என் கண்ணனை கண்டீரோ-1
என் அன்பு அவன் கண்களில் விழவில்லை போலும் என்றுபல மணி நேரம் அரற்றிய வேளையிலே
நறுமணம் கமழ, காற்றிலே கீதம் இசைக்க ஜல்ஜல் என்று சலங்கை ஒலி இசையை கூட்ட சுருண்ட கூந்தல் தென்றலில் இனிதே அசைந்தாட உடல் முழுவதும் ஆபரணம் ஜொலிக்க பீதாம்பரம் அணிந்த கருமேனியாய் அழகில் மிளிர காந்த கண்களில் அன்பைத் தேக்கி சிவந்த உதட்டில் சிரிப்பை நிறுத்தி அருகில் வந்து கண்ணனே என் முன் நிற்க
நானும் என் கழுத்திலிருந்த மாலையை அவனுக்கு சூட்ட பிறகு என் புல்லாங்குழலும் மயிலிறகும் அவன் உடலில் ஏற அறிவும் அழகும் இல்லாத என்னையும் அவன் ஏற்க என் துன்பம் அனைத்தும் சிட்டென பறக்க மகிழ்ச்சியான அந்த நேரத்தில் ஒரு பாறையில் கைக் கோர்த்து அமர்ந்தோம்
என் கண்ணீரைத் துடைத்தான் கைகளை ஆதரவாக தடவினான் கால்களில் வழியும் இரத்தத்தை தன் உடையால் துடைத்தான் ஓவியத்தையும் சிற்பத்தையும் இரசித்தான் பழங்களையும் உண்ண வைத்தான் கைகளால் நீரை நிரப்பி என்னை குடிக்கவும் வைத்தான் அழுக்கான என்னை கண் கொட்டாமல் பார்த்தான் பிறகு முத்துப்பல் தெரிய என்னைப் பார்த்து சிரித்தான் பேதை பெண்ணே! நான் யாரென்று தெரியவில்லையா இன்னும் என்றும் எள்ளி நகையாடினான்
ஒரு கணம் என் மாயையைதான் அகற்றினானோ இல்லை என் சிந்தைதான் கலங்கிவிட்டதோ புரியாமல் என் கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன் அங்கே……..அங்கே……. அவனே கார்மேகமாய் மயிலாய் ஓவியனாய் சிற்பியாய் இடைச் சிறுவனாய் புல்லாங்குழலாய் மலர்களாய் நீராய் மரங்களாய் நானாய் அவனாய் மாறி மாறி காட்சியளித்தான்
-பத்மஜா |