்காதீர்கள்). வாயுபுத்திரன் என்ற பெயரும் அப்போதுதான் வெளியே தெரியத் தொடங்கியது.