senBlogs
 

தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை 

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

 

 

தேசம், பட்டது போதும் - மும்பை தாக்குதல் பற்றி துக்ளக் தலையங்கம்


தீவிரவாதத்தை முறியடிப்பதில் தன்னுடைய அரசுக்கு இருக்கிற மன உறுதியைப் பிரதமர் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின், ஒவ்வொரு படுபாதகத்திற்குப் பிறகும், செய்ய வேண்டிய சடங்கு அத்துடன் முடிந்தது. தீவிரவாதிகளினால் பலமுறை தாக்கப்பட்டுள்ள பெருமையைக் கொண்ட நமது நாட்டில், அரசு கற்றுக்கொண்ட ஒரே பாடம், "தாக்குதல் நடந்து, பல சடலங்கள் விழுந்த பிறகு – தீவிரவாதத்தை ஒடுக்குகிற உறுதியைத் தெரிவித்து, பிரதமர் பேசிவிட வேண்டும்' என்பதுதான். "அரசியல் வித்தியாசங்களை மறந்து, எல்லோரும் ஒரே குரலில் பேசி, இந்தக் கொடூரத்தை எதிர்க்க வேண்டும்' என்ற மந்திரமும் ஓதப்பட்டாகிவிட்டது.

பம்பாயில், ஓபராய் ட்ரைடன்ட், தாஜ் என்ற இரண்டு ஹோட்டல்களிலும், நாரிமன் ஹவுஸ் என்ற இடத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் 195 பேரைப் பலி
வாங்கிவிட்டது. இதில் அயல்நாட்டினரும் உண்டு. பாதுகாப்பு அதிகாரிகள், விசேஷ படையினர் போன்றவர்களும் உயிர் இழந்திருக்கிறார்கள். பெரும் நாசம்.

இந்த முறை, தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தங்களுடைய தாக்குதலை நடத்தியுள்ளதால் – இனி துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, மேலும் ஒரு சம்பிரதாய நடவடிக்கை. இம்முறை தண்ணீர் மார்க்கமாக வந்தால், அடுத்த முறையும் அப்படித்தான் வருவார்கள் என்ற உத்திரவாதம் இருப்பது போல ஒரு அசட்டு எண்ணம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில்தான் தாக்குதல் நடத்துவோம் – என்று தீவிரவாதிகள் சத்தியம் செய்து கொடுத்திருப்பது போல, அந்த மாதிரி முக்கியமான தினங்களில், பத்திரிகைகள் வியந்து பாராட்டுகிற அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

ஒரு ரயில்வே ஸ்டேஷனிலோ, மார்க்கெட்டிலோ, குண்டுவெடிப்பு என்றால், பல
ரயில்வே ஸ்டேஷன்களில் சில தினங்கள் கெடுபிடி, சில சந்தைகளுக்குப் பந்தோபஸ்து என்ற சடங்கு நடைபெறும். மற்ற இடங்களுக்கு தீவிரவாதிகள் போகமாட்டார்கள் என்ற ஒரு பித்துக்குளித்தனமான நம்பிக்கை. இந்தப் பாதுகாப்பு லட்சணத்தைப் பற்றி எங்கு போய் முட்டிக்கொள்வது?

பார்லிமென்டிலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரை, கோவிலிலிருந்து ஹோட்டல்கள் வரை, எல்லா இடங்களும் தீவிரவாதிகளுக்கு இலக்காகக் கூடியவையே என்ற தகவலை, என்றாவது ஒரு முறையாவது நமது உளவுத்துறையினர் கூறியிருக்கின்றனரா? அவர்களுடைய இலக்கு – இந்தியா; இதில் ஹோட்டல் என்ன, துறைமுகம் என்ன... எல்லாமே அடக்கம்தான். ஒரு மிகப்பெரிய கோவிலில் நாசமோ, அல்லது ஒரு பள்ளியில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு கொலை வெறியாட்டமோ
– தீவிரவாதிகள் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது...?

நமது ஆட்சியாளர்களின் முனைப்போ, கதிகலங்க வைக்கிறது. "பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, பாகிஸ்தானிலிருந்து வந்த, பாகிஸ்தானியர்கள் செய்த வேலை இது' – என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அதே மூச்சில் "பாகிஸ்தான் உளவுத்துறை (கொடுமைக்குப் புகழ்பெற்ற ஐ.எஸ்.ஐ.) தலைவரை அழைத்திருக்கிறோம்' என்று அரசு கூறுகிறது! எதற்காக அவர் இங்கு வர வேண்டும்? நாம் காட்டுகிற ஆதாரங்கள் பைசா பெறாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கவா? அல்லது நமது அரசின் வசம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு போகவா? அதுவும் இல்லையென்றால் "ஆஹா! பாகிஸ்தானை இந்தியா குற்றம் கூறியும், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர் இங்கு வருகிறார் என்றால் – அந்நாட்டின் பெருந்தன்மைதான் என்னே!' என்று மற்ற நாட்டினர் வியப்பதற்காகவா? எதற்கு வர வேண்டும் அந்த ஆசாமி இந்த நெருக்கடியான கட்டத்தில்? நல்லவேளை – பாகிஸ்தானிலேயே "இந்தியா கூப்பிட்டால் போய்விடுவதா?' என்று முறைக்கவே, அந்நாட்டின் உளவுத்துறை தலைவர் இங்கு வருகிற யோசனை கைவிடப்பட்டிருக்கிறது. அசடு வழிவதற்கு ஒரு எல்லை கிடையாது என்று தீர்மானித்துக்கொண்ட நமது அரசின் அணுகுமுறைகள்,
இந்த மாதிரி தப்பித்தால்தான் உண்டு.

பாகிஸ்தான்தான் காரணம் – ஆனால், அந்நாட்டிற்கு ரயில் விடுவோம், பஸ் விடுவோம், பேச்சு வார்த்தை நடத்துவோம். என்னதான் நடக்கிறது? பாகிஸ்தான்
அரசிடம் பயிற்சி பெறுபவர்கள்தான் இந்தத் தீவிரவாத வேலைகளைச் செய்பவர்கள் என்று நமது அரசு நம்புகிறதா? அல்லது பாகிஸ்தான் அரசினரால் கட்டுப்படுத்த முடியாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கி, இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அரசு நினைக்கிறதா? அதுவும் இல்லையென்றால், எதற்குப் பாகிஸ்தான் பற்றிய பேச்சு? உண்மையாகவே அந்நாட்டிலிருந்துதான் இந்தத் தீ இங்கே பரவுகிறது என்றால் – அங்கே பயிற்சி முகாம்களை அழிக்க, நமது நாடு முனைய வேண்டாமா?

நமக்காகத்தான் தெரியாது என்றால், இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா? இஸ்ரேல் என்றால் உடனே ஓட்டு பயம் வந்துவிடும். இஸ்ரேல் வழி என்றால் இஸ்லாமிய விரோதம் என்றாகி, ஓட்டுப் போய்விடுமே என்ற நடுக்கம். அதனால் இப்போது கூட, பம்பாய் நிகழ்ச்சிகளுக்குப் பின், இஸ்ரேல் தனது நிபுணர்களை அனுப்பி உதவி செய்வதாகக் கூறியபோது, அந்த உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டது இந்திய அரசு! நமக்கேன் உதவி? நமக்கிருக்கிற அனுபவம் சாதாரணமானதா? தீவிரவாதிகளின் எத்தனை தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்! எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிவிட்டது! இன்னும் எத்தனை பலி வேண்டுமானாலும் கொடுக்க நம்மால் முடியும் என்பதை அறியாத இஸ்ரேல், நமக்கு உதவுகிறதாம்!

சரி, இஸ்ரேல்தான் வேண்டாம் என்றால் அமெரிக்க உதவி கூட வேண்டாம். அந்நாடு தனது நிபுணர்களை அனுப்புவதாகக் கூறியும், இந்திய அரசு மறுத்து, அந்த மாதிரி உதவியை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, என்ன அமெரிக்கா! ...ஃபூ! ஒரு தாக்குதல் நடந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? நாம் அப்படியா? எதையும் தாங்கும் இந்தியா – என்று நிரூபிக்கிற வகையில், எத்தனை தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்!

அதனால்தான், சென்ற மாதம் பிரதமருடன் அமெரிக்கா சென்ற நமது அரசின் பாதுகாப்பு ஆலோசகர், "தீவிரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசினேன். அதில் பல நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை. நம் நாட்டிற்கு அந்த மாதிரி கடுமையான நடவடிக்கைகள் சரிப்பட்டு வராது' என்று அலட்சியமாகக் கூறிவிட்டார்.

ஏன்? ஏன் நமக்குச் சரிப்பட்டு வராது? அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா?
அங்கு மனித உரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம் இல்லையா? நீதிமன்றங்கள் இல்லையா? அங்கு எடுக்கப்பட்டு வருகிற கடுமையான நடவடிக்கைகள் நமக்கு ஏன் சரிப்படாது? என்ன நடவடிக்கைகள் அவை? தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் "அய்யய்யோ! இது ஆனாலும் கடுமையான அணுகுமுறை' என்று ஒன்று உண்டா? எவ்வளவு கடுமை முடியுமோ, அவ்வளவு கடுமையைக் காட்ட வேண்டிய விஷயம் அல்லவா இது? இன்னமும் எவ்வளவு இடங்கள் தாக்கப்பட்டால் கடுமையைக் காட்டலாம்? இன்னும் எவ்வளவு பேர் செத்தால் கடுமையைக் காட்டலாம்?

இவ்வளவு கடுமை கூடாது என்று கூறுகிற இவர் என்ன – தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது தேசிய சால்ஜாப்பு ஆலோசகரா? அவரைச் சொல்லியும் பயனில்லை. அவர் வேலை பார்க்கிற இடம் அப்படி. இந்த அரசுதான் "கடுமையான சட்டங்களே தேவை இல்லை. இருக்கிற சட்டம் போதுமானது' என்று சொல்லி, "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தத்துவம் பேசுகிறதே! இருக்கிற சட்டம் போதும்; இருக்கிற பாதுகாப்பு போதும்; இருக்கிற உள்ளூர் பயிற்சி போதும்; இருக்கிறது எல்லாமே போதும். கொடுத்த பலிதான் போதாது; அது இன்னும் கொடுக்கப்படும். எது போதுமோ, போதாதோ – இந்த மாதிரி ஒரு முனைப்பில்லாத அரசு, ஆண்டது போதும்; போதும்; போதும்!

சரி, அரசுதான் இந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்றால் – போலீஸ், உளவுத்துறை செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? "படபடவென்று மானாவாரியாகச் சுட்டுக்கொண்டே போலீஸார் முன்னேற முயன்றனர். இப்படிச் செய்யவே கூடாது' என்று ஒரு நிபுணர் கூறியிருக்கிறார்; இது சரியான கருத்துதானா என்பது நமக்குத் தெரியவில்லை; இது முறையாக பரிசீலிக்கப்படும் என்று நம்புவோம்.

"இப்போது பம்பாயில் தீவிரவாதிகளே இல்லை. எல்லோரையும் ஒழித்தாகிவிட்டது' என்று மஹாராஷ்டிரப் போலீஸ் கூறிவிட்டது. எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? வந்தவர்களில், இன்னமும் எத்தனை பேர் பம்பாயில் உலாவுகிறார்களோ! அல்லது வேறு எங்கு போயிருக்கிறார்களோ! அடுத்து என்ன திட்டமோ? போலீஸாரின் இந்த மெத்தனம் கண்டனத்திற்குரியது.

போலீஸாரும், விசேஷப் பாதுகாப்புப் படையினரும், எங்கே நுழைகிறார்கள், எந்த இலக்கைக் குறிவைக்கிறார்கள் – என்பதெல்லாம் டெலிவிஷன் சேனல்களில் நேர்முக ஒளிபரப்பாக வந்துகொண்டிருந்தது. இது போதாதென்று படையினரின் பேட்டிகள் வேறு! இவை எல்லாம், தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவை அல்லவா? அவர்கள் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் வெளியே இருந்தவர்கள் அவர்களுக்குத் தகவல் அளித்துக்கொண்டு
இருந்திருக்கலாம். தீவிரவாதிகள் செல்ஃபோன்களைப்
பயன்படுத்திக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றனவே! டெலிவிஷன்காரர்களைக் கிட்டே நெருங்கவிட்டிருக்கக்கூடாது.

"மத்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து சேர்வதில் பெரும் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இது பெரிய பலவீனம் ஆகிவிட்டது' என்று விவரமறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். கவனத்திற்கும், எதிர்காலத் திருத்தத்திற்கும் உரிய விஷயம் இது.

மத்திய புலனாய்வுத்துறை, "மஹாராஷ்டிரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்' என்று எச்சரித்தும்; "தாஜ் ஹோட்டலே கூட தாக்கப்படலாம்' என்று எச்சரித்தும்
– மாநிலப் போலீஸ் ஒரு சில நாட்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, பின்னர் அதையும் வாபஸ் வாங்கியிருக்கிறது.

எவ்வளவு பெரிய அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சிதான் உண்டாகிறது. மஹாராஷ்டிரத்தின் விசேஷ "தீவிரவாத எதிர்ப்புப் போலீஸார்' ஏன் அலட்சியமாக இருந்துவிட்டனர்?

இக்கேள்விக்கு விடைகாண பெரிய தேடுதல் அவசியம் இல்லை. பம்பாயில் தீவிரவாதிகள் அட்டூழியம் நடப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக,
அம்மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் போலீஸின் தலைவர் (இப்போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்து விட்டவர்) "எங்களுடைய நேரமும், முனைப்பும்
90 சதவிகிதம், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில்தான் செலவிடப்படுகிறது' என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அவ்வளவு முனைப்பை, அந்த விவகாரத்தில் காட்டியபோது, மத்திய புலனாய்வுத் துறையிடமிருந்து வந்த தகவல்களை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்க ஏது நேரம்!

"ஆள் பலம் போதவில்லை' என்கிறார்கள். போலீஸுக்குப் போதிய அளவு ஆள் பலம் சேர்க்க வேண்டாம் என்று யார் தடுத்தது? ஆளும் இல்லை; ஆயுதமும் இல்லை;
பயிற்சியும் இல்லை! அதனால் என்ன நடக்கிறது? பல போலீஸ் அதிகாரிகள், உயிரிழக்கிறார்கள்.

அவர்களுடைய தைரியம் மெச்சத்தக்கது. ஆனால், போலீஸ் உயிரிழப்பா, நாட்டிற்கு வேண்டியது? பாதுகாப்பு வீரர் சாவா, தேசத்தின் தேவை? பகையாளி உயிரை அல்லவா எடுக்க வேண்டும்! ஜெனரல் பேட்டன் என்கிற அமெரிக்க தளபதி, இரண்டாம் உலக யுத்தத்தின்போது, தன் கீழ் பணிபுரிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து, "தேசத்திற்காக உயிரை விடுவது அல்ல உங்கள் வேலை! உயிரை விடுவதற்காக நீங்கள் ராணுவத்தில் சேரவில்லை! உயிரை எடுக்க வேண்டும். பகையாளிகளின் உயிர்களை எடுப்பதுதான் உங்கள் கடமையே தவிர, உங்கள் உயிரை விட்டுவிடுவது அல்ல. கொல்லுங்கள்! கொல்லப்படாதீர்கள்!' என்று அறிவுரை கூறினார்.

அப்படியல்லவா இருக்க வேண்டும் – போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மனோநிலை! "உயிரை விட்டார்கள்! ஆஹா! தியாகம்' என்று பத்திரிகைகள் பாராட்ட, அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்ட, மக்கள் கொண்டாட, போலீஸ் உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாவது விமரிசையாக நடந்து வருகிறது. அதுவும் உயர் அதிகாரிகளே, உயிர் துறக்க நேரிடுகிறபோது, அவர்களின் கீழ் பணியாற்றுகிறவர்களின் மன உறுதி தளராதா? ஏன் இந்த நிலை?

"பயிற்சி போதாது; அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், இந்த மாதிரி நிலையைச் சந்திக்கப் போதுமானவை அல்ல' – என்று நிபுணர்கள்
கூறியிருக்கிறார்கள். இப்படிக் கூறியுள்ளவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், "இவர்கள் என்ன சொல்வது? கைவசம் இருப்பது தீபாவளித் துப்பாக்கியே ஆனாலும், உயிரைத் துச்சமாக மதிக்கிற வீரர்களாக்கும், எங்கள் ராணுவத்தினரும் போலீஸாரும்!' என்று தேசபக்தி சொட்டச் சொட்டப் பேசி விடுவது சுலபம். உயிரிழக்கப் போவது மேடைப் பேச்சாளர்கள் அல்லவே!

சில நேரங்களில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அதுவே அவர்களுடைய கடமை ஆகிவிடக் கூடாது. "உயிரை விடுவதே எங்கள் லட்சியம்' என்றா பாதுகாப்பு வீரர்கள் செயல்பட முடியும்? ஜெனரல் பேட்டன் கூறிய மாதிரி, உயிர்களை எடுக்க வேண்டும்; பகைவர்களைக் கொல்ல வேண்டும்; இயன்றால் உயிருடன் அவர்களைப் பிடித்து, உண்மைகளைக் கறக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சிகளையும்,
ஆயுதங்களையும், நவீன உபகரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது அரசு, அவர்களுக்குச் செய்கிற துரோகம்.

"அயல் நாட்டு உதவியா? தேவையே இல்லை! அதுவும் அமெரிக்காவா! ஐயோ! ஏகாதிபத்திய நாடு! அதனிடம் உதவி பெறுவதா? அவர்கள் பயிற்சி முறையை நாம் பின்பற்றுவதா? கேவலம்! நமது சத்ரபதி சிவாஜி காட்டாத வீரமா? திப்பு சுல்தான் காட்டாத மனோதிடமா?' என்றெல்லாம் பேசுவது, டெலிவிஷன் உரையாடல்களுக்கும், பத்திரிகைகளின் கட்டுரைகளுக்கும் சரிப்பட்டு வரலாம்; ஆனால், வேலைக்கு ஆகாது.

அமெரிக்காவும், இஸ்ரேலும்தான், இன்று தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவை. அந்நாடுகளிலும் பயங்கரவாத நிகழ்ச்சிகள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கலாம். ஆனால், அவர்கள் வசம் உள்ள உபகரணங்கள்; அவர்கள் பெற்றுள்ள பயிற்சி; வெவ்வேறு வகை தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகள் – எல்லாமே விசேஷமானவை. அவற்றை நாம் பெற வேண்டும். அந்த இரு நாடுகளுடன் இவ்விஷயத்தில் முழுமையாக ஒத்துழைத்து, அவர்கள் உதவியை நாம் பெற வேண்டும்.

"பொடாவை மீண்டும் கொண்டு வந்தால் பா.ஜ.க.விடம் பணிந்தது போல் ஆகிவிடும்; அதைவிட தீவிரவாதிகளிடம் பணிந்து போவதே மேல்' என்ற மதச்சார்பின்மை வைராக்கியத்தைக் கைவிட மத்திய காங்கிரஸ் அரசு தயாரில்லை என்றால்
– மதச்சார்புத் தீட்டு படிந்துவிட்ட "பொடா'விற்குப் பதிலாக "கொடா, மொடா, தொடா' என்று ஏதாவது ஒரு புதிய பெயரில் பொடா சட்டத்தையே கொண்டு வர வேண்டும். அல்லது இருக்கிற சட்டங்களையே இன்னமும் பலமடங்கு கடுமையாக்க வேண்டும்.

தேவைப்படுகிற இடங்களில் திடீர் சோதனையிடும் உரிமை; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சிறைப்படுத்துகிற அதிகாரம்; தன்வசமுள்ள தகவலைத் தர மறுக்கிறவர் பத்திரிகையாளரானாலும் சரி, வக்கீல் ஆனாலும் சரி – அவரைக் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்துகிற ஷரத்துக்கள்; தீவிரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தவர்கள் நிரபராதிகளாக இருந்தால், அதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயம்; போலீஸிடம் அளிக்கிற ஒப்புதல் வாக்குமூலம்
நீதிமன்றத்தில் ஏற்கப்படும் என்கிற பிரிவு; ஜாமீனில் வெளியே வருவதற்கே, கைதானவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கிற அவசியம்; தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் தண்டிக்கத் தேவையான ஷரத்துக்கள்; தீவிரவாதச் செயலுக்கு என்ன தண்டனையோ, அதே அளவு கடுமையான தண்டனையை, தீவிரவாதச் செயலுக்கு உதவியவர்களுக்கும்
நிர்ணயிக்கிற ஷரத்துக்கள்... போன்ற பல அம்சங்களை, இருக்கும் சட்டத்திலேயே புகுத்தலாம்; அல்லது புதிய சட்டம் கொண்டு வரலாம்.

இம்மாதிரிச் செய்வது, "தீவிரவாதத்தைப் பொறுத்த வரையில், அரசு தயை
– தாட்சண்யம்; ஓட்டு – பிரச்சாரம்; மனித உரிமை – மண்ணாங்கட்டி... என்பது போன்ற சுமைகளை உதறித் தள்ளிவிட்டது' என்ற தகவல், தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இதனால் தீவிரவாதிகள் ஓய்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும், உதவி செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரவாதிகளின் திட்டங்கள் தடங்கல்களை சந்திக்கும்; தகவல்கள் அரசுக்குக் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் கூடும்.

இது தவிர, பங்களாதேஷ் அகதிகள் வருவதும், தடுக்கப்பட வேண்டும்;
வந்துவிட்டவர்களும், ஓட்டுரிமை அற்றவர்களாக்கப்பட வேண்டும்; தொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடனான எல்லைகள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய
இந்தியா – பாகிஸ்தான் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும்.

உள்துறை அமைச்சர் ராஜினாமா, திருப்பதியில் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துகிற மாதிரிதான். போனது மீண்டும் வளர்கிற மாதிரி, பழைய முனைப்பின்மை மீண்டும் வளரும். பாவம் செய்துள்ளோம் என்பதை உணர்கிறோம் என்பதற்கான அடையாளமாக அது ஆகுமே தவிர, பாவத்தை அது முழுமையாகக் கழுவிவிடாது. அதற்கு நம்மிடம் திருந்திய நடத்தை தேவை. அதை மத்திய அரசு காட்ட வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படாது; தீவிரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படும்; "கடுமையான சட்டம் தேவை என்று பேசுவதே கண்டனத்திற்குரிய அதீதமான, நிதானமற்ற நடவடிக்கையாகிவிடும்' என்று உளறுவது; தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்ற நிலையில் சட்டத்தை வைத்திருப்பது; அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறிக்கொண்டு, போலீஸாரின் கைகளைக் கட்டிப் போடுவது; என்கௌன்டர் நடந்தால் உடனே போலீஸ்துறை மீது பாய்வது... போன்ற பெட்டைத்தனங்கள் நிற்க வேண்டும்.

நடப்பது யுத்தம். யுத்த தர்மம் இதற்குச் செல்லுபடியாகும். எதிரியை வீழ்த்த வேண்டும். அதுதான் இலக்கு. அதுதான் முனைப்பு. "அந்த முனைப்பின் காரணமாகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வேறு வழியில்லை என்று அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்' என்ற நினைப்பு தோன்ற வேண்டும். தேசம், பட்டது போதும்.

visit my blogs 

http://sen-space.blogspot.com/